13

     மாமரம் குபீரென்று பூத்துக் குலுங்குகிறது. அந்தப் பூச்சிழந்த பழமை பற்றிய கவர்ச்சியில்லாத வீட்டின் வறுமையை விளக்கும் சூழலில் மாமரம் மட்டும் விழாக் கொண்டாடுகிறது. மாட்டைக் கட்ட வந்த பாட்டி மாமரத்தைப் பார்த்துக் கொண்டு பெருமூச்செறிகிறாள். பெரியவர் காலமான வருஷம் இப்படித்தான் பூத்ததோ? பங்கனபள்ளி ரகம் ஒரு காய் அந்தக் காலத்தில் ஒரு இளநீர் கனம் இருக்கும். சென்ற ஆண்டு எண்ணிப் பதினெட்டுப் பழம் தானிருந்தது. உடற் சோர்வும், மனச்சோர்வும், கவலையும் அவளைத் தன் முடிவு காலத்தைப் பற்றி எண்ணச் செய்கிறது. அந்தக் காலத்தில் ரூபாய் அருமையாக இருந்தது. ஆனால் சோற்றுக்குத் திண்டாடினார்களா? வருஷத்துக்கு நெல் வாங்கி மூட்டைகளாக அடுக்கியிருப்பார்கள். கொட்டிலில் மாடும் சுரந்து கொண்டிருந்தது. எத்தனை குழந்தைகள்! எத்தனை கல்யாணங்கள்! சடங்குகள்! பெரியவருக்கு இரண்டு தம்பிகள்! ஐந்து சகோதரிகள், அவளே உறவுகாரி, அவள் வழி மக்களும் வந்து உறவாடுவார்கள். அந்த வீட்டில் இப்போது திருமணம் நடந்து பன்னிரண்டாண்டுகளாகி விட்டன. பெரியவர் காலமான பிறகு மணச்சடங்கே நடக்கவில்லை. சொர்ணம் வயசுக்கு வந்ததை ஒதுக்கிவைத்து வண்மைகள் செய்து மங்கல நீராட்டிக் கொண்டாடவில்லை. ஒரு பொன்மணி செய்து போட முடியவில்லை. காலையில் ஒரு சுடுசோற்றை விழுங்கிவிட்டு டப்பியில் கொஞ்சம் அடைத்துக் கொண்டு பஸ் ஏறி சம்பாதிக்கப் போகிறாள். ஜடமான மரம் பூக்கிறது; காய்க்கிறது. வறுமையும் சிறுமையும் இருந்தாலும் ஆண்டவன் மனசு வைத்தால் ஆகாததில்லை என்றிருந்தாள். மனசே வைக்கப் போவதில்லையா? அன்று வந்தவன் பொய்க் கோலமென்று ஒரு உண்மையான காட்சியைக் காட்டமாட்டானா?

     பனி வெயில் இதமாக இருக்கிறது. சிவராத்திரி வரவில்லையே? வாயிலில் தோல் கிடங்குச் சுண்ணாம்பை அள்ளி வந்து ‘மொக்குமாவு’ என்று விற்கிறாள். அரிசி மாவரைத்துத்தான் கோலம் போட வேண்டும் என்ற முறை போய், அந்தச் சுண்ணாம்பை நாகம்மா காசு கொடுத்து வாங்குகிறாள்.

     சொர்ணம் ஏன் திரும்பி வருகிறாள்? எதையேனும் வைத்து மறந்தாளா?

     வாசலில் சொர்ணம் மட்டும் வரவில்லை. பம்பாயிலிருந்து துரை வருகிறான். கையில் சிறு தோல் பெட்டியை எடுத்துக் கொண்டு, “வா தம்பி! ராஜாம்பா, குழந்தைகளெல்லாம் சவுக்கியமா?” என்று பாட்டி வரவேற்கையில் அவன் படியேறி வருகிறான்.

     “அட? என்ன திடீர்னு சொல்லாம கொள்ளாம?” என்று மருமகன் வருகிறான். பெண்கள் குழந்தைகள் எல்லோரும் வந்துவிட்டார்கள்.

     “திடீர்னு வரவேண்டியதாச்சு. நானே நினைக்கல, இவ்வளவுக்குப் போயிடும்னு...”

     கயிற்றுக் கட்டிலில் அவன் தலைகுனிய, நெற்றிச் சுருக்கங்களுடன் அமருகிறான்.

     “எல்லாம் உடம்புக்கு நல்லாயிருக்கல்ல? மருமகப் பிள்ளை, குழந்தை சுகந்தானே?”

     “எல்லாம் சுகந்தான். அவங்களைப் பத்தி ஒண்ணுமில்ல இப்ப.”

     “பையன் படிக்கிறதல்ல?”

