அநுக்கிரகா நூலை பிடிஎஃப் வடிவில் பெற இங்கே சொடுக்கவும். Click Here to Download Anugraha Book as PDF. 14 பரபரப்பான தேர்தல் நாள் விடிந்து, நிமிஷமாய் நிகழ்ந்து ஓடி விட்டது. வாக்குப் பதிவு விறுவிறுப்பாக இருந்தது. அநுக்கிரகாவையும், கனிவண்ணனையும் தவிர மற்ற இரண்டு வேட்பாளர்களும் - ஒரு போலிங் பூத்துக்கும் ஏஜெண்ட் கூட நியமிக்கவில்லை. மாலைப் பத்திரிகைகளில், அந்தத் தொகுதியில் பெண் வாக்காளர்கள் அதிகமாக வாக்களித்திருக்கிறார்கள் என்ற புள்ளி விவரத்தைப் படித்த போது, முத்தையாவுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. பொன்னுரங்கமும், “நம்ம வெற்றி நிச்சயமுங்க” என்றான். போர் முடிந்து, ஓய்ந்த களம் போல, தெருக்களும், தெருச் சுவர்களும் வெறிச்சோடிக் கிடக்க ஆரம்பித்தன. அந்த அமைதி ஒரு நாள் தான். அடுத்த நாள் மாலை தேர்தல் முடிவுகள் வர ஆரம்பித்ததனால் பத்திரிகை அலுவலகங்கள், ஸ்டால்கள், வானொலிப் பெட்டிகள் முன்பு கூட்டம் மொய்த்தது. விடிய விடிய வானொலி, டெலிவிஷன் முன் மக்கள் காத்துக் கிடக்க ஆரம்பித்தனர். முத்தையாவைப் பொன்னுரங்கம் எச்சரித்தான். “நாம ஜாக்கிரதையாக இருக்கணும்! தோற்கிறதை விட ஜெயிக்கிறதிலே அதிக ஆபத்து இருக்கு. அடிபட்ட பாம்பு கொத்த வர்ற மாதிரிப் படமெடுத்துப் பாயற சுபாவம் கனிவண்ணன் பயலுக்கு. அதனாலே ஜெயிக்கிற கனிவண்ணனை விடத் தோற்கிற கனிவண்ணன் அபாயமானவன்கிறதை மறந்துடாதீங்க.” “என்ன பண்ணிடுவான்? தலையையா சீவிட முடியும்?” “எதுக்கும் நம்ம ஆளுங்க நூறு பேரை இன்னிக்கு இங்கேயே தங்கச் சொல்லி, முன் ஜாக்கிரதையா ஒழுங்கு பண்ணியிருக்கேன்! தோட்டத்திலேயும், வராண்டாவிலேயுமா மறைஞ்சு படுத்திருக்காங்க. கிளப்பிவிட்டு அனுப்பிடாதீங்க. தனியா நாம் சமாளிக்க முடியாது.” “ரிஸல்ட் எப்பத் தெரியும்?” “அநேகமாகப் பத்து பதினொரு மணிக்குள்ளே நம்ம தொகுதி ரிஸல்ட் வந்துடும். ஆனா அவன் உடனே ‘டெக்ளேர்’ பண்ண ஒத்துக்க மாட்டான். தோத்தா ரீ கவுண்ட் கேட்டு உயிரை வாங்குவான்.” “ரீ கவுண்ட் கேட்டால் பணம் கட்டணுமே?” “கட்டணும். கட்டுவான். ரீ கவுண்ட் ஆகிற டயத்துக்குள்ளே வெளியிலே தன் அடியாளுங்களுக்கு சிக்னல் அனுப்பிடுவான். இங்கே அடி உதை சோடாப் புட்டி வீச்சு கல்லெறின்னு கிளம்பிடுவாங்க...” “எப்பிடிச் சொல்றே?”
