வேருக்கு நீர் - Verukku Neer - ராஜம் கிருஷ்ணன் நூல்கள் - Rajam Krishnan Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com





4

     விடியும் நேரத்திலேயே உறங்கினாலும், கண் விழிக்கும்போது சுறுசுறுப்பாக இருக்கிறது. படுக்கையில் கமலம்மாவைக் காணவில்லை. யமுனா குளியலறைக்குச் சென்று காலைக் கடன்களை முடித்து, இதமான வெந்நீரில் நீராடிய பின், சேலையைச் சோப்புப் போட்டுக் கசக்கி வெளியே உலர்த்தப் போகிறாள். முதல் நாள் பெய்த மழை ஈரத்தில் பசுமை மின்னுகிறது. விண்மணி பளிச்சென்று முகம்காட்டி அந்தப் பசுமை கண்டு பூரிக்கிறது. அவள் பின்வாயில் வழியாக உள்ளே கூடத்துக்கு வரும்போதுதான் மலையாளம் கலந்த அம்மாவனின் மழலைத் தமிழ் செவிகளில் விழுகிறது. தம் கதர் சால்வையுடன் அவர் உட்கார்ந்திருக்கிறார். சுதீர் பைஜாமாவும் சிகரெட் புகையுமாகச் செட்டில் சாய்ந்து மலையாளத்தில் பேசுகிறான்? ஆம், மலையாளத்தில் "சமரத்திண்டே ஃபர்ஸ்ட் காஷுவாலிட்டி" என்று ஏதோ செவிகளில் விழுகின்றன.

     "குட் மோர்னிங், எந்தா யமு, சுகமில்லையோ?" என்று கேட்கிறார் கையில் ஆவி பறக்கும் தேநீர் கிண்ணத்துடன்.

     "ஒன்றுமில்லையே?"

     "பின்ன கண்ணெல்லாம் சிவந்து இடுங்கி..."

     சுதீர் எங்கோ பார்த்துப் புகை விட்டுக் கொண்டிருக்கிறான்.

     "எப்போது வந்தீர்கள்!"

     "குஞ்ஞம்மையும் கமலம்மையும் ஒருபாடு நேரம் கண் முழிச்சு சம்சாரிச்சதாக்கும்!"

     அவள் அதற்கு மறுமொழி கூறாமல் சுதீரை உறுத்துப் பார்க்கிறாள். அவன் காலை மடக்கிக் கொண்டு புகையை விட்டுக் கொண்டிருக்கிறான். இந்த சுதீர் முன்பு எத்தனை மரியாதையுள்ள நாகரிக மனிதனாக நடந்து கொண்டிருந்திருக்கிறான்? நீதிபதி வீட்டுக் குழந்தைகளின் செல்லப் பிராணியாகச் சொகுசாக வளர்ந்த நகரத்து நாகரிக நாய், பொன்னைத் தேடிப் பனிக்கண்டத்துக்குச் சென்ற பேராசை மனிதனுக்குத் துணை போக, கொஞ்சம் கொஞ்சமாக நாடு நகர வாசனைகளை எல்லாம் உதிர்த்து, நள்ளிரவில் குந்தியிருந்து ஊளையிடக் கானகத்துக்குத் தன்னைப் பழக்கிக் கொண்ட கதை நினைவுக்கு வருகிறது. மனித குலம் நாகரிகப் பரிமாணத்தில் முன்னேறிய பின் திசை கெட்டுத் தறிகெட்டுக் குப்புற விழத் திரும்பிப் பார்க்கிறது.

     "எந்தா யமு?"

     "பிரேக் ஃபாஸ்ட் சாப்பிடம்மா. உடம்புக்குச் சுகமில்லையாம்மா?" கமலம்மா பூஜையறையிலிருந்து வருகிறார்.

     "பேர் பேராகக் கேட்கிறீர்கள்?..."

     முரமுரத்த ரொட்டி வில்லைகளும் வெண்ணையும் பழப் பச்சடியும் கொண்ட தட்டத்தை ஏந்தி வருகிறான் சுப்பையா.

     "காப்பியா, டீயா..." என்று அவன் மெல்லக் கேட்கையில், "டீயே இருக்கட்டும்" என்று கூறிவிட்டு யமுனா ரொட்டி வில்லையில் வெண்ணை தடவிக் கொண்டு, "நீங்கள்?... நீங்கள்?" என்று சுதீரையும் ஜோசஃபையும் பார்க்கிறாள்.

