அத்தியாயம் - 21 - மாறி மாறிப் பின்னும் - Maari Maarip Pinnum - ராஜம் கிருஷ்ணன் நூல்கள் - Rajam Krishnan Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com



அத்தியாயம் - 21

     அவர்கள் அவளை இழுத்துச் செல்கிறார்கள்.

     யார்... யார் இவர்கள்? யமகிங்கரர்கள் இவர்கள்தானா? எங்கே இழுத்துச் செல்கிறார்கள்?

     ஐயோ... துணியை உரிக்கிறார்கள்... நெருப்புத் தூணைக் காட்டி, “கட்டிக் கொள்ளடி...” என்று வசைபாடி அடிக்கிறார்கள். காறி உமிழ்கிறார்கள். இது நெருப்புத்தூண் இல்லை, சுண்ணாம்பு காளவாயில் தள்ளி இருக்கிறார்களா?

     “பிற புருஷன் வீட்டுக் கட்டிலில் படுத்துக் கொண்டாயேடீ? எப்படி இருந்தது? கட்டின புருஷனை விட்டு என்ன தைரியமாக வேறு ஒரு புருஷனோடு சிரிக்கப் பேசி, தொட்டுப் பழகினாயே? எப்படியடி இருந்தது? பக்கத்தில் உட்கார்ந்து, வேடிக்கை விண்ணாளம் பேசி, மடியில் தலை வைத்துப் படுத்து... சீச்சீ! வேசி, நாய் கூட இப்படி இருக்காது!”

     “உனக்கு இந்தச் சுண்ணாம்புக் காளவாயில் வெந்து நீராவதுதான் தண்டனை. நளாயினி, அருகில் புருஷனைக் கூடையில் வைத்துத் தாசி வீட்டுக்குத் தூக்கிச் சென்று அவன் ஆசையைப் பூர்த்தி செய்தாளடீ? அவர்களெல்லாரும் கற்பரசிகள். நீ பதிதை. உன் அம்மா அவப் பெயரைத் தேடித் தர எவன் வீட்டிலோ புகுந்து கெடுத்தாள். உனக்கு அப்படியும் புத்தி வரலியே? நெருப்புத்தூணைக் கட்டு! உடம்பில் பாம்பும் தேளும் ஊறட்டும். இந்த உடம்பு சொகுசுக்குத் தானே பிறபுருஷன் வீடு தேடிப் போனே?...”

     ஐயோ... ஐயோ வேண்டாம் என்னை விட்டுடுங்கோ நான் செத்துப் போறேன்... செத்து... செத்துப் போறேன்! என்னை விடுங்கள், உங்களுக்குப் புண்ணியமாப் போறது. நான் சமுத்திரத்தில் விழுந்து போறேன்... இல்லாட்டா நீங்களே கொன்னுடுங்கோ... இவளால் குரல் எழுப்ப முடியவில்லை... கைகால்களைப் பிணித்திருக்கிறார்கள்.

     சொட்டுச் சொட்டாக உயிர்ச்சரம் இறங்கும் குழாய் குலுங்குகிறது. யாரோ ஓடி வருகிறார்கள்.

     “...அசையாதேம்மா... அசையாதே?...”

     “நான்... என்னைச் சாக விடுங்கோம்மா... சாக...”

     “ஷ்... இத பாரம்மா, ட்ரிப் இறங்குது. கைகால் அசைக்காம இரு...”

     “ட்ரிப்... ட்ரிப்... ட்ரிப்னா... நரகத்தில்...”

     ரேவு கண்களை மலர்த்திப் பார்க்கிறாள்.

     எதிரே... வெளிர் கனகாம்பரச் சேலை உடுத்திய ஒரு பெண்... முகம்... இதமாக இருக்கிறது. கண்கள் கனிய அவள் முகத்தைக் கண்களைப் பஞ்சால் துடைக்கிறாள். சில்லென்று இதமாக இருக்கிறது.

     “என்னைச் சுண்ணாம்புக் காளவாயில் போட்டுட்டாங்களா...!”

     அவள் புரியாமல் பார்க்கிறாள். இதமாகப் புன்னகை செய்கிறாள்.

     “எனக்கு உள்ளு வெளியெல்லாம் எரியுதே? நான் செத்துப் போகலியா? எத்தினி நேரம் இதில வச்சிருப்பாங்கம்மா...”