“பதினைஞ்சு வருஷமா ஒரே கட்சியிலே பழகியிருக்கமே; கனிவண்ணன் என்ன பண்ணுவான்னு எனக்குத் தெரியாம வேற யாருக்குங்க தெரியும்?”
“அவனே ஜெயிச்சுட்டான்னு ஒரு பேச்சுக்கு வச்சுப்போம்! அப்ப என்ன நடக்கும்?” “கழுத்திலே மாலை போட்டுக்கிட்டு, அடியாளுங்க புடை சூழ ஜீப்ல அர்த்த ராத்திரியிலே, ஊர்கோலம் விடுவான். சாராயக் கடைக்கும் பிரியாணிக் கடைக்கும் பணம் செலவழியும். ஆனா இந்த வாட்டி அவன் ஜெயிக்க முடியாது. நான் சேலன்ஜ் பண்றேங்க.” “எதை வச்சு அத்தினி உறுதியாச் சொல்றே பொன்னுரங்கம்?” “ஜனங்க நாடித் துடிப்பு எனக்குத் தெரியுமுங்க. இதே ஊர்ல, இதே பேட்டையிலே எத்தினி எலெக்ஷன் பாத்திருக்கேன்?” “சரி, நம்ம அநு ஜெயிச்சு, அது பொறுக்காம சோடாப்புட்டி வீச்சு, கல்லெறின்னு கனிவண்ணன் இறங்குவான்னா, நாம இப்பவே போலீஸ்ல ஒரு பாதுகாப்புக் கேட்க வேணாமா?” “கேளுங்க. ஆனா எலெக்ஷன் ரிஸல்ட் நேரத்திலே அவங்க இப்பிடி அப்பிடிச் சாயாம இருப்பாங்க. ரொம்பக் கண்டுக்க மாட்டாங்க. அவசியமும் இல்லே. நம்ம ஏற்பாடே பக்காவாச் செய்திருக்கேனுங்க. வாங்க காமிக்கிறேன்.” பொன்னுரங்கத்தைப் பின் தொடர்ந்தார் முத்தையா. கூட்டத்தின் ஒரு பகுதியில், சோடாப் புட்டிகள், கல் குவியல்களோடு ஆட்கள் தயாராயிருந்தனர். இன்னொரு மரத்தினடியில் சிலம்புக் கழிகள், சவுக்குக் கட்டைகள், சைக்கிள் செயின்களுடன் ஆட்கள். “என்னப்பா இது? என் வீட்டிலே எனக்குத் தெரியாம இத்தினி பாதுகாப்பு ஏற்பாடு செய்து வச்சிருக்கே?” “பாம்பின் கால் பாம்பறியும்னு பழமொழிங்க. தோத்த விரக்தியிலேயும் கசப்பிலேயும் அந்தப் பயல் புயலாக் கிளம்பிடுவான். பார்த்துக்கிட்டே இருங்க. ரிஸல்ட் டிக்ளேர் ஆனதும் தெரியும்.” இப்படிப் பொன்னுரங்கம் அவரிடம் விவரித்துக் கொண்டிருந்த போது, இரவு மணி ஒன்பதரை இருக்கும். பத்தேகால் மணி சுமாருக்கு அவரும் பொன்னுரங்கமும் முன் ஹாலில் டி.வி. எதிரே அமர்ந்து ஸ்பெஷல் புலட்டீன் தேர்தல் முடிவுகளைப் பார்த்துக் கொண்டிருந்த போது, விர் விர்ரென்று சரமாரியாகக் கற்கள் வந்து விழ ஆரம்பித்தன. பதிலுக்கு உள்ளே இருந்தும் தாக்குதல்களை ஆரம்பித்தார்கள். சோடா புட்டிகள் உள்ளே வந்து வெடித்து உடையும் சத்தம் கர்ண கடூரமாயிருந்தது. “தோத்துட்டான், அதான் இதெல்லாம். நம்ம அநு அம்மா ஜெயிச்சுட்டாங்க. இப்ப டி.வி.