22

     விடியற்காலையின் குளிர்ந்த அணைப்பில் அயர்ந்து உறங்குபவர்களை எல்லாம் தெருவில் ஒலிக்கும் அந்தக் குரல் தட்டி எழுப்பி விடுகிறது. மாடி முகப்புகளிலும், வாயில்களிலும், இரவெல்லாம் வாட்டி எடுக்கும் வெம்மையில் தூங்காது தவித்தவர்கள், "சித்தேஷ்வர் நிவாஸ் - துரைராஜ்" என்ற குரலுக்கு விழித்து எரிந்து விழுகின்றனர்.

     "இங்கில்லே - கிழக்கே தள்ளி விசாரி, சரியாக விலாசம் தெரியாமல் லொட் லொட்டுன்னு இடிச்சுப் பிராணனை வாங்கறான்?"

     நடுத்தெருவில் முரட்டுச் செருப்பொலி முழுத்தெருவையும் எழுப்பிவிடப் போதுமானதாக இருக்கிறது. மொட்டை மாடியில் படுத்திருக்கும் யமுனாவின் செவிகளை அந்தக் குரல் எட்டுமுன் அக்கம்பக்கம் முழுவதும் எழுந்தாயிற்று.

     பாபாதான் கீழே கதவைத் தடதடவென்று தட்டுகிறான்.

     "யமு...!"

     "அம்மாவன்..."

     பூட்டு விடுபட்டாற்போல் மகிழ்ச்சி ஆவேசமாகப் பெருகுகிறது. இரண்டு படிகளை ஒரெட்டாய்க் கடக்கும் அவசரம். கதவைத் திறக்குமுன் குரல் உற்சாகமாய்க் கரை புரளுகிறது.

     "கடிதாசி போடாமல் திடும்னு வந்துட்டீங்களே, அம்மாவா?"

     "உன்னைத் தேடிக் கண்டுபிடிக்கு முன்னே இந்த இரண்டு தெருவைத்தான் எழுப்பிச் சண்டைக்கிழுக்க முடிந்தது..."

     "அட்ரஸ் சரியாகத் தெரியலியா? ஸ்ரீகிருஷ்ண நகரில் நம் வீட்டுக்காரர் பழைய போலீஸ்துரை ஸின்னா வீடுன்னு பேர் சொன்னாப் போதுமே? ஸ்டேஷனிலிருந்தா நடந்து வரீங்க?"

     "ஆமாம். விடியற்காலையில் டாடா நகர்லேருந்து ஒரு வண்டியில் வந்து, ஈயாள் நடந்து கூட்டிப்போறேன்னு சொல்லி, சரின்னேன். இந்தப் பேட்டையையே சுத்தி ரெண்டு தெருவை எழுப்பி நான் மோளைத் தேடி வந்ததைத் தம்பட்டம் அடிச்சாச்சு..."

     பெட்டியுடன் கூட்டி வந்த ஆளுக்குக் கூலியைக் கொடுத்து அவர் அனுப்புகிறார்.

     "நேத்துத்தான் நான் நினைச்சேன். எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது..."

     பதினைந்து வயசு பின்னுக்குப் போய்விட்டாற்போல் அவள் குதித்துக் கொண்டு மாடிக்குப் போகிறாள்.

     "யார் வந்திருக்காங்கன்னு பாருங்க...!"

     "அதுக்குள்ள அவரை ஏன் எழுப்புறே? சும்மா இரு மோளே!"

     துரை எழுந்திருக்குமுன் சிகரெட் பெட்டியை எடுத்து எங்கோ ஒளித்துக் கொண்டு ஓடுகிறாள்.

     துரை கண்களைத் துடைத்துக் கொண்டு பார்க்குமுன் ஜோசஃப் மாடியேறி வந்துவிடுகிறார்.

     "எந்தா! திருவள்ளுவர் ஸாரே! வாழ்க்கை எப்படி இருக்கு?"

     துரை தூக்கக் கலக்கம் மாறாமல் புன்னகை செய்கிறான்.

     "யமுனா நீங்க வர்றதாச் சொல்லலியே? நாங்க கல்கத்தாவை விட்டு வர அன்னிக்கு ஸ்டேஷனில் திடீர்னு சுதீர் வந்தார். உங்களைப் பார்த்ததாகச் சொன்னார்..."

     "ஆமாம் என்னை எங்கோ ஸ்டேஷனில் பார்த்தான். யமுனா எப்படி இருக்கிறாள்னு விசாரிச்சான். சொன்னேன்... ஹும், எப்படி இருக்கு தொழிலெல்லாம்?"

     "தொழிலா? அதை ஏன் கேட்கிறீங்க? ஊரைக் கொளுத்தியே தீருவேன்னு கங்கணம் கட்டிட்டு இருக்கிறாங்களே? நேத்து எங்க ஆபீஸ் மானேஜரை கேரோ செய்திட்டாங்க. இன்னிக்கு விடிஞ்சு நான் ஆபீசுக்குப் போகணும். சாயங்காலம் எப்படி வருவேன்னு எனக்கே தெரியாது... இங்கே பிஹாரிகளுக்குச் சூதுவாதுன்னா என்னென்னே தெரியாது. இந்த அரசியல்வாதிகள் பண்ற அக்கிரமத்தைச் சொல்லுங்க! அது கிடக்கட்டும், நம்ம பக்கம் எப்படி இருக்கு? அம்மா சுகமா? ஐயா இப்ப எப்படி இருக்காரு?"

     "இருக்கு. நம்ம ஸ்கூலில் ட்ரெயினிங் எடுக்க, அடுத்த வருஷம் ரிடையராகப் போகும் இந்திப் பண்டிதர்களெல்லாம் வந்தார்கள்."