     “அழாதேம்மா... அழாதே... உனக்கு நல்லாயிடும்... நீ எதுக்குச் செத்துப் போகணும்... உயிர் ஆண்டவன் தந்தது... அவரா எடுக்கற வரையிலும் நாம் செத்துப் போக முடியாது.”

     “உஹும்...”

     ஆண்டவன் அப்படி ஒழித்து இருந்தா இப்படி நான் நரகம் அனுபவிப்பேனா? நான் மனசறிஞ்சி எந்தத் தப்பும் பண்ணலைன்னு அந்த ஆண்டவன் உண்மையாக இருந்தா நம்பமாட்டாரா? ஹும்...

     ரேவு வெறுப்புடன் கண்களை மூடிக் கொள்கிறாள்.

     அவள் மெல்லக் கையைத் தடவி, “உன் பேரென்னம்மா?” என்று கேட்கிறாள்.

     “என் பெயர் தெரியாமலா, நரகத்துக்குக் கொண்டு வந்தாங்க? நான் செத்துப் போன பிறகு தானே வேணும்?...”

     “இதபாரம்மா, நீ எதுக்கு சாகணும்? உன்னை யாரோ படுபாவிங்க நாசம் பண்ணிப் போட்டிருக்காங்க. குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க, நீ உதவணும்மா...”

     அவள் கண்களை மூடிக் கொள்கிறாள்.

     ரங்கப்பா... ரங்கப்பா...

     திக்குத் தெரியாத காட்டில் பாடுவீங்களே!

     நான் திக்குத் தெரியாம அலையறேன். என் உசிரை இன்னமும் எதுக்கு எடுக்காம யமன் விட்டு வச்சிருக்கான்?

     ரங்கப்பா நான் இப்படிச் சாகாம சித்திரவதைப் படுறேனே, நீங்க... நீங்க... எப்படி இருக்கீங்க? நீங்க ஒருகால் என்னை ஏமாத்திட்டுப் போயிட்டீங்களா?...

     மூடிய கண்களிலிருந்து தாரையாக வழிகிறது.

     அவள் பரிவாகத் துடைக்கிறாள். மூக்குக் கிண்டிப் போன்ற பீங்கானில் இருந்து வாயில் அமுதமாகச் சில்லென்று கனிச்சாற்றை ஊற்றுகிறாள். சிறிது நேரத்தில் ஆசுவாசமடைகிறாள்.

     “இதபாரம்மா... நீ அழக்கூடாது. உன் அழுகையைப் போக்கத்தான் நாங்க இங்க வச்சிருக்கிறோம்... இன்னும் கொஞ்சம் ஃப்ரூட் ஜூஸ் சாப்பிடும்மா...”

     “...இது ஆஸ்பத்திரியா ஸிஸ்டர், நான் எப்படி இங்க வந்தேன்?”

     “...நீ பீச் பக்கம், கிடந்தே. உன்னை நாசம் செய்து யாரோ வீசியிருந்தாங்க. துளசிதேவின்னு கேள்விப்பட்டிருக்கியா? பெரிய டாக்டர். அவங்க இங்க பெரிய சோஷியல் வொர்க்கர். அவங்க ஆஸ்பத்திரிதான் இது. அவங்க காலம பீச் பக்கம் வாக்கிங் போறப்ப உன்னைப் பார்த்தாங்க. இன்னிக்கு மூணு நாளாவது. நீ வலி வலின்னு கத்திட்டிருந்தே. அலறினே. உனக்கு செடிடிவ் கொடுத்து, காயமெல்லாம் டிரஸ் பண்ணி ட்ரிப் குடுத்து, வச்சிருக்கிறோம்...”

     “ஓ... கடவுளே, என் உசிரை எடுத்திட்டு” சொல்ல வந்தவள் சட்டென்று மூடிக் கொள்கிறாள்.

     “நான் ரொம்ப பாவம் பண்ணிருக்கேன்னு தோணுது, நான் செத்துப் போயிருக்கணும் ஸிஸ்டர்...”

     “பாவ புண்ணியம் எல்லாம் நமக்கு நாமே தீர்மானிக்கிறதில்ல. நீயாவும் செய்திருக்க முடியாது. ஏன்னா, பெண்ணாகப் பிறந்தவங்க யாருமே பாவம் செய்ய முடியாது. அது ஆம்புளங்க வரைஞ்சு வச்ச அநீதியான வரமுறை. அவங்கதான் இப்ப உனக்குக் குரோமாக் கொடுமை செய்து பாவம் பண்ணியிருக்காங்க. நீ மட்டும் கொஞ்சம் ஒத்துழைச்சா, இந்தக் கொடுமைக்குக் காரணமானவங்களைப் பிடிச்சித் தூக்கில் மாட்டலாம்...”

