7 ஞாயிற்றுக் கிழமைகளில் ரேகா சேலைகளைத் துவைத்துப் போட்டு எண்ணெய் முழுக்காட மணி பத்தடித்துவிடும். மாதக் கடைசியாதலால் அன்று எண்ணெயில்லை. எனவே நீராடிவிட்டு மொட்டை மாடியில் கஞ்சி போட்ட சேலைகளைச் சுருக்கமில்லாமல் காயவைத்துவிட்டு, பனிகால வெயிலில் இதமாகக் கூந்தலைக் கோதிக் கொண்டிருக்கிறாள். கீழே பேச்சுக் குரல் கேட்கிறது. சரசுவதி அத்தையா என்ன? அத்தைமட்டும் வரவில்லை. சிதம்பரம் வந்திருக்கிறான். குச்சிக் காலும் குச்சிக்கையுமாக வயல்வெளியில் நிறுத்தி வைக்கும் பொம்மை போல் உருவம். மச்சுப் படி வாயிலில் குறுக்காக இரு கைகளையும் நீட்டிக் கொண்டு அவளையே பார்க்கிறான். அவன் பள்ளி இறுதி வகுப்பையே எட்டவில்லை. நான்கு முறை முயன்று தோல்வியுற்று, அந்தப் பள்ளிக் கூடத்துக்கே முழுக்குப் போட்டுவிட்டான். அண்ணன் சண்முகம் பள்ளி இறுதி வகுப்பில் முட்டி, அதைக் கடக்காமல் பள்ளியைவிட்டு, கிண்டியில் ஏதோ தொழிற் பயிற்சி பெறுகிறான். அத்தை அவனை ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் இஞ்ஜினீயர் என்றுதான் சொல்லிக் கொள்கிறாள். ரேகாவுக்கு நிறைய வண்மை வரிசைகள் செய்யத் தந்தை சீராக இல்லை என்ற காரணத்தை மனதில் கொண்டு, சிதம்பரத்தைத்தான் அவளோடு இணைத்து அத்தை பேசுகிறாள்; பாட்டியின் ஆவலும், அதுவே. பஞ்சாயத்து அலுவலகத்திலோ, வேறு இடத்திலோ அவனுக்கு ஒரு வேலை வாங்கிக் கொடுத்து வீட்டுடன் வைத்துக் கொள்ளலாம் என்பது பாட்டியின் எண்ணம். அவன் இப்போது ‘பிரைவேட்டாக’ பணம் கட்டிப் பரீட்சை எழுதப் போகிறானாம். ரேகாவை விழுங்கி விடுவதுபோல் பார்ப்பது அவனுடைய வழக்கம். முன் வந்து பேசவோ, சீண்டவோ துணிவு இல்லாதவன். வாயிற்படியை அவன் மறித்துக் கொண்டு நிற்பது அவளுக்குச் சங்கடமாக இருக்கிறது. “வழி விடுங்க. நான் கீழே போகணும்...” “உன்னோடு நான் பேசணும்னு வந்தேன் ரேகா...” அவனுடைய துணியும் நிலையும் அவளுக்கு எதிர்பாராததாக இருந்தாலும் நகைப்பூட்டுவதாக இருக்கிறது. ஆனால் அவள் சிரிக்கவில்லை. “நீ ஏன் என்னுடன் பேசமாட்டேங்கிறே?” “என்ன பேசுவது?” “நீ எந்த ஆபீசில் வேலை செய்யிறேன்னு சொல்லக் கூடாதா?” “எதுக்கு?” “எதுக்குன்னா, நாம் பிரண்ட்சா இருக்கக் கூடாதா?” “எதுக்கு?” அவளுக்குச் சிரிப்பு வருகிறது. “சிரிக்காதே ரேகா, நான்... நான் உன்னை ரொம்பக் காதலிக்கிறேன். உன்னோட ஆபீசுக்குப் போன் பண்ணணும்னு ஆசைப்பட்டு மூணுவாட்டி