அத்தியாயம் 14. மண்ணாசை

     வருஷப் பிறப்பன்று சாயங்காலம், பஞ்சாங்கக்கார ஐயர் புதுப் பஞ்சாங்கத்தைப் படித்துப் புது வருஷத்தின் பலாபலன்களை, அதுவும் விவசாயத் தொழிலைப் பற்றி முக்கியமாகச் சொல்வது வழக்கம். வழக்கம்போல் இவ்வருஷமும், பெருமாள் கோவில் முன் உத்ஸவத்திற்காகப் போட்டிருந்த கொட்டகையில், புரோகிதப் பிராமணர் உபந்நியாசம் செய்து கொண்டிருந்தார். கொட்டகை நிரம்ப ஜனங்கள் இருந்தார்கள். பெரியவர்கள், ஐயர் எடுத்துரைக்கும் கந்தாய பலன்களைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், அங்கிருந்த சிறுவர்களின் கவனமெல்லாம், உபந்நியாசத்திற்கப்பால் விநியோகம் செய்யப்படும் சுண்டல், வாழைப்பழம், பானகம், நீர்மோர் முதலிய தின்பண்டங்களில்தான் இருந்தது. அதனால், அச்சிறுவர்கள் தங்களுடைய விளையாட்டிலேயே ஈடுபட்டு, உபந்நியாசத்தைக் கேட்பவர்களுக்குக் கோபம் வரும்படி, அடிக்கடி கூச்சல் போட்டார்கள். வேலன் ஒதுக்குப்புறமாக ஒரு மூலையில் நின்றுகொண்டிருந்தான். அச்சிறுவர்கள் செய்யும் குறும்புகளைப் பார்த்து, மற்றக் காலங்களில் அவன் ஆனந்தித்திருப்பான். ஆனால் இன்றையத் தினம், அவன் மனம் துக்கத்திலேயே ஆழ்ந்திருந்தது. அவர்களில் ஒரு பையன் மிகவும் பொல்லாதவனாயிருந்தான். அவனை வேலன் கோபித்துக்கொண்ட பொழுது, அவன் நகைப்புக்காட்டி, வேணுமென்றே அதிகக் கூச்சல் போட ஆரம்பித்தான். அப்பொழுது வேலன் அவனை அடிக்கப் போனான். அச்சிறுவன் பந்தலை விட்டு வெளியே ஓடினான். வேலனும் அவனைப் பயப்படுத்துவதற்காகத் துரத்தினான். அச் சமயத்தில் வேலன், அருகிலிருந்த ஒரு பெரிய வேப்பமரத்தடியில், மதுரையும் சட்டை தலைப்பாகை அணிந்த உத்தியோகஸ்தனைப்போல் தோன்றின ஒரு மனிதனும், வெகு ஊக்கத்துடன் பேசுவதைக் கண்டான். மதுரை, வேலனைப் பார்த்தான். உடனே, அவன் அந்த உத்தியோகஸ்தனை மரத்தடியிலேயே நிறுத்திவிட்டு, விரைவாக வேலனண்டை வந்தான்.

     “அவன்தான் சம்மன் கொண்டுவந்திருக்கும் அமீனா. அளச்சுக்கிட்டுப் போ,” என்று சொல்லிக்கொண்டே, வேலனிடம் நில்லாமல் கொட்டகைக்குள் நுழைந்தான்.

     வேலன் தலையை ஆட்டிக்கொண்டு, அமீனாவிடம் சென்றான். அவன் மிகவும் நல்லவனாகக் காணப்பட்டான். சம்மன் கொண்டுவரும் அமீனாக்கள் இவ்வளவு நல்லவர்களாயிருப்பார் களென்று வேலன் நம்பவேயில்லை.

     “மதுரையை நான் வெகுநாளாய் அறிவேன். உன்னுடைய தகப்பனார் சமாச்சாரமெல்லாம் அவர் சொன்னார். உங்களுடைய கஷ்டத்தை ஊரெல்லாம் தமுக்கடிக்கிறதில் எனக்கு என்ன லாபம்? உன் தகப்பனாரிடம் என்னை அழைத்துக்கொண்டு போ; சீக்கிரம் காரியத்தை முடித்து விடலாம். என்னைப் பார்த்துச் சந்தோஷப் படுகிறவர்கள் யாரும் இல்லை. என்னைத் திட்டாமல் இருந்தால், அதுவே பெரிய காரியம்,” என்று புன்னகையுடன் அந்த அமீனா சொன்னான்.

     வேலன் அவனுடைய இரக்கத்தைப் பாராட்டிவிட்டு, அவனைத் தெருவுக்குப் பின்புறம் இருக்கும் ஒரு குறுக்கு வழியாய்த் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.

     முதலில், வெங்கடாசலம் அந்தச் சம்மன் தன்னுடையதாயிருக்குமென்று நம்பவேயில்லை. அதைக் கண்ணால்கூடப் பார்க்கமாட்டேனென்று சொல்லிவிட்டான். பிறகு, மெள்ள மெள்ள, வேலன் அவனுக்குப் பழனியாண்டி பிள்ளையிடமிருந்த லேவாதேவியை ஞாபகப்படுத்தினான்.

     அப்புறம் படிப்படியாக, மாயாண்டி செய்த அநியாயத்தையும், எக்காரணத்தினால் அவன் அப்படிச் செய்தான் என்பதையும், வேலன் எடுத்துரைத்தான். அப்பொழுதுதான், வெங்கடாசலம் சம்மனை வாங்கிப் பார்த்தான். பார்த்த மாத்திரத்தில், அவன் தலைமேல் இடிவிழுந்தாற்போல் இருந்தது. அக்காகிதம் அவன் கையைப் பொசுக்குவதுபோல் இருந்தது. அவனுடைய இருதயம் படபட வென்று அடித்துக்கொண்டது. அந்தப் பிராதினால் உண்டாகப்போகும் தீமைகள், அவன்முன் மலைகள்போல் வந்து நின்றன. மனம் சஞ்சலப்பட்டுத் தவித்தது. “அந்த அக்குருமக் காரப் பசங்க வேலை இது,” என்று கூச்சலிட்டான். ஆத்திரத்தில் தான் முடவனாய்விட்டான் என்பதை மறந்து, திடீரென்று எழுந்து உட்கார முயன்றான்; முடியாமல் வலியுடன் தவித்தான்.

     “இது மதுரை ஒளவே; வீரப்பன்கூடத்தான்,” என்று மறுபடியும், பல்லைக் கடித்துக்கொண்டு இரைந்தான்.

