உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
சங்கமருவிய எட்டுத்தொகை நூல்களுள் இரண்டாவதாகிய குறுந்தொகை ... தொடர்ச்சி - 18 ... 341. நெய்தல்
பல் வீ படரிய பசு நனைக் குரவம் பொரிப் பூம் புன்கொடு பொழில் அணிக் கொளாஅச் சினை இனிது ஆகிய காலையும், காதலர் பேணார் ஆயினும், 'பெரியோர் நெஞ்சத்துக் கண்ணிய ஆண்மை கடவது அன்று' என, வலியா நெஞ்சம் வலிப்ப, வாழ்வேன்-தோழி!-என் வன்கணானே. 'பருவ வரவின்கண் வேறுபடும்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி
உரைத்தது
மிளைகிழான் நல் வேட்டன்
342. குறிஞ்சி
கலை கை தொட்ட கமழ்சுளைப் பெரும் பழம் காவல் மறந்த கானவன், ஞாங்கர், கடியுடை மரம்தொறும் படு வலை மாட்டும் குன்ற நாட! தகுமோ-பைஞ் சுனைக் குவளைத் தண் தழை இவள் ஈண்டு வருந்த, நயந்தோர் புன்கண் தீர்க்கும் பயம் தலைப்படாஅப் பண்பினை எனினே? செறிப்பு அறிவுறுக்கப்பட்டான் வரைவின்கண் செல்லாது, பின்னும்
வரவுவேண்டின தலைமகனைத் தோழி நெருங்கிச் சொல்லி வரைவு கடாயது
காவிரிப்பூம் பட்டினத்துக் கந்தரத்தனார்
343. பாலை
நினையாய் வாழி-தோழி!-நனை கவுள் அண்ணல் யானை அணி முகம் பாய்ந்தென- மிகு வலி இரு புலிப் பகுவாய் ஏற்றை- வெண்கோடு செம் மறுக் கொளீஇய, விடர் முகைக் கோடை ஒற்றிய கருங்கால் வேங்கை வாடு பூஞ் சினையின், கிடக்கும் உயர்வரை நாடனொடு பெயருமாறே. தோழி கிழத்தியை உடன்போக்கு நயப்பக் கூறியது
ஈழத்துப் பூதன் தேவன்
344. முல்லை
நோற்றோர் மன்ற-தோழி!-தண்ணெனத் தூற்றும் துவலைப் பனிக் கடுந் திங்கள் புலம் பயிர் அருந்த அண்ணல் ஏற்றொடு நிலம் தூங்கு அணல வீங்கு முலை செருத்தல் பால் வார்பு, குழவி உள்ளி, நிரை இறந்து, ஊர்வயின் பெயரும் புன்கண் மாலை, அரும் பெறல் பொருட் பிணிப் போகிப் பிரிந்து உறை காதலர் வர, காண்போரே. பிரிவிடை வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள் கூறியது
குறங்குடி மருதன்
345. நெய்தல்
இழை அணிந்து இயல்வரும் கொடுஞ்சி நெடுந் தேர் வரை மருள் நெடு மணல் தவிர்த்தனிர் அசைஇத் தங்கினிர் ஆயின், தவறோ-தகைய தழை தாழ் அல்குல் இவள் புலம்பு அகல- தாழை தைஇய தயங்குதிரைக் கொடுங் கழி இழுமென ஒலிக்கும் ஆங்கண் பெருநீர் வேலி எம் சிறு நல் ஊரே? பகல் வந்து ஒழுகுவானைத் தோழி 'இரா வா' என்றது
அண்டர் மகன் குறுவழுதி
346. குறிஞ்சி
நாகு பிடி நயந்த முளைக் கோட்டு இளங் களிறு, குன்றம் நண்ணி, குறவர் ஆர்ப்ப, மன்றம் போழும் நாடன்-தோழி!- சுனைப் பூங் குவளைத் தொடலை தந்தும், தினைப் புன மருங்கில் படுகிளி ஓப்பியும், காலை வந்து, மாலைப் பொழுதில் நல் அகம் நயந்து, தான் மயங்கிச் சொல்லவும் ஆகாது அஃகியோனே. தோழி கிழத்தியை இரவுக்குறி நயப்பக் கூறியது
வாயில் இளங்கண்ணன்
347. பாலை
