ரேகா - Rekha - ராஜம் கிருஷ்ணன் நூல்கள் - Rajam Krishnan Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com



6

     ஒரு பெருந்தூக்கத்தின் இடையே வானவில்லின் வண்ண ஒளிகளோடு கூடியதொரு அற்புதக் கனவைக் கண்டு விழித்து நல்ல வெளிச்சத்தை நோக்கி நம்பிக்கையும் ஆவலுமாகச் சென்றவனுக்கு, வண்ணங்கள் வெறும் இரத்தமும் நிணமும் இருட்குவையும் தான் என்ற உண்மை புலனாகிறது. ஆசைகளும் நம்பிக்கைகளும் பட்டென்று அறுந்து குழம்புகின்றன. மண்டை குப்பென்று வியர்த்து வெடித்து விடும் போலிருக்கிறது. தலைத் தொப்பியைக் கழற்றித் துடைத்துக் கொள்கிறான். கண்ணீர் விட்டு அழுதால் கரையக் கூடும் என்றதொரு மெழுகுப் பந்து நெஞ்சில் அடைந்து கொண்டு உருகுகிறது. ஆனால் உருக்கத்தில் அனலின் வெம்மை மிகுதியாகிறதே ஒழிய கண்ணீர் வரவில்லை.

     நாய் ஒன்று அவனைத் தெருவில் துரத்துகிறது.

     தனக்கு என்ன நேர்ந்தது என்பதையே அவனால் தெளிவாகச் சிந்தனை செய்ய முடியவில்லை.

     முன்பு அவனுக்குக் கண்கள் திறந்திருந்தாலும் அறியாத குழந்தையாய் வழிமாறி யாருடைய தோளிலோ சென்று தன் பெற்றோரையும் சுற்றத்தையும் மறந்திருந்தான். வழி மாறாட்டத்தை அவன் எப்படியோ உணர்ந்து இன்று திரும்பி வந்தான். சிவகாமி, அவனை ஏற்கவில்லை. அவன் சொந்தமாக மதித்திருந்த சூழலுக்கே அவன் அந்நியமாகி விட்டான். உடம்பில் சட்டையை மீறிக்கொண்டு விழுந்த அடிகள், உள்ளத்தில் வீழ்ந்த அடிக்குமேல் கொடுமையா என்ன? புறத் தோலில், அந்த அடிகள் இரத்தம் கசியும் எரிச்சலைத் தோற்றுவித்ததையே அவன் வெகுநேரம் சென்றபின் தான் உணருகிறான்.

     இந்த நாட்களில் அவன் தனக்குத் தானே மாறி விட்டானா? பார்க்கப் போனால் அவன் யார்?

     அவன் என்பது... யார் ? அவன் செய்த கருமத்தினால் எப்படி மாறுபட்டான்?

     அவனுடைய குழந்தை அவன் பார்த்த மாத்திரத்தில் அறிந்து கொண்டாள். அறிந்து கொண்டு ஓடி வந்தாள். ஆனால், அந்த வீட்டின் இரும்புச் சட்டங்கள் அவளைத் தடுத்துவிட்டன.

     சிவகாமி எத்தனை உருமாறினாலும் அவனால் கண்டுபிடிக்க முடியும். அவன் தாயை, அந்த வீட்டை, ஊரை, உடன் பிறந்தோரை, மக்களை, ஏன் அந்தப் பாதையின் மண்தறிகள் கூட அவனுக்கு மாறாதவை. எனவே அவன் மட்டும் எப்படி அந்நியமானான்?

     கால்வாய் பாலத்தில் நின்று கண்ணீர் வடிய மவுனமாக அவன் அழுகிறான். பிறகு பஸ் நிற்கும் இடத்துக்கு வருகிறான். குழல் விளக்குசந்தி இப்போது வெளிச்சத்தைப் பொழிகிறது. முன்பு கூரை கட்டிடமான கிருஷ்ண விலாஸ் ஓட்டலாக இருந்தது. அதே நாணு ஐயர் இப்போது பளபளக்கும் சட்டையும், கைக்கடியாரமுமாக கல்லாவில் உட்கார்ந்திருக்கிறார். குழல் விளக்கும் ஆடம்பரமும் கசகசப்புமாக அது “ராஜேசுவரி லாட்ஜ்” என்ற பெயருடன் விளங்குகிறது. ஒரு பக்கம் தேநீர்க் கடை; வெற்றிலைப்பாக்குக் கடை சைக்கிள் கடை.