     “அவுங்க இதுலே ஒண்ணுங் கலக்கல்லே, அப்பா. அவுங்களாலே ஆனமுட்டும் ஒதவிதான் பண்ணிக்கிட்டு இருக்காங்க” என்றான் வேலன்.

     “நமக்கு ஒதவியா பண்றாங்க, அட மடயா! அட புத்தி கெட்டவனே! அந்தக் கொலைக்காரப் பாவிங்க நம்ம களுத்துக்குச் சுருக்கு மாட்டத் தயாராயிருக்காங்க - நீ அதுலே களுத்தை நீட்டலாங்கரையேடா? ஒன் புத்திக்கு நான் என்ன சொல்லுவேன்!” என்று வெங்கடாசலம் நொந்துகொண்டான்.

     தன் அப்பாவை மறுத்துப் பேசியது தப்பென்று வேலனுக்குப் பட்டது. வேற்று மனிதன் முன், தன் வீட்டு விஷயங்களைப் பேச அவனுக்குச் சிறிதுகூட இஷ்டமில்லை. ஆதலால், தன் அப்பாவினிடம் சமாதானமாகச் சொன்னான். “ஐயாவைக் கையெளுத்துப்போட்டு அனுப்பிச்சிடுங்க. அவரை காக்க ஏன் வைக்கணும்? நமக்காவ, வளியை உட்டு வளி வந்தாரே.”

     “மெய்தான், மெய்தான்,” என்று சொல்லிக்கொண்டு வெங்கடாசலம், காட்டின இடத்தில் படுத்தவாறே கையொப்பமிட்டான். உடனே அமீனா, காகிதங்களைச் சுருட்டிக்கொண்டு, இடத்தை விட்டு நகர்ந்தால் போதுமென்று, விரைவில் விடைபெற்றுக் கொண்டான். வேலன், தன் தந்தையின் கோபம் தணியுமாறு சற்றுநேரம் மௌனமாய் உட்கார்ந்தான். ஆனால், புகைந்து புகைந்த எரிமலை தீமாரி பெய்வதுபோல, வெங்கடாசலம் முன்னிலும் பதின்மடங்கு அதிக ஆவேசத்துடன் கூவத் தொடங் கினான். “கொலைக்காரப் பாவிங்க! ரெண்டுபேரும் சேந்துகிட்டு என் களுத்தை அறுத்திட்டாங்களே! கூடப் பொறந்தவங்கபோல நம்பினதுக்கு, என்னை நடு ஆத்திலே தள்ளிட்டாங்களே! ஒரு பகையாளிகூட இப்படிப் பண்ணமாட்டானே! எச்சிக்கலை நாயிங்க! இப்போ இங்கே வந்தாங்கன்னா, களுத்தைத் திருகிடு வேனே!” என்று பல்லைக் கடித்தான். “அந்தச் சாதிகெட்ட பய பளனியாண்டி, எங்கிட்ட ஒரு பேச்சு சொல்லக்கூடாது? எண்ணூத்தி அம்பெத்தெட்டு ரூவா! நான் எங்கடாப்பா போவேன்! ஐயோ! கடவுளே! என்னைக் கவுக்க வளி தேடிட்டாங்களே!” என்று கதறினான்.

     “கவுக்கிற ஒவாயந்தான் இது - ஆனால் மதுரை மாமனும், வீரப்பன் மாமனும் ஒரு பாவமும் அறியாங்கப்பா, இதெல்லாம் மாயாண்டிப்பய செஞ்ச வேலை. எப்படிநாச்சும் என்னை ஊரை வுட்டுத் தொரத்திடணுமின்னு பாக்கறான். நாளன்னிக்கு வள்ளிக்கும் அவன் மகனுக்கும் கண்ணாலம்...”

     “நாளன்னிக்கா! அதுக்குள்ளறவா! எல்லாம் ஜாலவித்தையாட் டம் இருக்குதே! வள்ளியை அந்தக் கொரங்குக்கா கட்டிக்குடுக் கறாங்க! காலம் என்னா கெட்டுப்போச்சு!” என்று கையைப் பிசைந்துகொண்டு, வேறு கவனமாய்ச் சொன்னான்.

     வெங்கடாசலத்தை மேலே பேசவிடாமல், வேலன் சொல்லத் தொடங்கினான்: “வெக்கங்கெட்ட பய, இன்ணென்னுகூட சொல்லிக்கிட்டு திர்ரான் - நான் இந்த ஊருலே இருக்குமட்டும், வள்ளி அவன் மகன்கிட்ட வாளமாட்டாளாம்.”

     தன் கஷ்டங்களை மறந்து, வெங்கடாசலமும் சிரித்தான்.

     “இப்போ தெரியுதாப்பா, நம்ம மேலே ஏங்கச்சி கட்றாங் கோன்னிட்டு? மீனாச்சிக்குக்கூட இவ்வளவு தூரம் போவ இஷ்ட மில்லையாம். ஆனால், அந்தப் பய கேட்டாலல்ல? மதுரை மாமனும் வீரப்பன் மாமனும் இதிலிருந்து எப்படித் தப்பிக்க வக்கிறதூன்னிட்டு, ராவும் பகலுமா யோசிச்சுகிட்டு இருக்காங்க. அது எனக்கு நல்லாத் தெரியும். அப்படியிருக்கையிலே, நாம அவுங்க மேலே பளி போட்டுத் திட்டினாப் பாவமில்லை?” என்று வேலன் விசனமாகக் கூறினான்.

     இச்சொல் வெங்கடாசலத்தின் மனத்தில் உறைத்தது.

     “வேலு, அவுங்களை நான் அறியேனா? துன்பப்பட்டுப்பட்டு, என் மனசெல்லாம் நொந்து போச்சுடாப்பா! என்னை அறியாமே கோவம் வருது; நான் என்ன பண்ணுவேன்? அவுங்களை விட்டா, எனக்கு யாரு இருக்காங்கடாப்பா? என்ன ஏற்பாடு செஞ்சிக்கிட்டு இருக்காங்க?” என்று வெங்கடாசலம், வெகு ஆவலுடன் வினவினான்.

     வேலன், உடனே அவன் மனப்போக்கை கண்டுகொண்டான். அவன் மனத்திலிருந்த ஒரு கெட்ட அபிப்பிராயத்தை மாற்றப் போக, ஒரு பொய் நம்பிக்கையையல்லவா உண்டு பண்ணிவிட்டான்! ஆகையால், அதை உடனே திருத்தினான்: “ஐயோ பாவம்! அவுங்களாலே, என்ன முடியுமப்பா? யோசனைதான் சொல்லு வாங்க. கையிலே காசா பணமா? நம்மப்போலத்தானே அவுங்களும்?”

