24

     அதிகாலையில் புள்ளினங்களின் ஓசை கேட்டதும், அவள் குடத்தை எடுத்துக் கொண்டு தடாகக் கரைக்கு வருகிறாள்.

     அங்கே, அவள் காண்பது மெய்யா?...

     கண்களைத் துடைத்துக் கொண்டு பார்க்கிறாள். குதிரை.

     'நான் தான் வனதேவி' என்று சொல்வது போல் அது கனைக்கிறது.

     ஒரு பக்கம் மகிழ்ச்சி; ஒரு புறம் அச்சம்; அதோடு இணையும் கவலை... அவள் இதைத் தெரிவிக்கவில்லை என்றாலும் பிள்ளைகள் காணாமல் இருப்பார்களா?

     மகிழ்ச்சி ஆரவாரம்; ஆட்டபாட்டங்களுடன் குதிரை வனத்தை வலம் வருகிறது.

     "இந்தக் குதிரைக்கு க்ஷத்திரிய தருமம் பிடிக்கவில்லை..."

     "பிள்ளைகளா, பேசாமல் ஆற்றுக்கரையில் இறக்கி விடுங்கள். இப்போது நீர் வற்றிச் சுருங்கிய இடத்தில் இறக்கி விட்டால் தாண்டி அக்கரை போய் விடும். நமக்கு எதற்கு வீணான வேதனைகள்!"

     நந்தமுனியினால் எந்த ஒரு தீர்வையும் கொண்டு வர இயலவில்லை.

     அன்று பகல், வனமே கலகலத்துப் போனாற் போல் பறவைக் கூட்டங்கள் கல்லடியோ வில்லடியோ பட்டாற் போல் விழுகின்றன. அமைதியாகக் கிடந்த நாகங்கள் அமைதி குலைந்தாற் போல் வெளியே நடமாடுகின்றன.

     பூமகள் கனவு கண்டாளே, அது மெய்ப்பட்டு விட்டாற் போல் நடுங்குகிறாள். பிள்ளைகளைத் தேடியவாறு செல்கையில், பச்சைக்கிளி ஒன்று அவள் காலடியில் வீழ்கிறது. நெருப்பில் துவண்டாற் போல் விழுந்த அதை அவள் கையில் எடுத்துத் தடவுகிறாள். நெஞ்சம் பதைபதைக்க அவள் "அஜ்யா, விஜயா, நீலா!... புல்லி..." என்று கூவுகிறாள். இது வேனில் காலம். எங்கேனும் காட்டுத் தீயா? காட்டுத் தீ பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறாள். ஆனால் கண்டதில்லை. குடில்களனைத்தும் காய்ந்த புல்லினால் வேயப்பட்டவை. மரங்கள் எதுவும் மொட்டையாக இல்லை. பட்டிலவுகூடத் துளிர் விட்டிருக்கிறது. அது காய் வெடித்துப் பட்டிழைகளைப் பறக்க விடும்போது சிறுமியர் அதைச் சேகரித்து வருவார்கள். இப்போது அந்த மரத்தினும் செந்துளிர்... அவள் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே புறாக்கள், மைனாக்கள், காகங்கள் வீழ்கின்றன.

     எங்கோ சிங்கம் உறுமுவது போல் ஒரு பேரோசை கேட்கிறது.

     அப்போது அங்கே மாயன் எதிர்ப்படுகிறான்.

     "மாயா? நீயா நச்சம்பு விட்டாய்?"

     அவன் கையில் வில்லும் கூரம்பும் இருக்கின்றன.

     "இனிமேல் தான் விடவேண்டும். என்ன செய்திருக்கிறார்கள் பார்த்தீரா வனதேவி? 'மந்திர அஸ்திரம்' என்று விட்டிருக்கிறார்கள். பேய் பிசாசுகள், பறவைகளைச் சாக அடிக்கின்றன. பசுக்கள் மூர்ச்சித்து விழுந்திருக்கின்றன..."

     அவன் பேசுவது சாடையாகவே இருக்கிறது.

     "நீ நச்சம்பா வைத்திருக்கிறாய்?"

     "ஆமாம்..."

     "வேண்டாம். நம்மவருக்கு அதனால் ஆபத்து வரும்..."

     "வராது. அவர்களெல்லாரும், அருவிக்கரை தடாகத்தில் பத்திரமாக இருக்கிறார்கள். நான் ஒரே ஒரு அம்பு போட்டு இவர்களுக்கு நம்மை யாரென்று காட்டுவேன். வனதேவி! இதோ பாரும் பட்சி துடிதுடித்து விழுவதை?..."

