மூலக் கனல் - Moolak Kanal - தீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் - Deepam Naa. Parthasarathy Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com



25

     அப்போதிருந்த அவனுடைய ஆவலையும் பரபரப்பையும் தாமாகப் புரிந்து கொண்டு சர்மாவே சொன்னார்: “கொஞ்சம் பொறுத்துக்குங்கோ! உங்க மகன் ராஜாவுக்கு இன்னும் உங்க மேலே இருக்கிற ஆத்திரம் தணியலே... உங்களைப் பார்க்க வரமாட்டேன்னுட்டான். நானே கொஞ்சம் கொஞ்சமாப் பேசி அவன் மனசை மெல்ல மாத்தப் பார்க்கறேன்.”

     இதைக் கேட்டு, திருவுக்கு மிகவும் ஏமாற்றமாயிருந்தது. ஆனாலும் தன்னைச் சமாளித்துக் கொண்டு அவன் சர்மாவைக் கேட்டான்:

     “என்னைப் பார்க்கப் பிரியப்படாட்டி நாம வற்புறுத்த வேணாம். அது போகட்டும். ஆனால் ‘எழில்ராஜா’ ஏன் இப்போ முன்னே மாதிரிப் பத்திரிகைகளிலே அதிகம் எழுதறதில்லே? இவ்வளவு மாறுதல்கள் எல்லாம் நடந்திருக்கு. என்னிடமிருந்து தொழில் வளர்ச்சி இலாகா பறிக்கப்பட்டு நான் இலாகா இல்லாத மந்திரியாகியிருக்கேன். எனக்கு சலாம் போட்டுக்கிட்டிருந்த தாண்டவராயன் புது மந்திரிக்குப் போடப் போயிட்டாரு. நான் ஆஸ்பத்திரியிலே படுத்த படுக்கையா இப்படி விழுந்து கிடக்கறேன். இதைப் பத்தி ஒண்ணுமே எழுதாமே எப்படி அவனாலே பேனாவை வச்சுக்கிட்டுச் சும்மா இருக்க முடியுதுன்னு தான் எனக்குப் புரியலே?”

     இந்தக் கேள்வியை அவனிடமிருந்து எதிர்பார்த்திராத சர்மா திகைத்து ஓரிரு கணங்கள் பதில் சொல்லத் திணறிப் போனார். ஆனால் அடுத்த சில நொடிகளிலேயே சமாளித்துக் கொண்டு, “கடத்தல், கொலை மிரட்டல் எல்லாம் வந்துட்டதாலே கொஞ்ச நாளைக்கிப் பத்திரிகையிலேயே எதுவும் எழுதாமே இருக்கச் சொல்லி நண்பர்களே அவனுக்கு இப்ப அட்வைஸ் பண்ணியிருப்பாங்கன்னு தெரியுது” என்றார்.

     அவருடைய இந்தப் பதிலில் சற்றே பூசி மெழுகுவது போன்ற தொனி இருந்ததை உணர்ந்த திரு, “இது நீங்களாகச் சொல்ற சமாதானமா? அல்லது அவனே இப்படிச் சொன்னானா?” - என்று அவரை உடனே வினவினான். சர்மா மறுபடியும் சமாளித்துக் கொள்ளத் திணறினார்.

     “நீங்க சொல்ற மாதிரி எதுவும் எழுதாமல் சும்மா இருக்கிறது அவனுக்கும் பிடிக்கலைதான். ஆனால் நண்பர்களும் பத்திரிகை நிர்வாகமும் அவனை வற்புறுத்திக் கொஞ்ச நாளைக்கு எதுவும் எழுத வேண்டாம்னு சொல்லியிருக்காங்களாம்.”

     “என்னைப் பத்தி இன்னும் என்னென்னல்லாம் சொன்னான்?”