     “நெஜந்தான், நெஜந்தான்,” என்று வெங்கடாசலம் ஒப்புக் கொண்டான். “ஆனா, நான் என்ன பண்றது இப்போ? பிராது தீர்ப்பு ஆன மக்யா நாளே, நெலங்களை ஏலத்துக்குக் கொணாந் துடுவானே! எனக்கு ஆரு ஒதவி செய்வாங்க? ஆரும் தெம்பட வில்லையே! ஆகா! அவன் மட்டும் இப்போ இங்கே இருந்தான்னா, நான் எதுக்கும் பயப்படமாட்டேனே! எவ்வளவு யோசனை சொல்லுவான். என்ன துணிச்சலு! அவன் தைரியமே அல்ல அவனைக் கொன்னிடுச்சி; நான் ஆரைச் சொல்றேன் தெரியுதா, வேலு?”

     வேலன், தெரிந்துகொண்டவனைப்போலத் தலையை ஆட்டினான்.

     “அட கொளந்தே! ஒனக்கு என்னடா தெரியும், நீ காதாலே கேட்டதுதானே? ஒங்கப்பன் ஊரை விட்டுப்போனபோது, நீ தாய் வவுத்துலே இருந்தேடாப்பா. அவன் என்னிக்கு என்னை உட்டுப் பிரிஞ்சானோ, அன்னிக்கே என் கை உளுந்து போச்சு; எனக்கு பாதி உசிரு போச்சு. ‘நீ போவாணாமுடா, என் சொத்தெல்லாம் ஈடுகாட்டி ஒன்னை நிப்பாட்டிக்கிறேன்,’ இன்னு எவ்வளவு சொன்னேன். கேக்கமாட்டேனிட்டான். ‘நானுங் கெட்டு நீயும் கெடவேணாம்,’ இன்னுட்டான். ஆனா, அதென்னமோ மெய்தான். கண்ணை மூடிக்கிட்டுக் கடனை வாங்கிட்டான். ஒங்கம்மா சாவுற போது, நீ அஞ்சு நாள் கொளந்தை. ஒன்னைப் பெத்தவங்களைப் பத்தி ஒனக்கு என்னடாப்பா தெரியும்? நாங்க வளக்கத்தானே வளத்தோம்? அப்பா வேலு, நீ எப்பொனாச்சும் ஒனக்கு அப்பா அம்மா இல்லாமே போயிட்டாங்களேன்னு நெனைச்சயா?”

     “அப்பா! வாணாப்பா,” என்று வேலன், தாரை தாரையாய்க் கண்ணீர் விட்டுக்கொண்டு, தேம்பித்தேம்பி அழுதான்.

     “பாத்தியா! பாத்தியா! ஒன்னை என்னமோ சொல்லிட்டேன்,” என்று வெங்கடாசலம், உதறும் விரல்களோடு வேலன் கையைத் தடவிக்கொடுத்தான்.

     “நீங்க ஒண்ணும் சொல்லல்லே, அப்பா. நான் நூறு பொறப்பு எடுத்தாலும், ஒங்க கடனைத் தீத்துக்க முடியாதே!” என்றான் வேலன், ஒரு நொடியில் தன் துக்கத்தை அடக்கிக்கொண்டு.

     “என்னமோ, அறியாமே ஒம் மனசை நோவ அடிச்சிட்டேனப்பா. ஏதோ, வாய்க்கு வந்ததெல்லாம் சொல்லிடுறேன் - நான் ஒன்கிட்டே என்ன சொல்ல வந்தேனின்னா, ஒங்கப்பனைப்போல லெச்சத்துலே ஒரு ஆளைக் கண்டுபிடிக்க முடியாதுடா ராசா! தன் சங்கதியே மறந்திடுவான்; ஊரு எளவெல்லாம் இளுத்துப் போட்டுப்பான். அப்படிச் செஞ்சு செஞ்சுதான், அந்தக் கதிக்கு வந்தான். அவனுக்கு எதுவும் பெரிசில்லே; ஒண்ணையும் சட்டை செய்யமாட்டான். இப்போ நெனைச்சுக்கிட்டாக்கூடப் பகீல் இங்குதே! ஒரு கையெளுத்திலே முப்பது ஏக்கரா நஞ்சையை வித்து எறிஞ்சுட்டானே! அப்படிச் செய்ய என்னலே முடியாதப்பா! அவன் ஊரைவிட்டுப் போய் இருவது வருசமாச்சு. பாவி! செத்தானோ பொளச்சானோ ஆண்டவனுக்குத்தான் தெரியும்,” என்று வெங்கடாசலம் சொன்னான்.

     அவன் பேச்சைத் தடுக்க இஷ்டமில்லதவனாய் வேலன் மௌனமாய் உட்கார்ந்திருந்தான். யோசனையில் ஆழ்ந்தவண்ணமே, வெங்கடாசலம் மேலே சொல்லத் தொடங்கினான்: “அவனுக்கு அப்பாலே, எத்தினிபேர் போய்ப் பணம் சம்பாதிச் சுட்டு வரல்லே! ஆனா, அவன் கால் துட்டு மீத்திக்கமாட்டான். கங்காணிப் பொளப்பு அவனுக்கு ஒருநாளும் பிடிச்சிருக்காது; அது ஆளைக் கொன்னு திங்கிற வேலையில்லை? ஆனா, இது அக்குருமக்காரர்களுக்குத்தானே காலமாயிருக்குது? கொசப்பட்டி கங்காணியைப் பாரு. அவன் ஊரு ஊரா வளைச்சு வாங்கிக்கிட்டு இருக்கான். அப்பவும் அவன் பணத்துக்குக் கங்குகரையில்லே போலே இருக்குதே... வேலு! எனக்கு ஒரு யோசனை வருது. அவனை ஏன் கொஞ்சம் கடன் கேக்கக்கூடாது? தொளாயிரம் ரூவாய் அவனுக்கு எத்தோடு சேத்தி?” என்றான் வெங்கடாசலம். திடீரென்று நம்பிக்கை பிறந்ததும், அவன் முகத்தில் ஓர் உற்சாகம் தோன்றிற்று.

     “அவன்தான் அப்பவே மதுரை மாமன்கிட்டே சொல்லிட்டானாமே. வெலைக்கு வேணுமின்னா வாங்கிப்பாணாம்; கடன் கொடுக்கமாட்டானாம்..”

     “ஆமாம், மதுரை ரொம்பக் கண்டான்! நீ போயி காரியத்தை முடிச்சிக்கிட்டு வா. எல்லாம் நீ கேக்கற மாதிரியிலே இருக்குது. நம்ம சங்கதியெல்லாம் அவன் அறிவான். நம்ப மேலே அவனுக்கு மதிப்புக்கூட இருக்குது. எனக்கு என்னமோ அவன் ஒதவி பண்ணுவான்னு தோணுது. அப்பா! நான் ஒன்கூட வாரதுக்கில்லையே,” என்று வெங்கடாசலம், பரிதாபப்படும்படி சொன்னான்.