     ஒன்றுமே மாறிவிடவில்லை. அதிகமான பத்திரிகை போஸ்டர்கள் ஆடுகின்றன. இந்த வழியாக அவன் பள்ளிச் சென்றிருக்கிறான். இது வரையிலும் சைக்கிளில் ஏறி வந்து, பின்னே வரும் தம்பியிடம் சைக்கிளைக் கொடுத்துவிட்டு அவன் பஸ்சில் ஏறிக் கல்லூரிக்குச் சென்றிருக்கிறான். பின்னே தெரியும் மைதானத்தில் அவன் நண்பர்களுடன் கிரிக்கெட் ஆடியிருக்கிறான். பிள்ளையார் கோயிலுக்குப் பின்னே உள்ள ஆலமரத்தில் ஒரு ஆலம்பழத்தைக் கொத்திய கிளியின் மூக்கை வியந்து வியந்து நின்று தப்பும் தவறுமாக ஒரு கவிதை இயற்றி அதைச் சிவகாமியிடம் படித்துக்காட்ட முயன்று அவள் ரசனையில் தோல்வியுற்று அதைக் கிழித்து எறிந்தது நினைவுக்கு வருகிறது. அந்நாளில் அந்த ஊர் லோகல் பன்ட் ஆஸ்பத்திரியில் டாக்டராகப் பணியாற்ற வந்த டாக்டர் பூவராகன், வக்கீல் சிவானந்தம் முதலியவர்களை இழுத்துப் போட்டு நண்பர் கலையரங்கம் நிறுவினான். அதற்காக இடம் கேட்டு டூரிங் கொட்டகை நாயுடுவின் வீட்டுக்குச் சென்றபோது தான் முதன் முதலாக அவனுடைய உள்ளத்தில் பெண்ணைப் பற்றிய மென்மையான உணர்வுகள் அரும்பின. அப்போது அவன் அந்நாளைய இன்டர்மீடியட் படிக்கச் சேர்ந்திருந்தான். அவன் வாயிலில் சிங்காரத்தைத் தேடி வந்து அழைத்தபோது, வாயிலை மறைத்த குரோஷே பூலேசுத் திரைக்கு அப்பால் இருந்து, யாரோ வந்தார்கள். இரண்டு பாதங்கள் கீழே தெரிந்தன. இரண்டு புறாக்கள் நடந்து சென்றாற் போலிருந்தது. அந்த அழகை அதற்குமுன் அவன் உணர்ந்ததில்லை. அந்தப் பாதங்களைக் கைகளில் எடுத்து அதன் மென்மையை வருட வேண்டும் போன்றதோர் வேட்கை அப்போது தோன்றியது. அந்தப் பாதங்களுக்கு உரியவளைப் பற்றி அவன் சிந்தனை செய்கையில் திரையைத் தூக்கிக் கொண்டு சிங்காரம்தான் வந்தான். பிறகுதான் அவள் சிங்காரத்தின் சின்னம்மா என்று புரியவந்தது. சிவகாமி பெற்றோரை இழந்து அந்த வீட்டுச் சமயலறைக்கு அப்போதே வந்திருந்தாள். அவளைத் தனக்குக் கட்டப் போகிறார்கள் என்பதும் தெரிந்த செய்திதான். அன்று தான் அவன் சிவகாமியின் பாதங்களைப் பார்த்தான். சிவகாமி சிறு கூடான வடிவினள். குறுகுறுவென்று அந் நாட்களில் தேனீயைப் போல் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருப்பாள். அவனைக் கண்டாலே நாணி உள்ளே புகுந்து கொள்வாள். அவளுடைய சிற்றடிகளை மலரைப் போல் வைத்துக் கொள்ள வேண்டும் என்பது அவனுக்கு ஆசை.

     “காலில் ஏன் இப்படி அழுக்கை வச்சிட்டிருக்கே. தேச்சுக் குளிக்கறதில்ல? மொழு மொழுன்னு இருக்க வேணாம்!” என்று கடிந்திருக்கிறான்.

     “காலில் அழுக்கு ஒட்டாம இருக்குமாக்கும் ! நீங்க ஒண்ணு!” என்று அவள் தன் கால்களை அவன் பார்க்கக்கூடச் சம்மதியாமல் மூடிக் கொள்வாள்.

