2

     நகரின் எல்லையைவிட்டுப் புதிது புதிதாக முளைத்த பல குடியிருப்புக்களையும் தொழிற்பேட்டைகளையும் கடந்து, முள் செடிகளும் குற்றிச் செடிகளுமான வெட்ட வெளிகளையும் தாண்டி, அந்தப் பழைய சிற்றூரில் புகுந்து செல்லுகிறது பஸ். சொக்கநாதர் கோயிலின் பழைய கோபுரத்தின் உச்சி விளக்கு ஒளிருகிறது. சந்நிதித் தெருவோடு சென்று வளைந்து திரும்பிக் கடை வீதி முனையில் நின்றுவிடும். வெகு நாட்களாகவே இந்த மூலைக்குப் பஸ் வருகிறது என்றாலும், அரசு போக்குவரத்துக்குரிய வசதியான வண்டிகள் சில மாதங்களாகத்தான் அடிக்கடி வந்து போகத் தொடங்கியிருக்கின்றன. பஸ் வசதிதான் அவளை அடையாறு தொழிற் பேட்டைக்கு அப்பால் மூலையில் உள்ள ராஜ்மோகன் மலர் வனங்களின் அலுவலக அறையில் ஒருநாளின் பெரும் பகுதியைக் கழிக்க அனுப்புவதற்கு துணிவைக் கொடுத்திருக்கிறது. இல்லாவிட்டால் பாட்டியும் தாயும் அவளை அந்த ஊரின் எல்லைக்கு அப்பால் செல்ல விடமாட்டார்கள். அவர்களுடைய குடும்பம் என்பது பெரிய கோட்டை. அந்தக் குடும்பத்து ஆண்களே கோட்டை அரனைத் தாண்டமாட்டார்கள். பெண்களுக்கு ஏது அந்த உரிமை? ஆனால், காலப் போக்கின் புரட்சிகரமான மாறுதல்கள் குடும்பங்களின் வேரான பொருளாதார நிலைமையை அரிக்கத் தொடங்கி விட்டது.

     ரேகா பத்தாவது படித்து முடித்து இரண்டாண்டுகள் வீட்டோடு முடங்கி இருந்தாள். உள்ளூர் மகளிர் மன்றத்தில் தையல் கற்றுக் கொள்ளக்கூட பாட்டி இலகுவில் அனுமதிக்கவில்லை. அத்தையும் சின்னம்மாவும் மாற்றி மாற்றி மக்கள் பெருக்கத்துக்குப் பணி செய்யும் வீட்டில், பொழுது போகவில்லை என்ற பிரச்சினைக்கே இடமில்லை. நல்ல வேளையாக பம்பாயிலிருந்து அம்மாவுக்கு எட்டிய உறவில் சகோதரன் முறையாகக் கூடிய துரைவேல் மாமன், வேலையிலிருந்து ஓய்வு பெற்றபின் தெற்கே வரும் சாக்கில், அவர்களுடைய வீட்டில் வந்து தங்கினார். அவளை ஒத்த அவருடைய பெண் டாக்டருக்குப் படிக்கிறாளாம்.

     அந்தத் தேங்கிய குட்டைக்கு அப்பால் இருந்து புதிய கருத்துக்களைத் துணிவாக அவர் எடுத்து விளாசினார். “உள்ளூர் ஹைஸ்கூலில் மெட்ரிக் முடிச்சாச்சுன்னா ஏன் சும்மா இருக்கே? மேலே படிக்கப்போறது. இல்லாட்டி ஏதானும் வேலைக்குப் போகக்கூடாது?”

     “பொண்ணுகளை வேலைக்கனுப்பறது எப்படீடா தொரை? நாளைக்கு எதும் பேச்சு வராதுன்னு எப்படிச் சொல்ல? அத்தை அனுப்பிச்சிட்டு வயித்தில நெருப்பைக் கட்டிட்டு இருக்கணும். அவப்பன்காரன் ஒழுங்கா இருந்தான்னா அப்பவே கட்டிக் கொடுத்திருப்போம். பொன்னேரி அக்காளுக்குத்தான் ரெண்டு பையன்கள் இருக்கு. சிதம்பரத்துக்கோ சம்முகத்துக்கோ கட்டிக்கணும்னு சரசுவதிக்கு ஆசை, அதுக்கும் ஒரு பத்து சவரனானும் போடவாணாமா?...” என்று முதியவள் கூறியபோது, அந்த மாமன் எதிர்த்தார். ரேகாவுக்குக் கடவுளே பார்த்து அவர் வாயிலாக விடுதலையைக் கொணர்ந்தாற் போலிருந்தது.

