4

     பஸ் கிண்டிக்கு வருமுன்பே நடத்துனர் குரல் கொடுக்கிறார்.

     “‘காம்ப்ளெக்சு’க்குள் பஸ் போகாது. உள்ள போகணுங்கறவங்க மெயின் ரோடில் இறங்கிக்குங்க...”

     “ஏன்? என்ன ஆச்சு?” என்ற கேள்விக்குறியைத் தொங்கவிட்டுக் கொண்டு ரேகா சுற்றுமுற்றும் திகிலுடன் பார்க்கிறாள். இதை முன்பே ஊரில் புறப்படும் போதே சொல்லித் தொலைத்திருக்க மாட்டானா? “ஏங்க? போகாதா?”

     “டெக்னாலஜி ஸ்டூடன்சுக்கும் யாரோ பஸ் கண்டக்டருக்கும் தகராறு போல இருக்கு. பேப்பரில் பார்த்தேன்...” என்று அந்த ஊர்தியில் வந்து கிண்டி ஆராய்ச்சி நிலைய நிறுத்தத்தில் இறங்கும் பெண்மணி விவரம் கூறுகிறாள்.

     ரேகா காலையில் செய்தித்தாள் பார்க்கவில்லை.

     தொழிற்பேட்டையின் இறுதி நிறுத்தத்தில் இறங்கினாலே அவளுடைய மூலை அலுவலகத்துக்குச் சிறு நூறு மீட்டர் நடக்க வேண்டும். சாலையிலேயே இறங்கினால் இரண்டு, மைலுக்குக் குறையாத தொலைவு நடக்க வேண்டுமே? ரிக்‌ஷா எதுவும் இருக்காது. இருந்தாலும் இரண்டு, மூன்று கூலி கேட்பான். அவளுடைய பர்சில் பஸ் கூலிக்குமேல் ஒரு ரூபாய்தான் இருக்கும்.

     சாதாரணமாக அலுவலகத்தில் நம்பிதான் அவளுக்கு ‘பாஸ்’ என்று கொள்ள நடப்பவன். ஜானிராஜ் தோட்டத்துறை அனுபவம் உள்ளவர். அவர் அநேகமாக அலுவலகத்திலேயே இருப்பதில்லை. அவர்களுடைய பொறுப்பில் நகரத்தின் பல பகுதிகளிலும் பூங்கா, தோட்டங்கள் இருக்கின்றன. அவற்றைக் கண்காணிக்கப் போய்விடுவார். எனினும் அன்றாடம் ஒருமுறை அலுவலகத்துக்கு வந்து போவார். உண்மையான அதிகாரி கோகுல்தான் மன்மோகனின் இளைய மகன். அவன் உல்லாச புருஷன் என்றும், நம்பிக்குத் தோழன், வேண்டியவன் என்றும் அவள் அங்கு அடியெடுத்து வைத்த சில நாட்களிலேயே புரிந்து கொண்டிருக்கிறாள். தொழிற்பேட்டைக்கு அப்பால் விரிந்துகிடந்த இருபது ஏக்கர் பரப்பில், அந்தச் செய்வனத்தின் முன் ஓட்டுக் கரை போட்ட அலுவலகத்தை முதன்முதலில் பார்த்த போது அவளுக்குப் பரவசமாக இருந்தது. வண்ணங்கள் குலுங்கும் மலர்கள் இளங்காற்றில் அசைந்தாடின. குளிர்ச்சியான இயற்கையின் சூழலில் அது சுவர்க்க வாயிலைப் போன்று தோன்றியது. ‘மானேஜர்’ என்று அறிவித்த அறையில் அன்று பெரியவர் மன்மோகன் அமர்ந்திருந்தார். அவர் என்றோ ஒருநாள்தான் வருவார் என்றும், கோகுல்தான் அந்தப் பொறுப்பை ஏற்றிருப்பவன் என்ற விவரம் அவளுக்குப் பிறகுதான் புரிந்தது. நம்பிக்கும் ஜானிராஜுக்குமாக ஒரே அறையை அட்டைத் தட்டிகொண்டு மறைத்து இரண்டு பிரிவுகள் ஆக்கியிருந்தனர்.

     தங்களுடைய கிராமியச் சூழல் வீட்டிலிருந்து முற்றிலும் செயற்கையான, வணிக வீதியிலுள்ள நிறுவனத்தில் அவளுக்கு வேலை கிடைத்திருந்ததால் அவள் திண்டாடிப் போயிருப்பாள். முதல் சில நாட்களுக்கு அவன் அலுவலக வேலை பழகுமுன் இதுவே கடினமாக இருந்தது. அவளுக்குச் சரளமாக ஆங்கிலம் பேசத் தெரியவில்லை. எனவே முதல் நாளே கோகுல் ஏதோ கேட்டதற்கு நடுங்கிக் கொண்டு தவறான மறுமொழியைக் கொடுத்தாள். கோகுல் கோபமாக “உனக்கு நூற்றைம்பது ரூபாய் சம்பளமா? ஒண்ணும் தெரியலியே!” என்றான். ஆனால் நம்பிதான் வேலை கற்றுக் கொடுத்தான்.

     “சே, சே, இதுக்குப் போய் அழுவுறியே? கோகுல் நல்லவன். முதலாளிங்க அப்படித்தான் இருப்பாங்க. போ போ. முகத்தைக் கழுவிட்டுப் பவுடர் போட்டுட்டுச் சிரிச்சிட்டு உக்காரு!” என்று சொல்லிக் கொடுத்தான்.

