![]() எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : மருதியின் காதல் - 19. ஆதியின் கோபம் |
9 மூன்றாவது ரவுண்டு பிராந்தியும் தீர்ந்தது. சிப்ஸை எடுத்து நீட்டினாள் கோகிலா. வறுவலை எடுத்துக் கொண்டு சாப்பிட்ட சுலபா இன்னொரு ரவுண்டுக்காக கிளாஸை மீண்டும் எடுத்து நீட்டினாள். “நாலாவது ரவுண்டா? உன் மனம் அதிக மாகக் குழம்பிப் போயிருக்கிறது என்று நினைக்கிறேன்.” “ஆமாம்! இன்னொரு ரவுண்டுதான் அதைத் தெளிவு படுத்தும்.” கோகிலா மறுக்கவில்லை. “எல்லாப் பார்ட்டிகளிலும் ஹோஸ்ட் பாட்டிலை மூடி வைத்தபின் கிளாலை நீட்டுபவர் களால் ஹோஸ்டுக்கு லாபமே தவிர நஷ்டமில்லை. அப்படி விருந்தினன் கேட்டதைச் செய்கிற தங்கக் கம்பியாக இழுபடு வான். அவனுக்காக மூடிய சீஸா மட்டுமல்லாமல் அவசிய மாயின் புதிய பாட்டில்களே திறககப்படலாம்” - என்று கோகி லாவின் கணவர் மாடிஸன் அவென்யூ வெளியீடான ‘பிஸினஸ் பார்ட்டி அண்ட் காக்டெயில்’ - என்ற புத்தகத்திலிருந்து அடிக்கடி ஒரு கொட்டேஷனை எடுத்துச் சொல்லுவார். இப்போது கோகிலாவுக்கு அந்த மேற்கோள் நினைவு வந்தது. சுலபாவுக்கும் அது பொருந்தியது. அவளைப் பொறுத்தவரை இப்போது சுலபா கிளாலை நீட்டுகிறாள். சுலபாவிடமிருந்து மேலும் புதிய விஷயங்கள் தெரியும் என்றால் அவளுக்காகப் பழைய பாட்டிலின் மீதத்தை மட்டும் இன்றிப் புதிய பாட்டில்களே திறக்கப்படலாம் என்கிற முடிவுக்கு வந்தாள் கோகிலா, நவ நாகரிகமான டேபிள் மேனர்ஸ், எக்ஸிகியூட்டிவ் பார்ட்டீஸ், பற்றி நூற்றுக்கணக்கான ஆங்கிலப் புத்தகங்களை வீடு நிறைய வாங்கி அடுக்கியிருந்தார் அவள் கணவர். அதில் ஒரு புத்தகத்தில், “ஒரு புதிய பாட்டிலின் மூடியைத் திறப்பதனால் ஒரு புதிய உலகின் கதவுகளே திறக்கப்பட நேரிடலாம். அப்படி வேளைகளில் கஞ்சனாகி விடாதே. பாட்டிலைத் தாராளமாகத் திற. கிளாஸ்களை நிறை. லாபத்தை அடை” என்று கூட இருந்தது. சுலபாவுக்கு நாலாவது ரவுண்டு ஊற்றிய போது ஐந்தாவது ரவுண்டையும் எதிர் பார்த்துப் பாட்டிலை மூடாமலே வைத்திருந்தாள் கோகிலா. தான் மட்டும் கச்சிதமாக மூன்றாவது ரவுண்டோடு நிறுத்திக் கொண்டாள். “என்னடி கோகிலா? உன் கிளாஸ் மட்டும் காலியாவே இருக்கு?” - என்று சுலபா கேட்ட போது கூட, “உனக்கே தெரியும் டி சுலபா! நான் எப்பவுமே மூணு ரவுண்டோட நிறுத்திடுவேன்... மோர் ஓவர் டு டே ஐயாம் நாட் ஃபீலிங் வெல்...” - என்று சமாளித்தாள். கோகிலா இப்படிக் கூறியபின் சுலபா அவளை