     வேலன், மறுநாள் பொழுது விடிந்ததும் இக்காரியத்தைச் செய்து முடிப்பதாகத் தன் ‘அப்பா’வுக்கு வாக்களித்தான்.

     வீரமங்கலத்திற்கும் குசப்பட்டிக்கும் ஆறுமைல் தூரம் இருக்கும். போய்த் திரும்புவதற்கும், அங்கே சற்றுத் தாமதித்துப் பேசு வதற்கும், ஐந்தாறுமணி நேரமாகுமாகையால், வேலன் அதிகாலையிலேயே பழையசோற்றைச் சாப்பிட்டுவிட்டு கிளம்பினான்.

     ஊர் எல்லையைத் தாண்டினதும், கிராமக் குயவனும் அவன் மனைவியும், பலவிதமான மட்பாண்டங்களைக் கூடைகளில் சுமந்துகொண்டு, எதிரே சிறிது தூரத்தில் வந்துகொண்டிருந்தார்கள். அவனைப் பார்த்ததும், அவர்கள் ஒருவருக்கொருவர் ரகசியம் பேசிக்கொள்வதுபோல வேலனுக்குத் தோன்றிற்று. அது வள்ளியின் கல்யாணத்தைப் பற்றித்தான் இருக்கவேண்டும். தன்மேல் அன்புள்ளவர்களாகையால் அனுதாபப்படுவார்களே யொழிய, அவதூறு சொல்லமாட்டார்களேன்பது அவனுக்கு நன்றாகத் தெரியும். ஆயினும் தன் மனதுக்கு யாதொரு கஷ்டமுமில்லை யென்று, அந்நல்லவர்களுக்கு எடுத்துரைக்க வெண்டுமென்று அவன் ஆசைப்பட்டான். ஆகையால், அவர்களைப் பார்த்துப் புன்னகையுடன், கண்களைச் சிமிட்டியபடியே, “மல்லன் கண்ணாலத்துக் காங்காட்டியும்?” என்றான்.

     “ஆமாம் அப்பா, நம்ம கண்ணாலமெல்லாம், நாம பொறக்க றப்பவே சாமி முடிச்சுப்போட்டுடுறாரு. அதுக்காவது நாம் கவலைப்படக்கூடாது,” என்று குயவன் ஆறுதலாகச் சொன்னான்.

     “அட பயித்திக்கார! நான் அளுதுகிட்டு இருக்காறாப்போலே அல்ல நீ சொல்றே? என்னைப் பாத்தா அப்படித் தோணுதா? எனக்கென்ன வந்திச்சு? கண்ணாலத்துக்குப் போவறதுக்கில்லை யேன்னிட்டு நான் வருத்தப்பட்டுக்கிட்டு இருக்கேன்; நீ என்னமோ பேசிறயே. அது சரி, பொண்ணும் மாப்பிள்ளையும் நல்லா அமஞ்சிருக்காங்க இல்லே?” என்று சொல்லி, அவன் பகபகவென்று சிரித்தான். “போனாப் போவுது. எப்போ தாலி கட்றது?” என்று அவன் மறுபடியும் கேட்டான்.

     “நாளைக் காலமே இருட்டோடே நாலு மணிக்கு யசமான்,” என்று குயவன், வேலனுடைய உள்ளக்குறிப்பை அறிய முடியாமல் சொன்னான்.

     “நல்லது, பொண்ணும் மாப்பிள்ளையும் சொகமா இருக்கட்டும். ஒங்களுக்கும் நல்ல சாப்பாடும் பலவாரமும் கெடைக்கட்டும்,” என்று சிரித்துக்கொண்டே சொல்லிவிட்டு, வேலன் குசப்பட்டிக்குச் சென்றான்.

     வழி முழுவதும், இன்னும் இருபத்திநான்கு மணிகளுக்குள் சம்பவிக்கப்போகும் விஷயங்களைப் பற்றியே அவன் யோசித்துக் கொண்டு போனான். வள்ளி பித்துப் பிடித்தவள்போல் இருக்கும் போதல்லவா சங்கதி தெரியப் போகிறது? அப்பொழுது ஊரெல் லாம் இதுதான் ஒரே பேச்சாயிருக்கும். கல்யாணக்கோலம் எவ்வாறு முடியுமோ! விருந்தாளிகளும் உறவின்முறையார்களும் என்ன நினைப்பார்களோ! - இவ்வாறு, திருப்பித் திருப்பி ஒரே விஷயத்தில் அவன் மனம் ஈடுபட்டிருந்ததால், அவன் குசப்பட்டிக்கு வந்ததும், இரண்டு மூன்று நிமிஷங்கள் வரையில், நாம் எதற்காக இவ்விடம் வந்தோம் என்பதைக்கூட மறந்து போய் விட்டான்.

     கங்காணி மிகவும் நல்லவனாகக் காணப்பட்டான். அவனிடம் ஆடம்பரமே இல்லை. அவனும் அவ்வளவு பணக்காரனாவென்று வேலனுக்குச் சந்தேகம் வந்தது. வேலன் சொன்னதையெல்லாம் வெகு பொறுமையுடன் அவன் கேட்டான். பிறகு, வேலனுக்கு மனம் நோவாதபடி, ஆனால் அழுத்தம் திருத்தமாக, அவன் சொல்லலானான்: “நான் நிலங்களின் மேல் கடன் கொடுப்பதேயில்லை. வேண்டுமானால் ஒரே மட்டாய் விலைக்கு வாங்குவேன். வேறு எவ்விதமான ஈட்டின் மேலும் நான் கடன் கொடுப்பதில்லை. கடன் என்கிற பேச்சே என்னிடம் கிடையாது. நான் வட்டி வியாபாரம் செய்யவில்லை. அதனாலே நீ வித்தியாசமாய் எண்ணிக்கொள்ளாதே, தம்பி. ஆனால், உனக்காக ஒரு காரியம் செய்கிறேன். எல்லாரும் உங்களுடைய நிலங்களைப்பற்றி மிகவும் சொல்லுகிறார்கள். அதற்காக, இன்னும் கொஞ்சம் விலை அதிகமாக வேணுமானாலும் நான் கொடுக்கிறேன். என்னால் அவ்வளவுதான் முடியும். அதுவும், ஒரு பெரிய குடும்பம் பாழாய் விட்டதே யென்றுதான். உங்களூர் ஆள் மதுரை, இதைப் பற்றி முன்னாலேயே என்னிடம் பேசியிருக்கிறான். அவன் சொன்னது இதுதான்: நான் உங்களுடைய கடனையெல்லாம் கட்டிவிட வேண்டும். அப்புறம், யாதொரு வில்லங்கமும் இல்லாமல் இரண்டாந்தரமான நஞ்சையிலே ஒரு காணியை உங்களுக்குக் கொடுத்துவிட வேண்டும். ஊருக்குக் கொஞ்சம் தொலைவிலே, அதுமாதிரி ஒரு நிலம் இருக்கிறதாமே - அதற்குக்கூட எதோ ஒரு பெயர் சொன்னானே...”