     மாமா ஒருநாள் அவளைக் கூட்டிக்கொண்டு அலுவலகத்தைப் பார்க்க வந்தார், “வாங்க சார். மானேஜர் இன்னிக்கு வரலே. நான் தான் அந்த சீட்ல இருக்கறவன்... நீங்க கவலையே படாதீங்க சார்! நான் அஞ்சு சிஸ்டர்ஸ் கூடப் பிறந்தவன். ஒண்ணைக் கட்டிக் கொடுத்தோம். அதும் வீட்டுக்கு வந்திட்டது. எல்லாம் வேலைக்குத்தான் போறாங்க. அதனாலேயே நான் வேற கலியாணம் பண்ணிக்க வேண்டாம்னு இருக்கேன். ரேகாவை நான் கவனிச்சிக்கறேன். என் சிஸ்டர் மாதிரி...” என்று அவரைக் குளிர வைத்தான். சம்பங்கியைத் தொழிற்பேட்டைக்குள் சென்று காபி வாங்கி வரச் செய்து கொடுத்தான். அவருக்கு வாயெல்லாம் பல். “தொரை சொன்னது மெய்தாம்மா. ஆபீசு மாதிரியேயில்ல. அந்தப் புள்ளாண்டான் நல்ல மாதிரியாயிருக்கிறான். கவலையே படவேணாம். என் தங்கச்சிங்க அஞ்சு பேரும் ஆபீசுக்குப் போறாங்கன்னான்...” என்று பாட்டியிடம், அவளை வேலைக்கு அனுப்பும் உறுத்தல் மறைந்து கரையத் தேங்காய்ப் பாலாய்ச் சொற்களை வழியவிட்டார். முதல் சம்பளத்தை அவள் பெற்றுக் கொண்டு பாட்டியிடம் கொடுத்ததும் பாட்டியின் முகத்தில் மலர்ச்சி கூடியது.

     ஜானிராஜுக்கு நாற்பத்தைந்து வயசுக்கு மேலிருக்கும். “சேல்ஸ் பார்த்துக்க வேணும்னு நான்தான் கேட்டுக்கிட்டே இருந்தேன். உன்னைப்போல எனக்கு டாட்டர்ஸ் இருக்காங்க” என்று பரிவுடன் அவளுடைய அச்சத்தைப் போக்கினார். அந்தப் பிரிவில்தான் அவளுக்கு இடம் போட்டுக் கொடுத்திருந்தார்கள்.

     ஆனால், நம்பி... நம்பி.. நம்பவும் முடியவில்லை; நம்பாமலும் இருக்க முடியவில்லை. சரளமாகப் பேசும்போது, அவன் தனக்கு மேலான பதவியில் உள்ளவன் என்ற அச்சம் மறந்து தோழமை இணைந்த பாவம் தோன்றுகிறது. மெள்ள மெள்ள அவன் எப்படி உரிமை எடுத்துக் கொண்டான் என்று புரியாமலே நெருங்கியிருக்கிறான். “நீ விவரம் தெரியாத சுத்தக் கண்ட்ரியா, வெள்ளையா இருக்கே. அந்த ஆள் நல்லவன்தான். ஆனா, நல்லா தண்ணி போட்டுடுவான். அவங்க ஆசாரம் அது. உனக்குத் தெரிஞ்சிருக்கட்டும்னு சொல்லி வச்சேன்” என்றான் ஒரு மாதிரியாக.

     “ஆபிசுக்கு மேல நமக்கு ஏன் வீணான கவலை? பார்த்தால் நல்லவராகப் பழகுகிறார்...” என்றாள் அவள்.

     “பார்த்தால் எல்லாரும் நல்லவர்தான். நானும் தப்பு சொல்லலே. ஒருதரம் மானேஜர் இங்கே வந்து ஆர்ச்சர்ட் பங்களாவில் தங்கிட்டுப் போறப்ப, யாரோ கெஸ்ட்டுக்குன்னு வாங்கி வச்சதை அலமாரியில் வச்சிட்டுப் போயிட்டார். காலையில் ஆபீசுக்கு வந்ததும் ஐயா அதை மறைச்சு வச்சுட்டு ‘பாம்க்ரோவ்’ பக்கம் ரெஸ்ட் எடுத்துக்கறேன் நம்பின்னு போய்க் குடிச்சிட்டான். அப்ப பாஸ் யாரையோ சினிமாகாரங்களைப் பெரிய ஆர்டருக்கு அழைச்சிட்டு வந்தார். பெரியவருக்கு இந்த முறைகெட்டதனம் பிடிக்கலே. வேலை நேரத்தில் குடிக்கலாமா?”

     அவளுக்குக் கரும்புகையாய்த் திகில் பரவியது.

     அவன் அவள் முகத்தையே பார்த்துவிட்டு, “அப்புறம் நான்தான் பெரியவரிடம் போனாப்போவுது தெரியாம செஞ்சிட்டான்னு சொல்லிக் கோபத்தைத் தணிச்சேன். இந்த ஜானிராஜ் கவர்மென்ட் கார்டன்ல இருந்தவன். ஊழல் திருட்டிலே மாட்டிக்கிட்டு வேலை போயிட்டது. இப்ப இங்கே வந்து மூணு வருஷமாகுது. சம்சாரி. ‘நம்பி, பாஸ் என்ன சொன்னாரு? கோபிச்சிட்டாரு?’ன்னு என்னிடம் கெஞ்சினான். அன்னிக்கு அவனுக்கு வேலை போயிருக்கணும். அதான் உன்னிடம் ஜாக்கிரதையா இருன்னு சொல்லி வச்சேன்!” என்றான்.

     ஆனால்... ஆனால்.... நம்பி... எத்தகையவன்?

     சாலையில் பஸ்சுக்குத்தான் கூட்டம் காத்திருக்கிறது. பேட்டையின் குறுக்காகச் செல்லும் பாதையில் கார்களும், ஸ்கூட்டர்களும் சைக்கிள்களும் செல்கின்றன. வெயில் சுள்ளென்று விழுகிறது. அவள் நடப்பதைத் தவிர வேறு வழியில்லை.

