மூலக் கனல் - Moolak Kanal - தீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் - Deepam Naa. Parthasarathy Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com



20

     சின்ன உடையாரையும் ராணியையும் திரு சில கணங்கள் நிறுத்தி வைத்தே பேசியது உடனிருந்த மற்றவர்களுக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை. எத்தனை பெரிய பதவியும், பவிஷும் வந்தாலும் அவனோடு உடன் பிறந்த குணமாகிய தடித்தனம் இன்னும் அவனோடு சேர்ந்தே இணைந்திருப்பது போலத்தான் தோன்றியது. தடித்தனமும் பழிவாங்கும் முனைப்பும் பெருந்தன்மை இன்மையின் அடையாளங்களாகத் தோன்றின. தனக்கு உள்பட்டணத்தார் கொடுக்க இருக்கும் வரவேற்பை அரண்மனை வாசலில் மேடை போட்டு அளித்தால்தான் பெருமை என்று திடீர் என வேறொரு விதமாக அடம்பிடிக்க ஆரம்பித்தான் திரு. கொஞ்சம் விட்டுக் கொடுக்க ஆரம்பித்திருக்கும் ஜமீன்தாரை அவன் மேலும் அதிகமாகச் சோதனை செய்வதாக உடனிருந்த எல்லோருக்கும் தோன்றியது. பொறுமை இழந்து சின்ன உடையார் கோபித்துக் கொண்டு வெளியேறப் போகிறார் என்றே அப்போது எல்லோரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் உடையார் தங்கக்கம்பியாக இழுத்த இழுப்புக்கு வந்தார் “அதற்கென்ன? செய்தால் போயிற்று” என்று திருவின் வேண்டுகோளுக்கு உடன் இசைந்து விட்டார் அவர். தன்னுடைய பரமவைரியும், எதிர்க்கட்சிக்காரரும், தன்னிடம் தேர்தலில் தோற்றவருமாகிய ஜமீன்தாரே தன்னை மதித்துப் பயப்படுகிறார் என்று எழிலிருப்பு ஊர் மக்களிடம் ஒரு பிரமையை உண்டாக்கி விட வேண்டுமென்று திரு நினைத்தான். ஆனால் காலத்துக்கும், சந்தர்ப்பத்திற்கும் ஏற்பத் தங்களை மாற்றிக் கொள்வதில் வசதியுள்ளவர்கள் திருவை விடத் துரிதகதியில் இருப்பதை அந்தக் கணமே நிரூபித்தார் ஜமீன்தார். அவர் அளவுக்கதிகமாக விட்டுக் கொடுத்துத் தணிந்து போவது திருவுக்கே ஆச்சரி யத்தை அளித்தது. தான் அதிகப் படிப்பற்றவன். ஒழுக்கத்தை நம்பாதவன். பக்தி சிரத்தைகளைப் புறக் கணிப்பவன், இருந்தும் தன்னைவிட நல்லவர்கள் தனக்கு மதிப்பளிப்பது அவனை வியப்பில் ஆழ்த்தியது. ஒரு கடவுளே இல்லை என்று எழுதியும், பேசியும் வந்த அவன் இப்போது உலகத்தில் மூன்று கடவுள்கள் இருக்கிறார்களோ என்று கூட எண்ணத் தொடங்கினான். பணம் பதவி என்ற இரண்டு புதிய கடவுள்களோடு பக்தர்கள் நம்பிய பழைய கடவுளும் செல்வாக்கு அதிகமில்லாமல் மங்கலாக இருக்கிறாரோ என்று அவனுக்குத் தோன்றியது. பணமும் அதிகாரமும் - அதாவது பணத்தால் வருகிற அதிகாரமும், அதிகாரத்தால் வருகிற பணமும் இவை இரண்டுமேயற்று வெறும் நம்பிக்கையை மட்டுமே பொறுத்திருக்கிற பழைய கடவுளை மெல்ல மெல்லப் பதவியிறக்கம் செய்து கொண்டிருப்பதாய் அவனுக்கே நினைக்கத் தோன்றியது, பணமும், பதவியும் அதிகாரமும் உள்ளவன் சமூகவிரோதியாயிருந்தால்கூட மற்றவர்கள் அவனை மன்னித்து மதிக்கத் தயாராயிருந்தார்கள். பணமும், அதிகாரமும், பதவியுமில்லாதவன் எத்தனை பெரிய ஒழுக்க சீலனாகவும் பொதுநல ஊழியனாகவும் இருந்தாலும் அவனை மக்கள் பொருட்படுத்தக் கூடத் தயாராயில்லை. அதிகாரத்துக்கு அஞ்சினார்கள். பணத் தைப் பக்தி செய்தார்கள். பயபக்தி இந்த ரீதியில்தான் இருந்தது. எழிலிருப்பைச் சேர்ந்த அவனுடைய கட்சித் தோழர்கள் அவனுடைய அந்தரங்கத்தைப் புரிந்து கொள்ளாமல், “அண்ணன் உள்பட்டணத்துக்காரங்க வரவேற்பை ஏற்றுக் கொள்ளக் கூடாது” - என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். அவனோ உள் பட்டணத்து மக்களும் ஜமீன்தாரும் தன்னை வரவேற்று வணங்கிப் பணிவதன் மூலம் - தன் மரியாதையை உயர்த்திக் கொள்ள முயன்று கொண்டிருந்தான். வரவேற்பு என்று உள்பட்டணத்துக்காரர்கள் சொன்னாலும் சொன்னார்கள், அதை ஒரு சாக்காக வைத்துக்கொண்டு அவன் தானே தன் ஆட்களை விட்டே எல்லா ஏற்பாடுகளையும் தடபுடலாகச் செய்யச் சொன்னான். அமர்க்களப் படுத்தினான்.