மல்கு சுனை உலர்ந்த நல் கூர் சுரமுதல் குமரி வாகைக் கோலுடை நறு வீ மட மாத் தோகைக் குடுமியின் தோன்றும் கான நீள் இடை, தானும் நம்மொடு ஒன்று மணம் செய்தனள் இவள் எனின், நன்றே-நெஞ்சம்!-நயந்த நின் துணிவே. பொருள் வலிக்கும் நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லிச் செலவழுங்கியது
காவிரிப் பூம் பட்டினத்துச் சேந்தன் கண்ணன்
348. பாலை
தாமே செல்பஆயின், கானத்துப் புலம் தேர் யானைக் கோட்டிடை ஒழிந்த சிறு வீ முல்லைக் கொம்பின் தாஅய், இதழ் அழிந்து ஊறும் கண்பனி, மதர் எழில் பூண் அக வன் முலை நனைத்தலும் காணார், கொல்லோ-மாணிழை!-நமரே? செலவுக் குறிப்பு அறிந்து வேறுபட்ட கிழத்தியைத் தோழி வற்புறீஇயது
மாவளத்தன்
349. நெய்தல்
'அடும்பு அவிழ் அணி மலர் சிதைஇய மீன் அருந்தி, தடந் தாள் நாரை இருக்கும் எக்கர்த் தண்ணம் துறைவற் தொடுத்து, நம் நலம் கொள்வாம்' என்றி-தோழி!-கொள்வாம்; இடுக்கண் அஞ்சி இரந்தோர் வேண்டிய கொடுத்து 'அவை தா' எனக் கூறலின், இன்னாதோ, நம் இன் உயிர் இழப்பே? பரத்தைமாட்டுப் பிரிந்து வந்த தலைமகன் கேட்கும் அண்மையாக,
தோழிக்குக் கிழத்தி கூறியது
சாத்தன்
350. பாலை
அம்ம வாழி-தோழி!-முன் நின்று, 'பனிக் கடுங்குரையம்; செல்லாதீம்' எனச் சொல்லினம்ஆயின், செல்வர்கொல்லோ-ஆற்று அயல் இருந்த இருங் கோட்டு அம் சிறை நெடுங் காற் கணந்துள் ஆள் அறிவுறீஇ, ஆறு செல் வம்பலர் படை தலைபெயர்க்கும் மலையுடைக் கானம் நீந்தி, நிலையாப் பொருட் பிணிப் பிரிந்திசினோரே? பிரிவு நேர்ந்த தலைமகள், அவனது நீக்கத்துக்கண் மேறுபட்டாளைத்
தோழி வற்புறீஇயது
ஆலந்தூர் கிழார்
351. நெய்தல்
வளையோய்! உவந்திசின்-விரைவுறு கொடுந் தாள் அளை வாழ் அலவன் கூர் உகிர் வரித்த ஈர் மணல் மலிர் நெறி சிதைய, இழுமென உரும் இசைப் புணரி உடைதரும் துறைவற்கு உரிமை செப்பினர் நமரே; விரிஅலர்ப் புன்னை ஓங்கிய புலால்அம் சேரி இன் நகை ஆயத்தாரோடு இன்னும் அற்றோ, இவ் அழுங்கல் ஊரே? தலைமகன் தமர் வரைவொடு வந்தவழி, 'நமர் அவர்க்கு வரைவு நேரார்கொல்லோ?'
என்று அஞ்சிய தலைமகட்குத் தோழி வரைவு மலிந்தது
அம்மூவன்
352. பாலை
நெடு நீர் ஆம்பல் அடைப் புறத்தன்ன கொடு மென் சிறைய கூர்உகிர்ப் பறவை அகல்இலைப் பலவின் சாரல் முன்னி, பகல் உறைமுது மரம் புலம்பப் போகும் சிறு புன் மாலை உண்மை அறிவேன்-தோழி!-அவர்க் காணா ஊங்கே. பிரிவிடைத் தோழிக்குக் கிழத்தி மெலிந்து கூறியது
கடியலூர் உருத்திரங் கண்ணனார்
353. குறிஞ்சி
ஆர் கலி வெற்பன் மார்பு புணை ஆக, கோடு உயர் நெடு வரைக் கவாஅன், பகலே, பாடு இன் அருவி ஆடுதல் இனிதே; நிரை இதழ் பெருந்தாக் கண்ணோடு, இரவில், பஞ்சி வெண் திரி செஞ் சுடர் நல் இல் பின்னு வீழ் சிறுபுறம் தழீஇ, அன்னை முயங்கத் துயில் இன்னாதே. பகற்குறி வந்தொழுகும் தலைமகன் வெளிப்பாடஞ்சி இரவுக்குறி
நயந்தானது குறிப்பறிந்த தோழி, இரவின்கண் அன்னையது காவல் அறிந்து பின்னும்
பகற்குறியே நன்று, அவ் இரவுக்குறியின் என்று, பகற்குறியும் இரவுக்குறியும்
மறுத்து, தலைமகன் சிறைப்புறத்தானாக வரைவு கடாயது