     முதுகும் முன்வயிறும் தெரிய உடை உடுத்துக் கொண்டு அலுவலகப் பெண்கள் கைப்பையுடன் நடக்கின்றனர். வெயிலுக்கு ஒரு கருப்புக் கண்ணாடி வாங்கிக் கொள்ள வேண்டும் என்ற ஆசை அவளுக்கு. ஆனால் பாட்டி கண்டால் குதறிவிடுவாள். செவிகளில் வளையம் போட்டுக் கொள்ளவே சம்மதிக்கவில்லை. சிறு பொன்னணி போட்டுக் கொண்டிருக்கிறாள். கூந்தலை அழுந்தவாரி நுனி வரையிலும் பின்னி நாடா முடிச்சிட்டிருக்க வேண்டும். இடை தெரியாமல் சோளி அணிந்தாலும் பின்தலைப்பு முதுகை மூட வேண்டும் என்பது விதி. ரேகா என்று கூடப் பாட்டி அழைக்கமாட்டாள். சொர்ணம்மா என்றுதான் அவள் அழைப்பாள்.

     கைப்பையில் சிறு சம்புடம் குலுங்க, அவள் நீண்டு சென்ற பசுமையற்ற சிமந்துக்கூரைக் கொட்டகைகளையும் தார் சாலையையும் கடந்து அவளுக்குப் பரிசயமான பசுமையான சூழலுக்குள் நுழைகிறாள்.

     வாயிலில் ஜானிராஜின் ஸ்கூட்டர் இல்லை. வழக்கம்போல் அவர் நேரம் சென்று வருவார். கண்ணாடி ஜன்னல் கதவுகள் திறந்திருக்கவில்லை. ரேகாவிடம் இன்னமும் கைக்கடியாரமில்லை. மணி பத்தரையாகியிருக்குமோ? ஒருகால் கோகுல் வந்திருந்து சத்தம் போடுவாரோ? ஆனால் கார் எதையும் காணவில்லை. அவள் திறந்த அலுவலகத்துக்குள் செல்கிறாள். அவள் இருக்கையைத் தட்டிவிட்டு உட்காருகையில் நம்பி அங்கே வந்து விசிறிக்கான விசையைத் திருப்புகிறான்.

     “ரொம்ப தாங்க்ஸ்... மணி என்ன ஆகுது? பஸ் இல்ல இங்க. நான் வர அதனாலதான் லேட்டாயிட் டது...” என்று பணிவுடன் கூறுகிறாள்.

     “இன்னிக்கு ஆபீசுக்கு யாரும் வரமாட்டாங்க...”

     அவளையே அவன் பார்க்கிறான். சற்று பொறுத்து, “அவங்க வீட்டிலே, கிழம், ஒண்ணு மண் டையப் போட்டுடிச்சி. லீவு...” என்று தெரிவிக்கிறான்.

     “நிசமாவா?”

     “பின்ன பொய்யா சொல்றேன்? பதினோரு மணிக்கு நாம் கதவை அடிச்சிட்டுப் போக வேண்டியதுதான்...”

     அவனுடைய தாழ்ந்த நோக்கில் ஏதோ ஒரு கபடம் ஊடுருவுவது போல் அவளுக்குத் தோன்றுகிறது.

     “இது உண்மைதானா!" என்று மருளும் விழிகளுடன் அவள் கைகளை உதறிக்கொண்டு நிற்கிறாள். தன்னந்தனியே அவனோடு விடப்பட்டிருப்பது புதியதோர் வகையில் அச்சத்தைத் தோற்றுவிக்கிறது. அவள் ஜன்னலைப் பார்க்கிறாள். தொழிற்கூடங்கள் நீண்டு நீண்டு செல்லச் சாலை தொலைவில் இருக்கிறது.

     “இன்னிக்கு பஸ் இங்கே உள்ளே வரலியே? நீ எப்படி வந்தே?”

     “கஷ்டமாத்தான் போச்சு. பஸ்சில ஏறும்போதே தெரிஞ்சிருந்தால வந்திருக்க மாட்டேன். பேப்பரில் வந்ததுன்னுகூடச் சொல்லிட்டாங்க.”

     “நீ பேப்பர் பார்க்கிற வழக்கமில்லியா?”

     “காலையிலே பேப்பர் பார்க்க நேரமிருக்காது. மாமன் சித்தப்பா, ரெண்டு பேரும் பார்த்திட்டிருப்பாங்க...” என்று கூறி நிறுத்துகிறாள். அவன் அவளை உட்காரச் சொல்லவில்லை; தானும் உட்காரவில்லை. அருகில் வந்து நின்று கொண்டே இருக்கிறான்.

     “ஜானிராஜ் கொஞ்சம் முன்ன, நான் வந்ததும் டெலிபோன் பண்ணினான். ஆளுங்களெல்லாம் காலையிலேயே அழைச்சிட்டுப் போயிட்டிருக்கிறான். காலையிலே பேப்பர் பார்க்கவேணாம்?”

     காலையில் எழுந்து தாய்க்கு உதவியாக நான்கு குடம் நீர் இறைத்து விட்டு, பொடிசுகளுக்குத் தலைசீவி விடுவாள். “சொர்ணம்மா, அந்தக் கன்னுக்குட்டிச் சனியன் அவுத்துக்கிச்சு பாரு. உனக்குத்தான் அது வரும்...” என்று பாட்டி இடையில் குளிர்வித்து வேலை வாங்கிக் கொள்வாள். பிறகு குளித்துத் தன்னைச் சீராக்கிக் கொண்டு பஸ்சுக்கு வரத்தான் பொழுதிருக்கும்.

     அவள் அவனிடம் எதுவும் பேசாமல் முதல் நாள் பகுதி வைத்த பட்டியலை எடுத்து விலை பார்த்து எழுதப் பேரேட்டுப் புத்தகத்தை எடுக்கிறாள்.

     அவன் அவளுக்கு எதிராக நாற்காலியைப் போட்டுக் கொண்டு அமருகிறான்.

