5

     ரேகா செய்யத்தகாத தவறைச் செய்துவிட்ட பரபரப்பில், நேரமாகிவிட்டது என்ற குற்ற உணர்வில் விரைந்து நடக்கிறாள். இருள் அடர்ந்து பரவியிருக்கிறது. தெருவில் அரவமே கேட்கவில்லை. ஆனால் அவளுடைய அடியோசை, செருப்பொலிதான் அவளை அச்சுறுத்தப் பெரிதாகக் கேட்கிறதா? அவளுக்குச் சற்றே நின்று பின்னால் தன்னை தொடர்ந்து வருகிறாரா என்று சோதனை செய்யவும் அச்சமாக இருக்கிறது. நேரமாகி விட்டது என்று மாமன் அவளைத் தேடிப் பஸ் நிறுத்தத்தில் நின்றுவிட்டு அவளைக் கோபிக்க விரைந்து வருகிறாரா?

     “திண்டி” வழக்கம் போல் வள்வள்ளென்று குலைக்கிறது. அவளாகவே வாயில் கதவைத் திறந்து கொண்டு போகிறாள். வராந்தாவில் விளக்கு இல்லை. குழந்தைகள் அரவமே கேட்கவில்லை. பாட்டி நடுக்கூடத்தில் குழந்தையை மடியில் போட்டுக் கொண்டு அதன் மலச்சிக்கலுக்கு மருத்துவம் பார்த்துக் கொண்டு இருக்கிறாள்.

     “சொர்ணமா? ஏன் தங்கச்சி பொழுதோடு வீடு வரதில்லன்னு ஆயிப்போச்சே? அன்னிக்கு ஏழடிச்சி வந்தே. இன்னிக்கு எட்டடிக்கப் போவுது?”

     “நேரமாயிட்டது பாட்டி, பஸ்... பஸ் இன்னிக்கு ஸ்ட்ரைக்கு. உள்ளறா காலையிலும் நடந்து போனேன், வரப்பவும் நடந்து வந்தேன்...”

     “அதென்னமோ, பொண்ணுங்களைக் கட்டிக் குடுக்காம வேலைக்கனுப்புறது! சரசுவதி வேலைக்குப் போற மருமக வேண்டாம்னு சொன்னாளாம். மீஞ்சூருக்குப் போயிருந்தப்ப ராமசாமி பார்த்தானாம். ஆனா அந்தப் பய சிதம்பரம் இத்தைத்தான் கட்டுவேன்னு இருக்காப்பலன்னான். கட்டிக் கொடுத்து காலாகாலத்தில் செய்யறதை விட்டுட்டு என்ன வேலை இது?”

     ரேகா விருட்டென்று உள்ளே செல்கிறாள். “ஏங்கண்ணு, இந்நேரமாச்சே? எனக்குத் துடிச்சுப் போச்சு. பாட்டி வேற அலட்டிட்டே இருக்காங்க...”

     “மாமா, சித்தப்பா, எல்லாரும் எங்கே? சுகுணா ரமணி, சோமு, தண்மதி யாரையும் காணோம்?”

     “எல்லாம் கோயிலுக்குப் போயிருக்காங்க. இன்னிக்கு அங்கே அருளானந்தசுவாமி வந்து பிரசங்கம்ல...?”

     “காபி வச்சிருக்கேன். குடி. கால் கை கழுவிட்டு வந்து..”

     “இல்லேம்மா, சாப்பாடு சாப்பிட்டுடறேன்” என்று கூறும் அவளுக்கு போண்டாவின் மணம் இன்னமும் அடித்தொண்டையில் தங்கியிருக்கிறது.

     “அம்மா, பாட்டி இப்படிக் கல்யாணம் பத்தியே பேசிட்டிருந்தா நான் இந்த வீட்டை விட்டு ஆபீசுக்குப் பக்கமா வீடு பார்த்து உன்னையும் அழைச்சிட்டுப் போயிடலாம்னு நினைப்பேன்... கல்யாணம்னு சொல்லுவதே பிடிக்கலே. நானும் இந்தக் குடும்பச்சேத்திலியே கட்டிட்டு வருசம் ஒண்ணு பெருக்கணுமா?”

     சிவகாமி மவுனமாக இருக்கிறாள்.

     ரேகாவுக்கு யார் மீதேனும் எதற்கேனும் எரிந்துவிழ வேண்டும் போலிருக்கிறது. அப்போது வாயிலில் பேச்சரவம் கேட்கிறது.