     சர்மா நேரடியாக மறுமொழி கூறாமல் பேச்சை மாற்ற முயன்றார். மகன் தன்னைப் பற்றிக் கடுங்கோபமும், ஆத்திரமும் உள்ளவனாயிருக்க வேண்டும், அதனால் தான் சர்மா பேச்சை மாற்றுகிறார் என்பதாகப் புரிந்து கொண்டு அவனும் அதை அவ்வளவில் விட்டு விட்டான். சர்மாவை மேலும் தூண்டித் துருவித் தொந்தரவு செய்ய வில்லை.

     “எப்பிடியோ போகட்டும்? அவன் நல்லா இருந்தாச் சரிதான்!” - என்று அந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தான் திரு.

     மேற்கொண்டு அங்கே தங்கினால் திரு மறுபடியும் எழில்ராஜாவைப் பற்றிய உரையாடலைத் தன்னிடம் தொடர்ந்து ஆரம்பித்து விடுவானோ என்ற பயத்தினால் சர்மா சொல்லி விடைபெற்றுப் பின் அங்கிருந்து வெளியே நழுவினார்.

     திருவுக்குக் கண்ணைக் கட்டி காட்டில் விட்ட மாதிரி இருந்தது. வாழ்வில் இதுவரை இத்தனை பெரிய தனிமையையும் தளர்ச்சியையும் அவன் உணர்ந்ததேயில்லை.

     தான் செய்த தவறுகளையும் செய்யப்போகிற தவறுகளையும் நியாயப்படுத்தி மக்களை நம்ப வைக்கப் போது மான துணிவு இருக்கிற வரையில்தான் ஒருவன் சரியான அரசியல்வாதி. ‘தவறுகள் செய்துவிட்டோமா?’ என்ற பயமும், பதற்றமும் குற்ற உணர்வும் என்றைக்கு முதன் முதலாக ஒர் அரசியல்வாதிக்கு ஏற்படுகிறதோ அன்றே அந்த வினாடி முதல் அவன் அரசியலுக்குத் தகுதியிழந்து ஆன்மீகவாதியாகத் தொடங்கி விட்டான் என்று பொருள் என்பதாகத் தானே பலரிடம் பலமுறை அரசியலுக்கு இலக்கணம் சொல்லியிருப்பதை இப்போது திரும்பவும் நினைவு கூர்ந்தான் திரு.

     தன்னுடைய அந்த இலக்கணப்படி இப்போது தானே ஆன்மீகவாதியாகத் தொடங்கி விட்டோமோ என்று திருவுக்குத் தோன்றியது. செய்த தவறுகளுக்கு உடனே வருந்தி நிற்கிற மனமும், மேலே செய்ய வேண்டிய தவறுகளைச் செய்யத் தயங்கி நிற்கிற குணமும் உள்ளவன் அர சியலில் நீடிக்க முடியாது என்பது திருவின் நீண்டகாலத் தத்துவமாயிருந்தது. ‘அரசியல்வாதி தோற்பதின் அடையாளங்களில் முதன்மையானது. கழிவிரக்கம்தான்?’ என்பதை உறுதியாக நம்பியவன் திரு. கட்சியின் அடிமட்டத்துத் தொண்டர்களிடமும், அமைப்புக்களிடமும் சரியான பிடிமானம் வைத்திருந்தான். ஏன் இன்று இப்படி ஆனோம் என்று சிந்தித்தபோது அவனுக்கே வியப்பாகத்தான் இருந்தது.

     தோல்வின் அடையாளமான கழிவிரக்க உணர்வு, தன்னிடம் எப்போது எந்தக் காரணத்தால் நோயாகப் பற்றியது என்பதை இப்போது அவனாலேயே கண்டு பிடிக்க முடியவில்லை. பாவ புண்ணிய உணர்வு, நல்லது கெட்டது பற்றிய தராதரங்கள் நியாய அநியாயம் பற்றிய வித் தியாசம் எல்லாம் யாரிடம் உண்டோ, அவன் சாமியாராக இருக்கலாமே ஒழிய அரசியல்வாதியாக இருக்க முடியாதுகூடாது என்று தீர்மானமாக நம்பியவர்களில் ஒருவனான திரு இன்று பாவ புண்ணியம், நல்லது கெட்டது, நியாய அநியாயம் எல்லாவற்றையும் பற்றித் தானே நினைப்பதைத் தவிர்க்க முடியவில்லை.

