11

     அந்த ஆண்டு பொங்கலுக்குள் வாயிலை மட்டுமேனும் இடிந்த பகுதிகளைச் சீராக்கி சுண்ணாம்படிக்க வேண்டும் என்று பாட்டி சொல்லிக் கொண்டிருந்தாள். திடீரென்று வீட்டு நடவடிக்கைகளிலேயே பரபரப்பும் உற்சாகமும் இறங்கி, ஒரு இயந்திர ஓட்டமாக ஓடத் தொடங்கியது. ஏற்கெனவே அதிகம் பேசாத சிவகாமி இப்போது பேசுவதேயில்லை. எல்லாவற்றையும் விட்டாலும் வெற்றிலை போடாமல் இருக்க அவளால் முடியாது. இரவு எல்லா வேலைகளையும் முடித்துக் கொண்டு கைவிளக்கை வைத்துக் கொண்டு வெற்றிலை போட்டுக் கொண்டுதான் படுப்பாள். “கண்ணு, வெத்தில இல்ல பொட்டி கடையில போயி பத்து காசுக்கு வாங்கிட்டுவாயேன்!” என்று இரவு ஏழு மணிக்கேனும் அனுப்பி வாங்கி வரச் சொன்னது உண்டு.

     இப்போது அம்மா வெற்றிலை போடுவதில்லை. அன்றாட தேவைப் பொருள்கள் ஆகாயத்துக்குச் சென்றுவிட்டது மட்டும்தான் காரணமா? பாட்டி இரவு உண்பதை விட்டுவிட்டாள். சின்னம்மாவும் அத்தையும் கூட முன்போல் பேசுவதில்லை. மாமா பையைத் தூக்கிக் கொண்டு அன்றாடம் அரிசி வாங்கப் போகிறார். “அவளுக்கு மட்டும் ரெண்டு இட்டிலியா? எனக்கு?” என்று கடைக்குட்டிபயல் கேட்பதும், “நீ எத்தினி தரம் கேட்பே! அப்பப்பா! தின்னு உருட்டுதுங்க!” என்று பாட்டி அதட்டி அலுத்துக் கொள்வதும் எப்படி இயல்புபோல் வந்துவிட்டது என்பதை ரேகா அன்றிரவு ஒரு திடுக்கிடும் உணர்வுடன் நினைத்துக் கொள்கிறாள். மாடு ஓட்டிக் கொண்டு செல்லும் சின்னையன்! எப்போதோ இரண்டு மாசங்களுக்கு ஒரு முறை வரும் சலவைக்காரன், பஞ்சாயத்து அலுவலகக்காரர்கள் என்று ஒரு காலத்தில் பெரிய மனிதராக இருந்த கூட்டுக் குடும்பத்தை அண்டிப் பிழைத்துக் கொண்டிருந்ததை நினைவூட்டும் வண்ணம் பொங்கலைச் சாக்கிட்டு வருகின்றனர். கறவை வற்றிய மாடு ஒன்றும் கால் படி கறக்கும் பசு ஒன்றும் அந்த வீட்டின் பால் வளத்துக்கான வரவு செலவுக் கணக்கை ஈடு செய்யவில்லை. மாமனுக்கும் சிற்றப்பனுக்கும் தான் சர்க்கரைக் காப்பி!” என்று கடைக்குட்டி தம்ளரை எடுத்துக் கொண்டு ஓடுகிறது, தந்தையிடம் ஒருவாய் வாங்கிக் கொள்ள.

     அந்த வீட்டுக்கு அவளும் பொருள்தேடி வருகிறாள். தனக்குச் சர்க்கரைக் காப்பி கொடுக்கக் கூடாதா? ஒத்த வயசுடைய குழந்தைகளாக இருந்தாலும் ஆணுக்கு ஒரு வகை; பெண்ணுக்கு ஒரு வகை. சுகுணாவும் ரமணியும் தண்ணீர் இரைக்கின்றனர். பாத்திரம் கழுவி, துணி மடித்து உதவி செய்கின்றனர். சோமுவுக்கும் சுந்தரத்துக்கும் ஒரு வேலை கிடையாது. அத்தையும் சின்னம்மாவும் உடல் நலமின்றிப் படுத்தாலும் ஆண்கள் மாட்டைக் கூட இழுத்துக் கட்ட மாட்டார்கள். அவர்களுடைய உடுதுணிகளைக் கூட யாரேனும் துவைத்து வைக்க வேண்டும். இம்மாதிரியான கூட்டுக் குடும்பங்களில் ஆணுக்குச் சலுகை மிகவும் அதிகமாகக் கிடைப்பதாக ரேகாவுக்குத் தோன்றுகிறது. இதுவே அவரவர் தனியாக இருந்தால், மனைவி உடல் நலமின்றிப் படுத்தால் கணவன் தானே பொறுப்பேற்க வேண்டும்?