     அங்கே எழிலிருப்புத் தேரடியிலிருந்து உள்பட்டணம் அரண்மனை வாசல்வரை முப்பது இடங்களில் அலங்கார வளைவுகள் போட ஏற்பாடு செய்யப்பட்டது. ‘மக்கள் மனங் கவர்ந்த அமைச்சரே வருக வருக!’, ‘எழிலிருப்புத் தந்த ஏந்தலே வருக வருக!’ என்பது போல் வாசகங்கள் அந்த வளைவுகளை அணிசெய்தன. வாலிப வயதில் வாய் கூசாமல் தன்னை ‘பாஸ்டர்ட்’ என்று திட்டிய அதே சின்னக் கிருஷ்ணனிடமா இத்தனை பணிவும், நயமும், அடக்கமும் வந்திருக்கின்றன என்பதைத் திருவினால் நம்பவே முடியவில்லை. சின்னக் கிருஷ்ணனிடம் மாறுதலும், வளர்ச்சியும் தெரிந்தன. தன்னைப் பொறுத்துச் சின்னக் கிருஷ்ணனிடம் ஏற்பட்டிருந்த அதே மாறுதல் அவனைப் பொறுத்துத் தன்னிடம் ஏற்படவில்லை என்பதும் திருவுக்குப் புரிந்தது. ஜமீன்தாருக்கு உடலில் மூப்பு வந்ததோடு மனமும் மூத்துக் கனிந்திருந்தது. அவனுக்கோ உடல் மட்டுமே மூத்து முற்றியிருந்தது. தன் ஆட்களை ஏவிவிட்டு உள்பட்டண வரவேற்பில் வான வேடிக்கை பட்டாசு எல்லாம் ஒன்று குறையாமல் தடபுடல் படவேண்டும் என்று ஏற்பாடு செய்தான்.

     சின்ன உடையாரிடமும் சிலர் மந்திரி திருமலை ராசனுக்கு உள்பட்டணத்தில் வரவேற்புத் தருவதை ஆட்சேபித்தார்கள். தேர்தலில் அவருக்கு ஆதரவாகவும் திருமலைக்கு எதிராகவும் வேலை செய்த திருமலையின் மைத்துனனே கடுமையாக எதிர்த்தான்: “ஒழுக்கங். கெட்டவங்களுக்கு எல்லாம் வரவேற்பு ஒரு கேடா, அதிலே பாம்பரைப் பெரிய மனுஷரான நீங்க வேற போய்க் கை கட்டி வாய் பொத்தி நிற்கணும்கிறது எனக்கு அறவே பிடிக்கல்லீங்க! நாம் எலெக்ஷன்லே தோத்துப் போனா லும் நமக்கு ஒரு கட்சி இருக்கே?”

