10

     மங்களா ஐந்தரை மணிக்கு எழுந்து பல் துலக்கி நீராடி விட்டுத்தான் வரவேண்டும் என்பது டாக்டர் சுலோசனாவின் நிபந்தனை. ஆனால், குளிர் நாட்களில் காலை நேரத்தில் அப்படிக் குளிக்க முடிகிறதா? வெந்நீர் சுட வைக்க அடுப்பு ஒழுங்கில்லை. எனவே பல் துலக்கி முகம் திருத்திப் பொட்டு வைத்துப் புதிய சேலை உடுத்தி அவள் பணியிடம் புறப்பட்டு விடுவாள். டாக்டரும், கல்லூரிப் பேராசிரியரும் புறப்பட்டுச் சென்ற பிறகு அவள் குழந்தையைப் பள்ளியில் விட்டுவிட்டு வந்து குளியலறையில் மின்விசையைத் தட்டி சுடுநீர் தயாராக்கி சாவகாசமாகக் குளிப்பாள்.

     கிணற்றடியில் அதிகாலையிலேயே சாஸ்திரியார் மனைவி வாலாம்பாள் துணி துவைக்கத் தொடங்கி விடுவாள். கோபிநாதன் குளிக்க வருவார். பொதுவான மறைவிடத்துக்கு அப்போதிருந்தே வரிசை நிற்கும். நெருக்கடி தோன்றிவிடும். மங்களா காலையில் எழுந்து பல் துலக்கக் கிணற்றடிக்கு வரும்போது சில நாட்களில் சாஸ்திரியார் வீட்டுக்கும் கோபிநாதன் வீட்டுக்கும் இடையே நிலவும் கோபதாபங்கள் படீரென்று வெடித்து, சொற்போர் நடந்து கொண்டிருக்கும். அன்று வாலாம்பாள் புடவை தோய்க்கும்போது யாரையும் காணவில்லை. ஆனால், “வரவர எல்லாம் கெட்டுக் குட்டிச் சுவராப்பூத்து. சாதி ஆசாரம் அனுஷ்டானம் ஒரு எழவுமில்லை. கண்டவனும் வரான்! போறான்...” என்று பொல பொலத்துக் கொண்டிருந்தாள்.

     “ஊருக்கு ஒழுங்கு சொல்ற சாஸ்திரிகள் இரா முழுக்கக் கண் முழிச்சி சீட்டாடலாமோ? ரெண்டு ரூபா கிடச்சா கிண்டிக்கு ஓடலாமோ?”

     “யாரு? மங்களாவா! பேஷ்!”

     நம்பியின் குரல் பின்னிருந்து கேட்கையில் அவளுக்கு உடல் புல்லரிக்கிறது.

     இருள் நன்றாகப் புலராத அந்த நேரத்தில் அவளுடைய இதழ்களில் ஒரு மின்வெட்டுச் சிரிப்பு நம்பியை வசமாக்கப் பளீரிடுகிறது.

     “கலிமுத்திப் போச்சு!” என்று மறைவிடத்தில் இருந்து வெளிப்படும் சாஸ்திரிகள், ஈசுவரனை மட்டும் மெல்லக் கூப்பிட்ட வண்ணம் தம் தாழ்வரைக்குப் பின்வாங்குகிறார்.

     “ஏன் இன்னிக்குச் சீக்கிரமா எழுந்திட்டாப்பல?”

     “யாரு? என்னையா கேட்கிறே?” என்று திரும்பக் கேட்கிறான் நம்பி.

     “இல்லை. இந்தக் கிணற்றைக் கேட்டேன்...”

     “உனக்கு ரொம்பத் தைரியம் மங்கி!”

     “ரொம்ப நன்றி!”

     “எதுக்கு?”

     “தைரியம்னு சொன்னியே, அதுக்கு எனக்குத் தைரியமே இல்லேன்னு நான் நினைச்சிண்டிருந்தேன்...”

     “அதுசரி, உன் டாக்டர் பிசினஸ் எப்படி இருக்கு?”

     “பிசினசைப் பத்தி எனக்கென்ன தெரியும்? நான் வெறும் ‘கிச்சன் மெய்ட்’ ‘ஆயா’, நம்பி, உனக்குத்தான் செல்வாக்கா நிறைய பிரன்ட்ஸ் இருக்காலே, பஞ்சாயத்து போர்டு மெம்பர் சிகாமணி சிநேகம். ஏன் உன் கம்பெனி முதலாளிகிட்டியே உனக்கு ரொம்ப செல்வாக்காம். எனக்கு ஒரு வேலை - அதாவது சமையல் வேலை இல்லாத வேலை வாங்கித் தரமாட்டியா?”

