அநுக்கிரகா நூலை பிடிஎஃப் வடிவில் பெற இங்கே சொடுக்கவும். Click Here to Download Anugraha Book as PDF. 4 முத்தையா எதிர்காலக் கனவுகளில் திளைத்து மகிழ்ச்சியாயிருந்தாலும் லேடீஸ் கிளப்பில் அநுவை அவள் சிநேகிதிகள் துளைத்தெடுத்துவிட்டார்கள். இத்தனைக்கும் அவள் அந்த லேடீஸ் கிளப்பின் துணைத் தலைவியாக வேறு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாள். அவள் கட்சியில் சேர்ந்தது சிலருக்குப் பிடிக்கவில்லை. புருவங்கள் நெரிந்தன. அந்த மாதர் சங்கத் தலைவியாக இருந்த லேடி ரங்கநாதம் என்ற அம்மையார் நகரத்திலேயே பெரிய அரிஸ்டாகிரட் குடும்பத்தின் தலைவி. பெரிய கன்ஸர்வேடிவ் நபர். அவள் அநுவைக் கண்டித்தாள்: “உன்னைப் போல டீஸண்ட் ஃபேமிலியிலே வந்தவளுக்கு இதெல்லாம் லாயக்காக இருக்காது அநு! யார் உனக்கு ‘இல் அட்வைஸ்’ பண்ணினாங்க...? அரசியல் சாக்கடையிலே போய்க் காலை விட்டுருக்கியே பெண்ணே?” “சாக்கடையையும் என்னிக்காவது யாராவது இறங்கித் துணிந்து சுத்தம் பண்ணித்தானே ஆகணும்?” “அது என்னாலேயும் உன்னாலேயும் முடியற காரியமில்லே. எத்தனை பேர் எத்தனை தரம் சுத்தம் பண்ண முயற்சி செஞ்சாலும் சாக்கடை சாக்கடையாத்தான் இருக்கும் அநு!” “அப்பிடி எல்லாருமே விட்டுட்டா எப்பிடி? யாராவது துணிஞ்சுதானே ஆகணும்?” “அது நம்ம வேலை இல்லே அநு!” “அதனோட கொசுக்கள், நாற்றம், கிருமிகள் எல்லாம் நம்மையும் பாதிக்கிற போது நாம மட்டும் அதைக் கண்டுக்காமே மூக்கையும் கண்களையும் மூடிக்கிட்டு ‘அது நம்ம வேலை இல்லே’ன்னு போயிட்டா எப்படி அம்மா? சாக்கடையையும் என்னிக்காவது யாராவது இறங்கித் துணிந்து சுத்தம் பண்ணித்தானே ஆகணும்?” “உன்னை மாதிரி ஆக்ஸ்ஃபோர்டிலே படிச்ச ஆவாரம் பட்டு ஹவுஸ் பெண் அதற்குத் தேவையில்லை என்பது என் அபிப்பிராயம்.” “நாமே ஒதுங்கினா அவங்களும் ஒதுங்கிடுவாங்க. ஒதுங்கக் கூடாதுங்கிறது என் அபிப்பிராயம்.” “ஒதுங்காமே நெருங்கினாலும் உன்னாலே அங்கே எதுவும் பண்ண முடியாது.”
“நான் அப்பிடி நெனைக்கலே.”
