அநுக்கிரகா நூலை பிடிஎஃப் வடிவில் பெற இங்கே சொடுக்கவும். Click Here to Download Anugraha Book as PDF. 13 வேண்டுமென்றே ஜனங்களை ‘மிஸ்லீட்’ பண்ணுகிற விதத்தில் எந்தத் தேதியில் - எந்த ஆண்டில் எதற்காகச் சொல்லியது என்ற பின்னணி எதுவும் புரியவிடாமல் மொட்டையாக முத்தையாவின் மேல்நாட்டுத் தோற்றத்தோடு ‘குடிசைகளை அகற்றுங்கள்’ என்று மட்டுமே அச்சிட்ட பிரசுரத்தை மறுத்து வேறு முழு விவரப் பிரசுரம் அச்சிட்டு வழங்க அவகாசமே இல்லாமல் அது வெளியிடப்பட்டிருந்தது. அதை மறுத்துவிட விரும்பினார் முத்தையா. அது கனிவண்ணனின் வேலைதான் என்று எல்லோருக்கும் புரிந்தது. ஆனால் யார் பிரசுரித்தது, எங்கே அச்சிட்டுப் பிரசுரித்தது என்ற விவரமெல்லாம் அதில் இல்லை. அச்சகங்களுக்கு விடுமுறையான ஒரு நாளில் அவசர அவசரமாகத் தயார் செய்து வெளியிடப் பட்டிருந்தது இது. பார்த்தார் முத்தையா, மூடியிருந்த ஓர் அச்சகத்தை அதிகப் பணமும் ஓவர் டைம் கூலியும் கொடுத்துத் திறந்து வேலை செய்ய வைத்து, இரவோடிரவாகப் பதில் துண்டுப் பிரசுரம் அச்சிட்டு எல்லா மூலைகளிலும் பரப்பி விட்டார். ‘அநுக்கிரகாவின் அப்பா அன்று இதையும் தான் சொன்னார். இன்று அநுக்கிரகாவும் இதையே சொல்கிறார்,’ என்று போட்டுக் குடிசைகளுக்குப் பதிலாக மலிவு விலையில் வீடு கட்ட உலக வங்கி உதவி பெற்றுத் தீட்ட வேண்டும் என்பதையும் இணைத்து முழு விவரம் வெளியிட்டு மக்களின் சந்தேகத்தையும் போக்கினார். ‘அப்படி ஒரு திட்டம் தீட்டிய அநுக்கிரகாவைச் சட்டமன்ற உறுப்பினராக்குங்கள்?’ என்ற வேண்டுகோளுடன் துண்டுப் பிரசுரத்தைப் போல் பத்து மடங்கு எண்ணிக்கையில் அதிகமாக இந்த மறுப்புப் பிரசுரம் வெளியாகிப் பரவிய காரணத்தால் மூலை முடுக்கெல்லாம் உண்மைத் தகவலைத் தெரிவிக்க முடிந்தது. நிதானமும் கன்ஸர்வேடிவ் மனப்பான்மை உள்ளவருமான முத்தையாவுக்குக் கூட ஒரு தவிர்க்க முடியாத தேர்தல் வெறி வந்திருந்தது. தோற்று விடக் கூடாது என்கிற எச்சரிக்கை உணர்விலும் ஜெயித்து விட வேண்டும் என்ற நம்பிக்கையிலும் மூண்ட வெறியாய் இருந்தது இது. வீடே எலெக்ஷன் ஆபீஸாக மாறியிருந்தும் இந்த வெறி தான் அவரைச் சகித்துக் கொள்ள வைத்திருந்தது. கடைசி நாளுக்கு முந்திய நாள் பொன்னுரங்கம் வந்து, “அவங்க தரப்பிலே எவர்சில்வர் பாத்திரமும் கொடுத்து ஓட்டுக் கேட்கிறாங்க! நாமும் எதினாச்சும் பண்ணியாகணும். உடனே பத்தாயிரம் கைத்தறிப் புடவை வேணும்,” என்றான். முத்தையா கோபமாகக் கேட்டார். “உடனே பத்தாயிரம் புடவைகளுக்கு எங்கேப்பா போறது?” “அதெல்லாம் கவலையை விடுங்க. இங்கே கோடௌன் தெருவிலே கைத்தறிச் சேலை ஸ்டாக்கிஸ்ட் ஒருத்தர் இருக்கார். இப்போ... ஃபோன் பண்ணினாப் பதினைஞ்சு நிமிஷத்துக்குள்ளார லாரியிலே கொண்டாந்து வீட்டு வாசல்லே இறக்கிடுவாங்க.”
“பணம் என்ன ஆகும்? விலை விவரம் எதுவும் பேசிக்க வேணாம்?”