     அலுவலகத்துக்காக பஸ்சுக்குக் காத்திருக்கும் ரேகாவுக்கு மனம் எங்கெங்கோ அலைகிறது. இரண்டு கடைக்கப்பால் கிரசின் எண்ணெய்க்காகக் கூட்டம் நிற்கிறது. கல்லூரி மாணவர்கள் நாலைந்து பேர் பெரிய கருப்புக் கண்ணாடிகளும் பெண்பிள்ளைச் சட்டைகளுமாக வருகின்றனர். ரேகா பஸ்சுக்குக் காத்திருக்கும்படி நேர்ந்ததே இல்லை. நவீனமான கால்சட்டை மேல்சட்டை உடையில் இரண்டு பெண்கள் வந்து ஒரு புறம் நிற்கின்றனர். பரந்தாமனார் வீதியிலேயே அவர்களைப் பார்த்தாற்போல் நினைவு. அந்தத் தெருவிலே யார் யார் வசிக்கின்றனர் என்பது கூடத் தெரியாத அளவுக்கு ஒடுங்கிவிட்டார்கள். ஆண்களும் பெண்களும் ஒரே மாதிரி உடுத்து கல்வி பயில வருகின்றனரே, ஒரே மாதிரியான நிலையைப் பெறுகின்றனரா, சமுதாயத்தில்?

     “அலோ?...” என்று அந்தப் பெண் ரேகாவைப் பார்த்துச் சிரித்துக் கொண்டு வருகிறாள்.

     ரேகாவுக்குப் புதுமையாக இருக்கிறது.

     “நாங்கள் இளம் பெண்கள், முற்போக்குக் கழகத்தைச் சேர்ந்தவர்கள்” தொங்கும் பையிலிருந்து ஒரு அச்சடித்த சிறு தாளை அவளிடம் எடுத்துக் கொடுக்கிறாள் ஒருத்தி.

     இளம்பெண்கள் முற்போக்குக் கழகத்தில் சேருவதற்கான அச்சிட்ட தாள் அது.

     சில மாசங்களுக்கு முன்பாக இருந்தால் ரேகா அதைப் பார்க்காமலே “வேண்டாம்” என்று திருப்பியிருப்பாள்.

     முழுப் பெயர் - வயசு - தொழில் - படிப்பு - பெற்றோர் இருக்கின்றனரா, பெயர் - மற்ற விவரங்கள்.

     ரேகா திருப்பித் திருப்பிப் பார்க்கிறாள்.

     “இதில் என்ன செய்கிறார்கள்?”

     “அறிவுப்பூர்வமாக நாம் மதிக்கப்படப் போராடுகிறோம். ஆண்களுக்குச் சமமாகத் தொழில் துறை, ஊதியம், சலுகைகள் பெறுவதற்கு - விளம்பரம், கலை என்ற பெயர்களில் நம் இனம் இழிவு செய்யப்படுவதைத் தடுக்கப் போராடுகிறோம். பலபல திட்டங்களை உருவாக்க வேண்டும். ஆண்டுச் சந்தா ஐந்து ரூபாய்தான். நமக்கு நிறைய உறுப்பினர் வேண்டும்.”

     ரேகாவுக்கு அவர்கள் கடைசியில் கூறிய விவரம் உவப்பாக இருக்கிறது.

     “‘விளம்பரம் கலை என்ற பெயர்களில்... நம் இனம் இழிவு செய்யப்படுவதைத் தடுக்கப் போராடுகிறோம்’ என்றால் என்னனு புரியலியே?”

     மளமளவென்று பைக்குள்ளிருந்து ஒரு பத்திரிகைத் தாளை எடுத்து அவள் அங்கேயே விரிக்கிறாள். அதில் ஒரு பெண்ணின் இடைப் பகுதி, அடிவயிற்றுப் பகுதி ஆடையின்றி பெரிய அளவில் அச்சிடப் பெற்றிருக்கிறது. சில வடிவங்கள் - இலக்கங்கள் - என்று இரண்டுக்கு பொதுவான ஆங்கிலச் சொல்லைக் கையாண்டு, மறக்க முடியாது என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். கீழே, அது மின்னணுச்சாதனம் ஒன்றுக்கான விளம்பரம் என்று புலனாகிறது.