     “அதுவுமில்ல. இப்ப கவலையெல்லாம் இந்தச் சின்னதைப் பத்தி. எதோ படிக்கிறா. பேசுது? அங்கே இங்கே போறான்னிருந்தேன். இவ்வளவுக்காகும்னு நினைக்கல.”

     “சின்னது யாரு, உமாவா?”

     “உமா எங்கிட்டத்தானே இருக்கு? கீதாதான் ஹைதராபாத்தில் டாக்டருக்குப் படிச்சிட்டிருந்தா. திடீர்னு படிப்பை விட்டுட்டு...”

     “விட்டுட்டு?”

     “யாரோடானும் முறைதவறிப் போயிட்டாளா?” என்று பாட்டி கேட்காமல் நிறுத்துகிறாள்.

     “அப்படியெல்லாம் இல்லை. காலேஜில் யாரோ முறை தவறி நடந்தானாம். இவ செருப்பெடுத்து அடிச்சாளாம். அமர்க்களம் ஆர்ப்பாட்டமாம். ஒரு பையன் இவளை அடிக்க வந்து இன்னொருவன் அதைத் தடுக்க, அவனை மற்றவர்கள் அடிச்சி ஆஸ்பத்திரிக்கே அனுப்பிச்சாங்களாம். இவ காலேஜை விட்டுட்டு பெரிய மூவ்மெண்ட் நடத்தறாளாம். மீட்டிங்காம். ஊர்வலமாம். எனக்கு போன வாரம் வரையிலும் விஷயம் தெரியாது. போய் நேத்துப் பேசறேன், பெண்கள் சுயமரியாதை இயக்கமாம், கல்யாணமில்லைன்னு வாக்குறுதியாம். எனக்கு எதுவும் ஓடல. நேத்து முந்தா நாள் வீதியை அடைச்சிட்டு நூறு நூறு பொண்ணுக, ஊர்வலம் பொகுதுங்க. ரெண்டு பக்கமும் போலீசு. மாமன்காரன் இருக்கிறான், பாத்துக்கிறான்னு நம்பினேன்.”

     “ஆமாம், அவன் டாக்டரில்லை?”

     “காலேஜில புரொபசர். கையைப் பிசையிறான். ஸ்டூடன்ட்சாவா இருக்கிறானுவ? புரொபசர்லாம் நடுங்கறாங்க. கத்தி வச்சிட்டுருக்கிறான் ஒவ்வொருத்தனும். இந்த அறியாததுங்க இப்படிக் கிளம்பும்னு நினைக்கவேயில்ல...”

     “அட கலிகாலமே? பேசாம பத்தாவது படிச்சதும் கலியாணம் கட்டிக் கொடுத்திருந்தா...” என்று புலம்புகிறாள் பாட்டி.

     “ஆமா, ஒண்ணொண்ணு ஆம்பிளைங்க போல சராயையும் கண்ணாடியையும் போட்டுட்டு அசிங்கமா திரியிதுங்க. இங்க கூடத்தான்!” என்று அத்தை ஒத்துப் பாடுகிறாள்.

     “இங்கெல்லாம் கூட அவளும் இன்னும் யாருமோ போன மாசம் வந்தாங்களாம். எனக்கு என்ன பண்ணுவதுன்னே புரியல சின்னம்மா. இங்க நம்ம வடிவேல் முதலியார் வீட்டில ஒரு பையன் டாக்டர் படிச்சிட்டு கோலாலும்பூர் பரீட்சை எழுதிருக்கானாம். ஸ்டேட்ஸ் போரான்னு சொன்னாங்க. வாணா பாத்து முடிக்கலாமான்னு, வந்தேன்.”

     “நம்ம குடும்பத்தில், பொண்ணைப் பெத்தவன் மாப்பிள்ளையைத் தேடிட்டுப் போறதா?” என்ன காலம் இது!”

     “என்ன பண்ணுறது? அவுங்க ஸ்டேட்ஸ் போக சார்ச்சு குடுக்கணும்னு சொன்னாலும் குடுத்தாகணும். என்ன பண்ணுறதுன்னே தெரியல. என் மச்சுனன் சம்சாரம் சொல்லுறா, எல்லா அம்மாமாரும் பொண்ணுங்களை இப்படி விட்டுட்டு நெருப்பைக் கட்டிட்டுருக்காங்க. அதுங்க கிட்டப் பேசவே முடியலன்னு.”

     “இதென்னடீ காலம்? எதுக்கு ஊர்வலம் போயி கத்தறாங்க?”

     “எல்லாம் அரசியல் கட்சிங்க பண்ணும் விஷமம். கம்யூனிஸ்டுங்க தான் இப்படித் தூண்டுறாங்க” என்று சித்தப்பா விளக்குகிறார்.

