![]() எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : அன்புக் கடல் - 21 |
9 சண்பகத்தின் துயரமோ வேதனையோ, திருமலையின் வளர்ச்சியைப் பாதிக்கவில்லை. அவள் தேய்ந்து துருப்பிடித்துக் கொண்டிருப்பதை உணரவோ, புரிந்து கொள்ளவோ நேரமின்றியே அவன் வளர்ந்து கொண்டிருந்தான். சண்பகத்தின் வசதிகள், பொருளாதாரத் தேவைகள் கவனித்துக் கொள்ளப்பட்டன. திருமலையிடமிருந்து வாழ்க்கை மட்டும் கிடைக்கவில்லையே ஒழியப் பணமும் வசதிகளும் அவளுக்குக் கிடைத்தன. மேடை நாடகங்கள் மூலம் கொள்கைகளையும் இலட்சியங்களையும் பரப்பவேண்டுமென்ற முனைப்பு அவனது இயக்கத்தில் அதிகமாயிற்று. விதவை மறுமணம், இந்தி எதிர்ப்பு, சநாதன எதிர்ப்புக் கொள்கைகளை உள்ளடக்கி ‘வேரிற் பழுத்த பலா’ - என்ற நாடகத்தைத் திருமலை எழுதி அரங்கேற்றினான். அதில் எதுகை மோனை நயத் தோடு அவன் எழுதியிருந்த வசனங்கள் காட்சிக்குக் காட்சி கைத்தட்டலைப் பெற்றன. அவனே அதில் முக்கியப் பாகமேற்று நடிக்கவும் செய்தான். முதன்முதலாக அவனுக்குப் பழக்கமான அந்த அழகிய பெண்ணும் அதில் நடித்தாள். ‘செந்தமிழ்ச் சிட்டுகள் சீர்திருத்த பனுவல் பாடும் வைத்தமிழ் நந்தவனம் - நமக்கோர் சொந்தவனம்’ - என்பதுபோல் அவன் அதற்கு எழுதியிருந்த வசனங்கள் மக்களைப் பெரிதும் கவர்ந்தன. “செந்தமிழ்ப் பூஞ்சிட்டுக்களே நீங்கள் திராவிடப் பூங்காவில் வந்தாடுவீர்! தென்னவர் எதிரியைப் பந்தாடுவீர்!” என்பதுபோல் அவன் எழுதியிருந்த பாடல் ஒன்று மிகவும் புகழ் பெற்று விட்டது. மேடைக்கு மேடை அதைப்பாட ஆரம்பித்து விட்டார்கள். ‘நமது இயக்க வீரர் திருமலை எழுதிய ‘செந்தமிழ்ப் பூஞ்சிட்டுக்களே’ என்ற பாடல் மிக அருமையாக, செழுமையாக, எளிமையாக - வலிமையாக - இயக்க உணர்வுகளை எடுத்தியம்புவதாய் அமைந்து விட்டது. அப்பாடல் தலை சிறந்தது - கலை சிறந்தது - நிலையுயர்ந்தது. திரு விடமெங்கும் ஒரு இடமும் விடாமல் ஒலிக்க வேண்டிய பாடல் அது என்பதை நீ உணர்ந்திட வேண்டும் தம்பீ’ - என்பதாக நூறாவது நாடகத்துக்குத் தலைமை வகித்து அது திருச்சி தேவர் மன்றத்தில் நடந்த போது அவன் பேரறிஞர் பெருந்தகையாய்க் கருதிய அண்ணனே புகழ்ந்த பின் அவனுடைய மதிப்பு மேலும் அதிகமாகிவிட்டது. அதை ரெக்கார்டு ஆகப் பதிவு செய்து இயக்கக் கூட்டங்களில் எல்லாம் ஒலிபரப்பினார்கள். அண்ணனின் அபிமானத்துக்குரிய பாடல் என்பதால் அது பெரும் புகழ் பெற்றது. பெரும் பொருள் ஈட்டியது. இயக்க உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வசனங்களும், பாடல்களும், நாடகங்களிலும், மேடைகளிலும், திரைப்படங்களிலும் அமோக