5

     மாபெரும் போஸ்டர்கள், தட்டி விளம்பரங்கள், பேனர்கள், அலங்கார வளைவுகள் போன்ற தடபுடல்களுடனே ம.மு.க. வினரின் மாபெரும் ஏற்பாடாகிய நெல்லுப்பேட்டை மைதானப் பொதுக்கூட்டத்துக்கு இரண்டு நாள் முன்னாலேயிருந்து ஏகப்பட்ட அரசியல் பொருளாதாரப் புள்ளிவிவரங்களைத் திரட்டி மனப்பாடம் செய்து, நிலைக்கண்ணாடி முன் நின்று பலமுறை திரும்பத் திரும்பப் பேசிப் பார்த்துக் கொண்டாள் அநுக்கிரகா.

     என்ன புடவை கட்டிக் கொண்டு போவது? எப்படிச் சிங்காரித்துக் கொள்வது? என்றெல்லாம் திரும்பத் திரும்ப அக்கறை எடுத்துக் கொண்டு யோசித்தாள். கூட்டத்துக்கு வருகிற மக்களையும் கட்சி உறுப்பினர்களையும் ‘இம்ப்ரெஸ்’ செய்ய வேண்டுமே என்பது தான் இப்போது அவள் கவலையாக இருந்தது. ஏற்கெனவே அவளுடைய படத்துடன் மூலைக்கு மூலை ஆளுயரச் சுவரொட்டிகளை ஒட்டி விளம்பரம் செய்து விட்டார்கள். நன்றாகப் பிரசாரமும் செய்யப்பட்டிருந்தது.

     ஊர் முழுவதும் ஒரே பேச்சு. அநுக்கிரகா ம.மு.க. மேடையில் ம.மு.க. உறுப்பினராகிப் பேசும் கன்னிப் பேச்சே அதுதான். “அநுக்கிரகா ம.மு.க.விலே சேர்ந்தாச்சு, தெரியுமா? ‘ஆவாரம் பட்டு ஹவுஸ்’ பாலிடிக்ஸ்ல தீவிரமா இறங்கப் போகுது” என்று எங்கும் பரபரப்பாகி இருந்தது. ஊரிலேயே ஹாட் நியூஸ் இதுதான்.

     அன்று காலையில் கோயிலில் போய் விசேஷ அர்ச்சனை வேறு செய்து விட்டு வந்தார் முத்தையா. கூட்டத்திற்குக் கட்டிக் கொண்டு போக வேண்டிய புடவையைத் தேர்ந்தெடுக்கவே அநுக்கிரகாவும், முத்தையாவும் அரைநாள் செலவழித்தார்கள். ஷிஃபான், ஜார்ஜெட், வாயில் புடவைகளை முதல் ரவுண்டிலேயே நிராகரித்தார் முத்தையா.

     “அழகா ஆரணி, காஞ்சிபுரம், கொள்ளேகாலம்னு கைத்தறிப் பட்டுப் புடவையைக் கட்டிக்கோ. கைத்தறியிலேதான் ‘லோகல் டச்’ கிடைக்கும். கைத்தறிக்கும் ம.மு.க. கொள்கைக்கும் கூட நெருக்கம் அதிகம்” - என்றார் முத்தையா.

     பளீரென்று கையகலச் சரிகைக் கரை போட்ட சிவப்புக் காஞ்சீபுரம் பட்டுப் புடவை ஒன்றை அவரே தேர்ந்தெடுத்தும் கொடுத்தார். அநுக்கிரகாவுக்கு அது அவ்வளவாகப் பிடிக்கவில்லை.

     “இது ரொம்பப் பளீர்னு இருக்குப்பா! இத்தனை பெரிய ஜரிகைக் கரை இல்லாம ஸிம்ப்பிளா ஒண்ணை எடுங்க” - என்றாள் அவள்.

