முதற்பகுதி : உதயம்
அத்தியாயம் 13. யுக்தி பலித்தது எதிர்பார்த்ததைவிடச் சீக்கிரமாகவே சோமு கும்பகோணத்திலிருந்து போதிய உதவியுடன் சாத்தனூர் திரும்பிவிட்டான். அவ்வளவு சீக்கிரமே எல்லாம் தயாராகி உதவியும் கிடைத்ததற்குக் காரணம் சோமுவினுடைய கெட்டிக்காரத்தனந்தான். கடலங்குடித் தெருவில் வசித்து வந்த மாஜிஸ்டிரேட் ஐயர் தன் யசமானருக்கு மிகவும் வேண்டியவர், நெருங்கிய நண்பர் என்பதைச் சோமு முன்னர் யசமானுடைய பல தடவைகள் கும்பகோணம் போன சமயத்தில் அறிந்து கொண்டிருந்தான். தவிரவும் மாஜிஸ்டிரேட் ஐயருக்குப் போலீஸாரிடம் நல்ல செல்வாக்கு இருந்தது என்பது எப்படியோ தெரிந்திருந்தது அவனுக்கு. மாஜிஸ்டிரேட் ஐயரும் சோமுவை அதற்குமுன் பல தடவைகள் ரங்க ராவுடன் வந்திருந்தபோது கண்டது உண்டு. ஆகவே அவன் சுருக்கமாக விஷயத்தைச் சொல்லி, அவசியத்தையும் அவசரத்தையும் உணர்த்தியபோது வெகு ஜரூராகவே ஆகவேண்டியதை எல்லாம் செய்ய முற்பட்டார் அவர். வீண் கேள்விகள் கேட்டுக்கொண்டு அநாவசியமாகக் காலங் கடத்தாமல் சுருக்கமாக ஒரு குறிப்பு எழுதிச் சோமுவிடமே கொடுத்துப் போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்பினார். பிறகு தம் ஆட்களையும் வெவ்வேறு இடங்களுக்கு ஆள் சேகரிக்க அனுப்பினார். தாமே தம் சைக்கிள் வண்டியில் ஏறிக்கொண்டு சோமுவைப் பின்தொடர்ந்து போலீஸ் ஸ்டேஷனுக்குப் போனார். முப்பது நாற்பது பேர் போலீஸ்காரர்கள் ஸ்டேஷனிலும் வேறு இடங்களிலும் ‘டுயூடி’யில் இருந்தவர்கள் துப்பாக்கிகள் சகிதம் கிளம்பினார்கள். கும்பகோணம் குடியானவர் தெருக்களிலிருந்தும் பலர் கையில் தடிகளுடனும் அரிவாள்களுடனும் யுத்த சன்னத்தராகக் கிளம்பினார்கள். இன்ஸ்பெக்டரும் வந்தார், மாஜிஸ்டிரேட்டும் வந்தார். இருவரும் சைகிளில் வந்தார்கள். சோமு தன் குதிரை மேலேயே திரும்பினான். போலீஸ்காரர்கள் ஓட்டமும் நடையுமாக அந்த நாலு மைல்களையும் வெகு துரிதமாகவே கடந்துவிட்டார்கள். மாஜிஸ்டிரேட் ஐயரும், போலீஸ் இன்ஸ்பெக்டரும், சோமுவும் சாத்தனூர் எல்லையே அடைந்தவுடனே சற்று நின்று எப்படி என்ன செய்யலாம் என்று யோசித்தார்கள். சோமுதான் கொள்ளைக் காரர்களைப் பிடிப்பதற்குச் சுலபமான யுக்தி சொன்னான். அதை நிறைவேற்றி வைக்கிற பொறுப்பும் அவனுடையதாயிற்று. சோமுவின் யுக்தியை விசாரித்து அறிந்து கொண்டு ‘சரி’ என்று மற்ற இருவரும் சம்மதிப்பதற்கும் போலீஸ்காரர்கள் வந்து சேருவதற்கும் சரியாக இருந்தது. சாத்தனூர்ச் சர்வமானிய அக்கிரகாரம் நிம்மதியாக இருந்தது. எவ்விதமான சந்தடியும் இல்லை. பிச்சாண்டியின் கொள்ளைக் கூட்டம் வழக்கமாகத் தடபுடலும் ஆர்ப்பாட்டங்களும் செய்வதுண்டு