     "இன்னிக்கு இங்கே ஏதானும் வேலை இருக்கா யமு?" என்று கமலம்மா கேட்கிறார்.

     "இல்லே, பொருட்காட்சி சாமான்களைப் பிரேமாவும் ரங்கனும் எடுத்துக் கொண்டு வருவார்கள். நான் எல்லோருடனும் போகிறேன் ஆசிரமத்துக்கு."

     "அப்ப... அடுத்த மாசமோ, அதற்கடுத்த மாசமோ மெட்றாஸ் வருவாய்?"

     "அது-நிச்சயமில்லை. ஒரு நினைப்பு இருக்கிறது. வந்தால் உங்களைப் பார்க்காமல் போவேனா?"

     "நீ பெரியப்பா வீட்டில் தங்குவாய்..."

     "எனக்கு எல்லாம் ஒன்று தான் கமலம்மா..."

     "பின் அங்கே வந்து தங்கு. எனக்குச் சந்தோஷமாக இருக்கும்."

     "சரி. கமலம்மா என் துணிகளை இங்கே உலர்த்தி இருக்கிறேன். ரங்கன் வந்தால், கொடுத்து விடுங்கள்; நான் சொல்லிவிட்டுப் போகிறேன்..."

     "இருக்கட்டுமே!"

     விடைபெற்றுக் கொள்ளும்போது கமலம்மாவைக் குனிந்து வணங்கத் தோன்றுகிறது.

     வாயிலில் மழை நீர்த் துளிகளை வயிரமாகத் தாங்கி மின்னிக் கொண்டு ஐந்தே இதழ்களுடன் கட்டவிழ்த்திருக்கும் அரக்கு வண்ண வெல்வெட் ரோஜாவைக் கிள்ளி அவன் ஈரக் குழலில் செருகுகிறார் கமலம்மா.

     "வண்டி இருக்கே, கொஞ்சம் இருங்களேன்? டிரைவர் வந்திடுவான்...?"

     "வேண்டாம்மா, மழை பெய்த சுகத்தில் நடக்கச் சந்தோஷமாக இருக்கும்... வரேம்மா..."

     "வரேம்மா! எந்தா சுதிர்? பின்னக் காணாம்!"

     "ரைட்டோ?"

     அவன் வாசலில் வந்து நிற்கிறான். சிரிப்பதுபோல் தோன்றுகிறது. யமுனா பேசவில்லை. வளைவு திரும்பி, கீழே இறங்கிப் பாதையில் நடக்கின்றனர். தலை மறையும் வரையிலும் மேட்டில் நின்று கமலம்மா பார்க்கிறார்.

     வெயில் பளிச்சென்று விழவில்லை; நீளம் தெரியமல் வானமெங்கும் பஞ்சுப் பிசிறுகள் சிதறிக் கிடக்கின்றன. எப்போதேனும் காற்றின் அசைவில் அவை விலகும்போது பளிச்சென்று நீலமாகச் சிரித்துக் கொண்டு கதிரோன் தன் குழந்தைகளாகப் பசுமைகளை மெல்ல வருடுகிறான். உடனே பொறுக்காத பஞ்சுத் துணுக்குகள் அந்தச் சிரிப்பை மாய்க்க ஓடோடி வருகின்றன.

     "ராத்திரி நல்ல மழை. இந்த வருஷத்துப் பஞ்சக் கொடுமை போச்சு. உறக்கம் கொள்ளாத சந்தோஷம்" ஜோசஃப் மௌனத்தைக் கலைக்கிறார்.

     "நீங்கள் சுதீரோடு என்ன பேசிக் கொண்டிருந்தீர்கள்?" என்று அவரைக் கேட்டாள் யமுனா.

     "நானா? என்ன பேசினேன் சுதீரோடு? காப்பிக்கும் சாய்க்குமுள்ள வித்தியாசங்கள்..."

     "அதில் சமரத்திண்டே காஷுவாலிட்டி என்ன வந்தது?..."

     "அதோ? நான் அரசியல் ஒண்ணுமே பேசவில்லையே. யுத்தம்னு வந்தால் உண்மை போகும் அல்ல? அதான். ஏது சமரத்திலும் முதல் காஷுவாலிட்டி இப்ப சத்யமாணு?"

