14

     வசந்தத்துக்குப் பின் தொடர்ந்த வெப்பம் முடிவு பெறுகிறது. புதிய மழையின் இளஞ்சாரலில் வனமே புத்தாடை புனைந்து பூரிக்கிறது. சீதளக்காற்று மெல்ல மயில் தோகை கொண்டு வருடுகிறது. பூமகள் நிறை சூலியாக, குடிலுக்கு வெளியே உள்ள கல் இருக்கையில் அமர்ந்து, வயிரச்சுடர் போல், நீர்த்துளிகளிடையே ஊடுருவும் கதிர்களைப் பார்த்துப் பரவசப்படுகிறாள். அப்போது, வேடுவர் குடியில் இருந்து, விதவிதமான உணவு வகைகளைக் கொண்டு வந்து, ஆண்களும் பெண்களும் அந்த நீண்ட கொட்டடியில் வைக்கின்றனர். இளம் பெண்கள் எல்லோரும் முடி சீவி, மலர் சூடிச் சிங்காரித்துக் கொண்டிருக்கின்றனர். மிதுனபுரிச் சந்தையில் வாங்கிய வண்ணமேற்றிய நார் ஆடைகளை முழங்காலில் இருந்து மார்பு மூடும் வகையில், உடுத்த பெருமை பொங்க, நாணம் பாலிக்கின்றனர்.

     'கிடுவி' என்ற மூதாட்டி, பல்வேறு மலர்களைத் தொடுத்த மாலை ஒன்றைக் கொண்டு வந்து பூமகளின் கழுத்தில் சூட்டுகிறாள். எல்லோரும் குலவை இடுகிறார்கள். விரிந்தலையும் முடியில் சேர்த்து மலர்ச்சரங்களைச் சுற்றி அழகு செய்கிறாள் உருமு.

     பெரியம்மை எழுந்து வந்து அவள் முகமண்டலத்தைக் கைகளால் தடவி, சில சிவந்த கனிகளைச் சுற்றிக் கண்ணேறு படாமல் கழிக்கிறாள்.

     பெண்களும் ஆண்களும் வட்டமாக நின்று பாடல் இசைக்கிறார்கள். ஓரமாக அமர்ந்திருக்கும் முதிய ஆண்களும், பெண்களும், மடியில் குழந்தைகளை வைத்துக் கொண்டும் அந்தப் பாடலில் கலந்து கொள்கின்றனர்.

     பூமகளுக்கு அப் பாடல், விழா எதுவும் புரியத்தானில்லை.

     முதல் நாள் வரையிலும் யாரும் எதுவும் சொல்லவில்லை.

     "இதெல்லாம் என்ன பெரியம்மா?"

     "முதல் சாரல், மழை வரும் போது கொண்டாடுவார்கள். இப்போது, வனதேவி வந்திருப்பதன் மகிழ்ச்சி..."

     கன்னங்களில் வெம்மை படரும் நாணத்துடன் அவள் அந்த சோதிச் சுடரின் கதிர்களையே பார்த்துக் கொண்டிருக்கிறாள்.

     முதல் நாள், உணவு கொண்டிருக்கையில் 'கிடுவி' என்ற அந்த முதியவள் கனவு கண்டதை வந்து கூறினாள்.

