13

     அன்றிரவு ஜோசஃபின் குடிலில் படுத்திருக்கும் துரை உறங்கவில்லை. தாயின் அருகில் கிடக்கும் யமுனாவுக்கும் உறக்கம் கொள்ளவில்லை.

     "அம்மா...?"

     இருளில் அந்தக் குரல் சுமந்து வரும் துடிப்புகள் தெளிவாகக் கேட்கின்றன.

     "யமு...?"

     "...வந்து சாப்பிடும்போது அம்மாவன் தெரிவித்தாரே... என் கல்யாணத்தைப் பற்றி முன்னமே நீங்கள் யோசனை செய்ததுதானா...?"

     "யோசனை செய்யாமல் எப்படி இருக்க முடியும் மகளே?"

     "துரை... அவராக உங்களிடம் கேட்டாரா?"

     "ஏனம்மா? நாங்களாகத்தான் சொன்னோம். உணர்ச்சி முட்டிப்போய்க் கால்களைத் தொட்டுக் கண்களில் ஒத்திக் கொண்டான். உன் மனசு எனக்குத் தெரியலியே?"

     "அம்மா..."

     'அம்மா, அம்மா' என்று கூப்பிடுகிறாளே ஒழிய நா வரைக்கும் வரும் கேள்வி நாநுனியில் தங்கிவிடுகிறது.

     "என் கல்யாணத்தைப் பற்றி இத்தனை நாள் நீங்கள் விளையாட்டாகக் கூடப் பேசியிருக்கவில்லையேன்னு எனக்கு எதிர்பாராததாக இருக்கிறது."

     "பேச சந்தர்ப்பம் வரவில்லையே ஒழிய, மனசில் இல்லாமலிருக்குமா? அப்பா சொல்லத் தெரியாமல் நெஞ்சை வருத்திக் கொள்கிறார் என்று தோன்றியது. நீ போனதிலிருந்து அவர் யாருடனும் பேசுவதில்லை; படிக்கச் சொல்வதில்லை. பிரார்த்தனையில் கூட நம்பிக்கை விட்டாற்போல் கண்களை மூடிக் கொண்டு கிடக்கிறார். எனக்குக் கலக்கமாக இருந்தது. துரையிடம் உன்னை வரச்சொல்லி அனுப்பினேன்..."

     "..."

     "துரை இங்கே ஆசிரமத்திலேயே இருந்து பழகியிருக்கிறான். சாத்விக இயல்பு, நல்ல குணம், யமுனாவை அவனுக்கு ஏன் கொடுக்கக் கூடாது என்று அவர் தான் கேட்டார். அனியனுக்கு ரொம்ப சந்தோஷம். ஆனால் மகள் மனதில் என்ன இருக்கிறதென்று தான் எனக்குப் புரியவில்லை. இது கட்டாயமில்லை. உனக்கு உன் வாழ்க்கைத் துணைவனைத் தேர்ந்து கொள்ள முழு சுதந்திரம் உண்டம்மா, தெரிகிறதா?"

     "அந்த சுதந்திரத்தினால்தான், பெரியப்பாவின் ஆலோசனையைத் தள்ளிவிட்டு இங்கு வந்தேன்... அம்மா... நான் ஒன்று கேட்கட்டுமா?"

     "கேள்..."

     "நான் சுதீரை நினைத்துக் கொண்டு கஷ்டப்படுவேனோ என்று நீங்கள் எனக்குத் திருமணம் செய்ய நினைக்கிறீர்களோ என்று தான்..."

     ருக்மிணிக்குத் தொண்டை கம்முகிறது. "அப்படியெல்லாம் இல்லையம்மா? உன் அப்பா, தான் கடமையைச் செய்யவில்லை என்று உள்ளூற வேதனைப்படுகிறார். நம்பிக்கையை நழுவ விடுகிறார். அவருக்கு இந்த நாட்டு விடுதலையிலும் பின்னர் அதன் உன்னத உயர்விலும் அத்தனை நம்பிக்கை இருந்தது! அந்தக் குரலை நான் கேட்டவள் யமு! அந்தக் குரலில் பெருமை கொண்டவள். அவர் தம் குடும்பத்தைப் பற்றித் தனியாக நினைத்துப் பேசியே நான் அறிந்ததில்லை. இப்போது அவர் சொந்தக் குடும்பம், மகள் என்று நினைத்து வீழ்ந்த நம்பிக்கைத் துளியை மீட்கப் பார்க்கிறார். யமுனாவுக்கு இருபத்தைந்து வயசாகிறது, அவளுக்குத் தக்க மணாளனைத் தேடி மணம் செய்யக் கையாலாகாதவனாகப் போனேனே என்று கண்ணீர் விடுகிறார்... நீ உன் மனசுக்குப் படுவதைச் சொல்லி அப்பாவைத் தேற்றுவாய் என்றுதான் நினைத்தேன். உனக்கு துரையைப் பிடிக்கவில்லை என்றால் அம்மையிடம் சொல்லிவிடு..."

     யமுனா சில நிமிடங்கள் அண்ணாந்து பார்த்துக் கொண்டு கிடந்தாள். துரை அவளுக்கு எந்த வேற்றுமை உணர்வையும் தோற்றுவிக்காத இனிய இயல்புடைய இளைஞன். ஆனால் சுதீரை நினைக்கும் போது ஓர் ஆவல்; அர்த்தமற்ற அச்சம்; படபடப்பு. அவன் வந்திருக்கிறான் என்றாலே உள்ளம் துடிக்கும். சுதீர் உருவத்தில், குடும்பப் பின்னணியில், கல்வி கேள்வி போன்ற வளர்ச்சியில், முற்றிலும் மாறானவன். ஒவ்வொரு சமயம் "சுதீர், நான் உங்களைக் காதலிக்கிறேன்!" என்று அவன் காலடியில் சரணடைவது போலும் கற்பனை செய்து கொண்டு பார்க்கிறாள். ஆனால் மேலான நிலையிலேயே நிற்கும் அவளை ஏதோ ஒன்று அந்தச் சிந்தனையைக் குருட்டு வெட்டாகத் தடுத்து விடுகிறது.