     “கொசவன் பட்டறையா?” என்றான் வேலன்.

     “ஆமாம், அதுதான் அதுதான். அது, ஐந்து காணியுள்ள ஒரே சதுரம். ஆனால், ஒரு போகந்தான் விளையுமென்று சொன்னான் - நிஜந்தானா?”

     “நெஜந்தான். ஆனால், மொதத்தரம் நஞ்சை போகத்துக்கு முப்பது கலங்கண்டா, அது நாப்பத்தஞ்சு காணுமே!” என்றான் வேலன்.

     “ஆனால், முதல்தரம் நஞ்சையிலே நீங்கள் மூன்று போகம் எடுக்கிறதில்லையா?” என்று கங்காணி கேட்டான்.

     “மெய்தான். ஆனால், அதுக்காவ இதுக்கு மூணுலே ஒரு பங்கு வெலை போடலாமா?” என்று வேலன் வாதித்தான்.

     “நீ பேசுகிறது என்னமோ என்பக்கந்தான்,” என்று கங்காணி நகைத்துக்கொண்டு சொன்னான்: “மதுரை, ‘கொசவன் பட் டறை’யிலே ஒரு காணிகொடுத்தால், உங்கள் சின்னக் குடும்பத் திற்குச் சாப்பாட்டுக் கஷ்டம் இருக்காதென்று சொன்னான். இப்போது, நான் அதை இரண்டு காணியாக்கி விடுகிறேன். இவ்வளவுதான் என்னால் முடியும். இதுக்குமேலே உங்களுக்கு யாரும் கொடுக்கமாட்டான்.”

     வேலனுக்குச் சந்தோஷம் ஒருபுறம், ஆச்சரியம் ஒருபுறம்.

     “இதைப்போல், யாரு சொல்லப்போறாங்க!” என்றான். இதற்கு மேல் அவனுக்குப் பேசத் தெரியவில்லை. ஆனால், அவனுடைய உண்மையான உணர்ச்சியைக் கங்காணி தெரிந்து கொண்டான்.

     “நான் இதை ஒரு வியாபாரமாக எண்ணவில்லை, தம்பி. உங்களுடைய குடும்ப சமாசாரமெல்லாம் எனக்கு நன்றாய்த் தெரியும். உங்கப்பாவுக்கு மனம் எவ்வளவு கஷ்டப்படுமென்பதும் எனக்குத் தெரியும். ஆகையினாலே, நான் மோசம் பண்ணிக் கட்டிக்கொண்டதாக, அவர் எப்பொழுதும் நினைக்கக்கூடாது. இதையெல்லாம் யோசித்துத்தான், நான் அந்தத் தீர்மானத்துக்கு வந்தேன். சரி, நான் அவசர வேலையாய் வெளியே போகவேணும். நீ நிதானமாய் யோசித்துக்கொண்டு மறுபடியும் வா. பொழுதாய்விட்டது; சாப்பிட்டுவிட்டு போ.”

     “அதுக்கென்னாங்க... ஆ... ஆ.. இன்னொரு பேச்சு, ஒங்ககிட்டே சொல்லணும்,” என்று வேலன் தயங்கினான்.

     “என்ன அது? சும்மா சொல்லு.”

     “நீங்க பண்ணர ஒவகாரத்தை நான் எப்பவும் மறக்கமாட் டேனுங்க. ஆனா, எங்கப்பாரு ஒரு பயித்தியமுங்க. ஒண்ணையும் விக்கக்கூடாது விக்கக்கூடாதுன்னூ அடிச்சுக்கிறாரு. அவரை வளிக்குக் கொண்டுவரத்துக்குக் கொஞ்ச நாளாவுங்க. அதுக்குள்ளே - எங்களுக்கு ரொம்பப் பணமொடையாய் இருக்குது. கொஞ்சம் கடன் குடுத்தீங்கன்னா...”

     “உங்கள் அப்பாவுக்கு விற்கிறது எப்படி இஷ்டமில்லையோ, அப்படியே கடன் கொடுக்கிறதற்கும் எனக்கும் கொஞ்சங்கூட இஷ்டமில்லை. ஆகையினாலே, கடன் பேச்சை மட்டும் எப்போதும் எடுக்காதே. உங்க அப்பாவுக்குச் சொல்லிப்பார். ஒரு தடவைக்குப் பத்துத் தடவையாய்ச் சொல்லிப் புத்தியைத் திருப்பு. சரி, எனக்கு அதிக நேரமாச்சு. நான் போகணும். இதோ, ரெங்கா, இந்த ஆளை அழைத்துக் கொண்டுபோய், தவசிப் பிள்ளையைச் சாப்பாடு போடச்சொல்லு,” என்று ஒரு வேலையாளிடம் சொல்லிவிட்டுக் கங்காணிச் சரேலென்று புறப்பட்டுவிட்டான்.

     வேலனுக்கு வேண்டாம் என்று சொல்லக்கூட அவகாசம் இல்லாமல் போய்விட்டது. அதுவும் தவிர, வேலனுக்குக் கங்காணி மேல் மிகவும் நல்ல அபிப்பிராயம் ஏற்பட்டுவிட்டபடியால், அவனுக்கு அவ்வீட்டையும் வீட்டிலுள்ளோர்களையும் பார்க்க வேண்டுமென்ற ஆசை உண்டாயிற்று. அதனால், அவன் வேலைக்காரனைப் பின்பற்றிச் சாப்பாட்டு அறைக்குச் சென்றான். அங்கே தவசிப்பிள்ளை, அவனுக்கு இனிய விருந்தளித்தான். அவ்விதமான சாப்பாட்டை வேலன் தன் ஜன்மத்தில் தின்றதும் இல்லை, கண்டதும் இல்லை. தன் தகப்பன், கங்காணித் தொழில் செய்கிறவர்கள் அனைவர் மீதும் கெட்ட அபிப்பிராயம் வைத்திருப்பது தப்பென்று அவனுக்குப்பட்டது. அவர்களுக்குச் சம்பவித்திருக்கும் கஷ்டத்தைத் தீர்த்து, மறுபடியும் அவர்களைத் தலை எடுக்கச் செய்ய உதவி செய்வோர், இக்கங்காணியைத் தவிர வேறு யாரும் இல்லையென்று அவன் நன்றாகத் தெரிந்துகொண்டான்.