     “அதெல்லாம் சரிதான்ப்பா! ஆனா, இதிலே அரசியலோ கட்சியோ வேண்டாம்னு பார்க்கிறேன். எந்தக் கட்சியானால் என்ன? ஏதோ இந்த ஊர்க்காரன் ஒருத்தன் ஜெயிச்சு மந்திரியாகி வந்திருக்கான். இதைப் பாராட்டறதுலே தப்பு ஒண்னுமில்லே” என்றார் ஜமீன்தார்.

     “நீங்க பெருந்தன்மை காட்டி மதிக்கிறதுக்கு இந்த ஆள் பாத்திரமில்லே! டீ.பீ.யிலே பொம்பலை விவகாரத்திலே சிக்கி இரசாபாசமாகிப் போலீஸ்காரனை அறைஞ்சப்ப அது பெரிய விவகாரம் ஆகாமக் காப்பாத்தினிங்க. இன்னும் எத்தினியோ செஞ்சீங்க. அதுக்கப்புறமும் எலெகஷன் மீட்டிங்கிலே எல்லாம் உங்களையும் உங்க குடும்பத்தையும் பத்தி இந்த ஆளு தாறுமாறாகத் தான் பேசினாரு”

     “இருக்கட்டுமே! எதிரி பெருந்தன்மையா நடந்துக்கல்லேன்னு நாமும் அவங்கிட்டப் பெருந்தன்மையில்லாமே. நடந்துக்கணுமா, என்ன?”

     தன்னைச் சார்ந்தவர்களும், தன் கட்சிக்காரர்களும் எழுப்பிய ஆட்சேபணைகளை எல்லாம் பொருட்படுத்தாமல் ஜமீன்தாரும் அவர் துணைவியும் முன்நின்று ஏற்பாடு செய்தவர்களுக்கு உதவியாக உள்பட்டணத்து அரண்மனை வாயிலில் அந்த வரவேற்பைப் பிரமாதமாக நடத்தினார்கள். பெரிய தட்டு நிறையப் பழங்களை நிரப்பி அவனிடம் அதைக் கொடுத்து வரவேற்றார், ஜமீன்தார். ஊரே அதிசயித்தது.

     “சின்ன வயசிலே என்னென்னவோ விரோதம் எல்லாம் இருந்திருக்கலாம். அது பெரிசில்லே! இப்பப் பாருங்க... யாரிடத்திலே தோத்துப் போனாரோ அந்த ஆளுக்கே அரண்மனை வாசல்லே வரவேற்புக் கொடுக்கிறாரு... ‘கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே! சங்கு சுட்டாலும் வெண்மை தரும்’னு தெரியாமலா பாடிவச்சான்? பெரிய மனுசன் பெரிய மனுஷன் தான்” - என்று ஊரார் பேசிக் கொண்டார்கள். ஆனால் திருவின் கட்சியைச் சேர்ந்தவர்கள் வேறொரு புரளியைக் கிளப்பிக் கொண்டிருந்தார்கள். “தோற்று நொடித்துப் போன ஜமீன்தார் ஊரில் மலையடிவாரத்தில் நூறு ஏக்கர் நிலப்பரப்பில் ஒருபெரிய சிமெண்ட் தொழிற்சாலை தொடங்கப் போகிறார். புதிய தொழில் வளர்ச்சி மந்திரியாகிய திருவின் தயவு அதற்குத் தேவைப்படும் என்று கருதி இப்போதே அவனைப் பாராட்டி வரவேற்று இப்படி வளைத்துப் போடுகிறார். சோழியன் குடுமி சும்மாவா ஆடும்?”... திருவே இந்தப் புரளி பொய் என்பதை அறிவான். ஆனாலும் மறுக்கவில்லை. ஜமீன்குடும்பத்தின் நற்பெயரைக் காப்பாற்றுவது தன் கடமையில்லை என்று விட்டுவிட்டான். உள்பட்டணத்து வரவேற்புக்குப் பதிலளித்துப் பேசுகையில் திரு மீண்டும் பொடி வைத்தே பேசினான். “கண்கொள்ளாக் காட்சியை.. என்றுமே கண்டிருக்க முடியாத விநோதக் காட்சியை இந்த ஊர் இன்று காண்கிறது. ஊர் பேர் தெரியாத அநாதையான இந்த ஏழைத் திருமலைராசன் தேர்தலிலே வெற்றிவாகை சூடி அமைச்சனாகவும் பதவி ஏற்று வந்திராத பட்சத்தில் செல்வச் சீமான்கள் நிறைந்த இந்த உள்பட்டணம் இப்படி வரவேற்க முன் வந்திருக்குமா? இத்தனை பெருந்தலைகள் பயபக்தியோடு பழத்தட்டுக்களைக் கைவலிக்கச் சுமந்து எதிர்கொண்டு வந்திருப்பார்களா? அரண்மனைகளின் வாயில்கள் இப்படி எல்லாம் அகலத் திறந்திருக்குமா? கோட்டைக்குள்ளேதான் நுழைய விட்டிருப்பார்களா? அந்தக் கோட்டையை நாங்கள் பிடித்திராவிட்டால் இந்தக் கோட்டைக்குள் இத்தளை மரியாதை எங்களுக்குக் கிடைத்திருக்குமா?”