     “அதெல்லாமில்ல. பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை எதிர்க்கிறாங்க. நகை, புடவைன்னு காட்டி அவங்க சுதந்தரத்தைப் பறிப்பதை எதிர்க்கிறாங்க. சந்திக்குச் சந்தி படத்திலும் கதையிலும் இழிவு செய்வதை எதிர்க்கிறாங்க. சமுதாயத்தில் பெண்ணை சமமாக மதிக்கலேன்னு கொதிச்சு எதிர்க்கிறாங்க. எதுக்காக அரசியல் கலர் கொடுக்கணும்?”

     ரேகா பட்டென்று சீன வெடிச்சரம் போல் வெடித்துவிட்டு, அலுவலகத்துக்கு நேரமாகிவிட்ட உணர்வுடன் விரைந்து நடக்கிறாள்.

     தன்னைச் சந்தித்தவள் மாமனின் மகள் என்று புரிந்து கொண்டதும் மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. அவசரமாகக் கைப் பையைத் துழாவி அந்த முகவரிச் சீட்டை எடுக்கிறாள். ஆந்திரத் தலைநகரில்தான் அந்த முகவரி இருக்கிறது.

     “ஏய் சொர்ணா? சொர்ணம்? இங்கே வந்திட்டு போ?” பாட்டி கத்துகிறாள். அவள் செவிகளில் போட்டுக் கொள்ளவில்லை. சம்பளம் பெற்றதும் ஐந்து ரூபாயை அனுப்பிப் பதிவு செய்து கொள்ள வேண்டும். மாபெரும் இயக்கம் வலுவடையும்போது, நம்பியைப் போன்றவர்கள் நிற்க முடியாது! கோகுலைப் போன்றவர்கள் குற்றவாளிக் கூண்டில் ஏறுவார்கள். எத்தனை எத்தனை பெண்களோ அலுவலகங்களில் வெளிக்குத் தெரியாத வகையில் அவமானங்களுக்காளாவதை நிறுத்தப் போகிறார்கள்.

     அந்தப் பெண்கள் இருவரும் அவளைத் தேடி அலுவலகத்துக்கு வந்து மற்ற விவரங்களைத் தெரிவித்து உறுப்பினராக்குவதாகக் கூறினார்கள். ஆனால் வரவில்லை. ஒருகால் சென்னை நகரில் அவர்கள் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்காமல் திரும்பிவிட்டார்களோ? அவளைத் தேடி அவள் வீட்டுக்கே வந்தாற்போல் அல்லவோ சந்தித்தார்கள்? பள்ளித் தலைமை ஆசிரியையைச் சந்திக்க வந்ததாகக் கூறினார்கள். ஒருகால் அவளுடைய முகவரிக்கு ஏதேனும் அவர்கள் கடிதம் எழுதித்தான் நம்பியின் விஷமத்தினால் கிடைக்கவில்லையோ?

     பெண் மெல்லியல்; வீடே அவளுக்குரிய பாதுகாப்பான இடம் என்ற காப்பை, கண்ணுக்குத் தெரியாத விலங்கைப் போல் பூட்டி விடுகிறார்கள். அந்த விலங்கை உடைத்தெறியத் துணிவின்றி, வெளியே செல்லும்போதும் அதன் சுமையில் அஞ்சிச் சாகிறாள் அவள். அதை உடைத்துக் கொண்டு வெளியே வண்ண வண்ணமாகப் படை திரண்டாற்போல் வருபவர்களோ, பல மாயக் கவர்ச்சிகளுக்கு அடிமையாகிறார்கள்.

     ஒருமுறை தவறி நடந்த ஆடவனை ஒருத்தியாக எதிர்த்ததுடன் பெண்ணினம் தரம் குலைந்து சீரழியும் கொடுமையை எதிர்த்துக் குரல் கொடுக்க, கல்வியை, சுயவாழ்வை நோக்கி இந்த இலட்சியத்தைத் துறந்து சக்தியைத் திரட்ட வந்த அவள் அல்லவோ வீரமுடையவள்?

     “ஆண்பிள்ளை முறை தவறினால் என்ன செய்வது?” என்று ஆண்டுக்காண்டு தன்னைப் பிள்ளை பெறும் கருவியாகவே எண்ணிக் கொள்ளும் அத்தை, சின்னம்மா போன்றோருக்கும், கவர்ச்சியாக அலங்கரித்துக் கொண்டு வாழ்வைத் தடையின்றி அனுபவிப்பதே முன்னேற்றம் என்று கருதி உணர்ச்சிகளுக்கு இரையாகும் பெண்களுக்கும் உண்மையில் வேற்றுமை அதிகமில்லை என்று ரேகா நினைக்கிறாள். அந்த வகையில் அவளுடைய தாய், தன்னுடைய கடமையை நிராகரித்துவிட்டு, வாழ்வுக்கு இடறி வீழ்ந்தபின் மீண்டும் சுமைபோல் குடும்பத்தை நாடி வந்த கணவனை நிராகரித்ததே முறை என்று கூட அவளுக்கு இன்று தோன்றுகிறது. ‘கல்லானாலும் கணவன்; புல்லானாலும் புருஷன்’ என்று மருமகளை அந்தக் கணவனுக்குச் சேவை செய்ய வற்புறுத்தாத பாட்டியும் உண்மையில் அவ்வகையில் பரந்த மனம் கொண்டவள்தான். ஆனால், அந்தத் தந்தை, கடமையை பொறுப்பை ஏற்காமல் ஒரு போலித் துறவியாக வந்திருந்தால் தாயும் பாட்டியும் நிராகரித்திருப்பார்களா? மாட்டார்கள்.

