(தமிழ்நாடு அரசின் 1983ம் ஆண்டின் முதற் பரிசு பெற்ற நாவல்)

37

     பணம் சேரத் தொடங்கியதும் சுயநலமும், மற்றவர்கள் மற்றவற்றைப் பற்றிய பொதுநல அக்கறையிற் குறைவும் அடைந்து பார்வையைக் குறுக்கிக் கொள்வது தான் சிலருடைய வழக்கம்.

     தான் யாருக்கும் நன்மை செய்யப் புகுந்தாலும் அது இப்படி முடிகிறது என்பதில் பூமிக்கு வருத்தம் இருந்தது. தீயவர்களின் நட்பினாலும் தூண்டுதலாலும் திருடத் தொடங்கியிருந்த ஒரு பையனைத் திருத்தி நல்வழிக்குக் கொண்டு வர முயன்ற தனக்கு இப்படி ஒரு சோதனையா என்பதை நினைக்கும் போது அவன் சிறிது கலங்கத்தான் செய்தான்.

     சாதாரணமாக எதிலும் அதிகம் தளராத பூமியே இதில் தளர்ந்து போயிருந்தான். உடனடியாக வெற்றி கிடைக்கவில்லையே என்பதற்காக அவன் எதிலும் சோர்ந்து போவது வழக்கமில்லையானாலும் பையனின் தாய்க்கு என்ன பதில் சொல்லி எப்படி ஆறுதல் கூறுவதென்பது இப்போது அவனை மலைக்கச் செய்வதற்குப் போதுமானதாயிருந்தது.

     பூமியின் சோர்வைப் புரிந்து கொண்ட சித்ரா, அவன் வெளியே போயிருந்தபோது அங்கே தனக்கும் முத்தக்காளுக்கும் நடந்த தகராறு எதையும் அப்போது அவனிடம் கூறவில்லை. அதை அவன் அநுமானிக்கும்படி கூட அவள் நடந்து கொள்ளவில்லை. ஆனால் முத்தக்காள் 'உம்'மென்று முகத்தைத் தூக்கிக் கொண்டு இருந்தாள். அதிலிருந்து பூமி அங்கே ஏதோ தகராறு நடந்திருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டான். ஆனால் எதற்காக யாருக்கும் யாருக்கும் தகராறு நடந்திருக்கிறது என்பதை அவனால் அறிய முடியவில்லை.

     உள்ளே சரக்கு மாஸ்டரோ, வேறு வேலையாட்களோ பத்து ரூபாய் அட்வான்ஸ் கேட்டால் கூட அவள் முகத்தைத் தூக்கிக் கொள்வது வழக்கம். இன்றும் அதே போல் ஏதாவது நடந்திருக்கலாம் என்று கூட அவன் எண்ண இடமிருந்தது. ஆனால் நீண்ட நேரம் அந்த அநுமானம் அல்லது சந்தேகம் நீடிக்கவில்லை. முத்தக்காள் நேரேயே அவனிடம் சண்டைக்கு வந்து விட்டாள்.

     "யாரோ காணாமப் போயிட்டாங்கன்னு நாம பொழுதன்னைக்கும் தேடி அலைஞ்சு கட்டுப்படியாகுமா?" என்று அவனையே குறை கூறினாள்.

     அவனது வேதனை புரியாமல் அவள் அவனையே கண்டிக்க முற்பட்டு விட்டாள். பூமி அப்போதிருந்த மனநிலையில் அவளைப் பொருட்படுத்தியோ கடிந்து கொண்டோ அவளுக்கு மறுமொழி கூறவில்லை.

     பணம் சேரத் தொடங்கியதும் சுயநலமும், மற்றவர்கள் மற்றவற்றைப் பற்றிய பொது நல அக்கறையிற் குறைவும் அடைந்து பார்வையைக் குறுக்கிக் கொள்வது சிலருடைய வழக்கம்.

     முத்தக்காளும் மனிதாபிமானமற்ற அந்தச் சிலரில் ஒருத்தியாக மாறியிருந்தாள். காணாமற் போனவன் நேற்று வரை திருட்டுக் கூட்டத்தில் ஒருவனாயிருந்து மாறிச் சில நாட்களே தங்கள் மெஸ்ஸில் வேலை பார்த்தவனாக இருந்தும் அவனைப் பற்றிக் கவலைப்படுவதும், அக்கறை காட்டுவதும், அவனுடைய தாய்க்கு உதவுவதும், தன் கடமை என்று எண்ணினான் பூமி. அது அநாவசியம் என்று நினைத்தாள் முத்தக்காள்.

