அநுக்கிரகா நூலை பிடிஎஃப் வடிவில் பெற இங்கே சொடுக்கவும். Click Here to Download Anugraha Book as PDF. 7 கூட்டம் அலை மோதியது. நெல்லுப்பேட்டை மைதானத்தில் எள் தூவினால் கீழே தரையில் விழ இடைவெளி இல்லை. மரங்கள், கட்டிடங்களின் மாடிகள், சுவர்களில் கூட ஏறி நின்று கூட்டம் மொய்த்துக் கொண்டிருந்தது. என்ன பேச வேண்டும் என்ன வரிசையில் பேசவேண்டும் என்று நினைக்க நினைக்க மறந்தன. நினைத்த வேகத்தை விட அதிகச் சுருக்கில் அவை மறந்தது கண்டு அநுக்கிரகா பதறினாள். சுதந்திரத்திற்குப் பிறகு பிள்ளையார் சுழி போட்ட பாமர மக்களின் கட்சியாகிய ம.மு.க. வில் பரம்பரை சமஸ்தானாதிபதி போன்ற ஆவாரம்பட்டு ஹவுஸ் கோடீஸ்வரர் சர் வி.டி.முத்தையாவின் ஒரே மகள் அத்தனை தூரம் மேல்நாட்டில் போய்ப் படித்தவள் ஏன் சேர்ந்திருக்கிறாள், என்ன பேசப் போகிறாளோ, எப்படி பேசப் போகிறாளோ, எதில் பேசப் போகிறாளோ, தமிழிலா, ஆங்கிலத்திலா என்றெல்லாம் ஆவலோடு காண வந்த கூட்டம் பயங்கரமாகக் கூடியிருந்தது. நேரம் ஆக ஆக அவளுக்கு எல்லாமே மறப்பது போன்ற உணர்ச்சி ஏற்பட்டது. எதுவுமே நினைவு வரவில்லை. பொன்னுரங்கத்தைக் கூப்பிட்டு அவன் காதோடு காதாக, “சீக்கிரமா என்னைப் பேசவிட்டால் என்ன? எனக்கு எல்லாமே மறந்து விடும் போல இருக்குத் தலைவரே,” என்று முடுக்கினாள். அவனோ நிர்தாட்சண்யமாக மறுத்தான். “சிறப்புப் பேச்சாளர்னாக் கடைசியிலேதாம்மா பேசணும். அப்பத்தான் ஒரு ‘சுகிர்’ இருக்கும்,” என்றான். மற்றவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டு மணிக்கணக்கில் மேடையில் உட்கார்ந்திருப்பது அவளுக்குப் புது அனுபவமாய் இருந்தது. யாரோ தொடர்ந்து தன் தலைமேல் குப்பைக் கூளத்தை இடைவிடாமல் வாரிக் கொட்டுவதைச் சிரித்த முகத்தோடு சகித்துக் கொள்ள நிர்ப்பந்தப் படுத்தப்பட்டு உட்கார்ந்திருப்பது போல் அவள் இருக்க நேர்ந்தது. மேடையேறிப் பேசுவதுதான் அலுப்பூட்டுகிற காரியம் என்று நேற்றுவரை அவள் நினைத்திருந்தாள். கேட்பது பேசுவதை விடப் பல மடங்கு அலுப்பூட்டுகிற காரியம் என்று இன்று இப்போதுதான் முதன் முதலாக அவளுக்குப் புரிந்தது. கடைசியாக முத்தாய்ப்புப் பேச்சுப் பேசும் சிறப்புப் பேச்சாளர்கள் பலர் மூளை குழம்பிப் போய் ஜன்னி கண்டவன் மாதிரி உளறுவதற்கு உண்மையான காரணமே அவர்கள் முந்தி முப்பது பேச்சாளரைக் கேட்க நேரிடுவதுதானோ என்று கூட அவளுக்கு இப்போது தோன்றியது. சில கெட்டுக்காரச் சிறப்புப் பேச்சாளர்கள் தாங்கள் பேசுகிற நேரம் வரை கூட்டத்துக்கே வராமல், சரியாக ஒரு நிமிடத்துக்கு முன் காரில் வந்து இறங்குவதற்குக் காரணம் இருப்பது இப்போது அவளுக்குப் புரிகிற மாதிரி இருந்தது. ஆனால் எடுத்த எடுப்பிலேயே அவள் அப்படிச் செய்ய முடியாது. ‘ராங்கிக்காரி’ என்று கெட்ட பேராகிவிடும். திணறிப் போய் வேர்க்க விறுக்க மேக்கப் கலைந்து வறட்சியோடு மேடையில் உட்கார்ந்திருந்தாள்.
