20

     மின்சாரம் இல்லாததால் மாலையில் ஐந்து ஐந்தரை மணிக்கே இருட்டியது போலாகியது. வீட்டுக்குள் அடைந்து கிடந்தவர்களுக்கு ஒரு மாறுதலாகவும், ஆறுதலாகவும் இருக்கட்டும் என்று பாகவதர் அம்மிணியம்மாள் வீட்டு மாடியில் ‘சுபத்ரா கல்யாணம்’ கதை சொன்னார்.

     அன்று ஜுரம் கொஞ்சம் தணிந்திருந்ததனால் கண்ணனும் கூடத்தில் வந்து எல்லோரோடும் உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருந்தான். மெழுகுவத்தியின் மங்கலான வெளிச்சத்தில் அவனைப் பாகவதரும், பாகவதரை அவனும் பார்த்துக் கொள்ள முடிந்தது. கண்ணபெருமானின் விரோதிகள் கம்சன், பிற அசுரர்கள் பற்றிக் குறிப்பிடும்போது பாகவதர் கொஞ்சம் அதிகமாகவே விவரித்தார். “வெறுப்பு, துவேஷம் என்கிற குணங்கள் மனித சமூகத்தை வளர்க்க உதவுபவை அல்ல. அவை நம்மை அறியாமலே நம் மனத்தில் எராளமான முள்வேலிகளையும், தடைகளையும் எழுப்பி மிக அருகிலிருப்பவர்கள் மேல்கூட விரோதத்தை வளர்த்து விடுகின்றன. கம்சன் முதலியவர்களும் கண்ணனை எதிர்த்த அசுரர்களும் வெறுப்பிலேயே தங்களைத் தாங்களே முள்வேலிகள் போட்டுப் பிணைத்துக் கொண்டு அதிலேயே சிக்கி முடிவில் பயனின்றி அழிந்து போனார்கள்.”

     கதைக்குத் தொடர்பில்லாமலே கொஞ்சம் வெளியே விலகி வந்து தனக்காகவே பாகவதர் இந்தக் கருத்தை அழுத்திச் சொல்வது போல் கண்ணனுக்குத் தோன்றியது. அப்போதிருந்த கண்ணனின் மனநிலையில் இக் கருத்து அவனை மிகவும் பாதித்தது. உள்ளத்தை உருக்கியது. தன் இருபக்கத்து விட்டாரையும் வெறுத்து வெளியே எடுத்த காம்பவுண்ட்டுச் சுவர்களை விடத் தான் தன் மனத்திற்குள்ளேயே தான் போட்டுக் கொண்ட துவேஷம் என்கிற முள்வேலிகள்தான் அதிகமானவை என்று இப்போது அவனுக்கே தெளிவாகத் தோன்றியது.

     பாகவதரின் குரல் தொடர்ந்தது: “வெறுப்பு என்பது பாலைவனம். அதில் எதையுமே நல்லதாகப் பயிரிட்டு வளர்க்க முடியாது! உலகிலிருந்து போகும்போது யாரும் எதையும் தலையில் கட்டி எடுத்துக் கொண்டு போகப் போவதில்லை. இருக்கிற வரை அக்கம் பக்கத்தாருக்கு உதவி செய்து உதவிகளைப் பெற்று உபகாரியாக வாழ்வதிலுள்ள சந்தோஷம் வேறு எதனாலும் மனிதனுக்குக் கிடைக்கப் போவதில்லை. பொறாமையினால் துவேஷமும், துஷேத்தினால் சுயநலமும்தான் மாறி மாறி உண்டாக முடியும். துவேஷம் என்பது அசுர குணம். அன்புதான் மனித குணம். கண்ணன் அன்பின் வடிவம் என்றால் கம்சன் வெறுப்பின் வடிவமாயிருந்தான். ஒரு தேவனும் அரக்கனும் அன்பாலும் வெறுப்பாலும்தான் வித்தியாசப் படுகிறார்கள்.” இதை அங்கே மேலும் உட்கார்ந்து கேட்பதற்குக் கஷ்டமாயிருந்தது கண்ணனுக்கு. கேட்டுக் கொண்டிருக்கும் போதே தான் அழுது விடுவோமோ என்று கூடப் பயமாயிருந்தது. மெதுவாக ஒசைப்படாமல் எழுந்து தன் அறைக்குப் போய்விட்டான் அவன்.

     அப்போது அந்த வீட்டில் யாருமே அவன் செய்த கெடுதல்களையும் தீமைகளையும் குத்திக் காட்டிப் பேசவில்லை. அவனை விருந்தினனாக மட்டுமே ஏற்று உபசரித்தார்கள். இது அவனைப் பெரிதும் சங்கடப்படுத்தியது. மனத்தைப் பாதித்து வேதனைக்குள்ளாக்கியது.

     மூன்றவது நாள் மழை ஓரளவு குறைந்து வெள்ளம் சிறிது வடிய ஆரம்பித்த போது கூடக் கண்ணனின் வீட்டுக் காம்பவுண்டில் மட்டும் வந்து தேங்கிய வெள்ளத் தண்ணிர் அப்படியே நின்றது. அணை எடுத்துத் தடுத்த மாதிரி அளவு குறையாமல் அது இருந்தபடியே இருந்தது.