     இப்படி அவன் பேச்சைத் தொடங்கியதும் சின்ன உடையார் மனம் வருந்தினார். ஒருவித உள்நோக்கமும் இல்லாமல் தான் காட்டிய பெருந்தன்மையை அவனும் அவனது கட்சி ஆட்களும் இப்படிக் கொச்சைப்படுத்தியது அவருக்குப் பிடிக்கவில்லை. தான் சிமெண்ட் தொழிற் சாலைக்காகத்தான் இதை எல்லாம் செய்வதாக ஏற்கெனவே திருவின் கட்சி ஆட்கள் பரப்பியிருந்த புரளி வேறு அவர் காது வரை எட்டியிருந்தது. ‘மன்னரும் ராணியும் எதிர்கொண்டு வரவேற்காவிட்டால் நான் உள்பட்டணத்து வரவேற்பிலேயே கலந்து கொள்ளமாட்டேன்’ - என்று அவன் முரண்டு பிடித்த காரணத்தால் தான் ஒதுங்கி நின்று ஊராருக்குத் தர்மசங்கடமாகி விடக் கூடாதே என்று தான் சின்ன உடையார் இதில் கீழே இறங்கி வந்து வேலை செய்தார். தமது பண்பு தவறாக வியாக்கியானம் செய்யப்படுவதைப் பல்லைக் கடித்தபடி பொறுத்துக் கொண்டார் அவர். அற்பர்களிடம் பெருந்தன்மை காட்டுவது கூட ஆபத்தானது என்று இன்று அவருக்கு மெல்ல மெல்ல உறைத்தது. பெருந்தன்மையைப் புரிந்து கொள்ள முடியாத கூட்டத்துக்கு நடுவே பெருந்தன்மையாக இருப்பதே தவறானதோ என்றும் தோன்றியது அவருக்கு.