     திரும்பி வரும்போது, வழியெல்லாம் தன் ‘அப்பா’வின் புத்தியை எவ்வாறு மாற்றுவதுதென்றே வேலன் யோசித்துக் கொண்டு வந்தான். ஊர் நெருங்க நெருங்க, மல்லனுடைய கல்யாணத்திற்கு மும்முரமாக நடக்கும் ஏற்பாடுகள் காணப்பட்டன. குடம் குடங்களாகப் பால், ‘பண்ணை’வீட்டுக்குப் போய்க்கொண்டிருந்தது. புஷ்பங்களும் குடலை குடலைகளாகச் சாய்ந்து கொண்டிருந்தன. சற்றுத் தூரத்திற்கப்பால், இரண்டு இரட்டை மாட்டு வண்டிகளில், கூடு இடிக்கத் தாரோடு வாழை மரங்கள் கொண்டு போகப்பட்டன. இவற்றையெல்லாம் பார்த்தால், கல்யாணம் வெகு விமரிசையாகவே நடக்கும்போலத் தோன்றிற்று. வள்ளி ஏற்பாடு செய்துகொண்டபடி நடப்பாளோவென்ற சந்தேகமும் உதித்தது. அவள் தவறிவிட்டால்? மேலே அவனுக்கு யோசனை ஓடவில்லை.

     நல்லகாலமாக, அவன் மனம் படும் கஷ்டத்திற்கு மாற்றாக, ஒரு சச்சரவு ஏற்பட்டது. சமீபத்தில் யாரோ உரக்கக் கைகொட்டிச் சிரித்து விளையாடும் சத்தம் கேட்டது. வேலன் அப்பக்கம் திரும்பிப் பார்த்தான். உடனே, அவன் அருகில் இருந்த வடிகாலைத் தாண்டி ஒரு வாழைத்தோட்டத்திற்குள் புகுந்து ஓடினான். சற்றுத் தூரம் போய்ப் பெருமூச்சு விட்டுக் கொண்டு திரும்பிப் பார்த்தான். அவனுக்கு யாரும் தென்படவில்லை. தானும் யாருக்கும் தென் படமாட்டானென்ற நிச்சயமும் ஏற்பட்டது. மல்லனும் அவன் சிநேகிதர்களும் அங்கே என்ன செய்துகொண்டிருந்தார்கள்? அதுவும் அந்நேரத்திலே! அவன் தன் வாழ்க்கைளில் எப்பொழுதும் இவ்வளவு கூச்சப்பட்டதில்லை. நல்ல காலம், அவர்கள் அவனைப் பார்க்கவில்லை. அதைப்பற்றிச் சந்தேகமேயில்லை. ஆனால், மறுபடியும் அவன் அப்படி எக்கச்சக்கமாக அகப்பட்டுக் கொள்ளக் கூடாது. ஆகையினாலே, வாய்க்கால் வயல்களைத் தாண்டி, ஊரையெல்லாம் சுற்றிக்கொண்டு அவன் வீடு வந்து சேர்ந்தான்.

     பிறகு சாவதானமாக, குசப்பட்டியில் நடந்த விருத்தாந்தங்களையெல்லாம் அவன் தன் ‘அப்பா’விடம் சொன்னான். ஆனால், கங்காணி மற்றொரு காணியையும் இனாமாகக் கொடுப்பதாகச் சொன்ன சங்கதியைமட்டும் நிறுத்திக்கொண்டான். இவ்விஷயத்தை ஆட்டக் கடைசியில் அடிப்பதற்கு ஒரு சீட்டுத் துருப்பைப்போல் அவன் வைத்திருந்தான்.

     “வேலு, இது ஒரு நாளுலே ஆவுற வேலை இல்லைப்பா, ஒரு தரத்துக்கு மூணு தரமாய்ப் பாக்கணும். அப்போதான் அவர் மனசு எளகும். நான் சாமிக்கி வேண்டிக் கிட்டதெல்லாம் வீணாய்ப் போவாது,” என்று வெங்கடாசம், வெகு நம்பிக்கையுடன் சொன்னான்.

     “அவருதான் கடன் குடுக்க முடியாதுன்னிட்டு கண்டிப்பாச் சொல்லிட்டாரே, அப்பா. வேணுமின்னா, வெலைக்கு வாங்கு வாராம். கடன் இங்கிற பேச்சே எடுக்கக்கூடாதாம். இதைத் திருப்பித் திருப்பி எத்தினிதரம் சொன்னாரு தெரியுமா? எனக்கே மனசு கஷ்டமாய் போச்சு, அப்பா”.

     “பொணம் தின்னிப் பயக! எல்லாரும் நம்ப சொத்தைக் கட்டிக்கப் பாக்கறாங்களே ஒளிய, நம்பளுக்கு ஒதவி செய்யறவன் எவனும் தெம்படமாட்டான்.”

     “ஆனா, அந்தக் கங்காணி அவ்வளவு கெட்டவன் இல்லை அப்பா. அவன் பேச்சிலிருந்து, நம்ப நன்மையைத் தேடறவன் தான்னு தெரியுது.”

     “அப்பா, வேலு! இந்தமாதிரி கூர்கெட்டவனாட்டம் பேசுறயே. அவன் நம்ப நெலங்களையெல்லாம் அடியோடு வாயிலே போட்டுக்கப் பாக்கறான் - அவன் நம்ப நன்மையைத் தேடுறானிங்கறயே; உன் புத்திக்குத்தான் என்ன சொல்லுவேன்!”