கூப்பிட்டேன். யாரோ எடுத்து வச்சிட்டாங்க...” அவள் முகம் தீவிரமாகிறது. “அப்படியெல்லாம் பண்ணுவது தப்பு, இனிமேல் பண்ணாதீங்க.” “ஏன் உன்னைத்தானே நான் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறேன்? பண்ணினால் என்ன தப்பு?” அவளுக்கு ஆத்திரமும் வெறுப்பும் ஒருங்கே கூடுகின்றன. “நீங்களாத்தானே தீர்மானம் செஞ்சிருக்கிறீங்க? நான் செய்யலியே?” “நாங்க, இந்த வீட்டில் எல்லாரும் செய்த பிறகு உன்னை யாரு கேட்கப் போறாங்க!...?” “சீ! வழியை விடுங்க இப்ப!” கீழே யாரோ வரும் அடிச்சத்தம் கேட்கிறது. சிதம்பரம் நகர்ந்து கொள்கிறான். அவள் உர்ரென்று படியிறங்கிச் செல்கையில் மாமன் மீது மோதிக்கொள்ள இருந்து விலகிச் செல்கிறாள். அத்தை சரசுவதி முன்னறையில் வெங்காயம் உரித்துக் கொண்டது யார் வீட்டிலோ நிகழ்ந்த சாவுச் சடங்குக்கு யாரோ வந்ததைப் பத்திப் பேசிக் கொண்டு இருக்கிறாள். "கையிலே கழுத்தில ஒண்ணில்ல. எல்லா பாங்கில கெடக்குதாம். வளமைக்காரங்க பொண்ணெடுத்த இடம். அதுவும் பிடியா ஒருத்திவருவ? அந்தச் சின்னப்பொண்ணு இஸ்கூல்ல படிச்சியிருந்திச்சே. பாட்டெல்லாம் கூடப் பாடுதுன்னாளே? அது யாரோ தபலா தட்டுறவனைக் கட்டிட்டுப் போயிட்டுது, இவ சொல்லிக்கிட கலியாணல்ல, ஒண்ணில்ல சம்முகந்தான் சொன்னானே?...” “என்னன்ன நகை செய்திருக்கு? நானூறு சம்பளம் வரும்னானே தொரை?” “இனிதான் செய்யணும். இன்னாமோ சவரன் இறங்கி வருங்கறாங்களே. மெய்யாலுமா?” என்று பாட்டி பேச்சை மாற்றுகிறாள். “எங்கே எறங்குது? இனி ஏறும்னுதான் சம்முகம் சொல்லி போய் மாசம் ரெண்டாயிரத்து முந்நூறுக்கு சேட்டு முழுகுதுன்னு வந்து சொன்னான். முத்தும் பச்சையும் கட்டி ஒரு நெக்லேசும், ஜோடியா கம்மளுமா வாங்கி வச்சிருக்கு. எப்படியும் இரண்டொரு இடம் பார்த்து ஒண்ணு முடிச்சிடம்ணு இருக்கிறோம்.” “ஆமாம், ஞானம் வந்து சொன்னாள் அன்னிக்கு. யாரோ ஒருத்தரு வந்து, அண்ணன் போல ஆள் மாறாட்டம் பண்ணிட்டு ராத்திரி இங்கே வந்தானாமே? மெய்யாலுமா?” “காலம் கெட்டுக்கிடக்கு சரசு. நான் அதனால் தான் வீட்டைவிட்டு அசையாம இருக்கேன். அவன் என்ன அந்தசா, சவுந்தரம்மான்னு கேட்டாங்கறே?” “அதானே! கசாப்பு வேலை செய்யறேன், கெட்டுப் போயிட்டேள். இப்ப வரேன்னு வந்தானாமே?” “அதோடவாக்கா? சிவகாமி, சிவகாமின்னான்! என்ன துணிச்சல் பாரு?” “அதானே கேக்கிறேன்?” “ஞானம் இப்பிடிச் சொன்னான். என்னால நம்ப