வேருக்கு நீர் - Verukku Neer - ராஜம் கிருஷ்ணன் நூல்கள் - Rajam Krishnan Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com





23

     அம்மாவன் மறுநாட் காலை புறப்படும் வரையிலும் பேச்சுக்கள் மேலெழுந்த வாரியாக அமுங்கி விடுகின்றன. துரைக்குக் காலையில் பேச நேரமில்லை. இருவரும் சென்ற பிறகு, வழக்கம் போல் யமுனாவினால் அமைதியாகத் தன் அலுவல்களில் ஈடுபட முடியவில்லை.

     அவர்களிடையே தோன்றி அகன்று வரும் பெரிய பிளவை எப்படிச் சமாளிக்கப் போகிறாள்?

     ஓர் அலைபோல் நாட்டில் சுதந்திரப் போராட்டத்தின் போது மட்டும் ஏற்பட்ட நற்பண்புகள் குறுகியகாலப் பண்புகளாய், கால வெள்ளத்தின் வேகச் சுழலில் சிக்கிய துரும்பு தூசிகளைப் போல் மக்களிடையே ஒட்டாமல், பயன்படாமல் மறைந்துவிட்டன. அவள் அப்படிச் சுழலும் துரும்பாய்த் தனித்த நெறியை இழந்து விடாமல் எதிர் நீச்சுப் போடப் போகிறாளா? இந்த இல்லற வாழ்க்கை என்னும் சுழலுக்குள்ளிருந்து மீள வழியின்றிப் பயன்படாமலே மாயப் போகிறாளா?

     அவளுக்கே அது புரியவில்லை.

     ஏதோ ஒரு பரபரப்பான கட்டத்துக்கு வருவதைப் போல் அர்த்தமற்ற ஆவலுடன் மாலை நெருங்குகிறது.

     வழக்கத்துக்குச் சற்று முன்னரே அவன் வீடு திரும்பி விடுகிறான்.

     யமுனா சிரித்த முகத்துடன் எதிர்கொண்டு நிற்கிறாள்.

     "சீக்கிரமா வந்துட்டீங்களே!..." என்று கேட்டுக் கொண்டே பிஸ்கோத்தும் தேநீரும் கொண்டு வருகிறாள். மாம்பழத் துண்டங்களைத் தட்டில் வைக்கிறாள்.

     அவனோ ஆழ்ந்த முகத்துடன் அமர்ந்திருக்கிறான்.

     "ஏன் சாப்பிடாம உட்கார்ந்திருக்கீங்க? உடம்பு சுகமில்லையா?"

     "வொர்க்கர்ஸ் ஸ்டிரைக்கின்னீங்களே? எப்படி இருக்கு?"

     இந்தப் பரிவு விசாரணைகள் உண்மையிலேயே ஆழத்திலிருந்து வருபவைதாமா என்று கேட்பதைப் போல் பார்க்கிறான் துரை.

     "இப்படி உட்கார் யமுனா, உன்னிடம் நான் கொஞ்சம் ஸீரியஸாகப் பேச வேணும்..."

     "பீடிகை பலமா இருக்கே, சொல்லுங்க...?"

     "விளையாட்டில்லே யமுனா. நான் யோசித்து யோசித்துப் பார்த்தேன் ராவெல்லாம். நான் செய்தது பெரிய தப்பு."

     "அடேயப்பாடீ! என்ன அவ்வளவு பெரிய தப்பு? தொழிலாளருக்கு வாக்குறுதி கொடுத்து கேரோவை முடிச்சதாக அன்னிக்குச் சொன்னீங்களே அதுவா?"

     "அதெல்லாம் உனக்குத் தொடர்பில்லாத சமாசாரங்கள். நான் பேசப்போவது உன் சம்பந்தப்பட்ட விஷயம்."

     "சொல்லுங்கள்..."

     பரபரப்பைக் கஷ்டப்பட்டு அடக்கிக் கொள்கிறாள்.

     "நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னது பெரிய தப்பு..."

     அவள் சிரிப்பு கலகலவென்று பூக்களைச் சிதறினாற் போல் ஒலிக்கிறது. 'இவள் என்ன பெண்!' என்று அவன் விழிகள் அகல நோக்குகிறான்.