     ரேவு அவளை உறுத்துப் பார்க்கிறாள்.

     கட்டின புருஷன் காரணமாயிருந்தா?... அவந்தானே இத்தனை அவலத்துக்கும் மூல காரணம்?

     ஆனால் தாரை வார்த்து அவன் கையில் அவளைப் பிடிச்சுக் கொடுத்த பிறகு, அவள் அவன் சொத்து. சில பேர் தலைவிதி நல்லவர்களாக இருப்பார்கள். ஆடை வாய்ப்பதும் அகமுடையான் வாய்ப்பதும் அவரவர் அதிர்ஷ்டத்தைப் பொறுத்தது. இவள் தலைவிதி இப்படி.

     இப்போது... பேசக்கூட முடியவில்லை. உதடு - உதட்டில் என்ன... தடிப்பாகத் தெரிகிறது. கன்னம், கழுத்து, மார்பு, அடிவயிறு... எங்கும் எங்கும் வேதனை...

     உள்ளே யாரோ வருகிறார்கள்.

     “ஏஞ்ஜலா, பேசுறாளா?”

     அருகில், வயதான, மெலிந்த மூதாட்டி ஒருத்தி வருகிறாள். நரைத்த தலை, பாப் செய்திருக்கிறாள். முன் மண்டை தெரிகிறது. நல்ல வெளுப்பு. தூய வெள்ளைச் சேலையும் ரவிக்கையும் அணிந்திருக்கிறாள். ரேவு கூசிக் கண்களை மூடிக் கொள்கிறாள்.

     துணிப் போர்வையை விலக்கி, காயங்களைப் பார்க்கிறாள்.

     “புவர் கேர்ள்... இப்படிப்பட்ட பொறுக்கிக் கயவாளிகள் மலிஞ்சிருக்காங்க. ஷி ஸீம்ஸ் டு பி எ குட் ஃபாமிலி லேடி...”

     ரேவு குறுகிக் குறுகி அற்பத் துளியாகிறாள்.

     “எதானும் பேசினாளா?”

     “ம்... பேர் கூடச் சொல்லமாட்டேங்குது. செத்துப் போறேன்... பாவம் பண்ணினேங்குது... மேல் சாதின்னு தெரியுது. ஆனா தாலி, வளையல் எதுவுமே இல்லே...”

     “எல்லாத்தையும் புடுங்கிட்டுத்தான் இந்த கோலம் பண்ணிருக்காங்க. ஏஞ்ஜலா, போலீஸ் ஸ்டேஷன்ல கேட்டு வழக்கமாக சேதி போடுறாப்புல இப்படி எலியட்ஸ் பீச் பக்கம் கிடந்திச்சின்னு மட்டும் செய்தி போட்டிருக்கிறாங்க பேப்பரில். இதைப் பார்த்து இவளைத் தேடிட்டு வர்றவங்களுக்குத் துப்புக் கொடுக்க நான் ஃபோன் நம்பர் குடுத்திருக்கிறேன். மத்தப்படி மீடியா ஆளுக யார் வந்தாலும் உள்ளே விட வேண்டாம். நான் கனகாகிட்டேயும் கண்டிப்பா சொல்லிட்டேன். இந்த மாதிரி நியூஸ்னா ஸென்ஸேஷனலாக அலைவாங்க... நமக்கு ஒரு ஒத்தாசையும் இருக்காது...”

     ரேவு கண்களை இடுக்கிக் கொண்டு பார்க்கிறாள்.

     தனக்கு இந்தக் கொடுமையைச் செய்தவர்... துணிந்தவர்... அவன் மாருதிதானா? அந்தப் பாவி... ரங்கப்பாவின் ‘கஸின் ஸிஸ்ட்டர்’ என்றாரே, அவள் ஏற்பாடா? இவளை விரட்ட அவர்களுக்கு வேறு வழி தெரியவில்லையா?... ரங்கப்பா... அப்பா?... புழுவாய்த் துடிக்கிறாள். அந்த உள் வேதனையை எப்படி வெளியிட?

