1

     வழக்கம் போல் மாலை நேரத்துக் கூட்டம், ஏறும் படிகளிலும் நெருங்கப் பிதுங்குகிறது. ரேகாவுக்கு இந்த ஆறேழு மாதத்தில் மெல்லிழையாய் உள்ளே வளைந்து நெளிந்து புகுவதற்குப் பழக்கமாகி விட்டது.

     “மேலே போங்கம்மா! முன்னால் போங்க... போங்க சார்!” என்று ‘நடத்துநர்’ என்று அழைக்கப் பெறுபவரின் குரலுடன், மூச்சுத் திணற நிற்பவர்களின் நெருக்கமும் விரட்டினாலும் ரேகாவினால் முன்னேற முடியவில்லை. பெண்களுக்குரிய இருக்கைகளின் பக்கம் நகரவும் இயலாமல் பிடரி முடிகளும், காதோரங்களில் இறங்கிய கருமைகளும், சட்டைகளும், சிகரெட்டு வாசனைகளுமாக நெருக்கும் ஓர் வளையத்துள் சிறைப்பட்ட தளிரிலை போல் ஒண்டிக் கொண்டிருந்த அவளைப் பார்த்து இரங்கிய ஒரு நீலச்சட்டை இளைஞன், “கொஞ்சம் முன்னே லேடீஸ் சீட்டில் இடம் இருக்கு பாருங்க. கண்டக்டர்! லேடீஸ் சீட்டைக் காலி பண்ணச் சொல்லுங்க! யாரோ உக்காந்திருக்கிறார், பாரு!” என்றான்.

     அவன் சற்றே இடம் கொடுத்து உதவ, ரேகா ஓரத்து இருக்கைக்கு முன்னேறினாள். நெருங்கியதும் சட்டென்று ஏதோ அதிர்ச்சிக்கு உள்ளானாற்போல் அங்கேயே நின்றாள்.

     அந்த இருக்கையில் அமர்ந்திருந்த ‘கனமான’ ஆள் அசையவில்லை. இருவர் அமரக்கூடிய அந்த இருக்கையில் அவன் ஒருவனே அமர்ந்திருந்தான். அதற்குக் காரணம் யாரும் கூறாமலே புலனாயிற்று. சாராய நெடி அவன் பக்கம் இருந்து பிறந்து காற்றில் கலந்து கொண்டிருந்தது. ரேகாவுக்கு அது சாராய நெடி என்று தெளிந்து கொள்ளும் அறிவு இல்லையெனினும், எந்த விதமான பாதிப்புமின்றி வெளியே பார்த்துக் கொண்டு வந்த அவனுடைய தோற்றம் ஒருவகையான அச்சத்தை ஊட்டக் கூடியதாக இருந்தது.

     நேராகப் பார்க்கவில்லை என்றாலும், அவனுடைய முகம் இடைவிடாத வெயிலோ, உட்துயரத்தின் வெம்மையோ ஏற்று ஏற்றுக் காய்த்துத் தடித்து விட்டாற் போலிருந்தது. முன் நெற்றியின் இரு புறங்களிலும் ஓடைகளாய் ஒதுங்கிப் பின்புறம் எண்ணெயின்றிப் பரந்து விழுந்த முடியில் நரைகள் தெரிந்தன. ஒரு அழுக்கு நிறச்சட்டை அணிந்திருந்தான்.

     நீலச்சட்டை இளைஞன் உள்ளே புழுங்கிய கசகசப்புக்கும் குரல்களுக்கும் அப்பால் உரக்க, “லேடீஸ் சீட்டைக் காலி பண்ணய்யா! லேடீஸ் நிக்கிறாங்க, தெரியல?...” என்று கத்தியும், அவன் கேட்காமல் அமர்ந்திருந்த போது பல குரல்கள் அவனை எழுப்பக் கூச்சல் போட்டன. நீலச்சட்டை இளைஞன் விடவில்லை. முன்னே நசுங்கி வந்து அவன் முதுகில் தட்டினான்.