“பேசிக்கலாம். ஐம்பது - அறுபது ரூபாயிலே நல்ல புடவையாகக் கிடைக்குங்க. தோதாப் பேசிச் சல்லிசாகக் கொடுப்பார். கிரடிட்டிலே வாங்கிக்கலாம். எலெக்சன் முடிஞ்சப்புறம் பணம் செட்டில் பண்ணிப்போம்.” “பத்தாயிரம் புடவையை வச்சு எத்தினி வோட்டைப் பிடிக்க முடியும்? நம்பிக்கையாக ஓட்டுப் போடறவங்க கையிலே புடவை போய்ச் சேருமா? அல்லது புடவையை வாங்கிட்டு ஏமாத்திடுவாங்களா? நடுவே வேற யாராவது புடைவைங்களை அமுக்கி, மறுபடி கடையிலே கொண்டு போய் வித்துப் பணம் பண்ணிடப் போறாங்க, ஜாக்கிரதை.” “அதெல்லாம் யாருங் ‘ராங்’ பண்ண மாட்டாங்க சார்! அஞ்சு ஓட்டுக்கு உறுதி சொல்லி, சத்தியம் பண்ணிக் கொடுக்கிறவங்க கையிலே தான் ஒரு புடவையே போகும்.” “சத்தியமா? இதுக்கா?” “ஆமாங்க! வழக்கத்திலே உள்ள விஷயந்தாங்க. யாரும் மாட்டேங்கறதில்லே.” “அப்போ இப்ப ஒரு சத்தியத்துக்கு விலை அம்பது ரூபாய் பெறுமானம் உள்ள ஒரு புடைவைன்னு சொல்லு.” “சில இடங்களிலே புடவை. வேற சில இடங்களிலே எவர்சில்வர் பாத்திரம்.” “நம்ம ஜனநாயகத்தோட விலை புடவையும், எவர்சில்வர் பாத்திரமுமுன்னு சொல்லு.” “கிண்டல் பண்ணாதீங்க.” “சரி, பண்ணலே. புடவைக்கு ஃபோன் போடு. பேசி முடிச்சிடலாம்.” பொன்னுரங்கம் கைத்தறி ஸ்டாக்கிஸ்டுக்குப் போன் பண்ணி முத்தையாவிடம் கொடுத்தான். ஆவாரம் பட்டு ஹவுஸ் வி.டி.முத்தையா என்றவுடனே பயபக்தியோடு, “சரிங்க! உடனே அனுப்பறேன்,” என்று இசைந்தார் ஸ்டாக்கிஸ்டு. பொன்னுரங்கமும் அவரும் பேசியபடி தோட்டத்தில் உலாவினர். “ஓட்டுப் போட்டிட்டு வர்ற ஜனங்களுக்கு வடை பாயாசத்தோடு சாப்பாடு போடணும்.” “சாப்பிட வர்றவங்க நமக்குத்தான் ஓட்டுப் போட்டிட்டு வர்றாங்கன்னு எப்படித் தெரியும்?” “எலெக்ஷன் போலிங் பூத்திலேர்ந்து நூறு கெஜம் தள்ளி உட்கார்ந்திருக்கிற நம்ம ஆளுங்க வாக்காளர் பூத்துக்குப் போறப்போ சொல்ற வார்த்தையை நம்பி ஒரு சீட்டுக் கொடுத்து அனுப்புவாங்க. அந்தச் சீட்டோட யாரு வர்றாங்களோ அவங்களுக்குச் சாப்பாடு போட்டுடலாம். தேடி வந்து சாப்பிட்டுட்டுப் போவாங்க.” பொதுத் தேர்தல், ஜனநாயக முறைகள் எல்லாம் அரைவேக்காடுகளிடமும், இடைத் தரகர்களிடமும் சிக்கி எவ்வளவு கொச்சையாக வேண்டுமோ அவ்வளவு கொச்சையாகி இருந்தன. ஆவாரம்பட்டு சமஸ்தானம் இப்போது இல்லை. ஆனால் அதைப் போல பத்து சமஸ்தானங்களும், சொத்தும், ஐஸ்வரியமும் இருந்தால் கூட ஒரு எம்.எல்.ஏ. பதவிக்குச் செலவழிக்கக் காணாது போலிருந்தது. அதிக லாபமில்லாத அல்பமான ஒரு சிறு நன்மையையும் வீம்பையும் கருதிக் கணக்கு வழக்குப் பாராமல் செலவழித்துக் கொண்டிருந்தார் முத்தையா. தேர்தல் தினத்தன்று தெருக்களில் பூத்களில் எலெக்ஷன் ஏஜெண்டாகப் போகிறவர்களுக்கும் மற்றப் பணியாளர்களுக்கும் தினப்படி சாப்பாடு முதலிய செலவுகள் இருந்தன. நூறு கார்கள், இருபது வேன்கள், ஆறு லாரிகள் தேர்தல் வேலைக்காக