     “கொஞ்சம் பொறு, அப்பா. மீனாச்சியும் மாயாண்டியும் மட் டும் என்ன பண்ணறாங்க? நம்ப சொத்தை யெல்லாம் பிடுங்கிக் கிட்டு, நம்பனைத் தெருவுலே வெரட்டி அடிக்கப் பாக்கறாங்க. இன்னும் ஒரு மாசம் போனா, இந்த ஊடுகூட நமக்கு நிக்கிதோ இல்லையோ. அவங்களைக் காட்டிலும் கங்காணி எவ்வளவு நல்லவரு! நம்ப நெலங்களை யெல்லாம் எடுத்துக்க வேண்டியது; நம்ப கடனை யெல்லாம் கட்டிக்க வேண்டியது. அப்புறம் ஒரு வில்லங்கம்கூட இல்லாதே நமக்குக் ‘கொசவன் பட்டறை’யிலே ஒரு ஏகரா நஞ்சையைக் கொடுத்திடறதூன்னிட்டு, அவரு மதுரை மாமன்கிட்டே சொன்னாராம். இப்போ அவரு எங்கிட்டே சாடையாச் சொன்னது என்னாண்ணா, சாடை இன்னா, ஒடச்சே சொல்லிட்டாரு; நமக்காவ, ரெண்டு ஏக்கரா இனாமாகக் கொடுத்திடறாராம். அவரு அப்படிச் சொன்னது எனக்கு ரொம்ப ஸந்தோசமாப் போச்சு. இப்படி யாரு செய்யப் போறாங்க? அவரு பேச்சைக் கேட்டா, நமக்குச் சாப்பாட்டுக்கு ஒரு திண்டாட்டமும் இருக்காது. ஒரு பயலுக்கும் தலையைக் குனியவேண்டியதில்லை. இல்லாட்டி என்ன என்ன நடக்கப் போவுதோ, கடவுளுக்குத்தான் தெரியும்.”

     திடீரென்று வெங்கடாசலத்தின் தோற்றத்தில், கோரமான குறிகள் ஏற்பட்டன. பிறகு, “அதுக்காவ?” என்று அவன் வினவினான். வேலன் வெகு பயபக்தியுடன், வெங்கடாசலத்தின் இரு கைகளையும் பிடித்துக்கொண்டு கெஞ்சுவதுபோல், “கஷ்டம் வந்தபோது நாம் பொறுத்துக்கத்தானே வேணும்? மானத்தையும் எளந்து சாப்பாட்டுக்கும் தவிக்கிறதைக் காட்டிலும், ஒருவாக்குலே நெலங்களை வித்திட்டு, மிஞ்சினதை வச்சிக்கிட்டுக் காலத்தைத் தள்ளலாம். அப்பா,” என்றான்.

     வெங்கடாசலம் அளவிலா வெறுப்புடன் வேலனைத் தள்ளி, தன் கைகளை விடுவித்துக் கொண்டான். “அட துரோகக்காரப் பயலே! நீயும் வீரப்பனோடேயும் மதுரையோடேயும் சேந்துக் கிட்டாயா? என்ன துணிவுடா உனக்கு! என் நெலத்தையா விக்கச் சொல்றே? நீ யார்ராவன்? அந்தப் பேச்சை யெடுக்க ஒனக்கென்ன அதிகாரமடா? ஹ! ஹ! என் புத்தியை செருப்பாலே அடிக்கணும். ஆயிரம் செஞ்சாலும் நீ வேத்தி மனிசன்தானே! என் வவுத்துலே பொறந்தவனா? நான் எங்க நெலத்து மேலே எவ்வளவு உயிரு வச்சிருக்கேன்; நீ என்னத்தைக் கண்டே? சாப்பாட்டுக்கா ஏற்பாடு செஞ்சிட்டு வந்தே? அடே, நாய்கூட வவுரு பொளைக்குதுடா! இதோ பாரு, எங்களுக்கு எங்க நெலங்க எங்க உயிருக்கு மேலே, உ... ஊம், அறிஞ்சுக்கோ. உன்னைச் சொல்லி என்ன லாபம்! உன்னைப்போல ஒரு மூணாம் மனிசன் கிட்டே இந்த வேலையைக் குடுத்தேனே, என் புத்தியைச் சொல்லு.”

     “அப்பா! அப்பா! அறியாதே சொல்லிட்டேனப்பா!” என்று வேலன் நடுங்கிக் கதறினான்: “நீங்க சொகமாக இருக்கணுமின்னு தானப்பா, அப்படிச் சொன்னேன். எனக்காகவா? இல்லைப்பா, மெய்யாலும் அப்பா, மெய்யாலும்.”

     “போதும், போதும். நீ எனக்காகக் கவலைப்படத் தேவையில்லை - ஏன்? உன்னை வளத்தேனிட்டா? என்னைப்போல மடையன் எங்கேநாச்சும் இருப்பானா? நீ எங்களவன் ஆயிடுவே இன்னிட்டு நெனச்சேனே! வெதையொண்ணு போட்டா, சொரை யொண்ணு முளைக்குமா? ஆனால், உலகத்துலே நன்னியின்னு ஒண்ணு இருக்குதே. அதுநாச்சும் இருக்காதா....”

     “அப்பா, வாணாம்! நான் அவ்வளவு பாவியா! இனிமேலே என்னாலே பேச்சுப் பொறுக்க முடியாது. இதோ, இந்த அருவாளாலே என் களுத்தை வெட்டிடு; அப்பாலே உன் மனம் போல பேசிக்கோ,” என்று அரிவாளை வெங்கடாசலத்தின் கையில் வைத்துவிட்டு, “ஐயோ கடவுளே! நானா நன்னி கெட் டவன்! நானா, நானா?” என்று அவன் தேகம் துடிக்க, தாரை தாரையாகக் கண்ணீர்விட்டு அழுதான். வெங்கடாசலம் திக்குத் திசையற்றவன்போல் விழித்தான். இரண்டொரு நிமிஷங்களுக்கு அவனுக்குப் புத்திஸ்வாதீனம் அற்றுப் போய்விட்டது. பிறகு, “என்ன சொல்றே? என்னடா சொல்றே? போதுமடா உன் பேச்சு. போ அப்பாலே; நிக்காதே இங்கே,” என்று அவன் இரைந்தான்.

     வேலன் அரிவாளை எடுத்துக்கொண்டு, தட்டுத் தடுமாறியபடி வெளியே சென்றான். அவன் தேகமும் மனமும் பட்ட கஷ்டம், இவ்வளவென்று சொல்லிமுடியாது. மெதுவாக நகர்ந்து, பாழடைந்த கிடந்த தானிய அறைக்குள் அவன் புகுந்தான். பிறகு, வெட்டப்பட்ட மரம்போல் அவன் சாய்ந்தான்.