     "வன தேவிக்கு ரெண்டு புள்ள இருப்பதாகக் கனவு வந்தது. எங்க பக்கம் ஒரு புது வாழக்குலை... பூ தள்ளி இருக்கு. அது தங்கமா மின்னுது. நான் எல்லாரையும் கூட்டிட்டு வந்து காட்டுறேன். குலை பிரிஞ்சி, பூ உதிர்ந்து, பிஞ்சு வந்து முகிழ்க்கும். ஆனா இது... நா தங்கமாதிரி இருக்கேன்னு கைவச்சப்ப, மடல் பிரிஞ்சி ரெண்டு பெரிய பழம் தெரியுது. அப்ப மரம் பேசுது 'கிடுவி, எடுத்து வச்சிக்க, வனதேவி குடுக்கிறேன். உங்களுக்கு ராசாவூட்டு ஆளுங்க வந்து கொண்டு போயிடாம, பத்திரமா வச்சிக்குங்க. இந்த வனத்துக்கு மங்களம் வரும்...'னு மரம் பேசிச்சி... சரின்னு, நா, வனதேவியக் கும்பிட்டு, அந்தப் பழத்துல கை வைக்கேன். என்ன அதிசயம்? ரெண்டு ரெண்டு புள்ளங்க. தங்கமா, அழகின்னா அத்தினி அழகு. எடுத்து இந்தப் பக்கம் ஒண்ணு, அந்தப் பக்கம் ஒண்ணு இடுக்கிக்கிறேன். குதிக்கிறேன். கூத்தாடுறேன். வாய்க்கு வந்ததெல்லாம் பாடுறேன். புள்ளங்க கக்கு கக்குன்னு சிரிக்குதுங்க. இடுப்பிலேயே குதிக்கிதுங்க... நான் சிரிக்கிறேன், குதிக்கிறேன்.... அப்பத்தான், இந்த ஆளு வந்து கத்துது... 'ஏ கிடுவி! என்ன ஆச்சி! குதிச்சிக் குதிச்சிச் சிரிக்கிற? கனவா? உனக்குக் கிறுக்கிப் பிடிச்சிச்சா? உடம்பத் தூக்கி தம்தம்முனு போடுற?...' அப்பத்தா எனக்கு அது கனான்னு புரிஞ்சிச்சி..."

     "கெனவா? பாட்டிக்குக் கருப்பஞ்சாறு உள்ளே போயிரிச்சி. அதான் தங்க தங்கமா கெனா வருது! மிதுனபுரிச் சந்தையிலே போயி, அஞ்சு குடுவ வாங்கி வந்திருக்கு. நாம செய்யிற சாரம் இப்படி வராது!" என்று இளைஞன் ஒருவன் சிரிக்கிறான். இப்போதும் குடுவைகளில் இலுப்பை மதுவோ, தானிய மதுவோ வைத்திருக்கிறார்கள்.

     ஆட்டமும் பாட்டமும் நிகழ்கையில், பூமகள் தன்னை மறந்திருக்கிறாள். கிடுவி கனவில், 'அந்த இரண்டையும் நீயே பறித்து வைத்துக் கொள். ராசா வீட்டு ஆளுகள் வந்து கொண்டு போகப் போகிறார்கள்' என்ற செய்தி மட்டும், பாயசத்தில் படியும் துரும்பாக உறுத்துகிறது. இந்த மனிதர்களின் அன்பும் அரவணைப்பும் அவளுக்கு எந்நாளும் இருக்கும். அவளையே உதறியவர்கள், அவள் பிள்ளையைச் சொந்தம் கொண்டாட முடியுமா?..

     பெரிய இலைகளில், உணவை வைத்து முதலில் அவளுக்குக் கொடுக்கிறார்கள். குடுவை மதுவில் ஓர் அகப்பையில் ஊற்றி அவளைப் பருகச் சொல்கிறார்கள். அவள் மறுப்புக் காட்டிய போது, பெரியம்மை அருகில் வந்து, "சிறிது எடுத்துக் கொள் தாயே, உனக்கு நல்லது. உடம்பு தளர்ந்து கொடுக்கும்" என்று அருந்தச் செய்கிறாள்.

     இங்கே விருந்து நடைபெறும் வேளையில் சம்பூகனும் குழலூதி வருகிறான். பூமகள் அருகே அந்த இசை கேட்கையில் மனம் ஒன்றிப் போகிறது. அந்த இசையில் உடலசைப்பும் ஆட்ட பாட்டமும் அடங்குகிறது. கண்களில் நீர் துளிக்கும் உருக்கம் அது. யாரையோ? எதற்கோ? இருக்கும் சிறு பிள்ளைகளில் கண்பார்வையற்ற ஒரு பிள்ளை அமர்ந்திருக்கிறது. முடியே இல்லை, வழுக்கை. கண்பார்வை இல்லை. "அரிவியின் பிள்ளையைப் பாரு! அது அந்தப் பாட்டுக்கு எழுந்து அந்தப் பக்கம் போகிறது!"

     பூமரத்தின் பக்கம் உட்கார்ந்து குழலூதும் சம்பூகன், அந்தப் பிள்ளையை அழைத்து அருகில் அமர்த்திக் கொள்கிறான்.