     அவள் உள் நடுக்கமும் ஒடுக்கமுமாக அமர்ந்து பேரேட்டைப் புரட்டுகிறாள்.

     “என்ன எழுதியிருக்கே?” என்று பார்ப்பவன் போல் தலை சாய்க்கையில் மேசைக்கடியில் கால் அவ ளுடைய பாதத்தை அழுத்துகிறது.

     அவள் தேள் கொட்டினாற்போல் துள்ளி எழுந்திருக்கிறாள். அவனுடைய விழிகளில் ஒரு “அந்தரங்க பாவம்” இறைஞ்சுவதுபோல் தோன்றுகிறது. நா அதற்குத் தொடர்பே இல்லாமல் சொற்களைக் கூட்டுகிறது.

     “இன்னிக்கு நீ மட்டும் எதற்கு வேலை செய்யனும்? நான் வேலை செய்யப் போறதில்ல. நான் இங்கே எதுக்குக் காத்திட்டிருந்தேன்?... நீ என் சிஸ்டர் மாதிரி. எனக்கு எப்பவும் அப்பிடியே தோணுது. “ரேக்” குனு கூப்பிட்டு உன்னை ஒரு குட்டு குட்டி உக்காத்தி வைக்கலான்னு தோணுது. நீ வெறும் வெள்ளையாயிருக்கே. அது கூட இல்ல. பச்சையா இருக்கே...”

     “சார்... அப்படீன்னு மொத்தமா நினைக்க வேண்டாம்" என்று துணிகரமாக அவனைக் கண்டிக்க வாயெடுத்தாலும் படபடப்பாகப் பேசத் துணிவு வரவில்லை.

     அவன் சிரிக்கிறான்.

     “உனக்காகத்தான் ‘ரேக்’ நான் இங்கே முன்னமே புடிச்சி வந்து காத்திட்டிருக்கிறேன். இந்த அசட்டுப் பொண்ணு தனியாக வந்து நிக்கப் போறதே, யார்னாலும் குடிச்சிட்டு வந்து இழுத்திட்டுச் சோலைக்குள்ள பூந்தா கத்தக்கூடத் தெரியாதே, அப்படிக் கத்தினாலும் யாருக்கும் கேட்கப் போறதில்லையேன்னு நினைச்சேன். நான் நினைச்சாப்போல, நீ மங்கு மங்குன்னு நடந்து வந்திருக்கே; ஆபீசில் யாருமில்ல. வேலையாளுங்க யாருமில்ல... அசடு...!”

     இந்த அபாயங்களெல்லாம் இப்போது இருக்கின்றன என்று அவன் அறிவுறுத்துகிறானா? அல்லது... உண்மையிலேயே இங்கே ஆட்கள் எவரும் நடமாட்டமில்லை என்று துணையாக நிற்கிறானா? மேசையின் கீழ் காலை அமுக்கும் இவன்.. இவன்...

     செவிகள் அடைக்கும் போலிருக்கிறது. நெஞ்சில் எரியுணர்வு பரவுகிறது.

     “இன்னிக்குப் போறப்ப எப்படி போவே?”

     “தெரியாம வந்திட்டேன். நடந்துதான் போகணும்...”

     “ஜானிராஜ் ஸ்கூட்டர் கொண்டாந்து ஏத்திட்டுப் போவான்!” என்று கண்களைச் சிமிட்டுகிறான்.

     அவள் எதுவுமே பேசாமல் ஜன்னலை வெறித்துப் பார்க்கிறாள். அவனுடைய நோக்கு அவளுடைய கைப்பையில் மேலாகத் தெரியும் ‘டிபன் சம்புடத்தில்’ விழுகிறது.

     “இன்னிக்கு என்ன டிபன் கொண்டு வந்திருக்கே. கர்ட் பாத் வித் மாங்கோ பிக்கில்சா?”

     அவள் எழுந்து வெளியே வருகிறாள். சாலையில் சைகிளில் தபால்காரன் வருவதைப் பார்த்துவிட்டாள்.

     அவனும் வெளியே வருகிறான்.

     “ஏய்யா, இன்னிக்குச் சீக்கிரமா தபால் கொண்டு வந்திட்டியே?” என்று கேட்டுக் கொண்டே நம்பி தபால்களை வாங்குகிறான். ஒரு வி.பி.பி. மணியார்டர் முப்பத்தேழு ரூபாய் வந்திருக்கிறது. பணத்தை எண்ணி வாங்கிக் கொள்கிறான்.

     “பூ, ஒரு நூறு இரு நூறு இருந்தாலேனும் எடுத்திட்டுப் போகலாம். முப்பத்தேழு ரூபாய் பிசாத்து யாருக்கு வேணும்! இந்தா, நீயே வச்சுக்க!” என்று அவள் கையில் கொடுக்கிறான்.

     அவள் எதுவும் பேசாமல் பணத்தை வாங்கி மேசை இழுப்பறையில் வைத்துப் பூட்டிவிட்டுப் பதிவு செய்கிறாள்.

     அவன் அலுவலகக் கடிதங்களைப் பிரித்துப் பார்த்துவிட்டுப் போடுகிறான்.

     மணி ஒன்று என்பதை அறிவுறுத்தும்படி தொழிற்சாலை சங்கு ஒலிக்கிறது.

     “உனக்குப் பசி எடுக்கலே ரேக்?” என்று அவன் சோம்பல் முறிக்கிறான்.

     “வீட்டுக்குத் திரும்பிப் போகும் கவலையில் பசியே தெரியல.” அவள் முணமுணக்கிறாள்.

     “வீட்டுக்குப் போறியா? என்ன ரேக், முணமுணக்கிறே?”

     “என்னை ரேகான்னே யாரும் வீட்டில் கூப்பிட மாட்டாங்க சார் சொர்ணான்னுதான் கூப்பிடுவாங்க.”