     விருவிரென்று முகம் சிவக்கிறது அந்தப் பெண்ணுக்கு.

     “இதை நாம் தடுக்க வேண்டும். ஒவ்வொரு பெண்ணும், நாம் ஒவ்வொருவரும் வெறும் பால்வேறுபாட்டை உணர்த்தும் சின்னமல்லவென்று நிரூபிப்போம்...”

     “உங்கள் பேரென்ன?”

     “நான் கீதா; இவள் உஷா, நாங்கள் ஆந்திரத்திலிருந்து வந்திருக்கிறோம். இங்கேயும் இயக்கத்தை வலுவாக்க வேண்டும்.”

     ரேகாவிடம் அன்று ஐந்து ரூபாயில்லை.

     “நான் நாளைக்குத்தான் பணம் கொண்டு வந்து கொடுப்பேன் போதுமா?”

     “ஓ, இங்கே நாங்கள் பள்ளித் தலைவியைச் சந்திக்க வந்தோம். நீங்கள் அலுவலக முகவரியைச் சொன்னால் வந்து வாங்கிக் கொண்டு திட்டங்களைச் சொல்கிறோம். இங்கே ஒரு ஐநூறு உறுப்பினர்களேனும் சேர்த்து நாங்கள் பொதுக்கூட்டமும், ஊர்வலமும் நடத்த வேண்டும் என்று முயற்சி செய்கிறோம்...”

     “நான் நிச்சயம் சேருகிறேன். உங்க விலாசம் சொல்லுங்கள்...” அவர்கள் எழுதிக் கொடுக்கின்றனர்.

     பஸ் வந்திருக்கிறது.

     ரேகா கிளர்ச்சியுற்றவளாக வர்களுடைய திட்டங்களைச் செவியுறுகிறாள். பொதுவாழ்வில் பெண்களை கீழான வகையில் பயன்படுத்தும் இழிவுகள், வரதட்சணைக் கொடுமைகள் எல்லாவற்றையும் ஒழிக்க வேண்டும். ஆம், பெண்களே அறியாமையில் மூழ்கி இந்த அவலங்களுக்கு உள்ளாகின்றனர். அவர்கள் விழிப்பெய்த வேண்டும். சுதந்திரம் என்ற பெயரில் ஏதோ மாயத்தில் மயங்கிக் கட்டுப்படுகின்றனர்... உஷாவும் கீதாவும் அவள் கையைப் பற்றி அன்புடன் அழுத்தி மறுபடி சந்திப்பதாகக் கூறி விடைபெறுகின்றனர். தொழிற்பேட்டையில் வழக்கமாக இறங்கும் பெண்களில் சிலரைப் பார்க்கும்போது, அந்த விளம்பரம் நினைவில் உறுத்துகிறது. மேசைக்கடியில் காலை அழுத்துவதும், தோளைத் தொட்டுவிட்டு “சாரி” என்று சிரிப்பதுமான சொல்ல இயலாத கொடுமைகளுக்கு விடிவு காலம்.

     அவன் நடையிலே ஒரு புத்துணர்ச்சி; கண்களிலே ஒரு புதிய நம்பிக்கை.

     அவள் அலுவலகத்தில் சென்றமர்ந்து, வழக்கமான செயல்களில் ஈடுபடுகிறாள். மறுநாள் ஐந்து ரூபாய் அம்மாவைக் கேட்டு வாங்க வேண்டும். ஐந்து ரூபாய்க்கு என்ன செலவு என்று பாட்டி உடனே கேட்பாள். முன்னேற்றக் கழகம், கூட்டம் என்று உண்மையைக் கூறினால் பைசா கூடக் கிடைக்காது. பொய்யை எப்படிக் கூறலாம்?

     அவள் மீது ஒரு காகிதத்துண்டு வந்து விழுகிறது.

     நம்பிதான்.

     அவள் ஆத்திரத்துடன் திரும்பாமலே உட்கார்ந்திருக்கிறாள்.

     “ரேக்...! ரே...க்! நாலு மாசம் முன்ன, மைசூர் கார்டன்சுக்கு எவ்வளவு கொய்யாக்கன்னு மால்டா எலுமிச்சையும் அனுப்பிச்சோம்னு பார்த்துச் சொல்லு?”

