(கௌரிராஜன் அவர்களின் ‘மாமல்ல நாயகன்’ என்ற இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடித்து, தட்டச்சு செய்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். - கோ.சந்திரசேகரன்) அத்தியாயம் - 18 இரண்டாம் பரமேசுவரவர்மன் ஆட்சிப் பொறுப்பேற்று ஆண்டுகள் ஐந்து கழிந்தன. பரமேச்வர விண்ணகரம் என்ற பெயரில் வைகுந்தப் பெருமாள் ஆலயம் கட்டி முடிக்கப்பட்டது. சிவனுக்குக் கயிலாசநாதர் கோவில் போல, திருமாலுக்கு வைகுந்தப் பெருமாள் கோவில் என்று பல்லவர் ஆட்சியில் சைவமும், வைணவமும் ஒன்று என்பதைக் காண்பிக்கும் வகையில் கட்டப்பட்டது. கலியை வென்றவன், ஆட்சியை அமைதியான முறையில் நடத்திக் குடிகளைக் காத்தான் என்ற சிறப்புடன் இவன் ஆட்சி செய்து கொண்டிருந்த போது அந்த நிகழ்ச்சி நடந்தது. பல்லவமல்லனுக்கு அப்போது வயது பன்னிரண்டு. சித்திரமாயன் பாண்டியர்களிடம் நிரந்தரமாகத் தங்கிவிட, கயல்விழியும் நாகபைரவனும் பரமேசுவரவர்மனைத் தீர்க்கத் தக்க சமயம் பார்த்துக் காஞ்சியில் மாற்றுடையில் நடமாடிக் கொண்டிருந்தனர். நாகபைரவன், யவன தேசத்து வணிகனைப் போல் வேடமிட்டிருந்தான். கயல்விழி, அவன் மனைவியாய்த் தன்னை அலங்கரித்திருந்தாள். இராச வீதியில், வணிகனுக்குரிமையான மாளிகையில் தங்கியிருந்தனர். மாமல்லை சென்று காஞ்சி திரும்பிக் கொண்டிருந்தான் பரமேசுவரவர்மன். இருபுறமும் இரணியவர்மனும் விஜயவர்மனும் வர, மன்னன் கம்பீரமாக யானையில் வந்து கொண்டிருந்தான். மக்களின் வாழ்த்தொலிகள், காஞ்சி நகரத்தையே நிலைகுலைய வைத்தன. எங்கும் தோரணங்கள். மக்கள் கூட்டத்தினரைப் பார்த்துக் கையசைத்தபடி வந்தான் வேந்தன். கயல்விழியும், நாகபைரவனும் மன்னனைப் பார்க்கப் போவது போன்று உப்பரிகையில் வந்து நின்றனர். கயல்விழியின் ஒரு கையில் சிறிய வாள் இருந்தது. அதில் நஞ்சு தடவப்பட்டிருந்தது. பட்டமாத்திரத்தில் உயிர்பறிக்கும் வகையில் அந்நஞ்சு சக்தி வாய்ந்திருக்கக் கயல்விழி, தக்க நேரத்தை எதிர்ப்பார்த்திருந்தாள். பின் கதவு திறந்து வைக்கப்பட்டுப் புரவிகள் இரண்டு தயாராய் இருந்தன. வெற்றி அல்லது வீரமரணம் என்ற நிலயில் மன்னன் மீது வாள் பாய்ந்ததும் பின்கட்டு வழியாகச் சென்று புரவியில் அமர்ந்து நகர எல்லையில் மறைவான இடத்தில் மறைந்து அன்று முழுவதும் அங்கேயே தங்கி காவல் தளர்ந்ததும் தப்பித்துவிட வேண்டும் என்று திட்டமிட்டிருந்தனர். வாழ்த்தொலிகளும், பேரிகைகளும், முரசங்களும் முழங்க மன்னன் இராச வீதியில் திரும்பினான். யானை மீது மிக உற்சாகமாக அமர்ந்து, மக்களைப் பார்த்துக் கையசைத்தவாறு வந்து, கயல்விழியும், நாகபைரவனும் இருக்கின்ற மாளிகையை நெருங்கிக் கொண்டிருந்தான். “கயல்விழி, எச்சரிக்கை! தவறினால் நம் காரியம் தோல்வியாவது மட்டுமல்ல, உயிரும் பறிபோகும்!” என்று எச்சரித்தான் நாகபைரவன். அவளின் மார்பு படபடவென்று அடித்துக் கொண்டது! பைரவரை வேண்டிக் கொண்டு குறுவாளை வீசத் தக்க தருணம் பார்த்திருந்தாள். எதற்குப் புரவி என்று யோசிக்கும் போது பின்கதவும் திறந்து வைக்கப்பட்டிருந்தது. அதன் வழியாக உள்ளே செல்லலாம் என்று எண்ணி நுழையும் அதே சமயம், கயல்விழி, தன் குறுவாளை மன்னனை நோக்கி வீசினாள். ‘ஹா!’ - என்று யானையிலிருந்து மன்னன் சாய, “பிடியுங்கள் அவர்களை!” என்று ஏக காலத்தில் குரல்கள் எழும்பின. உப்பரிகையிலிருந்து இறங்கிப் பின் கதவுக்கு ஓடி வந்த இருவரும் வாளுடன் விஜயவர்மன் வேகமாக ஓடி வருவதைப் பார்த்துத் திகைத்து வேறு பக்கம் தப்ப முயல, மன்னருக்கு ‘ஆபத்து’ என்று மட்டும் புரிந்த விஜயவர்மன், ஆத்திரமுற்று நாகபைரவனை ஒரே வீச்சில் கீழே வீழ்த்தினான். துடித்து வீழ்ந்த அவனைப் பார்த்து, “அப்பா!” என்று கயல்விழி அலற, அவள் மார்பிலும் அந்த வாள் பாய்ந்தது. மன்னன் சாய்ந்தது போலவே அவளும் மண்ணில் சாய்ந்தாள். |