     வாழ்வின் சில கணங்களில் சில அற்பங்களும் மாபெரும் முக்யத்துவத்தை உருவாக்குகின்றன. அது அந்தப் பருவம். அந்த முக்யத்துவங்களை அவன் விழைத்தாலும் சமைத்துக் கொள்ள முடியவில்லை. அவனுடைய எண்ணங்களும் ஆசைகளும் வரையற்ற பெரு வெளில கட்டவிழ்த்த மகரந்தமாய் விரியத் துடித்தன. ஆனால் அந்த வீடு, அவனுக்கென்ற திட்டவட்டங்களை ஏற்கெனவே வரையறுத்து அவனை அதற்குள் சிறை வைத்தது.

     விடுதலை வாழ்வு தடம்புரளாமல் இருக்க ஒரு முடிச்சு; பிறகு அது அவிழாமல் இருக்க இன்னொரு முடிச்சு.

     மேலும் மேலும் சிக்கல்.

     யாரோ தன்னைத் தொட்டு அழைக்கிறார்கள்.

     மின்னல் எண்ணமாய் வீட்டிலிருந்து யாரோ வந்திருக்கிறார் என்றுடல் சிலிர்க்கத் திரும்புகிறான்.

     சைக்கிள் கடை ராதா.

     “என்னங்க, கடைசி பஸ் இதான். பஸ்சுக்குத் தானே நிக்கிறீங்க? எங்கிட்டீங்களோன்று பார்த்தேன்..."

     “ஓ, பஸ்சா? ஆமாம்... ஆமாம். நல்லவேளை, சொன்னே...” என்று வாரிச் சுருட்டிக்கொண்டு பஸ்சில் ஏறப்போகிறான்.

     மறுநாள் அவன் வழக்கம்போல் வேலைக்குச் சென்றாலும் அறிவைக் கூரையிடும் மதுவைத் தொடாமல் போகிறான்.

     வெண்மையான உட்புறப் பகுதியைப்பற்றி கழுத்தின் இரத்த நாளத்தை அறுக்கையில் உடல் முழுதும் குப்பென்று வியர்க்கக் கை துவள்கிறது. “இன்னா பாய், கைநடுங்குது? பீமாரா?” என்று விலங்கை மறுபுறம் பற்றியிருந்தவன் கேட்டான். வரிசையாக இரத்தம் பெருக்கு வீச்சுக்களும், தோலை உரித்து நிணத்தை மருத்துவரிடம் காட்டும் சடங்குகளும், நிணத்தின் வாடைகளும் அவனுக்குத் திடீரென்று மறுபடியும் அந்நியமாய் விட்டன. அவன் அந்நேரத்தில் உடல் நலமின்றி வீடு திரும்பியதே இல்லை. மாலை நேரங்களில் இலேசான தலை நோவும் உடல் சூடும் கண்டு படுத்த நாட்கள் உண்டு. வள்ளி மருந்தும் மாத்திரையும் வாங்கி வந்து கால் பிடித்துப் பணிபுரிந்திருக்கிறாள்.

     தன்னுடைய பாசத்தையும் பரிவையும் ஏற்காமல் வெருட்டித் தள்ளியவர்களிடம் குத்துப்பட்ட உணர்வு ஆத்திரமாகக் கிளர்ந்தெழுகிறது. வள்ளியைக் கோயில் முன் சென்று ஒரு மஞ்சள் கயிற்றைக் கட்டி, அவளுடன் அதே வீட்டின் மூன் காரில் சென்று இறங்கினால், சிவகாமி வருந்துவாளா? வள்ளி... நெற்றியில் குங்குமம் கிடையாது.

     அவளுடைய மென்மையான அழகுகளையோ, இயல்புகளையோ அவன் சிந்தித்ததே கிடையாது. மூர்க்கமான, அசுரத்தனமான வெறி அவளுடைய பெண்மையின் அந்தரங்கங்களை அழித்திருக்கிறது. ஒரு அசுரத்தனமான வன்செயல் புரிய மதுவின் பழக்கத்துக்கு அடியானான். அந்த மயக்கம் உடலின் தேவைகளைத் தீர்த்துக் கொள்ள உதவியாக இருந்திருக்கிறது.

     அவள் நெற்றியில் குங்குமம் தொட்டு, கூந்தலில் பூச்சூட்டி அவளுடைய உடலை மென்மையான பட்டுக்களால் போர்த்தி அவளை போற்றுவான். அம்புலியையும் அவன் சேர்த்துக் கொண்டு அவளை இன்னொரு மகவுக்குத் தாயாக்கி மகிழ்வான்.