     இப்போது அந்த இசை கேட்டு அந்தச் சிறு உடல் அசைகிறது. கைகள் பரபரக்கின்றன.

     "இந்தச் சிறுவனுக்கு எப்படி இப்படிப் பாட வருது?"

     "நந்தசுவாமி சொல்லிக் கொடுத்தாங்க. சாமி அருள் இது. இப்படி ஒரு குழல் ஊதல் யாருமே ஊதி கேட்டதில்லை..." என்று முதியவன் ஒருவன் சொல்கிறான்.

     ஒரே மகிழ்ச்சிப் பெருக்கு, பரவசம்.

     பொழுது சாயத் தொடங்கும் போது, திமுதிமுவென்று யார் யாரோ ஓடி வரும் ஓசை கேட்கிறது.

     சத்தியமுனி வருகிறாரா?... அந்தப் பக்கத்துப் பிள்ளைகள் அல்லவோ ஓடி வருகிறார்கள்!

     இரைக்க இரைக்க ஓடி வரும் இளைஞன் "அக்கரையில் ராசா படை கொண்டிட்டு வராங்க! அல்லாம் வில்லம்பு எடுத்து வச்சிருங்க!" என்கிறான்.

     கொல்லென்று அமைதி படிகிறது.

     அவள் சில்லிட்டுப் போனாற் போல் குலுங்குகிறாள்.

     "அட, துப்புக்கெட்ட பயலே? யாரடா ராசா படை இங்கே கொண்டு வரது? நந்தசாமி இல்ல?" என்று பெரியம்மை கேட்கிறாள்.

     "நந்தசாமி அக்கரையில் இருக்காங்க. ஆனா, யானை, குதிரை, தேரு, படை, குடை எல்லாம் போகுது. நாம் எதுக்கும் கருத்தா இருக்கணுமில்ல? எப்பவுமின்னா யாரும் இங்க வரமாட்டாங்க. இப்ப அப்படி இல்ல பாருங்க?"

     "எப்போதும் போல் இல்லாம, இப்ப என்ன வந்திட்டது? போடா, போ! வீணாக அதுவும் இதுவும் சொல்லி நீ காட்டுத் தீ கீளப்பாதே. நந்தசாமி அங்க இருக்காங்க இல்ல? ஒரு படை இங்க ஆறு தாண்டாது. நமக்குக் காவல் ஆறு. நெஞ்சுலே கவடு வச்சி வாரவங்கள, அது காவு வாங்கும். அதும், வனதேவிக்கு எந்த ஒரு ஆபத்தும் வராம, அந்தத் தாய் காப்பாத்துவா!"

     அவள் உள்ளூற அமைதி குலைகிறாள்.

     "முன்பு வனம் சென்றவர்களைத் திருப்பி அழைக்க, கைகேயி மைந்தன் வந்தாரே, அப்படி அந்தத் தாய் இவரை அனுப்பி இருப்பாளோ?..."

     "ஏன் பெரியம்மா? என்ன கொடி, என்ன தேசத்து ராசா, எதுக்கு வந்தாங்கன்னு கேளுங்க!"

     "நீ கவலையே படாதே கண்ணம்மா, அவர்கள் யாரும் இங்கே வர மாட்டார்கள். இந்த அரச குலத்தைப் பற்றி நான் நன்றாக அறிவேன்..."

     "மாட்டார்களா?"

     அவள் விழிகளில் நீர் மல்குகிறது.

     அவ்வளவு இரக்கமற்றவர்களா? தமக்குத் தெரியாமல் நிகழ்ந்து விட்ட இந்தக் கொலை பாதகம் போன்ற செயலுக்கு யாருமே வருந்தி, பரிகாரம் செய்ய வரமாட்டார்களா?... எப்படியானாலும் இந்த நிலையில் அவள் நாடு திரும்ப முடியுமோ? எப்படியும் அவள் பிள்ளை பெற்று எடுத்துக் கொண்டு நாடு திரும்பும் நேரம் வராமலே போய் விடுமோ?

     எரிபுகுந்து பரிசுத்தமான பின், மன்னரின் வித்தைத்தானே அவள் மணி வயிறு தாங்கி இருக்கிறது? குலக்கொடி, வம்சம் தழைக்க வந்த வாரிசு, பட்டத்துக்குரிய இளவரசு என்றெல்லாம் சிறப்புடைய உயிரை அல்லவோ அவள் தாங்கி இருக்கிறாள்?...