     பரம்பரையான தங்கள் குடும்பத்தின் கவுரவுமும், மேன்மையும் குலைந்து போயிற்றென்றுதான் நிராகரித்தார்கள்.

     அதே கவுரவத்தின் பெயரைச் சொல்லிக் கொண்டுதான் யாரோ ஒரு பையனைத் தேடி வந்து கீதாவின் சுதந்திரச் சிறகுகளைப் பிணித்து, எழுச்சியை அடக்கப் போகிறார்கள். இவ்வகையில் பணக்காரப் பெற்றோர் தம்தம் புதல்வியருக்கு வாழ்க்கையை வாங்கிக் கொடுத்துவிடலாம் எங்கோ ஒன்று என்று தோன்றும் வெளிச்சமும் அவிந்து போகும்.

     வழக்கமாக அவள் பத்தடிக்குமுன் அலுவலகத்துக்கு வந்து சேரும் வகையில் பஸ்சைப் பிடித்திருப்பாள். அன்று அரைமணி தாமதமாகி விட்டது. வாயிலில் நீலக் கார் நிற்கிறது. ஸ்கூட்டரும் இருக்கிறது. கோகுல், நம்பி, ஜானிராஜ் எல்லோரும் வந்து விட்டார்கள் போலும்!

     நம்பி கோகுலின் அறையிலிருக்கிறான் என்பது புலனாகிறது. அவனுடைய இருக்கை காலியாக இருக்கிறது.

     “ஏம்மா, நேரம்? தினம் அந்தப் பொண்ணு பத்து மணிக்குமேல் தான் வருதான்னு கேட்டாரு!” என்று ஜானிராஜ் தெரிவிக்கிறார்.

     “மானேஜர் சார்?”

     “ஆமாம்...”

     அவள் அச்ச உணர்வுடன் இருக்கையில் அமர்ந்து மேசையில் அவர், வைத்திருக்கும் காகிதங்களைப் பார்க்கத் தொடங்குகிறாள்.

     மணி ஒலிக்கிறது.

     சம்பங்கி தலைநீட்டி, “உங்களைத்தாம்மா!” என்று அறிவிக்கிறான்.

     நம்பி நின்றவாறு ஏதோ ஒரு தடித்த நோட்டைப் புரட்டிக் கொண்டிருக்கிறான்.

     கோகுல் அவளை நோக்கிப் புன்னகையுடன், “குட்மார்னிங், இப்பதான் வந்திங்களா, மேடம்?” என்று கொச்சைத் தமிழில் கிண்டலாகக் கேட்கிறான்.

     அவளுக்கு என்ன மறுமொழி கூறுவதென்று புரியவில்லை. “பஸ் வர நேரமாகிவிட்டது. மன்னிச்சிக்குங்க சார்!” அதை ஆங்கிலத்தில் மொழியும் திறனும் அவளைக் கைவிட்டு விட்டது.

     “மன்னிச்சிக்கிங்க...” என்று திருப்பிக் கூறி அவன் இன்னும் கேலியாகச் சிரிக்கிறான்.

     “சரி, நீ தினமும் நாலு மணிக்கே ஆபீசை விட்டுப் போய் விடுகிறாயாமே?”

     “இல்லை சார், ஐந்துமணி வரையிலும் இருக்கிறேன்.”

     “நேற்று?...”

     “நேற்று?...”

     அவள் திகைக்கிறாள். ஆம், ஒரு வேலையுமில்லை. அலுவலகத்தில் வேறு யாருமில்லை. தனியாக இருக்கையில் அமர்ந்திருக்க அஞ்சி வெளியே தோட்டத்துக் கிணற்றடியில் ராமசாமியும் சமங்கியும் தொட்டிகளில் மண் போடுவதைப் பார்த்துக் கொண்டு நின்றாள். தொலைவில் தொழிற்பேட்டையில் எழுபத்தெட்டு ‘பி’ வந்து நிற்பது தெரிந்தது.

     மணி ஐந்தடிக்க ஐந்து நிமிடம் என்று ராமசாமி தன் கடியாரத்தைப் பார்த்து மணி சொன்னான். அவள் கிளம்பினாள்.

