25

     பட்டை உரிக்கும் வெய்யில் புழுக்கி எடுக்கும் வெய்யிலாக மாறுகிறது. கங்கையம்மை அப்படியே வற்றி மெலிந்தால் எப்படி? வானவன் கண்ணாமூச்சியாடிக் களிக்கிறான். புழுக்கம் தாளாமல் வெட்ட வெளியை நாடி ஏழை மக்கள் உறங்கக் கண்ணயரும் நேரம் பார்த்து மேகங்களைப் பொழியச் செய்து சீரழிக்கிறான்.

     குடிசைக்குள் முடங்கலாமென்றாலோ, மாதக் கணக்காய் பகலெல்லாம் கொண்ட சூட்டுக்கு இது போதுமோ என்று பூமித்தாய் வெய்துயிர்க்கும் ஆவிப் புழுக்கம்.

     கதவுகளை அடைத்துக் கொண்டு கம்மென்று உட்கார இயலவில்லை. கதவுகளைத் திறந்தால் வெய்யோனின் கொடுங்கிரணங்கள். இந்த வெம்மையும் புழுக்கமுந்தான் இப்படி உடல் நிலையில் மாறுபட்ட சுகக்குறைவைத் தோற்றுவிக்கிறதோ? யமுனா, இப்படித் தன்னுணர்வே பாரமாகும் ஒரு சுகக் குறைவை அநுபவித்ததில்லை. எத்தனை மனக்கிலேசம் இருந்த போதிலும் சிட்டுக்குருவி போல் இயங்க உடல்நலம் இருந்திருக்கிறது.

     இப்போது காலையில் எழுந்திருக்கும் போதே ஓர் அயர்வு. படுக்கையை விட்டு எழுந்திருக்க மனம் வரவில்லை. உணவு செல்லவில்லை. உள்ளத்தின் உள்ளே இனம் புரியாத கிளர்ச்சியின் சுவடு தெரிகிறது. எனினும், காலையில் எழுந்து பம்பரம் போல் இயங்குகிறாள். உணவு தயாரித்துக் கொண்டு வெய்யில் உறைக்குமுன் ரிக்ஷாவைப் பிடித்து மருத்துவமனைக்கு விரைகிறாள்.

     மேலே பெரிய விசிறி சுழன்றாலும் மூச்சிரைக்கும் அயர்வுக்கு ஆறுதலாக இல்லை.

     துரை ஒருக்களித்துப் படுத்திருக்கிறான். போர்வையில் படிந்த அவனுடைய வடிவம் இடுப்புக்குக் கீழாகச் சீராக வந்து முடியும் இடத்தில் வலப்பக்கப் பாதம் குறையாக இருப்பது தெரியாமல் இல்லை. சாப்பாட்டுக் கூடையை அருகில் வைத்துவிட்டுக் கட்டிலில் அருகே அமர்ந்து கொள்கிறாள். முகம் தாழக் கவிழ்த்து கிடக்கும் நெற்றியில் அன்போடு கை வைத்து உலகத்து இனிமை எல்லாம் தேங்கப் புன்னகை புரிகிறாள்.

     அந்தப் புன்னகையில் அவனுடைய முகத்தில் ஒளி பரவவில்லையே? வெற்றிடத்தை நோக்குகின்றன விழிகள்.

     "ராத்திரி தூங்கினீர்களா?"

     புருவங்கள் நெரியும் முகம்; மலர்ச்சி பறிபோன முகம்.

     "உம்..."

     "காலையில் ரொட்டி பால் சாப்பிட்டீர்களா?"

     "இதெல்லாம் என்ன கேள்வி. சும்மா தொண தொணன்னு! நீ இப்ப புருஷனை நல்லாக் கவனிக்கிறேன்னு எல்லாருக்கும் தெரியணும். இல்லே?"

     "அப்படியெல்லாம் ஒண்ணும் நினைக்க வேணாம். நீங்கள் வீட்டுக்கு வந்தப்புறம் தான் தெரியப் போகுது யாரை யார் கவனிக்க வேணும்னு..."

     குரலில் கபடத்தைத் தேக்கி வைத்து அவள் மாயப் புன்னகை செய்கிறாள்.

     ஆனால் அந்தக் கபடத்தைப் புரிந்து கொள்ளவோ ரசிக்கவோ அவன் ஆர்வம் காட்டவில்லை.