     ரேகா அலமாரியின் பக்கம் சென்று ஒரு தடிப்புத்தகத்தை எடுத்து வந்து புரட்டுகிறாள். “ஜூனிலா?...” அவள் மீது இடிப்பதுபோல் அவனும் குனிந்து கொண்டு பார்க்கிறான்.

     “சார்...? நம்பி சார்! நம்பி சார்?”

     சம்பங்கி எதோ தீப்பற்றி எரிவதுபோல் கத்துகிறான். ரேகாவுக்கு தூக்கிவாரிப் போடுகிறது.

     “நாய் பூந்திச்சு சார், உங்க சீட் பக்கம்...”

     ரேகாவுக்கு நெஞ்சம் விம்மித் தணிகிறது.

     “நாய் இந்த ஆபீசில எல்லா இடத்திலும் வருது. மனுஷங்க இருக்கிறாங்கன்னே நினைக்கிறதுக்கில்ல...” என்று முணமுணக்கிறாள்.

     நம்பி உதட்டைக் கடித்துக் கொண்டு இரண்டு கைகளையும் சராய்ப் பைகளில் மறைத்தவண்ணம் நிற்கிறான்.

     “அப்படியா சமாசாரம்” மனுஷங்களைவிட, நாய்க்கு நன்றியறிவு இருக்கும். இல்லையா ரேக்?”

     “இந்தாங்க சார். ஐம்பத்தைந்து, முப்பத்து நான்கு ஜூன் இருபத்துமூணு, அனுப்பினோம்.”

     அவன் அவள் கூறியதைக் கேட்கவில்லை. முகத்தைப் பார்த்துக் கொண்டு, “அப்படியா?” என்று கேட்பது போலிருக்கிறது.

     “ரேக், நீ ‘பத்மனாபா’வில் ஓடும் படம் பார்த்தாயா?”

     “படம் பார்க்கப் பொழுது கிடையாது; வளமும் கிடையாது; விருப்பமும் கிடையாது சார். ஆபீஸ் நேரத்தில ஏன் சார் இதை எல்லாம் பேசணும்.”

     “ஓ... கோ? ஐ ஸீ! நான் எதுக்குச் சொன்னேன்னா, உங்கப்பாவைப் பத்தி அன்னிக்குச் சொன்னேயில்ல? அப்படியே ஒரு ஆள் வராரு...”

     அப்பா என்ற சொல்லைக் கேட்டதும் தன்னையறியாமலே அவள் திடுக்கிட்டாற்போல் நிமிருகிறாள்.

     அவன் சிரித்துக் கொள்கிறான். “ஓடிப்போயிருந்த குடும்பத் தலைவன் ஒரு நாளைக்கு வருகிறான். அவனை அந்த வீட்டு நாய் அடையாளம் தெரிஞ்சிக்கிது. மனுஷர்கள் புரிஞ்சிக்கல. இவன் செத்துப் போயிட்டான்னு கர்மம் செஞ்சிட்டாங்க. அதனால், ஏத்துக்கறதுக்கு இல்லன்னு அந்த ‘ஆர்தடாக்ஸ்’ குடும்பம் சொல்லுது. ரியலிட்டிக் படம். நீ என்ன இன்னும் போய்ப் பார்க்கலேன்னு சொல்றே?”

     “செத்துப் போயிட்டான்னு யாரு கர்மம் செஞ்சது?”

     “பெண்சாதி, அவன் தம்பி. ஆனால் உண்மையிலே என்ன காரணம் தெரியுமா ரேக்?”

     கண்களில் ஒரு விரசமான மின்னல் பளிச்சிடுகிறது.

     அவளுடைய மறுமொழிக்கே காத்திராமல் அவன் சொல்லும் மறுமொழியில் அவளுடையே உடலே பற்றி எரிவது போலிருக்கிறது. சில வினாடிகள் அவள் சிந்தனையே செய்யத் தரமின்றிச் சிலையாக நிற்கிறாள். குப்பையிலிருந்து வாடிய பூச்சருகு காற்றில் எழும்பி வந்து விழுந்து தீய நாற்றத்தைக் கிளப்பிவிட்டாற் போலிருக்கிறது.

     “ஏன் பேசல ரேக்? படம் பார்க்கப் போகலாமா? இன்னிக்குத் தான் கடைசி நாள். நானே வீட்டில் கொண்டு வந்து விட்டுடுவேன்...”

     “நான் பார்க்கணும்னா எங்க வீட்டிலே கூட்டிட்டுப் போவாங்க சார், ரொம்ப தாங்க்ஸ்...”