என்று அறிந்திருந்த மாஜிஸ்டிரேட் சந்தேகப்பட்டார், சோமு சொன்ன தெல்லாம் தவறாக இருக்குமோ என்று. சோமுவுக்கோவென்றால் அதற்குள் திருடர்கள் தங்கள் காரியத்தை முடித்துக்கொண்டு போய்விட்டார்களோ, அப்படிப் போயிருந்தால் போனதுதானே, என்ன செய்ய முடியும் என்று மனசு "திக்'கென்றது. சந்தடி செய்யாமல் துப்பாக்கிகளைத் தயாராக வைத்துக் கொண்டு தெருக் கோடிகளில் நாலு நாலு சிப்பாய்களைக் காவல் இருக்கச் சொல்லி அனுப்பினார். ரங்க ராவ் வீட்டுக் கொல்லைப் புறத்திலும் வாசல் புறத்திலும் எட்டு எட்டுப் போலீஸ்காரர்கள் நின்றார்கள். மற்றவர்களை எல்லாம் பத்திரமாக நாலு பக்கங்களிலும் நிறுத்தி வைக்கச் சொல்லிவிட்டுச் சோமு மட்டும் தைரியமாகப் போய் ரங்க ராவ் வீட்டு வாசற் கதவை லேசாகத் தட்டினான். தட்டிவிட்டுத் தொட்டிப் பூட்டுத் துவாரத்தின் வழியாக உள்ளே நடப்பது ஏதாவது தெரிகிறதா என்று பார்த்தான். உள்ளே எண்ணெய்த் தீவர்த்திகளின் வெளிச்சம் சற்று மங்கலான சிவப்பாகத் தெரிந்தது. நிழலும் ஒளியும் மாறி மாறித் தென்பட்டன. கொள்ளைக்காரர்கள் போய்விடவில்லை ஒருவர் தப்பாமல் மாட்டிக் கொண்டு விடுவார்கள் என்று சந்தோஷப் பட்டான் சோமு. உடனே பூட்டுத் துவாரத்தண்டை வாயை வைத்து ‘குசுகுசு’வென்று மெல்லிய குரலில், “குதிரைக்காரச் சிதம்பரம் அனுப்பிச்சாரு! பிச்சாண்டிகிட்டே சொல்லு!” என்றான். கதவுக்கு அப்பால் நின்றவன் ஒன்றும் பதில் சொல்லாமல் உள்ளே போனான் என்பது தெரிந்தது. ஆனால் அடுத்த வினாடியே யாரோ ஒருவன் அந்தக் கதவைத் திறந்தான். பூராவும் திறக்காமல் சோமு உள்ளே வருவதற்கு மட்டும் இடைவெளி இருக்கும்படியாகக் கதவை ஒருக்களித்தான். சோமு உள்ளே வந்தவுடன் கதவை மீண்டும் சாத்தித் தாழிட்டு விட்டான். உள்ளே சோமு கண்ட காட்சி அவனைக் கதிகலங்க அடித்தது. சோனிபாயையும் கங்காவையும் காணவில்லை. ரங்க ராவைத் தூணோடு சேர்த்துக் கட்டியிருந்தார்கள். கூடம் பூராவும் வீட்டிலிருந்த சாமான்கள் எல்லாம் தாறுமாறாகச் சிதறிக் கிடந்தன. பல சாக்குகள் நிறையச் சாமான்கள் போட்டுக் கட்டிக் கிடந்தன எடுத்துப் போகத் தயாராகக் கட்டி வைத்திருந்தார்கள் என்று எண்ணினான் சோமு. ரங்கராவினுடைய பணப் பெட்டிகூடக் கூடத்திலேதான் இருந்தது. அதற்குப் பக்கத்திலே பிடி மீசையும், குரூரம் ததும்பிய முகமும், சிவந்த கண்களுமாக உட்கார்ந்திருந்த வாட்டசாட்டமான மனிதன்தான் பிச்சாண்டி என்பதிலே சோமுவுக்குச் சிறிதும் சந்தேகம் உண்டாகவில்லை. எடுத்துப் போகக்கூடிய சாமான்கள் வேறு என்ன என்ன இருந்தன என்று மூலை முடுக்குகளிலெல்லாம் தேடிக் கொண்டிருந்தார்கள் போலும் கொள்ளைக்காரர்கள். கூடத்திலே