     கொத்தாகத் தேன் சிட்டுகள் புற்றரையில் விழுந்திருக்கின்றன.

     "குதிரையை விரட்டி விடவில்லையா?"

     "அது போக மறுக்கிறது... வனதேவி, அதை அறுத்து யாகம் செய்வார்களாம். அதற்கு அது தெரிந்துதான் போக மறுக்கிறது. இந்த உயிர்களுக்கெல்லாம், நம்மை விட முன்னுணர்வு..."

     "சரி, நீ இப்போது யாரைக் கொல்லப் போகிறாய்?"

     "யாரை என்று குறி இல்லை. ஆறு கடந்து அவர்கள் கூடாரத்துக்கு முன் நின்று கூப்பிடுவேன். 'கோழை போல் பசு பட்சிகளைச் சாக அடிக்கும் 'மந்திர அம்பு' விட்டிருக்கிறாயே, என் எதிரே வா' என்று கூப்பிடுவேன்..."

     "வேண்டாம், மாயா, நான் சொல்வதைக் கேள்! சத்திய குரு வந்து விடுவார். அவர் வந்ததும் அவர் சொல் கேட்டு நடப்போம்!"

     "அதற்குள் நம் வனம் அழியும். வனதேவி, என்னைத் தடுக்காதீர்கள்!"

     அவன் விரைந்து போகிறான்.

     பிள்ளைகளை அவள் தடுத்தும் அவர்கள் செவி சாய்க்கவில்லை. நந்தமுனியோ, தனியிடத்தில் அமர்ந்து, ஒற்றை நாணை மீட்டிய மவுனத்துள் மூழ்குகிறார்.

     பூமகள் முதியவளிடம் வந்து அரற்றுகிறாள்.

     "அம்மா, மந்திர அஸ்திரம் பட்சியை அழிக்குமோ?"

     "எனக்கென்னம்மா தெரியும்? நீதான் க்ஷத்திரிய நாயகனுடன் வாழ்ந்தவள். பெரிய பெரிய போர்களை, வதங்களை, 'அஸ்திர' சாகசங்களைக் கண்டிருக்கிறாய்!"

     அவளுக்கு நினைவுக்கு வருகிறது. ஓர் அரக்கன், ஓடிச் சென்று கடலில் வீழ்ந்து வீழ்ந்து எழுந்தானாம். அப்படி அத்திரம் துரத்திச் சென்றதாம்... அது, தீயாய், வெப்பம் உமிழுமோ?...

     மனம் பதைப்பதைக்கிறது. இந்தக் கவடறியாப் பிள்ளைகளின் மேனி கருகும் வெப்பத்தை உமிழும் அத்திர வித்தைகளை அவிழ்த்து விடுவார்களோ, தெய்வமே! வானத்தில் இருந்து ஆட்சி செய்யும் மாசக்தியே! நீ கொடுப்பது தானே வெப்பக்கதிர்? அது இவ்வாறு மனித நேயமற்ற செயல்களுக்கு உதவலாமோ? மந்திரமாக இருந்தால் அது பயன்படாதவாறு நீயே தடுப்பாய்? ஒரு மழையைப் பொழிவிப்பாய். குளிர் காற்றோடு எங்கள் உள்ளங்களைக் குளிரச் செய்வாய்..." என்று பலவாறு வேண்டி நிற்கிறாள். அன்று முழுவதும் அவள் தீயை உயிர்ப்பிக்கவில்லை. பிள்ளைகளுக்காக உணவு சேகரித்துப் பக்குவம் செய்யவில்லை.

     வானில் கருமேகங்கள் கவிந்தாற் போல் ஒளி மங்குகிறது. ஒரே இறுக்கம். ஓர் இலை அசையவில்லை. ஓர் உயிரின் சலசலப்பும் தெரியவில்லை. நந்தமுனியைத் தேடி அவள் செல்கிறாள். அவர் மரத்தடியில் வீற்றிருந்த கோலத்தில் காணப்படவில்லை.