     மேல்நிலைப்பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் படிக்கிற இளைஞர்கள் சாராயப் புட்டியும் கையுமாக அலைந்தார்கள். ஒழுக்கமும், கட்டுப்பாடும் சமூகத்தின் எல்லா முனைகளிலும் உடைந்து சிதறிப்போயிருந்தன. கள்ளுக்கடை களிலும் சாராயக் கடைகளிலும், போலத் தியேட்டர்களிலும் கூட்டங்கள் பொங்கிவழிந்தன. ஆட்சி நடத்தப் பணம் தேவை என்று கள், சாராயக் கடைகளைத் திறந்து விட்ட ‘புண்ணியம்’ தங்களுடையது தான் என்பது திருவுக்கே நினைவு வந்தது. இதில் மூதறிஞரின் அறிவுரையைக் கூடத் தாங்கள் பொருட்படுத்தவில்லை என்பது ஞாபகம் வந்தது. பொருளாதாரப் பிரக்ஞையற்ற திட்டங்களால் அரசு வருமானம், திட்ட ஒதுக்கீடுகள் எல்லாம் தாறுமாறாகப் போன காரணத்தால் அரசு வருவாயைப் பெருக்க மது விலக்கை நீக்குவதாக மக்களிடம் சொல்லிக் கொள்ள முடிந்தது. மது விலக்கு அமுலிலிருந்த காலத்து அரசாங்கங். களில் இருந்த தொழில் வளர்ச்சி, மின்சாரத் திட்டங்கள் எதுவும் தங்கள் ஆட்சியில் இல்லை என்பதும் புரிந்தது. மதுவிலக்கு அமுலிலிருந்தால் கள்ளச் சாராயப் பேர்வழிகளாகவும் நீக்கப்பட்டால் கள், சாராயக் கடைகள் வைக்கவும் கட்சிக்காரர்களுக்குச் சலுகைகள் கிடைத்திருந்தன. தியேட்டர்கள் கட்டுவதற்குத் தாராளமாகக் கடன் ஊக்கம் எல்லாம் தரப்பட்டன.

     சாராயக் கடைகளையும், தியேட்டர்களையும் தவிர வேறு கனரகத் தொழில்களோ, மின்சார திட்டங்களோ தங்கள் ஆட்சியில் அரை அங்குலம் கூட முன்னேறவில்லை என்பது இப்போது திருவுக்கே புரிந்தது.

     ‘குரங்கு கைப் பூ மாலை போல் ஆட்சி அதிகாரங்கள் சீரழிந்து உருக்குலைந்து விட்டதாக எதிர்க்கட்சிகள் பல காலமாகக் குறைசொல்வது நிஜம்தானோ என்று இப்போது திருவுக்கே உறைக்க ஆரம்பித்திருந்தது. உழைப்பில் நம்பிக்கையும், கட்டுப்பாடும், தேச பக்தியும், ஒழுக்கமும் இல்லாமல் மேனா மினுக்கியாக ஓர் இளம் தலைமுறை உருவாவதற்குத் தன்னைப் போன்றவர்கள் மூல காரணமாயிருந்து விட்டோமோ என்று எண்ணியபோது திருவுக்கே உடல் பதறி நடுங்கியது. பயிர் செய்வதற்கான அருமையான நன்செய் நிலங்களில் வெறும் களைகளையே விதைத்து வளர்த்து அறுவடை செய்து கொண்டு தொடர்ந்து வீழலுக்கு நீர்ப்பாய்ச்சி மாய்கிறோமோ என்று அவனுக்கே பயமாயிருந்தது.