     இந்தக் கொலைத் தொழிலை விட்டுவிட்டு, வேறு தொழிலுக்கு போய்விட முடியும். எல்லப்பனுக்கு எத்தனையோ செல்வாக்கு. முதலில் இவன் படிப்புத் தெரிந்தாலே போதும்...

     கற்பனைகள் இதமாக இருக்கிறது.

     அவனை நேரமில்லாத நேரத்தில் கண்டதும் முத்தம்மா விரைந்து வருகிறாள்.

     “இன்னா தம்பி, உடம்புக்கு சுகமில்லையா? ராத்திரி பயாஸ் கோப் போயி நேரம் கழிச்சி வந்தேன்னு எல்லப்பன் சொன்னான். ஏன் எப்படியோ பாக்குறே? தலை நோவா?”

     “ஆயா, நீ உள்ளாற வா, உங்கிட்ட ஒரு முக்கிய சமாசாரம் பேசணும். வள்ளி எங்கே?”

     “வள்ளிதான் கோட்டர்சில வேலை செய்யப் போவுதே? இனி தான் வரும். இன்னா சங்கதி?”

     அவன் கதவைத் திறந்து கொண்டு செல்கிறான்.

     “இங்க வா...”

     “இதென்னடி...” என்று முத்தம்மா தோளைப் போர்த்திக்கொண்டு சுருங்கிய கீறல் முகத்தில் கூர்மையான விழிகளுடன் அவனை நோக்கி நிற்கிறாள். ஒரு கிலோ இறைச்சியும், மாசம் இருநூறு ரூபாய்க்குக் குறையாத வருமானமும் போய்விடுமோ என்ற இழப்பின் அச்சம் இலேசாகப் படர்ந்தது.

     “நீங்க என்னை ரொம்பப் பிரியமாப் பாத்திட்டீங்க. என்னை வளர்த்த தாய் கூட எம்மேல இப்படிப் பரிவு காட்டிருக்காங்களான்னு நினைச்சிக்கிறேம்மா...”

     “அது கெடக்குது போங்க. அப்படி என்ன பெரமாதம் செஞ்சிட்டோம்? எதோ மக்கமனிசங்க இல்லாம வந்து கெடந்தா அதுக்குனு சொம்மா விட்டுடு வாங்களா?”

     “இல்லேயா, எனக்குக் கலியாணமாகி ஒரு பொண்ணு இருக்கு. பொண்ணுக்குக் கலியாணம் கட்டும் வயசு. நான் பி. ஏ. வரை படிச்சவன் ஆயா!”

     இந்தப் பிடிப்பு கை நழுவிப் போவதைத் தவிர்க்க இயலாது என்று நம்பிக்கை இழந்தாற்போல் அவள் முகத்தில் கை வைத்துக் கொண்டு, “அப்பிடியா?” என்று நிற்கிறாள்.

     “நாலு நா முன்ன மகளைப் பார்த்தேன்...”

     “அது வூட்டுக்குவான்னு கூட்டிச்சா? அதான் நேத்து போனியா?”

     “இல்ல, அதுக்கு என்ன அடையாளம் தெரியாது. நான் நல்ல குலக் குடும்பத்தில் பிறந்தவன். எதோ ஒரு காலக்கோளாறு. பி. ஏ. வரை படிச்சிருந்தும் பொண்சாதி கிட்ட சண்டை போட்டிட்டு இப்படி ஒரு தொழில்ல வந்து மாட்டிக்கிட்டேன். ஒரு கெட்ட கனா மாதிரி எல்லாம் கிட்டேன்...”

     “ஆங்...!”

     “நான் வள்ளிப் பொண்ணுகிட்டக் கூடச் சொல்லுவேன். நல்ல விசராயிருக்காரு, ஒரு வம்பு தும்பு போறதில்ல. என்னிக்கின்னாலும் கண்ணாலங்கட்டிட்டு நெல்லாயிருக்கனம். இந்தப் பயலையும் வச்சிட்டுக்கறே. எதோ ஞாபகமா பாங்கில எழுதிவச்சிடக் கேளுன்னு சொல்தான். பின்னென்ன தம்பி? அதுக்கு ஒரு நாதி வேணாம்? செத்தவன் செத்துட்டான். உங்களப் போல ஒத்தவங்க எதானும் செஞ்சாத்தானே; அதுக்கு நாமதானே வாய்வுட்டுக் கேக்கணும்? தட்டிலதானே சோறும் கறியும் வந்துவுழுமா? அதும் ஆக்கி கூட்டி வைக்கனுமில்ல!”