     "இத பாருங்க. நான் உங்களுக்கு ஒரு சமாசாரம் சொல்லணும்..."

     சொல்ல வேண்டும் என்று விரும்புபவள், அவனை நேருக்கு நேர் பார்க்கத் துணிவின்றித் தலையைக் குனிந்து கொள்வானேன்? முகத்தில் செவ்வொளி பரவ நிலத்தை நோக்குவானேன்?

     "இதை எல்லாம் நான் ரசிக்கவில்லை, ரசிக்கவில்லை... தெரிந்ததா?" என்று பொங்கி விழுபவனாக அவன் மௌனமாக எங்கோ பார்வையைப் பதித்திருக்கிறான்.

     "நீங்க ஏன் மனசைச் சும்மா கஷ்டப்படுத்திக்கிறீங்க? நான் இருக்கும் போது நீங்க ஏன் வேதனைப்படணும்?"

     "....."

     "சாப்பாடு எடுத்து வைக்கட்டுமா?"

     இந்தப் பரிவுக்கும் அன்புக்கும் எதிரொலியாக வெறுப்பை உமிழ்கிறான்.

     "இனிமேல் உன்னை எதிர்பார்த்துத்தான் கிடக்கணும். உனக்கு இப்ப திருப்திதானே? இனிமேல் நீ கொடுக்கும் கஞ்சியைக் குடிச்சிட்டு முரட்டுத் துணிக்கும் உன் கையை எதிர்பார்த்துகிட்டுக் கிடப்பேன்..."

     "அடடா நீங்க தானே என் கையை எதற்கு எதிர்பார்க்கணும்? டாக்டர் தான் சொல்லிட்டாரே, வித்தியாசமே தெரியாதுன்னு? டக்டக்குன்னு நடந்து வரப்போறீங்க. சும்மா ஏன் மனசை அலட்டிக் கொள்ளணும்?"

     அவள் பேசி வாய்மூடு முன் அறைக்கு வெளியே காலணி ஒலிகள் கேட்கின்றன. டாக்டர் வருகிறாரோ?

     அவள் எழுந்து நிற்கிறாள்.

     வருவது டாக்டரல்ல.

     "ஓ... இதோ இருக்கிறாளே? யமுனாதான்!"

     யமுனாவின் தோள்களை ஓடி வந்து தழுவுபவள் நீருதான்!

     'நீரு! இவளைப் பார்த்து எத்தனை நாட்கள் ஆயின? கொடியுடலும் மின்னும் சருமப் பொலிவும் கொண்ட நீருவா?'

     'எப்படிப் பருத்துப் போயிருக்கிறாள்! கன்னங்களில் சொறிசொறியாய்ப் பருக்கள்... கனத்த பூச்சுக்கள். இதழ்கள் சோகையான வாடாமல்லிச் சாயத்தில் தோய்ந்திருக்கின்றன. தலைக்கொண்டை சட்டியைக் கவிழ்த்தாற் போல் இருக்கிறது. துணி உறையில்லாத தோள்களைப் பருமனாகக் காட்டிக் கொண்டு, முன் வயிற்றையும் பின் முதுகுச் சதையையும் விலக்கிக் கொண்டு இழியும் பூச்சோலையுடன் நீரு!... பின்னே அவள் கணவன் தான்.

     அவள் அமர்ந்திருந்த ஆசனத்தில் அவரை உட்காரச் சொல்லி, துரை பணிவுடன் படுக்கையிலமர்ந்து புன்னகை செய்கிறான்.

     "நான் சொல்லல்லே? எனக்கு அன்னிக்கே இருட்டிலேயே யமுனான்னு தெரிஞ்சுப் போச்சு..."

     "இவர் தான் யமு, டைரக்டர் சியாம்சுந்தர்னு சொல்வேனே..." துரை குறுகிக் கூசினாற் போல் முடிக்காமல் நிறுத்துகிறான்.

     "இவள் யமுனா; நீங்கள் பார்த்திருக்கிறீங்களா?..." என்று நீரு கையை இன்னும் அழுத்தமாகப் பிணைத்துக் கொள்கிறாள்.

     "நீங்கள் இந்த ஊரிலா இருக்கிறீர்கள்? இத்தனை நாட்களாகத் தெரியாமல் போச்சே, நீரு?" இது யமுனா.