     நீண்ட மவுனம்... நீண்ட நீண்ட நிழல்கள் தென்படவில்லை. கிழட்டுக் கத்யாயனியப் பசுவும், பெரியன்னையும் மூச்சுப் பேச்சின்றி முடங்கி இருக்கிறார்கள். அந்த அரக்கர் கோனுடனான போரின் போது கூட அவள் மனமழியவில்லையே? இப்போது... இது போரும் இல்லை... அமைதியும் இல்லை. போர்க்களத்துக்குப் பெண்கள் சென்றதாக அவள் அறிந்திருக்கவில்லை.

     எனினும், உயிரின் ஒரு பகுதியாகவே உள்ள பிள்ளைகள் அவளிடம் இருந்து பறிக்கப் படுவார்களோ? இரவும் பகலுமாக ஒரு நாள் செல்கிறது. இருப்புக் கொள்ளவில்லை.

     பூமகள் ஓடுகிறாள் வாழைவனம் தாண்டி, கருப்பஞ் சோலைகள் சின்னாபின்னமாக்கப்பட்ட பகுதிகள் கடந்து, பெரிய ஆலமரம்... அங்கே என்ன நடக்கிறது? அவள் காலடியில், அந்தி மங்கும் அந்த நேரத்தில் யாரோ விழுந்து கிடப்பது புலனாகிறது. நா அண்ணத்தில் ஒட்டிக் கொள்கிறது. ஒரு காவலன் வீழ்ந்திருக்கிறான். எங்கு பார்த்தாலும் மரக்கிளைகள் முட்செடிகள் ஒடிந்து கிடக்கின்றன.

     மங்கி வரும் பொழுதில் இனம் புரியாத ஒரு வேடப்பிள்ளை விரைந்து வருகிறான். அவள் கையைப் பற்றி இழுத்துச் செல்கிறான். "வனதேவி, அங்கே சண்டை நடக்கிறது. அவர்கள் அம்பு போட்டு நம் மாடுகளைக் கொன்று விட்டார்கள். நீலனும் மாலியும் மரங்களை ஒடித்து அவர்களை அடித்தார்கள். குருசுவாமி சொல்லாமல் வில் அம்பைத் தொடக்கூடாதல்லவா? இப்ப மாயன் அம்பு விட்டு எல்லோரையும் ஆற்றுக்கு அக்கரையில் துரத்தி விட்டான்... ஆற்றில் காவலர் ஒருவர் விழுந்து போய்விட்டார்..."

     "அஜயன் விஜயன் எங்கே? நந்தசுவாமி போரிடச் சொன்னாரா?"

     "நந்தசுவாமி படகில் அக்கரை செல்கிறார். அஜயனும் விஜயனும் அவருடன் செல்கின்றனர். அங்கே போய் நியாயம் பேசப் போகிறார்கள். வனதேவி, நம் பசுக்கள், கன்றுகள், காளைகள் எல்லாவற்றையும் பார்த்து பார்த்து அந்தக் காவலர்கள் கொல்கையில் நம்மால் கைகட்டிக் கொண்டு இருக்க முடியுமா?... அங்கே வந்து பாருங்கள்!"

     அவன் அவளை அழைத்துச் செல்கிறான். மேய்ச்சல் இடம்... மங்கி வரும் இருளில், ஏதோ கனவுக் காட்சி போல் மாடுகள், உயிர் கொடுக்கும், உணவு கொடுக்கும், உழைப்பாளி மாடுகள் மலை மலையாகச் சாய்ந்து கிடக்க, காகங்கள் அவற்றின் மீது குந்திப் பறந்து சோகமாகக் கரையும் காட்சியைக் காண்கிறாள். 'உம்மீது குந்தி இருந்து விருந்தாடுவோமே, உங்கள் உடல்களில் சிலிர்ப்போடும் போது எங்களுக்கும் அது ஓர் அநுபவமாக இருக்குமே. இப்போது உயிரோட்டம் இல்லாமல் விழுந்து விட்டீர்களே' என்று அவை கரைவதாகத் தோன்றுகிறது. கண்ணீர் குருதி போல் பொங்குகிறது. குடிலுக்குத் திரும்பி வந்தவளின் விம்மல் ஒலி முதியவளை உலுக்குகிறது.

     புல்லி வந்து ஒளித்திரி ஏற்றி வைக்கிறாள்.

     "கண்ணம்மா, குழந்தாய்..." என்று அழைக்கும் குரல் நடுங்குகிறது.

     "இந்நேரம் உன் பிள்ளைகள் யாரென்று அவர்களுக்குத் தெரிந்திருக்கும். இவர்கள் பக்கம் குதிரை அவர்கள் விரட்டாமல் வந்ததும் நன்மைக்கே... இப்போது, உன் நாயகனோ, மைத்துனர்களோ வரக்கூடும். பிள்ளைகள் அவர்களுடன் ஒளிரட்டும்!" பூமகள் இறுகிப் போகிறாள்.

