உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay/UPI ID: gowthamweb@indianbank |
7 தூளியில் குழந்தையை விட்டு ஆட்டிக் கொண்டிருந்தாள் விமலா. மூர்த்தியும் பாலுவும் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள். அன்று ஞாயிற்றுக்கிழமை. “டேய் பாலு! ஒரு வாரத்து அழுக்கு மூலையில் சுருட்டி எறிந்து இருக்கிறாய். கிணற்றடியில் இப்போது ஆட்கள் இருக்க மாட்டார்கள். வண்ணானுக்குப் போட வேண்டியதைப் பொறுக்கி வைத்துவிட்டு மீதித் துணிகளை அழகாய்த் துவைத்துப் போடு. நாளைக்குக் காலேஜுக்குப் புறப்படும்போது கைக்குட்டை இருக்கிறதா, சட்டை இருக்கிறதா என்று கேட்க வேண்டாம், உன் அத்தானைப் போல!” என்று விமலா உள்ளிருந்தபடியே ஒரு போடு போட்டாள். “சபாஷ்! பார்த்தாயா பாலு? ஒருவரைக் கொட்டி இன்னொருவருக்கு நெறி ஏறும்படி செய்யும் இந்தப் பேச்சை? இந்த மாதிரி பேச நமக்கெல்லாம் வருகிறதா? போனால் போகிறது. வயசுப்பிள்ளையாக லட்சணமாக நீ இப்போது எழுந்து உன் வேலையைக் கவனிக்கப் போ. என்னைப் போல் சோம்பேறிப் பட்டம் வாங்கிக் கொள்ளாமல் நீ ‘அவளி’டம் நாளைக்குப் புத்தியுடன் பிழைக்க வேண்டும். நானும் இப்படிக் கொஞ்சம் படுத்து ஒரு குட்டித் தூக்கம் போடுவதற்குள்...” என்று அவன் முடிக்கு முன் விமலா மீண்டும் உள்ளிருந்தபடியே குறுக்கிட்டாள். “எண்ணெயைத் தேய்த்துக் குளித்து விட்டு இப்போது தூங்க வேண்டாம்! இதோ இந்தப் பாத்திர ‘ஷெல்பை’ ஒழித்துத் துடைத்து வைத்திருக்கிறேன். பாலுவின் புத்தகங்கள் கண்டபடி அந்த மேசையில் இறைந்து கிடக்கின்றன. ஆணி அடித்து இதை மாட்டிக் கொடுங்கள். அவன் புத்தகங்களை இதில் அடுக்கிக் கொள்ளட்டும்” என்று உத்தரவு விடுத்தாள். “அப்பாடா” என்று இழுத்துக் கொண்டே மூர்த்தி எழுந்தான். “விமலா, நீ ஒரு காரியாலயத்தின் பொறுப்பு வாய்ந்த ஆபீசராக இருக்கத் தகுதி பெற்றவள். பாவம், இந்த அடுப்பங்கரையில் கிடந்து உழலுகிறாய். ஹும்! என்ன செய்கிறது. உலகமே இந்த நாட்களில் தலைகீழாகத் தானே நடக்கிறது? உனக்கு இருக்கும் கறாரும், கண்டிப்பும், நிர்வாகத் திறமையும், ஒழுங்கும் சர்க்கார் காரியாலயங்களில் வேலை செய்யும் எல்லோருக்கும் மட்டும் இருந்து விட்டால், அடா அடா அடா... லஞ்சம், வஞ்சம், ஊழல், சிவப்பு நாடா எல்லாம் பறந்து போய்...” என்று அவன் ரசனையுடன் நீட்டிக் கொண்டு போனான். “போதுமே பரிகாசம்! பேசிப் பேசி ஒன்றுமே ஆவதில்லை!” என்று அவள் மறுபடியும் கடுகடுக்கவே, “எஸ் மேடம்! இனி செயலில் தான், பேச்சிலில்லை!” என்று மூர்த்தி எழுந்தான். பாலுவும் சலிப்புடன் சீட்டுகளைக் கூட்டுக்குள் போட்டுவிட்டு எழுந்து மூலையில் கிடக்கும் அழுக்குத் துணிகளைப் பரிசீலனை செய்யலானான். அந்த ராமு எந்த வேளையில் தான் ‘கஷ்டப்படுவாய்’ என்று சாபமிட்டானோ! இந்த நிலைமையை