     "நாங்கள் இங்கெங்கே இருக்கிறோம்? இவர் இத்தனை நாளும் சொல்லவேயில்லை. முன்பு கூட ஒரு பார்ட்டியில் பார்த்திருக்கிறேன். அன்றைய பார்ட்டிக்குக் கூட நீ வராதது நல்லதாய்ப் போச்சு, எனக்கு ரொம்பப் பயமாக இருந்தது, ஏண்டி? ஒரு நடை டில்லிக்கு வாயேன்? ஒரு மாசம் தங்கறாப்போல?"

     "அப்ப டில்லியில் இருக்கிறீர்களா? ஊரில் பெரியப்பா எல்லாம் சுகமா நீரு?"

     "நல்ல சுகம். அது சரி எத்தனை மாசம் இது...?" என்று வினவுகிறாள் நீரு வெளிப்படையாக.

     யமுனாவுக்கு முகம் சிவக்கிறது.

     "இங்கே எங்கே தங்கியிருக்கிறீர்கள்?"

     "பேச்சை மாற்றாதே. நான் கேட்டதற்குப் பதில் சொல்லு, எத்தனை மாசம்?"

     "எனக்குத் தெரியாது."

     "திருடி... இப்ப நினைச்சாக் கூட நம்ப முடியலே. எனக்கும் அவருக்கும் ஒரு மாசமா சண்டை, நீ கலியாணம் பண்ணின்டிருப்பேன்னு என்னாலே நம்ப முடியலே. அவரோ அன்னிக்கு ஆஸ்பத்திரியில் பார்த்த போதே நீதான்னுட்டார்."

     யமுனா மௌனப் புன்னகையுடன் நிற்கிறாள்.

     "தாத்தாவுக்குத்தான் ரொம்ப வருத்தம். எங்க கல்யாணத்துக்குக் கூட நிற்காம ஓடிப் போனியே? ஏய், அந்த இந்துநாத் தெரியுமோ? காங்(ஓ)வில் லீடர். அது இப்ப எதுவோ வேணும்னு கூச்சல் போட்டு ஜெயிலுக்குப் போயிட்டு வந்துட்டது..."

     'இந்த நீரு முன்பெல்லாம் இப்படிப் பேச மாட்டாளே?'

     "அது சரி; நீ இப்ப எப்படி இருக்கே?" என்று யமுனா பேசத் தெரியாமல் சங்கடப்படுகிறாள்.

     "எப்படி இருக்கேன்னா? இன்னும் மூணு நாலு வருஷம் ஹும் - பேசக் கூடாது. இவர் கூட ஊர் ஊராகப் போயிட்டிருக்கேன். பார்ட்டிக்கு வரலேன்னா மூக்குக்கு மேல் கோபம் வந்துடும். அடி, நீ வாடி டில்லிக்கு! உங்கிட்ட ரொம்பப் பேசணும்!"

     "சரி..."

     துரையிடம் அவர் என்ன சொன்னாரென்று தெரியவில்லை. முதுகைத் தட்டித் தெம்பு சொன்னார்.

     "ரொம்ப தாங்க்ஸ் ஸார். இப்படியெல்லாம் ஆகும்னு கனவிலும் நினைக்கல்லே..."

     "அதுதான், யாரோ சாதுவை அரஸ்ட் செய்திருக்காங்களாம்; இன்னும் யாரையோ தேடறாங்களாம். என்னமோ நடக்கிறது. ஓ.கே. நீ கவலைப்படாதே. நீரு இனிமே குடைந்து தள்ளிடுவாள். அவளுக்கு வேண்டியவராகப் போனபிறகு..."

     துரை சிரிக்க முயல்கிறான். ஆனாலும் ஒளியில்லை.

     நீரு கையைப் பிரித்து, அமுக்கிவிட்டு 'பை பை' என்று விடை பெறுகிறாள். சியாம்சுந்தர் கை கூப்புகிறார்.

     அவர்கள் வெளிச் சென்ற பிறகு அவளுக்குச் சில கணங்கள் தலை சுற்றுவது போலிருக்கிறது. கட்டிலைப் பற்றிக் கொண்டு நின்றவாறே வாயிலைப் பார்க்கிறாள்.