     "அம்மாவா, நீங்க இப்ப நல்ல தமிழ் பேசுறீங்க?"

     "...ஓ... அப்படியா? நாவுக்கரசுன்னு ஒரு ஆள் வந்திருந்தார். அவர் நான் பேசும் போதெல்லாம் தப்பு தப்புன்னு குட்டிட்டே இருப்பார். பிரேமா கல்யாணம் கழிச்சு ஆசிரமத்தை விட்டுப் போயி. முருகி டிரெயினிங் எடுக்கிறாள்."

     "முருகியா...?"

     "அதே, மரியண்ணனில்லை? ஒயர்மென் பரிட்சை பாஸாயி ஊட்டியில் வேலைக்குப் போயிருக்கிறான்?"

     "கீழக்காட்டு மரியண்ணனா அம்மாவா?"

     "ஆமாம். அப்புறம் ஒத்தக்கொம்பு ஆனயில்ல? அதைப் போலீஸ் வந்து வெடிவச்சுக் கொன்னு."

     "நம் ஆசிரமத்தின் பக்கமா?"

     "முள்ளியாற்றின் பிறகே அஞ்சு திவசம் போலீஸ் கூடாரமடிச்சிருந்தது...!" என்று சொல்லிக் கொண்டு பெட்டியைத் திறந்து ஒரு பெரிய பாலிதீன் பையை எடுக்கிறார்.

     நேந்திரங்காய் வறுவல்...

     "இது கடையில் வாங்கினதல்ல மகளே! நம் மரம் போட்ட தாரில் விளைஞ்சு அம்மை வறுத்து தந்தது."

     "ஓ, உங்கள் குடிசையின் பக்கம் வச்ச வாழைக்கன்றா அம்மாவா?"

     "ஆமாம் மகளே... நிறையக் கன்னுண்டாயி; போன வருஷம் நல்ல மழையல்ல?..."

     அதுல் பாலை வாங்கி வந்ததும் யமுனா தேநீர் போட்டுக் கொண்டு வருகிறாள்.

     "இன்னிக்குச் சாயங்காலம் நேரமாகுமா வீடு வர?"

     "என் கையில் இல்லை அது. நான் வரணும்னு எதிர் பார்த்திருக்காம இங்க வேலையைப் பாருங்க. வெளியில போவதானால் சாவியைக் கொடுத்துவிட்டுப் போங்க."

     ஜோசஃப் கங்கைக்குப் போய் நீராடித் திரும்பி வருமுன் துரை அலுவலகம் போய்விட்டான்.

     "பிப்ரவரி மார்ச்சில் வந்திருக்கக் கூடாதா அம்மாவா? இந்த வெய்யிலில் வந்தீர்களே?"

     "இப்போது லீவு யமுனா! நான் நாளயே முஸபூர்பர் போகிறேன். சர்வோதய காம்ப்..."

     "ஓ! அதற்குத்தான் வந்தீங்களா?"

     யமுனா அவரையே பார்த்துக் கொண்டிருக்கிறாள். விழிகளில் ஏக்கம் நிழலாடுகிறது.

     "எனக்கும் சர்வோதயக் காம்புக்கு வரணும்னு ஆசையா இருக்கு அம்மாவா?"

     "மோளே, நீ இளைச்சு மெலிஞ்சு போயி. அம்மைக்கு என்ன சமாசாரம் சொல்லணும்?"

     யமுனா வெற்றிடத்தைப் பார்த்தாற்போல் நிலைக்கிறாள். மெல்லிய நெடுமூச்சு இழைக்கிறது.

     "அம்மாவா? காட்டுக்குள் இன்னமும் பாசறை இருக்கிறதோ? கேறனும் மாரனும் வருகிறார்களோ, நோட்டீசு வீசிப் போக?"

     "கேறனை யாரோ குத்திக் கொன்னு... அவ்விடமெல்லாம் போலீசு கண்காணிப்புண்டு..."

     இதைச் சாதாரணமாகச் சொல்வது போல் சொல்கிறார்.

     யமுனா வேதனையுடன் "இனி போலீசைக் குத்திக் கொல்ல வருவார்கள்" என்று முணமுணக்கிறாள்.

     "மோளே, கல்கத்தாவில் சுதீரைப் பார்த்தாயோ?"

     "இல்லை, நான் எதற்குப் பார்க்கணும் அம்மாவா? ஒரு துரோகியின் முகத்தில் விழிக்கக்கூட எனக்கு இஷ்டமில்லை."

     "அது தப்பு மகளே, வெறுப்பில் அன்பும் அஹிம்சையும் வளராது. நீ ஒரு போதும் யார் மீதும் வெறுப்புக்கோ பகைக்கோ இடம் கொடுக்காமலிருக்கப் பழகிக் கொள்ள வேணும். துரை பகலுணவுக்கு வருவதில்லையா?"

     "ஊஹும். மாசம் இருபது நாள் ஊரில் இருப்பதுமில்லை."

     "பகலெல்லாம் உனக்கு ஜோலி?"

