15

     காலையில் வழக்கம் போல் நீராடி முடி சீவிப் பின்னலிட்டுக் கொண்டு அலுவலகத்துக்கு ரேகா ஆயத்தமாகிறாள். அந்த உத்தரவின் வாசகத்தை மாற்றிக் கொண்டு வரப்போகிறாள்.

     சிற்றப்பனும் அந்த உத்தரவை மாற்ற வேண்டியது குறித்து வலியுறுத்தி விட்டார். கைப்பையில் டிபன் சம்புடமில்லை.

     “எப்படி எப்படிக் கேட்கணுமோ அப்படிக் கேட்டுக்ககண்ணு. நிதானமாயிரு. பயப்படாதே, பதட்டப்படாதே!” என்று தாய் அறிவுரை நல்குகிறாள்.

     “தொரை எப்படியும் வராம போக மாட்டான். நல்லபடியா வாசகத்தை எழுதிக்கினு வா. வேற நல்ல இடமா வேலை எதுனாலும் கிடைக்காம போகாது. நமக்கு ஆண்டவன் துணையிருக்கு. எல்லாம் நல்லா நடக்கட்டும். சாமிக்கு அபிசேகம் பூசை எல்லாம் வைக்கிறோம்...” என்று பாட்டி அவள் நெற்றியில் திருநீறு வைக்கிறாள்.

     ரேகா பஸ் ஏறி அலுவலகத்துக்கு வருகிறாள். முதல் நாள் அவ்வழியில் வரும்போது மீண்டும் அங்கே வருவதாக அவளுக்கு எண்ணம் கூட இல்லை. இன்று வருகிறாள்.

     ஒருகால் எல்லாம் நன்மைக்குத்தானோ? இன்று மன்மோசன் அங்கு வந்திருக்கலாம். அவள் இதே உத்தரவை அவரிடம் காட்டி, உண்மையை விள்ள ஒரு சந்தர்ப்பம் கிடைக்கலாம். அவர் பையனுக்கும் நம்பிக்கும் தண்டனை கொடுக்கக்கூடும். அவளுக்கு நிறையப் பெண்கள் வேலை செய்யும் அண்ணாசாலை அலுவலகத்தில் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கலாம் அல்லவா? நம்பிக்கையின் ஒளிதான் எவ்வளவு இதமாக இருக்கிறது? யாரும் வருவதற்கு முன் அலுவலகத்துக்கு அவள் செல்வதனால் பயன் இல்லை. எனவே, தொழிற்பேட்டைக்கு வெளியே சாலையிலேயே அவள் பஸ்சை விட்டு இறங்கி விடுகிறாள். பிறகு மெதுவாக நடந்து செல்கிறாள். தொழிற்பேட்டைக் கல்லூரி மாணவர் கிளர்ச்சியினால் இரண்டு மாதங்களாக மூடிக் கிடக்கிறது. அலுவலகப் பெண்கள் பலர் சாலையில் விரைகின்றனர். முதுகு தெரிய, இடை தெரிய, கிழிந்துவிடும் நிலையில் அச்சுறுத்த, சேலைகள், இரவிக்கைகள் அணிந்த பெண்கள், அலுவலகங்களின் மேலாளர் எல்லோரும் அநேகமாக அழகிய பெண்களையே அந்தரங்கச் செயலாளராக வைத்துக் கொள்கின்றனர். இந்தப் பெண்களின் இயல்பான உணர்வுகளுக்கு என்னவிதமான பத்திரம் இருக்கக்கூடும்? கரைகளே வேண்டாம் என்று வரையறுத்த பின்னர் அச்சம் நாணம் இரண்டும் கிடையாதோ? ஒருகால் இவர்களுடைய வீடுகளிலும் கரைகளைப் பற்றி வற்புறுத்த மாட்டார்களாக இருக்கும். அதனால் அவளைப் போன்று அஞ்சி நடுங்கினாலும் தன்மானம் என்ற ஒரு உணர்வுடன் போராட வேண்டிய அவசியம் இருக்காது.

     அவளைக் கடந்து கோகுலின் கார் செல்கிறது. நம்பி காரில் இருப்பதாகத் தெரியவில்லை.

     நம்பிதான் மிகவும் துணிந்த மோசக்காரன். கோகுல் மட்டும் இருந்தால் உத்தரவை மாற்றுவது கடினமல்ல என்று நினைத்துக் கொள்கிறாள்.

     அலுவலகத்து வாயிலில் ஜானிராஜின் ஸ்கூட்டர் இல்லை.

     அவள் பதற்றத்தைத் தவிர்த்துக் கொண்டு உள்ளே அடி வைக்கிறாள். ஜானிராஜின் அறைக்கதவு பூட்டியிருக்கிறது.

     நம்பி வந்திருக்கிறான். உள்ளே டைப் அடிக்கும் ஓசை கேட்கிறது.

     வேறு வழியில்லை. அவள் விரல் முட்டியால் கதவைத் தட்டுகிறாள்.