     “யோவ்! எழுந்திரய்யா!”

     அவன் திரும்பி உள்ளே பார்க்கையில் ரேகாவுக்கு நெஞ்சு திடுக்கிட்டாற் போலிருந்தது. ஒரு மாதம் கத்தி காணாத கருமைப் பசைப்புடன் கூடிய முகத்தை அவள் அச்சமும், கிளர்ச்சியும் உந்தப் பார்க்கிறாள். கண்களுக்குக் கீழ் திட்டான கருமைகள். பித்தான் போடாத சட்டையினுள் தெரிந்த மார்பு ரோமக் காடாக இருந்தது. அவனுடைய கையில், குருதி கசியும் நிணம் என்று அறிவிக்கும் வகையில் நன்றாகக் கட்டப் பெறாததொரு இலைப் பொட்டலம் இருந்தது.

     எல்லோருமாகச் சொல்லால் விரட்டியும், கையால் உசுப்பியும் அவன் எழுந்திருக்கவில்லை. ரேகாவை பார்த்தான். நீலச்சட்டைக்காரனையும், இன்னும் பஸ்சில் உள்ள கும்பலையும் நிதானமாகக் கண்ணோட்டம் விட்ட பிறகு கைப் பொட்டலத்தை மாற்றிக் கொண்டான். எழுந்திருக்காமலே, ரேகாவின் முகத்தைக் கூர்ந்து பார்த்துவிட்டு ஒதுங்கிக் கொள்கிறான். அருகில் உட்காரட்டும் என்ற பொருள் விளங்க சைகை செய்கிறான்.

     “கேட்டியாய்யா? என்ன திமிரு? லேடீஸ் சீட்டில் உக்காந்து வம்பு செய்யிறான். கண்டக்டர்! அந்த ஆளை இழுத்து வெளியே தள்ளு முதல்ல!” என்று ஒரு குரல் கும்பலிலிருந்து சீறி வந்தது.

     ஆனால், அந்த நடத்துநருடைய வடிவைப் பார்த்த ரேகா, அவர் இவனுடைய தோற்றத்தைக் கண்டே அஞ்சி நழுவிக் கொண்டிருந்தார் என்று நினைத்தாள்.

     “பட்டப்பகல்ல குடிச்சிட்டு ஏறிடறாங்க. கேட்பவங்க கேள்வியே இல்ல. அன்னிக்கொரு நாள் வெறும் காலி டின், ஒரு நாலு லிட்டர் டின் கிரசின் ஆயிலுக்காக கொண்டு போனேன், இதே கண்டக்டர் இறக்கி விட்டான். இப்ப இதுமாதிரி ஆளுங்களை ஏத்திட்டு பேசாமப் போறான். கண்டக்டர்! இறக்கய்யா அந்த ஆளை!” என்று நான்கு புறங்களில் இருந்தும் கூச்சம் வலுத்தது.

     ‘கண்டக்டர்’ இன்னொரு கோடியில் அப்போதுதான் ஏறிய ஐந்தாறு சீக்கிய இளைஞர்களுக்குச் சீட்டுக் கொடுக்க மொழிக் குழப்பத்தில் சிக்கிக் கொண்டிருக்கிறார்.

     “ஏம்மா, உட்காரமாட்டியா? நீ எனக்கு மக போல. சும்மா உக்காரு...” என்று அவன் ஆங்கிலத்தில் கூறி மெல்லப் புன்னகை செய்கிறான். ரேகாவுக்குத் தூக்கிவாரிப் போட்டாற் போலிருந்தது. அவனையும் அவன் கைப் பொட்டலத்தையும் மாறி மாறிப் பார்த்தாள்.

     “என்னய்யா வம்பு பண்றே? பின்னே எத்தனை லேடீஸ் நிக்கறாங்க? எந்திரய்யா? பெரிய இங்கிலீஷ் பேசறே, இங்கிலீஷ்?”

