அத்தியாயம் - 6 - மாறி மாறிப் பின்னும் - Maari Maarip Pinnum - ராஜம் கிருஷ்ணன் நூல்கள் - Rajam Krishnan Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com



அத்தியாயம் - 6

     இவளிடம் அநுசரனையாகக் குடித்தனக்காரர்கள் பழகுகிறார்கள் என்ற உணர்வில்தானோ போலும், சுதாவையோ, கணவர் ரகுவையோ அவள் புருஷனுக்குப் பிடிப்பதில்லை. வாடகையையும் கரன்ட் பில்லையும் சுதாதான் அநேகமாக ஒன்றாந்தேதி கதவைத் திறந்து காலையில் அவனிடம் கொடுப்பாள். சில நாட்களில் வீட்டங்கியில் இருப்பாள். அப்படியே கதவைத் திறந்து கொடுப்பாள்.

     “கூச்ச நாச்சம் இல்லாத பொம்மனாட்டி. புடவையை உடுத்திட்டா என்ன கேடு?” என்று முகம் சுளிப்பான். “டீ, அவளை இனிமே புடவையை உடுத்திண்டு வரச் சொல்லு? என் எஜமானர் சொன்னார்னு சொல்லு!” ரேவுவுக்கு நா துடிக்கிறது. ‘ஏன், மனசில் கனமும் பயமும் இருக்கோ?’ என்று கேட்கத் துடிக்கிறாள். ஆனால் எதுவும் குரலெழும்பவில்லை. தீபாவளிக்கு ஊரிலிருந்து அவர்கள் பெண், சுருதி வந்திருக்கிறாள். பத்தோ பதினொன்றோ படிக்கிறதாம். நல்ல உயரம் - வளர்த்தி, மாநிறம் தான். ஆனால் சிற்பி செதுக்கினாற் போல் கண்ணும் மூக்குமாக, மிக அழகாக இருக்கிறாள். இடுப்புக்குக் கீழ் விழும் கூந்தல்.

     “ஆன்ட்டி, என் தீபாவளி டிரஸ் பார்த்தீங்களா?” என்று கதவைத் திறந்து கபடமில்லாமல் கொண்டு காட்டுகிறது.

     ராம்ஜி படித்துக் கொண்டிருக்கிறான். “ஹாய்...” என்று அவளைப் பார்த்துப் புன்னகை செய்கிறது. என்ன படிக்கிறான் என்று குனிந்து பார்க்கையில், முடிந்திராத தலைமுடி நெருங்க விழுகிறது.

     ரேவு அவள் காட்டிய அந்த மிடி டிரஸ்ஸைப் பார்த்து “பட்டாம்மா இது?... நன்னாயிருக்கு...” என்று சுருக்கமாகக் கருத்துத் தெரிவிக்கிறாள். அவளை விரட்ட வேண்டும் என்பதே குறி.

     “உனக்கு ஸ்டடி ஹாலிடேஸா?... உங்கிட்டே டேலன்ட் எக்ஸாம் கொஸ்டின் பேப்பர் இருக்கா? நான் எழுதப் போறேன்... இங்க மட்றாஸில தான் எல்லாம் கிடைக்கும்னு சொல்றாங்க...”

     “என்னிடம் இல்லையே? நான் ஐ.ஐ.டி. பிரிமெடிகள். இதெல்லாம் தான் கான்ஸன்ட்ரேட் பண்ணறேன். எப்படியானும் ராங்க் எடுக்கணும்...” என்று தலை நிமிராமலே ராம்ஜி பேசுகிறான்.

     நல்ல வேளையாக, சுதா, “சுருதி!” என்று கூப்பிடும் குரல் விழுகிறது. “வந்துட்டேன்மா?” என்று போகிறாள். ரேவு கதவைத் தாழ் போடுகிறாள்.

     தீபாவளிக்குத் துணி எடுக்க அவளைக் கடைக்குக் கூட்டிச் செல்லும் வழக்கமே கிடையாது. அத்துடன் மழை வேறு பிசு பிசு என்று பிடித்துக் கொண்டிருக்கிறது.

     ராம்ஜிக்கும் பரத்துக்கும் ‘டெனிம்’ என்று சாக்குப் போல் நிஜார். அதைத் துவைச்சுச் சுத்தம் செய்பவள் அவள் தானே? அடிக்க வரும் சிவப்பிலும், மஞ்சளிலும், பொம்மை போட்ட சட்டைகள்.