     தன்னுடைய அதிருப்தியை அவனிடம் எப்படி வெளியிடுவதென்று புரியவில்லை, அவளுக்கு.

     “சொர்ணான்னு சொன்னா எனக்குப் பிடிக்கல. சொர்ணா சொரணை இல்லாதன்னுதான் தோணுது...” என்று சம்பந்தம் இல்லாமல் சிரிக்கிறான். நல்ல சிவப்பு; மீசையில்லை. எனினும் கற்றையான அடர்ந்த முடி. பெண்மை கலந்த சாயலுடைய கவர்ச்சியான முகம். சிரிக்கும் போது அது இன்னமும் கூடுகிறது.

     அவன் அவனுடைய கைப்பையிலிருந்து சம்புடத்தை எடுத்துத் திறக்கிறான். “ஆகா! மாகாளிக் கிழங்கு பிக்கில்ஸ். மாகாளிக் கிழங்குக்கு என்ன இங்கிலீஷ் ரேக்?”

     எரிச்சலை அடக்கிக் கொண்டு, “நான் பாடனி படிக்கலே சார்” என்று மறுமொழி கொடுக்கிறாள்.

     “எனக்கு மோர் சாதமே பிடிக்காது...” என்று கூறிக்கொண்டே, அம்மா அதில் அவள் கை ஒட்டாமல் உண்ணப் பாங்காக வைத்திருக்கும் சிறு தேக்கரண்டியால் அவன் நான்கு வாய் போட்டுக் கொள்கிறான்.

     ஜானிராஜின் ஸ்கூட்டர் வரும் ஓசை கேட்கிறது.

     அவள் திடுக்கிட்டுத் திரும்புமுன் ஜானிராஜே ‘ஹெல்மெட்’டைக் கையில் எடுத்துக் கொண்டு வருகிறார்.

     குட்டை மீசை விரியச் சிரித்துக் கொண்டு, “சாப்பாட்டு நேரமா? நான் வேண்டாம வந்திட்டேன் போல இருக்குது!” என்று கண்களைச் சிமிட்டுகிறார். அவளுக்குக் கிடுக்கியில் மாட்டிக்கொண்டாற் போலிருக்கிறது.

     “எக்ஸ்க்யூஸ்மி!” என்று ரேகாவிடம் கூறிவிட்டு உள்ளே வந்து அலமாரியில் ஏதோ காட்லாகைத் தேடுகிறார்.

     “நாலு மாசம் முன்ன வந்த கேட்லாக் எங்கம்மா?”

     “இங்கதான் சார் இருக்கும்!” என்று அவளும் தேடும் சாக்கில் எழுந்திருக்கிறாள்.

     அவர் நாவைத் தொட்டு ஒவ்வொரு பக்கமாக புரட்டுகிறார்.

     “இந்தாம்மா ரேகா, ஒரு பில் போடு. லேடிலைஸ் ஒரு நாலு தொட்டி, பிரின்ஸ் அப் வேல்ஸ் தொட்டி, தென்னை யாழ்ப்பாணம் பத்து, ஒட்டுக் கொய்யா பங்களூர் ரகம் பத்து... சம்பங்கி எல்லாம் கொண்டு வருவான். பாத்து பில் போடு. நான் வரேன் அரைமணியில்...”

     “சரி சார்!...”

     அவர் விருவிரென்று ஸ்கூட்டரில் ஏறிக்கொண்டு செல்கிறார்.

     ரேகா நம்பியைத் துணிவுடன் விழித்துப் பார்க்கிறாள்.

     “அலுவலகம் இல்லை என்று பொய்யா சொன்னீர்கள்?” என்று கேட்கும் பார்வை.

     அவன் அவளுடைய சாப்பாட்டில் நான்கு வாய் சாப்பிட்டுவிட்டு சாவகாசமாக ஸ்பூனை பானையிலிருந்து நிரெடுத்துக் கழுவிக் கொண்டு வந்து வைக்கிறான்.

     பட்டியல் எழுதும்போது ஆத்திரமாக வருகிறது. கயவன் அவளிடம் பொய் கூறுகிறான்; நையாண்டி செய்கிறான். என்ன பொருள்?

     அரைமணியில் வந்து விடுவதாகக் கூறிச் சென்ற ஜானிராஜும் வரவில்லை. சம்பங்கியும் செடி வகையறாக்களுடன் வரவில்லை. நம்பி புகைபிடித்துக் கொண்டு வெளியே ஜன்னல் அடியில் நின்று அவளையே பார்க்கிறான்.

     ஒரு சுண்டைக்காய்க் கொசு கையில் சுருக்கென்று கடிக்கிறது. அப்போதுதான் மின்விசிறி கழலவில்லை, விசை நின்றுவிட்டது என்று புரிகிறது. அவள் அந்தக் கொசுவைச் சுற்றிச் சுற்றி இரு கைகளுக்குள், அடித்து நசுக்க முயற்சி செய்கிறாள்.

     நம்பி ஜன்னலுக்கு அப்பால் சிரிக்கிறான்.

     “அதை அப்படி நசுக்க முடியாது!” என்று கூறும் அவனே அந்தக் கொசுவைப் போல சுற்றி வருவதாகத் தோன்றுகிறது. ஒரு மணிக்கு வயிற்றுக்குப் போட்டுப் பழகியிருப்பதால், பசியுணர்வு குழி பறிக்கிறது. ஆனால், அவன் உண்டு மிச்சம் வைத்திருக்கிறான். இப்படி அடுத்து அடுத்து உரிமைகள் எடுத்துக்கொள்ளும் இவனை எப்படி விலக்குவது?

     சந்தனசாமி நல்லவேளையாக குரோட்டன்ஸ், பூச்செடிகளைக் கொண்டு வந்து வைக்கிறான்.

     ஜானிராஜ் முன்னே வர, ஒரு நில வண்ணக் கார் வருகிறது.