     எப்படியும் ஒரு நாள் தவறை உணர்ந்து அவர்கள் வராமலிருக்க மாட்டார்கள். போகும் போது, கிடுவிக் கிழவி, லூ, எல்லோரையும் அழைத்துச் செல்ல வேண்டும். இவர்கள் மாளிகைச் சிறப்புகளைப் பார்த்தால் எத்தனை அதிசயப் படுவார்கள்! பட்டாடைகளும் பணியாரங்களும் கொடுத்து மகிழ்விக்க, நன்றி தெரிவிக்க, அவளுக்கும் ஒரு சந்தர்ப்பம் வரவேண்டுமே?

     இந்தச் செய்தி அங்கிருந்த மகிழ்ச்சிக் கூட்டத்தின் சூழலைப் பாதித்து விட்டது. உணவுண்ட பின் எஞ்சியவற்றை எடுத்து வைத்து விட்டு இடங்களைக் கும்பாவும், சதிரியும் சுத்தம் செய்கிறார்கள். மற்றவர்கள் கலைந்து போகிறார்கள். சம்பூகன் இவற்றை கவனிக்கவேயில்லை. ஓர் இலையைப் பறித்து ஊதல் செய்து, குருட்டுப் பையனின் இதழ்களில் பொருத்தி ஊதச் செய்கிறான். ஓசை வரும் இன்பத்தில் குழந்தை மகிழ்ச்சி ஆரவாரம் செய்கிறான். சூழலின் கனம் அவர்களைப் பாதிக்கவில்லை.

     ஆனால், சற்றைக்கெல்லம் வேடர் குடிப் பிள்ளைகள், தோல் பொருந்திய தப்பட்டைகளைத் தட்டிக் கொண்டும் கூச்சல் போட்டுக் கொண்டும் ஆற்றை நோக்கிப் படை செல்கிறார்கள். வில் அம்பும் காணப்படுகின்றன. பூமகள் மெல்ல எழுந்து முற்றம் கடந்து பசுங்குவியல்களுக்கிடையே செல்லும் பிள்ளைகளைப் பார்க்கிறாள். பம்பைச் சத்தம் காதைப் பிளப்பது போல் தோன்றுகிறது.

     "அம்மா... அம்மா... அவர்களைத் தடுத்து நிறுத்துங்கள்! அவர்கள் நச்சம்புகளை எய்துவிடப் போகிறார்கள்! தாயே!..." குரல் வெடித்து வருகிறது. அவள் அங்கேயே புற்றரையில் சாய்கிறாள். சாய்பவளை லூ ஓடி வந்து தாங்கிக் கொள்கிறாள். எந்தத் துணியும் மறைக்காத மார்பகம், உண்ட உணவு - மது எல்லாம் குழம்பும் ஒரு மணம் வீசும் மேனி.

     "அவங்க இங்கே வரமாட்டாங்க, வனதேவி. நமக்கு ஓராபத்தும் வராது. பயப்படாம வாம்மா. நந்தசாமி அவங்க யாரையும் வரவிடமாட்டார்!" அவள் நிமிர்ந்து, கறுத்த பற்கள் தெரியும் பச்சைக்குத்து முகத்தைப் பார்க்கிறாள். "அவர்கள் மேல், நச்சம்பு விட வேண்டாம் என்று சொல்லுங்கள் தாயே! வேண்டாம்..."

     "ஓ, அதுதானா? இப்ப ஏது? இவங்க யாருக்கும் அந்த நஞ்சு ஏதும் தெரியாது. இப்ப அந்தச் செடியும் இல்ல. சத்தியமுனிவரும் சம்பூகனும் இப்ப மருந்துக்குத்தான் எல்லாச் செடியும் வச்சிருக்காங்க! இங்க, தாயே, பாம்பு கூடக் கடிக்காது இருக்கணும்ங்கறதுக்காக வச்சிருக்கு. அதில்லன்னா, அத்தையும் அடிச்சிக் கொன்னு போடுவோம். அழிச்சிடுவம். சத்தியசாமி அதும் வாயிலேந்து விசம் எடுத்து, ஒருக்க தீராத நோயைத் தீர்த்து வச்சாங்க. இங்க எல்லாம் நல்லபடியா இருக்கத்தான் சாமி படைச்சிருக்குது. நீ கலங்காத தாயி..."