     “என்ன பேசாம நிக்கிறே? உண்மைதானா?”

     “அரைமணி இல்ல சார். அஞ்சு நிமிஷம் முன்ன போனேன்.”

     “பொய் சொல்லாதே. நான் இங்கே நாலே முக்காலுக்கு வந்தேன். நீ இல்லை...”

     “நாலே முக்காலா?...”

     அவள் திகைத்து மருண்டு நிற்கிறாள்.

     அவன் நம்பியிடம் ஏதோ ஜாடை காட்டுகிறான்.

     நம்பி அலமாரியைத் திறந்து ஒரு பெட்டியை எடுத்து அவளிடம் கொடுக்கிறான். நீண்ட பிளாஸ்டிக் மூடியுள்ள அந்தப் பெட்டியினுள்ளே ஒரு அழகிய கைக்கடிகாரம் இருக்கிறது.

     “இந்தா, இனி நேரத்துக்கு வந்து நேரத்துக்குப் போக வேண்டும்.”

     அவள் வெறித்து அதைப் பார்க்கிறாள்.

     சிறுமுகப்பும் பளிச்சிடும் துளிமுள்ளுமாக அழகாக இருக்கிறது. தன்னுடைய உருண்டையான மணிக்கட்டில் அப்படி ஒரு கடியாரம் கட்டிக் கொள்ள வேண்டும் என்று ஆறு மாசங்களுக்கு முன்னர்கூட அவள் ஆசைப்பட்டதுண்டு.

     இப்போது அதையும் அதைக் கொடுப்பவனையும், அருகில் இருப்பவனையும் அவள் மருண்ட விழிகளுடன் நோக்குகிறாள்.

     “எ... எனக்கு... வேண்டாம் சார்!”

     “ஹே... என்ன சும்மா கொடுக்கறச்சே வாங்கிக்க ரேக், இதுக்கு நீ பணம் கொடுக்க வேண்டியதில்ல. சம்பளத்தில் பிடிக்க மாட்டாங்க” என்று அதைத் தன் கையில் வாங்கி நீட்டுகிறான் நம்பி.

     “நான் நேரத்துக்கு தவறாம வந்துவிடுகிறேன். எ... எனக்கு இனாமா எதுவும் வேண்டாம் சார்!”

     “என்ன பிகு பண்ணிக்கிறே, சும்மா வாங்கிக்க ரேக்” என்று அவள் கையைத் தீண்டி அதை வைக்க முற்படுகிறான் நம்பி.

     அவள் விறுக்கென்று கையை இழுத்துக் கொள்ள, பெட்டி மேசையில் பட்டுக் கீழே விழுகிறது.

     “ரேகா? உனக்கு எத்தனை திமிர்? எத்தனை திமிரிருந்தால் இப்படித் தூக்கி எறிவே?”

     “மன்னிக்கணும் சார். நான் தூக்கி எறியல. வேண்டாம்னு சொன்னேன்.”

     “நீ இங்கே வேலையிலிருக்கிறே. சம்பளம் வாங்குறே. அதனால் நீ இங்கே உன் இஷ்டப்படி நடக்க முடியாது தெரியுமா?”

     அவளுக்கு அழுகை வெடித்து வருகிறது. அடக்கிக் கொள்கிறாள்.

     “அப்படி முறைதவறி நான் நடக்கல சார். இனிமேல் அஞ்சு நிமிஷம் கூடத் தவறாமல் பார்த்துக்கறேன் சார்.”

     “சரி, போ...”

     கண்ணிமைகள் சிவக்க, மூக்கு நுனியும் இதழ்களும் துடிக்க அவள் திரும்பி வரும்போது ஜானிராஜ் ஒரு தோட்டப் பிளானில் ஊன்றியிருக்கிறார்.

     கைக்குட்டையை எடுத்துக் கண்களை ஒத்திக் கொள்கிறாள். இனியும் இந்த அலுவலகத்தில் வேலை செய்வது நல்லதல்ல என்று படுகிறது.

     ஆனால்... வேலையுமில்லை வருவாயுமில்லாமல் என்ன செய்ய முடியும்?

     “...ஆ? என்னம்மா? என்னாச்சி? எதுக்கு அழுவுறே?”

     “...ஒ... ஒண்ணில்ல சார்...”

     “ஒண்ணில்லாம ஏம்மா அழுவுறே? சீ! நேரம் ஏன் ஆச்சின்னு கோகுல் கோச்சிட்டாரா?”

     “இல்ல சார். வாச் குடுத்தாரு. நான் வேணான்னேன். நம்பி கோச்சிட்டாரு. எனக்கு எதுக்கு சார் இவங்க வாங்கிக் கொடுக்கணும்?”