     “என்ன அத்தை நீங்க ஒரே பத்தாம் பசலியாயிருக்கிறீங்க? இந்த வீட்டைச் சுத்தி எவ்வளவு இடம் வீணாப் போகுது? ரெண்டு வீடு கட்டி வாடகைக்கு விடலாம். அந்தக் காலத்தில்தான் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த வழியில்ல. இப்பக்கூடவா? நான் தப்பாச் சொல்றேன்னு நினைக்காதீங்க பெரியம்மா, காலம் எவ்வளவோ மாறிட்டது. ரேகாவுக்குப் பணம் சேர்த்து சவரன் வாங்கிக் கல்யாணம் கட்டணும்னு வெறுமே சொல்லிட்டிருந்தா போதுமா? எப்படிப் பணம் வரும்? அவ அப்பாவைப் பத்தி ஏதானும் தெரியுமா?”

     பாட்டி உடனே பிரலாபத்தைத் தொடங்கிவிட்டாள். அந்த வீட்டின் வறுமைக்கும் சிறுமைகளுக்கும் அவர்தான் மூலகாரணம் என்பது அவர்களுடைய அசைக்க முடியாத கருத்துமட்டுமல்ல; ஓரளவு உண்மை யும் கூட.

     “ஷார்ட் ஹாண்ட், டைப்ரைட்டிங் எதானும் படிச்சிருந்தா நானே கூட்டிப் போயிடுவேன் பம்பாய்க்கு. நல்ல வேலை கிடைக்கும். இருந்தாலும் நான் ஏதோ சிபாரிசு பண்ணிப் பார்க்கிறேன். வேலைக்கு அனுப்பினால் என்ன குறைவு? லட்சோபலட்சம் பெண்ணுங்க வேலைக்குப் போறாங்க. எல்லாரும் கெட்டா போயிட்டாங்க? என் பொண்ணு சுமதி எக்சைஸ் டிபார்ட்மெண்டில் வேலை செய்யிது. வேலைக்குப் போற பொண்ணுதான் வேணும்னு இந்தக் காலத்து மாப்பிள்ளைகளே கேக்கறாங்க.”

     “பிள்ளையை என்ன பண்ணுறது அப்புறம், இவ ஆபீசுக்குப் போயிட்டா?”

     “அதுக்குத்தான் அளவான குடும்பம். ஒரே பிளாக்லதான் இருக்கிறோம். ராஜாம்மாதான் குழந்தைகளைப் பார்த்துக்கறா. அவ ஆபீசுக்குப் போறச்சே விட்டுட்டுப் போயிடுவ...”

     “உம். நாளைக்கு உன் மருமகளும் வேலைக்குப் போறதுன்னா சரிம்பியா?”

     “பின்னே? பையன் டாக்டருக்குப் படிக்கிறான். ரெண்டாவது பொண்ணு கீதாவும் டாக்டருக்குப் படிக்கிது. அவங்க மாமன் ஹைதராபாத் மெடிகல் காலேஜ் புரொபசரல்ல? அந்த ஆர்வம். ரெண்டு பேரும் டாக்டருக்குப் படிக்கிறேனாங்க...”

     அவர் அங்கு வந்த நேரத்திலெல்லாம் பாட்டிக்கு உருவேற்றினார். திருவள்ளூருக்கு அருகே அவருக்குச் சொந்தமாகக் கொஞ்சம் நிலம் இருந்தது. அதை விற்றுப் பணம் ஆக்குவதற்காகவே அவர் வந்திருந்தார். அந்நாட்களில் அவர் தாம் வேலை பார்த்து ஓய்வு பெற்ற பெரிய தொழில் நிறுவனத்தின் சென்னைக் கிளைக்கு உரியவரைப் பார்த்து ரேகாவுக்கு வேலை தேடினார்.