     “ஏன், உன் டாக்டர் எக்கச்சக்கமா பணம் பண்றாளாமே? அவ நர்சிங் ஹோமில உனக்கு ஒரு அசிஸ்டென்ட் வேலை குடுக்கக் கூடாது?”

     “என்ன பணம் பண்றாளோ? பாக்கறதுக்குத்தான் சக்கரை. எனக்குக் காப்பிக்குக் கூடச் சக்கரை வைக்காமல் பீரோவைப் பூட்டிட்டுப் போறா!”

     “அப்படியா?... இது சுத்த மோசம். அவளுக்கு அமோக பிசினஸ் எப்படித் தெரியுமோ?”

     “எப்படியாம்?”

     அவன் அருகில் வந்து கண்களைச் சிமிட்டுகிறான்.

     “பெரிய பெரிய வாடிக்கை. ஒரு இரண்டு மாசச் சிக்களுக்கு ஐந்நூறு ரூபாய்!”

     அவள் முகத்தில் குபீரென்று வெம்மை பரவுகிறது.

     “சீ! எப்படிப் பணம் சேர்த்தால் நமக்கென்ன? எனக்குப் பிடிக்கல. நீ எனக்கு ஒரு வேலை சிபாரிசு பண்ணிக்கொடு நம்பி... உங்க ஆபீசில கிடைக்காதா? இந்த மட்ருசில் எத்தனையோ பேருக்கு வேலை கிடைக்கிறது. எனக்கு மட்டும் சிபாரிசு செய்யறவா இருந்தா... நான் எவ்வளவு உற்சாகமாக இருப்பேன்?”

     நம்பி வாளியில் நீர் எடுத்துப் பல் துலக்கத் தொடங்குகிறான். மங்களா பற்றிய தும்பை விடக்கூடாது என்று மீண்டும் தொடங்குகிறாள். “உன் ஆபீசில் லேடி கிளார்க் டைபிஸ்ட் இல்லை?...”

     “ஒரு பச்சைப் பாப்பா இருக்கு. பெரியவர் சிபாரிசில் வந்திருக்கு. ஆனா, ஒண்ணும் தெரியாது. நாலு வார்த்தை இங்கிலீஷ் சேர்ந்தாப் போல் எழுதத் தெரியாது. சொன்னா அழுதுடும்...”

     “ஐயோ!... நம்பி நான் இங்கிலீஷில் செவன்டி பர்சென்ட் தெரியுமா? நான் அழவும் மாட்டேன். ஒரு சான்ஸ் கொடுத்துப் பாரு, நான் மளமளன்னு கத்துண்டுடறேனா இல்லையான்னு...”

     “நீ இவ்வளவு பார்வர்டா இருப்பேன்னு நான் கனவில் கூட நினைக்கலே மங்கு!”

     “நான் பார்வர்டா இல்லேன்னா கதியே இல்ல நம்பி, எனக்கு எதிர்கால நம்பிக்கையே இல்ல...”

     “சரி, சரி சினிமா வசனம் ஆரம்பிச்சிடாதே, பார்க்கிறேன்...”

     “நம்பி... நீ மட்டும் எனக்கு வழிகாட்டிட்டே, நான் மறக்கவே மாட்டேன்...”

     நம்பி வாய் கொப்புளிக்குமுன் வாளி குடம் கயிறு முதலியவைகளுடன் சவுந்தரம் வந்து விடுகிறாள்.

     “நம்பி எவ்வளவு நல்லவன்? சே! அவனைப் போய் எல்லாரும் கெடுதலாகப் பேசுகிறார்களே!” என்று எண்ணியவாறு நம்பிக்கையுடன் அவள் அன்றையப் பொழுதைத் தொடங்கச் செல்கிறாள்.

     அவள் அன்று மணியடிக்குமுன் வேலைக்காரி காத்தம்மா பால் வாங்கி வந்துவிட்டாள். சுலோசனா காபி கலந்து கொண்டிருந்தாள். “மணி என்ன ஆச்சு பாரு? நேத்து நீ குழந்தைக்கு வெறும் தக்காளி ரசமும் சோறும்தான் கொண்டு போனாயாமே? வரவர நீ ரொம்பச் சோம்பல் படறே! போ போ, ஏப்ரனைப் போட்டுக் கொண்டு சட்னியை அரை...”

