12

     ஸ்கூட்டர் அன்று மூன்றாவது தடவையாகச் சந்துக்குள் நுழைகிறது. வேலை முடிந்து வரும் சிறு பணியாளரும், பெண்களும் குழந்தைகளுமாகக் கலகலவென்றிருக்கிறது. கடையில் வழக்கம்போல் அன்றாட உப்புப் புளி வாங்குபவர்கள் நின்று கொண்டிருக்கின்றனர். எல்லப்பன் தான் ஜானிராஜிடம் வந்து “யார் சார் வேணும்?” என்று கேட்கிறான்.

     அவனுக்கு புதிய ஸ்கூட்டர் - அறிமுகமாகாத ஆள் என்றால் ஒரு கலவரம் நெஞ்சுள் தோன்றி விடும். “...அரசு - திருநாவுக்கரசுன்னு யாரானும் இந்தப் பக்கம் இருக்காங்களா?”

     ஒரு நிமிஷம் எல்லப்பனுக்குப் புரியவில்லை. “ஓ... ஆட்டுத் தொட்டிலே வேலைக்கிருந்தானே அவனா? இங்கேதான் சார் பின்னே சந்துக்குள்ளாற இருந்தான். நீங்க யார் சார்?”

     “இப்ப இல்லியா?”

     “காலி பண்ணிட்டு பங்களூர் போறேன்னு நேத்து சொன்னான். ஆனா போகல. நீங்க யார் சார்? அவரு தம்பியா?”

     “நண்பர். ரொம்ப வேண்டியவரு. இப்ப ஆட்டுத் தொட்டில வேலையில்லியா?”

     “ஒரு மாசமா விட்டுட்டாரு சார். ஒரு மாதிரி ஆளு. பழைய பேப்பர் வாங்கி வியாபாரம் செய்யிறதா எங்கம்மா சொல்லிச்சி. சார் எங்கே இருக்காப்பல?”

     “எனக்கு நந்தனத்தில வீடு. அவரு எப்ப வருவார்னு எதானும் தெரியுமா?...”

     “முன்னெல்லாம் எங்கம்மாதான் சோறு சமைச்சிக் கொடுத்திட்டிருந்துச்சி. இப்ப அவனே சமையல் செய்துக்கிறான்னு சொன்னாங்க. தெரியாதே சார். நீங்க எதனாலும் விஷயம் இருந்தா சொல்லிட்டுப் போங்க...”

     அவர்கள் பேசிக் கொண்டிருக்கையிலே அவன் சாக்கைத் தோளில் வைத்துக் கொண்டு அவர்களைப் பார்த்துக் கொண்டே வருகிறான்.

     “இத வந்திட்டாரே, உன்னைத்தாம்பா, தேடி வந்திருக்காரு?”

     ஒரு கிலோ இறைச்சிக்கு மேல் நூறு ரூபாய் நோட்டாகக் கொடுத்த நாட்களில் எல்லப்பன் ‘ஏக வசன’த்தில் பேசியதில்லை. இப்போது அவனைக் காலி செய்யச் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். அவன் நின்று ஜானிராஜை ஒன்றும் புரியாதவனாகப் பார்க்கிறான்.

     “குடீவினிங் சார்...”

     “யாரு நீங்க?”

     “...ரேகா... ரேகா... அப்பாவைப் பாத்திட்டு வரணும்னு சொல்லிச்சு சார்... அது எங்க ஆபீசில்தான் வேலை செய்யிது. நான் ராஜ்மோகன் நர்சரியில்தான் கார்டன் சூபரின்டென்ட்...”

     அவன் அமைதியாக இருக்க முயன்று சில விநாடிகளுக்குப் பிறகு கேட்கிறான். “யார் ரேகா?”

     ஜானிராஜ் சிலையாகிறார். ஒரு வேளை தவறான ஆளோ?

     “நீங்க... மிஸ்டர் அரசுதானே?”

     “ஆமாம். ஸ்லாட்டர் அவுஸ்ல வேலையாயிருந்தேன். இப்ப அதை விட்டுட்டு பழைய பேப்பர் வியாபாரம் பண்றேன். நீங்க யாரைத் தேடி வந்திருக்கிறீங்க?”

     “உங்களைத்தான் சார். நீங்க வீட்டுக்கு வந்தன்னிக்கு ரேகா உங்களைப் புரிஞ்சிட்டுப் பேச முடியாததுக்காக ரொம்ப வருத்தப்படுது. உங்களைப் பார்த்துப் பேசணும்னு ரொம்ப ஆவலாயிருக்கு. எனக்கு அஞ்சு பொண்ணு. நான் கதோலிக்கன். அதையும் ஒரு டாடரா நினைச்சிட்டுப் பேசுவேன். அப்ப சொல்லி வருத்தப்பட்டுது எல்லாம்.”