     அதைச் சொல்லி பூமியைத் தான் கடிந்து கொண்டதற்கு அவன் எதுவும் பதில் சொல்லாமல் தன்னை ஒதுக்கியதிலிருந்தே மிகவும் கோபமாயிருக்கிறான் என்பது முத்தக்காளுக்குப் புரிந்து விட்டது. அதில் அவள் சிறிது அடங்கினாள்.

     அதற்குள் பூமி திரும்பி வந்திருப்பதை அறிந்து மெஸ்ஸில் உட்புறம் இருந்த காணாமல் போன பையனின் தாய் அவனிடம் வந்து விசாரித்தாள்.

     'சீக்கிரம் பையன் கிடைத்துவிடுவான் என்றும் அதுவரை அவள் கவலைப்படாமல் இருக்கவேண்டும்' என்றும் அவளுக்கு அவன் கூறிய ஆறுதலால் அப்போது ஒரு பயனும் விளையவில்லை.

     அந்தத் தாய் அழுது கூக்குரலிட்டு ஒப்பாரி வைக்கத் தொடங்கினாள். உடனே முத்தக்காளுக்கு மறுபடி ஆத்திரம் வந்துவிட்டது.

     "இப்படி ஒவ்வொருத்தரா வந்து இங்கே நாலு பேர் சாப்பிட வர்ற எடத்திலே ஒப்பாரி வச்சுக்கிட்டு நின்னாங்கன்னா வியாபாரம் உருப்பட்டாப்லதான்."

     அந்த நிலையில் சித்ரா பூமிக்கு உதவ முன்வந்தாள்.

     "நான் இந்தம்மாவை என் கூட வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு போய்விடுகிறேன். நீங்கள் பையனைத் தேடி அழைத்துக் கொண்டு வருகிற வரை இவங்க என் கூடவே இருக்கட்டும்."

     பூமி அதற்கு உடனே சம்மதித்தான். சித்ரா அந்தத் தாயை ஆறுதல் கூறித் தேற்றித் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றாள். முத்தக்காள் வேறு வேலையாகச் சென்றாள்.

     அப்போது அங்கே பணிபுரியும் சர்வர் ஒருத்தன் பூமியைத் தனியே அழைத்துச் சென்று அவன் அங்கே இல்லாது வெளியே போயிருந்த சமயத்தில் முத்தக்காள் சித்ராவிடம் இரைந்ததை எல்லாம் தெரிவித்தான். பதிலுக்கு முத்தக்காளிடம் சண்டை பிடிக்காமல் சித்ரா பொறுமையாயிருந்ததையும் தெரிவித்தான்.

     பூமிக்கு நிலைமை புரிந்தது. சித்ராவின் பெருந்தன்மையையும், பரந்த மனப்பான்மையையும் அவன் வியந்தான். சாதாரணமாகத் தாங்கள் பாதிக்கப்பட்டதை பிறரிடம் கூறித் தூண்டிவிட்டுத் தங்களைப் பாதித்தவருக்கு எதிரியாக அந்தப் பிறரையும் மாற்றி விடுவது தான் பெண்களில் பலருக்கு இயல்பு. ஆனால் சித்ரா இதற்கு நேர் மாறாக அந்தச் சண்டையைத் தன் கவனத்துக்கே கொண்டு வராமலிருந்தது பூமிக்கு ஆச்சரியத்தை அளித்தது.

     முன்பு ஏற்கனவே முத்தக்காள் தனது அறியாமையாலும், குறுகிய மனப்பான்மையினாலும் பண விஷயத்தில் சித்ராவின் மேல் சந்தேகப்பட்டு இரைந்திருந்தாள். அந்தச் சம்பவத்திற்குப் பிறகு மெஸ் பக்கம் வருவதையே தான் விரும்பவில்லை என்று சித்ரா கூறியிருந்தாள். பூமிதான் தனக்காக இனியும் எப்போதும் போல் அவள் அங்கே வந்து போக வேண்டுமென்று வற்புறுத்திச் சொல்லியிருந்தான். அவன் வார்த்தையை மதித்துத்தான் அவள் அங்கே போய்க் கொண்டிருந்தாள்.