     "அம்மாவா, எனக்குப் பெரிய போராட்டமாக இருக்கிறது. நாம் பைத்தியக்காரத்தனமாக, நடக்காத இலட்சியத்தைப் பற்றிக் கொண்டு போறாடுகிறோமோன்னு தோன்றுகிறது. எனக்குத் தெரிஞ்சே முன்ன நான் படித்த போது ஹாஸ்டலில் பூரி கூடச் செய்ய மாட்டார்கள். அப்போதே டில்லியிலிருந்து ஒரு அம்மா, காந்திய சர்வோதயம் கொண்டாடுபவர், வந்தால் எல்லா வகையும் செய்வார்கள். நம் ஆசிரமத்தில் இருந்து வரும் குழந்தைகளே வெளியே அழுக்குப் படிந்த தின்பண்டங்களைக் கண்டால் வாங்கித் தின்கிறார்கள். ஆசிரமத் தொண்டர்கள் வாழ்நாள் முடியக் கதர், எளிமை, கொல்லாமை, தூய்மை என்று பிரதிக்ஞை எடுத்துக் கொள்கிறோம். பிரேமா ஆசிரமத்தை விட்டு வீட்டுக்குப் போனால் நைலக்ஸ் வகைதான் உடுத்துகிறாள். போன மாசம் யாரோ ஒரு நீண்ட முடி வெள்ளைக்கார ஜோடி நம் குடிசையில் வந்து தங்கினார்களே, அவர்கள் கஞ்சா கொண்டு வந்திருந்ததாக ரங்கன் சொன்னான். இந்த மலையில் கஞ்சா பயிரிடுகிறார்களா என்று விசாரிக்கவே அவர்கள் வந்ததாக துரை சொன்னார். இந்த உலகத்தை நாம் என்ன செய்ய முடியும்?"

     ஜோசஃப் மறுமொழி ஏதுமே கூறவில்லை.

     சுமதி தாயி, மாதாஜியுடன் காலையிலேயே புறப்பட்டுப் போய்விட்டாளாம். துரையும் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற குழந்தைகளும் கூடக் காலை பஸ்ஸில் ஆசிரமத்துக்குத் திரும்புகிறார்கள்.

     யமுனாவும் ஜோசஃபும் வரும்போது பஸ் போய்விட்டது. அடுத்த பஸ் நேராக அந்த வழியில் செல்லாது. எனினும் காத்திருந்து அதில் ஏறுகின்றனர். பிற்பகல் இரண்டரை மணிக்கு அது மஞ்சூரில் வந்து நிற்கிறது. அணைக்கட்டும் மின்நிலையமும் வந்த பிறகு பெருத்த ஊர். பஸ் நிற்குமிடம் வழக்கம் போல் கசமுசவென்றிருக்கிறது. மழை பெய்திருப்பதால் சரிவுகளில் பெண்கள் மண்வெட்டியும், கொத்தும், கூடையுமாகச் சளைக்காமல் வேலைக்கு இறங்கி விட்டனர். படுகப் பெண்டிர் மண்ணின் செவ்வியர்.

     சரிவில் கொத்திக் கொண்டிருக்கும் பெண்ணைப் பார்த்துக் கொண்டு நிற்கையில், யமுனாவின் முகத்தில் ஏக்கத்தின் சாயல் படருகிறது. "அந்தப் பெண்ணைப் பார்த்தால் பொறாமையாக இருக்கிறது. அரசியலின் அவலங்களைப் பற்றியெல்லாம் சிந்திக்காமல் காலமறிந்து உழைத்து விளைவு காண்பதற்காக வாழ்கிறாள். அறிவு வளர வளரப் பிரச்னைகளும் சங்கடங்களும் தான் வளருகின்றன. அறியாமை போற்றக் கூடியதொன்றாகிறது."

     "அறியாமை - அறிவு, இரண்டையும் சரியான பொருளில் கண்டு நீ சொல்லவில்லை. வெறும் ஏட்டுக் கல்வியினால் அறிவு கூடிவிட்டதாகவும், பத்திரிகை படித்து அரசியல் அக்கப்போர்களை விவரிக்காததனால் அறியாமை நிறைந்தவளென்றோ ஏன் எடைபோடுகிறாய்? ஆனால் யமு, இப்பப் பாரு. உன்னைப் பார்த்துக் கொண்டு அவள் வேலை மறந்து நிற்கிறாள்?" இது ஜோசஃப்.

     உண்மைதான். அந்த நங்கை இவளைப் பார்த்துக் கொண்டு நிற்கிறாள். யமுனா சிரிக்கையில் அவளும் புன்னகை பூக்கிறாள்.