பத்துப் பன்னிரண்டு பேர்தாம் இருந்தார்கள். இன்னும் பத்துப் பன்னிரண்டு பேர்வழிகள் இருந்தால் ஜாஸ்தி. இருபது இருபத்தைந்து கொள்ளைக் காரர்கள் தாம் வந்திருந்தார்கள் என்பது நிச்சயமானவுடனே சோமுவுக்கு வெகு திருப்தியாக இருந்தது. கதவைத் திறந்து சோமுவை உள்ளே விட்ட ஆசாமி அவனைக் கொண்டுபோய்ப் பிச்சாண்டியின் முன் நிறுத்தினான். பிச்சாண்டி கண்களை விழித்து உருட்டிச் சோமுவைப் பார்த்துப் பயங்கரமான குரலில், “யாருடா பயலே! நீ யாரு? இப்படித் தைரியமாக இங்கே வந்தே!” என்றான், மீசைமேல் கை போட்டபடி. இதற்குள் அங்கிருந்தவர்களில் ஒருவன் சோமுவின் உதவிக்கு வந்தான். “உங்களுக்குக்கூட உறவுன்னு சொல்லிக்கிட்டு மேட்டுத்தெருவுலே கறுப்பன்னு ஒத்தன் இருந்தான்லே, அவனுடைய மவனாம் இந்தப் பயல்...!” என்றான். யார் இப்படிச் சொன்னது என்று திரும்பிப் பார்த்தான் சோமு. குதிரை லாயத்தில் சிதம்பரத்துடன் பேசிக்கொண்டிருந்த ஆசாமி. சிதம்பரம் தன்னுடைய மச்சான் என்று சொன்ன அந்த ஆசாமி என்று கண்டவுடனே சோமுவுக்குக் கொஞ்சம் தெம்பு வந்தது. தன் வார்த்தைகளை ஆமோதிக்க அங்கே ஓர் ஆள் இருந்ததுபற்றி அவனுக்குப் பரம திருப்தி. “சிதம்பரந்தான் இப்ப என்னை அனுப்பிச்சு. நான் அவரோடே லாயத்திலே படுத்துக்கிட்டிருந்தேன்...” “அவனே வரத்துக் கென்னடா?” என்று குறுக்கிட்டான் பிச்சாண்டி. சிதம்பரத்தின் மச்சான் மீண்டும் குறுக்கிட்டான். அவன் பிச்சாண்டிக்கு மிகவும் வேண்டியவன்போலும். இல்லா விட்டால் இப்படி அடிக்கடி துணிச்சலாகக் குறுக்கிடுவானா? “அவன் எப்படி வருவான்? இன்னிக்குப் பூராவும் ஓயாமே குடிச்சுப்பிட்டு நினைப்புத் தெரியாமே படுத்துக்கிடக்கான் அவன்” என்றான். சோமு அதைப் பிடித்துக் கொண்டான். “ஆமாங்க, இன்னிக்குப் பூரா அவருக்கு நினைப்பே இல்லீங்க. இப்பத் தான் ஏதோ நினைச்சுக்கிட்டாரு. ‘சோமு’ன்னாரு. ‘ஏன் அண்ணாத்தே!’ ன்னேன். அவரு சொன்னாரு, ‘பிச்சாண்டி இந்த நேரம் வந்திருப்பான். அவன் கிட்டப்போய் நீ சொல்லு. ஐயா வூட்டுக்கு எதிரிலே இருக்கிற வூட்டையும் ஐயரு போன மாசந்தான் வாங்கிச்சு. வாங்கினப்புறம் ஒரு நாள் அவரு கூடத்திலே தென்கிழக்கு மூலையிலே எதோ பள்ளம் பறிச்சு எதையோ உள்ளே வச்சு மண்ணைப் போட்டு மூடினாரு. என்னன்னு நிச்சயமாத் தெரியாது. பணம், காசு, வெள்ளி, தங்கம் இருக்கலாம். பிச்சாண்டியைப் பாக்கச் சொல்லு. அந்த இடத்திலே ஏதாவது கிடைச்சா எனக்கு ஒரு பங்கு கேட்டேன்னு சொல்லு’ இன்னுச்சு. ‘ஐயையோ! நான் போகமாட்டேன்! ஆப்புட்டுக்கிட்டா வாயைத் திறக்கறத்துக்கு முன்னாடி அடிச்சுப் போட்டுடுவாங்க. நான் போக மாட்டேன்’னேன். ‘சிதம்பரம்னு பேரைச் சொல்லிக்கிட்டுப் போடா. ஒண்ணும் செய்ய மாட்டாங்கடா’ன்னாரு சிதம்பரம். அப்பறம் மறுபடியும் குடிக்க ஆரம்பிச்சிடிச்சு. மறந்திட்டுப் பேசாதே இருந்திடுவாருன்னு சும்மாக் கிடந்தேன். ஆனால் அவர் சும்மா விடவில்லை! ‘போடா சோமுப்பயலே! போடா!’