ஓடிக் கொண்டிருந்தன. பெட்ரோல், டீஸல் தண்ணீராகச் செலவழிந்து கொண்டிருந்தன. தேர்தல் நாளுக்கு முன் தினம் பிரசாரம், கோஷம், கூப்பாடுகள் அடங்கியிருந்தன. பகல் மூன்று மணிக்கு அவரது நண்பரான காப்பி எஸ்டேட் அதிபர் ஒருவர் அவரைப் பார்க்க வந்திருந்தார். தெரியாத் தனமாக மகளை அரசியலில் இறங்கச் செய்துவிட்டுத் தேர்தல் செலவுகளை சமாளிக்க முடியாமல் திணறுவது பற்றி முத்தையா அந்த நண்பரிடம் வருத்தப்பட்டுக் கொண்டார். அலுத்துக் கொண்டார். அவர் சொன்ன காரணங்களையும், விவரங்களையும் கேட்டுவிட்டு எஸ்டேட் அதிபர் சிரித்துக் கொண்டார். “இந்தப் பங்களாவைச் சுத்தி இருக்கிற அசுத்தங்களைப் போக்கி நீங்க விரும்பற மாதிரி பண்ணணும்கிறதுக்காக வீணுக்கு இவ்வளவு செலவழிச்சிருக்க வேண்டாம். இதை வித்துட்டு பெஸண்ட் நகர்லே அம்பது கிரவுண்ட் கடல் ஓரமா வாங்கிக் கட்டித் தோட்டமும் துரவுமாகப் பிரமாதமாக வீடு கட்டியிருக்கலாம்.” “செய்யலாம்! ஆனால் இந்தப் பங்களாவோட எனக்கு இருக்கிற சென்டிமென்ட்டல் ‘அட்டாச்மெண்ட்’ ரொம்பப் பெரிசு. இதோட சென்ட்ரல் ஹால்லே என்னோட கிராண்ஃபாதர் வைஸ்ராய், கவர்னர்னு எத்தனையோ பெரிய பெரிய துரைமார்களுக்கும், பிரபுக்களுக்கும் விருந்து கொடுத்திருக்கார். இந்தியாவின் பெரிய பெரிய சமஸ்தானாதிபதிகள்ளாம் இந்த வீட்டு டைனிங் ஹால்லே உட்கார்ந்து சாப்பிட்டிருக்காங்க. வாஷ் பேஸின்களிலேர்ந்து, பாத்ரூம் ‘டப்’ வரை லண்டனிலிருந்து வந்த சாமான்கள். இதிலே இருக்கிற ‘சாஸ்டலியர்ஸ்’ மட்டும் இன்னிக்கு வெறும் ஆண்டிக் விலை மட்டும் போட்டால் கூடப் பதினைந்து லட்ச ரூபாய் பெறும்.” “எல்லாம் சரி மிஸ்டர் முத்தையா. சென்டிமெண்ட்ஸுக்கும் ஒரு மதிப்பு இருக்கு. அதையும் மீறி அதுக்காகச் செலவழிக்கிறதிலே அர்த்தம் இல்லே. தவிர இன்னிக்கு முதலீடு இல்லாமல் வெறும் கையோட பாலிடிக்ஸ்லே இறங்கற ஒருத்தனுக்குத்தான் அது கோடி கோடியாத் திருப்பித் தரும். உங்களுக்கும் எனக்கும் அது ஒரு ஒயிட் எலிஃபெண்ட்தானே ஒழிய, வரவு இல்லை. நம்ம கௌரவம், பண்பாடு எல்லாம் அதிலே போய்க் கை நீட்டி வாங்கிச் சம்பாதிக்க நம்மை அனுமதிக்காது. நம்மாலே வாங்கவும் முடியாது. கொடுத்தே பழக்கப்பட்டவங்க வாங்க ஆரம்பிக்கிறது கஷ்டம். வாங்கியே பழக்கப்பட்டவங்க கொடுக்கிறதும் கஷ்டம். ஆம் ஐ ரைட் மிஸ்டர் முத்தையா?” முத்தையா யோசனையில் ஆழ்ந்தார். பின்பு சிறிது நேரத்துக்கு அப்புறம் மறுபடி சொன்னார். “என் டாட்டர் எம்.எல்.ஏ.