உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
15 காளியம்மாள் வந்து இரண்டு வாரமாயிற்று. அவள் இங்கு இன்னும் எத்தனை நாளைக்கு இருப்பாள்? எதற்காக வந்திருக்கிறாள்? என்ன பேச்சுவார்த்தைகள் நடக்கிறதென்ற விவரமெல்லாம் மர்மமாகவே இருந்தது. குடும்பத்தில் எவ்வித அதிர்ச்சியுமில்லை. குமுறல் கொந்தளிப்பின்றி அமைதியாகவே சென்று கொண்டிருந்தது. இந்த சமயத்தில் அடைமழைக் காலமும் வந்து சேர்ந்தது. புரட்டாசி கழிந்து ஐப்பசி ஆரம்பம். வானவீதியில் எந்நேரமும் சாயை படிந்து கருமுகில்கள் கவிழ்ந்த வண்ணமிருந்தன. திடீரென்று மழை கொட்டும். அடுத்த கணமே ‘கம்மென’ நின்று விடும். எதையோ நினைத்துக் கொண்டதைப் போல மறுபடியும் ‘சோ, சோ’வெனத் துளிக்கும். இப்படிப் பெய்யும் மழையை கவனிக்கையில் யாரோ ஒரு தாய் தன் வாலிப மகனைப் பறிகொடுத்ததை எண்ணி ஏக்கத்தில் ‘பலபல’வென்று, நின்று நின்று கண்ணீர் விடுவதைப் போலிருந்தது. இங்ஙனம் அடைமழை ‘சொல்லாமல் கொள்ளாமல்’ வந்தாலும் பட்டி தொட்டிக்குப் போகிறவர்கள் நிற்கவேயில்லை. ஓலைக் குடைகளையோ, பனந்தடுக்குகளையோ அல்லது கோணிப் பைகளையோ போட்டுக் கொண்டு தங்கு தடையின்றி அவரவர் வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்தனர். வயது வந்த கிராமச் சிறுமிகள் ஆடைகளைச் சரியாகக் கூட மார்பில் போடாமல் ஜில்லிட்ட சாரலில் இட்டேறித் தடத்தில் செல்லும் காட்சியே காட்சி! ஆட்டு மந்தைகளின் பின்னாலோ வேலியோரங்களிலோ, காட்டின் நடுவிலோ, வாரி வழிகளிலோ அவர்கள் செல்வதைப் பார்த்தால், எங்கோ மாய உலகத்திலிருந்து வந்த மதன் மோஹினிகள் திரிந்து கொண்டிருப்பதைப் போலிருக்கும். இக்கூட்டங்களுக்கு மத்தியில் சின்னப்பனும் கலந்திருந்தான். அரை நாழிகை வீட்டில் சாய்ந்து உட்கார்ந்திருக்க மாட்டான். ஒரு நாள் ராத்திரி சின்னப்பன் சாப்பிடும் போது காளியம்மாள் என்னவோ ‘குசு குசு’ வென்று சொல்லிக் கொண்டிருந்தாள். ராமாயி கிட்டத்தில் தான் நின்று கொண்டிருந்தாள். “எஞ் சொந்தப் புள்ளையோட சொல்றாப்பலெ சொல்றேன். இன்னும் கொஞ்ச நாளில் பாருங்க, நாகம்மா என்ன கூத்து விடப் போறாள்னு.” சின்னப்பன் சாதத்தைப் பிசைந்து கொண்டே என்னவோ யோசனையிலிருந்தான். “எங்கிட்டே நடந்துகிறதிலிருந்தே தெரிகிறதே. எல்லாங்கூடி எப்படியோ சதி பண்ணிப் போடுவாங்க. வேணுமானா நிசம், பொய்யல்ல பின்னால் பாருங்க” என்று காளியம்மாள் மிகவும் தணிந்த குரலில் சொன்னாள். ராமாயி