     பணிப்பெண் ஒருத்தி புன்னகையுடன் உள்ளே வருகிறாள். துரைக்கு ஆரஞ்சு ரசம் கொண்டு வருகிறாள்.

     அவன் அதைப் பருகுகையில் அவள் போர்வையை விலக்கி, கட்டுப் போட்டிருக்கும் குறைக்காலை மெள்ளத் தொட்டுப் பார்த்துவிட்டு மூடுகிறாள்.

     "புண் காய்ந்து போய்விட்டதல்லவா?"

     "ஆறிப் போய்விட்டது. செயற்கைப் பாதத்துக்கு அளவு கொடுக்கலாம் என்று கூட டாக்டர் நேற்று சொன்னார். தொடக்கத்தில் நடக்கப் பயிற்சி வேணும். பிறகு சரியாகப் போகும்."

     பிறகு எதையோ நினைத்துக் கொண்டாற்போல் சிரித்துக் கொண்டு, "வாழ்க்கை எப்போதும் இனிமையானது; வாழத் தகுந்தது, போராடத் தகுந்தது" என்று சொல்லிவிட்டுப் போகிறாள்.

     யமுனா என்ன பேசுவதென்று தெரியாமல் அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்கிறாள். கறுவலான சிறிய முகம்! அடர்ந்த முடி - அவனுடைய தனி அழகு. அதைக் காலையில் பணிப்பெண் வாரியிருப்பாளாக இருக்கும். அவனாக முடியைச் சீவிக் கொண்டிருக்க மாட்டான். முகத்தில் ஏன் இத்தனை வெறுப்பும் நிராசையும்?

     "நீங்கள் இந்த வேலை போய்விடுமோன்னு கவலைப் படறாப்போல இருக்கு. அதற்காகவெல்லாம் கவலைப்பட வேண்டாம். இதற்காகவா மனசு ஒடிஞ்சு போறது? இப்போ என்ன வந்துவிட்டதாம்?"

     "உனக்கு நான் தனித்து நிற்க முடியாமல் முடங்கியதில் திருப்திதானே? நீ எல்லாம் பேசுவாய். என் நஷ்டம். இழப்பு வாழ்க்கையில் நான் நொண்டி..."

     அவள் சட்டென்று அவன் வாயைப் பொத்துகிறாள்; "நீங்கள் இப்படிப் பேசுவதைக் கேட்கவா நான் இன்று வந்து உட்கார்ந்திருக்கிறேன்?"

     "எப்போதுமே நான் உனக்குச் சமமில்லை என்று என்னைப் பொருட்டாக்க மாட்டாய். இனி நான் ஊனம் வேறு..."

     "ஆண்டவனே!"

     "வாழ்க்கையைப் பற்றி நீ மகோன்னத கனவு கண்டிருப்பாய். உன் இலட்சியங்களுக்குக் கைகொடுத்து உதவச் சாதாரண ஆசாமியாக வேணும் இருந்தேன். இனி அதுவும் இல்லே. சாதாரணத்துக்கும் கீழே."

     அவன் மனம் எப்படி வளைந்து போயிற்று? ஏற்கனவே வளைந்திருந்ததுதான்? இப்போது சட்டக் கண்ணாடி உடைந்த பின் தெரியும் உண்மை ஓவியமாய்த் தெரிகிறதோ?

     "இப்போதே டைரக்டரின் மிஸஸ் கேட்டாங்களே, போயும் போயும் இவரையா கல்யாணம் பண்ணிண்டே என்ற மாதிரி? இனிமேல் உன் உறவுச் செல்வாக்கினால் அவர்கள் தயவு அதிகமாகும். எனக்கு மேசையடியில் உட்கார்ந்திருக்கும் வேலை தருவார்கள்..."

     "நீங்கள், அப்படி யார் தயவுக்கும் காத்திருக்க வேண்டாம்."

     "பின் வேறு வழி...?"

     "வழியொண்ணும் இல்லாமப் போயிடலே. நீங்கள் இருட்டுக்குள் இப்படி எல்லாம் குருட்டு யோசனை செய்ய வேண்டாம்! நீங்கள் மோசடியும் பொய்யும் புளுகுமாக இந்தக் கம்பெனியில் வேலை செய்ய போகாதது நல்லதே, முதலில் வீட்டுக்கு வந்து உடம்பைத் தேற்றிக் கொண்டு பிறகு யோசனை செய்யலாம்..."