     உலகத்தின் தலையாய நோவு பிரசவ வலி என்பார்கள். மூக்கு அம்மா மூக்கு... மூக்கு என்று முகமறியாத நர்ஸ் சொன்னாள். இவளுக்கு வேதனை தெரியவில்லை. அது மறந்து போயிற்று. ஒவ்வொரு நாளும் கட்டியவன் குலைத்தான். வேதனை மறந்து போயிற்று.

     உடம்பு... உடம்பு... உடம்பு... இந்த உடம்புத்தான் நானா? என்னை இந்த உடம்பை அழிப்பதால் அழிக்கலாமா? ஒரு பெண்ணாகப் பிறந்து, இந்த உடம்புக்காகவே சாப்பிட்டு, குளித்து, உழைத்து, எல்லாத் துன்பங்களுக்கும் அடக்கு முறைகளுக்கும் ஈடுகொடுத்து...

     எல்லையம்மன் கோவில் தேரில் ஆடு வெட்டுவார்கள். கோழி காவு கொடுப்பார்கள். அதைக் கொழுக்க வைத்து குளிப்பாட்டி, மஞ்சள் நீர் தெளித்து பூமாலை சாத்தி வெட்டுவார்கள். அந்த மரியாதை கூட இல்லை. வாழ்க்கை என்பது இதுதானா? ஆனால் என்னை அழிக்க முடியவில்லை இதுகாறும் யாராலும்.

     “ஏம்மா... உன் பேரென்ன?”

     அவள் எங்கோ பார்க்கிறாள்.

     “உங்க வீடு எங்கே இருக்கு?...”

     பதிலில்லை.

     “உன் புருஷன் உன்னைக் கஷ்டப்படுத்தினாரா?”

     அவள் காதில் விழுந்ததாகவே காட்டிக் கொள்ளவில்லை.

     “சரி, சொல்ல இஷ்டமில்லேன்னா வேண்டாம். உன்னைக் கட்டாயப்படுத்த மாட்டோம்...”

     அவர்கள் இருவரும் மெதுவான குரலில் பேசிக் கொண்டு போகிறார்கள்.

     இன்னும் இரண்டு நாட்கள் செல்லுகின்றன. அவளுடைய உட்காயங்களும் வெளிக்காயங்களும் ஆறி வருகின்றன. ஏஞ்சலா அவளைப் பார்த்துக் கனிவாகச் சிரிக்கிறாள். அவளைத் தவிர வேறு நர்சுகள் அந்த அறைக்கு வரவில்லை.

     ஏதோ ஒரு பூகம்பம் வந்து ஆறின பின் இப்படித்தான் சிறியதாக இருக்கும். இடிபாடுகள், எரிவுகள், கழிவுகள்...

     இவள் நிலை அதுதான்.

     நகை நட்டு, துணி எதுவுமே இல்லை. பற்றியிருந்த அனைத்து ஆதரவுகளும் சரிந்துவிட்டன. இனியும் ஏதேனும் மிச்சம் அகப்படுமா?

     ஒவ்வொரு சிதிலமாக ரேவு தேடிப் பார்க்கிறாள். ஏஞ்சலாவின் பரிவு ஒன்று தான் மிஞ்சி இருக்கிறது. இல்லை, ஒரு துரும்பாக வந்து ஒட்டி இருக்கிறது.

     “நீ நல்லா நினைச்சுப்பாரு - உன் பேர் நினைவில்ல?”

     “...இல்லையே?...”

     “நீ எப்படி அங்க வந்தே? உன் வீடு... கல்யாணமானா உன் புருஷர்...”

     “ஸிஸ்டர் எனக்கு ஒண்ணும் நினைப்பில்ல, எங்கியோ இருட்டில நடக்கிறாப்பல நெனப்பு வருது...”

     “சரி... பிறகு...? நல்லா நினைச்சிப் பாரம்மா!...”

     ரேவு யோசித்துக் கொண்டே இருக்கிறாள். வெளியே துப்புத் தெரிந்துவிட்டால் ரங்கப்பாவுக்கும் குடும்பத்துக்கும் அது கேவலமாகப்படும். அந்தத் துரோகம் அவள் செய்யலாகாது. எனவே, இப்படியே இருப்பதுதான் சரி... சுதாவைப் பற்றியும் சொல்லலாகாது.