     பெரிய பெரிய ஊர்திகளும், பளுதூக்கும் பொறிகளும் இயங்குவதற்கான பலபல சாதனங்களை விற்பனை செய்யும் அந்தப் பெரிய தொழில் நிறுவனத்தின் அண்ணாசாலை அலுவலகத்தில் எந்த அனுபவமும் இல்லாத அவளுக்கு வேலை கிடைக்கவில்லை. எனவே, மாமனின் பரிந்துரைகள், அந்தத் தொழில் அதிபரின் குடும்பத்தினருக்குச் சொந்தமான ‘ராஜ்மோகன்’ மலர் வனங்களின் சிறு அலுவலகத்தில் பட்டியல் போடவும் சிறு கணக்கெழுதவும் ஒரு உதவியாளராக, அவளுக்கு வேலை வாங்கித் தந்தன.

     அவர்களுடைய ஊரிலிருந்து செல்லும், ‘ஏழுபத்தெட்டு பி’ பஸ் அலுவலகத்துக்குச் செல்லும் நேரான வண்டியாக இருந்தது. சில மாதங்களாக ரேகா அந்தக் கோட்டைக் குடியிருப்பைவிட்டு புரட்சிப் பெண்ணாக வேலைக்குப் போய் வருகிறாள்.

     பகல் பொழுது குறுகிய கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது. அவர்களுடைய இல்லம் பரந்தாமனார் வீதியில் இருக்கிறது. நாலைந்து தலைமுறைகளுக்கு முன்னர் அவர்களுடைய குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் துறவு பூண்டிருந்தாராம். அவருடைய சமாதிக் கோயில் அவர்களுடைய வீட்டுச் சுற்றிலேயே இருக்கிறது. சுவாமி பரந்தாமனார் என்ற பெயரை ஒட்டியே தெருவின் பெயரும் அமைந்திருக்கிறது. எதிர்ச்சாரியில் வீடுகள் ஏதுமில்லை. ஒரு காலத்தில் குளமாகவோ ஏறியாகவோ இருந்ததாம். அவளுடைய பாட்டி திருமணமாகி வந்த நாட்களில் நீரிருந்து பார்த்திருக்கிறாளாம். அவளுக்குத் தெரிந்து கட்டாந்தரையாகவே இருக்கிறது. ஆங்காங்கு வீடுகள் கட்டிக்கொள்ள மனைக்கான எல்லைக்கற்கள் ஏற்பட்டிருக்கின்றன. கடைவீதி முனையிலுள்ள பெண்கள் உயர்நிலைப் பள்ளியும் கூட இந்தப் பக்கம் வருவதாக இருக்கிறது. தெருத் திருப்பத்தில்தான் ஒரு குழல் விளக்கு ஒளி காட்டுகிறது.

     அந்தத் தெருவில், விசாலமான ஏழு கிரவுண்டு பரப்பில் அமைந்த அவர்களுடைய வீடு ஒன்றுதான் இன்னமும் நாற்பது ஆண்டுப் பழமையை நிலைநாட்டிக் கொண்டிருக்கிறது.

     சமாதிக் கோயிலில் முணுக்முணுக்கென்று விளக்கு எரிவது தெரிகிறது. மனைக்கட்டில் உருப்படியாக இருந்த நான்கு தென்னமரங்களும் கூட இப்போது காய்க்காமல் சூம்பிவிட்டன. ஒரு மாமரம் வேனிலில் நல்ல கனிகள் கொடுக்கும்.

     இரண்டு கறவை வற்றிய மாடுகள்; அவற்றின் கன்றுகள். செப்பனிடாமலே விழுந்துவிட்ட கொட்டகைக் கூளம்; தப்பி விழுந்த விதைகளாகக் கொடி வீசி எப்போதேனும் பரங்கியோ, பூசணியோ காய்ப்பதுண்டு.

     அவள் உள்ளே நுழைகையில் அங்கே அண்டி வாழும் நாய், ‘திண்டி’ குலைக்கிறது.