     திரு பேசத் தொடங்கிய சிறிது நேரத்துக்கெல்லாம் சின்ன உடையாரும், ராணியும் கூட்டத்திலிருந்து மெதுவாக எழுந்து வெளியேறி அரண்மனைக்குள்ளே போய் விட்டார்கள். அதை அவர்கள் அப்படிச் செய்திராவிடினும் அது ஒரு வாக் ஆவுட் மாதிரிதான் இருந்தது. சின்ன உடையார் வெளியேறியதும் அவர் கட்சிக்காரர்களும் வேறு பலரும் கூட வெளியேறி விட்டார்கள். கடைசியில் கூட்டத்தில் மீதமிருந்தது திருவும் அவன் ஆதரவாளர் களும்தான். தன்னைப்பாராட்டியோ புகழ்ந்தோ கூட அவன் பேச வேண்டுமென்று சின்ன உடையார் எதிர்பார்க்கவில்லை. உபசார வார்த்தைகளைக் கூட அவர் விரும்பியிருக்கவில்லை. ஆனால் தன்னையும் தன்னைச் சேர்ந்தவர்களையும் ஏதோ காரியமாக வேண்டும் என்றால் கழுதையின் கால்களைக்கூடப் பிடிப்பார்கள் - என்பது போன்றதொரு தொனியில் அவன் சித்தரிக்க முயன்றது அவருக்கு உள்ளுறத் தைத்து வேதனை உண்டாக்கி விட்டது. அதன்பின் அந்தக்கூட்டம் முடிகிறவரை அவர் அரண்மனையிலிருந்து வெளியே வரவேயில்லை. திருவும் கூட்டம் முடிந்தவுடன் அவரிடம் போய்ச் சொல்லி விடை பெற்றுப் போகவில்லை. சின்ன உடையாரைத் தந்திரமாகக் கூட்டத்திற்கு வரவழைத்து அடிமைப்படுத்தி விட்டோமென்று ஆணவமானதொரு திருப்தியே அவனுள் நிரம்பியிருந்தது. உள்பட்டணத்துப் பெரிய மனிதர்கள் பலர் மறுநாள் காலையில் முதல்வேலையாக ஜமீன்தாரைப் பார்த்து, “நீங்கதான் பெரிய மனசு பண்ணி மன்னிக்கணும்! அவருக்குப் பேசத்தெரிஞ்ச லட்சணம் அவ்வளவுதாங்க...” என்று வருத்தப்பட்டார்கள். சின்ன உடையார் அதற்குப் பதிலே பேசவில்லை. சிரித்தபடியே காலைப் பத்திரிகைகளை எல்லாம் எடுத்து வந்தவர்களிடமே மெல்ல நீட்டினார்.

     ‘தொழில் வளர்ச்சி அமைச்சருக்குச் சொந்த ஊர் வரவேற்பு. அவரிடம் தோற்ற ஜமீன்தாரே வரவேற்பை முன் நின்று நடத்தினார்’ என்று படங்களுடன் செய்திகள் வெளியாகி இருந்தன. சின்ன உடையார் சார்ந்திருந்த கட்சிப் பத்திரிகை ஒன்று மட்டும், ‘மந்திரியின் பண்பற்ற பேச்சைக் கேட்டு முன்னாள் அமைச்சர் வெளிநடப்பு’ - என்று வெளி யிட்டிருந்தது.

     அதே சமயத்தில் திருவின் கட்சியைச் சேர்ந்த இளைஞர்கள், “ஜமீன்தாருக்கு நல்ல சூடு கொடுத்தீங்க. நேத்து உங்க பேச்சு டாப்பாயிருந்துச்சி அண்ணே!” என்று அவனைப் புகழ்ந்து கொண்டிருந்தார்கள். சின்ன உடையாரை எதிர்க்கும் அவனை கொம்பு சீவி விடுவது அவர்களுக்குச் சுலபமாயிருந்தது, சின்ன உடையாரோ தான் வெளிநடப்புச் செய்ததாக நியூஸ் போட்டிருந்த தம் கட்சிப் பத்திரிகைக்கு “நான் வெளிநடப்பு எதுவும் செய்யவில்லை. தவிர்க்க முடியாத வேறு வேலையிருந்ததால் நானும் என் மனைவியும் பாதிக் கூட்டத்தில் வெளியேற நேர்ந்தது” என்று விளக்கம் எழுதி அனுப்பிப் பிரசுரிக்கச் செய்தார்.

     அந்த விளக்கத்தை அவர் எழுதி வெளியிட்டது வேண்டியவர்களுக்கும் அவர் கட்சிக்காரர்களுக்கும் பிடிக்கவில்லை. “ஏன் இப்படி மறுத்தீங்க? ‘வெளி நடப்பு’ன்னு போட்டிருந்த நியூஸ் சரிதானே?” - என்று அவர்கள் சின்ன உடையாரிடம் கேட்டார்கள், அதற்கு அவர்,