யில வரும் பாருங்க.” பொன்னுரங்கம் சொல்லி முடிக்குமுன், தொலைக்காட்சி அறிவிப்பில் அவர்களது அந்தத் தொகுதியின் பெயரைக் குறிப்பிட்டு, “சற்று முன் கிடைத்த தகவலின்படி, அநுக்கிரகா - கனிவண்ணனை விடப் பதினாலாயிரம் வாக்குகள் அதிகம் பெற்று முந்திக் கொண்டிருக்கிறார்” - என்று டி.வி. அறிவிப்பாளர் அறிவிக்கவும் சரியாயிருந்தது. “எப்படீப்பா இத்தனை சரியாக் கணிச்சுச் சொன்னே? ஆச்சரியமா இருக்கே?” என்று முத்தையா வயதையும் மீறிச் சிறு குழந்தை போல் உற்சாகத்தில் துள்ளினார். “அடுத்த புலட்டீன்ல வெற்றிச் செய்தியே வந்துடும், பாருங்க. கொஞ்சம் இங்கேயே இருங்க. நான் தோட்டத்திலே போயி ஆளுங்களைப் பார்த்துப் பதில் தாக்குதலுக்கு இன்ஸ்டக்ஷன்லாம் குடுத்துட்டு வரேன்,” என்று புறப்பட்டுப் போனான் பொன்னுரங்கம். தோட்டத்திலிருந்து, “டாய்! ராங் பண்ணாதே தொலைச்சிடுவோம் தொலைச்சு” என்று யாரையோ பதிலுக்கு மிரட்டும் குரல்கள் அவருக்குக் கேட்டன. வோட்டு எண்ணும் இடத்திலிருந்து அநு எப்படி வீடு திரும்பப் போகிறாள் என்ற கவலையும், பயமும் இப்போது அவரைப் பிடித்துக் கொண்டன. ரௌடிகளும், முட்டாள்களும் நிறைந்த சூழலில், அரசியல் தோல்விகளை விட வெற்றிகள் தான் அதிகக் கஷ்டங்களை உண்டாக்கும் என்பது வினாடியில் அவருக்குப் புரிய ஆரம்பித்தது. மோசமான ரௌடி ஒருத்தனை எதிர்த்து முதல் தரமான சாது ஒருத்தன் ஜெயிப்பது எத்தனை அபாயகரமான பின் விளைவுகளையெல்லாம் உண்டாக்கும் என்றெண்ணிய போது குலை நடுங்கியது. ஏதோ பண வசதி, ஆள் கட்டு, பொன்னுரங்கம் போன்ற அனுபவக்காரரின் பக்க பலம் எல்லாம் இருப்பதனால் தான் தம்மாலேயே சமாளிக்க முடிகிறதென்று அவருக்குப் பட்டது. தோட்டத்தில் பட்டாசு வெடிக்கிற சப்தமும் கூடவே கேட்டது. பொன்னுரங்கம் சிரித்தபடியே திரும்பி வந்தான். “ஒரு செட் ஆளுங்க கலாட்டா பண்ணணும்னு தேடி வந்தாங்க. ஆனா, இங்கே நாம் எல்லாம் எதிர்பார்த்துத் தயாராப் பதிலுக்கு ‘செட் அப்’ பண்ணி வச்சிருந்ததாலே மிரண்டு ஓடிட்டாங்க.” “அது சரி, பொன்னுரங்கம். வழியெல்லாம் இப்பிடி மோசமாவே இருக்கே, வோட்டு எண்ற இடத்திலேயிருந்து அநு பத்திரமா வீடு திரும்பணுமே? அதுக்கு என்ன ஏற்பாடு? எனக்குக் கவலையா இருக்குப்பா.” “ரெண்டு லாரி நெறைய நம்ம ஆட்களும் பாதுகாப்புப் பட்டாளமும் அங்கே இருக்காங்க. வெற்றி அறிவிப்பு