     கதவைத் திறப்பவள் ஒரு பெண்.

     கண்கள் அகல, குரல் எழாமல் அவள் பார்க்கிறாள்.

     “நான் மிஸ் மங்களா, புது லேடி அசிஸ்டென்ட். நீங்கள் யாரைப் பார்க்கணும்?”

     ரேகா உணர்ச்சியை விழுங்கிக் கொள்கிறாள்.

     அதற்குள் ஒரு பெண் தன்னுடைய இடத்துக்கு வந்து இருப்பாள் என்பதை அவளால் கற்பனை கூடச் செய்ய முடியவில்லை.

     “நான்... ரேகா, மிஸ்டர் நம்பி இருக்கிறாரா?”

     “என்ன விஷயம், கேள், மங்கள்...”      நம்பி இவளுக்கு வேலை உத்தரவுதான் தட்டுகிறானோ?      “குட்மார்னிங் சார்... நான்தான் ரேகா.”

     “வா, வா, என்ன விஷயம்? எங்கே வந்தே இப்படி?”

     அவன் நிமிர்ந்து பார்க்கிறான்.

     அவள் கைப்பையிலிருந்து அந்த உத்தரவை எடுத்துக் காட்டுகிறாள்.

     “இந்த வார்த்தையை மாத்தி, டெர்மினேட்டட்னு அடிச்சிக் கொடுங்க சார்! எங்க வீட்ல திட்டறாங்க...”

     அவன் அதை வாங்கிப் பார்க்கிறான்.

     “அதை மட்டும் மாத்தி எப்படி அடிக்க முடியும்? வேறதான் அடிக்கணும். இரு கேட்டிட்டு வரேன். அப்புறம் நீயே வந்து சொல்லு!”

     அவன் கோகுலின் அறைக்குச் செல்கிறான்.

     அவள் மங்களாவைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.

     முடியை அழகாக வாரிப் பெரிய கொண்டை போட்டுக் கொண்டு அடியில் ஓர் ரோஜாவைச் செருகிக் கொண்டு இருக்கிறாள். பெரிய பெரிய பூக்கள் அச்சிட்ட ரோஸ் நைலக்ஸ். இசைவான இரண்டுக்கு இரண்டு ரவிக்கையின் கழுத்து இரு புறங்களிலும் ஆழ்ந்து குழிந்து செல்கிறது.

     ஒருகால் இவள் பட்டதாரியாக இருக்கக் கூடுமோ!

     நம்பியைப் பற்றி இவளிடம் எச்சரித்து வைக்கலாம் என்று தோன்றுகிறது. முதல் நாளே “மங்கள்!” என்று கூப்பிட்டு உறவு கொண்டாடுகிறான்.

     “நம்பி சாரை முன்பே தெரியுமா உங்களுக்கு?” அவள் உடனே ஒரு கிண்கிணிச் சிரிப்புச் சிரிக்கிறாள்.

     “அவர் அரைச் சராய் போட்ட நாளிலிருந்து தெரியும். நாங்கள் ஒரே கட்டிடத்தில் இருக்கிறோம்” என்று அவள் ஆங்கிலத்தில் கூறிய வாசகம், “நாங்கள் ஒன்றாய் வாழ்கிறோம்” என்ற பொருளையும் கொடுப்பதாக இருக்கிறது.

     “மங்கள்! மானேஜர் கூப்பிடுகிறார், போ!”

     அவள் எழுந்து அந்த அறைக்குள் செல்கையில் நம்பி மாற்று வாசகங்களை அடிக்கிறான்.

     “வீட்டில கோச்சிட்டாங்களா, ரேக்?”

     அவள் பேசவில்லை.

     “அநாவசியமா நீ உன் தலையில் மண்ணை வாரிப் போட்டிட்டே. இந்த மங்கள் பாத்தியா? வெறும் ஒரு புடவை, பவுடர், கூலிங்கிளாஸ் இதுக்கெல்லாம் ஆசைப்பட்டு எந்த உரிமையையும் விட்டுக் கொடுக்கப் பொண்ணுங்க இன்னிக்குத் தயாராயிருக்காங்க. ப்ரீடம் வேணுன்னு துணிஞ்சவங்க எல்லா எக்ஸ்ட்ரீமுக்கும் போறாங்க. நீ இப்படி பத்தாம் பசலியாயிருந்து கெடுத்துகிட்டே. இனிமே என்ன செய்யப் போறே?...”

     அவள் பேசவில்லை.

     “கோபம் போலிருக்கு. அப்படியா? ரேக், எனக்கு ரொம்ப வருத்தமாயிருக்கு...”

     அவன் கை அவள் முகத்தைத் தொட வருகிறது.

     “ஹம்...!” என்ற உறுமலுடன் அவள் பின்னே நகருகிறாள்.

     “சரிதானா பாரு!”