     "ஒண்ணும் சுகமில்லே. சர்க்கா சங்கத்தில் யாரும், வருவதில்லை. மாந்தோப்புக் குடிசைப் பக்கம் போய் குடிக்கக் கூடாதென்று சொல்வேன். குளிர் தாங்க முடியாமலிருக்கும் போது பங்களாவெல்லாம் ஏறி இறங்கிக் கம்பளி துணிமணி சேர்த்துத் தச்சு ஒட்டி இல்லாதவர்களுக்குக் கொடுத்தேன். இதற்காக நான் இந்த ஊர்ப் பெரிய மனிதர்களிடம் உதவி கேட்கப் போனதைப் பற்றிப் பிறகு சொல்கிறேன். அக்கம் பக்கம் அலையும் குழந்தைகளுக்கு நல்ல வழக்கங்களும் படிப்பறிவும் சொல்லிக் கொடுக்கிறேன். அதற்குள் இங்கிருப்பவர்கள், தோஸாதும் குர்மியும் பக்கத்தில் தொட்டுக் கொள்கிறாள்னு, வம்பு பேசுகிறார்கள். ஒரு ஒழுங்காக எதுவும் செய்ய முடியவில்லை, அம்மாவா..."

     ஜோசஃபின் நோக்கு முன்னறை அலங்காரங்களைச் சுற்றி அலைகிறது. அன்னப்பட்சிகள் போன்ற அலங்கார பொம்மையை எடுத்துப் பார்க்கிறார். இடையில் சிறு கடிகாரம்.

     ஜப்பானில் செய்தது.

     நடுமேஜையில் ஒரு பளிங்கு போன்ற சாம்பல் கிண்ணம்.

     உட்கார்ந்து படிக்கும் வகையில் பெரிய அலங்கார விளக்கு. அவர் அதை எல்லாம் பார்க்கும் போது யமுனா உள்ளே வேலையாக இருப்பதைப் போல் பரபரக்கிறாள்.

     "மாஜி!..." என்று அழைத்துக் கொண்டு வண்ணாத்தி வருகிறாள். இஸ்திரி போட்ட துரையின் உடுப்புகளை அடுக்காக வைக்கிறாள். சைனா என்று முத்திரை தெரியும்படி மடித்து வைத்திருக்கிறாள்.

     "யமுனா..."

     அவள் சட்டென்று வந்து துணி அடுக்கை உள்ளே கொண்டுபோய் அலமாரியைத் திறந்து வைக்கிறாள். அலமாரியைத் திறக்கையில் குபீரென்று மணங்கள் கமழ்கின்றன. மடிப்பு மடிப்பாகக் கழுத்தில் கட்டிக் கொள்ளும் 'டை'கள் தொங்குகின்றன.

     ஏறும் வெயிலின் கடுமையைச் சமாளிப்பது போல் விசிறியைப் போட்டுவிட்டுப் புன்னகை பூக்கிறாள்.

     "என்ன சமையல் பண்ணலாம் அம்மாவா?"

     "துரை வருவாரா, சாப்பிட? ஓட்டலா?"

     "வேறு என்ன செய்யலாம் சொல்லுங்க?"

     "நீ... நீ சந்தோஷமாக இருக்கிறாயா மகளே?"

     "ஏன், என்னைப் பார்த்தால் எப்படி இருக்கு?"

     அவள் சிரிக்க முயன்றாலும் தொலைவில் கார்மேகம் குமுறுவது போலிருக்கிறது.

     கிழங்கை நறுக்கி வேக வைத்து விட்டு மாவைப் பிசையத் தொடங்குகிறாள். சமையலறையில் இரண்டொரு பீங்கான் பாண்டங்கள் இருக்கின்றன. மேடையில் வெண்ணெய்க் கல் பாவி துப்புரவாக இருக்கின்றன. கை துடைத்துக் கொள்ள ஒரு பழைய கந்தலை வெண்மையாக மாட்டிக் கொண்டிருக்கிறாள்.

     "இரண்டு பேருக்கு இவ்வளவு மா பிசைகிறாயே?"

     "சாயங்காலம் நாலைந்து குழந்தைகள் வருவார்கள். பூரி எல்லாம் அவர்களுக்கு யார் செய்து கொடுப்பார்கள்? அம்மாவா, இங்கே 'ராம்தானா' என்று ஒரு தானியம் இருக்கிறது. நம்மூர் கீரை விதையைப் போல் அளவில் பெரிதாக இருக்கிறது. அதை லட்டு செய்கிறார்கள். நாம் கீரைப் பொரி உருண்டை செய்வது போல் சம்பா எனக்குச் செய்து கொண்டு வந்தாள்..."

     "யார் சம்பா?"

     "இங்கே இருக்கிறாள். புருஷன் எங்கோ கல்கத்தா சணல் ஆலையில் பதினைந்து வருஷமாக வேலை செய்து ரூபாய் அனுப்புகிறான். இவள் இரண்டாவது பெண் சாதி. ஏழு குழந்தைகள்..."

     "அந்தக் குழந்தைகள் தாம் இங்கு வருவார்களா?"

     "அதில் மூன்று பேர் வருவார்கள்..."

     "துரை இதற்கெல்லாம்..."

     அவர் நீட்டுமுன் உண்மை பட்டென்று வெடித்து விடக் கூடாதென்று அவள் பேச்சை மாற்றிச் சிலம்பம் ஆடுகிறாள்.

     "சுதீரை நீங்கள் பார்த்தீங்களா அம்மாவா?"

     "இப்பவா? இந்தப் பக்கம் இருக்கிறான்னு கேள்வி. எனக்குக் கூட அவனைப் பார்க்கவேணும். ஊட்டியிலிருக்கும் அவர்கள் பங்களா பூட்டிக் கிடக்கிறது. அதை ஒருவர் விலைக்குக் கேட்டார்."