     சுடச்சுட நான்கு சொற்கள் கொடுக்க வேண்டும் என்று தோன்றுகிறது. “மனமே, பொறு” என்று அடக்கிக் கொள்கிறாள்.

     நம்பியின் அலுவலகத்தில் வேலை, பிறகு அவனுடன் கல்யாணம், திருப்பதியிலோ, திருத்தணியிலோ - இரண்டு பேரும் ஒன்றாக மேசையில் உணவு அருந்திவிட்டு அவர்களும் அலுவலகத்துக்குப் போவார்கள்...

     இந்த ஏப்ரனை உதறிவிட்டு ஸ்மார்ட்டாக... ஸ்கூட்டரில் பின் தலைப்பு பறக்க, அவன் இடையோடு கைகோத்துக் கொண்டு...

     “அலோ டாக்டர்! எப்படியிருக்கீங்க...?” என்று அவள் கறுப்புக் கண்ணாடியை உள்ளங்கையில் தட்டிக் கொண்டு கேட்கையில்... கற்பனைகள் பொன்விளிம்பில் மிதக்கும் இனிமையாக இருக்கிறது. முதலில் அந்த தரித்தரம் பிடித்த காம்பவுன்டை விட்டு மாற வேண்டும். சவுந்தரமும் குழந்தைகளும் தனியாக இருப்பார்கள். அவளுக்கென்ன? டாக்டரும், கல்லூரி ஆசிரியரும் தத்தம் இடங்களுக்குச் சென்ற பின் குழந்தையைப் பள்ளியில் விட்டுவிட்டு வருகிறாள். பிறகு குளியறையில் அவள் சாவகாசமாகக் குளிக்கும் நேரத்தில் வாயில்மணி ஒலிக்கிறது.

     ‘யாராக இருக்கும்?’ இதமான சுடுநீர் தொலைபேசி வடிவில் உள்ள குழாய்வழி கைமழையாகப் பூச்சொரிய, அவள் துணுக்குற்று நிற்கிறாள். ‘எதையேனும் மறந்து வைத்துவிட்டு டாக்டர் வந்தாளா?’ வரமாட்டாளே? பின்னே... ‘அவள் புருஷனா? பின் யார் வருவார்கள்?’ பரபரவென்று உடலைத் துடைத்துக் கொண்டு, “வருகிறேன்” என்று குரலைக் கொடுக்கிறாள். குளித்த சோடு தெரியாமல் இருப்பதற்கு இல்லை. நல்ல வேளையாகக் கூந்தலை நனைய அன்று நீராடவில்லை. அவசரமாக ஒரு பொட்டையும் நெற்றியில் வைத்துக் கொண்டு கதவைத் திறக்கிறாள்.

     பூஞ்சாரலாய் உடல் சிலிர்க்கிறது.

     கருப்புக் கண்ணாடியும் சென்ட் மணமுமாக நம்பி...

     நம்பி...!

     “என்ன, இப்பதான் குளிச்சிண்டிருந்தாயா?”

     “உள்ளே வா, நான் யாரோ என்னமோன்னு பயந்து போனேன். இந்த பிளாட் உனக்கு எப்படித் தெரிஞ்சிது?”

     “பெரிய வித்தையா? டாக்டர் சுலோசனான்னேன், மூணாம் மாடி ஏறி வந்தேன்...” என்று அவளை மேலும் கீழுமாக ஒருமுறை பார்த்துவிட்டு, அறையைச் சுற்றிப் பார்க்கிறான்.

     டாக்டர் வீடு என்று அலங்காரம் எதுவுமில்லை. நான்கு கூடை நாற்காலிகள். ஒரு நடுமேசை. கலைப்பொருள் அலமாரியில், மலிவாக நடைபாதையில் வாங்கிய பிளாஸ்டிக் பொம்மைகள், குழந்தையின் விளையாட்டுக் கருவிகள், சுவரில் ஒரு மருந்துக் கம்பெனி விளம்பரத்துடன் நாள்காட்டி.

     “ஸோ, இங்கேதான் நீ வேலையாக இருக்கிறாயாக்கும்!”

     “ஆமாம், இரு... ஒரு ட்ரிங்க் கொண்டு வறேன்...” மிக உற்சாகமாக இருக்கிறது. குளிர் அலமாரியைத் திறந்து பாலை எடுத்து, காபி கலந்து கொண்டு வருகிறாள்.