     "என்ன யோசனை? நீ சம்பாதித்துக் கொண்டு வருவாய் நான் வீட்டில்..."

     "நானொன்றும் இப்போது வேலை தேடிப் போவதற்கில்லை!... என்னங்க..."

     குரல் தாழ்கிறது; முகம் சிவக்கிறது. "நீரு கூடக் கேட்டாளே! நீங்க கேட்கலே!... எனக்கு ஒரு புறம் சந்தோஷமாக இருந்தாலும் சங்கடமாக இருக்கு..."

     மூக்கு நுனி சிவக்க, கண்கள் கோடியில் ஈரத்தை கக்குகின்றன. அவன் சற்றே திடுக்கிட்டாற்போல் பார்க்கிறான். முகம் சிறுக்கக் கருமை தீவிரமாகிறது.

     "என்ன சொல்றே நீ?"

     "வேலைக்குப் போக முடியாது, நாலஞ்சு மாசத்துக்காக யார் வேலை கொடுப்பாங்க இப்ப?..."

     "ஓகோ!... நான் நினைச்சேன்..."

     கனத்த படுதாவைத் தொங்கவிட்டாற் போல் முகம் நிச்சலனமாகிறது. இந்த உதாசீனம் அவளால் தாங்கக் கூடியதாகத்தானில்லை.

     என்றாலும்... இது தெய்வசித்தம் என்று அவள் நம்புகிறாள். குழந்தையைத் தாய் கோபித்தால் தந்தையிடம் ஆதரவை நாடிப் போகும்.

     அவளுக்கு இப்போது தாயின் மடியில் விழுந்து தன் குறைகளைச் சொல்லிக் கதறவேண்டும் போலிருக்கிறது.

     அந்த பசிய மலைகள், கொடிகள், செடிகள், மாலை நேரப் பஜனை, எண்ணெய் வழியும் முடியை இழைய இழைய வாரிப் பின்னிக் கொண்டு இருண்ட மேனிகளாயினும் கண்களில் புத்தொளியைத் துலக்கிக் கொண்டு அணி அணியாய்ப் பள்ளியை அலங்கரிக்கும் இருளக் குழந்தைகள் - பருவமழை பொழியுமுன் வசந்தத்தில் கானகத்திலிருந்து வரும் வண்ண மணங்கள் - எல்லாம் ஆற்றாமையையும் ஆவலையும் கிளர்த்தும் ஆற்றல் வாய்ந்த புயலாய் நினைவில் சுழலுகின்றன.

     பவானியில் வரும் வெள்ளந்தான் எத்தனை கம்பீரமாக இருக்கும்! இந்தக் கரும்புழுதி அங்கு இல்லை. இந்த வளமை அங்கு இல்லை. ஆனால் அது அவள் சின்னஞ் சிறுமியாய் நடை பழகிய நாளிலிருந்து உண்டு உறங்கி ஒட்டிய சாரம்; காற்று; ஊட்டம்.

     இப்போது அவளுக்கு அந்த மண்ணில், அந்தக் கானக மூலையில் அம்மையின் மடியில் புரளவேண்டும் என்ற வேட்கை மிகுகிறது. அவளுடைய லட்சியப் போராட்ட வேட்கை - கங்கைக் கரையின் வறுமையைக் கண்டு கசிந்த ஈரம் ரத்த வெறியின் சிறுமைகளைத் துடைக்க வேண்டும் என்ற பேராவல் எல்லாம் ஒட்டாத பழுப்புக்களைப் போல் உதிருகின்றன.

     'அம்மா!... அம்மா!... அம்மா!...'

     அப்பாவின் அறைக்குள் நுழைகையில் இலேசாக மூச்சில் இழையும் நச்சுக் கொல்லி மணமும் கூட இனிமையாக இருக்குமே!

     "என்ன, எங்கேயோ பார்க்கிறே?" என்று துரை மௌனத் திரையைக் கிழிக்கிறான்.

     நினைவுலகில் விழ நெடுமூச்சுப் பிரிகிறது. "ஒண்ணுமில்லீங்க..."

     "இப்ப நான் ஒண்ணு சொல்வேன். நீ கேட்பியா?"