வற்புறுத்தவில்லை. ஆனால் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளவுமில்லை. ‘டிப்ளமேடிக் பார்ட்டி’களில் இப்படி ஒரு தரப்புக் கிளாஸை விட்டு விட்டு, எதிர்த் தரப்பு கிளாஸை மட்டுமே நிரப்புவது ஒற்றறியும் முயற்சியாகக் கருதப்படும் என்பதும் அப்படி விருந்துகளில் எப்போது எத்தனை ரவுண்டு ஊற்றினாலும் இருதரப்பு கிளாஸ்களிலுமே சம அளவில் ஊற்ற வேண்டும் என்பதும் மரபு. தொடங்கும் போதும் இருதரப்பு கிளாஸ்களிலும் டோஸ்ட் சொல்லி நிரப்பி உயர்த்திப் பிடிக்க வேண்டும். முடிக்கும் போதும் அப்படியே முடிக்க வேண்டும். சுலபாவின் நிலையில் ராஜதந்திரம் எதுவும் இல்லை. அவளே அதிகம் பருக விரும்பினாள், அதிகம் பேசவும் முன்வந்தாள். உள்ளே போகப் போக நிறைய விஷயங்கள் வெளி வந்தன. தன்னை நம்பி விருந்துக்கு வந்த சிநேகிதியிடம் இப்படிச் ‘சாராயத்தை வார்த்துப் பூராயம் அறிவது’ சரியில்லை என்று கோகிலாவுக்கே தோன்றினாலும் அந்த அடக்கத்தை ஆசை வென்றது. சுலபாவின் அந்தரங்கங்களை அறியும் ஆசையைக் கோகிலாவால் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. ஒரு நிலமைக்குப் பின் கோகிலா கேட்காமலே சுலபா விஷயங் களைக் கொட்டத் தொடங்கினாள். இவள் தடுத்தால் கூட நிறுத்தமாட்டாள் போலிருந்தது. அத்தனை வேகத்தில் எல்லாம் பீறிட்டுக் கொண்டு வந்தன. “உனக்குத் தெரியுமோ கோகிலா? அந்தக் குப்பைய ரெட்டியே நல்ல அழகன். அரைத்த சந்தனம் மாதிரி நிறத்தில் கட்டுமஸ்தான உடம்பு. இறுகிய தசைகள். சிரித்தால் அவன் முகத்தை விட்டுப் பார்வை விலகாது. ஆனல் அந்தப் படுபாதகன் என்னை ஒரு பெண்ணாக இலட்சியம் பண்ணித் தீண்டியதே இல்லை. மற்றவர்களுக்கு என் உடம்பை விற்றுப் பணம் பண்ணுவதிலேயே குறியாயிருந்தான்.” “நீ அவனைக் கவர முயலவே இல்லையா? ஒரு வேளை உன் அந்தரங்கம் அவனுக்குத் தெரியாதோ என்னவோ?” “தெரியாமல் என்னடீ? இங்கே என்னை அழைத்து வந்து அந்தக் கோடம்பாக்கம் லாட்ஜில் தங்க வைத்தபோது கூட அவன் ஒரு டபிள் ரூமாக எடுத்ததைப் பார்த்து நான் மகிழ்ந் தேன். டபிள் ரூமில் என்னை விட்டுவிட்டு அவன் அதே மாடி யில் இன்னொரு தனியறையில் போய்த் தங்கினான். அப்போது நானே வெட்கத்தை விட்டு விட்டு ‘சேர்ந்து தங்கும்படி’ மனசு விட்டுப் பேசி அவனைக் கெஞ்சினேன். என் ஆசையைக் கூடிக் குறிப்பாக அறிவித்தேன். அவன் மறுத்து விட்டான். “உன்னை ஒரு சினிமாப் பார்ட்டி இப்போ இங்கே இட்டுக்கினு போக வரப் போவுது. நான்கூட இருந்தா சந்தேகப்படுவாங்க” - என்று புளுகினான்.” “உண்மையான