     "எப்படிக் கண்டுபிடிச்சீங்க! ராத்திரி முழுதும் எப்போதோ நடந்துபோன விஷயத்தைக் குறித்து ஆராய்ச்சி பண்ணினீர்களாக்கும்! எனக்கென்னவோ ஆராய்ச்சி முடிவு ஒப்புக் கொள்கிறாப் போல இல்லை."

     "விளையாட்டில்லே யமு, உனக்கும் எனக்கும் அக்கோடிக்கு இக்கோடி. இந்த வாழ்க்கையை நீட்டுவதனால் நாம் இரண்டு பேரும் சந்தோஷப்படப் போவதில்லை."

     "ஹம், அப்புறம்?"

     "மேலு மேலும் கசப்பாவதற்கு முன் நாமே..."

     "ஹம், சொல்லுங்களேன்?"

     அவன் தரையைப் பார்க்கிறான்; "ஒரு முடிவு செய்து கொள்ளலாம்."

     "கோர்ட்டுக்குப் போகணும்னு சொல்றீங்களா?"

     "நீ அது அவசியம்னு கருதினால், சட்டப்படி விடுதலை பெறலாம்."

     அவள் குனிந்து அவன் காதோடு, "வேறே... பார்த்து நிச்சயம் செய்து விட்டீர்களா?"

     அவன் அவளை உறுத்துப் பார்க்கிறான்.

     "ஏன், நான் கேட்கக் கூடாதா?"

     "நீயோ பிரிந்து போகிறாய். உனக்கு அதைப்பற்றி என்ன கவலை?"

     "நீங்கள் முடிவு கட்டினால் நான் பிரிந்து போவதாக அர்த்தமா?"

     "அப்படியானால் நீ இப்படியே நிதம் நிதம் கருவிக்கிட்டு இருக்கிறேங்கறியா?"

     "பின்ன இல்லாம எப்படிப் போறது? உங்களுக்கு என்னை விலக்க ஒரு அதிகாரமும் கிடையாது; சட்டப்படி போனா கூட நான் பட்டுபட்டுனு உள்ளதை உள்ளப்படி சொல்வேன். எந்த வக்கீல் வேணும்னாலும் பாருங்க; என்னை விலக்க ஒரு காரணமும் இல்லைன்னு சொல்லுவாங்க."

     "இதோ பார் யமுனா; நாம் இருவரும் ஒருவருக்கொருவர் புரிஞ்சிட்டுப் போகணும். இரண்டு தலைப் பாம்பு போல் ஒண்ணை ஒண்ணு விழுங்கறாப் போல நிக்கறதிலே என்ன லாபம்?"

     "இரண்டுதலைப் பாம்பில்லை. நீங்கள் மிகவும் உயர்ந்தவராக இருக்க வேணும் என்பது என் இலட்சியம். நான் பலவீனத்துக்கு ஆளாகும் போது நீங்கள் எனக்கு உறுதி கொடுப்பவராக இருக்க வேண்டும். ஆனால் நீங்களோ, பார்ட்டியில் அரை உடம்பைக் காட்டிக் கொண்டு வழிய வழிய நிரப்பிக் கொடுப்பதுதான் இப்போதைக்குத் தகுந்த சதிதர்மம்னு நினைக்கிறீங்க. உலகம் பிறந்த நாளிலிருந்து பிறந்திருக்கும் மகான்கள், தீர்க்கதரிசிகள் எல்லோரும் அறிவைக் குழப்பும் இன்பங்கள் விலக்கத் தகுந்ததென்றுதான் சொல்லியிருக்கிறார்கள். நம் வாழ்க்கை ஆதர்ச வாழ்க்கையாக இருக்கவேணும்னு நான் நினைக்கிறேன். அதற்காகவே என் மூச்சுள்ளவரை போராடுவேன்..."