     அவர்கள் சென்ற பின்னரும் நம்பி அங்கேதான் சுற்றிக் கொண்டிருக்கிறான். இப்படி அவன் இத்தனை நாட்களில் அச்சம் ஊட்டும்படி நடக்கவில்லை. அவளுக்கு இயற்கைக் கடன் கழிக்கச் செல்லவும் அச்சமாக இருக்கிறது.

     வேறு வழியில்லாமல் அவன் உண்ட மிச்சத்தையே எடுத்து விழுங்குகிறாள். பசி உணர்ச்சிக்கு இதமாக இருக்கிறது.

     அவன் இன்று அலுவலகம் லீவு என்று சொன்னதெல்லாம் பொய்.

     இந்த வேலையை விட்டுவிட்டு வேறு எங்கே வேலை தேடிக் கொள்ள முடியும்? வீட்டில் இவனைப் பற்றி யாரிடம் சொல்லி என்ன வழி கேட்க முடியும்? இவன் முதலாளி கோகுலின் இருக்கையில் சமமாக அமருகிறான்; வண்டியில் போகிறான்; வருகிறான். ஜானிராஜ்கூட இவனிடம் எதுவும் பேசுவதில்லை. இவன்...

     கண்ணீர் மல்குகிறது.

     வீட்டுச் சிறையை விட்டு வெளியே வந்தவளுக்கு, இதுவும் ஒரு சிறையாகுமா? தோழமைக்கு ஒரு பெண் இல்லை. அவன் கூறினாற் போல் இங்கே முறைகேடு நடந்தால் கத்தினால்கூட வெளியே கேட்காது.

     நான்கு மணிக்கு கோகுலும் நம்பியும் பேசிக் கொண்டு வருகின்றனர். கோகுல் கால்மணி நேரம் இருக்கையில் அமர்ந்து தபாலைப் பார்த்து விட்டு ஜானிராஜிடம் சில உத்தரவுகளை இடுகிறான். பிறகு இருவருமாகச் செல்கின்றனர்.

     ஐந்து அடித்ததும் அவள் அலுவலகத்தை விட்டு வெளியேறுகிறாள். தொழிற்பேட்டைச் சாலையில் ஸ்கூட்டர்களும் சைக்கிள்களும் நெருங்குகின்றன. பெண்கள்... வண்ண வண்ணங்களாய்ச் செல்கின்றனர். மனசோடு ஒரு விடுதலை உணர்வு. இரண்டு மைல் நடக்க வேண்டுமென்று கூடத் தோன்றவில்லை.

     சர்ரென்று ஒரு கார் அவளை இடித்துவிடுவது போல வந்து நிற்கிறது.

     ஒருகணம் தூக்கிவாரிப் போடுகிறது.

     கோகுலும், நம்பியும் முன் பக்கம் அமர்ந்திருக்கின்றனர். நம்பி பின்பக்கக் கதவைத் திறக்கிறான்.

     “உட்கார் ரேக்...”

     “இல்... வேண்டாங்க... நான் நடந்து போயிடுவேன்” நாக்குளறுகிறது.

     “பரவாயில்லை. பஸ் வராதே இங்கே இன்னிக்கு?”

     “நான்.... நடந்தே போயிடுவேங்க... தாங்க்ஸ்...”

     “உன்னைக் கடத்திட்டுப் போயிடமாட்டோம். சும்மா உக்காரு, பஸ் ஸ்டாப்பில விட்டுடுவோம்...”

     அவள் அஞ்சிய எலிக்குஞ்சு போல் பின்புறத்து இருக்கையில் ஒட்டிக் கொள்கிறாள்.

     “அவங்க வீடு எங்கே இருக்கு?” கோகுலின் கேள்வி.

     “சொல்லேன் ரேக்? உன்னைத்தான்!”

     “யாரு? என்... என்னையா சார்? எங்க வீடு... ஸெவண்டி எய்ட் பி. பஸ் சார்...”

     அவன் சிரித்துக் கொள்கிறான்.

     பஸ் நிறுத்தத்தில் வண்டி நிற்கிறது. நம்பி இறங்கி கதவைத் திறக்கிறான். ரேகாவும் இறங்குகிறாள்.

     அவளுடைய அச்சம் இன்னமும் விலகவில்லை. பஸ் நிறுத்தத்தில் ஒரே கூட்டம்.

     “நீ என்ன, அவரே காரை நிறுத்தி ஏத்திக்கிறதா வந்தும், மரியாதையில்லாம ‘நடந்தே போயிடுவேன்’னு சொல்றே? சுத்த கன்ட்ரியா நடக்கிறியே? உன்னை என்ன, கொத்திட்டுப் போயிடுவாரா? நல்லாவேயில்ல நீ நடந்த விதம்...”

     “எனக்குத் தெரியாது, ஏறிக்கணும்னு...”

     “நிசமா அக்கரையோடு கவனிக்கிறவங்களை நம்பமாட்டே. திடீர்னு எம்மேல சந்தேகம் வந்திருக்கு. நான் அஞ்சு பேருடன் பிறந்தவன். நீ எங்கிட்ட ப்ரீயா பழகாம ஒதுங்கறே. நம்பி சார், இதெப்படின்னு எங்கிட்ட கேட்க மட்டும் வராதே...”

     “ஐ ஆம் ஸாரி சார்...”

     “சரி, பின்ன வா, எதானும் சாப்பிடலாம்.”

     “வேண்டாம் சார். பஸ் வந்திடும்...”

     “பஸ் இப்ப வராது. உண்மையைச் சொல்லு, உனக்குப் பசிக்கல? மத்தியானம் அந்த இவ்வளுவூண்டு சோறு இன்னுமா பசிக்காம இருக்கும்? வா, சீனிவாசா லஞ்ச் ஹோம்ல எதானும் சாப்பிடலாம்...”