     “யாரது?...” என்று பாட்டி யாரையோ வாயிலில் கேட்கிறாள்.

     “நான்தான்...” என்ற குரல் மெல்ல இழைந்தாற் போல் வந்து ரேகாவின் இதயத்தைத் தொடுகிறது.

     ஆனால் பாட்டி குழந்தையின் வயிற்று நோயைத் தீர்த்துவிட்டு, பின்கட்டுக்குப் போகிறாள்.

     “நாகு? வாச விளக்கைப் போடு, வாசல்ல யாரும் வந்தாலும் தெரியாது. காலம் கெட்டுக் கிடக்கு. நாய் குலைக்கிது...”

     அத்தை விசையை அமுக்கிவிட்டு, “இதென்ன கருமம், பீஸ் போயிடிச்சிபோல இருக்கு” என்று கூறியவள் அதட்டலாக. “யாரையா?” என்று கேட்கிறாள்.

     “சவுந்தரம்மா... அவங்க இல்ல?”

     “இருக்காங்க. யாரு நீ?”

     “நான் வந்து... வந்து, அவங்க மகன்...” ரேகா வாயிலுக்குப் பாய்ந்து வருகிறாள்.

     “அம்மா! அம்மா! நீ இங்கே வந்து பாரு? யாரோ ஒருத்தன் வந்து உங்க மகன்கிறான்!” என்று நாகம்மா கூவ, சின்னம்மாவும் வாயிலுக்கு வருகிறான். பாட்டியும் வருகிறாள்.

     “இதென்னடி அதிசயம்? வரவன் கிடுகிடுன்னு சமையல் ரூம்புக்குப் போவான், பெஞ்சில் உக்காருவான். இவன் வாசலில் நிக்கிறதாவது?”

     “யாரப்பா நீ? எங்கேருந்து வரே?”

     ரேகா பஸ் நிறுத்தத்தில் பார்த்த கோலத்தில் பெல்ட் தொப்பியைக் கையில் வைத்திருக்கிறான்.

     “என்னத் தெரியலியாம்மா? உங்க மகன்... மகன் அரசு... அவனுக்கே குரல் தடுமாறிக் கரைகிறது. தடாலென்று வாயிற் படியைத் தொட அவளுடைய காலடியில் விழுந்து பணிகிறான்.

     “சிவகாமி? சட்டுனு விளக்கேத்திட்டுவா! சிம்னி விளக்கேத்திட்டுவா!”

     ஆண்டவனே...!

     அலையக்குலைய அம்மா, சாமி அலமாரியிலிருந்து கை விளக்கைத் தூக்கிக்கொண்டு வருகிறாள். அது வாயிலுக்கு வருமுன் அனைந்து போகிறது. ஊசி விழுந்தால் எழும் நிசப்தம்.

     “சிம்னி விளக்கை ஏத்திட்டு வாயேன்?”

     அத்தை கொண்டுவந்த விளக்கை வாயிற்படியில் கொண்டுவந்து அவர் முகத்துக்குமுன் நீட்டிப் பார்க்கிறாள் பாட்டி.

     மீசை தாடியை நனைக்கும் கண்ணீர்.

     ஆனால், அவள் மகனா? அவனா இப்படி? நெற்றி மென்மையாக இருக்கும். செவிகள்கூடத் தடித்துப் போனாற் போலிருக்கிறது. கட்டம் போட்ட அழுக்கு அரைச் சட்டைக்குக் கீழ் அவனுடைய கை முண்டும் முடிச்சுமாக நரம்புகள் தெரிய காய்த்துப் போயிருக்கிறது. முடி நீண்டிருந்தாலும் அடர்த்தி தேய்ந்திருப்பது நன்றாகத் தெரிகிறது.

     “நான்... நான் மாறித்தான் போயிருப்பேனம்மா... உங்க மகன் இடைவெளியில் செத்துப் போயிருந்து மீண்டு வரான். சிவகாமி, என்னத் தெரியல?”

     “குரல்கூட இப்படிக் கட்டையா மாறிப் போகுமா?” பாட்டி பேசாமல் நிற்கிறாள்.