     "நான் முன்னெல்லாம் வாழ்க்கைக்கு வசதியில்லாதவர்கள் தான் நாசத்தை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கட்சியில் சேர்வார்கள்னு நினைச்சிட்டிருந்தேன், அது தவறு. வசதியுள்ள எதற்கும் சுதந்திரம் உள்ள குடும்பங்களில் இளமை கட்டவிழ்ந்து நாசத்தில் ஒன்றிக் கொள்ள, ஒரு நியாயம் தேடிக் கொள்ள இந்தக் கட்சி வாய்ப்பு அளிக்கிறது. ஒன்றுக்குமே வசதி இல்லாத சூதுவாதறியாத மலைவாசிகளிடமும், இயற்கையின் குழந்தைகளிடமும் நாசவன்மையைத் தூண்டி விட்டு இவர்கள் கட்சித் தலைவியாக ஆடுகிறார்கள்..."

     அம்மாவன் அவளையே பார்த்துக் கொண்டிருக்கிறார்.

     "ஒரு தரம் எங்க காலேஜில் சுதீர் பேச வந்தார்... அப்ப கொஞ்சம் பெண்களெல்லாம் அவர் வந்து காலேஜில் பேசணும்னு தலைவியிடம் சொல்லித்தான் ஏற்பாடு செய்தார்கள். நமக்கு மாறுபட்ட கருத்துக்களோடு மோதும் சுதந்திரம் வேண்டும் என்பதுதான் அவர் நோக்கமும். அன்றைக்கு சுதீர் பேசிய விஷயம் எனக்கு நல்லா நினைவிருக்கு. சமுதாய அமைப்பில் பெண்கள் பங்கு... என்ற விஷயம்.

     "பேசி முடிச்ச பிறகு ஒரு கூட்டம் ஆட்டோகிராப் வாங்கப் போச்சு. அப்ப, சுதான்னு ஒருத்தி கேட்டாள்.

     "'நம் இந்திய ஆணின் மனப்பான்மை தன் மனைவி தனக்கு அடங்கியவளாக இருக்க வேண்டும் என்பதுதான். இதை நீங்கள் ஒத்துக் கொள்ள வேண்டும்!' என்றாள்.

     "அவர் அப்போது என்னையே பார்த்துக் கொண்டு 'நான் நீங்கள் கட்டாயப்படுத்துவதற்காக ஒப்புக் கொள்ள முடியாது' என்று சிரித்தார். எனக்கு ஒரே ஆத்திரம். 'அப்ப கட்டாயப்படுத்தாமலிருந்தால் ஒத்துக் கொள்வீர்களாக்கும்!' என்றேன்.

     "'அப்படியும் இல்லை. நான் இப்படிச் சொல்லட்டுமா? நம் சராசரி பெண்ணின் மனப்பான்மை ஒரு ஆணின் ஆணையில் அடங்கிக் கிடப்பதையே மோட்சம் என்று கருதிக் கொண்டு ஆணின் மனப்பான்மை என்று குற்றத்தைப் போடுகிறது?' என்று சொன்னார்.

     "அப்போது எனக்கு அவர் கூற்றை யோசிக்கவோ ஆராயவோ நிதானமில்லை. அவரை மறுத்துப் பேசும் ஆத்திரந்தான் இருந்தது. 'அப்படி ஒன்றும் கிடையாது! ஒரு பெண்ணுக்கு வாழ்க்கையில் எக்காலத்தும் நீங்கள் சமத்துவம் கொடுக்கவில்லை. பெண்ணுக்குச் சுதந்திரம் கிடையாது என்ற கோட்பாட்டை வகுத்தது உங்கவர்க்கந்தான்!' என்று கத்தினேன்.

     "அவர் சிரித்துக் கொண்டே, 'ஒப்புக் கொள்கிறேன் அம்மணி! எனக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுக்க முன்வந்தால் இல்லை என்று நிரூபித்துக் காட்டுகிறேன்' என்றார். அன்று மற்றவர்களெல்லாம் சிரிச்சுக் கைகொட்டி உண்டு இல்லைன்னு தீர்த்தார்கள்... இப்ப..."

     சடக்கென்று நாவைக் கடித்துக் கொண்டாற்போல் தலைகுனிய நிறுத்திக் கொள்கிறாள். புழுக்கமான அறையில் ஏதோ ஒரு சிறிய துவாரம் வழியாகப் பூங்காற்று வந்து, பட்டென்று அது மூடிக் கொண்டாற்போல் இருக்கிறது.

     "யமு.. அப்படிச் சந்தர்ப்பம் கொடுக்காமல் இருந்ததற்காக, இப்ப... கிலேசப்படுகிறாயாம்மா? இதை முன்பே நீ ஏனம்மா என்னிடம் சொல்லியிருக்கவில்லை."

