17

     திடும்பிரவேசமாக தங்கள் பேச்சுக்கிடையில் ஒருவர் பிரவேசிக்கவே, இருவரும் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தனர். மணியக்காரர் முதலிலேயே பார்த்துக் கொண்டதால் ஆச்சரியப் படவில்லை. ஆனால் தானுண்டு கட்டிலுண்டு என்று படுத்திருப்பவர் ஏன் எழுந்து வந்தார் என்பதைப் பற்றியே அவர் ஆச்சரியப்பட்டார். அப்பெரியவர் மணியக்காரரின் பெரியப்பா. தன் காலத்தில் அமர்க்களமான ஆட்டபாட்டத்துடன் வாழ்ந்தவர் தான். இன்று எல்லாம் அடங்கி, ஒடுங்கி உட்கார்ந்து விட்டார். வேளா வேளைக்கு வீட்டிலுள்ள யாரோ ஒருவர் கிண்ணத்தில் சாதத்தைப் போட்டு வைத்து விடுவார்கள். அவர் உட்கார்ந்த இடத்திலே அதை வாயில் போட்டுக் கொண்டு அப்படியே படுத்துக் கொள்வார். கயிறுகள் அறுந்து தொங்கும் கட்டிலும், இரண்டு தலையணையும், ஒரு கிழிந்த துப்பட்டுமே அவருடைய சொத்து. எதிர்பாராத விதமாக அவர் வந்து சேரவும், “ஏது உங்களுக்கும் பேச்சில் ருசி உழுந்துட்டது போலிருக்குது. பக்கத்தில் வந்து இப்படி பாயில் உக்காருங்கள்” என்று நாராயணசாமி சொன்னான்.

     “இல்லையப்பா இப்படியே இருக்கட்டும். எங்கிருந்தாலென்ன? எல்லாம் ஒண்ணுதானே! என்னவோ கெட்டியப்பன் சொன்னானே?” என்றார் கிழவர்.

     “ஏனுங்க மாமா, நீங்க சொல்றதாக வந்தீங்களே அப்புறம் எங்களைக் கேக்கறீங்களே” என்றான் கெட்டியப்பன்.

     “ஆமாம், நான் தான் சொல்ல வந்தேன். என் வார்த்தையைக் கேட்டா கேளுங்க. கேக்காட்டி போங்க. ஆனா, பாக்குக் கடிக்கிற நாழி உக்காந்தா அதுவே போதும்” என்றார்.

     “கெட்டியப்பா, பூனையாட்டம் படுத்திருந்தாலும் என்னென்ன நடக்குதுங்கறது தெரியாமே போகலெ. நாங் கேட்டுக்கிட்டுத்தான் வர்றேன். உங்க பேச்சு அப்படியே காத்திலே கசம்பிலே விழாமப் போகலெ. ஆனா இந்தக் கொட்டு முழக்கெல்லாம் என்ன ஆகுமின்னு யோசித்துப் பாருங்கடா! கெட்டியப்பா, இப்படி முன்னுக்கு வந்து உட்காரு. எனக்குக் கிட்டத்தில் வா. இன்னும் பக்கத்தில் வந்து உட்காரு. சும்மா சிரிக்காதே. பேசாமல் வா இப்படி!”

     மணியக்காரருக்கு இது வேடிக்கையாக இருந்தது. மாமனுக்கு என்னவோ பல்லுப் பரபரப்பு, பேச வந்துட்டார் என்று கெட்டியப்பன் நினைத்துக் கொண்டான். நாராயணசாமிக்கு இவருடைய பூர்வாசிரம வாழ்க்கையெல்லாம் தெரியும். இப்போது வேதாந்தம் பேச வந்துட்டார்! எல்லாம் தொலைக்கிறதுக்கு முன் இந்த ஞானோதயம் உண்டாக வில்லையாக்கும் என எண்ணி, குறும்பாகச் சிரித்துக் கொண்டு, “சொன்னாக் கேளுங்க, பெரியவர்கள் சொல்லைத் தட்டலாமா? முன்னுக்குப் போங்கள்” என்று கெட்டியப்பனுக்கு ஒதுங்கி வழி விட்டான்.

     பெரியவரும் புன்னகையுடன், “அடே கெட்டியப்பா உன் மண்டையிலே என்னடா இருக்குது? நீ மாம, மச்சானாயிருந்தாலும், என் புள்ளை மாதிரி. அடே புடே என்றால் கோவிச்சுக்குவாயா, என்னப்பா?” என்று மென்று விழுங்கினார்.

     “இல்லீங்க மாமா, இல்லீங்க மாமா, நீங்க சொல்லுங்க” என்று கெட்டியப்பன் நகர்ந்து உட்கார்ந்தான்.

     பெரியவருக்கு சற்று உற்சாகம் அதிகரித்தது. ஒரு தரம் கனைத்துக் கொண்டு, “கேளடா ராஜா! மலைபோல் மண்டிக் கிடந்த சுள்ளிகளெல்லாம் மாயமாய் மறஞ்சது பாத்தாயா? நாம் எத்தனை நாள் கத்தியிலும், அரிவாளிலும் வெட்டித் தள்ளியும், வெட்ட வெட்டக் கொழுத்தது எப்படி பூண்டற்றுப் போச்சுது பாத்தாயா? கள்ளியை நாசம் பண்ணின வெள்ளைப் பூச்சியையும் பாத்திருப்ப. அது கடுகிலும் சின்னஞ்சிறுசாத்தானே இருந்தது. நம்முடைய கத்தியும், கவையும் முடிக்க முடியாத வேலையை வெகு சுளுவில் அப்பூச்சி முடித்து விட்டது. என்ன கெட்டியப்பா, இன்னைக்கு ஒரு ஆனையைக் கூட தூக்கியடிக்கலாமென்று உனக்குத் தோணுது. மீசையை முறுக்கி விடறாய்; கையைக் காலைத் தட்டறாய்; வாய்ப் பேச்சு வாயிலிருக்க கைவைக்க ஆரம்பிக்கிறாய். ஆனா இந்த நல்ல ரத்தம் நொடியிலே மறைஞ்சுடுமப்பா. ஒரு பூச்சி வேண்டாம், புழு வேண்டாம், சும்மா இருக்க மாயமாய் போய்விடும்.” வயோதிகர் சற்றுப் பேச்சை நிறுத்தினார். அவருடைய உணர்ச்சிகள் மேலுக்கு மேல் பொங்கி வருவது தேகத்து நரம்புகள் புடைப்பதிலிருந்தே நன்றாகத் தெரிந்தது. அருகிலிருப்பவர்கள் வாய் திறக்கவில்லை. கிழவனார் தொடர்ந்து பேசினார்.

