உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay/UPI ID: gowthamweb@indianbank |
4 வாயு எங்கேயானும் ஒளிந்து விட்டானோ, அண்டமே அசைவற்று விட்டதோ என்று தோன்றும்படி அந்த இரவு அத்தனை புழுக்கமானதாக இருந்தது. மனப்புழுக்கத்திலும் வேறு வெதும்பும் ஆத்மாக்களுக்கு அந்த இரவில் தூக்கம் எப்படி வரும்? மனசை ஆட்டி அலைக்கழிக்கும் எண்ணங்களுடன் இரவின் தனிமையிலே புழுங்க வேண்டியதுதானே? வாசல் வராந்தாவில் ரங்கநாதம் இருந்த அறை வாசல்படிக்கு நேராகத் தலைவைத்துப் படுத்திருந்தாள் செல்லம். உள்ளே ரங்கநாதத்தின் கைவிசிறி ஆடும் ஒலி இரவின் நிசப்தத்தில் ‘டொக்,டொக்’கென்று கேட்டுக் கொண்டிருந்தது. காற்றில்லாத வெப்ப இரவுகளிலே கொசுவுக்கும் கொண்டாட்டம்தான். ‘ஙொய் ஙொய்’யென்று செல்லத்தின் காதுகளைச் சுற்றிச் சங்கீதம் பாடிய அந்த கோஷ்டி அவளைப் போருக்கு அழைத்தது. “கொசு என்னமாய்ப் பிடுங்குகிறது; இலை அசங்காதோ?” என்று முணுமுணுத்துக் கொண்டே செல்லம் திரும்பிப் படுத்தாள். கண்களை மூடிக் கொண்டு தூங்க முயன்றாள். ஆனால் கண்களை மூடிக் கொண்டால் மனம் ஓய்ந்து விடுகிறதா என்ன? சுற்றிச் சுழன்ற பல்வேறு சிந்தனைகள் அவளைத் தூங்க விடவில்லை. தாய்மையில் விளையும் அன்புக்கு வைரம் பாய்ந்த மரத்தின் உறுதி உண்டு. அதிலும் செல்லத்தின் பெண்ணுள்ளம் ஏற்கெனவே குத்திக் காயப்படுத்தப்பட்டது. எனவே அதில் பூத்திருந்த தாய்மைக்கு அளவிட இயலாத வேகம் இருந்தது. தன்னுடைய ஆசைகளை எல்லாம் திரட்டி அவள் மூத்த மகன் பாலுவின் மீது வைத்திருந்தாள். அவளுடைய கனவுகள் எல்லாம் அவனுடைய எதிர்காலத் திட்டங்களை உருவாக்குவதிலேயேதான் நிறைந்திருந்தன. அதனால் கங்காதரம் கைவிட்ட பின்னரும் அவள் அவனைப் படிக்கவைக்கும் யோசனையைக் கைவிடவில்லை. பதிலாக, கிளறிவிட்ட மண்ணில் செழித்து வளரும் செடியைப் போல ரோசத்துடன் எழுந்தது வேகம். கணபதி வந்து சென்ற விஷயம் தெரிந்ததிலிருந்து அவளுடைய நம்பிக்கை இன்னும் புதிய கோணத்திலேயும் முளைவிட்டது. ‘அவர்கள் முகத்தில் அடித்த மாதிரி, எந்தக் காரியத்துக்கு அவர்கள் கைகொடுக்க மறுக்கிறார்களோ, அதே காரியத்தைச் சிறப்புடன் அவர்களுடைய கண் முன்னரேயே நிறைவேற்றாத வரையில் அவளுடைய மனசு ஆறுமா? ரங்கநாதமாகப் பெருமையும் சந்தோஷமும் தாங்காது கணபதி வந்து சென்ற விஷயத்தைப் பற்றித் தன்னிடம் யோசனை கேட்பார் என்று அவள் எதிர்பார்த்திருந்தாள். ஆனால் அவராகவே முடிவு கூறிவிட்டு, அவளிடம் அதைப் பற்றிய பேச்சைக் கூட எடுக்கவில்லை! அப்படியே விட்டு விடும் பொறுமை ஏது அவளுக்கு? அலுப்புடன் ரங்கநாதம் கைவிசிறியைக் கீழே போட்டார். தன்னை மீறிச் செல்லம் மனசில் குடைந்து கொண்டிருந்த கேள்வியைக் கேட்டு விட்டாள். “ஆமாம், அவருக்கு ஏன் அப்படிப் பிடி கொடுக்காமல் விட்டு விட்டீர்கள்? அவனுக்குப் படிக்க வேண்டும் என்ற ஆசை அடங்காமல் இருக்கிறது. பெண் சிறு வயசு தானாமே?...” அந்தப் பேச்சைக் கேட்ட உடனேயே அவர் பதிலை எட்டிக்காயைக் கடித்துத் துப்புவதைப் போல் துப்பினார். “சே, அசடு. நான் பட்டது போதும். இப்போதே படிக்க வைக்க ஏற்றுக் கொள்கிறேன் என்றால் என்ன