     இதுவரையிலும் அவளுக்கென்று வகுக்கப்பட்ட பாதை அவளுக்கே தெரியாமல் திருப்பங்களைக் கண்டிருக்கிறது... அவள் அநுபவித்த துயரங்கள், சந்தோஷங்கள் எல்லாமே சுத்தமாகத் துடைக்கப்பட்ட ஒரு வெறுமையில் அவள் நிற்கிறாள்... அதனால் அவர்கள் கேட்கும் எந்தக் கேள்வியும் அவளைப் பாதிக்கவில்லை.

     பத்து நாட்களில் அவள் நடமாடுமளவுக்குத் தேறுகிறாள். அவளுக்குச் சேலை ஜாக்கெட் கொடுத்து, காரில் ஏற்றிக் கொண்டு அவள் கிடந்த இடத்துக்குக் கூட்டிச் செல்கிறார்கள்.

     “நீ இங்கதாம்மா கிடந்தே...”

     “இப்ப நினைச்சிப் பாரும்மா, எப்படி இங்கே வந்தே?”

     ரேவு கல்லாக இருக்கிறாள். தொலைவில் தெரியும் கடலைப் பார்க்கிறாள்.

     “தண்ணீருக்குப் போகலாமா?”

     போகிறார்கள்.

     அலைகள் வந்து கால்களை, அவள் உடுத்தியிருக்கும் சேலையை நனைக்கின்றன.

     குழந்தைப் போல் சிரிக்கிறாள்.

     “சந்தோஷமா இருக்கா? நல்லா இருக்கா?...”

     “உம்...” என்று தலையசைக்கிறாள்.

     “நாம் இப்ப கடைக்குப் போய் உனக்குப் புடிச்ச மாதிரி சேலை, ரவிக்கை வாங்கிட்டு வரலாமா?”

     அவளுக்கு உள்ளூற நடுக்கம் பற்றுகிறது.

     “நீங்களே வாங்கிட்டு வாங்க. நா வரமாட்டேன்...”

     “ஏன்...?”

     “எனக்குப் புடிக்கல.”

     “ஏன்...?”

     பதிலில்லை.

     ஏஞ்சலா அவளை அழைத்துக் கொண்டு வண்டிக்குத் திரும்புகிறாள்.

     “ஒண்ணும் தெரியல. யாரும் தேடிண்டும் வரல... தற்கொலை பண்ணிக்க வந்திருப்பாளோன்னு சந்தேகம் வருது. இங்கதா இந்த மாதிரி எலிமன்ட்ஸ் நடமாடுதே?” என்று பெரியவள் முணுமுணுக்கிறாள்.

     “காதுத்தோடு, மூக்குத்தி எல்லாம் கழட்டியிருக்காங்க. காதப் பிச்சிருக்காங்க. ஏம்மா, நீ கழுத்தில காதுல நகை ஏதும் போட்டிருந்தே?”

     “எல்லாம் போச்சு! ஆமாம்... போயே போச்சு...”

     “எப்படிப் போச்சு? யார் கழட்டினாங்க?”

     “தூக்கி எறிஞ்சிட்டே...”

     மறுபடியும் சிரிப்பு.

     “ஏன் தூக்கி எறிஞ்சே? தங்க நகையெல்லாம் தூக்கி எறியலாமா?”

     பதிலில்லை.

     மனநிலை சரியில்லாத பெண்... ஓடி வந்திருக்கிறாள். இவளை யாரோ கயவர் இந்த நிலைக்கு ஆட்படுத்தியிருக்கக் கூடும்.

     “ஒரு சைக்கியாட்ரிஸ்ட்கிட்ட இவளைச் சோதனை செய்யலாம், ஏஞ்ஜலா?...”

     “நான் ரேவதியை வரச் சொல்றேன்...” என்று துளசிதேவி சொல்லும் போது அவள் முகத்தில் பரபரப்பு ஏற்படுகிறது.

     “வே... வேண்டாம்? யாரும் என்னைப் பார்க்க வர வேண்டாம்?”

     என்று அவள் பீதியுடன் அறைக்குள் சென்று தாழிட்டுக் கொள்கிறாள். அவர்கள் தட்டவில்லை.






புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
151
152
153
154
155
156
157
158
159
160
161
162
163
164
165
166
167
168
169
170
171
172
173
174
175
176
177
178
179
180
181
182
183
184
185
186
187
188
189
190
191
192
193
194
195
196
197
198
199
200
201
202
203
204
205
206
207
208
209
210
211
212
213
214
215
216
217
218
219
220
221
222
223
224
225
226
227
228
229
230
231
232
233
234
235
236
237
238
239
240
240
241
242
243
244
245
246
247