     திருத்தத்துக்குக் கோகுலிடம் நம்பியே கையொப்பம் வாங்கி வந்து அவளிடம் கொடுக்கிறான். ரேகா மீண்டும் கோகுலைப் பார்க்க வேண்டாம். சரேலென்று அவளுடைய இதழ்களில் இகழ்ச்சி தோன்றும் நகை மின்னி மறைகிறது. இந்த மனிதர்களை ரேகா புல்லுக்கும் மதிக்கவில்லை. அவர்களுடைய அந்தத் தாளை, மாமனும் சிற்றப்பனும் பெரிதாக மதித்தார்கள். ‘டெர்மினேடட்’ என்றாலும் ‘டிஸ்மிஸ்ட்’ என்றாலும் அவளைப் பொறுத்தவரையில் ஒன்றுதான். அவளுக்குப் பெரிதாக வாய்விட்டுச் சிரிக்கத் தோன்றுகிறது. எனவே நம்பியின் கண் முன்பே அந்தத் தாளைப் பர்ரென்று கிழிக்கிறாள். பிறகு சுக்குநூறாகக் கிழித்துப் பறக்க விட்டு விட்டு, அவன் திகைத்து நிற்கையில் விருவிரென்று நடந்து வருகிறாள். அப்போது ஸ்கூட்டரில் வரும் ஜானிராஜ் அவளைக் கண்டதும் சட்டென்று நிறுத்திவிட்டு இறங்குகிறார்.

     “என்னம்மா ரேகா?”

     “வீட்டில் கோபிச்சிட்டாங்க, ‘டிஸ்மிஸ்ட்’னு வாங்கிட்டியே, ‘டெர்மினேடட்’னு வாங்கிட்டு வான்னாங்க.”

     “கொடுத்தாரா?”

     “ம், கொடுத்தார். அங்கேயே வாங்கிக் கிழிச்சி எறிஞ்சிட்டேன்.” ஜானிராஜ் திடுக்கிட்டுப் பார்க்கிறார்.

     “சார்! எங்கப்பா... அட்ரஸ் தரிங்களா? சொல்றீங்களா? நானே போய்ப் பார்க்கிறனே...”

     ஜானிராஜ் சங்கடத்துடன் ‘ஹெல்மெட்’டைக் கையில் எடுத்துக் கொண்டு நெற்றியைத் துடைத்துக் கொள்கிறார்.

     “இப்ப அங்கேருந்துதான் வரேன்மா. அவரு பெங்களூர் பக்கம் போயிட்டாராம். மூணு நாளாச்சாம். யாரிட்டியும் விலாசம் ஏதும் சொல்லலியாம். எனக்கு வருத்தமாயிருக்கு ரேகா...”

     சில கணங்கள் அவள் ஊமையாக நிற்கிறாள்.

     “அன்னிக்கு அவர் கண்டிப்பா அழைச்சிட்டு வர வேண்டாம்னு சொன்னதால நான் தயங்கிட்டேன். இப்ப வருத்தமாயிருக்கு. ஆனா, டோன்ட் லூஸ் ஹார்ட், காட் இஸ் கிரேட். உனக்கு எப்ப என்ன உதவி வேணுமோ எங்கிட்டச் சொல்லும்மா...” கட்டுக்கடங்காமல் பெருகும் நீரை அவள் துடைத்துக் கொள்கிறாள்.

     “ஓ... நோ, நோ சைல்ட்... அழுவாதே. உனக்கு வேலை கிடைக்கும். இடையிலே டைப்ரைட்டிங் எதினாலும் படி. ஐவில் ஹெல்ப் யூ. நிச்சயமா...”

     “இல்லை சார். உங்களுக்கு ரொம்ப தாங்க்ஸ் சார்... நான் வரேன்...”

     ஜானிராஜ் வண்டியிலேறிக் கொள்கிறார். அவள் நடக்கிறாள். பஸ் நிறுத்தத்தில் யாருமேயில்லை.

     தன்னுடைய வாழ்வே ஒரு திருப்பு முனையில் நிற்பது போலிருக்கிறது.

     கரைகளை மீறினால் புதுமையைச் சமைக்க வேண்டும். அல்லது எதிர்காலம் இல்லாத இருளில் தேயும் அச்சாகச் சுழல வேண்டும். கிளர்ச்சியும் வீழ்ச்சியும் நொடியில் நிகழ்பவை. ஏற்றமோ? அவளுடைய கைப்பையில் அந்த முகவரி இருக்கிறது. ஒவ்வொரு துளியாகக் கூடு சக்திக்கான ஒரு தோற்றுவாய். அவளைப் போல் ஆயிரமாயிரமாய்ப் பெண்கள் விழிப்புணர்வைப் பெற்று, கால ஓட்டம் தோற்றுவிக்கும் இந்த நெருக்கடிச் சந்திகளில் இரையாகாமல் மீள முன்வர வேண்டும்.

     ரேகா ஓர் உறுதியான தன்னம்பிக்கையுடன் பஸ் வரும் திசையை நோக்குகிறாள்.

(முற்றும்)