அவன் அன்றே நினைக்காததுதான் எத்தனை முட்டாள்தனமானது?... உண்மையாகவே, தமக்கையின் இரண்டு அறை வீட்டில் ஊரில் உள்ள சொந்த வீட்டில் இருந்து படித்ததை விடச் சௌகரியமாகப் படிக்க முடியுமா, அவளுக்கு நாம் சிரமம் கொடுக்கலாமா என்றெல்லாம் எண்ணிப் பார்க்க அப்போதைய மனநிலை அவனை அனுமதித்திருக்கவில்லை. ‘இண்டரில்’ முதல் வகுப்பில் அவன் தேர்ச்சி பெற்றிருந்தது மட்டுமன்றி, கல்லூரியிலேயே முதலாவதாகத் தேறி இருந்தான். அவனுடைய நண்பர்கள், தெரிந்த ஆசிரியர்கள் எல்லோரும் அவனுடைய அந்த வெற்றியைக் குறித்து வெகுவாகப் பாராட்டி உற்சாகம் அளிக்கையில், மேலே நான் தொடர்ந்து படிக்கப் போவதில்லை, என்னுடைய குடும்ப நிலை அதற்கு இடம் தராது என்று நான்கு பேர்களின் முன்னிலையில் ஒப்புக் கொள்ள, கௌரவம் பாராட்டும் அவனுக்கு அவமானமாக இருக்காதா? எனவே தான் முதலில் ஆசைப்பட்டபடி நான்கு ஐந்து வருஷக் கல்வி கிடைக்காத போதிலும் முற்றிலும் ஒன்றுமில்லாமல் ஏதோ இந்த வெறும் பி.ஏ. யானும் கிடைத்திருக்கிறதே, இதற்கு மேல் வசதி இருந்தால் இந்த வழியிலேயே இன்னும் மேலான பட்டத்தைப் பெற முயற்சி செய்யலாமே என்ற தெம்பிலேதான் அவன் தன்னுடைய ஆசைத் தீபத்தை அவியாமல் வைத்திருந்தான். உண்மையிலே அந்தந்த வகைகளான கல்விகளில் உள்ள ருசியோ, அவற்றைக் கற்க வேண்டும் என்ற பேரார்வமோ அவனுக்கு அப்போது இருந்ததாகவும், அதனால் கலாசாலைப் படிப்பை அவ்வளவு தூரம் விரும்பினான் என்றும் சொல்ல முடியாது. பட்டங்கள் தரும் பெருமதிப்பு, அவற்றால் கிடைக்கும் உத்தியோகம், பதவி உயர்வு, இந்தக் குறிகளுடன் கல்வி பயிலவரும் மாணவர்களில் ஒருவனாகவே பாலுவும் இருந்தான். அதனாலேயே பெற்றோரின் ஏற்பாட்டுக்கு அவன் எந்த விதமான ஆட்சேபமும் கூறவில்லை. ஆனால் தமக்கையின் வீட்டில் காலெடுத்து வைக்கையில் இந்த ஊக்கம், ஆவல் எல்லாம் இந்த மூன்றே மாதங்களில் ரசமற்றுச் சப்பென்று ஆகிவிட்டன. இயல்பாகவே அவன் அடிக்கடி சலித்துவிடும் தன்மையை உடையவன். அதிலும் புதிது புதிதாகக் கனவு காணும் பருவம். புதுமையின் மெருகு வெகு சீக்கிரம் அழிந்து குறைகள் பல்லை இளிக்கத் தொடங்கி விட்டன. வெறும் புத்தகங்கள், கல்லூரிச் சம்பளம், இரண்டு வேளை உணவு இவற்றுடன் அந்தக் கலைத்தேவியின் முத்திரையைத் தன் பெயருக்குப் பின்னால் இணைத்துக் கொள்ள முடியும் என்று அவனுக்குத் தோன்றவில்லை. பார்க்க அற்பமாக இருக்கும் குறையும் அவனுடைய குறைப்படும் மனசுக்கு மிகுந்த சஞ்சலத்தை விளைவிக்கக் கூடியதாக இருந்தது. அவன் ஊரில் இருந்து படித்த நாட்களில் வீட்டில் எத்தனை கஷ்ட நஷ்டங்கள் இருந்த போதிலும் அவன் ஒன்றையுமே அறியாவண்ணம் அவனுடைய தாய் எப்படியோ இட்டு நிரப்பி இருந்தாள். அப்படி இருந்தும் அங்கேயே அவன் அதிருப்தி காண்பித்து வந்தான். இங்கு குறைகளை எல்லாம் சகித்துப் போகும் நிர்ப்பந்தம் அவனை