“உன்னோட ம.மு.க. அரசியல் பிரவேசம் இங்கே மாதர் சங்கத்திலே கூட உன்னைப் பாதிக்கும். எல்லாரும் ஒரு தினுசாப் பார்ப்பாங்க.” “ஐ காண்ட் ஹெல்ப் இட்.” “சீக்கிரமே உன்னைப் பிரஸிடெண்ட் ஆக்கிட்டு நான் வயசாச்சேன்னு ஒதுங்கிக்க நெனைச்சேன் அநு! இப்ப அது முடியாது போல இருக்கு.” இதைக் கேட்டு அநு யோசனையில் ஆழ்ந்தாள். தன் தந்தையின் விருப்பத்துக்கு இணங்கத் தான் அரசியலில் ஈடுபட நேர்ந்ததை அந்த அம்மாளிடம் சொன்னால் அவள் தந்தையிடமே நேரில் போய் இதுபற்றி விசாரிப்பாள். வயதான காலத்தில் தந்தைக்கு வீணாகக் கோபம் வரும். அதெல்லாம் வேண்டாமென்று நினைத்ததால் உண்மைக் காரணத்தை அவள் யாரிடமும் சொல்ல விரும்பவில்லை. சில சமயங்களில் தன் அரசியல் பிரவேசம் அநுவுக்கே கூட எரிச்சலாகத்தான் இருந்தது. அழுக்குச் சட்டையும் இடுப்பில் கைலியும் சீவாத பரட்டைத் தலையுமாக வருகிற ஆட்களிடம், “வணக்கம் தலைவரே!” என்று பல்லை இளித்துக் கொண்டு நிற்பதை விட நுனி நாக்கால் ஆங்கிலம் பேசும் நாகரிக சமூகத்திடம் பழகுவதும் நாசூக்காக வாழ்வதும் எத்தனையோ மடங்கு மேலான காரியம் தான். கடும்பனூர் இடும்பனாரையும் சைக்கிள் கடைப் பொன்னுரங்கத்தையும் கட்டி மாரடிக்க வேண்டிய அவசியம் நாகரிக வாழ்வில் இல்லை. பலரைக் கவரச் சிரிப்பையும், பணத்தையும் சிக்கனமாகச் செலவழித்தாலே அங்கு போதும். ம.மு.க.விலோ தான் படித்தவள் என்ற ஒரு காம்ப்ளெக்ஸிலிருந்து விடுபடவும் அந்தக் காம்ப்ளெக்ஸ் மற்றவர்களைப் பாதித்து விடாமல் இருக்கவும் பயந்து பயந்து நிறையச் சிரித்து நிறையக் கீழிறங்கி விட்டுக் கொடுத்து நிறையப் பணம் செலவழித்துப் பாடுபட வேண்டியிருந்தது. அப்பாவோ அவள் ம.மு.க.வில் மேலே வரவேண்டுமென்பதற்காகப் பணத்தைத் தண்ணீராகச் செலவழித்தார். தமிழ்ப் புலவர் கடும்பனூர் இடும்பனாரிடம் மேடைப் பேச்சுக்கு அவசியமான பாடங்களைத் தினசரி டியூஷன் படிக்க வேண்டியிருந்தது. அவர் ஒவ்வொரு விவரமாகச் சொன்னார்: “முதல்லே மேடையிலேயும் கீழேயும் உள்ள முக்கியமானவங்க அத்தை பேரையும் அவங்க பெயரை மரியாதையாச் சொல்லி விளிக்கணும்.” “மரியாதையாச் சொல்லி விளிக்கிறதுன்னா எப்படி?” “கூட்டத்திற்குத் தலைமை ஏற்றிருக்கும் அண்ணன் பொன்னுரங்கம் அவர்களே! முன்னிலை ஏற்றிருக்கும் மரியாதைக்குரிய மரியரத்தினம் அவர்களே, வட்டச் செயல்வீரர் வடிவேல் அவர்களே! எனது சதையின் சதையாக விளங்கும் சகோதர சகோதரிகளே...” “சதையின் சதையாக - நரம்பின் நரம்பாக - தோலின் தோலாக - இதெல்லாம் என்னங்க ஒரே மட்டன் ஷாப் லாங்வேஜா இருக்கே... டீஸண்டா ஏதாவது