     "நீ, உன் வரைக்கும் இருந்து கொள். என்னைக் கட்டுப்படுத்துவதனால் எனக்கு எவ்வளவு சங்கடங்கள் என்பதைக் கொஞ்சமேனும் நினைக்க வேணும்... இதோ பார் எங்கள் சரக்கு வியாபாரப் போட்டியில் எடுபட வேண்டும். அதற்கு நாங்களும் அதிகாரமுள்ளவர்களைக் கவர, வசப்படுத்த ஏதேதோ செய்ய வேண்டியிருக்கு. வாய் கூசாம அதைக் கொண்டா, இதைக் கொண்டான்னு கேட்கிறாங்க. பில் பாஸாகாமல் நிற்கிறது. அந்த நபருக்குத்தான் அந்தப் பாட்டிலெல்லாம் வரவழைத்தேன்; நீ நாசம் செஞ்சிட்டே."

     "'என்ன ஸார், ஜப்பான் டெரிகாட்டா இது? மாசா மாசம் நேபால் போயிட்டு வரீங்க; நம்ம வீட்டிலே டெர்லின், நைலக்ஸ்னு பிச்சுப் பிடுங்கறாங்க! நானும் சொல்றேன், நீங்க காதிலேயே போட்டுக்கலே. பில்லு பாஸாகணும்னா மட்டும் கரெக்டா வந்துடறீங்க...'ன்னு ஒரு மூணாம் படி ஆசாமி முதல் விரட்டுகிறான். கேட்பதில் அடியிலிருந்து முடிவரை நாணமே இருப்பதில்லை. இதற்கெல்லாம் கம்பெனி ஈடு கொடுக்கணும்னா, கோல்மால்தான் பண்ண வேண்டியிருக்கு. உருப்படியில்லாத மெஷினரியெல்லாம் தலையில் கட்டணும். அதற்குச் சமத்காரமாகப் பேசணும். தப்பித் தவறிப் பார்லிமெண்டில் எவனேனும், கேள்வி கேட்டு இழுத்து விடாம அதையும் சமாளிக்கணும். ஒவ்வொருத்தன் இலேசில் மசியமாட்டான். வேலையை விட்டுடலாம், விட்டுடலாம் என்ற யோசனையைத் தவிர நீதான் வேற ஏதானும் யோசனை சொல்லேன்?"

     யமுனா புன்னகை இலங்க, "நீங்க கோபிக்கா இருந்தா நான் சொல்றேன். நீங்களே ஜப்பான் நைலானும் சீனா காட்டனும் போட வேண்டாமே. இது 'இந்திய சரக்கு' அதனால் மோசமானது என்று நீங்களே எத்தனையோ தடவை பேசிக் கேட்டிருக்கிறேன். அந்த அளவில் உங்களால் நேர்மையாக இருக்க முடியாது?" என்று கேட்கிறாள்.

     "உன் நேர்மையெல்லாம் 'பிராக்டிக்கலா' வரப்ப, பயனில்லாம போறது யமுனா. இந்த நேர்மை உபதேசத்தை நான் செய்யப்போனால் எங்க கம்பெனிக்கு அடுத்த ஆர்டர் வராது. அது போதாமல் அது சொத்தை, இது சொள்ளைன்னு போது விடிஞ்சால் தலை வேதனைதான் கொடுப்பான்!"

     "அதைச் சமாளிப்பதுதான் நம் வாழ்க்கையின் லட்சியம்னு நான் நினைக்கிறேன். ஒரு பொய்யிலேயே உலகம் இயங்குவதை நாமும் ஒப்புவது சரியில்லை. அதை எதிர்த்துத்தான் போராடணும்..."