     "இல்லை அம்மாவா. ஒரு ஆணோ பெண்ணோ சமுதாயக் கட்டுக்கோப்பைத் தனியாயிருந்து காப்பாற்ற முடியாது என்று தன் பலவீனத்தைப் புரிந்து கொண்டு திருமணம் என்ற புனிதமான ஒப்பந்தத்துள் ஒன்றுபடுகிறார்கள் என்று தான் நான் எண்ணியிருந்தேன். அப்படி ஒரு வாழ்க்கை அமைப்பில் நான் பங்கு கொள்ளப் போகும் ஒருவர், நாசத்தையும் சந்தேகத்தையும் அடிப்படையாகக் கொண்ட ஓர் அரசியல் கட்சியில் தன் பலவீனங்களுக்கு வடிகாலாக அங்கம் வகிப்பவராக இருக்கையில் அப்படிப்பட்ட ஒருவருடன் என்னைப் பிணைத்துக் கொள்ளத் துணியவில்லை. நான் அவரிடம் மனைவி என்ற ஸ்தானத்தின் மதிப்பை என்னால் பெற முடியும் என்றும் நான் கருதவில்லை. ஆனால்... இப்போது... நான் அப்படிக் கருதியது கூடச் சுயநலம் என்று நினைக்கிறேன். எனக்கு உள்ளூற அமைதியான வாழ்க்கை; அவரிடம் கிடைக்காது, என்ற அச்சம் இருந்திருக்கிறது. அம்மா, ஒவ்வொரு வருஷமும் பெண்கள் விடைபெற்றுப் பள்ளியை விட்டுப் போகும்போது சொல்வாள், 'என்னிடம் இந்தப் பள்ளியிலிருந்து விடைபெற்றுப் போகும் நீங்கள் எல்லோரும் இதயங்களில் அன்பும் அஹிம்சையுமாகிய நம்பிக்கைப் பொறியை ஏந்திச் செல்கிறீர்கள்; இதை நீங்கள் செல்லுமிடங்களெல்லாம் பாதுகாத்து, இதனின்று கிடைக்கும் ஒளியால் உலகை இருள்படராமல் வைக்க வேண்டும்' என்பாள். இந்தச் சொற்களை எத்தனை முறைகளோ கேட்டிருந்தும் எனக்கு நம்பிக்கை விழவில்லையே!..."

     "அதற்குக் காரணம் நீ கண்விழித்த பிறகு உலகம் நம்பிக்கையை இழக்கத் தொடங்கி விட்டதுதான். ஒரு மனிதனை அவருடைய உயர்ந்த ஒழுக்கம் கொண்டு, தன்னலமற்ற தியாகம் ஆகியவற்றுக்காக மகாத்மா என்று அந்தக் காலத்து மக்களால் மதித்துப் போற்ற முடிந்தது. இப்போதோ, விளம்பரங்களினாலேயே ஒரு மனிதன் மகாத்மாவாக முடிகிறது. மறைவு நாள் அஞ்சலி என்று அரசியல் தலைவர்களுக்கு இன்றைய கவிஞர்கள் என்று சொல்லப்படுபவர்கள் போலிக் குரலில் அழுகிறார்களே எவ்வளவு அசிங்கமாக இருக்கிறது அது! இப்போது தலைவனாகச் சொல்பவனிடம் மக்களால் நம்பிக்கை வைக்க முடியவில்லை; அதே சமயத்தில் தலைவன் வேண்டியும் இருக்கிறது! எல்லாம் போலியாக இருக்கிறது. தலைவன் காந்திவிழாக் கொண்டாடிவிட்டு, காக்டெய்ல் பார்ட்டியில் போய் மூழ்கிக் களிக்கிறான். காந்திவிழா கொண்டாட, முன்பே விளம்பரம் வேண்டி பத்திரிகைக்காரர்களுக்கு அழைப்பு! விருந்து! இவ்வளவு மோசமான பதர்களாக இந்நாட்டில் அவர் விளைவித்த நன்னெறிகள் விளைந்துவிடும் என்று நான் நம்பியிருக்கவில்லை யமு!"

     "மதுசாரம் எப்படிக் கரை புரண்டு ஓடுகிறதென்கிறீர்கள் அம்மாவா! ஊட்டமில்லாமல் உழைத்துச் சோரும் ஏழை குடிப்பது, கொஞ்சம். வியாபார நிறுவனங்கள் லஞ்சம், சோரம், நாணயக் குறைவு இவற்றையே முதலாக வைத்துக் கொண்டு இயங்குகின்றன. தீமைகளை எதிர்ப்பதாகச் சொல்லிக் கொள்ளும் சாதாரண மனிதனும் இந்த வெள்ளத்தில் முழுகித்தான் போகிறான். ஒரு இடைநிலைக் குடும்பக்காரன் அடிப்படைத் தேவைக்கு மேல் கொஞ்சம் அதிக வருமானம் இருந்தால் உடனே மேல்வட்டத்துக்குத் தாவி விடுகிறான். புலால், மது, அந்நியத்துணி, ஆடம்பர விருந்துபசாரங்கள், பெண்டிர் பொது வாழ்வில் பண்பிழத்தல் - எல்லாம் உயர்வட்டத்து விலங்கு வாழ்க்கையை மூடியிருக்கும் ஆடம்பரப் போர்வைகள்! இதனாலெல்லாம் வாய்ப்புக் கிடைக்காமல் கொதிப்புற்ற இளைஞர் சமுதாயம் எதிர்காலத்தில் நம்பிக்கையற்று நிகழ்காலத்தை அழிக்கிறார்கள். நான் ஒரு தூசு போன்றும், என்னையே வெள்ளம் முழுங்கிவிடும் என்றுங்கூட அச்சம் மேலிடுகிறது..."

     "நான் புரிந்து கொண்டேன், யமு, புரிந்து கொண்டேன். நாசப் புரட்சியில் நம்பிக்கை வைத்த கட்சியும் ஜனநாயக முறையில் ஆட்சிப் பொறுப்பைப் பற்றலாம் என்று சொன்ன நமக்கு, அவர்கள் சவால் விடுத்திருக்கிறார்கள். இப்போது இதற்குள்ளிருந்தே இதைத் தகர்ப்பதைப் பற்றி வெளிப்படையாகப் பேசுகிறார்கள். உள்ளத்தில் சோரம் போவதையே எண்ணிக் கொண்டு திருமணப் போர்வைக்குள் புகுவதுபோல - மனசுக்குள் சுகபோகங்களையே கருதிக் கொண்டு துறவாடை மேற்கொள்வது போல் - மக்களுக்குத் தொண்டன் என்று சொல்லிக் கொண்டு பதவியைக் கைப்பற்றிக் கொள்வது போல..."