முடியல. விசாரிச்சிட்டுப் போகலான்னுதான் வந்தேன். அண்ணன் எங்கே இருக்கிறார்னு ஒண்ணுந்தெரியல?” “போன தபா குரு பூசையின் போது நம்ம பெரியப்பா திருப்போரூர்லேந்து வந்தாரு. ‘என்னங்க, இப்படி ஒண்ணுமே தெரியாம இருக்கே. இந்தப் பொண்ணுக்கு ஒரு கலியாணம், காட்சி பண்ண வேணாமா. அவன் இப்படிக் குடும்பத்துக்கு உதவாம போயிட்டானே. எந்தப் பக்கம் இருக்கான்னு எதாச்சும் தெரியுமா. பார்த்துச் சொல்லனும்’னு கேட்டேன். அவரு குறி பார்த்துச் சொன்னா தப்பறதில்ல. உசிருக்கொண்ணும் ஆபத்தில்ல. ஆனா, இவன் குடும்பத்துக்கு ஒட்டட்டானே தவிர, மேலான பிறவி. வடக்கதான் இருக்கான்னு நிச்சயந் தெரியிது. இந்தக் குடும்பத்திலே முன்னே தோன்றின பெரியவர்களால, இவனும் காசாயம் வாங்கிட்டாலும் ஆச்சரியமில்லன்னு சொன்னாரு. அந்தக் காலத்திலே நான்தான் கால்கட்டுப் போட்டா ஒரு பொறுப்பா இருப்பான்னு கட்டிவச்சேன்...” என்று பாட்டி எவ்வளவு அருமையாகப் புனைகிறாள் ஒரு கற்பனையே! குருபூசை புரட்டாசி மாதத்தில் வரும். அந்த சமாதிக்கு முன்னுள்ள லிங்கத்துக்கு அபிடேகம் பூசை எல் லாம் செய்வார்கள். அப்போது உள்ளூரிலிருந்து வரும் இரண்டொரு வயதானவர்களைத் தவிர வேறு யாரும் வந்ததாக அவளுக்கு நினைவில்லை. ஒரு கண்கூசும் உண்மையை மறைக்க மனதறிந்து ஜோடனைகள் செய்து கொள்கிறார்களே, ஏன்? ‘நான்கு பேர்’ மதிக்க வேண்டும் என்ற இலட்சியம் அவ்வளவு உயர்வானதா? சண்முகத்துக்குப் பெண்ணெடுக்க நகை வாங்கியிருப்பதாகச் சொல்வதில் எவ்வளவு உண்மை இருக்குமோ? இந்த அத்தையின் கணவர் ராணுவத் தொடர்பான அலுவலகத்தில் இருந்து, இரண்டாம் உலகப் போரில் வெளிநாடுகளில் சென்று வந்தவர். முதல் தாரத்துக்கு மூன்று பெண்கள். அத்தை இரண்டாந்தாரம். அவளுக்கு உடல் நலிவு கண்டதால் அவள் இருக்கும் போதே இவளை மணந்தார். அவள் இறந்து சில ஆண்டுகளே ஆகின்றன. இந்த அத்தையின் கெட்டிக்காரத் தனத்தைக் குறித்து அவளுடைய தந்தையே அந்நாட்களில் கேலியாகக் கூறிய மொழிகள் ரேகாவுக்கு நெஞ்சில் பதிந்திருக்கின்றன. பக்கத்து வீட்டுக்காரியிடம் “இத இப்ப கொண்டு வந்து தந்து விடுகிறேன்” என்று மாதிரி பார்ப்பதுபோல் தங்க நகையை நைச்சியமாக வாங்கி வந்து, இன்னொரு இடத்தில் அதை வைத்துப் பணம் புரட்டி விடுவாளாம்! முடையாக இருக்கு ஒரு அம்பது ரூபாய் கொடுங்கள், என்று கைமாற்று வாங்கி, இன்னொரு இடத்தில் முழு வட்டிக்கு விட்டுவிடுவாளாம்! போலியான வண்மைக்கான தேவைகளுக்காக எதையும் செய்ய