     "இது எந்தொரு சல்யம் பிடிச்ச வாழ்வு. அந்தப் பெண் எத்தனை அழகு! எத்ர பாக்யசாலி! ஒருபாடு படுச்சு, டீச்சர் உத்தியோகம் பார்ப்பது எத்ர கேமன்மை யானு! 'இப்படி வெயிலும் பனியும் கொண்டு, மழயும் சகிச்சி, மானத்தையும் மண்ணையும் பார்த்து வாழ்வதொரு வாழ்வா!'ன்னு நினைச்சிருக்கும் யமு. மனுஷ மனசுக்குத் திருப்தி ஒருபோதும் கிடையாது. தியாகத்திலே ஆரம்பிச்சு அஞ்சு ஏக்கரும் பத்து ஏக்கரும் வாங்கினவர்கள், பொது வாழ்வில் சுயநலப்பசை ஒட்டி ஒட்டிப் பதவிப் பித்தாகி விட்டதைக் கண்ணால் பார்க்கலே? கிடச்சதைச் செம்மையாக்கிக் கொள்ள அறிவு வேணும். ஒரு செரட்டைச் சில்லுகிட்டியெங்கிலும் அதையும் தேச்சு மினுக்கிக் கலாவஸ்துவாக ஆக்குவதுபோல் வாழ்க்கையை வாழணும் குஞ்ஞே. சுகதுக்கம் சமமாகும் போள் ஏக்கமேது; நம்பிக்கையோடு முயற்சி செய். பலனைப் பற்றிக் கவலைப்படாதே. அதுதானல்லோ கீதாசாரியன் சொன்னதுங்கூட?"

     "அம்மாவா! பதவியிலமர்ந்தால் அப்படிச் சமமாகப் பார்க்க முடியாதென்று தான் நீங்கள் கரையோரமாக ஒதுங்கி விட்டீர்களா?"

     மூக்குக் கண்ணாடிக்குள்ளிருக்கும் விழிகள் அவளைப் பார்த்துச் சிரிக்கின்றன.

     "பதவியில் அமருமுன் நம்முடைய தலைவர்களின் பேச்சுகளும் நடப்பும், பிறகு கொள்கைகளைக் கையாள ஆட்சி கைக்கொண்டு பிறகு மாறிப் போவதால் தான் இளந் தலமுறை நம்பிக்கையில்லாமல் போனது. தனிமனிதனின் ஒரு தூய்மையான நடப்பினாலேயே நாணயம், ஒழுங்கு எல்லாம் இருந்தாலே சமுதாயமும், ஜனநாயக அரசாட்சியும் மேன்மையாகும்..."

     "இதற்கு நம்மால் இப்ப என்ன செய்ய முடியும் அம்மாவா?"

     "உம்...?...யமு, இந்த நூற்றாண்டு ஆகோஷமெல்லாம் எதற்கு? நமக்கு விளம்பரமா? அல்ல. ஒரு பத்து நூறு குட்டிகள் இளந்தலமுறை கண்டு கேட்டு மனசில் வாழ்க்கையின் நல்ல நல்ல நெறிகளெல்லாம் பதியணும். இந்த நூற்றாண்டுத் திட்டமாக, வெறும் பாதயாத்திரையோடு நிற்காமல், மூலை முடுக்கெல்லாம், முக்கியமாக மனுஷ மதிப்புகளுக்கு இடம் கொடுக்காத நகரத்தில் நெறியோடு கூடிய வாழ்க்கைக்குப் பிரசாரம் செய்ய வேணும். இது என்னோட யோசனை..."

     யமுனா மௌனமாக நிற்கிறாள்.

     "அம்மையிடமும் அச்சனிடமுங்கூட இதே சொன்னது. ஏற்கெனவே முதிர்ந்து வழிமாறிப் போனவர்களைத் திருத்துவதை விட, இனி வளரும் தலைமுறைக்கு நல்ல வழிகாட்டுவது அவசியம் அல்ல? மூலைக்கு மூலை எலிமெண்டரி ஸ்கூல் மிடில் ஸ்கூல் ஹைஸ்கூல் எங்கும் பிரசாரம் செய்யணும். ஒரு நல்ல சமுதாயத்துக்கு வித்திடணும். யமுனா உரச்சு நிற்கணும் எந்தா?"

     "செய்யலாம் அம்மாவா..."