கடைசியில் ஒன்பது மணிக்கு மேல் பொன்னுரங்கம் அவளைப் பேச அழைத்ததான்.
“அழகுத் தென்றலாக, அறிவுப் புயலாக, இயக்க இடிமுழக்கமாக அண்ணியார் இப்போது பேசுவார்கள்,” என்று அவன் அறிவித்ததும் கைகால் பதற, நாக்கு உள்ளேயே பசை போட்டு ஒட்டினாற் போல் ஒட்டிக் கொள்ள எப்படியோ சமாளித்து எழுந்திருந்து மைக் முன் வந்து நின்றாள். ஒரே கரகோஷம், பட்டாஸ் ஒலி முழக்கம். விசில் ஒலிகள். ஒரே சமயத்தில் தென்றல், புயல், இடி முழக்கம் ஆகிய மூன்று நிலைகளிலும் எப்படிப் பேசுவதென்று கையும் ஓடவில்லை. எப்படியோ சுதாரித்துச் “சதையின் சதையான...” என்று அவள் தொடங்கியதுமே மைக்குக்கும் அவளுக்கும் இடையே ஒருத்தன் தலையை நீட்டி, ”ஆறாவது வட்டம் அம்மிக் குப்பம் ம.மு.க. சார்பில் அண்ணியாரவர்களுக்கு இந்த ரூபாய் நோட்டுக்களை மாலையாக அணிவிக்கிறேன்” என்று புத்தம் புது ஐந்து ரூபாய் நோட்டுக்களாலான மாலையை அவள் கழுத்தில் போட வந்தான். அவள் தற்காப்போடு தடுத்து அதைக் கைகளாலேயே வாங்கிக் கொண்டாள். மறுபடி அவள் மைக்கைப் பற்றி, “என் அருமைச் சதையின் சதையான...” என்று தொண்டையின் சக்தியை எல்லாம் திரட்டிக் கொண்டு ஆரம்பித்த போது, “மாலைக்குப் பதிலாக அண்ணியாருக்கு இந்த இரண்டு ரூபாயை அளிக்கிறேன்,” என்று ஒரு கிழவர் ஊடே புகுந்து விட்டார். அப்புறம் கைத்தறித் துண்டு போடுகிறவர்களின் பட்டாளம். மறுபடி மாலைக்குப் பதிலாக ரூபாய் நோட்டு அளிக்கிறவர்களின் வரிசை. அதில் ஒரு வேடிக்கை அநுக்கிரகாவுக்குத் தாத்தாவாக வேண்டிய வயதானவர் கூட அவளை ‘அண்ணியார்’ என்று தான் மேடையில் அழைத்தார். ஓர் அரை மணி நேரம் மாலை, துண்டு, ரூபாய் நோட்டுப் பேர்வழிகள் அவளைப் பேசவே விடாமல் ‘டிரில்’ வாங்கிவிட்டார்கள். அவளுக்கு இந்தக் களேபரத்தில் எல்லாமே மறந்து போய்விட்டது. கூட்டமோ அமைதியாக அவள் பேச்சைக் கேட்க எதிர்பார்த்துக் காத்திருந்தது. போர்க்களத்தில் எல்லா ஆயுதங்களையும் இழந்த நிராயுதபாணிபோல், ‘இன்று போய் நாளை வா,’ என்று யாராவது கருணை காட்ட வேண்டிய நிலையிலிருந்த அவளுக்குக் கையில் இருந்த ஒரே சிறு துரும்பு இடும்பனார் எழுதிக் கொடுத்திருந்த கத்தை தான். மூச்சைப் பிடித்துக் கொண்டு உரத்த குரலில் தப்பும் தவறுமாகத் தட்டுத் தடுமாறி திக்கித் திணறி அதைப் படித்துப் பார்க்க ஆரம்பித்தாள். அவள் எதிர்பார்த்துப் பயந்தது போல் கூட்டம் கேலியிலோ, பரிகாசத்திலோ இறங்கவில்லை. ஊசி விழுந்தால் கூட ஓசை கேட்கிற மௌனத்தோடு செவிமடுத்தது. நடுநடுவே மேடையிலிருந்து பொன்னுரங்கமே முதல் கைத்தட்டலைத் தொடங்கிக் கொடுத்துக் கூட்டத்தையும் கைத்தட்ட வைத்தான். மேடை சூட்சுமங்கள் அவனுக்கு அத்துபடி ஆகியிருந்தன. “லண்டன்ல படிச்ச பொண்ணு இன்னா ஷோக்காத் தமிழ் பேசுது