     "சொல்லுங்கள், கேட்கிறேன்..."

     "நமக்கு இப்ப... இது வேணாம் இப்பென்ன? எப்பவுமே வேணாம். புருஷன் நொண்டிங்ற பேர் போதும். தகப்பன் கால் ஊனங்கற பட்டம் எனக்கு வேணாம். எனக்கும் சிறுமை; அதற்கும் சிறுமை... என்ன?"

     இடி விழுந்த அதிர்ச்சியுடன் அவள் அவனையே பார்க்கிறாள்.

     "நான் சொல்றதைக் கேட்பியா?"

     கண்களில் வெம்பனி நிறைகிறது. இதற்கு மறுமொழி கூற அவளுக்குத் தெம்பில்லை.

     "என்ன, பதிலையே காணோம்?"

     "நான் பதில் சொல்ல முடியாதபடி நீங்க பேசறீங்க. சற்று முன் அந்த நர்ஸ் என்ன சொன்னாள்? உயிர் இனிமையானது; அருமையானது. வாழ்க்கை எப்பாடு பட்டும் போராடியும் வாழத் தகுந்தது என்றாள். நீங்க இப்போது மனது பலவீனப்பட்டிருக்கிறீங்க. இதைப் பற்றி இப்போது பேச வேண்டாம். சாப்பாடு எடுத்து வைக்கிறேன் முதலில்."

     "நீ நான் சொல்வதை முன்பே கேட்கமாட்டாய். இனி உனக்கு நான் பொருட்டா?"

     ஆண்டவனே! தன் வயிற்றிலிருக்கும் மகவுக்குத் தீங்கு வரலாகாதென்று கொடிய ரண சிகிச்சையையும் மயக்க மருந்தின்றிப் பொறுத்துக் கொள்ளும் தாயாரைப் பற்றிப் பெருமைப்பட்ட பாரதம் இன்று மடிந்து விடத்தான் வேண்டுமா? வெறும் களியாட்டங்களுக்காகத் தம் உயிர்த்துவத்தையே அழித்துக் கொள்ளும் பெண்களா உன் மண்னுக்கு உப்பைத் தருவார்கள்...?

     "ஏனிப்ப அழறே? இதற்குத்தான் நீ இங்கே வரியா?"

     அவள் கண்களைத் துடைத்துக் கொள்கிறாள்.

     இது முள் நிறைந்த பாதை; திரும்ப முடியாத குறுகிய சந்து. இருளும் கூட வருகிறது.

     "நான் அழமாட்டேன்; ஆண்டவனே. எனக்கு நம்பிக்கையைக் கொடு! தைரியத்தை தா!"

     மாலை வெயில் இறங்கும் வரையிலும் அவள் அங்குதானிருக்கிறாள். பிறகு அவனுடைய அழுக்குத் துணிகள், சாப்பாட்டு அடுக்கு முதலிய சாமான்களைச் சுமந்து கொண்டு வெளியே வருகிறாள்.

     ரிக்ஷா ஓட்டும் இளைஞனைக் கண்டதும் யமுனாவுக்குச் சம்பாவின் புதல்வனுடைய நினைவு வருகிறது. அவனைப் பற்றி விசாரிக்கவே இல்லையே?

     குடுக் குடுக்கென்று வண்டி செல்கிறது.

     வண்ணமழிந்த பஸ்கள், புழுதி, வெய்துயிர்த்துக் கொண்டு ஓடும் கங்கையை மறைக்கும் கடைகள், சாக்கடையின்மேல் பலகைகளில் ஈ மொய்க்கப் பண்டங்களின் அடுக்கு வரிசைகள், அழுக்கு உடையும் முண்டாசுமாக ராம்தானா லட்டுவைக் கண்ணாடிப் பெட்டிக்குள் காட்டிச் செல்லும் எளிய வியாபாரி - சாணிக்கூடை ஏந்தி நடுத்தெருவில் செல்லும் ஏழைச் சிறுமியர் - ஒளியடங்கிப் போன முகங்கள். கார்கள் - பிதுங்கும் சதைகள் சாபங்கள் - சினிமா சுவரொட்டிகள்...

     முதலாளித்துவம் மனிதனை அடிமையாக்கும்;
     பொதுவுடைமை மனிதனை மிருகமாக்கும்.
     இரண்டிலும் சேராதீர் மக்களே!