     “பளீர்னுதான் இருக்கணும் அம்மா! உனக்கொண்ணும் தெரியாது. பளீர்னு இருந்தாத்தான் கூட்டத்துக்கு எடுக்கும்.” திரும்பத் திரும்ப இப்படி முத்தையா வற்புறுத்தவே வேறு வழியில்லாமல், அவள் அந்தச் சிவப்புப் பட்டுப் புடவையையே கட்டிக் கொள்ள இசைந்தாள்.

     மாலை நான்கு மணி சுமாருக்கு ஏதோ வேலையாகத் தன்னைத் தேடி வந்த பொன்னுரங்கத்தை விசாரித்த போது அவன் அந்தச் சிவப்புப் பட்டுப் புடவை கூடவே கூடாது என்றான். “பப்ளிக் மத்தியிலே பிரமாதமா வைர நகை, சரிகைக்கரை போட்ட பட்டுப் புடவைன்னு கட்டிக்கக் கூடாது. சிம்பிளா போய் நிற்கணும்னு தலைவர் அடிக்கடி சொல்லுவாரு. இல்லாட்டி ‘மேட்டுக்குடி மக்கள்’னு கெட்ட பேராயிடும். சிம்பிளா ஏதாச்சும் கரை போட்ட ஒரு வெள்ளைச் சேலையைக் கட்டிக்கிட்டாப் போதுங்க. இல்லாட்டா நம்ம பணத்தையும் பவிஷையும் காட்டிப் பகட்டறோம்னு கெட்ட பேராயிடும்” - என்றான் பொன்னுரங்கம். அநுக்கிரகாவுக்கும் பொன்னுரங்கம் சொல்லியதுதான் சரி என்று பட்டாலும் அப்பாவுக்குப் பயந்து தயங்கினாள்.

     “இந்தா பொன்னுரங்கம்! முதல்லே உன் வாயில் பெனாயிலை ஊத்திக் கழுவு! என் மக இன்னும் கல்யாணமாகாத கன்னிப் பொண்ணு. அதுக்குள்ளே வெள்ளைச் சேலை கட்டச் சொல்றியே! துக்கிரிப் பய பேச்சுப் பேசாதே!” என்று முத்தையா அவன் கூறியதை ‘ஸெண்டிமெண்டலாக’ எடுத்துக் கொண்டு கூப்பாடு போட ஆரம்பித்து விட்டார். பொன்னுரங்கம் நடுங்கிப் போனான்.

     நடுக்கத்தோடு நடுக்கமாக உடனே பொன்னுரங்கம் காலில் விழாத குறையாக அவரைக் கெஞ்சி மன்னிப்புக் கேட்டான். “தப்பா ஒண்ணும் சொல்லிடலீங்க! நெல்லுப்பேட்டை மைதானம் மாதிரிப் பாமர மக்கள் நெறைஞ்ச பகுதியிலே கையகல ஜரிகைக் கரை போட்ட பட்டுப் புடவையைக் கட்டிக்கிட்டு மேடை ஏறினீங்கன்னா ஒரு தினுசாப்படும்! ஏற்கெனவே ‘இந்த மாதிரிப் பெரிய வசதியான குடும்பத்துலேருந்து எங்க கட்சிக்குள்ளே சேர்றவங்களைப் பத்திக் கட்சி ஊழியர்கள் மத்தியிலே பலமான அபிப்பிராய பேதம் இருக்கு. வெறும் வாயை மெல்றவங்களுக்கு அவல் கிடைச்ச மாதிரி ஆயிடுமோன்னுதான் சொல்றேன்.”