சொல்லுங்களேன்.” “டீஸண்ட் கீஸெண்ட்டெல்லாம் சரிபட்டு வராதுங்க... பேச்சிலே அங்கங்கே தந்தி விலாசம் மாதிரி முத்திரையைப் பதிச்சாத்தான் மக்கள் கை தட்டுவாங்க.” “முத்திரையைப் பதிக்கறதுன்னா...?” “தியாகராஜ கீர்த்தனைங்கள்ளே அவரு பேரு முத்திரையா வருமில்லே. அதுமாதிரி, டக்னு ஜனங்களுக்குத் தந்தி பாஷையிலே சொல்றாப்பல ‘சதையின் சதையான’ன்னு ஒரு லயன் குடுத்தீங்கன்னாத்தான் உடனே கை தட்டுவாங்க.” “அப்பிடியா? என்னை மாதிரிப் படிச்ச ஆட்கள் அந்தவிதமாப் பேசினா நல்லா இருக்குமா?” “நீங்க அப்பிடிப் பேசாட்டித்தான் நல்லா இருக்காது! ஜனங்களும் உங்களை நம்ப இயக்கத்தோட சேர்த்து அடையாளமாப் புரிஞ்சுக்க மாட்டாங்க.” “அதாவது எப்படி யாரை எந்த வரிசையிலே விளிச்சாலும் கடைசியிலே மக்களை விளிக்கிறப்ப, ‘சதையின் சதையான மக்களே’ன்னு மக்களோட சதையைப் பிடிச்சு இழுத்தாகணும்கிறீங்க.” “கரெக்ட்! ரொம்ப நல்லா புரிஞ்சுக்கிட்டிங்க. சொற்பொழிவைத் தொடங்குறதுக்கு முந்தி மக்களை அப்பிடி அடைமொழி குடுத்து ஆரம்பிக்கணும்” - அவளுடைய கிண்டலைப் புரிந்து கொள்ளாமல் விளக்கிக் கொண்டிருந்தார் புலவர். “முடிக்கிறப்ப எப்படி முடிக்கணும்?” “குறிப்பாக் கூட்ட ஏற்பாடு செய்து பேச வாய்ப்பளித்தவர்களுக்கும் கேட்ட மக்களுக்கும் நன்றி சொல்லி முடிச்சாப் போதும்.” “அப்ப சரி! நான் மானேஜ் பண்ணிக்கறேன்” என்று புலவரை விடைகொடுத்து அனுப்பத் தயாரானாள் அநுக்கிரகா. புலவர் விடவில்லை. “ஆரம்பிக்கிறது, முடிக்கிறதைத் தெரிஞ்சுக்கிட்டீங்க! நடுவிலே என்ன பேசறதுன்னு கேட்டுக்கலியே?” “அது ம.மு.க. பாலிஸி புரோபகண்டா பிரசுரத்தைப் பார்த்து நான் தயார் பண்ணிக்கிறேன்.” “அதெல்லாம் நெல்லுப்பேட்டை மைதானத்திலே எடுபடாதும்மா! பாலிஸியைச் சொல்றதுன்னு வந்துட்டா ரொம்பச் சங்கடம். அது நமக்கும் புரியாது. மக்களுக்கும் பிடிக்காது.” “பின்னே எதைத்தான் பேசறதாம்?” “நெல்லுப்பேட்டை வட்டாரத்திலே நம்ம அரசியல் எதிரிங்க யார் யாரோ அவங்களை எல்லாம் புகுந்து விளாசணும்! அப்பத்தான் ஜனம் தங்கி நின்னு கேட்கும்.” “அது எப்படிப் புகுந்து விளாசறது? திட்டறதா?” “திட்டறதாகவும் இருக்கப்படாது! திட்டற மாதிரியும் இருக்கப்படாது. ரொம்பத் திட்டிட்டோமோ என்று நமக்கே சந்தேகம் வரும்போது, ‘அரசியல் ரீதியாக விமர்சித்தாலும் தனிப்பட்ட முறையில் எனக்கு அவர் மேல் மரியாதை உண்டு’ன்னு ஒரு லயனை ஊடாலே விட்டுக்கணும்.” “எப்பிடி? எப்பிடி? இன்னொரு தரம் சொல்லுங்க. மனசுலே ஆகலே.” புலவர் ரிபீட் செய்தார். அநுக்கிரகாவிற்கு அந்த அரசியல் கட்சி நடைமுறைகள் மிகவும் வேடிக்கையாக