     அவர்கள் பேசிக் கொண்டிருக்கையிலேயே அதுல், நிதா மற்றும் எல்லோரும் வந்து விடுகின்றனர்.

     அவர்கள் வகுப்பு நடத்திக் கொண்டிருக்கும் போதே, ஜோசஃப் பயணத்துக்குச் சித்தமாகி விடுகிறார்.

     மாலை நேர ஸ்டீமரில் கங்கையைக் கடப்பதாகச் சொல்லிப் பையை எடுத்துக் கொண்டு செல்கிறார்.

     அவரை வழியனுப்பிவிட்டு யமுனா திரும்புகையில், துரையை அடிக்கடி பார்க்க வரும் ஒரு பருமனான சீக்கியன் வருகிறான்.

     "மிஸ்டர் துரை...?"

     "ஆபீஸிலிருந்து இன்னும் வரவில்லையே!..."

     "இதைப் பத்திரமாக வைத்து விடுங்கள்..."

     கனமான பெட்டி ஒன்றை ரிக்ஷாக்காரன் கொண்டு வந்து உள்ளே வைக்கிறான்.

     அவர்கள் சென்ற பின், மெல்லிய ஓட்டுப் பலகையினால் ஆணி அடிக்கப் பெற்ற அந்தப் பெட்டியை அவள் பார்க்கிறாள். கண்ணாடிச் சாமான்கள் போல் ஏதேனும் இருக்குமோ? ஏனோ அவளுக்கு அதைத் திறந்து பார்க்க வேண்டுமென்ற குறுகுறுப்பு மேலிடுகிறது.

     வாயிற்கதவைத் தாளிட்டு விட்டு அந்த ஆணிகளை மூடியை விட்டு நெம்பி எழுப்புகிறாள். மூடியைத் திறந்ததும் தேள் கொட்டிய மாதிரி இருக்கிறது. விலையுயர்ந்த ஆபரணங்களின் வைப்பிடம் போல் பஞ்சு மெத்தை அறைகளுக்குள் பட்டை கண்ணாடிக் குப்பிகள் திராட்சைக் குலை போன்றதொரு குப்பியில் அதன் ரசம் கண்களைப் பறிக்க மின்னுகிறது.

     அவற்றைப் பார்த்துக் கொண்டிருக்கையில் மனக் கண்ணில் ஒரு தீக்குழி தோன்றுகிறது - மாபெரும் வேள்விக்கான தீ!

     அதில் வளைக்கரங்களும், மென்கரங்களும், பட்டுப் பட்டாடைகளையும் மின்னும் அங்கிகளையும் பளபளத்து நழுவும் மேலாடைகளையும், மஸ்லீன் துணிகளையும் விசி எரிகின்றனர். தீ எல்லாவற்றையும் உண்டு தன் செந்நிற நாக்குகளைக் கொழுந்தாகச் சுழற்றிக் கொண்டு எரிகிறது. அந்தப் பெரு வேள்வியில் சுற்றி நின்ற மக்களின் சுயநல ஆசைகள் எல்லாம் கரைந்து நீராகின்றன. வற்றி மெலிந்து நெஞ்செழும்பு தெரிய அரை வேட்டிக் கச்சையுடன் ஒரு வடிவம் தலைமையாய் நடந்து செல்கிறது. பின்னே ஆணும் பெண்ணும், குஞ்சும் குழந்தையுமாய் பெருங்கூட்டம் அடிச்சுவடுகளைப் பதித்துக் கொண்டு, 'வந்தே மாதரம்' என்று கோஷித்துக் கொண்டு செல்கிறது.

     கற்பனைக் காட்சியிலே நெஞ்சு கரைகிறது.

     இங்கே குண்டு குண்டாய்ச் சுமைகள். திராட்சைக் குலையின் தோற்றத்தில் அறிவை மயக்கும் நஞ்சு. கண்ணுக்கு நஞ்சைக் கக்கும் கருநாகமும் அழகாகவே இருக்கிறது.

     இந்த நஞ்சு யாருடைய அறிவையும் குழப்பாதபடி நாசமாக வேண்டும். உடைத்துப் பாதாளச் சாக்கடையில் ஊற்றி விடலாம். கண்ணாடிச் சிதிலங்களைக் குப்பைத் தொட்டியில் போட்டு விடலாம். கள்ளிப்பெட்டி அட்டை பஞ்சுகளை ஏழைச் சம்பாவிடம் உணவுக்குத் தீ மூட்டக் கொடுத்து விடலாம்.

     நல்ல வேளையாக அம்மாவன் ஸ்டீமருக்குப் போய்விட்டார்.

     துரை ஆறேமுக்கால் மணிக்குக் கதவைத் தட்டும்போது அவள் நெடி தெரியாமலிருக்கத் தண்ணீரை ஊற்றிக் கழுவிக் கொண்டிருக்கிறாள். குளியலறையில், கூந்தலைச் சுற்றிக் கட்டிக் கொண்டு தூக்கிச் செருகிய சேலையில் ஈரம் படியக் கதவைத் திறக்கிறாள். முகத்தில் அசாதாரணமான் ஒரு பளபளப்பு மின்னுகிறது.

     "என்ன சமாசாரம்; என்னமோ வாடை வருகிறதே?" என்று கேட்டுக் கொண்டே அவன் உள்ளே நுழைகிறான்.

     "பாத்ரூமில் கொஞ்சம் ஃபினைல் ஊற்றிக் கழுவினேன்."

     "நெடி அடிக்கும்படி எதற்கு இவ்வளவு ஊற்றினாய்?"