ன்னு சொல்லிக் கிட்டே இருந்திச்சு. ‘உனக்கும் எதினாச்சும் கிடைக்கும்டா’ ன்னாரு. வந்திட்டேன், உசிரைக் கையிலே பிடிச்சுக்கிட்டு” என்றான் சோமு. கொள்ளைக்காரர்கள் எவ்வளவு பேர் இருப்பார்களோ, அவர்களைச் சேர்ந்தாற்போல எதிர்க்க முடியுமோ என்னவோ என்கிற சந்தேகம், சோமு அழைத்து வந்த மாஜிஸ்டிரேட்டுக்கும் மற்றவர்களுக்கும். உயிருக்குத் துணிந்த கொள்ளைக்காரர்கள் போலீஸ்காரர்களின் துப்பாக்கிகளுக்கு அஞ்சமாட்டார்கள் என்பது நிச்சயம். அவர்கள் எவ்வளவு பேர்வழிகள்தாம் இருந்தாலும் இரண்டு கோஷ்டியாகப் பிரித்துவிட்டால் தீர்த்துக் கட்டிவிடுவது சுலபமாக இருக்கும் என்றும் அதற்கானதைச் செய்யத் தான் தயாராக இருப்பதாகவும் சோமு சொன்னான். தன் யசமான் ரங்க ராவ் முந்திய வாரம் எதிர்ப்பக்கத்தில் ஒரு வீடு வாங்கியிருந்தது சோமுவுக்குத் தெரியும். சிதம்பரத்தின் பெயரை உபயோகித்துக் கொண்டு உள்ளே போய்விடலாம். உள்ளே போனபின் எதிரிலிருந்த வீட்டைப்பற்றிச் சொன்னால் கொள்ளைக்காரர்கள் நம்பாமலா இருந்துவிடப் போகிறார்கள் என்கிற நம்பிக்கை சோமுவுக்கு. சோமு தலையைக் குனிந்தபடியே உட்கார்ந்திருந்தான். தன் யசமானரை நிமிர்ந்து பார்க்கத் தைரியம் இல்லை அவனுக்கு. அவர் அந்தச் சமயம் அவனும் உண்மையிலேயே கொள்ளைக் கூட்டத்தாருடன் சேர்ந்துவிட்டான் என்றுதான் எண்ணியிருப்பார் என்று அவன் நினைத்தான். நிமிர்ந்து அவரைப் பார்த்தானானால் சோமுவுக்குத் தாளாது. கையாலோ, கண்ணாலோ, முகபாவத்தாலோ ஏதாவது சைகை காட்டிவிடுவான். அதைக் கொள்ளைக் கூட்டத்தார் யாராவது கவனித்து விடுவார்கள். அவ்வளவுதான்; இருவருக்குமே ஆபத்து வந்துவிடும். போட்ட வேஷத்தைப் பரிபூரணமாக உணர்ந்து நடித்து விடுவது என்று தீர்மானித்தவனாகச் சோமு குனிந்த தலை நிமிராமல் உட்கார்ந்திருந்தான். பிச்சாண்டி எதிர்வீட்டைப்பற்றிக் கேட்டதற்கு நேரடியாக எதுவும் பதில் சொல்லவில்லை ரங்க ராவ். “எதிர் வீட்டின் சாவி உன் கையிலிருக்கிற கொத்திலே இருக்கு, போய்ப் பாரு! இருந்தால் எடுத்துக்கோ!” என்றார். அவ்வளவுதான். மேலே எதுவும் சொல்ல அவர் மறுத்துவிட்டார். இதைச் சொன்னதில் அவர் குரலில் ஓர் அலக்ஷ்யம் தொனித்தது. இந்தக் குரல் சோமுவுக்குத் திருப்தி அளிப்பதாக இருந்தது. திருடர்கள் அநாவசியமாக அவரைத் தொல்லை கொடுத்து