     “சீச்சீ... இதுக்குப் போயி அழுவறே? வாச்சை வாங்கிக் கட்டிட்டு ஜம்முனு வருவியா? நீ இன்னாம்மா!”

     “எனக்கு எதுக்கு சார் வாச் கொடுக்கணும்?”

     “அட, உன்னிடம் இல்லே, கொடுத்தாரு. டயம் பார்த்திட்டு வேலைக்கு வருவே. என்னாம்மா மட்டிப் பொண்ணா இருக்கயே? ஆறு மாசமா வேலைக்கு வரே. போனசுனு நினைச்சுக்கிறது...”

     “இது தப்பில்லையே?”

     “எனக்குத் தெரியாது. இப்ப நம்பி வந்து ஒரு கடிதாசை டைப் அடிச்சுக் குடுத்தா வாங்கிட்டு வீட்டுக்குப் போ. என்னை வந்து கேட்காதே?”

     காற்றுக்கு அலையும் இளம் புல்லைப்போல் மனம் அலைகிறது. யாரேனும் அவளுக்குச் சாதகமாக யோசனை சொல்ல மாட்டார்களா? நம்பி அறைக்கு வந்து டைப்ரைட்டரில் ஏதோ அடிக்கத் தொடங்குகிறான். சாதாரணமாக அவன் பேசிக் கொண்டே இருப்பான். நா ஊர் அக்கப்போரைப் பற்றியோ, சினிமாவைப் பற்றியோ, நடிக நடிகையரைப் பற்றியோ பேசிக் கொண்டிருக்கும்; அது அட்டைத் தடுப்பை மீறிக் கேட்கும். இன்று ஜானிராஜ் பேசத் தொடங்குகிறார்.

     “என்னப்பா, நம்பி, விமலாதேவி ஆர்டர் வரும்னே வரலியே?”

     “வரும் வரும். இன்னும் ரெண்டு அழுமூஞ்சிங்களே இங்கே வேலைக்கு வச்சிட்டா, விமலாதேவி என்ன, ஊரிலிருக்கிற தேவிங்க எல்லாம் வரும்!”

     “ஏம்ப்பா அத்தைப்போயி பயமுறுத்துறே?”

     “அது ஒண்ணும் பாப்பா இல்லை. இந்தா, ஆர்டர் டைப்படிச்சாச்சி என்னுடைய பாவம்...”

     ரேகா விறைத்த அச்ச உணர்வுடன் அட்டைக் கதவு வாயிலைப் பார்க்கிறாள்.

     “வேலை நீக்க உத்தரவா அடிக்கிறார்?” கேள்வி நாவிலேயே எழும்பவில்லை.

     “நான் சொன்னேனே கேட்டியா?” என்று ஜானிராஜ் பார்க்கிறார்.

     “நான் ஒரு தப்பும் செய்யலியே சார்?”

     பதைபதைத்து மேசை விளிம்பைப் பற்றிக் கொண்டு ‘டைப்’ அச்சுக்களைத் தட்டும் நம்பியையே பார்க்கிறாள் அவள். மலை உச்சி விளிம்பில் நிற்பது போலிருக்கிறது.

     ‘சார், நான் பண்ணினது தப்பு, இப்ப கடியாரத்தைக் கொடுங்கள். கையில் கட்டிக் கொண்டு ஒழுங்காக வேலைக்கு வருகிறே’னென்று சொல்வாளா அவள்?

     அவள் தந்தையைப் போல் நினைத்த ஞானிராஜ் அவளுக்காகப் பரிந்து ஒரு சொல் கூறக் கூடாதா?

     “சார், தயவு செஞ்சி சொல்லுங்க சார், மானேஜரிடம் நான் ஒரு நாள் கூட முறையில்லாம தப்பே செய்யல சார்? என்னை வேலையை விட்டு நீக்கிட்டா வழியேயில்ல சார்?”

     “என்னம்மா நீ, விவரமில்லாத பச்சைப் பிள்ளையாப் பேசுறியே? நிலைமை இப்படி இருக்கறப்ப, அவங்க மகிழ்ச்சியை இழக்கும்படி நடக்கலாமா? சிரிச்சிட்டே சாதிக்கிறதை எல்லாம் அழுது கெடுத்துக்கிறே, போம்மா.”

     அவளுக்கு நம்பிய ஆதாரமும் கைகொடுக்கவில்லை.