     எதிலும் மனத்தெளிவற்றுத் திரிகிற இந்த இளம் தலை முறையினரின் இடையே தான் தன்னுடைய மகன் தெளிவாகவும் திட்டமாகவும் உருவாகியிருக்கிறான் என்று. நினைக்கும் போது ஒரு விதத்தில் பெருமிதமாக. இருந்தது. அவன் தன்னுடைய முகாமில் தனது நிழலில் வளராமல் தன் மைத்துனனால் தனக்கு எதிரான முகாமில், வளர்க்கப்பட்டது தான் தன் மகனின் தெளிவுக்கும் துணிவுக்கும் காரணம் என்பதும் புரிந்தது.

     இந்த இளம் வயதில் எதிர்க்க வேண்டியவையும், எதிர்க்க வேண்டியவர்களும் யார், ஆதரிக்க வேண்டியவையும் ஆதரிக்க வேண்டியவர்களும் யார் என்பது பற்றி எல்லாம் தன் மகனுக்கு ஒரு தீர்மானம் இருப்பதே பெரிய விஷயங்களாகத் திருவுக்குத் தோன்றின.

     எந்தத் தீர்மானமும் இல்லாத விடலைத் தனமான இளம் தலைமுறையைத் தங்களைப் போன்றவர்கள் உருவாக்க முயன்றும் களைக்கு நடுவே தவறி முளைத்த பயிராகத் தன் மகனைப் போன்றவர்களும் இடையிடையே உருவாகியிருப்பது பெருமையளிப்பதாயிருந்தது.

     இந்தியை எதிர்ப்பதற்கு வெறியூட்டப் பட்ட இளம் தலைமுறை படிப்பதையே எதிர்க்கிற அளவு வெறியேறி நிற்பது புரிந்தது. ஐ.ஏ.எஸ். போன்ற அகில இந்தியத் தேர்வுகளில் தேர்வு பெறுகிறவர்களின் எண்ணிக்கை குன்றித் தமிழ்நாடு பதினைந்தாவது இடத்துக்குக் கீழிறங்கியது. தொழில் வளர்ச்சி முன்னேற்றத்தில் பல மாநிலங்களை விடப் பின்னுக்குப் போயிருந்தது. ஒரு மொழியின் மேல் வெறுப்புக் கொண்ட மாணவர்கள் எந்த மொழியையுமே சரியாகக் கற்கவில்லை. அவ்வப்போது, அரசியல் கட்சிகளால் கோபமூட்டப்பெற்றுப் பொதுச் சொத்துக்களான பஸ்கள், ரயில்கள் போஸ்டாபீஸ்களுக்குத் தீமூட்டி அழிக்கக் கற்றுக் கொண்டிருந்தார்கள். கல்லூரிகளும், கல்வி நிலையங்களும் நடைபெறாத நாட்களுக்காக மகிழ்ந்து - நடைபெறும் நாட்களுக்காக வருந்தினார்கள். பெண்கள் தெருவில் நடமாட முடியாதபடி அவர்களைச் சீண்டுவதற்குச் சினிமாவும் பத்திரிகைகளும் அவர்களுக்குப் பயிற்சியளித்திருந்தன. சாதியை ஒழிக்கும் அவர்களுடைய முயற்சியில் சாதி உணர்வு பலமாக விசுவருபம் எடுத்திருந்தது.

     திரு இவற்றை எல்லாம் பின்முகமாகத் திரும்பிப் பார்த்தான். சிந்தித்தான். பிரஷர் அதிகமாகி உடல் நிலை மேலும் கெட்டது. அன்று மாலை உதவியாளன் கன்னையா இரகசியமாக ஒரு பத்திரிகையைத் திருவிடம் கொண்டு வந்து கொடுத்தான். அது திருவின் இயக்கத்தைச் சார்ந்த - ஆனால் சமீப காலத்தில் திருவுக்கு எதிரிக ளாக மாறியிருந்த சிலரால் நடத்தப்படும் பத்திரிகை. ஏராளமான லஞ்ச ஊழல் புகார்களுக்கு ஆளான பின்பும், அதன் காரணமாக இலாகா பறிக்கப்பட்டு இலாகா இல்லாத அநாமதேய மந்திரி ஆனபின்பும் சாகக் கிடக்கிற அளவு உடல்நிலை மோசமான பின்பும், பதவியை விட மனமின்றி அவன் ஒட்டிக் கொண்டிருப்பதாக அவனைக் கடுமையாக விமர்சித்திருந்தது அந்தப் பத்திரிகை. தன்னைச் சேர்ந்தவர்களே இப்படித் தனக்கு எதிர்ப்பைக் கிளப்புவது அவனுள் எரிச்சலூட்டியது. ரோஷம் வேறு கிளர்ந்தது. தலைமாட்டில் படுக்கையருகே கிடந்த ஒரு லெட்டர் ஹெட்டை எடுத்து ஆத்திரத்தோடு கட்சி மேலிடத்துக்கும் அண்ணனுக்கும் தனித்தனியே உடன் இரு கடிதங்களை எழுதினான் திரு.