     “குழந்தே... சுவர்ணரேகான்னு பேர்வச்ச அப்பா நான்னு நேத்தே சொல்லத் துடிச்சேன். நான் எப்படியோ கண்ணைத் திறந்திட்டே பாவக் குழியில் விழுந்திட்டேன். ஆனா, ஏறி வரணும்னு வந்திருக்கிறேன். என்னை ஏன் எல்லாம் அப்படிப் பாக்கிறீங்க? நாகு. உன் குழந்தைகளைத் தூக்கிச் சுமந்த அண்ணன் நான்...”

     அவர்கள் ஒருவரை ஒருவர் பார்க்கின்றனர்.

     எட்டு வருஷம் பத்து வருஷம் பிரிந்து போனாலும் கூட ஒரு தடயம் இருக்கும். குரலும் கூட மாறிப் போகுமா?

     “அம்மா, அன்னைக்குப் பஸ்சில் பார்த்தேன்னு சொல்லல?... இவரு... இவர்தாம்மா...”

     “ஐயோ!” என்று செவிகளைப் பொத்திக் கொள்கிறாள். சிவகாமி.

     “என்ன சொல்லிச்சு சொர்ணா?...”

     “ஓ, நான் கேட்டேனே? குடிச்சிட்டு யாரோ கசாப்பு வேலைக்காரன் உக்காந்திருந்தான்னு சொல்லிச்சு...”

     தான் தாயுடன் பேசியதை அவள் எப்போது ஒட்டுக்கேட்டாள்? சின்னம்மாவுக்கு எப்போதும் இதில் தனிச்சுவை.

     ரேகாவுக்கு அவர் கையைப் பற்றி அழைத்து வர வேண்டும் போல் இருக்கிறது. ஆனால் உயிர்த்துடிப்பே அற்றாற் போன்று பாட்டியும் அம்மாவும் எப்படி அசைவற்று நிற்கின்றனர்?

     ஐ ஆம் எ கில்லர். பாரசிக மொழியில் மதுவுக்குத் திரை என்று பெயர்...

     பேச்சொலிகள், கோவையாக இல்லாத சல்லாத்துகில் மூடியதொரு குழப்பத்துக்குள் முணுக் முணுக்கென்று மினுக்கும் உயிர்த் துடிப்பை ரேகாவினால் புரிந்துகொள்ள முடிகிறது.

     ஆனால்...

     “இதபாரப்பா, உன்னை எங்களால் புரிஞ்சிக்க முடியல. நீ பகல்ல வராம இருட்டில வந்திருக்கிறே. எங்க மாப்பிள்ளை பையன் எல்லாம் கோயிலுக்குப் போயிருக்கிறாங்க. அவங்க வந்து பார்த்துக்கட்டும். ஆம் பிள்ளைங்க இல்லாம நாங்க எதுவும் தீர்மானம் செய்யிறதுக்கில்லே. நீ போயி அப்பால இரு!” என்று கூறும் முதியவளுக்குக் குரல் நடுங்குகிறது.

     “அம்மா!”

     அடிவயிற்றுச் சுவாலையின் கொழுந்துபோல் அக்குரல் ஒலிக்கிறது. அவள் பெற்ற அன்னை இல்லை தான். எனினும்... ”தா? நான் மாறிப் போயிட்டேன், ஒத்துக்கறேன். இந்த ரெண்டு வருஷ காலமாக ஒரு கொலைத் தொழிலில் ஈடுபட்டு நான் என்னையே கொன்னுட்டேன். யாருக்காக, எதுக்காக நான் வேலை செஞ்சு பணம் சம்பாதிக்கணும்னு நினைச்சேனோ அந்த மூலகாரணத்தையே நான் செஞ்ச வேலை இரையாக்கிடும்னு தெரியாம குழியில் விழுந்திட்டேன். இப்ப அதிலேருந்து மீளனும்னு வந்திருக்கேம்மா. என் தூக்கம் மயக்கம், பயங்கர சொப்பனம் கலைஞ்சு போய் வந்திருக்கிறேன். சிவகாமி, என்னைப் புரிஞ்சுக்கல நீ?...”

     சிவகாமி சிலையாக நிற்கிறாள். மாமியைப் பார்க்கிறாள். முகத்தை மூடிக்கொண்டு சமையல் அறைக்குள் சென்று விம்முகிறாள்.

     ரேகாவினால் தாயின் நடத்தையைப் புரிந்து கொள்ள முடியவில்லை. அவர் தந்தைதான் என்று முழுதாக அவள் நம்புகிறாள்.