நெருக்கியது. மேலும் அந்த இடம் அவனுக்குப் பிறந்த நாள் முதல் பழகிய இடம். அவனைப் போன்ற நிலையில் ஒட்டிப் பழகும் பல மாணவர்கள் இருந்தனர். இந்த இடம் அவனுக்கு சகஜமானதாகவே ஆகவில்லை. சகஜமானவர்களிடம் ஒட்டிப் பழகவே அவனுக்குக் கூச்சமாக இருந்தது. அப்படி நெருங்கிப் பழக முயன்றாலும் பரிகாசப் பேச்சுகள் கிளம்பி அவனைத் தனியாகவே ஒதுங்க வைத்தன. ஆனால் இங்கு சௌகரியங்கள் குறைவாக இருந்த போதிலும் மேகத்தைச் சுற்றிக் காணப்படும் வெள்ளி விளிம்பைப் போல மூர்த்தியின் கள்ளமற்ற கலகலப்பு இருந்தது. விமலாவின் பேச்சு கண்டிப்பாகவும் காரமாகவும் இருந்த போதிலும் அவளுடைய உள்ளத்தில் அவனைக் கரைக்கும் பரிவு இருந்தது. தேவை அதிகமாக உறைக்கும் சமயத்தில் தானே பரிவின் அருமை தெரியும்? அவனுடைய அன்னை அவனிடம் அளவுக்கு மீறிய பரிவும் அன்பும்தான் காட்டினாள் என்றாலும் இவ்வளவு தூரம் தேவையை அவன் உணரவேயில்லையே? அந்தப் பாதாளக் கிணற்றில் நீர் இறைத்ததனால் முரட்டு வேலை செய்து அறியாத அவனுடைய உள்ளங்கை ரோஜா மலரெனச் சிவந்து விட்டது. வாளியில் பிழிந்த துணிகளைப் போட்டுத் தூக்கிக் கொண்டு கயிற்றையும் குடத்தையும் சுமந்தவனாக அவன் வீட்டின் பின்புறம் வருகையில் சமையலறையில் மூர்த்தியும் விமலாவும் பேசும் குரல் கேட்டது. தன்னைப் பற்றி அவர்கள் என்ன நினைக்கிறார்களோ என்ற எண்ணம் அவன் மனசில் அடிக்கடி தோன்றும் வழக்கமிருந்ததால், அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை நின்று கேட்க ஆவல் தூண்டியது. அங்கேயே நின்றான். “அடுத்த மாசம் பணம் அனுப்பும் போது ஏதானும் சேர்த்து அனுப்ப மாட்டார்களா? அம்மா பேசாமலிருந்தாலும் இருப்பாள். அப்பா, பாவம், இங்கே வந்து தங்கியிருந்த இரண்டு நாட்களில் ஆற்றுப் போய் விட்டார். அவரே வாய்விட்டுக் கேட்க மாட்டார், அவராக பாலுவை அங்கே அனுப்பலாமா என்று கேட்டிருக்கையில் பேசாமலிருக்க மாட்டார்தான். என்றாலும் மூன்று மாசங்களுக்கு மேல் ஆகிவிடவில்லை? நமக்குக் கஷ்டமாகவும் இருக்கிறது, சங்கோசமாகவும் இருக்கிறது. என்ன செய்ய?...” விமலாவின் வாயிலிருந்து இத்தகைய சொற்கள் வந்ததும் பாலு அயர்ந்து நின்றான். அவனுடைய அப்பாவா எழுதினார்? வேறு விதமாகப் பேசி அம்மா அல்லவோ அவரை வற்புறுத்தினாள்?... பற்களைக் கடித்துக் கொண்டு மூர்த்தி என்ன பதில் கூறுகிறான் என்று கேட்க இன்னமும் நின்றான். “பாவம் படிப்பில் கூர்மையுள்ள பையன், நடுவில் வெட்டக் கூடாதென்று நானே தெம்பு கொடுத்தேன். அவருக்கும் வேறு வழியில்லை. நீ ஏதானும் எனக்குத் தெரியாமல் எழுதிவிடாதே, ஆமாம்! பாலுவின் காதிலும் எதையும் எழுதிவிடாதே. நம்முடைய கஷ்டம் இருக்கவே இருக்கிறது. அவனுடைய நிலையில் நான் மேலே அடிக்க வேண்டும் என்று எத்தனை கஷ்டப்பட்டேன் தெரியுமா? அந்த