     வாசலிலுள்ள முக்கோணப் புரையில் கார்த்திகை மாச விளக்கு அவளை வரவேற்கிறது. முன்கூடத்தில் அத்தை கணவர் நோட்டுப் புத்தகம் திருத்துகிறார். உள்ளூர் உயர்நிலைப்பள்ளியில் அவர் தமிழாசிரியர். அவருக்கு ஆறு குழந்தைகள். அத்தையின் கணவரான இந்த மாமன் நடராசன் அவர்களுக்கு அந்நியரல்ல. அத்தை நாகம்மாளைச் சொந்த மாமன் மகனுக்குத் தான் மணம் செய்து கொடுத்திருக்கின்றனர். இந்த மாமனின் ஒன்றுவிட்ட சகோதரிதான் ரேகாவின் தாய். சுற்றிச் சுற்றிக் கழல முடியாத உறவு வளையங்கள் கொண்ட குடும்பம்.

     கயிற்றுக் கட்டிலில் அத்தை கம்பளிச் சட்டையால் உடலைப் போர்த்து மூடிக்கொண்டு மடியில் குழந்தையுடன் அமர்ந்திருக்கிறாள். தண்மதியும் சுந்தரமும் அந்தக் கட்டிலிலேயே துவைக்கின்றனர். பெரிய பையன் சோமுவுக்கு ஏதோ கோபம் போலிருக்கிறது. அவனுக்கு அடிக்கடி கோபம் வந்துவிடும். மூலையில் முண முணத்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறான். இன்னொரு புறத்தில் சிற்றப்பனும், சின்னம்மாவும் குழைந்தைகளும் புழங்கும் அறை இருக்கிறது. சின்னம்மாவும் வெளியிலிருந்து வந்த பெண்ணல்ல. ஒன்றுவிட்ட அத்தையின் மகளாகும் முறை. அவர்களுக்கு நான்கு குழந்தைகள். சிற்றப்பாவுக்கு பஞ்சாயத்து அலுவலகத்தில் எழுத்து வேலை. சிற்றப்பனின் மகள் ரமணியும், அத்தை மகள் சுகுணாவும் புளியங்கொட்டை ஆடுவதில் மும்முரமாக இருக்கின்றனர்.

     பாட்டியம்மா ஒரு கட்டு முருங்கைக்கீரையைக் கொண்டு வந்து அந்த முன்னறையில் போட்டுக் கொண்டு உட்காருகிறாள். “விளக்கு வச்சி, என்ன ஆட்டம்டி? கை கால் கழுவிட்டு புத்தகம் படிக்கிறதில்ல?” என்று அதட்டுகிறாள். “இந்த கோங்குப் பயலுக்கு என்ன கோபம்?...” என்று கேட்ட குரலோடு, “சொர்ணமா வருது? மணி ஏழேகாலாயிட்டது. ஆபீசு முடிஞ்சு அஞ்சரைக்கு வரும் முன்னல்லாம்...?” என்று தன் அதிருப்தியை வெளியிடுகிறாள்.

     “அஞ்சரைக்கு எப்படி வரமுடியும் பாட்டி? பஸ்சுக்கு நடந்து வரவே அஞ்சரையாயிடும். பிறகு ஒரு மணியாகுது. இன்னிக்கு பஸ் வரவே நேரமாச்சு. ஒரே கூட்டம் வேற...”

     ரேகா படி கடந்து உள்ளே செல்கிறாள். சின்னம்மா சாம்பிராணி போட்டுப் புகை பிடித்துக் கொண்டிருக்கிறாள். வீட்டுச் சுவர்கள் வெண்மை கண்டு எத்தனையோ ஆண்டுகளாகிவிட்டன.

     சமையல் அறையிலிருந்து வரும் புகை போதாதென்று சின்னம்மா தினமும் சாம்பிராணியை வேறு போட்டுப் புகைக்கிறாள். நல்ல வெயிலிலேயே வெந்நீரில் குளித்து, சாம்பிராணிப் புகை போட்டுக் கொள்ளும் மெல்லியள் அவள். ஊரெல்லாம் கிரசின் எண்ணெய் அடுப்பும் எரிவாயு அடுப்பும் வந்தாலும் அந்த மூலை வீட்டில் விறகுதான். மஞ்சளாய் அழுதுவடியும் பல்ப் ஒளி. கரியேறிய பித்தளைத் தவளைகள்; கிணற்று நீர் உள்ளே வரவேண்டும். ரேகா பின்பக்கம் முகம் கழுவ வருகையில் அவளுடைய தாய் உரலில் மாவாட்டிக் கொண்டிருக்கிறாள்.