     அவன் சராய்ப்பையில், கையைவிட்டுக் கொண்டு அவளைப் பார்க்கிறான். “எடுத்துக்கோ நம்பி!”

     “உனக்கு?”

     “எனக்கு இருக்கு.”

     “பொய் சொல்லாதே. நான் உள்ளே வந்து பார்ப்பேன்!” அவள் சிரித்துக் கொண்டு அரைக் கிண்ணமாக இருந்த காபியைக் காட்டுகிறாள்.

     காபியருந்திய பிறகுதான் அவளுக்கு நினைவு வருகிறது. “இன்னிக்கு உனக்கு ஆபீஸ் இல்லியா?”

     “ஆமாம். போன் பண்ணிவர நேரமாகும்னேன்.”

     “எனக்கு வேலைக்குச் சொல்றேன்னியே?”

     “அதான் வந்தேன். ஒரு இடத்துக்கு உன்னைக் கூட்டிண்டு வரேன்னேன்.”

     சிரிப்பில் பூக்கள் மலர்ந்து கொட்டுகின்றன.

     “நிஜமாகவா நம்பி; இப்பவா கூட்டிண்டு போறே!”

     “பின்ன, ஆபீசுக்கு லீவு சொல்லிட்டு உன்னோடு விளையாட வந்தேன்னு நினைச்சியா?”

     “ரொம்ப தாங்க்ஸ் நம்பி. போன் பண்ணி டாக்டரிடம் சொல்லிட்டு, குழந்தைக்குச் சாப்பாடு கொடுத்திட்டு வரட்டுமா?”

     “எத்தனை மணிக்குக் கிளம்புவே?”

     “இன்னும் அரைமணியாகும்...”

     “என்னை அரைமணி வெயிட் பண்ணச் சொல்றியாக்கும்!”

     “வேறென்ன செய்வது, நீ சொல்லி. குழந்தைக்குச் சாப்பாடு கொடுத்திட்டு காத்தம்மாவை அழைச்சிட்டு வரச் சொல்றேன். சாப்பாடு கொடுக்காம போகலாமா?”

     “ஓ.கே. நான் அப்ப, பஸ் ஸ்டாண்ட் பக்கம் கபேயில் காத்திட்டிருப்பேன். வா...”

     “மேனகா கபேயிலா?”

     “ஆமாம். நிச்சயமா வருவியா?”

     “வரேன்...”

     முதல் நாளே வெறும் இரசமும் சோறும் கொடுத்ததற்காக சுலோசனா கடிந்து கொண்டாளே? பட்டாணியும் காலிபிளவரும் போட்டு ஒரு கூட்டு தயாரித்து, இரசமும் தயிரும் வைத்து பள்ளிக்கு கொண்டு செல்லுமுன் அவள் தன்னுடைய சேலையையும் அலங்காரத்தையும் பார்த்துக் கொள்கிறாள். ‘யார்ட்லி’ முகப்பவுடர் அலமாரியில் இருக்கிறது. காலையில் நம்பியிடம் ஒழுக்கம் இல்லாதவன் என்ற அச்சத்தடையைத் தகர்த்துக் கொண்டு பேசியிருக்கிறாள். பணிபுரியும் வீட்டில் அவனை உபசரித்திருக்கிறாள். டாக்டரின் அலங்கார மேசையைப் பயன்படுத்திக் கொண்டால் என்ன? அன்று அவள் உடுத்திருக்கும் சேலை கூட சுலோசனா கொடுத்த பழைய நைலக்ஸ். பூப்போடாத மொட்டை இரகம். செருப்புத்தான் நன்றாக இல்லை.

     எனினும் வேறு வழியில்லை.

     “மிஸ்சிடம் சொல்லிட்டுப் போறேன். காத்தம்மா வீட்டிலேருந்து வந்து கூட்டிப்போவா சமர்த்தா போறியா!” என்று குழந்தையைச் சமாளிக்கிறாள். பிரச்சினையாக இல்லை. சாப்பாட்டுப் பாத்திரங்களை மீண்டும் வீட்டில் கொண்டு போட்டு, சாவியை அடுத்த மாடிக்காரர்களிடம் கொடுத்துவிட்டு, மங்களா வெளியேறுகிறாள்.

     நம்பி கறுப்புக் கண்ணாடியும் கையில் புகையும் சிகரெட்டுமாகக் காத்திருக்கிறான்.