வயசில் மனசில் ஆசைகள் எப்படியிருக்கும் என்பதை நான் அறிவேன். பணமும் காசும் பிரதானமல்ல விமலா, அதற்காக மனிதத்தன்மையை இழந்து விடக் கூடாது...” மூர்த்தியின் இந்தப் பதிலைக் காது குளிரக் கேட்ட பாலுவுக்கு இருதயம் கரைந்தது. கண்களில் நீர் துளிர்த்தது. மேல் துண்டின் நுனியால் அவன் கண்களை ஒத்திக் கொள்கையில் மீண்டும் சம்பாஷணை தொடர்வது கேட்டது. “எனக்கு ஒரு ‘அயனா’ன யோசனை இருக்கிறது விமலா, நீயும் அதை ஆமோதிப்பாய் என்று எண்ணுகிறேன்...” “என்னவாம்?” “நம் சீதாவுக்கும் பாலுவுக்கும் மனசில் முடிந்து வைத்திருக்கிறேன். ஆட்சேபம் சொல்லுவானா?” “ஆட்சேபம் என்ன சொல்லக் கிடக்கிறது? உங்கள் தங்கையையும் என் தங்கையையும் கல்யாணம் செய்து கொள்ள வருபவன் கொடுத்து வைத்திருக்க வேண்டும். இந்த யோசனை உங்களுக்குப் புதிசாக இருக்கலாம். நான் எப்போதோ தீர்மானம் செய்ததுதானே?” “விமலா, ஒருமித்தமனம் என்றால் உலகிலேயே நாம் தான் உதாரணமாக இருப்போம், என்ன ஆச்சரியம் பாரேன்?...” இதற்கு மேலும் நிற்கப் பொறுமை இல்லாதவனாக பாலு உள்ளே நுழைந்து விட்டான். “என்னடா இது, தோய்க்கிற தோய்ப்பில் வண்ணான் பிழைப்புக் கெட்டு விடுமோ என்று பயந்து போனேனே? எங்கே விமலா? உன் தம்பியைக் கவனி!” என்று அவனைக் கண்டதுமே மூர்த்தி தனக்கே உரிய தோரணையில் பேச்சை மாற்றி விட்டான். அதிருப்தி இருந்தால் பொதுவாக எல்லோருக்கும் கோபம் வருகிறது. தமக்குச் சமமானவர்களிடம் குறையைச் சொல்லி அழுகிறார்கள். சமமாக இல்லாத கீழோரிடம் எரிந்து விழுகிறார்கள். மூர்த்திக்கும் விமலாவுக்கும் வாழ்க்கையில் குறைகள் நிறைய இருந்தன. ஆனால் அவர்கள் அழுதோ, எரிந்து விழுந்தோ பொழுதைப் போக்கவில்லை. சிரித்துச் சிரித்துத் தங்கள் குறைகளை மறைத்துக் கொண்டார்கள். விமலா சுபாவீகமாகவே இத்தகைய பண்பைப் பெற்றிருந்தாளோ, அல்லது தங்கத்துடன் தேய்ந்து தேய்ந்துதான் பித்தளையும் கறுக்காத தன்மையைப் பெற்றதோ? வாழ்க்கை யாரைத்தான் சோதனைக் கட்டத்துக்கு இழுத்துச் செல்லாமல் கொண்டு செல்லுகிறது? உறுதியொன்று மனசில் வைத்து விட்டால் அதை அசைக்க அத்தனைக்கத்தனை கடுமையான சோதனைகள் எதிர்ப்பட்டே தீருகின்றன. மாதக் கடைசியும் தானுமாக, ஓடி விளையாடும் சிறுவனான மோஹன் ஜுரம் கண்டு படுத்து விட்டான். விமலாவின் கை மருந்துகளுக்கெல்லாம் காய்ச்சல் தணியவில்லை. அதிகமாகியது. சர்க்கார் வைத்திய சாலைக்குச் சென்றால் வைத்திய உதவி இலவசமாகக் கிடைக்கும். ஆனால் குழந்தையை அங்கு அழைத்துச் சென்றோம், காட்டி மருந்து வாங்கி வந்தோம் என்று லகுவில் நடந்து விடுமா? அங்கு சீட்டு வாங்க, வைத்தியரின் அறைக்குள் நுழைய, மருந்து வாங்க என்று எத்தனை காலம் காத்து நிற்க வேண்டும்? இத்தனைக்கும் அங்கு செல்ல வண்டிச் செலவே இரண்டு ரூபாய்களாகி விடுமே? எனவே யோசித்து யோசித்து