வெற்றியைப் பெற்றுக் கொண்டிருந்த காலம் அது. தங்கள் இயக்கப் போராட்டங்களில் அவன் முன்னணியில் நின்றான் - ‘லால்சந்த் நகர்’ என்ற பெயரைப் ‘புளிய மரத்துப்பட்டி’ என்ற அதன் பழைய நிலைக்கு மாற்றுவதற்காக அந்த நிலையத்தில் ரயிலுக்கு முன் மறியல் செய்து தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த முன்னணி வீரர்களுள் அவனும் ஒருவனாயிருந்தான். என்றாலும் தனக்கு முறையான படிப்பில்லை என்பதை உணரும்போதும், உணர்த்தப்படும்போதும் அதை உணர்த்தியவர்கள் மீது அவன் படமெடுத்து ஆடி விஷம் கக்குவதற்குத் தயங்கியதில்லை. உள்ளுர்த் திருக்குறள் கழகத்தில் ஒரு முறை அவனைப் பேசக்கூப்பிட்டு அவன், “திருக்குறளின் நாலாயிரம் பாடல்களிலும் தமிழ்ப் பண்பாடு தகத்தகாயமாய் மின்னிடுதல் கண்டு பெருமிதப்படுகிறோம் நாம். தமிழினத்தின் வெற்றி இது” - என்று இடி குரலில் முழங்கிய போது, கூட்டத்திலிருந்து ஒரு குரல் இடைமறித்தது. அள்ளி முடித்த கட்டுக்குடுமியும் பட்டை பட்டையாய் விபூதிப் பூச்சுமாயிருந்த ஒரு நடுத்தர வயது மனிதர், “திருக்குறளை ஒருதரம் புரட்டிப் பார்த்து விட்டாவது பேச வரக் கூடாதா அப்பா” என்று கேட்டு விடக் கூட்டமே கொல்லென்று சிரித்து விட்டது. திருக்குறளில் இருப்பதே மொத்தம் ஆயிரத்து முந்நூற்று முப்பது குறள் தான் என்ற விவரம் அன்று வரை அவனுக்குத் தெரியாது. இந்த மாதிரி தர்ம சங்கடமான நிலைமைகளைத் தவிர்க்க எண்ணி யாரிடமாவது கொஞ்சம் முறையாகத் தமிழ்படிக்க எண்ணினான் அவன். யாரிடம் தமிழ் படிக்கலாம் என்று யோசித்த போது எழிலிருப்பு நகரின் தமிழ்ப் புலவர்கள் ஒவ்வொருவராக அவனது நினைவுக்கு வந்தனர். 1. உள்பட்டணம் சித்தாந்த ரத்நாகரம் சிவவடிவேல் உடையார், 2. அஷ்டாவதானம் அரியநாயகத் தேவர், 3. புலவர்-பண்டித வித்வான்-வேணுகோபாலசர்மா. இந்த மூவரில் சிவவடிவேல் உடையார் திருமலையின் பேரைக் கேட்டாலே சிவசிவ என்று காதைப் பொத்திக் கொள்வார். தேவருக்கும் அவனுக்கும் ஒத்து வராது. ஒய்வு பெற்ற டிஸ்ட்ரிக் போர்டு தமிழாசிரியரான சர்மாவிடம் கற்கலாம் என்றால் கொஞ்சம் தயக்கமாயிருந்தது. பாமர மக்கள் தன்னையே பெரும் புலவர் என்று நினைத்துக் கரகோஷ்ம் செய்கிற அளவு புகழுள்ள தான் போய் ஊர் பேர் தெரியாத சர்மாவிடம் தேடித் தமிழ் கற்பதா என்று கூச்சமாகக் கூட இருந்தது. ஆனால் சர்மா பயந்த சுபாவமுள்ளவர். வரச் சொல்லிக் கூப்பிட்டனுப்பினால் கூட வந்து