     “தெரியிது. எத்தனையோ தடவை எத்தனையோ ஆண் பிள்ளை நிற்கும் போது அவங்க சீட்டில் பெண்கள் உக்காரல? எனக்கு இன்னிக்கு எழுந்து நிற்க முடியாது. நான் எழுந்திருக்கப் போவதில்லை” என்று அவன் உறுதியாகக் கூறிவிட்டு, வெளியே நோக்குகிறான்.

     “என்ன அக்கிரமம்? கண்டக்டர்! அவனைக் கிளப்பு பஸ் இல்லாட்டி ஓடாது!”

     “ஏன் கலாட்டா பண்ணுறீங்க? யார் சொன்னாலும் என்னால் இப்ப எழுந்து நிற்க முடியாது. நான் நின்னு யாருமேன்னாலும் விழுவதற்கு இதுதான் மேல். நான் அடுத்த ஸ்டாப்பில் இறங்கிப் போயிடுவேன். பிறகு உக்காந்துக்கம்மா” என்றான்.

     இப்போதும் அவனுடைய பேச்சு கண்ணியக் குறைவாக இல்லை. பஸ் வளைந்து சாய்கிறது. ரேகா அந்த ஓரத்தில் ஒண்டிக் கொண்டு அவன் அருகில் உட்காருகிறாள்.

     இந்த விவகாரம் இப்படியே ஓய்ந்துவிடுவதைப் பொறுக்காத யாரோ ஒருவர் மறுபடியும், “குடிச்சிட்டு, கையில் இறைச்சிப் பொட்டலத்தோடு ஏறினான். இவங்களை பஸ்சில் எப்படி ஏத்தலாம்?” என்று தொடங்கினார். உடனே அவன் குரல் சீறியது.

     “ஆமாம்யா! நான் குடிச்சிருக்கிறேன். ஐ அக்ரி. ஐ ஹாவ் ட்ரங்க். என்னால் நிற்க முடியாது. ஆனால் நான் ஏன் குடிக்கிறேன் தெரியுமா? ப்ளஷர் இல்ல. என்ஜாய்மென்ட் இல்ல. என் தொழிலுக்காக நான் குடிக்கிறேன். குடிக்க வேண்டி இருக்கு. என் தொழில்...” என்று அவன் சிரித்துவிட்டு, கையிலுள்ள இறைச்சிப் பொட்டலத்தை ரேகாவுக்கு மட்டும் சைகையாகக் காட்டுவது போல் தூக்குகிறான்.

     அவளுக்கு முதுகுத்தண்டு சில்லிட்டுவிட்டாற் போலிருக்கிறது.

     இரத்தக் கறைகள், அவனுடைய மக்குநிறக் கால் சட்டையிலெல்லாம் பரவிக் காய்ந்தாற்போல் அவளுக்குப் பிரமை தட்டியது.

     அவனுடைய சொல்லில் கண்ணிமைக்க மறந்து போகக் கூடிய வியப்பும் அதிர்ச்சியும் தோன்றுகின்றன.

     எதிர்க் குரலே எழவில்லை.

     ஏதோ ஒரு சுவையான கட்டத்தை அரங்கில் பார்ப்பது போன்று அங்கே சற்றுமுன் குரல் எழுப்பியவர்கள் அவனையே பார்க்கின்றனர்.

     “ஆம். என்னுடைய தொழில் கொலைத் தொழில். ஐ ஆம் எ கில்லர். ஒரு நாளைக்கு முந்நூறுக்கும் மேற்பட்ட உயிர்களைக் கொல்லுகிறேன். இன்று நான் நாற்பது ரூபாய்கள் மேல் கூலி வாங்கி இருக்கிறேன். ஒரு கிலோ இறைச்சியும் கூலிதான்...”