     காலையில் பாகவதர் வந்து கண்ணனிடம் சொன்னார்: “நீர் நாலு பக்கமும் அணை வச்ச மாதிரி அவுட் லெட் இல்லாமச் சுவரெடுத்துப்பிட்டீர்! வந்த தண்ணி கொஞ்சம் கூட வெளியேறாமல் உம்ம காம்பவுண்டிலே மட்டும் அப்படியே நிக்கறதுக்குக் காரணம் இதுதான்! இப்ப யாராவது ஆள்விட்டு நாலு சுவர்லியும் கீழாகத் துவாரம் பண்ணி விட்டால்தான் உம்ம காம்பவுண்டிலேயிருந்து தேங்கின தண்ணி வெளியேறும். உம்ம கிட்டக் கேட்டு அனுமதி வாங்கிக்காம அதுக்கு நான் ஏற்பாடு பண்ண முடியாது.”

     “தாராளமாச் செய்யுங்கோ. எனக்கு ஒண்ணும் ஆட்சேபணை இல்ல” என்றான் கண்ணன்.

     பாகவதர் கடப்பாரையும் கம்பியுமாக நாலு கூலி ஆட்களை வரவழைத்துச் சுவர்களில் தண்ணிர் வெளியேற ஒட்டை போட முயலுகையில் எதிர்பாராத விதமாக ஈரத்தில் ஊறியிருந்த அந்தச் சுவர்களே. டமாலென்று சரிந்து விழுந்து விட்டன. மட்டமான சிமெண்டில் நல்ல ஆழமான அஸ்திவாரம் இல்லாமல் கட்டப்பட்டிருந்த அந்தச் சுவர்கள் விழுந்ததும் பாகவதர் பதறிப்போனார். கண்ணனிடம் ஓடி வந்து, “தப்பா நெனக்காதீங்கோ மிஸ்டர் கண்ணன்! ஆட்கள் தொட்டதுமே சுவர் விழுந்தடுத்து. நீங்க கோவிச்சுக்கறதா இருந்தால் அதைத் தொட்ட குத்தத்துக்காக என் செலவிலே நானே புதுச் சுவர் வேணா எடுத்துக் குடுத்துடறேன்.”

     “பரவாயில்லை! சுவர் விழுந்ததைப் பத்தி ஒரு வருத்தமும் பட வேண்டாம். நம்ம வீடுகளுக்கு நடுவில் இனிமேல் சுவர்களே வேண்டாம்னு நினைக்கிறேன்.”

     “நீங்க கஷ்டப்பட்டுப் பணம் கடன் வாங்கிக் கட்டின சுவர்களாச்சே?”

     “என்ன செய்யறது? கஷ்டப்பட்டுத்தான் ஒவ்வொரு கெட்ட காரியத்தையும் கூடத் தெரியாமச் செய்துடறோம்.”

     பாகவதருக்கு அவன் மனநிலை புரிந்தது.

     “இடித்து ஒட்டை பண்ணினாலொழியத் தண்ணி வெளியேற வழியில்லை. தேங்கி நாறப் போறதேன்னு இதைப் பண்ணச் சொன்னேன். அது இப்படி ஆயிப் போச்சு. பிள்ளையார் பிடிக்கக் குரங்காகப் போயிடுத்து” என்று மீண்டும் வருத்தப்படத் தொடங்கிய பாகவதரைக் கண்ணன் தன் நிதானமான, சாந்தமான பதிலால் மெல்ல ஆறுதலடையச் செய்தான்.

     “இதிலே வருத்தப்படறதுக்கு ஒண்ணுமே இல்லை. நானே ஒரு வீம்புக்காக அவசர அவசரமாகக் கட்டின சுவர் அது. இப்போ நினைச்சா எனக்கே பைத்தியக்காரத்தனமாப் படறது.”

     “வெள்ளம் வடிஞ்சப்புறம் என் செலவிலேயே வேணும்னா ரெண்டரை அடி உயரத்துக்கு ஒரு சுவர் எடுத்து மேலே பாரர்ப்பட் வயர் கட்டித் தடுத்துக் குடுத்துடறேன். ரெண்டு பேருமே கவலையை விடுங்கோ” என்று சிரித்துக் கொண்டே அவர்களிடம் வந்து சொன்னாள் அம்மிணி அம்மாள்.

     “இருக்கிற முள் வேலியையே அகற்றணும்னு பாகவதர் கதையிலே சொன்னார். நீங்க என்னடான்னா புதுசு புதுசா முள் வேலி போடணும்கிறீங்களே?” இது கண்ணன்.

     இதைக் கேட்டுப் பாகவதர், அம்மிணி அம்மாள், சுகன்யா மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்து அர்த்தபுஷ்டியோடு சிரித்துக் கொண்டனர்.

     “அது தண்ணியோ, பழைய விரோதமோ, அவுட்லெட் இல்லாம ரொம்ப நாள் உள்ளேயே தேங்கினா அழுகி நாறத்தான் நாறும்” என்று கண்ணன் தனக்குள் முணு முணுத்துக் கொண்டான்.

     வெளியே மாடிப்படி அருகில் குழந்தைகள் தண்ணிரில் காகிதக் கப்பல்கள் செய்துவிட்டுக் கொண்டு கும்மாளம் அடித்துக் கொண்டிருந்தன.

     நான்கு நாட்களாக வராமலிருந்த மின்சாரம் வந்து திடீரென்று எல்லா விளக்குகளும் பளிச்சென எரிந்தன. ரேடியோ திடுதிப்பென்று பாட ஆரம்பித்தது. கண்ணன் ஜன்னல் வழியே தன் வீட்டை எட்டிப் பார்த்தான்.

     காம்பவுண்டுச் சுவர்கள் விழுந்து நாலு பக்கமுமே வழி ஏற்பட்டிருந்ததால் தண்ணிர் முற்றாக வடிந்து கீழே தரை தெளிவாகவும் நன்றாகவும் தெரிய ஆரம்பித்திருந்தது.

(முற்றும்)