யா ஜெயிச்சா உடனே மந்திரியா வரச் சான்ஸ் இருக்கு. அதுக்கு அப்புறமாவது என் பிரச்சினைகள் தீரும்னு நினைக்கிறேன்.” “யார் கண்டார்கள்? உங்கள் பிரச்சினைகள் தீருவதற்குப் பதில் மோசமாகலாம். அதிகமாகவும் செய்யலாம்.” “ஏன்? எதனாலே அப்படிச் சொல்றீங்க? எனக்கு விளங்கலையே?” “போகப் போக விளங்கும். அப்பப் புரிஞ்சுக்குவீங்க. பொதுவிலே ஆஸ் திங்க்ஸ் ஸ்டாண்ட் டுடே. உங்க மகளை எதிர்க்கிறான்னு சொன்னீங்களே, யாரோ கனிவண்ணனோ மணிவண்ணனோ அவனை மாதிரி ஆளுங்களுக்குத்தான் பாலிடிக்ஸ் பே பண்ணும். நமக்கெல்லாம் அது நஷ்டக் கணக்காகவும், லயபிலிட்டியாகவும்தான் இருக்கும் மிஸ்டர் முத்தையா.” “அப்படியா? லெட் அஸ் வெய்ட் அண்ட் ஸீ!” நண்பர் காப்பி சிற்றுண்டி அருந்தி விடைபெற்றுக் கொண்டு சென்ற பின் நெடு நேரமாகியும் முத்தையா அவர் கூறியவற்றைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தார். இரவில் கூட நெடு நேரம் வரை உறக்கம் வராமல் இந்தச் சிந்தனை அவரை பாதித்தது. மறுநாள் விடிந்தால் பொதுத் தேர்தல். பல இடங்களில் சுற்றி அலைந்து விட்டு ஊழியர்களையும் தேர்தல் அலுவலகங்களையும் நேரில் போய்க் கவனித்த பின் அநுக்கிரகா வீடு திரும்புகையில் இரவு இரண்டு மணி. அலைந்து திரிந்து வாடிக் கருகி இருந்தாள். அவருக்கே அனுதாபமாகவும் பரிதாபமாகவும் இருந்தது அவளைப் பார்க்கும் போது. சிட்டுக் குருவியாகவும் பச்சைக் கிளியாகவும் இருந்தவளை இப்படி ஆக்கிய பாவத்துக்குத் தானே பொறுப்பாளி என்று கூட அவருக்குத் தோன்றியது. அவருக்கு அன்றிரவு முழுவதும் தூக்கமே வரவில்லை. சரியாகக் காலை நான்கு மணிக்கு அநுக்கிரகாவின் அறையில் மறுபடி விளக்கு எரிந்தது. நீராடி உடை மாற்றிக் கொண்டு தயாரானாள் அவள். சமையற்காரனை எழுப்பி அவளுக்கு பிரட் டோஸ்ட்டும், காப்பியும் தயாரிக்கச் சொன்னார் முத்தையா. “நீங்க ஏம்பா எழுந்திருந்து சிரமப்படறீங்க? நான் பார்த்துக்க மாட்டேனா?” என்றாள் அநுக்கிரகா. “தூக்கம் வரலேம்மா.” கொஞ்சம் கார்ன்ஃப்ளேக் பால் கரைசலும் இரண்டு ஸ்லைஸ் ரொட்டியும் காப்பியும் சாப்பிட்டுவிட்டு அவள் புறப்பட்ட போது, “ஹாவ் த பெஸ்ட்,” என்று வாழ்த்தி வாசலில் கார் வரை போய் வழியனுப்பி விட்டு வந்தார் முத்தையா. அவர் மனம் சஞ்சலமாய் இருந்தது. ‘பாலிடிக்ஸ் நம்ம மாதிரி ஆளுங்களுக்கு லயபிலிட்டி அல்லது நஷ்டக் கணக்குத்தான்’ என்று நண்பர் சொல்லிவிட்டுப் போன வாக்கியத்தைச் சுற்றியே செக்கு மாடு மாதிரி மனம் சுழன்றது. மகள் எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்று குலதெய்வத்தை வேண்டிக் கொண்டார். அநுக்கிரகா வெற்றி பெற்று மந்திரியானால் வந்து கல்யாண உற்சவம் நடத்துவதாக ஏழுமலையானிடம் பிரார்த்தனை செய்து கொண்டு மனத்தில் தியானித்தார். நண்பர் ஏன் அன்றைக்குப் பார்த்துத் தேடி வந்து துக்கிரி மாதிரி அப்படிச் சொல்லிவிட்டுப் போனார் என்று எண்ணி எண்ணித் தவித்தது அவர் உள்ளம். அந்த நண்பர் வந்த போது அநுக்கிரகா வீட்டில் இல்லை. அவர் வந்து பேசிவிட்டுப் போனதெல்லாம் பற்றி மகளிடம் அவர் எதுவும் கூற விரும்பவில்லை. அநுக்கிரகா நூலை பிடிஎஃப் வடிவில் பெற இங்கே சொடுக்கவும்.
Click Here to Download Anugraha Book as PDF. |