முடியுமா? அத்தையும் சிதம்பரமும் மாலை ஐந்து மணி பஸ்சில் புறப்பட்டுச் செல்கின்றனர். மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை சின்னம்மா, அத்தை, மாமன் எல்லோரும் சினிமாவுக்குச் செல்வதுண்டு. அன்று மாதக் கடைசி. மாமனும் சிற்றப்பனும் மட்டும் போய்விட்டு வருமுன் குழந்தைகளும் தாய்மாரும் உண்டு படுக்கைக்குச் சென்றாயிற்று. பாட்டி கூடத்தில் தண்மதி, ரமணி, சுகுணா, சோமு எல்லோரையும் போட்டுக் கொண்டு படுத்திருக்கிறாள். அம்மாவுக்கு அடுக்களை வேலை ஓயவில்லை. பகல் நேரத்திலும்கூட, அடுப்புக்குச் சுள்ளி ஓடித்தோ, எரிமுட்டை தட்டியோ, கந்தல் துணி தைத்தோ, அவள் பொழுதைக் கழிக்கிறாள். ஒருநாள் கூட, அத்தை சின்னம்மாவைப் போல சிரித்து மகிழ்ந்து அனுபவிப்பதில்லை. கை நிறைய கொடி முந்திரிப்பழமும், லாலா கடை அல்வாவுமாக அவளுடைய தந்தை அவளைத் தேடிவந்த நாட்களில் கூட அவள் சமையல் அடுப்பைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்த சித்திரம் தான் ரேகாவுக்கு மனதில் நிற்கிறது. அவளும் தாயும் தந்தையுமா வெளியே சென்ற மகிழ்ச்சிச் சித்திரமே உருவானதில்லை. அவளை மட்டும் ஒருமுறை பரத நாட்டியக் கச்சேரிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அவள் ஐந்தாம் வகுப்பில் படித்துக் கொண்டிருக்கையில் ஒருமுறை ‘ராஜ ராஜ சோழன்’ நாடகம் பார்க்க அழைத்துச் சென்றார். அவள் பஸ்சில் திரும்பி வரும் போது தூங்கிவிட்டாள். சிற்றப்பாவுக்கும் மாமனுக்கும் சாப்பாடு போட்ட பிறகு, சமையலறையைக் கழுவித் துடைக்கிறாள். கால்களைத் தேய்த்துக் கழுவிக் கொண்டு வெற்றிலை போட்டுக் கொள்கிறாள். பிறகு ஓயாத ஈரத்தினால் விரல்களுக்கு இடையே புண்ணான பகுதிகளில் மருந்து தடவிக் கொண்டு படுக்கைக்கு வருகிறாள். வெகு நாட்கள் வரையிலும் தாயின் மீது காலைப் போட்டுக் கொண்டுதான் ரேகா தூங்குவாள். இப்போது அவளைத் தொடுவதற்குக் கூச்சமாக இருக்கிறது. இந்தச் சில நாட்களில், தந்தை வந்து போன பிறகு, தாய்க்கும் மகளுக்கும் இடையே இருந்த ஒட்டுதலே விட்டுவிட்டாற் போலிருக்கிறது. விளக்கை அணைத்துவிட்டு, சிக்கேறிய தலையணையில் தலையைச் சாய்க்குமுன் பாட்டியின் குரல் கேட்கிறது. “சிவகாமி, படுத்திட்டியா?” “இல்லேத்தே. என்ன வேணும்?” “ஒண்ணில்ல. வெளக்கெண்ணெயிருந்தா கொஞ்சம் கொண்டாந்து கால்ல தேய்க்கிறியா கடுக்குது...” அம்மா