அர்த்தம் தெரியுமா உனக்கு?” “என்ன அர்த்தமாம்?” “மகனை நாம் உயிருடன் இழந்து விட வேண்டும் என்று அர்த்தம்!” “கன்னா பின்னாவென்று பேசாதீர்கள்! பாலு ஒன்றும் அப்படிப் பெற்றவரை மறந்து விட மாட்டான்!” “உனக்குத் தெரியாது செல்லம்; அவன் மறந்து விடுவானென்று நான் சொல்லவில்லை. ஆனால் வேறு வழியிருக்காது. சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தவிப்பான். மாட்டை விலைக்கு வாங்கி நன்றாகக் கறக்க வேண்டுமென்று தீனியும் போடுகிறோம். அது பால் கொடுக்கும் பருவம் வந்ததும் அது வளர்ந்த முந்தைய இடத்துக்கு ஓட்டிவிடுவோமா? சொல்லு, மனம் வருமா?” இந்த உபமானத்தை அவள் கொஞ்சமும் ஒப்பவில்லை. “ஆமாம், உங்களுக்கு அவன் முன்னுக்கு வருவதில் இஷ்டமில்லை. மாடு வாங்குவதும் மருமகனைப் படிக்க வைப்பதும் ஒன்றாகி விடுமாக்கும்!” என்றாள் குரோதத்துடன். “வீணாக உன் மனசையும் அலட்டிக் கொண்டு என்னையும் வருத்தாதே. அவனுக்கு இனிமேல் படிக்க வசதி கிடையாது. என்னுடைய சக்தி அவ்வளவுதான். நான் பட்டது போதாதா? குழந்தைப் பையன் அவன், கல்யாணமாம், கல்யாணம்! ஒரு பெண், பிறந்து வீட்டுச் செல்வாக்கு, ஒரு வேளையில் அவள் என்னை மதித்துப் பேசினாளா? பட்டினி கிடந்தாலும் தன் மதிப்பையும் சுயமரியாதையையும் இழக்காமல் இருப்பது, அவற்றை இழந்து விட்டுக் காரில் பவனி போய் ஆயிரமாயிரமாய்ச் சம்பாதிப்பதை விட மேல். இப்போது கெஞ்சுகிறானே, இந்த மனிதன் நாளைக்குக் கல்யாணம் ஆனபின் உன்னையும் என்னையும் மதிப்பான் என்று நீ நினைக்கிறாயா? உன்னை அவர்கள் வீட்டு வேலைக்காரியையும் விடக் கேவலமாக மதிப்பார்கள்!” என்றார் அவர் காரமாக. தன்னுடைய அனுபவத்தில் மூழ்கி அவர் கண்டு தந்த இந்தச் சொற்களும் செல்லத்துக்கு உறைப்பதாக இல்லை. “மதிக்காவிட்டால் போகிறார்கள். குழந்தை முன்னுக்கு வருவானோ இல்லையோ?” என்று கேட்டது, தாய்மையின் பரிதாபம் நிறைந்த அந்தக் குரல். ரங்கநாதத்துக்கு ஆச்சரியமாக இருந்தது. “செல்லம், நீ அறிந்துதான் பேசுகிறாயா? இங்கேயே அவமானம், அலட்சியம் பொறுக்கவில்லை என்கிறாய். இதைக் காட்டிலும் கௌரவமான, நேருக்கு நேர் சமமான ஸ்தானத்தில் இருக்கும் போது அவமரியாதைகளைப் பற்றி லட்சியம் இல்லை என்று பேசுகிறாயே? பட்டினி கிடந்தாலும் பொறியில் உள்ள தீனிக்கு எந்தப் பிராணியும் ஆசைப்படாது” என்றார் அவர் மீண்டும். “ஆமாம், உங்களுக்குப் பேசத் தெரிகிறது, பேசுகிறீர்கள். உங்கள் மகள் சீரும் செல்வமுமாகக் கொழிக்கிறாள். உங்களுடைய காரியம் நிறைவேறி விட்டது. என்னுடைய குழந்தைகள் எப்படிப் போனால் உங்களுக்கென்ன?” என்று கண்ணீராகிய புகையைக் கக்கிக் கொண்டு ‘உன், என்’ என்று பேதமான வார்த்தைக் குண்டுகள் அவளுடைய நெஞ்சத்திலிருந்து வெடித்தன. திடீரென்று வான் நிலை மாறியது. காற்று ‘உஸ்’ என்ற சத்தத்துடன் மரங்களின் கிளைகளைச் சுழற்றி வீசச் செய்து செத்தைகளையும், புழுதியையும் கிளப்பி வான மண்டலத்தை மறைக்கச் செய்தது. அடிவானிலிருந்து கண்களைப் பறிக்கும் ஒளியுடன் மேலே எழும்பி மின்னி விட்டு ஒரு கணத்தில் மறைந்தாள் மின்னல்கொடி. தொடர்ந்து அவளுடைய காதலன் பயங்கரமாக