காரணம் என்னவாயிருக்கும்டி சுலபா? அவனுக்கு உன்னைப் பிடிக்கலியா? அல்லது அவன் ஆண்மையே அற்றவனா? என்ன காரணம்...?” “என்னைவிட மட்டமான, முகம் முழுவதும் அம்மை வடு நிரம்பிய அழகற்ற பெண்களோடு கூடக் குண்டுரில் அவன் சுற்றியிருக்கிறான்.” “ஸோ... ஆண்மையுள்ளவன் தான்! உன்னை மட்டும் ‘விற்பனைக் குவாலிட்டி’ கெடாமல் விற்றிருக்கிறான்.” “இது எச்சிற் பண்டம். நமக்கு வேண்டாம் என்கிற அலட்சியமும் திமிரும் கூடக் காரணமாயிருக்கலாம்.” “அந்த அம்மை வடு மூஞ்சிப் பெண்கள் என்றாயே. அவர்கள் எச்சிற் பண்டம் இல்லையா?” “இல்லை! அவர்கள் என் மாதிரி டைப் இல்லை. உயர் குடும்பங்களில் பிறந்தவர்கள். இவன் அழகுக்காக இவனை வட்ட மிட்டவர்கள்.” “உன் அழகை இவன் விற்க மட்டுமே விரும்பினான் என்கிறாயா சுலபா?” “இவன் அழகன் என்று இவனிடம் இரகசியமாக வந்த அழகற்ற பெண்களைக் கூட இவன் பயன்படுத்திக் கொண்டான்,” “அதே சமயம் இவனே தேடிக் கண்டுபிடித்த அழகியான உன்னை, நீ ஏழை, தாழ்ந்த பிரிவினள் என்பதற்காக மற்றவர்களுக்கு விற்றான் என்கிறாய்!” “அவர்கள் மூலமும் இவனுக்குப் பணம் வந்தது. என் மூலமும் இவனுக்குப் பணம் வந்தது.” “அவர்களை இவன் பெண்ணாக மதித்தான். பெண்ணாக நடத்தினன். பெண்ணாக அநுபவித்தான். உன்னை மட்டும் வியாபாரப் பொருளாக விற்று லாபம் சம்பாதித்தான்.” “என்னை இரத்தமும் சதையுமுள்ள பெண்ணாகவே மதிக்கவில்லை அந்தக் கிராதகன்.” “உன் ஆதங்கம் புரிகிறது சுலபா! ஒரு பெண்ணுக்கு ஆண் செய்ய முடிந்த அவமானங்களில் மிகப் பெரியது அவளைப் பெண்ணாகவே புரிந்து கொள்ளாமலிருப்பதுதான்.” “அவன் என்னை மானபங்கப் படுத்தியிருந்தால் கூடி நான் திருப்திப் பட்டிருப்பேன். அதற்குக் கூட நான் லாயக்கில்லாதவள் என்று அவன் அலட்சியம் செய்ததுதான் எனக்கு பெரிய மானபங்கமாயிருந்தது கோகிலா. என்ன மானபங்கப்படுத்தாமலே அதைவிட அதிகமாக அவமானப் படுத்தி விட்டான் அவன்.” “ஒரு பெண்ணை மானபங்கப் படுத்துவதுதான் அவமானம் என்று இதுவரை கேள்விப் பட்டிருக்கிறேன். நீயோ மானபங்கப் படுத்தக் கூட லாயக்கற்றவள் என ஒரு பெண்ணை ஓர் ஆண் ஒதுக்கியதன் மூலமே அவமானப்படுத்தியது பற்றிக் கூறுகிறாய்.” “அந்த அளவுக்கு நான் கேவலமானவள், பலரிடம் சீரழிந்தவள் என்று என்னைப் பற்றி அவன் மிக மிக மட்டமாக நினைத்திருக்கிறான் கோகிலா!” “நீ அவனை நினைத்து ஏங்கியிருக்கிறாய்! அவன் உன்னைச் சாதாரணமாகக் கூட நினைக்கவே இல்லை.” “நினைக்காதது கூடத் தப்பில்லை. நான் ஏங்கியதை அலட்சியமே