     லூ... லூ... நீயும் என் அன்னையா?...

     அவள் கழுத்தைச் சுற்றி இதமாகக் கைகளை வைத்துக் கொள்கிறாள்.

     அஞ்சியபடி எதுவும் நடக்கவில்லை. ஆனால் இருள் கவியும் நேரத்தில் நந்தசுவாமி அவளைப் பார்க்கத் தம்பூரை இசைத்துக் கொண்டே வருகிறார். பூமகள் ஒளிச்சுடரின் முன், அன்னையைத் தொழுகிறாள்.

     ஆதிநாயகன் அன்னையே போற்றி;
     அகிலம் விளங்கும் அருளே போற்றி!
     சோதிச் சுடரின் சக்தியே போற்றி;
     சொல்லொணாத நற்சுவையே போற்றி!...
     இன்பத்துடிப்பினில் துன்பம் வைத்தனை;
     துன்பவலியிலும் இன்பம் வைத்தனை!
     புரிந்தவை யனைத்தும் பூடகமாயின.
     பூடகமெல்லாம் புரிந்து போயின!
     போற்றி போற்றி பூதலத்தாயே!
     ஆதிநாயகன் அம்மை உனையே
     சரணடைந்தேன்...

     வெறும் ரீம் ரீம் ஒலி மட்டுமே கேட்கிறது.

     அவள் சட்டென்று நிமிருகிறாள். "சுவாமி வணங்குகிறேன்" என்று நெற்றி நிலம் தோய வணங்குகிறாள்.

     பெரியன்னை மூலையில் இருந்து குரல் கொடுக்கிறாள்.

     "யாரப்பா அரசர் படை? அவர்கள் தாமா?"

     "ஆமாம் தாயே. கடைசி இளவலுக்குப் பட்டாபிஷேகம் செய்து மேற்கே அனுப்பியிருக்கிறார்கள்..."

     "ஓ, எந்த சத்துருக்களை வெல்லப் போகிறான்? இன்னும் அசுரப் படைகள் இவர்கள் சங்காரம் செய்யக் காத்திருக்கிறார்களா?"

     "லவணனோ, பவணனோ... ஒரு பெரிய கடப்பாறை போன்ற சூலாயுதம் வைத்திருக்கிறானாம். இவர்களுக்கு அச்சம் வந்து விட்டது. அதனால் முன் கூட்டியே பட்டாபிசேகம் செய்து எல்லா விமரிசைகளுடனும் புறப்பட்டுச் செல்கிறார்கள். அவன் உறங்கும்போதோ எப்போதோ அந்த ஆயுதத்தை இவர்கள் அபகரித்து அவனைக் கொன்ற பின், அந்த ஊருக்கு நன்மை பிறக்கும். அந்த அரசகுலம் அங்குத் தழைக்கும்..."

     "அப்பாடா..." என்று பெரியன்னை பெருமூச்சு விடுகிறாள். "அக்கரையோடு... அவர்கள் சென்று, வேதம் வல்லார் முனி ஆசிரமங்கள் எதிலேனும் தங்குவார்கள். இங்கே எதற்கு வரப்போகிறான்!"

     பூமகளுக்கு ஒவ்வொரு சொல்லும் இடி கொள்வது போல் வேதனையைத் தோற்றுவிக்கிறது.

     இவளை நாடு கடத்திய மறுகணமே சாம்ராச்சிய ஆசையா? அதற்குத்தான் இவள் தடையாக இருந்தாளா?

     ஆமாம்; அண்ணனை வெல்லுமுன் தம்பி விபீஷணனுக்குப் பட்டாபிஷேகம் செய்து வைக்கவில்லையா?

     இந்தத் தம்பி தனக்கொரு ராச்சியம் உரித்தாக்கிக் கொள்ள ஓர் அசுர ஊரை நோக்கிப் பட்டாபிஷேகம் செய்து கொண்டு போகிறாரோ?