     அவனுடைய தோற்றத்துக்கும் தொழிலுக்கும் பொருந்தாத ஆங்கிலப் பேச்சுத்தான் கூட்டத்தைக் கவர்ந்ததா, அல்லது சாதாரணம் அல்லாததொரு உண்மையை அவன் விண்டதுதான் அவர்களைக் கவர்ந்ததா என்பதை அறுதியிட்டுக் கூற முடியாது.

     நீலச்சட்டை இளைஞன் மறு பேச்செழாமல் அவனையே பார்க்கிறான். அவனிடம் சற்று நேரத்துக்கு முன்பு வரையிலும் தான் உயர் கல்வி கற்றவன் என்ற பெருமிதம் இருந்தது.

     “கொல்வது பாவம் என்று கொன்றதைத் தின்பவர்களும் சொல்லலாம். இரத்தத்தை நான் பார்க்கமாட்டேன் என்று ஒதுங்கலாம். நான் உயிர்களைக் கொல்லக் கூடிய தொழிலுக்கு வருவேன் என்று கனவிலும் நினைக்காமல் வந்தேன்...” என்று எங்கோ பார்த்துக் கொண்டு சிரிக்கிறான். பிறகு நீலச்சட்டையைப் பார்த்து, “ஏன் தம்பி, படிக்கிறீங்களா?” என்று கேட்கிறான்.

     “ஆமாம்... நான் எம்.டெக். முடித்து பி.எச்டி. பண்ணுகிறேன்...” என்று தனக்குரிய கர்வத்துடனும், அதேசமயம் எந்தப் புற்றில் எந்தப் பாம்பிருக்குமோ என்ற மரியாதையுடனும், மறுமொழி கொடுக்கிறான்.

     “ரொம்ப சந்தோஷம், பண்ணினப்புறம் என்ன செய்வீங்க? அமெரிக்கா, அங்கே இங்கே போவீங்க; பணம் சம்பாதிப்பீங்க. எல்லாம் பணம்தான் கடைசியில். நானும் உயிர்க் கொலை பண்றேன். மாசம் இதிலும் ஆயிரத்துக்கு மேல் சம்பாதிக்க முடியும். ஆக, உங்க படிப்பும் இதுவும் ஒரே மதிப்புத்தான்...”

     ரேகாவுக்கு நெஞ்சு கட்டிப் போகிறது. அவனையே வியப்புடன் பார்க்கிறாள்.

     “ஏங்க, உங்களைப் பார்த்தால் படிச்சவராத் தெரியுது. கனவு கூடக் கண்டிருக்கலேன்னு ஏன் ஒரு தொழிலுக்குப் போனீங்க?”

     “போனேனா?...”

     அவன் மீண்டும் சிரிக்கிறான். அந்தச் சிரிப்பு அங்கு இல்லாத யாரையோ பார்த்துச் சிரிப்பது போல் இருக்கிறது.

     “நான் பி.ஏ. படிச்சுத் தேறாமல் போனவன். பணம் சம்பாதிக்கத் தான் வேலைன்னு ஒரு வேலையைச் செய்யக்கூடாதுன்னு கொள்கை வச்சிருந்தேன். கடைசியில் பணம் சம்பாதிக்கவே இந்த வேலைக்குப் போனாப்பல ஆச்சு. ஆண்டவன் விதிச்சது இன்னிக்கு இது. எத்தனை உயிரைக் கொல்லுவேனோ அத்தனை பத்துக் காசு. இதுக்கு இன்னிக்கு ஆறு ரூபா தண்ணிச் செலவு... இல்லாட்டி இந்த வேலை செய்ய முடியாது...”

     அந்த ஊர்தியினுள் இருந்தவர் பலரை இந்த விவரங்கள் இதற்குள் கவர்ந்துவிட்டன. சுவாரசியமாகச் செய்திகளைத் தரும் ஏட்டைப் படிப்பதுபோல் அவனை நோக்குகின்றனர்.