     வேறு வழியில்லை.

     பஸ்சுக்கு வருபவர்கள், தொழிற்பேட்டைக்கு செல்பவர்கள் குழுமும் கூட்டம். அந்தக் கூட்டத்தில் மாமனுக்கோ, சிற்றப்பாவுக்கோ தெரிந்தவர்கள் இருப்பார்களோ என்ற திகில் ஒருபுறம் தோன்றி மறைகிறது. உள்ளூற ஓர் சமாதானம் புனைந்து கொள்கிறாள். தலைவலி அதிகமாக இருந்தது. ஒரு காபி குடிக்க வந்தாள்.

     “பாமிலி” அறையில் இடமில்லை.

     “ஏன் நிக்கிறே? இங்கே உட்காரு ரேக்!” என்று அவன் மெதுவான குரலில் மொழிகிறான்.

     “பாமிலி ரூமானா ஒதுக்குப்புறமா இருக்குமேன்னு பார்த்தேன்!”

     “அதான் இல்லையே? பரவாயில்ல... பாமிலி ரூமே பிராட். பாமிலி இல்லாதவங்கதான் அப்படி ஒரு மறைப்புப் போட்டுக்கிடுவாங்க!” அவனுடைய கண்களில் கேலி இழைகிறது.

     ஒரு பணியாளன் வந்து வழக்கமான கேள்வியைக் கேட்கிறான்.

     “என்ன வேணும்?”

     “இன்னிக்கு ஸ்பெஷல் கோதுமை அல்வாவா?”

     “ஆமாம் சார். ரெண்டு பிளேட் கொண்டு வரவா?”

     “ஆமாம். போண்டா சட்டினி - ஆளுக்கு ஒரு நெய் ரோஸ்ட், காபி...”

     “ஐயோ? என்னங்க?” என்று அவள் கண்கள் அகலுகின்றன.

     அவனுடைய கால்விரல் மெல்ல அவள் விரல்களைத் தீண்டுகின்றன.

     அவள் அனல்பட்டாற்போல் இழுத்துக் கொண்டு அவனைப் பார்க்கிறாள். கொக்கியாக அவன் சிரிப்பு வளைக்கிறது.

     “முதமுதல்ல உனக்கு ஒரு இனிப்பு வாங்கிக் கொடுக்கக் கூடாதா நான்? இந்த ஓட்டல் அல்வா நல்லாயிருக்கும். சம்பளம் முதல்ல வாங்கினதும் உங்கிட்டே சுவீட் வாங்கித்தான்னு கேட்டேன் நீ கொடுக்கல. நான் கொடுக்கக் கூடாதா?...”

     இந்தப் பேச்சில் எப்படிக் குற்றம் கண்டுபிடிக்கலாம்? ஒவ்வொரு சம்பளமும் கொண்டு போய் கொடுக்கிறாளே? கோயிலில் தேங்காய் உடைத்தார்கள். அவ்வளவே.

     “என் மகள் வேலை செய்து சம்பளம் கொண்டு வந்து கொடுத்தாள்” என்று தாய் என்ன சிறப்புச் செய்தாள்? ஒரு இனிப்பு, பாயசம் கிடையாது. ஒரு ரவிக்கைத் துணி அவளுக்கு எடுத்துக்கொள்ள உரிமையில்லை. சம்பளப் பணம் முழுதும் செலவாயிற்று. வீட்டில் உள்ளவர் அனைவருக்கும் அவரவருக்குப் பிடித்த ரவிக்கைத் துணி வாங்குவதற்கு!

     அந்தக் கணத்தில் அவனிடம் தன் வீட்டைப் பற் றிய ஆற்றாமைகளை அவனிடம் கொட்டிவிட வேண் டும் என்று தோன்றுகிறது.

     பொன்னிறமாய் அல்வா முந்திரி பாதாம்கீறுகளுடன் நெய் வடிய தட்டில் வருகிறது. காணும்போதே நாவில் நீர் சுரக்கிறது. பிறகு முறு முறுவென்று போண்டா. சட்டினியில் முழுக வைக்கலாம்.

     அவனுக்கு முன் ஆவலைக் காட்டிக்கொண்டு சாப்பிட்டுவிடக் கூடாது என்பதற்காக அவள் கொஞ்சம் கொஞ்சமாய் விண்டு சுவைக்கிறாள்.

     “நீ இதுக்குமுன்ன இந்த ஓட்டலுக்கு வந்திருக்கிறியா ரேக்?”

     இல்லை என்று கூற நாணமாக இருக்கிறது. தலையை அசைக்கிறாள், அமைதியாக.

     “இந்த ஓட்டல் வெகுநாளாக எனக்குப் பழக்கம்.”

     “எங்க வீட்டில ஓட்டல்னாலே நல்லாயிருக்காதும்பாங்க...”

     “உங்க வீட்டில் ஒருநாக்கூட உன்னை ஓட்ட லுக்குக் கூட்டிட்டுப் போனதில்லையா?”

     “எதோ எப்பன்னாலும் வெளியூர் போனா சாப்பிடறதுதான். ஊரில் இருக்கறப்பவே ஓட்டலில் வாங்கித் தின்னுவது பிடிக்காது...”

     “பல பேருக்கு இப்படி அபிப்பிராயம் இருக்கு. ஆனா, நீ வீட்டிலேந்து கட்டிவரும் துளி சோறு பத்துமா? எனக்குப் பத்தாதப்பா!”

     “என்னங்க செய்வது? பணச் செலவு அதிகம் இல்லையா?”

     “இருந்தா என்ன? நீ ஒரே பொண்ணுதான்னியே?”

     “இருந்தா என்னங்க? சித்தப்பாவுக்கு நாலு குழந்தைகள். அத்தைக்கு ஆறு. சின்னம்மாவுக்குப் பாதி நாளும் சீக்கு. ஆஸ்துமா, அத்தைக்கு...”