     அவளுக்கு ஒரு கைத்தறிச் சேலை. அவனுக்கு வேட்டியுடன், ஒரு பட்டு ஜிப்பா போன்ற - கழுத்தில் வண்ண எம்பிராய்டரி செய்த குர்த்தா, வாங்கி வந்திருக்கிறான். வெளியில் எடுக்கும் போதே சென்ட் மணம் மூக்கைக் கவ்வுகிறது.

     “யப்பா! சூப்பரா இருக்கு! எனக்கு இப்படி ஒண்ணு வாங்கிக் குடுங்கோப்பா!” என்று பரத் அதைப் பிரித்துப் பார்க்கிறான். முகர்ந்து மணத்தை இழுக்கிறான். “ஃபாரின்ல தச்சதாப்பா?”

     “ஆபீஸ்ல ஒருத்தர் சிங்கப்பூர் போனார். இந்த டெனிம், உங்க டிரஸ் கூட அங்கேர்ந்து வாங்கினதுதான். நான் குர்த்தா சொல்லவேயில்லை, அவரே வாங்கிண்டு வந்திருக்கிறார்...”

     ‘அவள் வாங்கிக் கொடுத்தாளோ’ என்று ரேவு நினைத்துக் கொள்கிறாள்.

     தீபாவளியன்று காலையில் அவன் புது வேட்டியுடன் அந்தக் குர்த்தாவையும் அணிந்திருக்கிறான். தீபாவளி விசாரிக்க முதன் முதலில் சுதா, ரகு, சுருதி குடும்பம் தான் வருகிறது.

     “ஹாவ்! மிஸ்டர் நாதன், யூ லுக் மச் எங்கர் இன் திஸ் குர்த்தா. அட்டகாசமா இருக்கு. உங்களுக்கு ரெண்டு வளர்ந்த பையன்கள் இருக்கான்னு ஒருவரும் சொல்ல மாட்டாங்க, இல்லையா ரகு...?” என்று சுதா வம்பிழுக்கிறாள்.

     “ஸாருக்கென்ன? அவரை அவ்வளவுக்குப் பேணிப் பாதுகாக்கறாங்க வீட்டிலே. வேர் அன்ட் டேரே இல்ல. நம்மப் போலவா? காபி போடணுமே, டிஃபன் பண்ணனுமேன்னு எந்தப் பிராப்ளமும் கிடையாது. பால் வாங்கப் போறதிலேந்து வேலைக்காரி வரலேன்னா தண்ணீர் அடிப்பது வரை ஷேர் பண்ணிக்க வேண்டி இருக்கு...” என்று அவள் கணவன் மறைமுகமாக ரேவுவுக்குப் பாராட்டுதல்களை எடுத்து விடுகிறான்.

     இதை அவன் பொறுப்பானா?

     “சொல்ல மாட்டீங்க பின்ன? இங்கே இந்த ஒரே இன்ஜின்தான் குடும்ப வண்டிய இழுக்குது. நாளைக்கு வடிக்க அரிசி இல்லேன்னா, இன்னிக்கு ராத்திரி பணம் வேணும்னு நோட்டீஸ் கொடுப்பா. வீட்டில் என்ன சாமான் இருக்கு, என்ன தொலஞ்சு போச்சுன்னு கூடப் பார்க்கும் பொறுப்பு கிடையாது...”

     ரேவு அவர்களை ஒரு விரிப்பைப் போட்டுத் தரையில் உட்காரச் சொல்லி, தான் செய்த இனிப்பு - கார வகையறாக்களைக் கொடுத்து உபசரிக்கிறாள்.

     அவர்கள் பாராட்டும் மறைமுகப் பேச்சுகளும் உடனே ரேவு எதிர்பார்த்த பலனைக் கொடுத்து விடுகிறது.

     “மிஸ்டர் ரகு, திடீர்னு அப்பா ஃபோன் பண்ணினார். வீட்டுப் போர்ஷனை வேகண்டாக வையப்பா. நான் ஊரோடு வந்துடலாம்னு இருக்கேன். வைசாலி பொண்ணுக்கும் ஊருல வந்து கர்நாடக சங்கீதம் கத்துக்கணுங்கறா. குடி இருந்தா காலி பண்ணச் சொல்லுன்னு. நான் சொல்றேன்னு நினைக்கக் கூடாது. உங்க அட்வான்ஸைத் திருப்பித் தந்துடறேன்...” என்று சொல்வது ரேவுவின் காதில் விழுகிறது. சுத்தப் பொய்.

     மூன்று வருஷம் முன்பு வந்த போதே அவளுக்கு இந்தியா பிடிக்கவில்லை! வைசாலி பெண் இங்கே வந்து பாட்டுச் சொல்லிக் கொள்கிறாளா? என்ன கற்பனை!