     "இதில் ஒரு சங்கடம். ஏது மண்ணாங்கட்டிக்கும் அரசியல் கலர் பூசினால்தான் இப்போள் விளம்பரம் கிட்டும். நாட்டுக்கார் மத்தியில் கொடி கட்டிப் பரன்ன சினிமாக்காரங்களே, இந்த கதிக்கு வந்திருக்கும் போது நாம் எம் மாத்திரம்? ஒரு பத்து ஸ்கூலில் சர்வோதய சேவா சிரமத்தைச் சேர்ந்த யமுனா காந்தியப் பிரசாரம் செய்யப் போவதாக ஏற்பாடு செய்யலாம்னு வச்சால், ஒவ்வொரு ஸ்கூலும் அரசியலுக்கு அப்பால் இருக்கணும். அரசு ஸ்கூல் ஒருவகை, மானேஜ்மெண்டாயிருந்தால் ஒரு குறிப்பிட்ட கட்சிண்ணு சார்ந்து இருந்தால் கஷ்டம்..."

     ஆசிரமம் வழியாகக் கோவை செல்லும் பஸ் முக்கி முனகிக் கொண்டு வருகிறது. அந்தப் பாதையில் சுற்றி வளைந்து மலையை விட்டிறங்கும் பஸ் அது ஒன்றுதான். ஆசிரமத்திற்குச் சாலையில் இறங்கிய பின் செம்மண் பாதையில் நடக்க வேண்டும்.

     சாலையில் வந்து இறங்கும் போது மாலையில் ஐந்தே கால் மணியாகியது. வானம் இருண்டு கிடக்கிறது. கானகத்தினிடையே மனிதப்பூண்டின் அரவம் கேட்காத அமைதி. அடர்ந்த காடுகள் மண்டிக் கிடக்கும் ஆற்றின் கரைகளினூடே அவள் சிறுமியாய் ஜோசஃபுடன் எத்தனை நாட்கள் குதித்து நடந்திருக்கிறாள்! அணைத்திட்டங்கள் வருமுன்பு அங்கு பள்ளிக்கூடம் கிடையாது. அப்பாவும் அம்மாவும் மருந்துப் பெட்டியையும் ஊசிக்குழாயையும் தூக்கிக் கொண்டு மலைகளையெல்லாம் சுற்றப் போய் விடுவார்கள். ஜோசஃப் அம்மாவன் பாதையைச் சீர் செய்வார். ஆற்றுத் தண்ணீரை இறைத்து விளைநிலம் பாலிப்பார். மாலையில் ஒவ்வொரு கிராமமாக பஜனை செய்யப் போவார். படிப்புங் கூடக் கற்பிப்பார். அவள் இருளக் குழந்தைகளிடையே அரசகுமாரியைப் போல் அச்சமின்றிச் சுற்றுவாள். காடை, உடை, புளி, ஆல், அத்தி, கோங்கு மரங்களிடையே காட்டுக் கொடிகள் பின்னிப் படர்ந்து கிடக்கும் இடங்களில் வன விலங்குகளின் அச்சம் உணராமல் முன் செல்வாள். 'காட்டுத் தோழர்களே, நாங்கள் வருகிறோம்' என்று இருவரும் கைகளைக் கொட்டிக் கொண்டு செல்வார்கள். சிவந்து நீரோட்டம் வாய்ந்த நெல்லிக்கனிகளைக் கடித்துக் கொண்டு சென்ற அந்த நாட்கள் எவ்வளவு இன்பமானவை!

     ஒருமுறை சுதீரை அழைத்துச் சென்று யாரோ ஒரு இருளப் பிள்ளையைக் கத்தச் சொல்லி, கரடி கத்துகிறது என்று அச்சுறுத்திக் கைகொட்டிச் சிரித்திருக்கிறாள். அவன், இப்போது அவளை அச்சுறுத்திப் பார்க்கிறான்.