     “ஏற்கெனவே நான் கையெழுத்திட்ட வெள்ளைத் தாள் உங்களிடம் இருக்கிறது என்றாலும் அதிகப்படியான முன் ஜாக்கிரதையோடு இதை நான் எழுதுகிறேன். எனது உடல்நிலை மனநிலை காரணமாகக் கட்சியிலோ அமைச்சரவையிலோ எந்தப் பொறுப்பும் நான் வகிக்க இயலாதவனாக இருக்கிறேன். தயவு செய்து என் இராஜிநாமாவை உடன் ஏற்று என்னை விடுவிக்கவும்” -என்று கடிதங்களை எழுதி உறையிலிட்டு ஒட்டி உடனே கன்னையன் மூலம் உரியவர்களுக்குக் கொடுத்தனுப்பினான் திரு. அவனிடம் ஏற்பட்டிருந்த ‘மெட்டமார்பஸிஸ்’ - அதாவது அகப்புறக் கருத்து மாற்றம் அப்போது அவனை வேறு விதமாகச் செயல்பட விடவில்லை. கடிதங்கள் கிடைத்ததும் அண்ணனும் கட்சி மேலிடத்து ஆட்களும் தன்னை நேரில் சந்தித்துச் சமாதானப் படுத்துவதற்காக மருத்துவ மனைக்கே உடன் தேடி வருவார்கள் என்று எண்ணியிருந்தான் திரு.

     ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. அவனது பதவி விலகலை ஏற்றுக் கொண்டு விட்டதாகவும் அதுவரை ஒத்துழைத்தற்கு நன்றி என்றும் கட்சி மேலிடமும், அண்ணனும் கொடுத்த பதில் கடிதங்களோடு திரும்பி வந்தான் கன்னையா.

     இவ்வளவுக்கும் காரணம் எழில்ராஜாவின் காரசாரமான கட்டுரைகள் தான் என்பது புரிந்திருந்தும் இப்போது, அவன் மேல் திருவுக்கு ஆத்திரம் வரவில்லை. தன்னுடைய செல்வாக்கையும், புகழையும் தரைமட்டமாக்கிய எழில்ராஜாவை ஆள் ஏவி விட்டுக் கொலை செய்ய முயன்ற திரு வேறு, இந்தத் திரு வேறு. வாழ்க்கையில் தன்னைப் போல் ஒரு தலைமுறையையே தவறான பாதைகளில் வழி காட்டிச் சீரழிக்காமல் நேர்மையுள்ள துணிச்சல்காரனாகத் தனக்குத் தெரியாமல் தன் மகனாவது இன்று நல்லபடி வளர்ந்திருக்கிறானே என்று பெருமையாயிருந்தது அவனுக்கு.

     மறுநாள் காலைத் தினசரிகளில் திரு மந்திரி பதவியிலிருந்தும், கட்சியிலிருந்தும் ராஜிநாமாச் செய்துவிட்ட செய்தி பிரதானமாக வெளியிடப்பட்டிருந்தது. தொடர்ந்து இரண்டு மூன்று தினங்கள் பிரஷர் அதிகமாகி அவன் உடல் நிலை மிகவும் கெட்டுச் சீரழிந்தது.