     “நீங்க உள்ள வாங்க...”

     ஜானிராஜுக்கு இப்போது ஐயம் இல்லை.

     சந்துக்குள் முன் சென்று அந்த வீட்டின் பின்புறப் பகுதியான தாழ்வரைக் கதவை அவன் திறக்கிறான்.

     அங்கு முன்பிருந்த கட்டிலுக்குப் பதிலாக பழைய புத்தகங்கள் இருக்கின்றன. ஒரு மூலையில் ஒரு திரி ஸ்டவும் சோறு பொங்கும் அலுமினியம் வட்டையும் இருக்கின்றன.

     “உக்காருங்க சார்... இங்கே நாற்காலி கட்டில் எதுவுமில்ல...” என்று கூறிவிட்டு சாக்கைக் கீழே வைக்கிறான். சாக்கில் நாலைந்து பழைய புத்தகங்களைத் தவிர வேறு பளு இல்லை.

     “நீங்க யாரைத் தேடிட்டு வந்திருக்கிறீங்க சார்?”

     ஜானிராஜ் திகைக்கிறார்.

     “உங்களைத்தான்?”

     “இல்லே, ஏன்னா எனக்கு மக்க மகன்னு யாருமே கிடையாதே?”

     “நிசமாகவா?”

     ரேகா கூறிய அடையாளங்கள் சரியாகத்தானிருக்கின்றன. ஆனால் முடியை ஒட்ட வெட்டிக் கொண்டு, தாடியையும் மழித்துக் கொண்டிருக்கிறான். கண்களுக்குக் கீழ் கன்னங்களில் கருமை திட்டாகப் பாய்ந்திருக்கிறது. புருவங்கள் தொங்குகின்றன. கண்களில்... சலனமில்லாத உறுதி.

     “ஆமாம்.”

     “உங்களுக்குச் சொந்த ஊரெல்லாம்...”

     “பூர்வீகம் திருவண்ணாமலையோ என்னமோ! எனக்குத் தாய் தகப்பனே தெரியாது. சின்னப்பவே வேலைக்கு வந்து பட்டணத்துச் சந்தியிலே பிழைப்பவன்...”

     “உள்ளே கூப்பிட்ட போது வேற விவரம் சொல்வதாக நினைச்சேன்... நீங்க... இப்ப வியாபாரம் செய்யிறீங்களா?”

     “இப்பன்ன, முன்னமேயும் இந்த வியாபாரம் செய்ததுண்டு...”

     “இந்த வியாபாரம் செய்திட்டிருந்தவங்க, ஸ்லாட்டர் அவுசில...”

     அவன் தலையைக் காட்டுகிறான். “என் பேப்பர் கடை ஒரு சமயம் நெருப்புப் பட்டு எரிஞ்சி போச்சு. அது சரியில்லேன்னு விட்டுட்டு வேறு தொழிலுக்குப் போனேன். முன்பின் தெரியாம வெட்டுகத்தியை எடுக்கப் போனேன். ஒண்ணரை வருஷம்... என் ஆத்மாவையே குடிச்சு குடிச்சு, குரூர வேலை செய்து கொன்னிட்டேன்னு ஒருநாள் திடீர்னு புரிஞ்சிது. தினந்தோறும் ஒரு கிலோ இறைச்சியும் இருபத்தஞ்சி முப்பது ரூபாய்க்குக் குறையாத சம்பாத்தியமும் கிடைச்சிது. ஆனா... என்னையே ஒரு நாள் நான் கண்ணாடியிலே பார்த்துக்கிட்டப்பா, நான் எப்படி மாறிட்டேன்னு கண்டிட்டேன். திடுக்கிட்டுப் போனேன்.

     நாள் வெளித் தோற்றத்துக்கே குரூரமாயிருந்தேன். ஏன்னா... அதுக்கு முன்ன என்னை நான் ரொம்ப உயர்வா எண்ணிட்டிருந்தேன். அஞ்சாம் படிலேருந்து நாலாம் படிக்காரங்களைக் கேவலமா நினைச்ச நான், கைபிடி எதுக்குன்னு கீழே சரிஞ்சது தெரியாமலே சரிஞ்சிட்டேன். புரியல?...”

     ஜானிராஜ் பேசவேயில்லை.

     “மலக்குழிலே இறங்கித் தண்ணி இரைக்கிறான். ஆனா வெளியே வந்து கழுவிட்டு வேற உடுப்புப் போட்டுட்டு ஒட்டாம உலாவுறவன் அறிவை இழக்கிறதில்ல. அசுத்தத்தைப் பொறுத்து கருமம் செய்யிறது வேறு. அசுத்தம் தெரியாம இருக்கணும்னு அறிவை மழுக்கிட்டு அழுந்திப் போறப்பவும் அசுத்தம் தெரியிறதில்ல. இந்தப் பழைய புஸ்தக, பேப்பர் தொழிலில் பணம் ரொம்பப் புரட்ட முடியாது. ஆனா... அறிவை மறைக்க வேண்டாம் பாருங்க...”