     “இருக்கலாம்ப்பா! ஆனா அதுக்காக நாங்க பரதேசி வேஷம் போட முடியாது! உங்க மாம்பழக் கண்ணனும் கனிவண்ணனும் ஏழையின்னா சொல்றே? உங்க கட்சியிலே இல்லாத பணக்காரனா வெளியிலே இருக்கான்? எளிமைங்கற பேரிலே பஞ்சப் பரதேசி வேஷத்தோட என் மகள் மேடை ஏற முடியாது. முடிஞ்ச வரை டீஸஸ்டா உடுத்திக்கிட்டு வைரத்தோடு போட்டுக்கிட்டுத்தான் வருவா” - என்று அடித்துப் பேசினார் முத்தையா.

     தான் கூறுவதன் உள்ளர்த்தத்தை அவர் புரிந்து கொள்ளாததை உணர்ந்து பேசாமல் விட்டுவிட்டான் பொன்னுரங்கம். நியாயத்தைச் சொல்லப் போகத் தன்னையே தப்பாகப் புரிந்து கொள்கிறாரே என்று அவர் மேல் வருத்தமாயிருந்தது அவனுக்கு. இந்தக் காலத்தில் எல்லாக் குடும்பப் பெண்களும் சிறுகரை போட்ட வெள்ளை வாயில் புடவையை சகஜமாகக் கட்டிக் கொள்வதைப் பார்த்துத்தான் வித்தியாசமில்லாமல் அவளுக்கும் அந்த யோசனையைச் சொன்னான் பொன்னுரங்கம். வெள்ளைச் சேலை யோசனையை அநுக்கிரகா தப்பாக எடுத்துக் கொள்ளவில்லையானாலும் முத்தையா பிலுபிலுவென்று பிடித்துக் கொண்டு அவனைச் சாடித் தீர்த்து விட்டார். ஏண்டா யோசனை சொன்னோம் என்றாகிவிட்டது பொன்னுரங்கத்துக்கு. அன்று முழுவதும் அவரைப் பார்க்கவே பயப்பட்டான் அவன்.

     கடைசியில் முத்தையாவையும் விரோதித்துக் கொள்ளாமல், பொன்னுரங்கத்தையும் விரோதித்துக் கொள்ளாமல் அதிகம் ஜரிகை இல்லாத ஒரு பட்டுப் புடவையைக் கட்டிக் கொண்டு கூட்டத்துக்குச் சென்றாள் அநுக்கிரகா.

     அந்த மைதானத்தின் மூலையில் யாருக்கும் தெரியாமல் காரை நிறுத்திக் கொண்டு காருக்குள் இருந்தபடியே மகளின் பேச்சைக் கேட்கப் போவதாக முத்தையா சொல்லியிருந்தார். மகளை ஏ.சி. செய்த மெர்ஸிடீஸ் பென்சில் அனுப்பி வைத்துவிட்டுத் தாம் ஒரு சாதாரண பியட்டில் பின் தொடர்ந்தார் முத்தையா. பொன்னுரங்கத்தையும் மகளோடு கூடப் போகச் செய்திருந்தார். பொன்னுரங்கத்துக்குக் கப்பல் போல ஏ.ஸி. செய்த பெரிய காரில் நெல்லுப்பேட்டை மைதானத்தில் போய் இறங்க வேண்டியதைச் சகித்துக் கொள்வது கூட இயலாத காரியமாயிருந்தது. கூச்சமும் பயமும் கொண்டான் அவன். அந்தக் கட்சியில் தலைவர் ஒருத்தர் தான் ஏ.சி. காரில் வருவார். மற்றவர்களும் அதுமாதிரி வருவது அவருக்குப் பிடிக்காது. அதை எல்லாம் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் திணறினான் பொன்னுரங்கம். அவனுக்குச் சங்கடமாய் இருந்தது.

     “சொன்னாலும் உங்கப்பாவுக்குப் புரிய மாட்டேங்குது. எடுத்த எடுப்பிலேயே இந்த ஆடம்பரமெல்லாம் கூடாது. ஏழையோ இல்லையோ ஏழை வேஷம் போடறதும் ஏழைக்காகப் பரிந்து பேசறதும் இன்னிக்கு அரசியல்லே முக்கியம். இல்லாட்டி, ‘மேட்டுக் குடி’ன்னு சொல்லியே எழுந்திருக்க முடியாதபடி கீழே அமுக்கி விட்டுடுவாங்கம்மா.”