உபத்திரவித்திருந்தால் அவரால் அந்தக் குரலில் பேசியிருக்க முடியாது என்பது நிச்சயம். எதிர் வீடும் ராயருடையதுதான் என்பது ஏற்பட்டுவிடவே சோமுவிடம் நம்பிக்கை வந்துவிட்டது பிச்சாண்டிக்கு. அவன் சொன்னதில் பாக்கியும் உண்மையாக இருப்பதில் என்ன தடை? புதிதாக இரண்டொரு தீப்பந்தங்களைக் கொளுத்தச் சொல்லி உத்தரவிட்டான். பிறகு தன் ஆட்களில் பதினைந்து பேரை அங்கே கூடத்தில் கொண்டு வந்து சேர்த்திருந்த சாமான்களை எல்லாம் எடுத்துத் தயாராகக் கட்டிவைத்துக் காவல் செய்யச் சொல்லிவிட்டுப் பன்னிரெண்டு பதின்மூன்று பேர் பின்தொடரக் கதவைத் திறந்துகொண்டு வெளியே அக்கிரகாரத்துக்குள் போனான். சிதம்பரத்தின் ‘மச்சான்’ ஒருவன்தான் தைரியமாகப் பிச்சாண்டியை அணுகி, “வெளிச்சம் இல்லாமல், சத்தமும் செய்யாமல்...!” என்று ஆரம்பித்தான். ஆனால் பிச்சாண்டி அவன் சொன்னதைக் காதில் வாங்காமல் ‘கலகல’ வென்னு ஊரெல்லாம் எதிரொலிக்கும் படியாகச் சிரித்தான். அன்று ஏற்கனவே ஏராளமான பொருளும் வெற்றியும் கிடைத்துவிட்ட மிதப்புப் போலும் அவனுக்கு. “ஆமாண்டா! பாப்பாரத் தெருவிலே பிச்சாண்டியை எதிர்த்துக்கிட்டு வர யாருக்குடாலே துணிச்சல்? எல்லாம் உள்ளே போய்ப் பதுங்கிக் கிட்டிருப்பாங்கடா!” என்றான். அவன் கையிலே ‘பளபள’வென்று இரும்புப் பூண் போட்ட மூங்கில் தடி ஒன்று இருந்தது. கல்வீசக் கவண் ஒன்றும் இடுப்பிலே செருகியிருந்தான். அவன் கையிலிருந்த ஆயுதங்கள் இவைதாம். உட்கார்ந்திருந்தபோது இருந்ததைவிட எழுந்து நின்ற போது பின்னும் அதிகப் பயங்கரமான தோற்றத்துடனே காட்சியளித்தான் அவன். தெருவிலே வந்தவுடன் இருட்டிலே ஓடி நழுவிவிடுவது என்று உத்தேசம் சோமுப் பயலுக்கு. ஆனால் அந்த உத்தேசம் பலிக்கவில்லை. திடீரென்று என்ன சந்தேகம் தோன்றியதோ என்னவோ, சிதம்பரத்தின் மச்சான் சோமுவினுடைய வலது தோள்மேல் கையைப் போட்டுக் கொண்டே வந்தான். அவர்கள் வீட்டிலிருந்து வெளியேறித் தெருவில் கால் வைத்தபோது தெருவிலே யாரும் அவர்கள் கண்களில் தட்டுப் படவில்லை. போலீஸ் ஆட்கள் இருட்டிலே பதுங்கி ஒளிந்து கொண்டிருந்தார்கள் போலும். தீவர்த்திகளின் வெளிச்சம் தெருவில் ஒரு பகுதியிலேதான் விழுந்தது. அதற்கப்பால் இருந்த இருள் தீவர்த்திகளின் வெளிச்சத்தால் அதிகப்பட்டிருப்பது போலவே இருந்தது. தன் நண்பர்கள் அங்கேதான் இருந்தார்களா என்று அறிந்து கொள்ளச் சுற்றுமுற்றும் கூர்ந்து பார்த்த சோமுவுக்குக்கூட யாரும் கண்ணில் படவில்லை. ஏதோ உற்சவ காலத்தில் சுவாமி புறப்பட்டு வெளி வருவது போலக் கொள்ளைகூட்டத்தார் தீவர்த்திகளுடன் தெருவில் வந்தார்கள். தெருத் திண்ணைகளில் படுத்து