     “ஏம்மா, என் புருஷன் வரணும் வரணும்னு நோம்பிருந்து வத்தி மெலிஞ்சியே? ராவெல்லாம் கண்ணீர் விட்டியே? இப்ப அவர் வந்து வாசல்ல நிக்கிறப்ப, உள்ள வாங்கன்னு சொல்லாம ஏன் அழறே?”

     “உங்கப்பாவா? இல்லேடி கண்ணு, அவர்... அவரு எங்கோ ருஷ்கேசத்தில் இருப்பார்; காசியில் இருப்பார்; இவர் யாரோ...” என்று விம்முகிறாள். பாட்டியிடம் அச்சமா?

     “பன்னண்டு வருசம் கழிச்சி முன்ன பாடியில மேக்கால வீட்டு சீதாராமன் வந்தான். அடையாளம் அப்பிடித் தெரியாம போயிடுமா? நாலு வருசம் கூட ஆகல. இப்படி உடம்பு குரல் எல்லாம் மாறிடுமா?”

     இதற்குள் குழந்தைகள் வந்துவிட்டார்கள். பூந்த மல்லியிலிருந்து சின்னம்மாளின் தம்பி ஞானசுந்தரம் வந்திருக்கிறான். பாட்டிக்கு முன் நாகம்மா அவனைக் காட்டி நடந்ததைக் கூறுகிறாள்.

     “அடி செருப்பால? இவன் இந்த வீட்டு மகனா?” என்று மாமா டார்ச்சை அடித்துப் பார்க்கிறார்.

     “இவன் எவனோ ‘வான்டட்’ பேர்வழி போல எவ்வளவு தயிரியமா வேசம் கட்டியிருக்கிறான்? இல்லே தம்பி?”

     “ஆமாம். அண்ணனைப் போலவே இல்லையே! அவரு இன்னும் செவப்பல்ல?”

     “பேசாம் போலீசில ‘ஹான்ட் ஓவர்’ பண்ணிட லாம் மாமா!” என்று ஞானம் யோசனை கூறுகிறான்.

     “போலீசென்னடா போலீசு? இவனை இப்ப இங்கியே உண்மையைக் கதற அடிக்கிறேன். திருட்டுப்பயல் அப்பவே கோயிலுக்குப் போறப்பவே பார்த்தேன். ‘கல் வாட்’ பக்கம் ஒண்டிக்கிட்டிருந்தான். அகப்பட்டதைச் சுருட்டிட்டுப் போற வழி...”

     உள்ளே சென்று சித்தப்பாவின் இடுப்புப்பட்டை, தோல்பட்டையை அவர் எடுத்து வருகிறார்.

     “மாமா? இது உங்களுக்கே நல்லாயிருக்கா?...” என்று ரேகா கத்துகிறாள்.

     “நீ போ அப்பால!”

     அவளை ஒதுக்கிவிட்டு அசையாமல் நிற்கும் அவனைத் தோல் வாரினால் மாமன் அடிக்க ஓங்குகிறார்.

     “கல் ஒளி மங்கன்போல நிக்கிறான் பாரு! பாத்தீங்களாம்மா?”

     “அதானே? அண்ணன் ஒரு ஊசி குத்தினா துடிச்சிப் போகும். இவன் எத்தினி கெட்ட எண்ணத் தோட படி ஏறி?”

     “அம்மாடி! ஊரு எப்படிக் கெட்டுப் போச்சி? முழிச்சிட்டிருக்கப்பவே முளகாயரைக்கிறாங்க! திருட்டுப்பயலே? எங்களையா ஏமாத்துறே?”

     “இப்பல்லாம் இப்படித்தான் எதானும் தெரிஞ்சி வச்சிட்டு உள்ளாற பூத்திடறாங்க. போடா! போ. வெளியே? திருடனாக இருந்தால் இப்படி அடிபட்டுக் கொண்டு நிற்பானா?” அவர் அவனை விரட்டிக் கொண்டு செல்கிறார். அவன் அவர்களைப் பார்த்துக் கொண்டே பின்னே பின்னே நகர்ந்து செல்கிறான்.

     அவளுக்கு ஏதோ சினிமாக் காட்சி காண்பது போலிருக்கிறது. வெளிக்கதவுக்குப்பின் இருட்குகையில். அவனைத் தள்ளிக் கதவைச் சாத்தித் தாழ்போட்டு விட்டு மாமா வருகிறார்.

     தோள் துண்டை உதறிப் போட்டுக்கொண்டு வெற்றி வீரனுக்குரிய பெருமிதத்துடன் வருகிறார்.