விடுவார். வறுமையில் சிரமப்படுகிறவர், கொஞ்சம் பண உதவி செய்தால் கூட அதிகம் இழுத்த, இழுப்புக்கு வருவார். தேடிப் போய்க் கற்க அவசியமில்லாமலே வந்து சொல்லிக் கொடுத்து விட்டுக் கொடுத்த பணத்தை மரியாதையாக வாங்கிப் போவார். பணிவாகவும் இங்கிதமாகவும் நடந்து கொள்வார். உள்பட்டண விரோதியான அவனுக்கு உடையார் சொல்லிக் கொடுக்க மாட்டார். தேடி வந்து கும்பிட்டுக் காலில் விழுந்தாலொழியத் தேவர் அவனைப் பொருட் படுத்தவே மாட்டார். சுயமரியாதைக்கு இழுக்கு இல்லாமல் சர்மாவிடம் தான் கற்க முடியுமென்று திருமலைக்குத் தோன்றியது. ஓர் ஆளிடம் சொல்லிச் சர்மாவைக் கூப்பிட்டனுப்பினான். சர்மா உடனே ஓடோடி வந்தார். “என்ன கூப்பிட்டனுப்பிச்சேளாமே?” “ஆமா... இருங்க... பேசலாம்...” “உங்களுக்கு இப்ப வேலை ஜாஸ்தின்னா அப்புறமா வேணா வந்து பார்க்கறேனே? நிறையப்பேர் தலைவரைப் பார்க்கணும்னு இங்கே வெளியிலே காத்திண்டிருக்காளே...?” “உங்ககிட்டக் கொஞ்சம் தனியாப் பேசணும்... எல்லாரையும் இன்னொரு நாள் வரச்சொல்லி அனுப்பிடறேன்.” “உங்க இஷ்டம்.” திருமலை ஒரு தொண்டனைக் கூப்பிட்டு, “இந்தா, அந்த ஆளுங்களை எல்லாம் இன்னொரு நாள் வரச் சொல்லித் திருப்பி அனுப்பு. உள்ளார யாரையும் விட்டுறாதே... நான் இவருகிட்டத் தனியாகக் கொஞ்சம் பேசணும்.” “சரிங்க...” அவன் போனதும் கதவை உட்புறமாகத் தாழிட்டுக் கொண்டபின் திருமலை அவரிடம் தயங்கித் தயங்கித் தன் விருப்பத்தைத் தெரிவித்தான். கேட்டு விட்டு சர்மா சிரித்தார். “ஏன் சிரிக்கிறீங்க சாமி?” “தயவு செய்து என்னைச் சாமீன்னு கூப்பிடாதீங்கோ! எனக்கு அது பிடிக்காது! சார்னாலே போதும், சார் பிடிக்கலேன்னா ஐயான்னு சொல்லுங்க. இதெல்லாம் உங்களுக்கு அவசியமான்னு நினைச்சேன். சிரிப்பு வந்துடுத்து. நீங்கதான் தமிழ்லே சரமாரியா மேடையிலே பேசறேளே, இன்னும் என்ன கத்துக்கணும்?” “முறையா இலக்கண இலக்கியமெல்லாம் தெரியணும்.” “அதுக்குவேண்டிய பொறுமையும் அவகாசமும் உங்களுக்கு இருக்கா?” “இருக்கோ இல்லியோ... உண்டாக்கிட்டே தீரணும்! நான் ஊர்லே இருக்கறப்பல்லாம் ஆளனுப்பறேன். ஒரு நடை வந்திட்டுப் போயிடுங்க... மாசம் அம்பது ரூபா குடுத்திடறேன். ஆனா ஒரே ஒரு கண்டிஷன்...” “என்ன கண்டிஷன்...?” “நான் உங்ககிட்ட ட்யூஷன் படிக்கிறேன்னு யார் கிட்டவும் மூச்சு விடப்படாது...” “...” “வேணும்னா நட்பு முறையிலே நானும் திருவும் அடிக்கடி சந்திச்சுப் பேசறதுண்டுன்னு சொல்லிக்குங்க. எனக்கு அதிலே ஆட்சேபனை இல்லே. தலைவர் திரு சர்மாகிட்ட