     “என்ன செய்யணும்ன்றீங்க தலைவரே இப்போ?”

     “இங்கேயே காரைக் கொஞ்சம் தள்ளி நிறுத்திட்டு மைதானத்துக்கு நடந்தே போயிறலாம்! யாரும் பார்க்க மாட்டாங்க. மேடை பக்கத்திலேதான்.”

     “இத்தினி நேரம் ஏ.சி.யிலே வந்துட்டு திடீர்னு கீழே இறங்கி நடந்தேன்னா வேர்த்து விறுவிறுத்து என் மேக்கப் எல்லாம் கலைஞ்சு போயிடுமே!”

     “நீங்க மேக்கப்பிலேயே குறியா இருக்கீங்க. நாளைக்கி எலக்‌ஷன்லே நின்னு ஜெயிக்கணுமேன்னு கவலையில்லே உங்களுக்கு.”

     “மேக்கப்புக்கும் எலெக்‌ஷனுக்கும் என்ன சம்பந்தம் தலைவரே?”

     “உப்பரிகைவாசி - ஏ.சி. ரூம் அரசியல் பண்றவங்கன்னு பேராயிட்டுதோ, அப்புறம் இந்த ஜனங்ககிட்ட ஓட்டு வாங்கறது படு கஷ்டம் அம்மா. கனிவண்ணனை எதிர்த்து நீங்க நிற்காமே - நம்ம கட்சி டிக்கெட்டிலே கனிவண்ணனே உங்களை ப்ரப்போஸ் பண்ணி நின்னாக் கூட ஸ்லம் ஓட்டு விழணுமே? இந்தத் தொகுதியிலே மட்டும் அறுபது ஸ்லம்ஸ் இருக்கும்மா...”

     “சில பெரிய நகரங்களைத் தவிர்த்துப் பார்த்தால், இந்தியாவே ஒரு பெரிய ஸ்லம்தான் தலைவரே!”

     “முதல்லே இப்படிப் பேசறதை நிறுத்துங்க. இதுதான் மேட்டுக்குடி மனப்பான்மைங்கிறது.”

     “சரி, பேசலே. பின்னாடியே அப்பா நம்மை ஃபாலோ பண்றாரு. நான் இறங்கி நடந்தா அவரு கூப்பாடு போடுவாரு. ஹி மே நாட் லைக் இட்.”

     “பார்த்தீங்களா, பார்த்தீங்களா? மறுபடி இங்கிலீஷ்லே பூந்துட்டீங்களே? கூட்டத்திலேயும் ஏதோ ஞாபகத்திலே இங்கிலீஷ்லே பேசிடாதீங்க. முதல்லேயே பேரை ரிப்பேராக்கிடுவாங்க. நான் இங்கே எறங்கிக்கறேன். நீங்க மட்டும் வேணா மைதானத்து வரை கார்ல போயி இறங்கிக்குங்க. எனக்கு ஆட்சேபணை எதுவும் இல்லே.”

     சொல்லிக் கொண்டே டிரைவரிடம் சொல்லிக் கீழே இறங்கிக் கொண்டான் பொன்னுரங்கம். அவனுடைய முன் ஜாக்கிரதையும் பயமும் சிறுபிள்ளைத்தனமாக அவளுக்குத் தோன்றின. வசதிகளைத் தேடிக் குவிக்கவே அரசியலில் இறங்கியிருக்கும் இவர்கள் வசதிகளையும் பணத்தையும் பண சௌகரியங்களையும் வெறுப்பது போலவும், இருபத்து நாலு மணி நேரமும், ஏழைகளுக்காகவே உயிர் வாழ்வது போலவும் நடிப்பது மிக மிக வேடிக்கையாக இருந்தது. எல்லாத் தரப்பு அரசியல்வாதிகளுமே இப்படி ஒரு ‘பாவனா சோஷியலிசத்தைப்’ பழகியிருந்தார்கள். பழக்கியிருந்தார்கள்.