அதையெல்லாம் வேடிக்கை பார்ப்பதைப் போல் பார்த்துக் கொண்டிருந்தாள். “அதற்கு என்ன பண்ணுறது?” என்றான் அவன். “அதுக்குத்தான் போய் விடலாமிங்கிறேன். போவத்தான் வேண்டுமெங்கிறேன்” என்றாள் சற்று பலமாகவே. இந்தச் சமயத்தில் நாகம்மாள் உள்ளே நுழையவே பேச்சு வேறு வழியில் திரும்பியது. “போவத்தான் வேணுமெங்கிறேன். இதுக்காகப் பட்டரைக்குப் போகாமல் போனால் ஆசாரி உருளை செய்தாற் போலத்தான். நாளைக்கு எப்படி ஏத்துப் பூட்டுறது?” என்று அந்த வாக்கில் பேச்சுச் சென்றது. ஆனால் நாகம்மாளுக்கு இந்தத் தில்லுமுல்லு எல்லாம் தெரியாதா? வார்த்தை துளிக்கூடக் கேட்காது போனாலே ஊகித்து விடக் கூடியவ. அரையும் குறையுமாகக் கேட்டுக் கொண்ட பிறகு எப்படி மாற்றினால் தான் வேறு ஏதோவென்றென நினைக்கவா போகிறாள். ஒன்றும் தெரியாதவள் மாதிரி, “அதுக்குப் போகாது போனா என்ன? அப்புறமாச் சொல்லி விடுகிறேன்” என்றாள் நாகம்மாள். ஆனால் ஆசாரி உருளை செய்து இரண்டு நாள் ஆயிற்றென்றும் இன்று காலையில் சின்னப்பன் அந்த உருளையில் தான் ஏற்று இறைத்து வந்திருக்கிறான் என்பதும் இவர்கள் இருவருக்கும் தெரியாது! நாலு நாளைக்கு முன் கேட்ட விஷயத்திலிருந்தே இவ்வளவு பேச்சும் நடக்கலாயிற்று. சின்னப்பன் சிரித்துக் கொண்டே “நமக்கெல்லாம் குளிர் என்றாலே நடுக்கமெடுக்கிறதே! நம் முத்துக்கு ஒண்ணும் செய்றதில்லையே!” என்றான். உடனே நாகம்மாள், “முத்து, முத்து!” என்று தெருவுக்கு வந்தாள்! இந்த வேடிக்கையை நினைக்கச் சின்னப்பனுக்கு அடக்க முடியாத சிரிப்பு வந்தது. அதே சமயம் மற்ற இருவரும் சிரித்தனர். இச்சிரிப்புச் சத்தத்தைக் கேட்ட நாகம்மாள் தன்னைப் பற்றித்தான் பேசிச் சிரிக்கிறார்கள் என்று எண்ணினாள். அன்று இரவு படுக்கையில் படுத்துங்கூட நெடுநேரம் இதைப் பற்றியே யோசித்தாள். ‘என்ன பேசியிருப்பார்கள்? அவள் எப்படித் தந்திரமாகப் பேச்சை மாற்றுகிறாள். பார், ஜாலக்காரி! போவத்தான் வேண்டுமாம். போடுகிறாளே சொக்குப்பொடியை! போகத்தான் போகிறாளா எல்லாம் வித்துக்கிட்டா? ஐயையோ அப்புறம் என் கதி? சே, சே, அப்படி ஒன்றும் என்னைத் தெருவில் விடமாட்டார்கள். ஆனாலும் இந்தப் பொல்லாத கிழவி இருக்கிறாளே! என்ன பேசியிருப்பார்கள். நான் இந்த ஒரு வாரமா எப்படியெல்லாம் மனதிலுள்ளதை ஒழிச்சு நடந்து வாரேன். அவளிடம் வெகு வெகு விசுவாசமாயிருந்தேனே. என்னையா இப்படித் தூற்றுவாள்? உம்... யார் கண்டது.’ இந்த இருபது நாளாகக் கெட்டியப்பனைப் பற்றியும் ஒரு சங்கதியும் தெரியவில்லை. இதையெல்லாம் அவனிடம் தெரிவிக்க வேண்டுமென்கிற ஆசை. ஆனால் ஆசாமி ஊரில் இருக்கிறது, இல்லாத சங்கதியே தெரியவில்லையே! யாரையாவது கேட்கலாமென்றால் தோதாக எந்த நபரும் காணவில்லை. யாரோ பேசிக் கொண்டார்கள் யாரோடு சண்டைக்குப் போய் அடித்துவிட்டானாம். அந்தக் கலவரத்தில் கால் வழுக்கி விழுந்து கை முறிந்து விட்டதாம். நாகம்மாள் மனத்திற்குள்ளாகவே வேதனையிலாழ்ந்தாள். ‘கெட்டியப்பனுக்கு கையும் முறியாது, காலும் முறியாது. நிசமா அவன் திடமாகத் தானிருப்பான். அவனுடைய விரோதக்காரர்களின் விருப்பமாக்கும் இவையெல்லாம்! எதுக்கும் சங்கதி தெரிஞ்சுடுது. இது தான் நல்லது’ என்று நாகம்மாள் முடிவு கட்டினாள். காலையில் எதிர்பாராத ஒரு சம்பவம் நிகழ்ந்தது. விடிந்ததும் விடியாததுமாய் நாகம்மாள் வெளியே போகும் போது ஒரு சக்கிலி எதிரில் வந்தான். நாகம்மாளைக் கண்டதும் கையைச் சொரிந்து கொண்டே, “ரொம்பச் சங்கட்டமாய் இருக்குதுங்க” என்றான். நாகம்மாளுக்கு ஒன்றும் புரியவில்லை. “யாருக்கடா சங்கட்டம்?” என்றாள். “வலசிலிருந்து வாரானுங்க. நம்ம - உம் - சின்னக் கவுண்டருக்குத்தானுங்க” என்றான். அப்போது தான் நாகம்மாளுக்குச் சங்கதி தெரிந்தது. காளியம்மாளின் மகனுக்கு எப்போதும் நெஞ்சுவலி உண்டு. ஒரு தடவை தூக்க முடியாத பாரத்தைத் தூக்கிய போது உள்ளுக்குள்ளே சுளுக்கி நரம்பு புரண்டு விட்டது. அப்புறம் அதற்கு என்ன செய்தும் பூரண குணமாகவில்லை. இந்தச் சேதி வீட்டில் தெரிந்தவுடன் காளியம்மாள் உடனே புறப்பட ஆயத்தமானாள். அங்குமிங்கும் ஆவி பறந்து திரிவதிலிருந்து எவ்விதம் வருத்தப்படுகிறாள் என்பது தெரியும். இருப்பதோ ஒரே ஒரு மகன்; அவனுக்கும் இப்படி வந்துவிட்டதென்றால் யாருக்குத்தான் துக்கமிராது? சிறிது நேரத்தில் பயணமாகி விட்டாள். பத்துப் பதினைந்து மைல் தூரம் ஒருத்தியையும் அனுப்புவதெப்படி என்று சின்னப்பனும் கூடப் புறப்பட்டான். போகும் போது நாகம்மாளிடம் “நேரத்துக்கு நேரம் மாட்டுக்குத் தண்ணி வைக்க மறந்துடாதீங்க. அந்தக் கெரகத்துக்கு என்ன தெரியும். பத்திரமாக எல்லாத்தையும் பாத்துக்குங்க. ஊரில் விட்டதும் மாப்பிள்ளையைப் பாத்திட்டு வந்திடறேன்” என்று கூறினான். நாகம்மாளும் இது மெப்புக்கோ, ஒப்புக்கோ என்று மனதில் எண்ணிக் கொண்டு, “அப்படியே ஆவட்டும். தம்பிக்கு நல்லானால் அதுவே போதும்” என்று மரியாதையாக வழியனுப்பினாள். |