பார்த்தியா?” “பிரமாதம்ப்பா, கொன்னுட்டாங்க போ.” “இனிமே இவுங்கதான் நம்ம பேடையிலே ஷ்டார் ஸ்பீக்கர்.” சீவகசிந்தாமணி சிங்கம், புறநானூற்றுப் புலி, அகநானூற்று யானை எல்லாவற்றுக்குமே ஓரொரு கைத்தட்டல் எழுந்து ஓய்ந்தது. வைகை எக்ஸ்பிரஸ் ஸ்பீடில் படு வேகமாகப் படித்ததில் இடும்பனார் எழுதிக் கொடுத்திருந்த கத்தை இருபது நிமிஷம் தான் வந்தது. ஆனாலும் கூட்டம் அவளது பேச்சைக் கொண்டாடவே செய்தது. “சதையின் சதையான தமிழ்ப் பெருமக்களுக்கு அன்பு வணக்கமும் ஆழமான நன்றியும் கூறி முடிக்கிறேன்” என்று அவள் பேச்சை முடித்த போது, கடலலைபோல் எழுந்த கரகோஷம் ஓய ஐந்து நிமிடங்களுக்கு மேலே ஆயிற்று. அவளுக்கே அது ஆச்சரியமாக இருந்தது. தனக்கும் புரியாமல், கேட்கிறவர்களுக்கும் புரியாமல் புலவர் கடும்பனூர் இடும்பனார் வார்த்தைகளைக் கொண்டு செய்திருந்த வாணவேடிக்கை மக்களிடம் இத்தனை அமோகமான வரவேற்பைப் பெற்றதைப் பார்த்து வியந்தாள். ஏதாவது கடமுடவென்று ஓசை வருகிறாற் போல் மேடையிலே சத்தம் போட்டால் கூட இந்த அப்பாவி மக்களுக்கு அதுவே போதுமோ என்று கூடத் தோன்றியது. இத்தனைக்கும் புலவர் எழுதிக் கொடுத்திருந்ததை அவள் தப்புத் தப்பாகத்தான் உளறிக் குழறி வாசித்திருந்தாள். மேடையிலே விழுந்த ரூபாய் நோட்டு மாலையையும் மாலைக்குப் பதிலாகக் கிடைத்த ரூபாய்களையும் அவளிடம் பத்திரமாகக் கேட்டு வாங்கிக் கொண்ட பொன்னுரங்கம், அவளுக்கு மட்டுமே கேட்கும் தணிந்த குரலில், “அடுத்த கூட்டத்துக்கு வேணுமில்லே? நீங்க பாட்டுக்கு எடுத்துக்கிட்டுப் போயிட்டா எப்படி?” என்று சிரித்தபடியே கேட்டான். எல்லாம் அப்பாவின் பணத்தில் பொன்னுரங்கத்தின் ஏற்பாடுதான் என்பது அவளுக்கு அப்போது புரிந்தது. “ஒரு பத்திருபது ஊழியருங்க கூட்டம் முடிஞ்சதும் சாப்பிட வருவாங்க, ஏற்பாடு பண்ணிடுங்க” என்று பொன்னுரங்கம் முத்தையாவிடம் முன்கூட்டியே சொல்லியிருந்தான். “நாங்க சைவமாச்சேப்பா? உன் ஆளுங்க எப்படி? இட்லி, வடை போதுமா?” “போதாதுங்க. ஸ்பெசலா முனியாண்டி விலாஸ்ல சொல்லி வச்சிடுங்க.” “ஒவ்வொரு கூட்டத்துக்கும் இதெல்லாம் பண்ணணுமா?” “கட்டாயம் பண்ணணும்! இல்லாட்டிக் கொடி கட்ட, மேடை போட, தோரணம் தொங்கவிட, பட்டாஸ் வெடிக்க ஆள் அம்புட மாட்டான். கூட்டம் முடிஞ்சு பிரியாணி போட்டாத்தான் வருவாங்க.” “சரி! கைத்தறித் துண்டு, மாலை, ரூபாய் நோட்டு, போஸ்டர், மைக் செட் செலவு மாதிரிப் பிரியாணி செலவுன்னு ஒரு தொகை பட்ஜெட்டிலே ஒதுக்கிட வேண்டியதுதான்” என்று சிரித்தபடியே அதற்கு இசைந்திருந்தார் முத்தையா. சும்மா ஒரு பத்து இருபது பேர் என்று பொன்னுரங்கம் ஒரு வார்த்தைக்குச் சொல்லியிருந்தானேயொழிய, கூட்டம் முடிந்ததும், லாரிகளிலும், டிராக்டர்களிலும் இருநூறு பேருக்கு மேல் ஆவாரம்பட்டு