     ஆனால் பாமர ஜனங்கள் என்னவோ இன்னும் ரயிலில் வருகிறவனை விட விமானத்தில் பறந்து வருகிறவனைத் தான் அதிகம் மதித்தார்கள். வெறும் காரில் வந்து இறங்குகிறவனை விட ஏ.சி. காரில் வந்து இறங்குகிறவனை அதிக மதிப்போடு அண்ணாந்து பார்த்தார்கள். அதுதான் பிரத்யட்சமாகவும், நிதரிசனமாகவும் இருந்தது. ஆனால் பொன்னுரங்கம் மட்டும் கனிவண்ணனையும் மாம்பழக் கண்ணனையும் நினைத்துப் பயந்து நடுங்கினான். அவர்கள் தன்னை ஆவாரம்பட்டுப் பண மூட்டையின் அடிவருடி என்று கூறி விடுவார்களோ என்பதாகப் பயந்து செத்துக் கொண்டிருந்தான். கூட்டம் நடக்கிற இடத்துக்கு முன் கூட்டியே போய் அநுக்கிரகாவுக்கு வாழ்த்தொலி, கைதட்டல், விசில் முழக்கம் எல்லாவற்றுக்கும் ஏற்பாடு செய்தான் பொன்னுரங்கம். ‘அண்ணி அநுக்கிரகா!’ என்று ஒருவன் குரல் எழுப்பவும், ‘வாழ்க! வாழ்க!’ என்று பல குரல் ஒலிகள் தொடர்ந்து ஓய்ந்தன. அவள் கூட்டத்தை நோக்கிக் கைகூப்பி முகமலர்ந்து வணக்கம் சொன்னாள். மேடையைச் சுற்றியிருந்தவர்களின் பலவிதமான குரல்களை அங்கிருந்து அவளே கேட்க முடிந்தது.

     “பாருய்யா! லண்டன்லே படிச்ச பொண்ணு, நம்ப தலைவரு மேலே பிரியப்பட்டுப் புச்சா வந்து கட்சியிலே சேர்ந்திருக்கு.”

     “சும்மா சினிமா ஷ்டாருங்க கணக்கா அப்பிடியே ஜொலிக்குதுப்பா.”

     “அத்தினி மேல் நாடெல்லாம் போயிப் பெரிய படிப்புப் படிச்சிருந்தும் என்ன பணிவு, என்ன பண்பு பாருப்பா! மேடையேறினதும் சனத்தை மதிச்சுக் கும்புடறாங்க, பாரு.”

     “இந்தப் பொண்ணு முகத்திலே நல்ல களை. சிரிச்சாலே போதும், பேச்சு வேற எதுக்குங்கிறேன்.” இவையெல்லாம் காதில் விழுந்து அநுக்கிரகாவைப் பெருமிதமாக உணர வைத்தன.

     நிமிர்ந்து உட்கார்ந்தாள் அவள். திடீரென்று மூக்குச் சளி ஒழுகிச் சலைவாய் வடியும் ஒரு குழந்தையை யாரோ அவளிடம் கொண்டு வந்து நீட்டி, “ஒரு பேர் சூட்டுங்க அண்ணி!” - என்றார்கள்.

     அவள் தயங்கினாள். உடனே பொன்னுரங்கம் ஓடி வந்து அவள் காதருகே முணுமுணுத்தான்: “குழந்தையைச் சிரிச்ச முகத்தோட வாங்கி மைக்கிலே போயி நின்னு ‘தமிழ்ச் செல்வி’ன்னு பேர் சூட்டுங்க. எல்லாரும் கைத்தட்டுவாங்க.”