அவனுக்குத் தண்ணீர் கொடுக்கிறாள். அதற்குள் தண்மதியின் புகார். “என் தலைகாணியப் புடுங்குகிறான் அத்தே!” “ஏண்டா கழுதை. நீ ஏண்டா இங்கே வரே? உன் படுக்கைக்குப் போ?” “அவளுக்கு மட்டும் முழுத் தலைகாணியோ?” தண்மதி ஒப்பாரி தொடங்கினால் ஓயமாட்டாள். சித்தப்பாவுக்குக் கோபம் வரும். “அது வாய மூடு சிவகாமி. தூங்கிப் போச்சின்னா ஒருத்தரு தலையிலும் தலையாணி இருக்காது!” அம்மா அவளுக்குத் தன் சிக்குத் தலையணையைக் கொண்டு கொடுத்து அமைதியை நிலை நாட்டுகிறாள். பிறகு ஒரு பலகையின்மேல் சேலைத் துண்டைச் சுருட்டி வைத்துப் படுக்கிறாள். “இதென்னம்மா நியாயம்?” என்று பொருமுகிறாள் ரேகா. “நீ வேற குடையாதே. படுத்துத் தூங்கு. காலையில் ஆபீசு இருக்கில்ல?” “நான் நாளைக்கு அப்பாவைப் பார்க்கப் போறேன்.” அவளிடம் இருந்து மறுமொழியே வரவில்லை. “நான் அவர் இருக்கும் இடம் விசாரிச்சிட்டுப் போகப் போறேன்.” “நீ போனாலும் போவே, ஆக்கிப் போடுவே. எங்கே வேனாலும் போய்க்க. மறுக்க இங்கே ரகளையைக் கொண்டு வந்து என்னைக் கொத்தாதே!” “நீ ஏம்மா இப்படி இருக்கே? அப்பா, உன்னால் தான் இப்படி மனசு வெறுத்துப் போனார். நீ அவரைப் புரிஞ்சிட்டு ஒருநாள் கூட நடக்கல...” “நீ புரிஞ்சிட்டு நட, என்னைப் பிடுங்காதே.” “பாட்டி காலமாயிட்டா இந்த வீட்டில் ஒரு மனிசர் உன்னை ஏறெடுத்துப் பார்க்க மாட்டாங்க. தெரிஞ்சிக்க!” “எப்படியும் போறேன். என்னைக் கட்டியவர் சுகமில்ல. வயித்துப் பிறந்ததும் சுகமில்ல. வெளியாருங்ககிட்ட எதை எதிர்பார்க்க முடியும்?” “ஏம்மா உண்மையை ஒப்புக்காம ஒரு போலிக் கனவை நம்பணும்? அப்பாவிடம் உனக்கு இரக்கம்கூட இல்லையா?” “இரக்கப்பட்டு இரக்கப்பட்டுத்தான் இவ்வளவுக்கு வந்திச்சி. குழந்தைக்குன்னு பண்ணிப் போட்ட சங்கிலியையும் வளையலையும் கூடக் கழற்றிக் கொடுத்திட்டு அங்கே போச்சு. இங்கே போச்சுன்னு பொய் சொன்னேன். என் தலையெழுத்து. இப்ப நீ போயி விழறேன்னியே? நீ வயசுப் பொண்ணு, போயிக் குடும்பம் நடத்துற கண்ணியமாவா இருக்காரு? நாலு பேருக்குத் தெரிஞ்சா என்ன ஆகும்? இந்த அத்தை கேட்டப்ப எனக்கு எப்படி முள்ளில விழுந்தாப்பல இருந்தது?” “யாரம்மா அந்த நாலு பேர்?” அவளுடைய ஆத்திரம் இரவின் அமைதியை உறுத்திக் கொண்டு மீறும் குரலாகக் கேட்கிறது. “கத்தாதே கண்ணு. உனக்கு இந்த வயசில நல்லது கெட்டது தெரியாதம்மா...” “என்ன தெரியாது? பளிச்சினு தெரியும் உண்மையை எதிர்த்து ஏத்துக்கத் துணிவில்லாம, நீங்கதான் கண்ணை