ட்யூஷன் படிக்கிறாராம்னு எனக்குக் கெட்ட பேராயிடப்படாது.” ‘இதுல கெட்ட பேருக்கு என்ன இருக்கு’ - என்று கேட்க நினைத்துக் கேட்காமலே அடக்கிக் கொண்டார் சர்மா. இன்றைய நிலையில் மாதம் ஐம்பது ரூபாய் என்பது அவருக்குப் பெரிய வரவு. அந்த வரவை இழக்க விரும்பாமல் சம்மதித்தார் அவர். படிக்க ஆசை. அதே சமயம் இன்னாரிடம் படிக்கிறோம் என்பது வெளியே தெரியக்கூடாது என்று ஒரு கூச்சம். அவன் சரியான அரசியல் வாதியாக நடந்து கொண்டான். மாதத்தில் நாலைந்து நாள் தான் அந்த ட்யூஷன் சாத்தியமாயிற்று. மற்ற நாட்களில் திருமலைக்கு நேரம் கிடைக்கவில்லை. செந்தமிழ் நாவலர் என்று மக்கள் தனக்குச்சிறப்புப் பட்டம் கொடுத்துத் தன்னைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் போது, தான் ஓர் ஒய்வு பெற்ற தமிழ் வாத்தியாரிடம் படிக்கிறோம் என்பது வெளியே சிறிதும் தெரிந்து பரவி விடக்கூடாது என்பதில் அவன் மிகவும் விழிப்பாகவும் எச்சரிக்கையாகவும் இருந்தான். அதற்காக அதிகக் கவனம் எடுத்துக் கொண்டான். யாப்பிலக்கணம் படிக்கையில் “அகர முதல் எழுத்து எல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு” - என்று குறளை அவன் கைப்பட எழுதி அசை, சீர், தளை பிரித்துக் காட்டச் சொல்லி அவனுக்கு ஒரு ஹோம் ஒர்க் கொடுத்திருந்தார் சர்மா, “அகற முதள எளுத்தெள்ளாம் ஆதி பகவண் முதற்றே உளகு” என்று திருமலை பதிலுக்கு எழுதியிருந்த இலட்சனத்தைப் பார்த்துச் சர்மாவுக்கு பகீரென்றது. தமிழில் இவ்வளவு எழுத்துப் பிழையோடு எழுதுகிற ஒருவனை மக்கள் ‘செந்தமிழ் நாவலர்’ என்று அழைக்கத் துணியும் அளவிற்குப் பாமரர்களாகவும் ஒன்றை உணர்ச்சிப் பூர்வமாக மட்டுமே கண்ணை மூடிக் கொண்டு அளந்து முடிவு செய்கிறவர்களாகவும் இருந்தது சர்மாவுக்கு வியப்பை அளித்தது. அன்றிலிருந்து திருமலையை நிறைய எழுதச் செய்து திருத்திக் கொடுக்கத் தொடங்கினார் அவர். சர்மாவின் அடக்கமும் தனக்குச் சொல்லிக் கொடுப்பதை இரகசியமாக வைத்திருக்கும் குணமும் திருமலையைக் கவர்ந்தால் அவரது டியூஷன் மாதச் சம்பளத்தை எழுபத்தைந்து ரூபாயாக உயர்த்தினான் அவன். அவரை அவனுக்கு மிகவும் பிடித்துப் போயிற்று. அந்த ஆண்டின் இறுதியில் திருமலையின் இரண்டாவது கொள்கைப் பரப்பு நாடகமாகிய ‘திராவிட முழக்கம்’ அரங்கேறிச் சக்கைப் போடு போட்டது. முதல் நாடகமாகிய ‘வேரிற் பழுத்த பலா’வை விட, இதற்கு அதிக வரவேற்பு இருந்தது. இந்தப் புதிய புகழ் வேறொரு பளபளப்பான மாறுதலுக்கு அவனை விரைந்து இட்டுச் சென்றது. |