     ஆனால் ரகு இந்தப் பொய்களை நம்பிவிடவில்லை.

     “என்ன ஸார்! எங்க வீடே ஜூனில் முடிஞ்சுடும். போய் விடுவோம். அதற்குள் ஒரு சட்டி தூக்கணுமா? இதுக்கு நடுவிலே, எனக்கே மதுரை டிரான்ஸ்ஃபர் ஆயிடும் போல இருக்கு. குழந்தையோ திருச்சிலதான் படிக்கிறா. பேசாம சுதாவையும் திருச்சி, மதுரை எங்கானும் டிரான்ஸ்பர் வாங்கிக்கச் சொல்லலாம்னு ஒரு யோசனையும் இருக்கு... ப்ளீஸ், உங்களுக்கு வாடகை இருநூறு முந்நூறு கூட வேணும்னாலும் குடுத்துடறோம். அதுக்காக நீங்க அப்பா இங்கே வரார்னு சொல்ல வேண்டிய அவசியம் இல்ல...” என்று மிக மென்மையாக ஒரு இடி இடிக்கிறார்.

     ரேவு உள்ளூறப் பாராட்டிக் கொள்கிறாள்.

     நவம்பர் ஓடி டிசம்பர் வந்து விடுகிறது. அவன் பத்து நாள் ஆபீஸ் வேலை என்று வெளியூர் சென்றிருக்கிறான். பரத் இவளை மதிப்பதே இல்லை. நினைத்த போது வருவான்; சாப்பிடுவான்; தூங்குவான்.

     அன்று காலையில் அவன் எங்கோ ‘எக்ஸ்கர்ஷன்’ போவதாகச் சொல்லி அவளிடம் இருநூறு ரூபாய் கேட்கிறான்.

     “அப்பா என்னிக்கு வராரோ, கைச்செலவுக்கு வச்சிருக்கேண்டா, நீ அவர் இருக்கறப்பவே கேட்டு வாங்கி வச்சிக்கக் கூடாதா?”

     “அந்தப் பையன் தான் உனக்கு உசத்தி. அவன் எது கேட்டாலும் உடனே குடுக்கல? என்ன மட்டும் ஏன் கரிக்கறே?”

     இது அவள் பலவீனம் என்பதை அவன் நன்றாக உணர்ந்து வைத்திருக்கிறான் போலும்!

     பணத்தை எடுத்துக் கொடுக்கிறாள்.

     அன்றிரவும், அடுத்த நாளும் அவன் வரவேயில்லை.

     “ராம்ஜி, உனக்குத் தெரியுமாடா? எங்கேடா எக்ஸ்கர்ஷன் போயிருக்கா?”

     “அவனப் பத்தி என்னைக் கேட்காதேம்மா; அவன் யார் யாரோ ஃபிரன்ட்ஸ் கூடப் போறான். எனக்கும் அவா கூட்டத்துக்கும் சம்பந்தமில்ல. அப்பாவோ, நீயோ ஸ்கூல்ல போய், பிரின்ஸிபாலையும், டீச்சரையும் பாக்கறது, கேட்கிறது!”

     ரேவுவுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.

     அப்போதுதான் சுதா, கதவைத் தட்டித் திறந்து கொண்டு உள்ளே வருகிறாள்.

     “ரேவு மாமி... எங்க வீட்டுப் பக்கம் கொஞ்சம் வரேளா?”

     “என்ன ஆச்சு?...”

     உள்ளே சென்றதும் கதவைச் சாத்துகிறாள்.

     “மாமி, நான்... விசாரிச்சிட்டேன்...”

     நெஞ்சு துடிக்கிறது.