     பூமி ஒவ்வொன்றாக எண்ணிப் பார்த்தான். தன்னோடு அவள் பழகத் தொடங்கிய நாளிலிருந்து நடந்த சம்பவங்கள் ஒவ்வொன்றாக அவன் நினைவுக்கு வந்தன. தனது ஆட்டோவில் அவள் மறதியாய் விட்டுச் சென்ற பண்டங்களை நாணயமாகத் திருப்பிக் கொண்டு போய்க் கொடுத்ததனால்தான் அவனுக்கு அவளுடைய பழக்கமும் நட்பும் கிடைத்தன. ஆனால், அவனுடன் பழகிய அவளுடைய நாணயத்தையே முத்தக்காள் சந்தேகப்படும்படி ஆகியும் சித்ரா அதில் உடனே மனங்குலைந்து அழிந்து போய்விடவில்லை.

     தன்னால் அவள் முத்தக்காளைப் போன்ற ஒரு மத்திய தர வயதுப் பெண்ணிடம் அவமானப்படுமாறு நேரிட்டது. இதை எல்லாம் அவள் பொறுத்துக் கொள்வதும் சகித்துக் கொள்வதும் எல்லாம் கூடத் தனக்காகத்தான் என்பது அவனுக்குப் புரிந்தது. உடனே சித்ராவைச் சந்தித்து அவளிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் போலிருந்தது. ஆனால் அது முடியவில்லை.

     சிறிது நேரம் மெஸ்ஸில் கழித்த பின் காணாமல் போன பையனைத் தேடி அன்று இரவிலும் அவன் நண்பர்களோடு அலைய வேண்டியிருந்தது. இதில் முத்தக்காளின் விமர்சனத்தையோ, குறை கூறலையோ அவன் சிறிதும் பொருட்படுத்தவே இல்லை.

     இரவெல்லாம் அலைந்து விட்டு மறுநாள் காலையில் அவன் சித்ராவைப் பார்ப்பதற்காக அவள் வீட்டுக்குப் போனான்.

     அவன் போனபோது அவள் தரையில் அரும்புகளைக் குவித்துப் பூத்தொடுத்துக் கொண்டிருந்தாள். பூமி சிரித்துக் கொண்டே அவளைக் கேட்டான்:

     "நேற்று முத்தக்காள் சண்டை பிடித்ததை ஏன் என்னிடம் சொல்லவில்லை?"

     "ஏற்கெனவே கவலைப்பட உங்களுக்கு நிறைய விஷயங்கள் இருக்கும்போது நான் புதிதாக இதையும் சொல்லித்தான் ஆகணுமா?"

     "என்னதான் சொல்லிச் சண்டை பிடித்தாள்?"

     "நீங்கள் இப்படி எல்லாம் அலைவதால் கடை, வியாபாரம் எல்லாம் கெடுகிறதென்று வருத்தப்பட்டாள். அது கூடப் பரவாயில்லை... ஆனால்..." என்று சொல்லிக் கொண்டே வந்த சித்ராவின் வார்த்தைகள் உடைந்து சிதறி மெல்லிய துயர் விசும்பலாக மாறியது.

     பூமி கேட்டான்:

     "பெண்களின் மன உறுதி என்பது இவ்வளவு தான் போலிருக்கிறது."

     "எல்லாவற்றையும் பொறுத்துக் கொள்ளலாம். கண்டபடி பேசினால் பொறுத்துக் கொள்ள முடியாது."

     "அப்படி என்னதான் பேசினாள்?"

     "இன்னும் என்னதான் பேசணும்?"

     "விஷயத்தைச் சொன்னால்தான் புரியும்?"

     "நீங்களும் நானும் பழகறதைப் பத்தி ஊரே சிரிக்கிறதாம்."

     "யார்? முத்தக்காளா அப்படிச் சொன்னாள்?"

     "ஆமாம்! நேற்று இதை அவங்க என்கிட்டச் சொல்றதுக்கு அவசியம் இல்லே... ஆனாச் சொன்னாங்க..."

     "நம்ம மனசிலே கல்மிஷம் இல்லாதப்ப யார் என்ன சொன்னாலும் வருத்தப்பட வேண்டியதில்லையே?"

     அவனுடைய இந்தப் பதிலில் இருந்த பொதுத் தன்மையை அவள் இரசித்ததாகத் தோன்றவில்லை. அவள் மௌனமாகப் பூத்தொடுத்தபடி கண்ணீர் சிந்திக் கொண்டிருந்தாள்.