சங்கமருவிய எட்டுத்தொகை நூல்களுள் இரண்டாவதாகிய குறுந்தொகை ... தொடர்ச்சி ... குறுந்தொகைப் பாடல்களின் சிற்றெல்லை நான்கு அடி, பேரெல்லை எட்டு அடி. அகவற்பாவின் அமைப்பில் சுருங்கிய அடிவரையறையைக் கொண்ட பாடல் தொகுதி என்பதால் குறுந்தொகை என்று பெயர் பெற்றது. குறுந்தொகை நூலின் செய்யுள் தொகை கடவுள் வாழ்த்தை விடுத்து 401. இதனுள் 307, 391 ஆம் செய்யுட்கள் ஒன்பது அடி உடையன. எட்டு அடிப் பேரெல்லையைக் கடந்துள்ள இந்த இரண்டு பாடல்களும் ஐயத்திற்கு இடமானவை. 'இத்தொகை முடித்தான் பூரிக்கோ, இத் தொகை பாடிய கவிகள் இருநூற்றைவர்' என்பது பழங் குறிப்பு. இதனைத் தொகுப்பித்தார் பெயர் தெரியவில்லை. 10 பாடல்களின் ஆசிரியர் பெயர் காணப்பெறவில்லை. எஞ்சிய பாடல்களைப் பாடியவர்களின் தொகை 205. கடவுள்வாழ்த்து
தாமரை புரையும் காமர் சேவடிப் பவழத்து அன்ன மேனி, திகழ் ஒளி, குன்றி ஏய்க்கும் உடுக்கை, குன்றின் நெஞ்சு பக எறிந்த அம் சுடர் நெடு வேல், சேவல்அம் கொடியோன் காப்ப, ஏம வைகல் எய்தின்றால்-உலகே. பாரதம் பாடிய பெருந்தேவனார்
1. குறிஞ்சி
செங்களம் படக் கொன்று அவுணர்த் தேய்த்த செங் கோல் அம்பின், செங் கோட்டு யானை, கழல் தொடி, சேஎய் குன்றம் குருதிப் பூவின் குலைக் காந்தட்டே. தோழி, காந்தள் கையுறையை மறுத்தது
திப்புத்தோளார்
2. குறிஞ்சி
கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி! காமம் செப்பாது, கண்டது மொழிமோ; பயிலியது கெழீஇய நட்பின், மயில் இயல், செறி எயிற்று, அரிவை கூந்தலின் நறியவும் உளவோ, நீ அறியும் பூவே? இயற்கைப் புணர்ச்சி புணர்ந்தவழி, தலைமகளை இயற்கைப் புணர்ச்சிகண்
இடையீடுபட்டு நின்ற தலைமகன், நாணின் நீக்குதற்பொருட்டு, மெய் தொட்டுப்
பயிறல் முதலாயின அவள் மாட்டு நிகழ்த்திக் கூடி, தனது அன்பு தோற்ற நலம்
பாராட்டியது
இறையனார்
3. குறிஞ்சி
நிலத்தினும் பெரிதே; வானினும் உயர்ந்தன்று; நீரினும் ஆர் அளவின்றே- சாரல் கருங் கோல் குறிஞ்சிப்பூக் கொண்டு, பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே. தோழி தலைவனை இயற்பழிக்கத் தலைவி எதிராக இயற்பட மொழிந்தது
தேவகுலத்தார்
4. நெய்தல்
நோம், என் நெஞ்சே நோம், என் நெஞ்சே; இமை தீய்ப்பன்ன கண்ணீர் தாங்கி, அமைதற்கு அமைந்த நம் காதலர் அமைவு இலர் ஆகுதல், நோம், என் நெஞ்சே. தலைவி பற்றிக் கவன்ற தோழிக்குத் தான் ஆற்றியமை புலப்படக்
கூறியது
காமஞ்சேர் குளத்தார்
5. நெய்தல்
அதுகொல், தோழி! காம நோயே- வதி குருகு உறங்கும் இன் நிழற் புன்னை, உடை திரைத் திவலை அரும்பும் தீம் நீர், மெல்லம் புலம்பன் பிரிந்தென, பல் இதழ் உண்கண் பாடு ஒல்லாவே. பிரிவுத் துயரத்தில் கண் உறங்காமை
நரி வெரூ உத்தலையார்
|
சென்னை நூலகம் தேடல் |
![]() Custom Search |
| இலக்கிய தகவல்கள் |