     அவள் அதற்கு மறுமொழி கூறாமல், "இதோ குளிச்சிட்டு வரேன்" என்று உள்ளே செல்கிறாள். மடமடவென்று குழாய் கொட்டத் திறந்து வைத்துக் கொண்டு ஊற்றிக் கொள்கிறாள். சொல்லொணாத விடுதலை உணர்வு.

     அவளுடைய ஆனந்தத்தைப் பளாரென்று அறைவது போல் அலமாரிக் கதவு பளாரென்று அறைபடுகிறது.

     "யமுனா! ஏ, யமுனா..."

     அவன் தட்டும் வேகத்தில் குளியலறைக் கதவும், அந்த வெறிக்குரலில் அவள் உடலும் அதிர்கின்றன.

     "குளிச்சிட்டு வரேனே? ஏனிப்படிக் கூப்பாடு போடணும்?"

     "நீ குளிச்சிட்டு வரவேணாம்! இப்ப என்ன குளியல் சாவு நடந்தாப் போல? கதவைத் திறக்கிறியா உடைக்கட்டுமா?"

     கதவை ஒருக்களித்துத் திறந்து நீர் சொட்டும் முகத்தை மட்டும் நீட்டிக் கொண்டு அவள் அமைதியான குரலில் கேட்கிறாள்.

     "ஏனிப்படிக் கோபிக்கிறீங்க? என்ன குடி முழுகிப் போயிட்டுது?"

     "சிங்ஜி பெட்டி கொண்டுவந்து கொடுத்துப் பத்திரமாக வைக்கச் சொல்லியிருப்பானே, அது எங்கே?"

     "அது... அதை உடைச்சுக் குப்பையிலே ஊத்திட்டேன்" சாவதானமாக விழிகள் தாழ அவள் மொழிகையில் ஈரம் கொட்டும் அவள் கன்னப் பொட்டுக்களில் பளார் பளாரென்று அறைகள் விழுகின்றன! அவனுடைய கண்கள் சினத்தை உமிழ்கின்றன.

     "என்ன நினைச்சுக்கிட்டே? விளையாடுறியா நீ? மரியாதையா உள்ளதைச் சொல்லிடு."

     அவள் மறுமொழி கூறாமலே குளியலறைக் கதவைப் பின்புறமிருந்து அழுத்தப் பார்க்கிறாள். ஆனால் அவன் கதவை மல்லாத்திக் கொண்டு அவள் கையைப் பற்றி மூர்க்கத்தனமாக இழுக்கிறான். ஈரம் சொட்டும் உள்ளாடையுடன் நிற்கும் அவள் கன்னங்களில் மாறிமாறி அடிகள் விழுகின்றன. மேலே மூடியிருந்த பண்புப் போர்வை கிழித்து அரக்கத்தனம் வெளியாகிறது.

     "என்ன அழுத்தம் உனக்கு? கொட்டிட்டேன்னு சொல்றியா? என்ன திமிருடி உனக்கு? என்னடி நினைச்சிருக்கே நீ."

     விண்விண்ணென்று பொட்டுக்கள் தெறிக்க மூளை குழம்பிவிடும் போல் இருக்கிறது. கண்ணீரை விழுங்கிக் கொள்கிறாள்.

     அவன் வாயிலிருந்து தொடர்ந்து இறைபடும் சொற்களை அவள் தரக்குறைவான மக்களிடமே கேட்டிருக்கிறாள். மனிதனுடைய விலங்குத் தன்மை இவ்வளவு கோரமாகவும் வெளியாகக்கூடும் என்று அவள் எதிர்பார்த்திருக்கவில்லை.

     கன்னங்கள் தொடர்ந்து எரியத் தொடங்கின.

     "ஏண்டி வாயைத் திறக்காம கல்லுப் போல் நிக்கறே? வாயைத் திறந்தா என்ன?"

     "நீங்க அநியாயமா வீணாகப் போறதை நான் விரும்பலே. அது வேண்டாம். மனிதன் அறிவையே கெடுத்து விடும்..."

     "அதுக்குன்னு நீ ஏண்டி அறிவு கெட்டுப் போய்க் கீழே ஊத்தினே? ஆயிரம் ரூபாய்க்குக் கிட்டத்தட்ட ஆகிறது... என்னிடம் ஒரு பேச்சுக் கேட்க வேணாம்? நான் போனவன் புல்லு முளைச்சுப் போயிடுவேனா? திரும்பி வரமாட்டான்னு எண்ணினியா?"

     "என்னை மன்னிச்சுடுங்க. நான் அழிவுப் பொருள் யாருக்குமே வேண்டான்னுதான் நினைச்சேன்."

     "பெரிய இவ... தர்ம பரிபாலனம் பண்ணும் பத்தினி; கட்டிய புருஷனை மதிக்கத் தெரியாதவள், ஊரைப் பரிபாலனம் பண்ணக் கிளம்பி விட்டாள்."

     "என்னைத் தயவு செய்து மன்னிச்சுடுங்க. இனிமேல் நான் உங்களைக் கேட்காமல் எதுவும் செய்ய மாட்டேன். நீங்கள் நல்ல வழியில் இருக்க வேணும்னுதான் நான் இப்படிச் செய்ய வேண்டியதாச்சு..."

     "இது வீடா எனக்கு? சுடுகாடு!"

     தலையில் அறைந்து கொண்டு மூலையில் உட்காருகிறான்.

     அவள் உலர்ந்த சேலையை உடுத்து, மனதை அமைதியாக்கிக் கொள்கிறாள். உள்ளே சென்று, குளிரும் கனிரசத்தைத் தம்ளரில் ஊற்றி எடுத்துக் கொண்டு வருகிறாள்.