     “நீங்க கேள்விப்பட்டிருப்பேள், என்.கே.ஆர்-ன்னு நாடக நடிகர் ரங்கசாமின்னு பேர். முன்ன ராமனின் கனவு, சுப்பனின் கதை, பொன்னாச்சி கல்யாணம்னு முற்போக்கு டிராமால்லாம் எழுதி நடிச்சுப் பேர் வாங்கினவர். சுதந்தரப் போராட்டத்தில் ஈடுபட்டு, ஜெயிலுக்குப் போய், கம்யூனிஸ்ட் கட்சியில் தீவிரமா இருந்து, இப்ப டிராமாவும் கூட வேண்டாம்னு ஒதுங்கிட்டவர். ட்யூட்டோரியல் நடத்திட்டிருந்தார். எங்க ‘சிநேகிதி’ சங்கத்தோடு தொடர்பு உண்டு. அவர்கிட்ட நான் இந்தப் பிரச்னையைச் சொன்னேன்... ‘ஓ, ஜயவந்தியச் சொல்றியா?’ன்னு உடனே கேட்டுட்டார். ஜயவந்தியின் அப்பா, இவருடைய நாடக ட்ரூப்பில் இருந்தவர் தானாம். எல்.ஐ.சி.யில் இருந்தார். ஜயவந்தி ஒரே பெண். ரொம்ப கெட்டிக்காரி. ரொம்பவும் செல்லம் கொடுத்து வளர்த்தார்கள். எம்.ஏ. படிக்கிறப்ப ஒரு வரனைப் பார்த்துக் கல்யாணமும் செய்தார்கள். அந்தப் பையன் அப்ப அமெரிக்காவில் பி.எச்.டியோ என்னமோ பண்ணிட்டிருந்தான். இவள் எம்.ஏ. முடிச்சி மேலே ஏதோ படிக்கவோ, குடித்தனம் பண்ணவோ அமெரிக்காவுக்கு செலவு பண்ணி அனுப்பி வச்சார். போன மூணாம் மாசமே திரும்பி வந்துட்டா; ‘அவன் ஒரு மிருகம். அவங்கூட ஷூவைத் துடைச்சு, சட்டை வாஷ் பண்ணனுமாம்? என்ன நினைச்சான்!’ என்றெல்லாம் காரணம் சொல்லிக் கொண்டு வந்துவிட்டாள். உடனே டிவர்ஸுக்கும் ஏற்பாடு பண்ணி, ஆயிட்டது. ஒரு வருஷத்துக்குள்ளே கதை முடிஞ்சாச்சு. எம்.பி.ஏ. பண்ணி வேலையா பம்பாயில் தான் இருந்தாள். வேற கல்யாணம் பண்ணிக்கோன்னாலும் வேண்டாம் என்று சொல்கிறாள். அவளிடம் பேசவே முடியவில்லை. இப்ப இங்க வந்து... என்ன செய்வதுன்னு தெரியல... அந்த அவன் இங்கேயே கூட நிழல் போல வரான். மாடிக்குப் போறான். ஃபைல் எடுத்திட்டுப் போறாங்க. ராத்திரி, பத்து பதினொண்ணுன்னு வீட்டில, என்ன வேலை? நாங்க வாயைத் திறக்க முடியல. மானம் போகுது. ஆபீசே கொல்லுன்னு இருக்குன்னு சொல்றாங்க. இவளே காரை ட்ரைவ் பண்ணிட்டுப் போறா. அவன் தான் என்ன பண்ணுவன், பாவம்! நல்ல குடும்பமாம். குருசுவாமிகள் மடத்தில் இவப்பா - குடும்பம் ஆசார அனுஷ்டானம்னு ஊறினவங்களாம். இப்பத் தோணுது. அந்தப் பையன் ராட்சசன்னு, டிவோர்ஸ் வாங்கிண்டாளே, இப்ப, அவன் உடனே கல்யாணம் பண்ணிண்டு, ரெண்டு குழந்தைகள் இருக்கு. போன ரெண்டாம் வருஷம் எனக்குச் சொந்தக்காரங்க கல்யாணத்துல பார்த்தேன். மாமான்னு கூப்பிட்டுப் பேசினான். அந்தப் பொண்ணும் குழந்தைகளும் நமஸ்காரம் பண்ணினாங்க. ‘இவங்க தாத்தாடா கண்ணு’ன்னு சொல்லிக் கொடுத்த பாங்கே போதும். நமக்குக் குடுத்து வைக்கல; இப்படிச் சீரழியறது...’ன்னு சொல்லி அழுதாராம். ‘அட எப்படியோ உனக்குக் கீழ ஸ்டெனோ கல்யாணம் பண்ணிக்க விருப்பமிருந்து, புடிச்சா, அந்தஸ்து பெரிசில்ல. அவனுக்கு, எதானும் சொந்த பிசினஸுக்கு வழி செய்யலாம். ஆனா, அவனுக்கும் கல்யாணமாய், ரெண்டு பையன்கள் பெரிசா இருக்கறப்ப, ஒரு குடும்பத்தைக் குலைக்கிறாப்பல, இன்னொரு பெண்ணின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கலாமா? அவளுக்கு யார் சொல்றது? நாங்க ரெண்டு பேரும் தனியாக எங்கேனும் காசி, ருஷிகேசம்னு போயிடலாம்னு இருக்கிறோம். பழைய வாழ்க்கை முறை அடியோடு அழிஞ்சு போயாச்சு. குடும்பங்கறது பெண்ணுக்குத் தொல்லை. இது ஃப்ரீடம்...’ன்னெல்லாம் அவர் வெறுத்துப் பேசினாராம்... என்ன சொல்றேள் ரேவு மாமி?”