     ‘காரில் ஏறு’ என்று பணிப்பதும், ஓட்டலுக்கு அழைத்துச் செல்வதும், கடிகாரம் வாங்கித் தருவதும் சாதாரணமாகவும் தோன்றலாம். அவையே அவளுடைய உணர்ச்சிகளைக் கிளர்த்த வசமாக்கும் சாதனங்களாகவும் பயன்படலாம். நம்பியிடம் அத்தகைய சில நிமிடங்களில் தானே வீட்டைப் பற்றியெல்லாம் பேசி விட்டாள்? ஜானிராஜிடமும் தான் கூறினாள். ஆனால் அவர் அப்பாவைப் பற்றி விசாரித்ததாகவும், கொலைத் தொழிலை விட்டுவிட்டதாகத் தெரிந்ததாகவும், இன்னொரு நாள் கூட்டிச் செல்வதாகவும் கூறினார். இப்போது அவரை நம்பியது கூடத் தவறோ என்று தோன்றுகிறது. உயர்கல்வியோ, மேன்மக்களின் தொடர்போ, உலக அனுபவமோ, வயசு முதிர்ச்சியோ தனக்கு இல்லை என்ற உணர்வே அவளை மேலும் அழுத்துகிறது. பொருளைச் சார்ந்த தன்னம்பிக்கையும், வயசுக்கு உகந்த கிளர்ச்சிகளைப் பாதுகாத்துக் கொள்ளும் நிறையும் இல்லாத நிலையில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று புலப்படாமல் குழம்புகிறாள்.

     நம்பி தட்டிக் கொண்டு கோகுலின் அறைக்குள் சென்றதும் சற்றைக்கெல்லாம் மணி ஒலித்ததும், அவள் கோகுலின் முன் நின்றதும் கனவு போலிருக்கிறது.

     கோகுல் சிகரெட் புகையை ஊதிக்கொண்டு ஒரு பக்கமாகச் சாய்ந்து அவளை இகழ்ச்சியாகப் பார்க்கிறான். பிறகு இடது கையால் அந்தத் தாளை நீட்டுகிறான்.

     அவள் அதைப் பார்க்காமலே, “சார்... ப்ளீஸ்... ஐ... ஆம்... சாரி... எக்ஸ்க்யூஸ் மி...” என்ற சொற்களைப் போட்டுக் குழப்புகிறாள்.

     “விளக்கம் தேவையில்லை” என்று ஆங்கிலத்தில் சுருக்கமாக அவன் முற்றுப்புள்ளி வைக்கிறான்.

     அந்தக் காகிதத்தைப் பார்க்கக்கூட அவளுக்குத் தெம்பில்லை. பூங்கொடிகள், பசிய தோரணங்கள் போன்ற இலைகள்! செம்மண் சரளையிட்ட பாதை, எல்லாமே உண்மையாகத் தோன்றவில்லை. நம்பி இன்னும் ஏதோ திட்டிக் கொண்டிருக்கிறான். அவனைக் காண்கையில் வெறுப்பு பந்தாகத் திரண்டு வருகிறது. ஜானிராஜ் எதுவுமே நடக்காதது போல் ‘பிளா’னில் கவனமாக இருக்கிறார்.

     “சார்...”

     “என்னம்மா?”

     “ஆர்டர் குடுத்திட்டாங்க சார். உங்க டாட்டர் போலன்னீங்க, நீங்க... ஒண்ணுமே செய்ய முடியாதா சார்?”

     “...என்னம்மா பண்ணட்டும்? நெளிவு சுளிவே தெரியாம இருக்கியே நீ?... உம்? நம்பி சாரைக் கேளு. செய்வாரு...”

     “அவனையா?...” நம்பி செவிகளில் விழுந்தும் அசையவில்லை.

     “இந்தக் காலத்திலே பொண்ணுக எப்பிடி எப்பிடியோ லஞ்சம் கொடுக்கத் தயாராயிருக்குங்க. ம்... நீ இல்லேன்னா, இன்னொண்ணு, இங்கென்ன உனக்கு யூனியன் இருக்கா? சர்வீஸ் கணக்கு, அது இதுன்னு எதுனாலும் உண்டா? இப்ப எனக்குக் கூடத்தான், எதோ வேலை இருக்கும் வரையிலும் அவங்களைத் திருப்தி பண்ணிட்டு காலத்தைக் கடத்தணும். போ, போ, உங்க மாமான் முன்ன பெரியவருக்கு வேண்டியவர் வந்தாரே? அவர் மூலமா எதானும் பேசிப் பாரு...”

     சிறு திரியின் வெளிச்சம் தோன்றுகிறது.

     நல்ல வேளையாக துரைமாமன் ஊருக்கு வந்திருக்கிறார். அவரிடம் தனியே இவர்களுடைய முறைகெட்ட செயல்களை வெளியிட்டு, பெரியவரிடம் அறிவிக்க வேண்டும். கோகுலுக்குத் திருமணம் நிச்சயிக்கப் பெற்றிருப்பதாக முன்னொரு நாள் சம்பங்கி தெரிவித்தான். நீலவேணிக் க்ரூப் தியேட்டர் உரிமையாளரின் மகளாம் பெண். அந்தப் பெண் ஒரு நாள் பெரிய காரில் வந்து, ரோஜாத் தொட்டிகள் வாங்கிச் சென்றாள். அப்போதுதான் அந்த விவரத்தை அவன் கூறினான்.