     “என்னமாப் பொய் சொல்றான்?”

     அத்தை அப்பாவைப் பற்றிய செய்திகளை நினைவூட்டி, இவர் அவர் இல்லை என்று நிரூபிப்பதிலேயே கண்ணாக இருக்கிறாள்.

     “அண்ணன் பொங்கலப்ப வந்திட்டுப் போச்சே, அப்ப கூட பையைத் தூக்கினு நேர உள்ளாற வரலியா? என்ன ஆயிரம் சண்டை போட்டாலும், ஒரு பழம் பூவில்லாம வாசல்ல வந்து நிக்கவே மாட்டாரு. அதுக்கு முன்ன ஒரு தபாகொடி முந்திரிப் பழத்தை வாங்கிட்டு வந்து உள்ளற வச்சிட்டு... இந்த பெஞ்சில் உக்காந்து பல நாளா இருந்தாப் போல படிச்சிட்டிருந்தாரு, ஏதோ புத்தகத்தை வச்சிட்டு. இவனுக்குப் பொய்யைச் சொல்லிட்டு வந்தாலும் உள்ளார வரத் துணிச்சலில்ல. மகன் உன் மகன்னு சொல்லிட்டு வாசல்ல நிப்பானா?”

     “இன்னும் என்ன கண்ணராவியெல்லாம் பார்க்கணுமா தெரியல. அத்தினி அடியையும் வாங்கிட்டுச் சும்மா இருந்தானே? அவனா இருந்தா அந்த வார்ப் பட்டையைப் பிடுங்கிட்டு ‘ஏண்டா, உனக்கு பயித்தியமா’ன்னு கேக்க மாட்டான்?” என்று பாட்டி புலம்புகிறாள்.

     “ஒருத்தன் தினமும் நூத்துக்கு மேற்பட்ட ஆடுங்களை வெட்டினால் முகம் பயங்கரமாயிடாது” என்று ரேகா நியாயம் கற்பிக்க முயலுகிறாள்.

     “சிவ... சிவ சிவா! வாயைக் கழுவிக்கினுவா! இந்த வீட்டில் பிறந்தவன். அதோ ஈஸ்வரனார் இருக்காரு. வேலை கிடைக்கலேன்னா என்ன செய்தாலும் இதுக்குப் போவானா?” என்று பாட்டி மடக்குகிறாள்.

     “அதெப்படிச் சொல்ல முடியும்? அவரை முகமெல்லாம் தாடி மீசையைக் களையச் சொல்லி விடிஞ்சு தீர விசாரிச்சு இருக்கலாம். பொய்யானால் போலீசில் ஒப்படைக்கலாமில்ல?”

     “இந்தப் பொட்டைப் பசங்க படிச்சி வேலைக்குப் போக ஆரம்பிச்சுட்டா என்ன துணிச்சல் வருது பாத்தியா? என்னமாப் பேசுது பாரு?” என்று சிற்றப்பா பாடுகிறார்.

     “அண்ணன் ஒரு பூவைக் கிள்ளப் பொறுக்காது. ஒருவாட்டி எலிப்பொறில விழுந்த எலியைச் சாக அடிக்காம திறந்து விட்டுட்டாறு, இல்லையா அண்ணி?”

     “இவன் எவனோ பொறம்போக்குப் பய. விசாரிச்சிருப்பான். இந்த வீட்டில் இப்படின்னு விசயம் தெரிஞ்சிட்டு வந்திருக்கிறான்...”

     தொடர்ந்து இம்மாதிரி ஆள்மாறாட்டம் செய்து அகப்பட்டதைச் சுருட்டிக் கொண்டு சென்றவர்களைப் பற்றிய கதைகளாக அளக்கிறார்கள்.

     எல்லோரும் சாப்பிடுகிறார்கள். படுக்கை போடுகிறார்கள். அவளுடைய தாயும் கூட வழக்கம்போல் இயங்குகிறாள். ரேகாவுக்குச் சோறு பிடிக்கவில்லை. அன்றைய பகலின் நினைப்புக்களே மறந்து போகின்றன.