செய்திருக்கிறான் அவன். அவனைப் போல் ஒருத்தனை நினைத்து ஏங்க நான் தகுதியற்றவள் என்பது போல் கூட நடந்து கொண்டிருக்கிறான் அவன்.” “ஆண் பிள்ளையின் திமிர்களில் மிகவும் குரூரமான மன்னிக்க முடியாத திமிர் இது.” “இன்று அவன் அகப்பட்டால் கூட அந்தத் திமிருக்குப் பழி வாங்குவேன். இன்னும் நான் தீர்க்க முடியாத பழங் கணக்கு அது.” “நான் அநுமானித்தது சரிதான் சுலபா.” “என்ன அநுமானித்தாய் நீ?” “யாரொருவர் மனப்பரப்பில் வெறுப்பும் விரக்தியும் நிராசையுமாக மிதக்கின்றனவோ அவருடைய அடிமனத்தில் இந்த உணர்வுகள் மிதக்கக் காரணமான ஏதாவது ஓர் ஆசை நிச்சயம் இருக்கும். அந்த ஓர் ஆசை மட்டும் வற்றி விடுமானால் அப்புறம் இந்த வெறுப்பு, விரக்தி, எல்லாமே மிதக்க முடியாமற் போய் விடும்.” “இன்று கோடிக்கணக்கான இரசிகர்களின் கனவில் அழகியாக அங்கீகரிக்கப்பட்டு விட்ட நான் அதைப் பிடிவாதமாக அங்கீகரிக்க மறுத்த ஒருவனைப் பழி வாங்கவே அந்தரங்கமாக விரும்புகிறேன்.” “விரும்பினால் மட்டும் போதுமா? அந்த ஒருவன் அகப்பட வேண்டுமே? அப்படியே அகப்பட்டாலும் அவன் பழையபடி தான் இருப்பான் என்பது என்ன நிச்சயம்? ஒரு வேளை இன்று அவன் உன்னைக் காமுறலாம்.” “காதலோ காமமோ அவனுடைய வசதிக்காக என்னிடம் காத்திருக்கவில்லை.” “ஆனால் நீ இன்னும் ஏங்கிக் கொண்டிருக்கிறாயே?” “இது ஆசை தீர்வதற்கான ஏக்கமில்லை! அதே மாதிரித் தோற்றமுள்ள மேல் வர்க்கத்துப் பரிசுத்தவான் ஒருவனைச் சீரழித்தால் கூட என் வேகம் தணிந்து விடலாம்.” “துர்த் தேவதைகளின் கோபத்தைத் தணிக்கத்தான் ஆடு கோழிகளைப் பலி கொடுப்பார்கள் சுலபா!” “குப்பையரெட்டி விஷயத்தில் நானும் ஒரு துர்த் தேவதையாகத்தான் காத்திருக்கிறேன். என் பலிகளில் தான் உள் வெறுப்புத் தணியும்.” மேலும் அடுத்த ரவுண்டுக்காக அவள் கிளாஸை நீட்டிய போது கோகிலா இதமாக மறுத்து அவளைக் கைத்தாங்கலாக டைனிங் டேபிளுக்கு அழைத்துச் சென்றாள். சுலபாவுக்குள் இத்தனை வேதனைகள், ஏக்கங்கள், அந்தரங்கங்கள், பழி வாங்கல் உணர்வுகள் நிரம்பியிருக்கும் என்று கோகிலா எதிர் பார்க்கவில்லை. சுலபா அவள் நடித்த படங்களில் எல்லாம் ஏற்றவற்றை விடப் பெரிய சுயமான குணசித்திரத்தைத் தனக்குள் தானாக ஏற்று நடமாடிக் கொண்டிருந்தது புரிந்தது. கோகிலாவுக்கு அவள் மேல் பிரியமாகவும் இருந்தது. இரக்கமாகவும் இருந்தது. பெரிய பெரிய சாம்ராஜ்யப் பகைகளை விட இந்த அந்தரங்கமான காதல் பகை - அல்லது காமப் பகை கடுமையாகவும் பெரியதாகவும் உள்ளே மறைந்திருப்பது புரிந்தது. |