     “அதான் ஆயா, சொல்ல வந்தேன். எனக்கே இப்ப நினைச்சிப் பாத்தா திக்குங்குது. எங்கையா, தாய், எல்லாம் இன்னிக்கும் சுத்த சைவம். பிராமணாளுக்கு மேல சுத்தமா ஆசாரமாயிருப்பவங்க. என்னை நேத்து வீட்டிலே சேத்துக்க மாட்டேன்னுட்டாங்க...”

     “ஆங்...! நீங்கன்ன திருடினீங்களா, மோசம் செஞ்சீங்களா? இதுக்குப் போயி ஏன் வருத்தப்படுறீங்க தம்பி?” முத்தம்மாளின் ஆறுதல் அவனுக்கு ஆறுதலாக இருக்கிறது.

     “அதான் ஆயா, வள்ளியை நானே கலியாணம் செஞ்சிக்கலாம்னு நினைக்கிறேன். இந்த வேலையை வுட்டுட்டு, ரோட்டோரமா ஒரு கடை எதினாலும் வச்சு பிழைக்கலான்னு தோணுது. ஆயா என்னைத் துரத்தினவங்க முன்ன நான் அவங்களைச் சட்டை செய்யலேன்னு காட்ட வாழனும். நான் வாழனும் ஆயா!”

     “இதென்னாடி இது!” என்று முத்தம்மா மறுபடியும் கன்னத்தில் கையை வைத்துக் கொள்கிறாள்.

     “தம்பீ, உங்களைப் போல ஒசந்த குணம் யாருக்கு வரும்? ஆனா, வள்ளிக்கு மச்சான், மூத்தாரு அல்லாம் நாட்டுப்புறத்திலே இருக்காங்க. காடு கயணி எல்லாம் இருக்கு. போன வருசம் கூட, “இங்கே ஏண்டி எச்சிக் கழுவும் வேலை செய்யப் போகணும். படியரிசி அஞ்ச ரூபாகிறது. அரைவயிறு கஞ்சி குடிக்க முடியல. ஊரு நாட்டோடு வந்திடு”ன்னு கூப்பிட்டாங்க. இதான் நாட்டுப்புறம் போமாட்டேன்னுது. கலியாணம்னு நீங்க நல்ல மனசோடு சொன்னாலும். ஊரு நாட்டில ஒத்துக் குவாங்களா? நாக்கு மேல பல்லு போட்டு நாலும் பேசுவாங்க. புள்ளைக்கு அப்பன் சொத்தில் ஒண்ணும் கொடுக்க மாட்டாங்க. உங்களையும் எதோ நூறு இரு நூறு குடுங்க. நீரடிச்சி நீர் விலகுங்களா? புரிஞ்சிட்டதுன்னு சொன்னீங்க. அதுக்குக் கண்ணாலம் காச் சின்னு வந்தாளே கூடிப்பாங்க தம்பி, வருத்தப் படாதீங்க..."

     முத்தம்மாவின் பட்டுக்கொள்ளாத ஆனால் கத்தரித்துக் கொள்ளுமுன் அவனிடம் நினைவுறுத்துவதை நினைவூட்டும் சாதுரியத்தைப் புரிந்து கொள்ளும் தெளிவு அவனிடம் இல்லை. எனினும், வள்ளியைக் கல்யாணம் செய்து கொள்வது சாத்தியமில்லை என்ற உண்மை ஏமாற்றத்துக்குள்ளாக்குகிறது.

     அவள் அவன் தெளிவு கெட்ட நிலையில் இருக்கையில், உட் வேட்கையின் இரையாகத் தானே வரும் போது, குடும்ப பந்தமும் தாரமும் சொத்தும் குறுக்கே நிற்கவில்லை. ஆனால், கண்ணியமானவனாக இதை வளுவாக்க அவன் முற்படும் போது கவுரவங்கள் குறுக்கிடுகின்றன!

     அவனுக்கு விசித்திரமாக இருக்கிறது.






புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
151
152
153
154
155
156
157
158
159
160
161
162
163
164
165
166
167
168
169
170
171
172
173
174
175
176
177
178
179
180
181
182
183
184
185
186
187
188
189
190
191
192
193
194
195
196
197
198
199
200
201
202
203
204
205
206
207
208
209
210
211
212
213
214
215
216
217
218
219
220
221
222
223
224
225
226
227
228
229
230
231
232
233
234
235
236
237
238
239
240
240
241
242
243
244
245
246
247