     பாறை இடுக்குகளில் பெரிய கொடுக்கோடு குடியிருக்கும் தேள் வர்க்கங்களைக் காட்டி, அம்மாவன் அவளுக்குக் கொல்லாமையும் அஞ்சாமையும் பழக்கியிருக்கிறார். பெரிய புற்றுக்குள் பாம்பு இருக்குமோ என்று குச்சி கொண்டு குத்திப் பார்க்கக் கூடாது என்று சுதீருக்கு அந்தக் காலத்தில் அவள் விளக்கியதுண்டு. அங்கே திறந்த வெளிபோன்று அகன்ற சரிவில் ஆறு உருண்டைக் கற்களுக்கிடையே குழந்தைச் சிரிப்புச் சிரித்துக் கொண்டு வரும். அணைத்தேக்கம் வந்த பிறகு அந்த அழகுகளெல்லாம் கனவாகி விட்டன. மின்நிலையத் திட்டம் நடைபெற்ற காலத்தில் வண்ண வண்ணமாக மக்கள் அங்கே உல்லாசப் பொழுது போக்க வருவார்கள். அவளும் அம்மாவனும், தந்தையும் தாயும், ரங்கனும் அவன் குழந்தைகளும், காலையில் அங்கு சென்று பிரார்த்தனை பாடி, நீராடி, கூட்டாஞ் சோறு பொங்கி உண்டு களித்த நாட்கள் பல. கமலம்மா உதகை ஸீஸனுக்கு வந்தால் ஆசிரமத்தில் வந்து ஒரு வாரம் தங்குவார். அவருங்கூட அந்த இடத்துக்கு அழைத்துச் செல்லச் சொல்வார். அம்மாவன் கமலம்மாவுக்காகவே தனியாக ஒரு குடிலைத் தம் கைகளால் கட்டினாராம். இப்போதும் அது விருந்தினர் குடிலாக இருக்கிறது. இப்போது கமலம்மா அங்கு வந்து தங்குவதில்லை. உதகைக்கு வந்தாலும், இம்முறை ஆசிரமத்துக்கு வரவேயில்லை...

     ரி...ம் ரீ...ஈம் என்ற குழளொலி அவள் சிந்தையை துண்டித்துத் தூக்கி வாரிப் போடச் செய்கிறது.

     சாலையின் ஓரமாக அவள் விலகிக் கொள்கிறாள். அந்த நீல வண்டி சுர்ரென்று வந்து உராய்ந்தாற் போல் நிற்கிறது.

     "சுதீர்..."

     சுதீர் தான் ஓட்டும் ஆசனத்திலிருந்து கதவைத் திறந்து கொண்டு சிரிக்கிறான். காட்டுமிராண்டித் தோற்றம் காண்பித்த கருமையும் காதோரத் தூண்களும் கூட மழிக்கப்பட்டு முகம் மென்மை இயல்பைக் காட்டுகிறது.

     "உங்க பஸ்ஸைப் பிடிக்கணும்னு துரத்திக் கொண்டு வந்தேன். இந்தா யமு?"

     யமுனாவிடம் சிரித்துப் பேசி, அந்தப் பழுப்பு நிறப் பாக்கெட்டைக் கொடுக்கிறான்.

     "என்னது இது?"

     "உன் சேலை. விட்டுப்போய் விட்டாயே? வேறொன்றுமில்லை; பயந்துவிடாதே!"

     "நன்றி, இதை... நீங்கள் கொண்டு வருவதற்காகவா... வாருங்கள்!"

     "ஏன், இதைக் கொண்டு வருவதற்காக நான் வரக் கூடாதா?" ஒரு சிரிப்பு. சண்பகப் பூக்கள் இளங்காற்றில் சிதறுகின்றன. கதவைச் சாத்துகிறான்.

     "நீங்கள் உள்ளே வரலியா?"

     "இல்லே. கோயமுத்தூர் போகிறேன். ஆறரை மணிக்கு ஒரு மீட்டிங்."

     வண்டி பாதையில் மெல்ல இழிந்து செல்கிறது.

     சேலையை அழகாக மடித்துக் காகிதப் பைக்குள் வைத்துக் கட்டியிருக்கிறார். கமலம்மா தான் கட்டியிருப்பார்.

     கோயமுத்தூர் கூட்டத்துக்குப் போகிறேன் என்று சொல்லியிருப்பாரோ; போகும்போது கமலம்மா புடவையைக் கொண்டுபோய்க் கொடு என்று சொல்லியிருப்பாரோ?

     உள்ளே வந்து காகிதத்தைப் பிரிக்கும் போது மேலாக ஒரு துண்டுக் கடிதம் இருக்கிறது. "நேற்றிரவு பண்புக் குறைவாக நடந்திருந்தால் மன்னித்துவிடு. சுதீர்..."






புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
151
152
153
154
155
156
157
158
159
160
161
162
163
164
165
166
167
168
169
170
171
172
173
174
175
176
177
178
179
180
181
182
183
184
185
186
187
188
189
190
191
192
193
194
195
196
197
198
199
200
201
202
203
204
205
206
207
208
209
210
211
212
213
214
215
216
217
218
219
220
221
222
223
224
225
226
227
228
229
230
231
232
233
234
235
236
237
238
239
240
240
241
242
243
244
245
246
247