     அவர்களுக்கு அவள் இங்கிருப்பது தெரியுமோ? அறிவார்களோ? அந்த ஊருக்குச் செல்லும் வழி இதுதானோ?

     அவள் பேசவில்லை. இந்தப் பிள்ளைகளைப் போல் அவர்களும் நச்சம்பு வைத்திருந்தால்...?

     ஏன் இவளுக்குத் துடிக்கிறது? அவர்கள் தவறு செய்தால் இவளுக்கென்ன? ஏன்? இவளைக் காட்டுக்கு அனுப்பவில்லை என்றால், இவளால் அவர்கள் செய்யும் போர்களைத் தடுத்து நிறுத்த முடியுமா? முடியாது. ஏனெனில் எல்லாம் குலகுரு என்ற பெயருடன் அங்கு வீற்றிருக்கும் சடாமகுடதாரிகளின் யோசனைகளாகவே இருக்கும்.

     இவளால் அமைதியாக இருக்க முடியாது என்று தெரிந்தோ என்னவோ... பெரியம்மா இவளுக்கு அந்த மூலிகைப் பானத்தைக் கொடுக்கச் செய்கிறாள். உறங்கிப் போகிறாள்.

     விடியற்காலையில், நோவு நொம்பரம் எதுவும் இன்றி அவள் தாயாகிறாள்... லூ தான் மருத்துவம் செய்கிறாள். ஏதோ எண்ணெய் கொண்டுத் தடவி, எந்த ஒரு துன்பமும் தெரியாத வண்ணம் ஒரு சேயை வெளிக் கொணர்ந்தாள். அடுத்து இன்னொரு சேய்... இரண்டும் வெவ்வேறு கொடியுடைய இரட்டை. வேடர் குடியே திரண்டு வந்து மகிழ்ச்சிக் குலவை இடுகிறது.

     கண்களைத் திறந்து சிசுக்களின் மேனி துடைத்து அவள் மார்பில் ஒரு சிசுவை வைக்கிறாள்.

     பட்டு மலரின் மென்மையுடன் மூடிய சிறு கைகளுடனும் நீண்ட பாதங்களுடனும் கருகருவென்று முடியுடனும் மெல்லிய இதழ்கள் அவள் அமுதம் பருகத் துடிக்கும் போது...

     அவள் பெண்மையின் உயர் முடியேறி நிற்கிறாள். இன்பம் துன்பம் இரண்டும் கலந்த ஒரு பேரின்பம்... தாய்... அவள் ஒரு தாய்... இரண்டு மக்கள்... ஒன்று வெண்மை மேவிய தந்த நிறம். மற்றது செம்மை மேவிய நிறம். ஒன்று வாளிப்பாக இருக்கிறது; மற்றது சற்றே மெலிந்து இருக்கிறது. லூ லூ லூ... என்று பெண்கள் ஓடி வந்து குலவை இடுகிறார்கள். மிதுனபுரியில் இருந்து பெற்று வந்த கரும்புக் கட்டியைக் கிள்ளி வாயில் வைக்கிறாள் பெரியன்னை.

     இளங் காலை நேரத்தில் கொட்டும் முழக்குமாகப் பிள்ளைகள் பிறந்ததை அவர்கள் கொண்டாடுகிறார்கள்.

     "வனதேவி தாயானாள் மங்களம்
     மக்கள் இரண்டு பெற்றெடுத்தாள் மங்களம்
     ஈ எறும்பு ஈறாக, ஊரும் உலகம் அறியட்டும்
     காக்கைக் குருவி கருடப்புள், அத்தனையும் அறியட்டும்!
     யானை முதல் சிங்கம் வரை, வனம் வாழ்வோர் அறியட்டும்.
     வானைத் தொடும் மாமரங்கள் செடி கொடிகள் பூண்டு வரை,
     தேவியை வாழ்த்தட்டும்; பூமகளை வாழ்த்தட்டும்...
     வான்கதிரோன் வாழ்த்தட்டும்; நிலவும் நீரும் வாழ்த்தட்டும்"

     கரவொலியும் வாழ்த்தொலியும் கானகமெங்கும் பரவும் போது, பூமகள், நிறை இன்பப் பரவசத்தில் கண்களை மூடுகிறாள்; நித்திரையில் ஆழ்கிறாள்.