     "நாம் அப்படி எல்லாம் கஷ்டப்படுவதால் உலகம் திருந்திடப் போறதா யமுனா? மனித மதிப்பீடுகள் உயர்வாக இருந்த நாளிலேயே காந்தியைப் பின்பற்றியவர்கள் எத்தனை பேர்? என்னைக் கேட்டால் என் அபிப்பிராயம் இதுதான். பிரிட்டிஷாரிடம் இந்தச் சமுதாயம் அடக்கப்பட்டிருந்தது. காந்தி, அடங்குவது அடிமைத்தனம்; எதிர்த்து நில்லுங்களென்று தூண்டிவிட்டார். அதாவது, எந்தத் தெம்பும் இல்லாதவனும் கூட, ஒழுங்கீனமாக நடக்கலாம் என்ற மாதிரி அன்றைக்கு எதிர்த்து நின்றவர்களெல்லாரும் தேசபக்தர்கள்; சிறைக்குப் போனவர்களெல்லாரும் தியாகிகள். அவர் இந்த அஹிம்சையைக் காட்டிலும் கையில் கத்தியைக் கொடுத்து நேருக்கு நேராகச் சண்டை செய்யுங்களென்று சொல்லியிருந்தாலே சரியாக இருந்திருக்கும். இது எப்படி இருக்கிறதென்றால், காய்ச்சலில் கிடந்து, அரைவயிறும் கால்வயிறும் சாப்பிட்டுப் பலவீனமானவனுக்கு இதுதாண்டா விமோசனம்னு ஒரேயடியாகப் பாதாம்கீரும் பால்கோவாவும் முழு உணவாகக் கொடுத்தாப் போல, தராதரம் பார்க்காமல் லட்சியத்தை மாட்டி விட்டார். இப்ப காலிப் பயல்களும் ரவுடிகளும் மிருகத்தன்மாக கேரோ பண்றாங்களே, அது காந்தி காட்டின ஒத்துழையாமை இயக்கத்தில் பிறந்ததுதான். சத்தியத்தை வேட்கிறோம்னு அவர் சொன்னதைத்தான் இவங்களும் சொல்றாங்க. எங்க சத்தியம் அசத்தியமாக இருப்பதுதாங்கிறாங்க. இதை நியாயமாக்கி, பெரிய ஜோடனை செய்து, லட்சியம்னு சொல்றாங்க. அவர் ஒருத்தரைப் பொறுத்தமட்டில் அவர் லட்சியம் சரியாக இருக்கலாம். கையில் கொடியைப் பிடிச்சிட்டு கூட்டத்தோடு கூட்டமாக கோஷம் போட்ட அநாமதேயங்களெல்லாம் உள்ளத்தோடு துறவு பூண்ட சத்யாக்கிரகிகள் தாமா? நீ நினைச்சுப்பார். இன்னிக்கு மனுஷன் சாகறது அன்றை விடப் பல நூறு மடங்கு எளிசாப் போச்சி. மனித உயிருக்கு, இன்னிக்கு அன்றைய மதிப்பு கிடையாது. நீ அன்றைய நிலையில் ஏற்பட்ட கோட்டில், இன்னிக்கு நாம் போகணும்னு நினைப்பதே ஒரு வகையில் மூடத்தனம் தான்..."

     "ஏங்க உண்மையைப் பலரும் கைவிட்டு விட்டதால் உண்மை பொய்யாயிடுமா? பொய்யை எல்லோரும் வாழ்வாக நினைப்பதால் பொய் உண்மையாயிடுமா? நாமும் அப்படி வேஷம் போடாத போனால் மூடத்தனம்னு நீங்க சொல்றதை என்னால் ஒப்ப முடியல..."

     "சும்மா ஒரு வாதத்துக்காகப் பேசாதே யமுனா. இங்கே எது உண்மை? இந்த விண்வெளியுகத்தில் உன் கைராட்டையும் கட்டைவண்டியும் லட்சியம்னா நல்லாவா இருக்கு?"

     "கைராட்டையை உங்களிடம் வற்புறுத்தவில்லை. ஆனால், மது, லஞ்சம், பொய், ஏமாற்று, மோசடி, இவைகளை நாம் எதிர்த்துப் போராடவில்லையானால், நம்மையே அந்த ஓட்டம் அடிச்சிட்டுப் போயிடும்!"