     “ஏங்கண்ணு, இத்தனை நேரம்?”

     ரேகா சட்டென்று மறுமொழி புகலாமல் அவளையே பார்க்கிறாள். வற்றித் தேய்ந்த உருவம். நெற்றியில் குங்குமமும் கழுத்தில் புரளும் பருமனான தாலிச் சரடும் அவள் அந்த வீட்டின் தலைமகனை மணந்தவள் என்று அறிவுறுத்துகின்றன.

     “ஏங்கண்ணு பஸ் வர நேரமாச்சா?”

     “ஆமாம்மா, இன்னிக்குப் பஸ்சில...”

     சொல்லாமா, வேண்டாமா என்று தயங்கிக் கொண்டு அவள் நிற்கிறாள்.

     “பஸ்சில என்னம்மா?”

     “ஒண்ணில்ல. ஒருத்தன், லேடீஸ் சீட்ல உக்காந்திட்டு எந்திரிக்க மாட்டேன்னிட்டான்...”

     “இன்னிக்கா?”

     “ஆமாம். அவன்... குடிச்சிருந்தான்...”

     “ஐயோ!... அப்புறம்?”

     “என்னால் எந்திரிக்க முடியாதுன்னுட்டான்.”

     “ஐயோ! கள்ளுக்கடைய மூடியாச்சின்னாங்களே? பின்ன எப்படி?...”

     “அவன் போதையா இல்லேம்மா! நல்லாப் பேசுறான். அவன் கசாப்புக் கடையில ஆடு வெட்டுறவனாம். ஒரு நாளைக்கு முந்நூறுக்கு மேல் ஆடு வெட்டுவானாம்...”

     “ஐய...ய்ய, கண்ணு, நீ அந்த பஸ்சிலா வந்தே?”

     “ஏம்மா? பஸ் பொது. இதெல்லாம் பாத்து ஏற முடியுமா, இறங்க முடியுமா?”

     “ரொம்ப நல்லாயிருக்குதே? சின்னஞ் சிறிசெல்லாம் ஏறி ஆபிஸ் ஸ்கூல்னு போற வண்டில குடிச்சிட்டு வர கசாப்புக்காரனையுமா ஏத்திப்பாங்க?”

     “அவரு எப்படிப் பேசினாருங்கறே? பி. ஏ. வரை படிச்சாராம். ஒரு பார்ட் போயிட்டதாம். பணம் சம்பாதிக்கத்தான் ஒரு வேலைன்னு போகக் கூடாதுன்னு கொள்கை வச்சிருந்தாராம். கடைசியில் பணம் சம்பா திக்கவே இந்த வேலைன்னு ஆச்சுன்னாரு. எனக்கு அவர் பேச்சு ஆச்சரியமா இருந்தது. அப்பா நினைப்பு வந்திச்சம்மா எனக்கு!”

     கடைசிச் சொற்களை மெதுவான குரலில் கூறி விட்டுத் தாயின் முகத்தைப் பார்க்கிறாள். கொல்லைத் தாழ்வரையின் விளக்கு ஒளி அழுது வடியும் மங்கல். அவள் குனிந்து உரலை நீர்விட்டு கழுவுகிறாள்.

     “‘ஐ ஆம் எ கில்லர்; ஐ ட்ரிங்க் டு கில்...’ன்னாரு. அப்படியே அப்பா நினைப்பு வந்திச்சி எனக்கு...”

     “சீ, ஏம்மா கண்டவங்ககூட அவரைப் பத்திப் பேசறே? அவரு குடும்பத்துக்கு உதவாம போயிட்டாரு. அந்த நாளில் எனக்கும் கண்டிப்பா பேசத் தெரியல. என் தலைவிதி, கொடுப்பினை அவ்வளவுதான்...” என்று பெருமூச்செறிகிறாள் அவள்.