     சமையல் அறையை அடுத்து, சுவாமி அலமாரியுள்ள அறையில்தான் அவளும் தாயும் படுத்துக் கொள்வார்கள். வெளிச்சமும் வெண்மையும் காணாத அறை. படுத்துக் கொண்டிருக்கையில் கால்களை நன்றாக மூடிக் கொள்ளவில்லை எனில் பெரிய பெரிய கரப்பான் பூச்சிகள் காலைச் சுரண்ட வந்துவிடும். இந்த அறையில் அவளுடைய தந்தை சொந்தமாக இருந்ததுண்டு. இன்று அவரை எல்லோருமாக வெளியே தள்ளி விட்டார்கள்; அடித்து விரட்டிவிட்டார்கள்.

     “அம்மா, நீ கூட இவ்வளவு கல்நெஞ்சாயிருப்பேன்னு நான் நினைக்கல...”

     “கண்ணு, நான் என்னடி செய்வேன்? உன் அப்பா இப்படியும் என் தலையில் கல்லைப் போட்டுக் கழுத்தை நெரிப்பார்னு நான் நினைக்கலியே?”

     “அம்மா, நீ அவர்தான்னு நம்புறேயில்ல அப்ப?”

     “நான் என்னம்மா சொல்லுவேன்! ரிசிகேசத்தில் இருக்காரு, காவி கட்டிட்டி இருப்பாருன்னு பெருமையில் இருந்தேன். என் மூஞ்சியிலே கரியைத் தீத்திட்டு இந்தக் கோலத்தில் பாவத்தைக் கொட்டிப்பாரா? பில்ட்டை வச்சி அவரை அடிக்கையிலே நெஞ்சு வெடிச்சி வந்தது...”

     ரேகா பழமாய்ப் பிழியும் அவள் கண்களைத் துடைக்கிறாள்.

     “அழாதேம்மா, அவர் முகம் மாறியிருக்கு; குரல் மாறியிருக்கு. ஆனால் ஏதோ ஒண்ணுமாறல. அவர் நடந்து வரப்ப, என்னைப் பார்த்து நேத்து சிரிச்சப்ப, இன்னிக்குக்கூட பஸ் ஸ்டாப்பில சிரிச்சாரு. நான் வந்த அதே பஸ்சில்தான் இவரும் வந்திருக்கணும்...”

     “நான் என்ன கண்ணு பண்ணுவேன்? இந்த ஊரு உலகம் முழுக்க அவருக்குத் தொழிலே அம்புடலியா? எத்தினி பேரு எத்தினி வேலை செய்யறாங்க? என் பாவமா இது? பையனுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கப் போன இடத்தில் அந்தம்மா மார்க்கெட்டுக்குப் போகச் சொன்னாங்கன்னு வேலைய விட்டுட்டு வந்தார். அவரா இப்படி...?”

     “நீதான் நகைநட்டு சேலை வாங்கித் தரலேன்னு பிடுங்கியிருப்பே...”

     சிவகாமியின் இதழ்கள் அசையவில்லை.

     பிடுங்கலா? அது ஒரு உரிமை. கட்டியவன் எல்லாச் சிறப்பையும் கொண்டு வந்து போற்றுவதைத் தான் பெண் எதிர்பார்ப்பாள். “ஒரு பொண்ணும் பிறந்து ஆளாகி நிக்கிது. இப்படி எத்தனை நாள் சிறுமை தின்னணும்? நீங்க நல்ல நிரந்தர வேலைன்னு இல்லாம படி மிதிக்க வேணாம்...” என்று கடிந்து கொண்டது மெய்தான். அதற்கு...

     “ஏம்மா? கசாப்பு வேலை செய்யிறதாவா சொன்னாரு?”

     “அதைப்பத்தி இப்ப என்ன? நீதான் அவரு உன் புருஷர் இல்லேன்னிட்டியே?”

     “எனக்கு ஒண்ணுமே தெரியல கண்ணு?”

     “அழாதேம்மா. சும்மா அழுது என்ன பிரயோசனம்? சந்தர்ப்பம் வரப்ப உனக்கு ஒண்ணுமே சொல்லத் தோணல.”

     “கண்ணு, அவரு உங்கப்பாவா இருந்தாலுந்தான் எப்படீம்மா இந்த வீட்டில் கொண்டாந்து வச்சிக்க உங்க பாட்டி சம்மதிக்கும்?”

     “குடிமுழுகிடுமா? அவரு தெரிஞ்சிதானே கடைத்தேறணும்னு பிச்சை கேட்பதுபோல பரிதாபமாக வந்தார்?”

     “குடிச்சிட்டிருந்தார்னு சொன்னே. இங்கே வந்து, இன்னும் என்னென்ன பழக்கமோ?”