     “ஒரு நாளைக்கு எத்தனை ஆடு வெட்டுவீங்க?” என்று ஒருவன் விவரம் கேட்கிறான்.

     “ஏன்? நான் எவ்வளவு பாவம் செய்றேன்னு அளந்து பாக்குறியா? நானூறுக்கும் மேல. அது படை வீரருக்கு ‘சப்ளை’ செய்யும் தொட்டி. போன புதிசில நாலஞ்சு உருப்படி கூட முடியல. பழக ரொம்ப சிரமமாச்சு...”

     “ஏங்க, அவ்வளவு பலம் இல்லையா?” என்று நீலச்சட்டை கேட்கிறான்.

     “உடம்பு பலம் இருந்தது. ஆனால் மன பலம் இல்ல. முண்டமும் தலையும் துடிக்கிறாப்பல, இரத்தம் பீறிடறாப்பல எப்பவும் மனசு துடிக்கும். மறக்கவே முடியாது. கைநடுங்கி வெலவெலத்து வேர்த்துக் கொட்டும். இந்த வேலை நான் எதுக்குச் செய்யணும்னு விடவும் மனசில்ல. ஒரு சவால் மாதிரி வீம்பு. பிறகு...”

     “பிறகு எப்படிப் பழகினீங்க?”

     ரேகா அவனை நிமிர்ந்து பார்க்கிறாள். நெஞ்சில் உணர்ச்சி பந்தாக அடைக்கிறது. அவனுடைய கண்களில் திரை படர்ந்தாற்போல் இருக்கிறது. ஆனால் மிகத் தெளிவாகப் பேசுகிறான்.

     “குடிச்சாத்தான் இதெல்லாம் மறந்து வேலையில் ஈடுபடலாம்னு சொன்னாங்க. அதுக்கு முன்ன நான் மாதிரி கூடப் பார்த்தது கிடையாது. பாருங்க தம்பி, நம்ப மதத்தில் மட்டும்தான் குடிக்கிறது பாவம்னு சொல்லியிருக்குன்னில. இஸ்லாத்தில சொல்லியிருக்குது. பர்சியன் பாஷையில் சாராயத்துக்குப் பேரே ‘காமெரெய்ன்’னு சொல்லுவாங்களாம். காமராங்கறது கூட அதிலேருந்துதான் வந்தாப்பல. ஏன்னா, காமரான்னா மூடி மறைக்கிறதுன்னு அர்த்தம். அதாவது திரைப் போட்டு, உண்மை தெரியாம பண்ணுவதுன்னு. இந்த மதுப் புத்தியைத் திரையிட்டு மறைக்கிறதால அப்படிப் பேராம்...”

     ‘பி.எச்டி.’ வியப்புடன் “அப்படீங்களா?” என்று விழிகள் அகலக் கேட்டு மலைக்கிறான்.

     “ஆமாம். புத்தியை அறிவை மறைச்ச பிறகு பாப புண்ணிய, சந்தப்பு உணர்வு இல்ல பாரு? அப்ப கொலையும் கனமில்லாத வேலையாகுது. ஆனா... திரும்பத் திரும்ப நினைவே வராம இருக்கிறதுதான் கஷ்டம்... உம்... நீ சவுரியமா உக்காரம்மா, நான் வரேன்...”

     அவன் சட்டென்று எழுந்து கூட்டத்துக்குள் புகுந்து சென்று இறங்குகிறான். ரேகா ஓரத்தில் நகர்ந்து அவனையே பார்க்கிறாள். குருவிக் கூட்டில் கொண்டு வைக்கும் சவுரிப் பஞ்சுபோல் மென்மையாகத் தெரியும் எண்ணெய் காணாமுடி. நல்ல உயரம், சட்டை அரைக் கையில் தையல் ஓரம் பிரிந்து தொங்குகிறது.

     பஸ் சாலையின் தொலைவை விழுங்கிச் செல்லும் உணர்வே அவளுக்கு இல்லை.