     ரேவுவுக்கு நா எழவில்லை.

     கட்டினவன் மிருகம்னு வந்தவள், இன்னொரு மிருகத்தை அடக்கி ஆளுறாளா? உள்ளூற ஒரு மகிழ்ச்சி உண்டாகிறது. ஒரு பெண்ணாய்ப் பிறந்தவள், மேல் அதிகார பதவியில் இருந்து, எல்லா வளையங்களையும் தூக்கி எறிந்துவிட்டு... இவனுடைய அகங்காரத்தை அவள் குத்த வேணும். அந்தக் குத்தலை அவன் இவளிடம் வந்து காட்டினாலும் பொறுத்துக் கொள்ளலாம். அவன் குத்துப்பட வேணும். “தன் மேல் விழுவது தூசி, அபகீர்த்தின்னு தெரிஞ்சும் பொருட்படுத்தாமல் தைரியமாக, துணிச்சலாக அவள் நடக்கிறான்னா, அது ஆச்சரியம் தான் சுதா...”

     “ரேவு மாமி, நானே உங்களை ஒரு நாள் என்.கே.ஆர். வீட்டுக்குக் கூட்டிட்டுப் போறேன். படிச்சவர், இன்டலெக்சுவல், ரொம்ப முற்போக்கான மனிதாபிமானி. ஒரே ஒரு பெண், கல்யாணமாயி அமெரிக்காவில் இருக்காங்க. அந்தம்மாவும் இப்ப அவகிட்டத்தான் போயிருக்காங்க. அவர் உங்களுக்கு எதானும் யோசனை சொல்லுவார்... உங்க ரெண்டு பேரையும் வச்சுப் பேசி எதானும் தீர்ப்புச் செய்வார்...” என்று கூறுகிறாள் சுதா.

     “ஐயோ! நான் - உங்க மூலம், இப்படி வெளியில் நியாயம் கேட்கப் போறேன்னு தெரிஞ்சா, அடுத்த நிமிஷமே என்னை வெட்டிப் போட்டாலும் போடுவார்! தெரிய வேண்டாம் சுதா!”

     “ஐயோ அப்படி எல்லாம் எடுத்ததும் சொல்வேனா? சாத்தியக் கூறுகளைச் சொன்னேன். இது கவுன்ஸலிங்தான் மாமி, நீங்க... இந்த நாலு சுவருக்குள்ளே எத்தனை நாள் புழுங்குவேள்? வாங்கோ... ஒருநாள் கூட்டிண்டு போறேன். சும்மா தெரிஞ்சவங்க வீட்டுக்குப் போறாப்பல...”

     “உங்களை இப்ப கோர்ட்டுக்குப் போகச் சொல்லல. இப்ப பாருங்க ரேவு மாமி, பரத் உங்களுக்குப் பிரச்னையாயிட்டான். புருஷன் பெண்சாதி ஒரு இணக்கமில்லாத சூழல்ல, இதை எப்படி நீங்க சமாளிப்பீங்க? சொல்லுங்க?”

     “நீங்க அதை முன்னால நிறுத்திப் பாக்கறப்ப எப்படியும் உங்க ரெண்டு பேருக்குள்ளயும் ஒரு புரிந்து கொள்ளும் ஒத்துமை இருக்க வேணுமில்லையா? நீங்க சுயசம்பாத்தியம், சுயச்சார்பு உடையவராக, இப்ப என்னைப் போல இருந்தால் அந்த மாதிரி வேற, நீங்களே முழுசாப் பொறுப்பை ஏத்துக்கிட்டு, போன்னு தனியே வந்துடலாம். அதுவும் இல்ல... உங்களுக்கு நல்லது இல்லாததை நான் சொல்லமாட்டேன் ரேவு மாமி!”

     ரேவுவுக்கும் சரி என்று படுகிறது.

     “போகலாம் சுதா!”






புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
151
152
153
154
155
156
157
158
159
160
161
162
163
164
165
166
167
168
169
170
171
172
173
174
175
176
177
178
179
180
181
182
183
184
185
186
187
188
189
190
191
192
193
194
195
196
197
198
199
200
201
202
203
204
205
206
207
208
209
210
211
212
213
214
215
216
217
218
219
220
221
222
223
224
225
226
227
228
229
230
231
232
233
234
235
236
237
238
239
240
240
241
242
243
244
245
246
247