     “கெட்டியப்ப, உனக்கு மாத்திரம் இல்லை. எல்லோருக்கும் தான் சொல்றேன் - ஏண்டா, கெட்டுப் போகிறோம். உண்டு, உடுத்தியா கெடறோம்? சீர் சிறப்பிலா நாசம் செய்யறோம்? இன்னொருத்தனுக்கு உபகாரம் செய்தா கெட்டுப் போறோம்? இதையெல்லாம் கொஞ்சம் யோசிச்சுப் பாரு.”

     “அடே அப்பா, ஊருக்கு மேக்காலே இட்டேறி எப்படி அசிங்கமா ஆபாசமா இருக்குது பாத்தாயா? அதுவும் இந்த மழைக்காலத்தில் எல்லாம் ஒரு துர்நாத்தம். மூக்கை பிச்சிக்கிட்டு போற மாதிரி வீசலே! அதைச் சுத்தம் பண்ண ஒரு பிள்ளை பிறக்கலயே! இன்னம் கேளு. ஊர்ச்சாவடி கட்டிடம் கல்லுகள் பெயர்ந்து ஆட்டம் கொடுத்துட்டதே! அதை எடுத்துக் கட்ட எவனாவது முன்னுக்கு வர்றானா? இல்லவே இல்லை. பின்னே என்ன? எல்லாம் ஒரே கோள், குண்டுணி, கட்சி இவைகள் தான்! இந்த கட்சியிலே தாண்டா நம்மவர்கள் அழிந்து போனது. கச்சேரிக்கும் ஊட்டுக்கும், ஊட்டுக்கும் கச்சேரிக்கும் நடந்தபடியிருந்தா காட்டுச் சங்கதி என்ன ஆகுமென்று பாருங்கடா! இதிலே ‘ஓட்டல்’ சோத்துக்காகப் பொய்சாட்சி சொல்லப் போறவங்க எத்தனை பேர்! நானும் எத்தனையோ பட்டு மாஞ்சிருக்கேன். அடடா என்ன பாவம்! ஓட்டல் சாப்பாட்டை எண்ணி நிசக்கலப்பற்ற பொய்யைக் கூறுவதா? அட உங்களுக்கு ஏழேழு சென்மங்களுக்குத் தான் சொர்க்கம் கிடைக்குமா?”

     அவர் மகா வருத்தத்துடனும், ஆத்திரத்துடனும் பேச்சை நிறுத்தினார். “என்னுங்க மாமா இனியொண்ணும் பாக்கியில்லீங்களா?” என்றான் கெட்டியப்பன். மற்றிருவரும் தாங்காது சிரித்து விட்டனர்.

     பெரியவர் முன்னிலும் சாந்தமாகவே உட்கார்ந்திருந்தார். வந்த ஆத்திரம் கூட ஏனோ அடங்கிவிட்டது. அவர் என்னவோ சொல்ல வாயெடுத்தார். அதற்குள் கெட்டியப்பன், “ஏனுங்க மாமா, இத்தனை விசயத்தை வெச்சுக்கிட்டா இவ்வளவு நாளும் பேசாதிருந்தீங்க” என்றான்.

     “அதுதானுங்க உங்களுக்கு நல்லது” என்றான் நாராயணசாமி. உம், முதலியாரு, லேசுப்பட்டவனா! எந்த முண்டச்சியோ, தண்டுவனோடு கெட்டுப் போறதுக்கு, பெரிய குடும்பத்தை தெருப் பண்ணறதுக்கு யோசனை சொல்லுப்பா, சொல்லு. அட போடா பதரே. செவிடங்காதிலே சங்கூதின மாதிரி, உங்கிட்டே நீதி ஓதி என்ன புண்ணியம்? சும்மா படுத்திருந்தாலும் களப்பு காணாது” என்று பெரியவர் முடிக்கு முன்னே, “நீங்கள் விஷயம் தெரியாம பேசறீங்க” என்று நாராயணசாமி சற்று அழுத்தமாகவே சொன்னான்.

     அதே சமயம் காலடிச் சத்தம் கேட்கவும் மூவரும் திரும்பிப் பார்த்தனர். வெகு வேகமாக அங்கு வந்த செங்காளி, “காளியம்மாள் ஊருக்குப் போன சமாச்சாரம் தெரியுமா? அவளோடு சின்னப்பனும் போயிருக்கிறான்” என்றான். “அப்படியானால் நல்ல வேட்டைதான். நான் நாகம்மாளைக் கண்டு வாரேன்” என்று கெட்டியப்பன் ஒரு குதியோடு போனான்.

     “சரி, நாம் தோட்டப் பக்கம் போவோம்” என்று நாராயணசாமியுடன் மணியக்காரர் எழுந்தார்.



நாகம்மாள் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27