முழங்கி முரசம் கொட்டினான். சடபடவென்று பனிக்கட்டிகள் விழப் பெருமழை பெய்தது. மறுநாள் காலை. கங்காதரம் அன்று மாலை மதுரை செல்ல இருந்தார். இதை அறிந்திருந்த ரங்கநாதம் முன்னதாகவே தாம் புறப்படப் போவதாக கங்காதரத்திடம் தெரிவித்தார். ‘சரி’ என்று உடனே சொல்லிவிட்டால் அது மரியாதையாகுமா? “இருக்கட்டுமே மாமா? நீங்கள் எங்குமே வராதவர்கள். ஒரு மாசம் இருந்து விட்டுப் போகலாமே? இப்போது போனால் எப்போது வரப்போகிறீர்கள்?” என்றார் கங்காதரம். மருமகன் சொன்னதற்காக உடனே ஒரு மாசம் தங்கி விட உத்தேசித்து விடலாமா? ரங்கநாதமும் தன் பெருந்தன்மையைக் குறைத்துக் கொள்ள விரும்பவில்லை. இளைய மகள் ஜானகியை ஊரில் தனியே விட்டு வந்திருப்பதைக் காரணமாக எடுத்துக் காட்டியும், மூர்த்தியும் விமலாவும் கோவையில் அவசியம் இறங்கித் தங்கிப் போக வேண்டும் என்று வற்புறுத்தி இருப்பதை எடுத்துக் கூறியும், அன்றே புறப்படுவதாக முடிவு கூறிவிட்டார். “பாலுவுக்கும் கூட இப்போது அவசரமா? அவன் கொஞ்ச நாட்கள் தங்கக்கூடாதா? ரவியும் ஒத்தவனாக இருக்கிறான்...” என்று அருகில் நின்ற பாலுவைப் பார்த்துக் கேட்டார் கங்காதரம். “இல்லை அத்தான், எனக்கும் போகத்தான் வேண்டும், ஊரில் கொஞ்சம் வேலை இருக்கிறது...” என்று அவனும் இழுத்தான். வேலை என்பது வெறும் சாக்கு, அங்கு தங்க அவனுக்கு இஷ்டமில்லை என்பது கஞ்காதரத்துக்கு நன்றாகத் தெரியும். அதே போல அவரும் அத்தியந்த அன்புடனோ, ஆசையுடனோ தன்னை இருந்துவிட்டுப் போகும்படி வற்புறுத்தவில்லை, வெறும் உபசாரத்துக்குத்தான் சொல்லுகிறார் என்பது பாலுவுக்கும் தெரியாமலில்லை. மரியாதை, அன்பு என்பதெல்லாம் இந்நாட்களில் வாய்ச் சொல்லளவிலும், அலுங்காத உடுப்பளவிலும், போலி நடிப்பளவிலும் தானே ஓங்கி வருகின்றன? முதல்நாளிரவு அத்தனை மழை பெய்திருந்தும் வெயில் சுரீரென்று மண்டையைத் தாக்கியது. பஸ் நிலையத்தில் கங்காதரம் நின்று கொண்டிருந்தார். ரங்கநாதம் சௌகரியமாக ஏறி உட்கார்ந்து விட்டார். பின் வரிசை ஆசனமொன்றில் அமர்ந்திருந்த செல்லம் பக்கத்தில் தெரிந்த ரயில் வண்டி நிலையத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். பார்வைக்கு அவளுடைய வயசுக்கு அவள் அதிகம் முதுமை அடைந்து விட்டாற் போலத் தோன்றியது. ஏழைமையும் கவலையும் துயரமும் அவளுடைய செந்தாழை மடலை ஒத்த மேனியிலும் முகத்திலும் சதைப்பற்றை உறிஞ்சிச் சுருக்கங்களை இட்டிருந்தன. ‘பளிச்’சென்று நெற்றியிலே ஒளிர்ந்த குங்குமம் ஒன்றே அவளுடைய ஆபரணங்கள் இல்லாத குறையை ஈடு செய்து கொண்டிருந்தது. கங்காதரத்தின் சிந்தனைக் கொடி அவளைப் பற்றியே ஓடிக் கொண்டிருக்கையில் பஸ் கிளம்புவதற்கு அடையாளமாக உறுமியது. “போய்க் கடிதம் போடுங்கள், ஊருக்குப் போனதும் என்ன செய்யப் போகிறாய் என்பதை விவரமாக எழுது பாலு!” என்று அப்போது தான் நினைவில் வந்தது போல அவர் உரத்துக் கூறினார். அவர் பேச்சுக்கு ரங்கநாதம் தலையை ஆட்டுகையிலேயே பஸ் நகர்ந்து விட்டது. அவர்கள் போய் விட்டார்கள். மழை பெய்து அடங்கிய பின்னும் ஏன் வெப்பம் தணியவில்லை? கங்காதரம் ஆறாத மனசுடன் தான் வீடு திரும்பினார். |