மூடிக்கிறீங்க! வெளி உலகம் என்னன்னு உங்களுக்கு என்ன தெரியும்? சாவு வீட்டுக்கு வந்தவ கழுத்தில சங்கிலி இருக்குதாங்கறது முக்கியமானது. ஒருத்தரிடமும் தங்கம் தங்கல. போலியைப் போட்டுக்கிட்டு நீங்க வீண் பேச்சுப் பேசுறீங்க!” “பாட்டி முழிச்சுக்கப் போவுது. நீ ஏன் எங்கிட்டப் பிடுங்குறே?” “நான் சிதம்பரத்தையோ, யாரையோ கட்டிக்கப் போறதில்ல. இனிமே இப்படி யாரானும் பேசினா எனக்கு ரொம்பக் கோபம் வரும்.” “பின்ன உனக்குக் கன்னியமா மடம் கட்டிக் காக்க முடியுமா கண்ணு? இதெல்லாம் என்ன வீம்பு? அப்பா இப்படின்னு தெரிஞ்சா எந்த மரியாதைப்பட்டவங்க பொண்ணெடுக்க இங்கே வருவாங்க?” “அம்மா... அப்பாவை நீங்க வேணுன்னே தெரிஞ்சிக்காம நடிச்சிங்களா? எப்படிம்மா இப்படி மனசு வந்தது?” “நீ தெரிஞ்சிட்டே என்னைக் கொத்தாதே. இப்ப போயி அவரைத் தெரிஞ்சிட்டு, இந்த வீட்டின் கண்ணியத்தைக் குறைச்சிட்டா, மத்த பேரு மதிப்பா வாழ் வேணாமா?” ரேகா இந்த உண்மையை ஏற்க இயலாமல் கொதிக்கிறாள். அவளுக்குக் கல்யாணமாக வேண்டும் என்ற காரணத்துக்காகவா கணவனை இன்னொருவர் சாட்டையால் அடிக்கப் பார்த்துக் கொண்டு இருந்தாள்? அந்த வீட்டிலேயே அவளும் மக்கள் பெருக்கக் கருவியாக அத்தை சின்னம்மாவுடன் சேர வேண்டுமா? அத்தையைத் தண்மதி பிறக்கு முன்பே திட்டக் குடும்ப சிகிச்சையைச் செய்து கொள்ள நர்சம்மா யோசனை சொன்னாள். அப்போது மாமனுக்கு உடல் நிலை சரியில்லை. சுவாச கோசங்களில் நீர் சேர்ந்திருந்தது ஊரிலிருந்து வந்த அவருடைய தம்பி திட்டிவிட்டுப் போனார். தண்மதி பிறந்த பிறகு அத்தைக்கும் உருக்கி நோய்க்கான அறிகுறிகள் தோன்றின. “எக்ஸ்ரே" எடுத்தார்கள். இனிமேல் பிரசவம் கூடாது என்று டாக்டரம்மாள் சொன்னாள். ஆனால் தண்மதிக்கும் சுந்தரத்துக்கும் மூன்றாண்டு இடைவெளி நீண்டதுதான் சாதனை. சுந்தரத்துக்குப் பிறகு ஒரு செல்வியும், செல்வியைத் தொடர்ந்து ஒரு கண்ணனும் பிறந்து விட்டார்கள். மருத்துவமனைக்குச் சென்றால் தடை செய்வார்கள் என்று வீட்டிலேயே பேறு காலத்துக்குத் தங்கிவிடுகிறாள்; சுவர் எழுத்துக்களும், பிரசார வாசகங்களும் சிரிப்பூட்டும் தொடர்கள் என்பது தான் இவர்கள் கருத்து. “ஆம்பிளைங்க மனசு வேறெங்கனாலும் போயிட்டா? அவங்க சொல்லுவாங்க!” என்று அத்தை கூறுவாள். ‘சிறிசு’களைப் பாட்டியிடம் தள்ளிவிட்டு இன்னமும் பெரியவர்கள் தம் தம் அறைகளில் புகுந்து கதவைச் சாத்திக் கொள்கின்றனர். சீ... சீ! |