உறையூர் முதுகூற்றனார்
354. மருதம்
நீர் நீடு ஆடின் கண்ணும் சிவக்கும்; ஆர்ந்தோர் வாயில் தேனும் புளிக்கும்; தணந்தனைஆயின், எம்இல் உய்த்துக் கொடுமோ- அம் தண் பொய்கை எந்தை எம் ஊர்க் கடும் பாம்பு வழங்கும் தெருவில் நடுங்கு அஞர் எவ்வம் களைந்த எம்மே? பரத்தையிற் பிரிந்து வாயில் வேண்டிச் சென்ற தலைமகற்குத்
தோழி வாயில் மறுத்தது
கயத்தூர் கிழான்
355. குறிஞ்சி
பெயல் கால் மறைத்தலின், விசும்பு காணலரே; நீர் பரந்து ஒழுகலின், நிலம் காணலரே; எல்லை சேறலின், இருள் பெரிது பட்டன்று; பல்லோர் துஞ்சும் பானாள் கங்குல் யாங்கு வந்தனையோ?-ஓங்கல் வெற்ப!- வேங்கை கமழும் எம் சிறுகுடி யாங்கு அறிந்தனையோ? நோகோ யானே. இரவுக்குறி நேர்ந்த தலைமகற்குத் தோழி நொந்து கூறியது
கபிலர்
356. பாலை
நிழல் ஆன்று அவிந்த நீர் இல் ஆர் இடைக் கழலோன் காப்பப் கடுகுபு போகி, அறுசுனை மருங்கின் மறுகுபு வெந்த வெவ் வெங் கலுழி தவ்வெனக் குடிக்கிய யாங்கு வல்லுநள்கொல் தானே-ஏந்திய செம்பொற் புனை கலத்து அம் பொரிக் கலந்த பாலும் பல என உண்ணாள், கோல் அமை குறுந் தொடித் தளிர் அன்னோளே? மகட்போக்கிய செவிலித்தாய் உரைத்தது
கயமனார்
357. குறிஞ்சி
முனி படர் உழந்த பாடு இல் உண்கண் பனி கால் போழ்ந்து, பணை எழில் ஞெகிழ் தோள், மெல்லிய ஆகலின் மேவரத் திரண்டு, நல்ல என்னும் சொல்லை மன்னிய- ஏனல்அம் சிறு தினை காக்கும் சேணோன் ஞெகிழியின் பெயர்ந்த நெடு நல் யானை மீன்படு சுடர் ஒளி வெரூஉம் வான் தோள் வெற்பன் மணவா ஊங்கே. தோழி கிழவன் கேட்கும் அண்மையனாகக் கிழத்திக்குச் சொல்லியது
கபிலர்
358. முல்லை
வீங்குஇழை நெகிழ, விம்மி, ஈங்கே எறிகண் பேதுறல்; 'ஆய்கோடு இட்டுச் சுவர்வாய் பற்றும் நின் படர் சேண் நீங்க வருவேம்' என்ற பருவம் உதுக்காண்; தனியோர் இரங்கும் பனி கூர் மாலைப் பல் ஆன் கோவலர் கண்ணிச் சொல்லுப அன்ன, முல்லை வெண் முகையே. தலைமகன் பிரிவிடைக் கிழத்தியைத் தோழி வற்புறுத்தியது
கொற்றன்
359. மருதம்
கண்டிசின்-பாண!-பண்பு உடைத்து அம்ம மாலை விரிந்த பசு வெண் நிலவின் குறுங் காற் கட்டில் நறும் பூஞ் சேக்கை, பள்ளி யானையின் உயிர்த்தனன் நசைஇ, புதல்வற் தழீஇயினன் விறலவன்; புதல்வன் தாய் அவன் புறம் கவைஇயினளே. பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகன் வாயில் வேண்டிப் பெறாது,
தானே புக்குக் கூடியது கண்டு, தோழி பாணற்குச் சொல்லியது
பேயன்
360. குறிஞ்சி
வெறி என உணர்ந்த வேலன் நோய் மருந்து அறியான் ஆகுதல் அன்னை காணிய, அரும் படர் எவ்வம் இன்று நாம் உழப்பினும், வாரற்கதில்ல-தோழி!-சாரல் பிடிக் கை அன்ன பெருங் குரல் ஏனல் உண் கிளி கடியும் கொடிச்சி கைக் குளிரே சிலம்பின் சிலம்பும் சோலை இலங்கு மலை நாடன் இரவினானே. தலைமகன் சிறைப்புறத்தானாக வெறி அஞ்சிய தோழிக்குச் சொல்லுவாளாய்த்
தலைவி சொல்லியது
மதுரை ஈழத்துப் பூதன் தேவன்
|