     "நம் வாழ்க்கை நிலையை இன்று நாம் கஷ்டப்பட்டு உயர்த்திக் கொள்கிறோம். நாம் ஆசிரமத்தில் குடிசையில் இருந்தோம். தோளில் மண்வெட்டியைப் போட்டுக் கொண்டு காலையில் பரம்பை நாடிப் போனோம். கேழ்வரகுக் களி சாப்பிட்டோம். அதெல்லாம் அப்போது அந்த இடத்துக்குச் சரியாக இருந்தது. இப்போது அப்படியே இருக்க முடிகிறதா? இங்கே இந்த வசதிகளுக்கேற்ப நம் வாழ்க்கை மாறவில்லையா? அதுபோல்தான் எல்லாம். என் தொழிலுக்கு ஆடம்பரமான தோற்றம் வேணும். அது வாழ்வின் ஓர் அம்சமான பிறகு அவ்வளவு தடைகளை முன்போல் விதித்துக் கொள்ள முடியுமா? எங்கெங்கோ போகிறோம்! இந்த உணவைத்தான் சாப்பிடுவோம் என்ற வரையறை கொள்ள முடியவில்லை. மாமிசக் குழம்பும் சோறுந்தான் ஓரிடத்தில் கிடைக்கிறது. இன்னோரிடத்தில் பாலோ மோரோ கிடைப்பதில்லை. இன்னொன்றுங்கூட நீ நினைவில் வைக்க வேண்டும். காந்தி உணவுப் பரிசோதனை செய்த காலத்தில் இன்று மனித சமுதாயத்தைப் பரவலாக வாட்டும் அளவு பசிப்பிணி இருக்கவில்லை என்பது என் கருத்து. அப்போதெல்லாம் மீதூண் சகஜமாயிருந்தது. அதனால் எளிமை எளிமை என்று உபதேசம் செய்தார். இன்று பெரும்பாலோர் பற்றாக்குறையில் அவதிப்படுகின்றனர். எளிமைக்கு இடமேயில்லை. என்றாலும் நாம் மதிக்கும் அளவு என்று ஒன்றிருக்கிறது. அதற்குமேல் கட்டுப்பாடுகள் இயலாததொன்று..."

     யமுனா எதுவும் பேசாமலே நிற்கிறாள்.

     "நான் ஒரு சாதாரண மனிதன். ஒரு சராசரி மனிதனுக்கு என்னென்ன ஆசைகள் உண்டோ அதெல்லாம் எனக்கும் உண்டு. என் மனைவியைப் பற்றி எல்லோரும் பெருமையாக நினைக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு உண்டு. அவள் ஒரு மாதிரி; 'அன்சோஷபிள்' என்று மற்றவர் கருதுவது எனக்குத் தலைகுனிவாக இருக்கிறது. நீ என்னுடன் ஒத்துப் போக மாட்டாய் என்று என்னுடன் பழகும் பலருக்குத் தெரியும். யோசனை செய்து பார். ஜோசஃப் ஸார் திரும்பி வருமுன் நீயும் ஒரு முடிவு செய்து விட்டால் நல்லது."

     யமுனாவின் முகம் சிறுக்கிறது.

     "உங்களுடன் ஒத்துப் போக முடியாமல் பிரிந்தேனென்று எப்படிச் சொல்வது? உங்களுடன் ஒத்துப் போகாமல், உலகத்துக்கு என்ன நன்மையைச் செய்கிறேனென்று நான் போக முடியும்? அங்கே போய் என்ன செய்வது? என் பெற்றோரிடம் என்ன சொல்வது?..."

     "அது உன் தீர்மானத்தைப் பொறுத்திருக்கிறது."

     அவள் என்ன தீர்மானத்தைக் கூறுவாள்?

     அவளை யோசனை செய்யச் சொல்லிவிட்டு அவன் நீராடிப் புதுமை பெறுகிறான். மணங்கள் கமழ வேற்றுடை அணிந்து வருகிறான்.

     "ராத்திரி வரக் கொஞ்சம் நேரமானாலும் ஆகும். ஒரு பார்ட்டி. பத்திரமாயிருந்து கொள்" என்று சொல்லிவிட்டு வெளியேறுகிறான்.






புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
151
152
153
154
155
156
157
158
159
160
161
162
163
164
165
166
167
168
169
170
171
172
173
174
175
176
177
178
179
180
181
182
183
184
185
186
187
188
189
190
191
192
193
194
195
196
197
198
199
200
201
202
203
204
205
206
207
208
209
210
211
212
213
214
215
216
217
218
219
220
221
222
223
224
225
226
227
228
229
230
231
232
233
234
235
236
237
238
239
240
240
241
242
243
244
245
246
247