     அந்த அழுத்தத்தினிடையே இருந்து சன்னமான நாண் எழுப்பினாற் போன்று உறுதியான குரல் ஒன்று ஒலிக்கிறது.

     "தாயே, பெற்றவர் கை கழுவினர்; வளர்த்தவர் கை கழுவினார்; கணவர் கை கழுவினார். இப்போது, என் உதரத்தில் ஊறிய இவர்களை நான் அனுப்புவேனா? மாட்டேன், அவர்கள் என் உயிரின் உயிர்!"

     மூதாட்டி வாஞ்சையுடன் அவள் முகத்தை இதமாகத் தடவுகிறாள்.

     "உனக்கு உன் நாயகர், குழந்தைகளுடன் சேர வேண்டும் என்ற தாபம் இல்லையா?"

     அவள் சிறிது நேரம் பேசவில்லை.

     "அந்தத் தாபம் குளிர்ந்து சாம்பற் குவியலாகி நெடு நாட்களாகி விட்டன தாயே!"

     ஊனுறக்கமின்றி அன்றிரவு பொழுது ஊர்ந்து செல்கிறது. அதிகாலைப் பொழுதில் யாரோ சங்கு ஊதுகிறார்கள். அது வெற்றி முழக்கச் சங்காக இல்லை. நரிகளின் ஊளையொலி போல் ஒலிக்கிறது. திடுக்கிட்டு அவள் வெளி வருமுன் பிள்ளைகளின் அரவம் கேட்கிறது. வேடுவப் பெண்களின் அலறலொலி உதயத்தின் கீழ்வானச் செம்மையை குருதிக் குளமாகக் காட்டுகிறது.

     "என்ன அநியாயயம்மா! மாயன், நீலன், பூவன் எல்லோரும் மாண்டு மடிந்தார்கள். குரு ஏனம்மா, அம்பெடுக்க வேண்டாம் என்று சொன்னார்? அவர்கள் நம் விளை நிலங்களை அழித்தார்கள்..."

     அவள் தன் இரு மைந்தர்களையும் தழுவிக் கொள்கிறாள். அப்போது அங்கே, அந்த யாகக் குதிரை, பட்டப் போர்வை கிழிக்கப்பட்டு, பொன்மாலை அகற்றப்பட்டு மங்கலமிழந்த நிலையில் வந்து கனைக்கிறது.

     "ஏ குதிரையே! நீ வந்த வழியே திரும்பிச் செல்! எங்கள் அமைதியில் இப்படிப் புகுந்து கொலைக் களமாக்கினாயே! போய்விடு!" அவள் அதன் பின் பக்கத்தைப் பிடித்துத் தள்ளி விடுகிறாள்.

     "அம்மா, மாயன், நூறு நூறாக அவர்கள் படையைக் கொன்று குவித்து விட்டான். நாங்கள் குரு சொல்லை மீறவில்லை. மரக்கொம்புகளையும் கற்களையுமே எறிந்து தற்காத்துக் கொண்டோம்..."

     "நந்தசுவாமி எங்கே?..."

     "அவர் ஆற்றங்கரையில் நின்று சந்திரகேதுவைப் பின் வாங்கச் சொன்னார். நம் முனிவர் தூது சென்றுள்ளார். வரும் வரையிலும் அவர்கள் வன்முறையில் ஈடுபடலாகாது என்று சொல்லிக் கொண்டிருந்த போது தான் மாயனின் நச்சம்பு, படையினரின் மீது பாய்ந்து கொன்றது. சந்திரகேது கூட மூர்ச்சையாகி விட்டான் என்று நளன் கூறினான். நாங்கள் ஆற்றிலிருந்து இக்கரை வந்து, ஓடி வருகிறோம்..."

     "நந்தமுனி எங்கே?..."

     அவள் மனம் கட்டுக்கடங்காமல் நின்று கனைக்கிறது.

     பிள்ளைகள் விரைகின்றனர்.

     அடுத்த கணம், "அம்மா...!" என்ற ஒலி கானகம் முழுதும் எதிரொலிக்கிறது.

     உதயத்தின் கதிர், நந்தமுனிவரின் நிச்சலன முகத்தில் வீழ்கிறது.