     “...என்னால நம்ப முடியலியே?”

     “எதை?”

     “நான் மனசு திறந்து பேசுகிறேன், மிஸ்டர் அரசு. ரேகாவுக்காக, அந்தப் பொண்ணு மனசுக்காக நீங்க அத்தை ஒரு நாள் கூட்டிட்டு வர அனுமதிக்கணும். உங்க மனம் எப்படிக் கசந்து போயிருக்கும்னு என்னால் புரிஞ்சிக்க முடியிது.”

     “இல்லீங்க எனக்கு ஒரு கசப்பும் இல்லே. எனக்கு நீங்க சொல்வது போல் குடும்பம் கிடையாது. நீங்க என்னைத் தப்பாக நினைக்கக்கூடாது. நீங்க வேறு யாரையோ தேடி வந்திருக்கிறீங்க...”

     “ஆனா, அந்தப் பொண்ணு ஓடிப்போன தகப்பனார் நீங்கதான்னு ஒரேயடியாக நம்பிட்டிருக்கு. அழைச்சிட்டு வரட்டுமா?”

     “மன்னிச்சிக்குங்க சார். எனக்குக் குடும்பம் உறவுன்னு கிடையாதுன்னு சொன்ன பிறகு இங்கே போயி எதுக்கு ஒரு நல்ல குடும்பத்துப் பெண்ணை அழைச்சிட்டு வரணும்? இந்த இடம்... அவ்வளவு நல்ல இடமில்ல. அதனால... இங்கெல்லாம் அழைச்சிட்டு வரவேண்டாம்...”

     ஐயமின்றி அவரேதான் ரேகாவின் தந்தை. ஆனால் சொந்தக் குடும்பத்தினரால் வெறுத்து ஒதுக்கப் பெற்றதனால் ஏற்பட்ட மனப்புண் ஆழமாக இருக்கிறது.

     ஜானிராஜ் வற்புறுத்துவதில் பயனில்லை என்று உணர்ந்து கொள்கிறார். விடைபெற்றுக் கொண்டு திரும்புகிறார்.

     அவர் சென்ற பிறகு அவன் கதவைத் தாழிட்டு விட்டு காலையில் கொண்டு வைத்த நீரில் முகம் கழுவிக் கொள்கிறான். வள்ளியோ முத்தம்மாளோ வருவதில்லை. எல்லப்பனும் வீட்டைக் காலி செய்யச் சொல்லிவிட்டான். அவன் வீட்டைக் காலி செய்வதாக இல்லை. ஊரையே விட்டுப் பெயரத் தீர்மானம் செய்து கொள்கிறான். ரேகா தன்னைப் புரிந்து கொண்டு ஒரு நண்பரை அனுப்பியிருக்கிறாள் என்பதை, உணரும் போதே மனம் கட்டுக்கடங்காமல் துடிக்கிறது. குழந்தை கூட என்னை வெறுக்கிறாளா என்று, வெதும்பியிருந்தான். இப்போது அந்த ஆற்றாமை குறைய, துடிப்பும் ஆவலும் மீறுகின்றன. ஆனால்...

     அவன் நிச்சயம் செய்துகொள்கிறான்.

     அவள் அன்று ஒரு இளைஞனுடன் ஓட்டலில் இருந்து இறங்கி வந்ததை அவன் பார்த்திருக்கிறான். அவன் உயர் வகுப்பினனாகத் தோன்றினான். ஒருகால் அவளை மணம் புரியக்கூடிய இளைஞனாக அவன் இருப்பான். ஏனெனில் அவனுடைய மகள், ஒழுங்கு மீறும் வகையில் நிச்சயமாக நடக்க மாட்டாள். அந்தக் காரணத்தை மனசில் கொண்டே அவள் வெளிப்படையாக அவனை ஒப்புக் கொள்ளவில்லை. ஒரு கிறிஸ்தவ நண்பரைத் தூதனுப்பி இருக்கிறாள்.

     குழந்தை! உனக்கு அவன் இப்போதைக்குக் கொடுக்கக்கூடிய சீதனம் இது ஒன்றுதான். அவனுடைய வாழ்வின் கருநிழல் உன் மீது - உன் வாழ்க்கையின் குறையான பகுதியில் விழுந்து மேலும் பிரச்சினையாக்காது... கண்களை ஒத்திக் கொள்கிறான்.