வந்ததும் மாலை மரியாதை, பட்டாசு வாண வேடிக்கையோட முன்னே ஒரு லாரி, பின்னே ஒரு லாரி சகிதம் திறந்த ஜீப்ல அநு வீட்டுக்கு ஊர்வலமா வரும். ஆரத்தி சுத்திக் காட்டி வரவேற்க ரெடியாகுங்க.” “இந்த மாதிரி டென்ஷன் நிலைமையிலே ஊர்வலம் வாண வேடிக்கை எல்லாம் எதுக்குப்பா? தோத்தவன் வயித்தெரிச்சலை மேலும் கிளறி விடவா?” “அதெல்லாம் வேணுங்க. உங்களுக்கு ஒண்ணும் தெரியாது. சும்மா இருங்க.” “அநுவுக்கு ஆபத்து எதுவும் வந்துடக் கூடாதேன்னு தான்...” “ஆபத்தாவது, ஒண்ணாவது? கிட்ட வந்தான்னா நம்ம ஆளுங்க எலும்பைப் பார்ட் பார்ட்டா கழட்டி வச்சுடுவானுங்க. அதெல்லாம் வேண்டிய ஏற்பாடு பண்ணியிருக்கேன். இங்கே தான் நம்ம வீட்லே அதிக கலாட்டா நடக்கும். சுத்தி ஒரே ஸ்லம் பாருங்க. அதனாலேதான் வோட்டு எண்ற இடத்திலே நம்ம ஆளுங்களை ஏற்பாடு பண்ணிட்டு உங்களுக்குத் துணையா இருக்கணும்னு நான் நம்ம ஆளுங்களோட இங்கே வந்துட்டேன்.” அவனுடைய முன் யோசனையும், முன் ஜாக்கிரதையும் முத்தையாவுக்கு வியப்பளித்தன. இரவு பதினொன்றரை மணி டி.வி. ஸ்பெஷல் புலட்டீனில் அநுக்கிரகாவின் வெற்றி அறிவிக்கப்பட்டது. பதினேழாயிரத்துச் சொச்சம் வோட்டு வித்தியாசத்தில் அவள் கனிவண்ணனைத் தோல்வியுறச் செய்திருந்தாள். தயாராக வாங்கி வைத்திருந்த சாக்லேட், ஸ்வீட் பொட்டலங்களைப் பிரித்து, டிரேயில் குவித்து முதலில் பொன்னுரங்கத்திற்கும், அங்கிருந்த மற்றவர்களுக்கும் கொடுக்கச் செய்தார் முத்தையா. “உங்க வயசுக்கு இப்பிடித் தூக்கம் விழிக்கிறது ஒத்துக்குங்களா? நீங்க வேணும்னா போய்ப் படுங்க. எல்லாம் நான் பார்த்துக்கறேன். பாப்பா வீடு திரும்ப எப்பிடியும் மூணு மணி ஆயிடுமுங்க. தொகுதி பூரா ஜீப்பில போயி ஒரு சுத்துச் சுத்திட்டு ஊர்கோலமா வர்றத்துக்கு ஏற்பாடுங்க.” “அதெல்லாம் எதுக்குப்பா? எவனாவது கல்லெறி, சோடாப் புட்டின்னு கிளம்பப் போறான்?” “தொடுவானா? நம்ப செயல் வீரர்கள் கூட இருக்காங்க.” அவன் பதில் கூறிய தெம்பைப் பார்த்த முத்தையா கவலை விட்டார். சில வினாடிகளில் அவர் வீட்டு வாசலில் முதலில் கொஞ்சம் கலாட்டா கூப்பாடு, கல்லெறி ரகளைகளும், அவை ஓய்ந்த பின் அப்புறம் பட்டாசு வாண வேடிக்கைகளும் தடபுடல் பட்டன. அநுக்கிரகா நூலை பிடிஎஃப் வடிவில் பெற இங்கே சொடுக்கவும்.
Click Here to Download Anugraha Book as PDF. |