     “நான் பதவியை இழந்திருக்கலாம். சொத்து சுகங்களை இழந்திருக்கலாம். ஆனால் பண்பாட்டை இழந்து விட முடியாது. அரண்மனை வாசலிலே வரவேற்புன்னு போட்டு நானே வெளிநடப்புச் செய்தேன்னும் நியூஸ் போட்டா ஒருத்தரைக் கூப்பிட்டு அவமானப் படுத்தின மாதிரியில்லே ஆயிடும்?” - என்று அவர்களைப் பதிலுக்குக் கேட்டார். அவர்களால் பதில் சொல்லமுடியவில்லை. இத்தனை பண்புள்ளவர்கள் இந்நாட்டு அரசியலில் இனி மீண்டும்வென்று முன்னுக்கு வருவது முடியாத காரியமாயி ருக்குமோ என்கிற பயம்தான் அவர்களுக்கு அப்போது ஏற்பட்டது. பண்பாடும், கை சுத்தமும் உள்ள பலர் அரசியலிலிருந்தே ஒதுங்க ஆரம்பித்து விடுவார்கள் என்பதற்கான அடையாளம் தெரிந்தது. மறுவாரமே திருவின் கட்சிப் பத்திரிகை ஒன்றில், “சிமெண்ட் தொழிற்சாலைக்காகக் காக்காய் பிடித்த ஜமீன்தாரின் தந்திரம் பலிக்கவில்லை. கொள்கை மறவர் திரு கொடுத்த சூடு”. என்று இந்த விவரம் ஒரு கட்டுரையாகவே வத்துவிட்டது. “சிமெண்ட் தொழிற்சாலை என்பது வெறும் கற்பனை. அம்மாதிரி எந்த உதவியையும் ஜமீன்தார் என்னிடம் நாடவில்லை” - என்று திருவே இதை மறுத்து அறிக்கை விடாததிலிருந்து அவனே ஒரு பெருமைக்காக இந்தப் பொய்யைப் பரப்பியிருக்கக் கூடும் என்று சின்ன உடையார் புரிந்து கொண்டார். “பொய்யுடை ஒருவன் சொல் வன்மையினால் மெய் போலும்மே மெய்போலும்மே” -என்பது நிரூபணமாகிக் கொண்டிருந்தது. பணமின்றி அரசியல் நடக்காது என்பதைப் புரிந்து கொண்ட திரு தொழிலதிபர்களிடமும், பணக்காரர்களிடமும் தாராள மாகக் கைநீட்டி வாங்கினான். ஆனால் மேடையில் பேசும் போது மட்டும், “முந்திய ஆட்சியில் இருந்ததுபோல் எங்கள் ஆட்சியில் லஞ்ச ஊழல் இல்லை! இது ஏழை எளியவர்களின் ஆட்சி!” - என்று முழங்கினான். ஓர் எதிர்க் கட்சிப் பத்திரிகை இதைக் குறும்புத்தனமாக வியாக்கியானம் செய்தது.

     “முந்திய ஆட்சியில் இருந்தது போல் எங்கள் ஆட்சியில் லஞ்சம் இல்லை என அமைச்சர் திரு பேசுவதில் ஒர் அர்த்தம் இருக்கத்தான் இருக்கிறது. உண்மையில் முந்திய ஆட்சியில் இருந்ததை விட லஞ்ச ஊழல் இப்போது பல மடங்கு அதிகரித்து ரேட்கள் அதிகமாகி விட்டன. அதைக் குறிப்பாக உணர்த்துவதற்காகவே அமைச்சர் அடிக்கடி, ‘முந்திய ஆட்சியில் இருந்ததுபோல் எங்கள் ஆட்சியில் லஞ்ச ஊழல் இல்லை’ - என்று சொல்கிறார். இந்த சமிக்ஞையை மக்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்” என்று கிண்டலாக எழுதி விட்டது. இதைக் கண்டு திருவுக்கு ஆத்திரம் பற்றிக் கொண்டு வந்தது. அந்தப் பத்திரிகையை எப்படிப் பழி வாங்குவது என்று உடனே அவன் திட்டமிடத் தொடங்கினான்.






புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
151
152
153
154
155
156
157
158
159
160
161
162
163
164
165
166
167
168
169
170
171
172
173
174
175
176
177
178
179
180
181
182
183
184
185
186
187
188
189
190
191
192
193
194
195
196
197
198
199
200
201
202
203
204
205
206
207
208
209
210
211
212
213
214
215
216
217
218
219
220
221
222
223
224
225
226
227
228
229
230
231
232
233
234
235
236
237
238
239
240
240
241
242
243
244
245
246
247