     “அதுசரி, உங்க குடும்பத்தில் இவங்கல்லாம் எதுக்கு வராங்க?”

     “அவங்கதானே எங்க குடும்பம்? எங்கப்பா இல்லே, அம்மா” அவளையும் மீறிச் சொல் தெறித்து விட்டது. தவறு செய்விட்டாற் போல் கீழே தாழ்ந்து கொள்கிறாள்.

     “ஓ, உங்கப்பா யாரோ நாட்டியக்காரியைப் பிடிச்சிட்டு ஓடிட்டதாக உங்க மாமா சொன்னார் போலிருக்கு... ஓ, அப்படியா?”

     “அப்படியா சொன்னார்?... அதெல்லாம் இல்லே...” விருட்டென்று மறுக்கிறாள்.

     “பின்ன?”

     “எங்கப்பா... நான் இப்பத்தான் அவரை நல்லாப் புரிஞ்சிக்கிறேன். அவர் வெந்த சோத்தைத் தின்னிட்டு வருஷம் ஒரு பிள்ளைக்கு அப்பாவாகிறதுதான் மனுஷன்னு நினைக்காத பிரகிருதி...”

     அவன் களுக்கென்று சிரித்துத் தலையைத் தட்டிக் கொள்கிறான்.

     வீட்டில் குமையும் கசகசப்புத் தாங்காமல் மனதுள் பொருமிப் பொருமிப் பட்டென்று வெடித்துவிட அவள் சில கணங்கள் தன்னை இழந்திருக்கிறாள். மென்மையான நாண உணர்வுகள் கழன்று விடவில்லை என்றாலும் இந்த விஷயத்தைச் சாதாரணமாகக் கூறியிருக்கிறாள். அவன் சிரித்ததும் அவள் நிமிர்ந்து அவனைப் பார்க்கையில் முகம் சிவந்துவிடுகிறது.

     “நீ பலே ஆள் ரேகா, உன்னைப் போய் வெள்ளை, பச்சைன்னேனே!” என்று அவன் குறுநகை செய்கிறான்.

     “பின்னென்னங்க. வருவாய் ரொம்பப் பற்றாத நிலைக்கு இதுபோல மாத்தி மாத்தி மாத்திப் பிள்ளை அழுகுரல் கேட்பதுதான் காரணம்...”

     “ஐஸி... உன் வ்யூஸ் இப்பவே புரிஞ்சி போச்சி. அப்ப உனக்கு ஆசைக்கு ஒரு மகள், ஆஸ்திக்கு...”

     “சே, நான் கல்யாணமே செய்து கொள்ள மாட் டேன்.”

     “அது சரி, மேலே சொல்லு. உங்கப்பா நாட்டியக்காரி இல்லைன்னா பின்ன எப்படி...”

     “அவர் ஒரு பொயட். அவரை எங்க வீட்ல ஒருத்தரும் புரிஞ்சுக்கல. பணம் சம்பாதிக்கலேன்னு எல்லாரும் சாடையாச் சொல்லி மனசை நோக அடிச்சிருக்காங்க. அவருக்கும் ரொம்ப வீம்பு. மனசு வெறுத்துப் போயிட்டார்னு நினைக்கிறேன்...”

     “ஐஸி... அப்ப நாட்டியக்காரி இல்லே?”

     “அதெல்லாம் இல்ல சார். இவங்களால ஒரே திசையில்தான் எண்ண முடியும்.”

     அவள் விடுக்கென்று எழுந்து சென்று கைகழுவிக் கொள்கிறாள். எதிரே கண்ணாடியில் யார் யாரோ அவளைப் பார்ப்பதாகத் தோன்றுகிறது.

     விரைந்து நாற்காலிப் பக்கம் வந்து கைப்பையை எடுத்துக் கொள்கிறாள்.

     நம்பி பில்லை எடுத்துக் கொண்டு வந்து கொடுக்கிறான்.

     “ரொம்ப தாங்க்ஸ் சார். எங்க வீட்டில் இதை ஒப்பவே மாட்டாங்க...”

     “அப்பா, உன் முகத்தில் சிரிப்புக் காண சந்தேகத்தைப் போக்க எவ்வளவு கஷ்டமாயிருக்கு?”

     “எங்க வீடு... ரொம்ப கனசர்வேடிவ் சார். சந்தேகமாத் தோணினா நான் வீட்டைவிட்டு வெளியே வராதபடி செய்துடுவாங்க...”

     “எதுக்கு சந்தேகம் தோணணும்?...”

     பஸ் நிறுத்தத்துக்கு வருகையில் அவள் அந்தக் கூட்டத்தில் ஒரு பழைய பெல்ட் தொப்பியை முகத்தில் சரியவைத்துக் கொண்டு வாயில் பீடியுடன் நிற்கும் ஆளைக் காண்கிறாள்.

     அவன் !... ஐ ஆம் எ கில்லர்...

     விழிகள் நிலைக்கின்றன. அதேசமயம் அவனும் தன்னைப் பார்க்கிறான் என்று தோன்றுகிறது. அவன் சிரிக்கிறான். அவளுக்கு நம்பியுடன் தன்னை அவன் கண்டுவிட்டதாக உறுத்த அந்த உறுத்தலில் குப்பென்று சூடு பரவுகிறது.

     “யாரது, ரேக்? உன்னைப் பார்த்துச் சிரிக்கிறான்?”

     நம்பி காதடியில் கிசுகிசுக்கிறான்.

     “...அவரைப் பார்த்தா நீங்க என்ன நினைக்கிறீங்க சார்?...”

     “புல்லா தண்ணி போடுறவன்னு தோணுது...”

     “ஓ...?”

     நல்ல வேளையாக பஸ் வந்துவிடுகிறது.

     அவள் முன்பாக ஏறிவிடுகிறாள்.

     “ஓ கே!” என்று விடை கொடுக்கிறான்.