அவர்கள், அந்தக் காலனியிலே அவர்களை நம்பிப் பலகையை மாட்டிக் கொண்டிருக்கும் வைத்தியரிடம் குழந்தையைக் கொண்டு போனார்கள். அவர் பரிசோதனை செய்து பார்த்துவிட்டு, அன்றைக்குள் ஜுரம் இறங்காது போனால் குழந்தையின் உடலில் ஏற்றப்பட வேண்டும் என்று ஒரு ஊசி மருந்தை எழுதித் தந்தார். விலை எட்டு ரூபாய்க்குள் இருக்கும் என்றும் தெரிவித்தார். சிரித்துப் பேசும் மூர்த்திக்கு முகத்தில் ஈயாடவில்லை. விமலா அடிக்கொருமுறை குழந்தையை வந்து தொட்டுப் போவதும் உள்ளே வேலையைக் கவனிப்பதுமாக யந்திரம் போல் நடமாடினாள். பாலுவுக்கு இருப்பாகவே இருக்கவில்லை. மனம் இறக்கை கட்டிக் கொண்டு பறந்தது. மூர்த்தி காரியாலயம் சென்று விட்டான். கணவனும் சோதரனும் உண்ட எச்சில் கலங்களையும் மறந்து விமலா ஜுரத்தில் திணறூம் குழந்தையையே கவலை தோய்ந்த முகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்குக் கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது. பாலுவினால் அதைப் பார்க்க சகிக்கவில்லை. ‘ஊருக்கு நிச்சயம் எழுதிப் பணம் தருவிக்க வேண்டும். அம்மாவாம் அம்மா! அவளுக்குக் கொஞ்சமேனும் இருதயம் இருக்கிறதா? அவளும் குடும்பம் நடத்திப் பார்ப்பவள் தானே?’ என்றெல்லாம் செல்லத்தின் மீது பாய்ந்த விமலாவின் கோபம் கொழுந்து விட்டது. “பாலு!” குரல் கம்ம விமலா அழைத்தாள். “ஏன் விமலா? குழந்தைக்கு ஒன்றுமில்லை. பயப்படாதே, போய் சாப்பிடு நீ. நான் வேண்டுமானால் இன்று இங்கேயே இருக்கட்டுமா?” என்றான் பாலு. “இல்லை பாலு, டாக்டர் ‘இஞ்ஜெக்ஷன்’ கொடுத்தால் பயமில்லை என்கிறார். யாரிடமானும் கைமாற்றுத்தான் கேட்டுப் பார்க்க வேண்டும் என்று அத்தான் ஆபீசுக்குப் போய்விட்டார். எட்டு ரூபாய் ஆகுமாம். உன்னிடம் இருக்குமா பாலு? நீ பாவம் கைச்செலவுக்கு வைத்திருப்பாயோ என்னமோ? உன்னைக் கேட்கக் கூடாது என்று அவர் கண்டிப்பாகச் சொல்லிவிட்டுப் போனார். ஆனாலும் மனசு கேட்கவில்லை. இரண்டு நாட்கள் போனால் சம்பளம் வந்து விடும். நான் உனக்குத் தந்து விடுகிறேனடா...” “இதற்காகவா அழுகிறாய்? அசடு, கண்களைத் துடைத்துக் கொள். நானாகவே மருந்தை வாங்கி வரத்தான் இருந்தேன். எங்கே? ‘பிரிஸ்கிருப்ஷனைக்’ கொண்டா. நீ ஒன்றும் என்னிடம் கேட்கவும் வேண்டாம், திருப்பித் தரவும் வேண்டாம்; அத்தானிடம் சொல்லவும் வேண்டாம்” என்றான் பாலு. அவள் சீட்டைக் கொண்டு வந்து கொடுத்தாள். வெளியில் வரும் வரையில் அவனுடைய திடமனம் எப்படி நீடித்திருந்ததோ? அவன் எப்படி அப்படித் தைரியமாகப் பேசினான்? சொன்னதை எப்படி நிறைவேற்றுவான்? பெண்பிள்ளை போல அவனுக்குக் கண்ணீர் வந்தது. அவனுடைய சட்டைப்பை, பெட்டி, மேசை இழுப்பறை எல்லாவற்றிலும் துழாவியும் அவனுடைய இருப்பில் சேர்ந்திருந்த பணம் நான்கு ரூபாய், மூன்றணா, ஆறு தம்பிடிகள்தான்! |