     அவள் காலையில் சந்தித்தவர்களை மறந்து போகிறாள். குடும்பத்தின் வறுமை நிலையை மறந்து போகிறாள். சிவகாமியின் - தாயின் மெலிந்த உருவம் தோன்றுகிறது. சிற்றப்பன் மாமன்...

     சீ! அப்படியும் இருக்குமா?

     அவளுடைய வீடு கற்கோட்டை. ஆனால் அம்மா அப்பாவை எப்படி மறுத்தாள்? மாமன் தோற்பட்டை கொண்டு ஏன் அடித்தார்? உண்மையையும் பொய்யையும் வரையறுக்கும் கோடு கத்தி முனையாக இருக்கிறது. அந்த முனைமீது நிற்கத் தெம்பில்லாத வெண்ணெய்ப் பதத்தினை போல அவள் எண்ணாததெல்லாம் எண்ணுகிறாள்.

     அன்றிரவு அவளுக்குக் கண்களைக் கொட்ட உறக்கம் வரவில்லை. தாயின் ஒவ்வொரு செயலையும் இரவின் அமைதித் திரையில் நினைவுகள் காட்சியாக்கிப் பார்க்கின்றன.

     மாமனுக்கும் சிற்றப்பனுக்கும் காபி கொடுத்து, சோறு போட்டு, சுடு நீர் வைத்து, வேற்றுமையில்லாமல் அவளுடைய அன்னை நடக்கிறாள். இப்படி ஒரு... செய்தி விகல்பமாக அவளுடைய மறுப்புக்கு காரணமாக இருக்க முடியுமோ?

     ஆண்டவனே!

     மண்டை நரம்புகள் வெடித்துவிடும் போலிருக்கிறது.

     குடும்பம் என்ற அமைப்பில் முன்னிரவில் உணவு கொண்டதும் அறைகளைத் தாழிட்டுக் கொண்டு அவரவர் படுக்கைக்குச் செல்லும் ஒரு ஏற்பாடு கூட விவரம் புரிந்த பின்னரே வித்தியாசமாகத் தோன்றியிருக்கிறது. சினிமாவுக்குக் கூட குழந்தைகளை அழைத்துச் செல்ல மாட்டார்கள். மிகவும் அபூர்வமாக சுவாமி படம் வந்தால்தான் அழைத்துச் செல்வார்கள்.

     பத்மனாபாவில் சென்று அந்தப் படத்தைப் பார்க்க வேண்டும்.

     ஜானிராஜிடம் அவள் தந்தையைப் பற்றி விசாரிக்கச் சொல்லி ஒரு மாசமாகி விட்டது. ஜானிராஜை அவள் இன்னமும் அன்றுபோல் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அவரையே அழைத்துக் கொண்டு அந்தப் படத்தைப் பார்க்கப் போனால்?

     மறுநாள் ஐந்து ரூபாய் கேட்கும் விஷயத்தையே மறந்து போய் சமையலறையில் அமர்ந்திருக்கிறாள்.

     “என்ன அக்கா? அரிசி எப்படி இருக்கு?” என்று மாமன் சமையலறையில் வந்து நின்று கேட்கிறார்.

     திறந்த மேனியுடன் ஒற்றை வேட்டியுடன் அவர் வந்து உள்ளே அம்மா சாதம் வடிப்பதைப் பார்க்கிறார்.

     அப்பா இந்தச் சமையலறைக்குள் வந்திருப்பாரோ?...

     சீ, இந்த மாமன் அம்மாவுக்கு சோதரன், எனக்கு ஏன் புத்தி பேதலித்துப் போகிறது?

     “ஏம்மா ரேகா? கண்ணெல்லாம் செவந்து கிடக்கு? தூங்கல ராத்திரி?” மாமனின் கேள்விக்கு மறுமொழி கூறாமல் அவள் நிமிர்ந்து பார்க்கிறாள்.

     “ஆமாம். குடைஞ்சிக்கினிருந்தா. மூணு தரம் எந்திரிச்சுத் தண்ணி குடிச்சிது. பாட்டிகிட்ட திருநீறு வாங்கி இட்டுக்கக் கண்ணு! ஒரு நாளைப் பார்த்தாப்பல ஆபீசிலேயிருந்து வரச்ச இருட்டிப் போயிடுது!”

     அம்மா! அம்மா! அம்மா! என்று உள்ளம் விம்முகிறது.