     டாக்டர்கள் கன்னையனையும் சர்மாவையும் அழைத்து, “இந்தப் பரபரப்பான சூழ்நிலையிலிருந்து இதுவரை ஒரு மாறுதலாக வேறு எங்காவது அழைத்துப்போய் ஒய்வு கொள்ளச் செய்வது நல்லது” - என்றார்கள்.

     சர்மாவும் கன்னையனும் மெதுவாக இந்த யோசனையைத் திருவிடமே கூறி, அவன் அபிப்பிராயத்தைக் கேட்டார்கள். எழிலிருப்பிற்கே போகலாம் என்றான் அவன். வேறு புது இடமாக இருந்தால் நல்லதென்று அவர்கள் நினைத்தார்கள். அவனோ பிடிவாதமாக எழிலிருப்பிற்குத் தான் போக வேண்டும் என்றான். வேகமாகத் தொடங்கி, வேகமாக ஓடி ஒரு சுற்றுச் சுற்றி முடித்துவிட்ட இந்த நிலையில் தன் வாழ்க்கையை எந்தத் தேரடியின் மைதானத்திலிருந்து தொடங்கினோமோ அந்த இடத்தை அந்தப் பழைய நினைவுகளோடு ஒருமுறை போய்ப் பார்க்க வேண்டும் போலிருந்தது திருவுக்கு.

     எந்த மண்ணில் தளர்ந்து அடிபட்டு விழுந்திருந்த போது அந்த மண்ணின் ஜமீன்தாரைத் தனக்கு முன் கை கட்டி வணங்கி நிற்கச் செய்து பார்க்க வேண்டும் என்று அன்று சபதம் செய்தானோ அந்தச் சபதம் இன்று நிறைவேறி விட்டது. ஆனால் அந்தச் சபத நிறைவு தனக்குள் மகிழ்ச்சியை உண்டாக்காமல் துயரத்தையும், தோல்வியையும் உண்டாக்கியிருப்பதை அவனே உணர்ந்தான்.

     எல்லா ஆசைகளையும் நினைத்தபடி நிறைவேற்றி முடித்துக் கொண்ட பின்பும் உள்ளம் இன்னும் எதற்கோ குறைப்பட்டு நொந்து அழுதது. எதற்கோ தவித்தது. எதற்கோ ஏங்கியது. சர்மாவும், கன்னையனும் அவனுடைய பிடிவாதத்தை மறுக்க முடியாமல் எழிலிருப்பிற்கு அவனை அழைத்துச் செல்லும் பயணத்துக்கு ஏற்பாடு செய்தார்கள். விமானத்தில் செல்ல முடிந்த பக்கத்து நகரம் வரை விமானப்பயணம், அப்புறம் ஒரு ஏ.சி. காரில் எழிலி ருப்பிற்குப் பயணம் என்று ஏற்பாடாயிற்று. சர்மாவும், கன்னையனும் உடன் செல்வ தென்றும் முடிவாகியிருந்தது.

     புறப்படும் தினத்தன்று மறுபடி சர்மாவைக் கூப்பிட்டுத் தன் மகன் எழில்ராஜாவைத் தானே நேரில் சென்று சந்திக்க முடியுமா என்று ஆவலோடு விசாரித்தான் திரு. சாக்குப்போக்குச் சொல்லிச் சமாளிக்க முடியாது போகவே முயன்று பார்ப்பதாக அவனிடம் கூறிவிட்டு, சர்மா மீண்டும் வெளியே புறப்பட்டுப் போயிருந்தார்.






புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
151
152
153
154
155
156
157
158
159
160
161
162
163
164
165
166
167
168
169
170
171
172
173
174
175
176
177
178
179
180
181
182
183
184
185
186
187
188
189
190
191
192
193
194
195
196
197
198
199
200
201
202
203
204
205
206
207
208
209
210
211
212
213
214
215
216
217
218
219
220
221
222
223
224
225
226
227
228
229
230
231
232
233
234
235
236
237
238
239
240
240
241
242
243
244
245
246
247