ஹவுஸில் மொய்த்து விட்டார்கள். அத்தனை பேருக்கும் பிரியாணி சாப்பாடு போட்டு அனுப்ப இரவு ஒரு மணிக்கு மேல் ஆகிவிட்டது. அதில் ரிங்லீடர்கள் மாதிரி இருந்த சில அடியாட்களுக்கு போகிற செலவுக்கு ரொக்கமும் தரவேண்டியிருந்தது. முதல் கூட்டமான நெல்லுப்பேட்டை மைதானக் கூட்டத்துக்கு கிட்டத்தட்ட ஐயாயிரம் ரூபாய்க்கு மேலே செலவாகிவிட்டது, முத்தையாவுக்கு. எல்லோரும் போன பின், முத்தையாவும் பொன்னுரங்கமும் தனியான போது, “என்னப்பா, வீட்டைச் சுத்தி ஒரே சேரியும் கக்கூஸுமா ஆக்கிட்டாங்களேங்கிற எரிச்சல்லே அநுவை அரசியலில் இறக்கினா உன் ஆளுங்க வீட்டையே ஸ்லம் ஆக்கிடுவாங்க போலிருக்கே?” என்றார் முத்தையா. “பொறுத்தார் பூமியாள்வார்னு பழமொழி இருக்குங்க.” “பழமொழி சரி! நடைமுறையிலே பூமியை ஆள்றதுக்கு முன்னாடியே செலவழிச்சுச் செலவழிச்சுத் திவாலாயிடும் போலத் தோணுதே!” “பின்னே எப்படிக் கனிவண்னனைக் கீழே இறக்கிட்டு அநு அம்மாவை இந்தத் தொகுதி எம்.எல்.ஏ. ஆக்குறது? இப்போ வேணும்னாப் போய்ப் பாருங்க. கனிவண்ணன் வீட்டிலே ஒரு லாரிலோடு ஜனம் சாப்பிட்டுக் கைகழுவிக்கிட்டிருக்கும்! இன்னிக்குப் பாலிடிக்ஸ்லே இதெல்லாம் மாமூலாயிடிச்சுங்க. வேற வழியே இல்லே. சம்பாதிக்கணும்னா முதல்லே விட்டுப் பிடிச்சுத்தான் ஆவணும்.” “சரி, தொலையட்டும், அடுத்த கூட்டம் எங்கே செட்டப் பண்றே? எனக்கு இது ஒரு ‘பிரஸ்டிஜ் இஷ்யூ’ வாயிடிச்சு. அந்தப் பயல் கனிவண்ணனைக் கீழே இறக்கி அநுவை அரசியலுக்குக் கொண்டார்றதே நம்ம வீட்டைச் சுத்தி வளைச்சுப் போட்டிருக்கிற குடிசைகளை நீக்கி ‘ஆவாரம்பட்டு ஹவுஸை’ப் பழைய அரண்மனை நிலைமைக்கு உயர்த்தறதுக்குத்தான்.” “கண்டிப்பா செஞ்சுடலாங்க. நானாச்சு. அநு அம்மாவை எம்.எல்.ஏ. ஆக்கறதோட நான் விட்டுடப் போறதில்லை. வீட்டு வசதி மந்திரியாகவே பண்றேன் பாருங்க. அப்புறம் உங்க பிரச்சினை சுளுவாத் தீர்ந்துடுங்க.” “உங்கக் கட்சியிலே எத்தனையோ சீனியர் ஆளுங்களெல்லாம் இருக்கிறப்போ அநு எப்படி மந்திரி ஆக முடியும்?” “நிச்சயமா முடியுங்க. எப்படியும் மந்திரி சபையிலே பொம்பளைக்கின்னு ஒரு இடம் தலைவர் ஒதுக்கி வச்சிருப்பார். அதுவும் கொஞ்சம் படிச்ச பொம்பளையா வேணும்னு பார்ப்பார்.” “வேற படிச்ச பொம்பளைங்க உங்க கட்சியிலே இல்லியாப்பா?” “ரெண்டொருத்தர் இருக்காங்க. ஆனா அநு அம்மா அளவு அதிகம் படிச்சிருக்க மாட்டாங்க. நாமே அவங்களை ஏதாச்சும் கொடுத்துக் கண்ணைக் கட்டிட்டம்னா அவங்க வாயாலேயே அநு அம்மா பேரை மந்திரி பதவிக்குப் பிரப்போஸ் பண்றாப்ல செஞ்சு காரியத்தை முடிச்சுடலாம்.” முத்தையாவுக்கு இதைக் கேட்க மகிழ்ச்சியாயிருந்தது. அநுக்கிரகா நூலை பிடிஎஃப் வடிவில் பெற இங்கே சொடுக்கவும்.
Click Here to Download Anugraha Book as PDF. |