     “இல்லேம்மா, அப்பாவா இருந்தால், அப்பவே அவனைப் பத்தி ஒரு கவிதை எழுதுவாராக இருக்கும். இல்லியா?”

     “கண்ணு, நீ வேற சேலை உடுத்திட்டு வா. பாட்டி பார்த்தால் கோபிச்சுக்கும். காபி போட்டுத் தரேன். வள்ளிக்கிழங்கு வேக வச்சிருக்கிறேன்... வா...”

     அப்பாவைப் பற்றிய பேச்சை எடுத்தாலே அம்மா சுருதியை மாற்றி விடுகிறாள்...

     அப்பா...

     அது அவராக இருந்தால்?

     தலைக்கு நேராக வாள் நுனி தொங்குவது போல் ரேகா அமைதி குலைந்திருக்கிறாள்.

     அப்பா வீட்டுப் பக்கம் வந்து நான்கு ஆண்டுகளாகி விட்டன. அவள் வயதுக்கு வந்த மகளாக பேதைமை கடந்த பருவத்தினளாய் வாயிற்படி கடந்து அப்பா என்று கூவி வராமலே நின்றாள். பாட்டி சொல்லும், உடன் பிறந்தவர்கள் வாய் திறவாமலும் அவரை ஏசினார்கள். ரேகா அன்று பாடத்தைப் படிக்க முடியாமல் அறைச் சுவரில் கலர் பென்சிலால் எப்படி எப்படியோ கிறுக்கினாள். இன்றும் அந்தச் சித்திரம் அழிய வில்லை. அதைப் பார்க்கும்போதெல்லாம் அவளுக்கு நினைவுக்கு வருகிறது.

     “நேரமாச்சின்னா, பாட்டி இப்படி வேலைக்கனுப்பிச் சோறு தின்னணுமா என்னன்னு புலம்புது போம்மா!”

     இதற்கு மறுமொழி கூறிப் பயனில்லை. முகத்தைக் கழுவிக் கொண்டு அடுப்படியில் அவித்து வைத்திருந்த வள்ளிக்கிழங்கை எடுத்துக் கொண்டு வருகிறாள். சமையலறையோடு ஒட்டிய பூஜை அறைதான் தாயும் மகளும் படுத்துப் புழங்கும் இடம். உயரக் கொடியில் புடவைகள். அடுக்காகத் தகரப் பெட்டிகள், தட்டு முட்டுச் சாமான்கள். பரணில் அவளுடைய தந்தை அந்நாட்களில் சேர்த்து வைத்த பத்திரிகைகள் கட்டுகள்; புத்தகங்கள். என்றோ அபூர்வமாய் வெளியான அவருடைய நான்கு வரிக் கவிதைத் துணுக்குகள் இடம் பெற்ற ஆங்கில நாளேட்டின் வார மலரும், கல்லூரி இதழ்களும் அந்தக் குவியலில் இருக்கின்றன. ‘குருவிக் கூடு’ என்று ஒரு கவிதைத் துணுக்கு அவளுக்கு இப்போது நினைவுக்கு வருகிறது. ‘என்னுடைய கூடு; என்னுடைய குஞ்சு. நான் சிறு அலகால் பஞ்சும் சவுரியும் நாரும் கொண்டு வந்து கூட்டை அமைக்கிறேன். மாயப் பணமே! நீ அதை நாசம் செய்கிறாய்...’ என்று மாதிரியில் அமைந்த கவிதை.

     மாயப் பணமே, நீ ஏன் கூட்டைக் குலைக்கிறாய்!
     என் மனையாளின் ஆசைக்கனலை மூட்டி நீ என்
     கூட்டைச் சிதைக்கிறாய்...

     பணத்துக்காக ஒரு வேலைன்னு போகக் கூடாதுன்னும் கொள்கை...

     அவளுடைய செவிகளில் ஒலிக்கும் குரலுக்கும் அந்தக் கவிதையின் உருப்புரியாத ஒலிக்கும் ஒற்றுமை நெஞ்சில் தீட்டிய வாள் நுனிபோல் பளிச்சிடுகிறது.