இருந்தன. திட்டுவதிலும் திட்டும்போதான தற்காப்பு ஏற்பாடுகளுக்கும் புலவர் சொல்லிக் கொடுத்த வழிகள் பிரமாதமாகவும், பக்காவாகவும் இருந்தன. இவ்வளவு அற்புதமான மேடைப் போர் முறைகளை அவள் இதுவரை எங்கும் கேள்விப்பட்டது கூட இல்லை. எல்லாம் அநுபவக் களஞ்சியங்களாகவே இருந்தன. “கூட்டம் களை கட்டலேன்னாலோ எதிரிகளைச் சண்டைக்கு இழுக்கணும்னாலோ நம்ம ஆளுங்களை விட்டு நாமே கலாட்டா, கல்லெறிக்கு ‘செட் அப்’ பண்ணணும்.. அதும் மூலமா ஒரு விளம்பரம் கிடைக்கும். இல்லாட்டி எதிரிங்களைத் தாக்க நமக்குச் சாக்குப் போக்கு இல்லாமப் போயிடும்! அவங்க நம்மைத் தாக்கற மாதிரி ஒரு போக்கை நாமே உண்டாக்கிட்டு அப்புறம் அவங்களை வகையா ஒரு பிடிபிடிக்கணும்.” “அப்போ ஊர்வலம் சென்ற பாதையில் எதிரிகள் கல்லெறிந்தால் கலவரம் மூண்டதுன்னு வர்ற நியூஸெல்லாம் கூட இப்படித்தானா?” “ஒரு கல்லெறியும் இல்லாமே, ஒரு எதிர்ப்பும் இல்லாம நம்ம ஊர்வலம் அமைதியா நடந்திச்சுன்னா பத்திரிகைக்காரனுவ அதைப் பெரிசு பண்ணாம விட்டுடுவாங்க. பத்திரிகைக்காரங்க பெரிசு பண்ணணுங்கிறதுக்காக நாமே கல்லெறிய ஆள் செட் அப் பண்ணி நம்ம எதிரிங்க எறிஞ்சது போலக் கிளப்பி விடறதுதான். அரசியல்லே சகஜம்தான் இதெல்லாம். இப்படி ஒண்ணு நடக்காட்டி, ‘கட்சிக் கண்மணிகள் அமைதியையும் கண்ணியத்தையும் கட்டிக்காத்து இயக்கத்தின் நற்பெயரைப் போற்றிப் பேணிட வேண்டுகிறேன்’ அப்படின்னு தலைவருக்கு அறிக்கை விட வாய்ப்பே இல்லாமப் போயிடும்.” “ஆக தலைவர், ‘அடிக்கிறாப்பல அடி! நான் அழறாப்பல அழறேன்’கிற பாணியிலே அறிக்கை விடுவாருங்கிறீங்க?” “தங்கச்சி, இதெல்லாம் போகப் போக நீங்களே தெரிஞ்சுக்குவீங்க.” அநுக்கிரகா புலவருக்கு விடைகொடுத்து அனுப்பினாள். சர்.வி.டி.முத்தையா புலவருக்கு விடை கொடுக்கும் போது ஞாபகமாகக் கவரில் ஐம்பது ரூபாய் நோட்டு ஒன்றைப் போட்டுத் தந்து வழியனுப்பினார். அது மாமூல். “அவ்வப்போது வந்து போயிட்டிருங்க, புலவரே! அநுவுக்கு நீங்க தான் மேடை ஆசான் மாதிரி” - என்றார் முத்தையா. “தினசர் வரச்சொன்னாலும் நான் தயாருங்க.” ரூபாய் ஐம்பது பற்றிய ஞாபகத்தில் எங்கே தினசரி வந்துவிடப் போகிறாரோ என்று பயந்து பதறி, “அதெல்லாம் வேண்டாம்! உங்களுக்கும் வேற வேலை இருக்கும். வாரத்துக்கு ஒரு நாள் ரெண்டு நாள் வாங்க, போறும். ரொம்ப உங்களைச் சிரமப்படுத்தக் கூடாது பாருங்க” என்று அவசர அவசரமாகக் குறுக்கிட்டுத் தடுத்தார் முத்தையா. அநுக்கிரகா நூலை பிடிஎஃப் வடிவில் பெற இங்கே சொடுக்கவும்.
Click Here to Download Anugraha Book as PDF. |