     "நீங்க களைச்சுப் போய் வந்திருப்பீங்க. இதை முதலில் குடிச்சிட்டு அப்புறம்..."

     அவன் அதை வாங்குகிறானே என்று புன்னகை செய்கிறாள். அடுத்த கணம் அந்தக் கண்ணாடித் தம்ளர் சுவரில் மோதி, சில்லாய்த் தெறிக்கின்றன.

     சில விநாடிகள் அவள் ஊமையாய் அதிர்ந்து நிற்கிறாள். காலமே செத்து விட்டாற் போலிருக்கிறது.

     "ஆண்டவனே. ஆண்டவனே..." என்று மனசு கூவி அழைக்கிறது. கண்களில் நீர் பொங்குகிறது.

     சிறிது நேரத்துக்கு அவன் கோபம் அடங்கும் வரையிலும் எதிரில் நிற்பதில் பயனில்லை என்று எண்ணுகிறாள். வெளியே எங்கேனும் கங்கைக் கரையில் காலார நடந்து செல்லலாம். மனசு அமைதி அடைய வேண்டும். சாந்தி... சாந்தி... சாந்தி... இரண்டு கிளிகள்... பீஸ் அமைதி...

     அவள் அறை வாயிற்கதவைக் கடந்து அப்பால் கால் வைக்கிறாள். அங்கேயே அடுத்த அடி எழும்பாமல் திகைத்து நிற்கிறாள்.

     கைப்பையும் கையுமாக அம்மாவன்...

     மூக்குக் கண்ணாடிக்குள்ளிருந்து பரிவும் பாசமுமாய் இரு விழிகள் ஊடுருவுகின்றன.

     "வாயிற்கதவைச் சாத்தியிருக்கவில்லையே?"

     அந்தப் பரிவில் கண்ணீர் உருகி வழிகிறது.

     "வேண்ட... வேண்ட மகளே வேண்ட..."

     "அம்... அம்மாவா...!"

     விம்மலை விழுங்கப் பார்க்கிறாள். பயனில்லை.

     "அழக்கூடாது. ஷ்...யமு, என்ன இது!"

     "உம் நீங்க ஸ்டீமருக்குப் போகலியா அம்மாவா?"

     "நான் துறைக்குப் போகு முன் அது கடன்னு போயி. நாளைக்குக் காலையிலே திரிச்சி வந்து."

     "நீங்க வந்து ரொம்ப நேரமாயிட்டதா அம்மாவா?"

     "மோள் அடி கொண்டதைக் கண்டு பரமசாந்தனான துரையான்னு சம்சயமாயி போயி! என் கண்ணே எனக்கு நம்பத் தரமாயில்லே."

     "அவர் மேல் குற்றமில்லை. பெருவெள்ளத்தின் இழுப்பை எதிர்த்து எதிர் நீச்சுப் போடுங்கன்னு நான் கரையிலேருந்து தான் கத்தறேன்; அவர் வெள்ளத்தைச் சமாளிக்க நட்டாற்றில் நிற்கிறார். எனக்குக் கொஞ்சம் பணம் தந்து உதவ முடியுமா அம்மாவா?"

     "ஏ, அதிகப் பிரசங்கி!..." என்று உள்ளிருந்து குரல் வருகிறது.

     "நீ ஒண்ணும் அவரிடம் போய்க் கேட்க வேண்டாம்! என் புத்தி நஷ்டத்துக்கு என் தலையில் போட்டுக்கிடறேன்? பூனை காவலிருக்காதுன்னு தெரிஞ்சிக்கிட்டு அதுங்கிட்ட காவல் பொறுப்பை ஒப்பிச்சேன் பாரு!"

     அவள் சட்டென்று உள்ளே சென்று கண்ணாடித் துண்டுகளை வாரிக் குப்பைத் தொட்டியில் போட்டுத் தரையைத் துடைக்கிறாள்; இரண்டு தம்ளர்களில் மோரைக் கரைத்து வந்து பெரியவரிடம் கொடுக்கிறாள்.

     "அவருக்கு ஒண்ணு கொடுத்து நீங்களும் ஒண்ணு சாப்பிடுங்கள் அம்மாவா. அவருக்கு வயிறு காலி. ஒரு பத்து நிமிஷத்தில் சாப்பாடு தயாராகும்..."

     அவள் சென்ற பின் ஜோசஃப் அவன் கைகளைப் பற்றிக் கொள்கிறார்.

     "தம்பி, நீ ரொம்பக் குழம்பிப் போயிருக்கிறாய்னு தெரிகிறது. இந்தா முதலில் இதைச் சாப்பிடு அமைதியா..."

     "என்னால் சமாளிக்க முடியலே சார். அவ என்னைப் புரிஞ்சுக்கவே மாட்டேங்கறா..."

     "நான் சொல்றேன். நீ இதைக் குடி. யமுனா, இன்னொரு தம்ளர் வேணும் எனக்கு...!"

     "உனக்கு அவள்; அவளுக்கு நீதான் - ஒருவருக்கொருவர் துணை - ஆதரவு, நிழல், ஒளி - எல்லாம். தணலும் சூடும் மாறி மாறி இருக்கும். ஆனால் ஆதாரத்தை விட்டு விலகக் கூடாது..."

     எரிந்து கிளர்ந்து வரும் குடலில் மழையாக விழுகிறது குளிர்ந்த மோர்.

     கூடத்தில் விளக்கேற்றி வைக்கிறாள் யமுனா.

     இனிய பிரார்த்தனைக் குரல் அமுதமயமாக நிறைகிறது.