     முன் அறையில் சிற்றப்பாவின் குரல் பரபரப்பாகக் கேட்கிறது.

     “அந்தப் பொண்ணு டிரஸ் பண்ணிட்டுப் போறப்பவே சந்தேகமாயிருந்தது. அந்தாளு யாரோ போட்டோ ஸ்டூடியோக்காரனாம். காலம் எப்படிப் போவுது பாரு? ஐயிரு அப்படியே இடிஞ்சுபோயி உக்காந்திட்டாரு...”

     “அட கலிகாலமே?” என்று பாட்டி காலத்தின் மீது பழியைப் போடுகிறாள்.

     “யாரு அத்தை? மேனகாவா?”

     “ஆமாம்ங்கறேன். காலேஜுக்குப் போறேன்னு போச்சாம். மூணு நாளா காணோமாம். பிறகு லெட்டர் எழுதி வச்சிருக்குதாம். சாதி சனமில்ல, யாரோ போட்டோக்காரனாம்.”

     சிற்றப்பா கோயிலிருந்து, கொண்டு வந்த செய்தி இதுதான் போலிருக்கிறது.

     “எனக்கு இந்தச் சொர்ணத்தைப் பஸ்சில் அனுப்ப மனசே இல்ல. என்னமோ அவன் வந்து வேலைன்னு ஆசை காட்டிட்டுப் போயிட்டான். மாசம் நூத்தம்பது ரூபா வருதுன்னாலும் நிம்மதியில்ல. அதது வயசுக்கு வந்தாசுன்னா ஒரு கலியாணம் காழ்ச்சின்னு செய்யணுமே ஒழிய நாலு ஆம்பிளங்களும் பாக்கறாப்பல, பேசறாப்பல வுடறதாவது? அதும் அது வேலை செய்யிற இடத்தில் வேற பொம்பிளயே இல்லேன்னு வேறு சொல்லுறாங்க. நாம போயி கண்ணு முன்னாடியா பார்க்கிறோம்? ஆளான பொண்ணை வெளியே வுடாம பாதுகாத்த வீடு அது. உலகம் எப்பிடியேம் போகட்டும். நம்ம வூட்டுக்கு எதுக்கு? இந்த வருஷம் எப்படின்னாலும் அது கழுத்திலே மஞ்சக்கயிறு ஏறிட்டாத்தான் நிம்மதி.”

     “பொண்ணுக்கு மாப்பிள்ளையைத் தேடுமுன்ன, உங்க புள்ளையத் தேடிக் கண்டுபிடிக்கணுமே?” என்று மாமன் தலைநிமிராமல் சொல்லை உதிர்க்கிறார்.

     “அவன் வந்து பவுன் பவுனாக் கொட்டப் போறானா? வருசம் நாலாகப் போகுது. அதன் தலைவிதி. நான்தான் கட்டிவச்சேன். என் காலுங் கீழ நிக்கிதுங்க. என் கண் மூடுமுன்ன இத்தையும் ஒருத்தனிடம் ஒப்படச்சிட்டா கவலை விட்டிடும்...”

     ”சிவகாமி! சிவகாமி! அரியாமணையைக் கொண்டா!” என்று கூவுகிறாள் பாட்டி.

     “குருக்களையா வீட்டு மேனகவாப்பா ஓடிப் போயிட்டா?” என்று ரமணி சுவாரசியமாகக் கேட்கிறாள். ரமணிக்கு வயசு ஒன்பதுதானாகிறது.

     “ஆமாண்டி கழுதை, பேச்சுக் கேக்கவரா! போயி பாடத்தை படி!” என்று சின்னம்மா அதட்டுகிறாள்.

     ரேகா பூஜையறை விளக்கின் முன் கிழங்கை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறாள். அந்த அலுவலகமாகிய உலகின் வேற்றுமைகள் பயங்கரப் பள்ளமாக அவளுடைய நெஞ்சில் கிலியைத் தோற்றுவிக்கின்றன. பிரமை பிடித்தாற்போல் செயலற்று அமர்ந்திருக்கிறாள்.