     "அம்மா!... அக்கரையில் உள்ள ஏழைகளுக்கு மாவும் அரிசியும் கொடுத்து உதவுகிறீர்களே, அந்த அக்கரையிலேயே உப்பிட்ட கையையே வெட்டத் தயங்காத துரோகத்துக்கு அந்த பாவப்பட்ட மக்களைத் தூண்டி விடுபவர்கள் இருக்கிறார்கள். அதை நீங்கள் அனுமதிக்கிறீர்களா?"

     "அதன் போக்கில் விடும்போது தீமை வளரும் என்று நான் நம்பவில்லை. அநுமதிக்காமல் எதிர்த்தால் நிச்சயமாக வளரும் என்று நம்புகிறேன்..."

     "அம்மா நீங்கள்... அப்பாவைக் கல்யாணம் செய்து கொண்ட போது, எல்லோரும் எதிர்த்திருப்பார்களே. அந்த எதிர்ப்புகளில் குழம்பாமல் ஒரே நிலையில் நிற்கத் தோன்றுவதைத்தான் 'காதல்' என்று சொல்கிறார்களா?"

     ருக்மிணி அம்மைச் சிரித்துக் கொள்கிறாள்.

     "அப்போது இந்த வார்த்தையே தெரியாது. இருவரும் ஆசிரமத்திலிருந்தோம். அவருக்கு அச்சன், அம்மை என்ற பந்தங்களெல்லாம் இந்த ய்க்ஞத்தில் குதித்ததால் நஷ்டப்பட்ட காலம் அது. நான் ஏழை. சொல்லப் போனால் அவர் வீட்டில் ஏறித் தண்ணீர் தொடும் சாதியுமில்லை. அம்மாவன் எனக்கு அனியனுமில்லை. அப்பா அவரை அனியன் என்பார். நானும் அதையே உறவு முறையாகக் கொண்டேன். உறவுகள் இல்லாத என்னை அவரும், உறவுகள் நஷ்டப்பட்ட அவரை நானும் ஒருவருக்கொருவராக்கிக் கொண்டோம்..."

     "அதில்லை அம்மா... காதல் என்பது... ஒருவரை விட மற்றவர் உயர்ந்தவராக இருப்பதனால் வரும் உணர்வா? அல்லது, அநுதாபமும் பரிவும் இரக்கமுந்தான் அதைத் தோற்றுவிக்கிறதா என்று கேட்கிறேன்..."

     "எனக்கு இந்த விளக்கங்களெல்லாம் தெரியாது. காதலோ எதுவோ, எந்த நேரத்திலும் அவரைக் கல்யாணம் கழித்ததனால் நான் கஷ்டப்பட்டதாகவோ நஷ்டப்பட்டதாகவோ தோன்றியதில்லை. வெறும் உடல் பந்தங்களுக்காக, சொகுசான வாழ்வுக்காக நான்கு பேர் பார்த்துப் பொறாமைப்படும் நிலையில் ஏற்படும் கர்வத்துக்காக என்றெல்லாம் நினைப்பு இருந்திருந்தால் எங்கள் வாழ்க்கையும் கசந்திருக்குமாக இருக்கும்... யமு? உன் மனதிலிருப்பதைச் சொல்லம்மா!"

     "அம்மா, சுதீர் இங்கே வந்திருக்கிறாரென்றாலே எனக்கு முன்பெல்லாம் சந்தோஷமாக இருக்கும். ஒரு சொல் பேசினாலும் பரவசமடைவேன். பிறகு... எனக்கு வேதனையும் பயமும்... அன்றைக்கு அவர்களுடைய வீட்டில் கமலம்மாவுக்கும் தெரிய, வாக்குவாதம் செய்தேன். ஆனால் தோற்றுப் போகும்போது நெஞ்சு துவண்டு விழுகிறது. பெரியப்பாவுக்குத் தெரியாமல் ஒரு கூட்டத்தில் பேச ஒப்புக் கொண்டேன். அங்கே சுதீர் வந்து மரியாதைக் குறைவான அதாவது கீழ்த்தர அரசியல்வாதியைப் போல் கேள்வி கேட்டார். அன்றிரவு நான் அழுதேன்..."

     நெஞ்சு வெடிக்கும் அந்த துயரத்தில் ருக்மிணி மகளை அணைத்துப் பங்கு கொள்கிறாள். ஊமைக்காயமான அந்த மௌன வேதனை தாயின் இதயத்தில் கரைகிறது.

     துரையைக் கல்யாணம் செய்து கொள்ள விரும்பவில்லையா என்று அவள் எப்படிக் கேட்பாள்?

     ஆனால், யமுனா நிச்சயம் செய்து கொள்கிறாள்.

     "துரையை மணந்து கொள்கிறேன், ஏனென்றால் வெளி உலகில் தன்னந்தனியே தலைநீட்டும்போது, தற்காப்பு ஒரு பிரச்னையாகி விடுகிறது. நீங்கள் சொல்லும் ஆசைகள், தேவைகள் போன்ற நோக்கங்கள் இல்லாத வாழ்விலே தான் உண்மையைக் காண முடியும். துரை அந்த வகையில் ஒத்தவர் தானே..."