     “அப்படின்னாலும் அவரை வீட்டைவிட்டுத் துரத்துவது சரின்னு நினைக்கலாமா?”

     “என்னம்மா பண்ணுவேன் நான்?”

     “இப்ப இதுவே அவரு ஜம்முனு ஒரு காரில் வந்து இறங்கி பணக்காரராக, பட்டு பொன்னு கொண்டாந்தா, அவர் ஆள் மாறியிருந்தாக் கூட நீங்க சந்தேகப் படுவீங்களா? அடிச்சு விரட்டுவீர்களா?”

     “அதெப்படிம்மா?”

     “நான் நாலு வருஷ அக்கரைச் சீமைக்குப் போய்ச் சம்பாதிச்சு வாழ்ந்த வாழ்க்கையில் இப்படி மாறிப் போனேன்னு சொல்லுறவரையிலானும் தயங்குவீங்களா? மாட்டீங்க. அம்மா, உன்னுடைய பக்தி, விரதம், அன்பு எல்லாம் பொய். பொய்யினு நிரூபிச்சிட்டே...”

     “கண்ணு, என்னைக் கொத்தாதேம்மா, நான் இடுக்கியில் அகப்பட்டாப்பல இருக்கிறேன். உன் பாட்டி எல்லாம் அவரை மகன்னு ஒத்துக்காத ஆளை நான் போயி எப்படிம்மா புருஷன்னு சொந்தம் கொண்டாட?”

     “நான் இப்ப பாட்டியப் பத்திக் கேக்கல. உன்னைக் கேட்கிறேன். உன் நெஞ்சில் கைவச்சுச் சொல்லு. உன் புருஷர், உன் குழந்தைக்குத் தந்தை. அவர் வாழ்க்கையில் பணம் சம்பாதிக்கும் இலட்சியம் பெரிசுன்னு நினைக்காதவர்; உலகின் கவடு சூதுகள் தெரியாதவர். அவர் எப்படிக் கொலைத் தொழிலுக்குப் போனாரென்று நமக்கு ஆதியந்தம் தெரியாது. ஒரு குஞ்சுக்குத் தீம்பு பொறுக்காத மென்மையான மனசுடைய அவர் அதர்மில்லாத கொலைத் தொழிலை மேற்கொண்டு தன்னையே அழிச்சுக்கிட்டார்னா அதில ஒரு வரலாறு இருக்கு. நினைவை மறக்க அவர் குடிச்சியிருக்கிறார். அது தெளிவு. இப்ப அந்த வாழ்க்கையைவிட்டு இங்கே நிழல் தேடி ஒதுங்க வந்திருக்கிறார். நீ ஏத்துக்கொள்கிறாயா? அதான் கேள்வி.”

     “வீட்டில் யாரும் ஏற்காமல் நான் எப்படியம்மா அவரை ஏற்று சமாளிக்க முடியும்?”

     ரேகாவின் புருவங்கள் கூடுகின்றன.

     இந்த அம்மா... கணவனின் நல்வாழ்வுக்காகத் தவமிருக்க இல்லையா? பணத்துக்காகத்தான் தவம் இருந்தாளா? பணம் கொடுக்கும் வளமான வாழ்வுக்கு நகைக்கு, ஊரார் மதிப்புக்கு...

     “அம்மா இந்த வீட்டை நீ நாளையே உதறிவிடலாம். எனக்குத் துணிச்சலிருக்கு. இந்த வீட்டில் காலையிலிருந்து இரவு வரை அடுப்படியில் உழலுகிறாய். கிணற்று நீரிறைத்துத் தேய்கிறாய். இந்த உழைப்பை நீ எங்கு வேண்டுமானாலும் செய்து பிழைக்கலாம்...”

     “ஐயோ,பாட்டி கேட்டா என்ன நினைப்பாங்க? எதை நினைச்சு கண்ணியமாக இருக்கும் குடும்ப நிழலைவிட்டு ஓட முடியும்?”

     ரேகாவுக்கு உறக்கமே வரவில்லை.

     குழப்பங்கள் உறக்கம் கூடாமலே கலைகின்றன. எப்படிப் பார்த்தாலும் அவரை அடித்து விரட்டியது நியாயமே இல்லை என்றுதான் தோன்றுகிறது. சிவகாமி யும் தூங்கவில்லை; முதியவளும் உறங்கவில்லை.