உறங்கிக்கொண்டிருந்த சிலர்கூட முதல் சந்தடி கேட்டவுடனே எழுந்து சப்தம் செய்யாமல் உள்ளே போய்ப் படுத்திருப்பார்கள். ‘கொள்ளைக்காரர்கள் நம் பக்கம் வராவிட்டால் சரிதான். ரங்க ராவ் ரொம்பவும் நல்லவர்தாம். அவருக்கு இந்தத் துரதிருஷ்டம் வேண்டாம். ஆனால் விதி... நாம் குறுக்கிடுவதால் விதிப்படி நடப்பதைத் தடுக்க முடியாது. நாமும் சிரமப்படும்படி யானாலும் ஆகிவிடலாம்’ என்று வேதாந்தபரமாகச் சிந்தித்துக் கொண்டே இழுத்துப் போர்த்திக் கொண்டு படுத்து உறங்கியிருப்பார்கள். மூச்சுவிடவும் அஞ்சியவர்களாகப் படுத்துக் கிடப்பார்கள். ஏதாவது சப்தம் கேட்டால், ‘உடையவர்களுக்கு’ உடனே திகில், கொள்ளைக்காரர்கள் தங்கள் உடைமைகளை நாடி வந்துவிட்டார்களோ என்று. பிச்சாண்டி சொன்னதும் சரிதான் ‘பாப்பாரத்’ தெருவிலே பிச்சாண்டியை எதிர்த்துத் தலைதூக்கத் தயாராக யார் இருந்தார்கள்? உதவி செய்வதற்காக வந்திருந்தவர்கள் மேலே என்ன செய்வார்களோ, எப்படி நடந்து கொள்வார்களோ என்று திகிலாக இருந்தது சோமுவுக்கு. எந்த நிமிஷம் தன் உயிருக்கே ஆபத்து வந்துவிடுமோ என்று எண்ணிப் பயந்தான். சிதம்பரத்தின் மச்சான் கைப்பிடியிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு தைரியமாகவே பிச்சாண்டியின் பக்கத்திலேயே நடந்தான் சோமு. ரங்க ராவின் சாவிக் கொத்திலிருந்து ஒரு சாவியைப் போட்டு எதிர்வீட்டு வாசற்கதவைத் திறந்தார்கள். மூன்று ஆட்கள் ஒரு தீவர்த்தியுடன் முதலில் வீட்டுக்குள் போனார்கள். அவர்கள் போய் இரண்டு நிமிஷங்களுக்குப் பிறகு தான் பிச்சாண்டியும் உள்ளே செல்ல முயன்றான். வாசற்படியிலே அவன் கால் தடுக்கிற்று. நிமிர்ந்தான். மேல்படி அவன் தலையில் இடித்தது. அதே வினாடியில் ஊரெல்லாம் ஒலிக்கும்படியாகக் குரல் கொடுத்தான் பிச்சாண்டி பயங்கரமான ஒரு குரல்; வார்த்தைகள் எதுவும் இல்லை. சங்கேதமான ஒரு சப்தம்; அவ்வளவு தான். “உள்ளே ஏதோ ஆபத்திருக்கு!” என்று அவன் சொல்லி வாய் மூடுமுன் நடுந்தெருவிலிருந்து ஒரு குரல் கெக்கலிகொட்டிச் சிரித்து, “ஆபத்து உள்ளே மாத்திரம் இல்லையப்பா, நாலு பக்கமும் இருக்கு!” என்றது. அந்தக் குரல் கும்பகோணத்து மாஜிஸ்டிரேட்டின் குரல்போல இருந்தது சோமுவுக்கு. எப்படியோ பிச்சாண்டியின் மனசில் தோன்றிவிட்டது, இந்த இசைகேடான நிலைமைக்குத் தன் பக்கத்திலிருந்த சோமுப் பயல்தான் காரணம் என்று. பக்கவாட்டில் திரும்பி, வலது கையில் கழி இருந்ததால் இடது கையாலேயே ‘பளார்’ என்று ஓர் அறை வைத்தான் சோமுவின் கன்னத்தில். காது பாடிற்று சோமுவுக்கு. அடுத்த அறை கன்னத்தில் விழுந்தது தெரியுமே தவிர அதை உணரவில்லை சோமு. அவன் சுருண்டு பிரக்ஞை இழந்து கீழே விழுந்துவிட்டான். இவ்வளவுதான் அன்றிரவு நடந்த சம்பவங்களைப் பற்றிச் சோமுவுக்குத் தெரியும். அதற்குப் பிறகு நடந்ததை அவன் பின்புதான் விசாரித்து அறிந்து கொண்டான். |
புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில் | |
எண் |
நூல் |
1 | |
2 | |
3 | |
4 | |
5 | |
6 | |
7 | |
8 | |
9 | |
10 | |
11 | |
12 | |
13 | |
14 | |
15 | |
16 | |
17 | |
18 | |
19 | |
20 | |
21 | |
22 | |
23 | |
24 | |
25 | |
26 | |
27 | |
28 | |
29 | |
30 | |
31 | |
32 | |
33 | |
34 | |
35 | |
36 | |
37 | |
38 | |
39 | |
40 | |
41 | |
42 | |
43 | |
44 | |
45 | |
46 | |
47 | |
48 | |
49 | |
50 | |
51 | |
52 | |
53 | |
54 | |
55 | |
56 | |
57 | |
58 | |
59 | |
60 | |
61 | |
62 | |
63 | |
64 | |
65 | |
66 | |
67 | |
68 | |
69 | |
70 | |
71 | |
72 | |
73 | |
74 | |
75 | |
76 | |
77 | |
78 | |
79 | |
80 | |
81 | |
82 | |
83 | |
84 | |
85 | |
86 | |
87 | |
88 | |
89 | |
90 | |
91 | |
92 | |
93 | |
94 | |
95 | |
96 | |
97 | |
98 | |
99 | |
100 | |
101 | |
102 | |
103 | |
104 | |
105 | |
106 | |
107 | |
108 | |
109 | |
110 | |
111 | |
112 | |
113 | |
114 | |
115 | |
116 | |
117 | |
118 | |
119 | |
120 | |
121 | |
122 | |
123 | |
124 | |
125 | |
126 | |
127 | |
128 | |
129 | |
130 | |
131 | |
132 | |
133 | |
134 | |
135 | |
136 | |
137 | |
138 | |
139 | |
140 | |
141 | |
142 | |
143 | |
144 | |
145 | |
146 | |
147 | |
148 | |
149 | |
150 | |
151 | |
152 | |
153 | |
154 | |
155 | |
156 | |
157 | |
158 | |
159 | |
160 | |
161 | |
162 | |
163 | |
164 | |
165 | |
166 | |
167 | |
168 | |
169 | |
170 | |
171 | |
172 | |
173 | |
174 | |
175 | |
176 | |
177 | |
178 | |
179 | |
180 | |
181 | |
182 | |
183 | |
184 | |
185 | |
186 | |
187 | |
188 | |
189 | |
190 | |
191 | |
192 | |
193 | |
194 | |
195 | |
196 | |
197 | |
198 | |
199 | |
200 | |
201 | |
202 | |
203 | |
204 | |
205 | |
206 | |
207 | |
208 | |
209 | |
210 | |
211 | |
212 | |
213 | |
214 | |
215 | |
216 | |
217 | |
218 | |
219 | |
220 | |
221 | |
222 | |
223 | |
224 | |
225 | |
226 | |
227 | |
228 | |
229 | |
230 | |
231 | |
232 | |
233 | |
234 | |
235 | |
236 | |
237 | |
238 | |
239 | |
240 | |
240 | |
241 | |
242 | |
243 | |
244 | |
245 | |
246 | |
247 |