மண்ணாசை : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22



புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100

புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
151
152
153
154
155
156
157
158
159
160
161
162
163
164
165
166
167
168
169
170
171
172
173
174
175
176
177
178
179
180
181
182
183
184
185
186
187
188
189
190
191
192
193
194
195
196
197
198
199
200

புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
201
202
203
204
205
206
207
208
209
210
211
212
213
214
215
216
217
218
219
220
221
222
223
224
225
226
227
228
229
230
231
232
233
234
235
236
237
238
239
240
240
241
242
243
244
245
246
247

நூல்
விலை
தள்ளுபடி
விலை
அஞ்சல்
ரூ. 211.00
ரூ.200.00
இலவசம்
ரூ. 244.00
ரூ.230.00
இலவசம்
ரூ. 650.00
ரூ.600.00
இலவசம்
ரூ. 270.00
ரூ.255.00
இலவசம்
ரூ. 500.00
ரூ.480.00
இலவசம்
ரூ. 300.00
ரூ. 285.00
இலவசம்
ரூ. 199.00
ரூ. 185.00
இலவசம்
ரூ. 300.00
ரூ. 285.00
இலவசம்
ரூ. 375.00
ரூ. 355.00
இலவசம்
ரூ. 244.00
ரூ. 230.00
இலவசம்
ரூ. 200.00
ரூ. 190.00
இலவசம்
ரூ. 433.00
ரூ. 400.00
இலவசம்
ரூ. 411.00
ரூ. 390.00
இலவசம்
ரூ. 399.00
ரூ. 375.00
இலவசம்
ரூ. 275.00
ரூ. 260.00
இலவசம்
ரூ. 375.00
ரூ. 355.00
இலவசம்
ரூ. 244.00
ரூ. 230.00
இலவசம்
ரூ. 300.00
ரூ. 280.00
இலவசம்
ரூ. 250.00
ரூ. 240.00
இலவசம்
ரூ. 375.00
ரூ. 355.00
இலவசம்
ரூ. 350.00
ரூ. 330.00
இலவசம்
ரூ. 350.00
ரூ. 330.00
இலவசம்
ரூ. 650.00
ரூ. 580.00
இலவசம்
ரூ. 175.00
ரூ. 160.00
இலவசம்
ரூ. 380.00
ரூ. 360.00
இலவசம்
ரூ. 165.00
ரூ. 150.00
இலவசம்
ரூ. 350.00
ரூ. 330.00
இலவசம்
ரூ. 220.00
ரூ. 205.00
இலவசம்
ரூ. 175.00
ரூ. 165.00
இலவசம்
ரூ. 650.00
ரூ. 610.00
இலவசம்
ரூ. 288.00
ரூ. 270.00
இலவசம்
ரூ. 400.00
ரூ. 380.00
இலவசம்
ரூ. 225.00
ரூ. 210.00
இலவசம்
ரூ. 325.00
ரூ. 310.00
இலவசம்
ரூ. 333.00
ரூ. 300.00
இலவசம்
ரூ. 450.00
ரூ. 425.00
இலவசம்
ரூ. 350.00
ரூ. 330.00
இலவசம்
ரூ. 250.00
ரூ. 235.00
இலவசம்
ரூ. 360.00
ரூ. 340.00
இலவசம்
ரூ. 190.00
ரூ. 180.00
இலவசம்
ரூ. 200.00
ரூ. 190.00
இலவசம்
ரூ. 300.00
ரூ. 275.00
இலவசம்
ரூ. 425.00
ரூ. 400.00
இலவசம்
ரூ. 600.00
ரூ. 500.00
இலவசம்
ரூ. 195.00
ரூ. 185.00
இலவசம்
ரூ. 399.00
ரூ. 375.00
இலவசம்
ரூ. 399.00
ரூ. 375.00
இலவசம்
ரூ. 450.00
ரூ. 430.00
இலவசம்
ரூ. 500.00
ரூ. 470.00
இலவசம்
ரூ. 200.00
ரூ. 190.00
இலவசம்
ரூ. 350.00
ரூ. 330.00
இலவசம்
ரூ. 350.00
ரூ. 330.00
இலவசம்
ரூ. 200.00
ரூ. 190.00
இலவசம்
ரூ. 350.00
ரூ. 330.00
இலவசம்
ரூ. 525.00
ரூ. 490.00
இலவசம்
ரூ. 275.00
ரூ. 260.00
இலவசம்
ரூ. 299.00
ரூ. 280.00
இலவசம்
ரூ. 195.00
ரூ. 185.00
இலவசம்
ரூ. 250.00
ரூ. 240.00
இலவசம்
ரூ. 220.00
ரூ. 210.00
இலவசம்
ரூ. 500.00
ரூ. 490.00
இலவசம்
ரூ. 399.00
ரூ. 375.00
இலவசம்
ரூ. 320.00
ரூ. 300.00
இலவசம்
ரூ. 588.00
ரூ. 540.00
இலவசம்
ரூ. 250.00
ரூ. 240.00
இலவசம்
ரூ. 200.00
ரூ. 190.00
இலவசம்
ரூ. 275.00
ரூ. 250.00
இலவசம்
ரூ. 300.00
ரூ. 285.00
இலவசம்
ரூ. 375.00
ரூ. 350.00
இலவசம்
ரூ. 230.00
ரூ. 220.00
இலவசம்
ரூ. 790.00
ரூ. 740.00
இலவசம்
ரூ. 400.00
ரூ. 380.00
இலவசம்
ரூ. 399.00
ரூ. 375.00
இலவசம்
ரூ. 250.00
ரூ. 235.00
இலவசம்
ரூ. 225.00
ரூ. 210.00
இலவசம்
ரூ. 225.00
ரூ. 215.00
இலவசம்
ரூ. 250.00
ரூ. 235.00
இலவசம்
ரூ. 180.00
ரூ. 170.00
இலவசம்
ரூ. 1800.00
ரூ. 1600.00
இலவசம்
ரூ. 320.00
ரூ. 300.00
இலவசம்
ரூ. 300.00
ரூ. 280.00
இலவசம்
ரூ. 250.00
ரூ. 235.00
இலவசம்
ரூ. 90.00
ரூ. 85.00
ரூ. 30.00
ரூ. 120.00
ரூ. 110.00
ரூ. 30.00
ரூ. 175.00
ரூ. 165.00
ரூ. 30.00
ரூ. 175.00
ரூ. 165.00
ரூ. 30.00
ரூ. 90.00
ரூ. 85.00
ரூ. 30.00
ரூ. 150.00
ரூ. 140.00
ரூ. 30.00
ரூ. 100.00
ரூ. 95.00
ரூ. 30.00
ரூ. 177.00
ரூ. 155.00
ரூ. 30.00
ரூ. 100.00
ரூ. 95.00
ரூ. 30.00
ரூ. 80.00
ரூ. 75.00
ரூ. 30.00
ரூ. 144.00
ரூ. 135.00
ரூ. 30.00
ரூ. 111.00
ரூ. 100.00
ரூ. 30.00
ரூ. 150.00
ரூ. 140.00
ரூ. 30.00
ரூ. 125.00
ரூ. 115.00
ரூ. 30.00
ரூ. 100.00
ரூ. 90.00
ரூ. 30.00