     தனக்கு நியாயம் கிடைக்கும் என்று நம்பும் ஒரே ஆதாரம் தான் அவளுக்கு இப்போது இருக்கிறது.

     நின்ற இடத்திலேயே நின்று வெறிக்கப் பார்த்துக் கொண்டிருப்பவளின் முன் நம்பி ஒரு கவருடன் வருகிறான்.

     “இந்தா, உன் சம்பளம். இதில் கையெழுத்துப் போட்டுவிட்டுப் பெற்றுக்கொள்...”

     தேதி இருபத்தாறு. நூற்று முப்பது ரூபாய்...

     ஏதோ முன் கூட்டியே திட்டமிட்டாற் போலிருக்கிறது.

     கையெழுத்துப் போட்டு உரையை வாங்கிக் கொள்கிறாள்.

     “பணத்தை எண்ணிப் பார்த்துக் கொள்...”

     “நான்... வரேன் சார்?”

     குரல் கம்முகிறது. அவள் கைப்பையுடன் வெளியே வருகிறாள்!

     இடை உணவு நேரம். தொழிற்பேட்டை அலுவலகங்களிலிருந்து கொத்துக் கொத்தாய் வெண்மைகளும் வண்ணங்களும் வெளிப்பட்டு உணவு விடுதிகளில் குழுமுகின்றனர். பஸ் நிறுத்தத்தில் வெயில் சுள்ளென்று உறைக்கிறது.

     கையில் உள்ள சோற்றைக் கடைசியாக அங்கே உண்டிருந்தால் இவ்வளவு வயிற்றெரிச்சல் கனலாகாதாக இருக்கும். பெரிய சாலையில் நின்று, ஓட்டலுக்குச் சென்று அந்தச் சோற்றுடன் இன்னும் ஏதேனும் வாங்கி உண்ணலாம். தனியாக ஓட்டலுக்குச் செல்லக் கூடவா துணிவு இல்லை அவளுக்கு? கசப்பான வீட்டு நினைவை ஒதுக்கிவிட்டு, விடுதலையை எண்ணுகிறாள். கைப்பையில் துழாவி கீதா கொடுத்த முகவரிச் சீட்டைப் பார்க்கிறாள். ‘ப்ரொகிரசிவ் யங் வுமன்ஸ் அசோசியேஷன்’, 37, லட்சுமண் நகர் ஐந்தாம் தெரு, சிகந்தரபாத்... அவளுக்கு இன்று நேர்ந்ததே இயக்கத்தின் தேவையை உறுதியாக்கும் ஒரு அநியாயமல்லவா?

     கையில் நூற்று முப்பது ரூபாயிருக்கிறது. அப்படியே அவள் விலாசத்தைத் தேடிச் சென்று இயக்கத்துக்காகவே தன்னை உரிமையாக்கி விடக் கூடாதா?

     கீதாவுக்கு மாமன் ஓடோடி வந்து ஆயிரமாயிரமாய்ச் செலவழித்து மாப்பிள்ளையைப் பிடித்துப் போவார். அவளை அப்படித் திருப்புவதற்கு யாருமில்லை. ஜானிராஜிடம் அப்பாவைச் சந்திப்பது குறித்துக் கேட்கவேயில்லை. அங்கே தனியாகச் செல்லவே துணிவில்லை. ஆனால் முன்பின் தெரியாத இடத்துக்கு அவள் எப்படிச் செல்வாள்? அறிந்து தெரிந்த அலுவலகத்திலேயே இதுதான் நடக்கிறது என்று ஒரு மறைமுக வழக்காகப் போய்விட, பெண்மையைத் தரங்கெட்ட முறைகளில் சூழ்ச்சி வலைகளில் சிக்க வைக்கிறார்கள். அதுவும், துருக்கர் தலைநகராக ஒரு காலத்தில் இருந்த அந்த ஊரோடு சம்பந்தப்பட்ட இவ்வகைக் கதைகள் அதிகம். ‘இங்கிருந்து பெண்களைக் கடத்திச் சென்று விற்று விடுவார்கள்’ என்று அடுக்களைப் பெண்களின் வம்புப் பேச்சிலேயே அடிபட்டிருக்கும் செய்திகள் அவளுடைய துணிவைத் துண்டிக்கின்றன.

     பஸ்சைக் கண்டதும் ஏறிவிடுகிறாள். பெரிய சாலை நிறுத்தத்தில் இறங்கத் தோன்றவில்லை; ஓட்டலுக்குள் நுழையத் தோன்றவில்லை. வேலி தாண்ட முடியாமல் மனசோடு ஊறி வளர்ந்திருக்கும் கடிவாளம் அத்துணை உறுதி வாய்ந்தது.