     இப்படி ஓர் எச்சரிக்கை கறுப்பு மையால் சுவர்களில்.

     கம்யூனிஸ்ட் நாயே, நாட்டைக் கெடுக்காமல் ஓடிப்போ!
     முதலாளித்துவ மாமாவின் கைப் பொம்மையாகாதே!
     மக்களுக்காக மக்கள் நடத்தும் அரசுக்குப் புரட்சி!

     இதெல்லாம் இந்த ரிக்ஷா இளைஞனுக்குப் படிக்கத் தெரியுமோ? காந்தி மைதானத்தைச் சுற்றி என்ன புழுதி!

     மைதானத்தைச் சுற்றினாற்போல் அவன் ரிக்ஷாவைக் கொண்டு வருகிறான்.

     அண்ணல், நாற்பத்தேழில் இந்தக் கங்கையில் மனித ரத்தம் தெறிக்கக் கலங்கியபோது இந்த மைதானத்தில் தான் வந்து பிரார்த்தனை செய்தாராம்.

     "ஈசுவர அல்லா தேரா நாம்! ஸப்கோ ஸன்மதி தே பகவான்!" என்று அவர் உருகிக் கரைந்ததை இந்தக் கங்கையும் இந்த மண்ணும் செவியுற்றிருக்கும்.

     "இப்போது நீங்கள் இருந்தால் எப்படி வழி காட்டுவீர், அண்ணலே!"

     ரிக்ஷாக்காரனை நிறுத்தச் சொல்லி அந்த மண்ணைத் தொட்டுக் கண்களில் ஒத்திக் கொண்டு வரவேண்டும் போலிருக்கிறது.

     "ரூகோ, ருகியே பாய்சாப்!"

     இந்த மரியாதைக்குத் திடுக்கிட்டாற்போல் அவன் நிறுத்துகிறான்.

     ராஜஸ்தான் லாட்டரி முடிவு வெளியாயிருக்கிறது. "பத்து லட்சம், லட்சம்!" என்று சிறுவன் பத்திரிகை விற்கிறான். ஆவலுடன் ஒரு ரிக்ஷாக்காரன் சில்லறையைக் கொடுத்து அந்தப் பத்திரிகையை வாங்குகிறான். மைதானத்துள் மஞ்சட் கொடிகளைப் பிடித்துக் கொண்டு அரை நிஜாரும் முண்டா பனியன்களுமாக ஒரு இளைஞர் அணிவகுப்பு நடக்கிறது.

     இது ஒரு அரசியல் கட்சியைச் சேர்ந்த படை; இன்னொரு அரசியல் கட்சியைப் பயமுறுத்த. இங்கே படைப் பயிற்சி நடக்கிறது.

     உள்ளே அடி வைத்தவள் நடுவில் சென்று அந்த மண்ணைத் தொட்டுக் கண்களில் ஒத்திக் கொள்கிறாள்.

     தனக்குப் புத்தி சுவாதீனத்தில் இருக்கிறதோ என்று தன்னையே கேட்டுக் கொண்டவளாக ரிக்ஷாவில் வந்து ஏறுகிறாள்.

     வீட்டுவழி செல்லும்போதே சம்பா கண்களில் படுகிறாள்.

     "மாஜி... சாப் எப்படி இருக்கிறார்?"

     "நன்றாக இருக்கிறார். சம்பா, உன் பையன்... வரவேயில்லையா அவன்?"

     "மாஜி... அவன்... அவனைப் போலீஸ் பிடிச்சுப் போயிட்டுது."

     கதவைத் திறக்கச் சாவி எடுப்பவள் திடுக்கிட்டாற் போல் திரும்பிப் பார்க்கிறாள்.

     "எப்போது சம்பா? நீ என்னிடம் சொல்லவே இல்லையே."

     "பத்து நாளாகிறது. ரிக்ஷாவில் சோதனை பண்ணினார்களாம். வீட்டுப் பக்கங்கூட வந்தாங்க. ஸ்டேஷன் பக்கமே வச்சுப் புடிச்சிட்டுப் போயிட்டாங்க..."

     "அடடா... எனக்குத் தெரியாதே?"

     "உங்ககிட்டச் சொல்லி என்ன செய்யட்டும் மாஜி? என் தலைவிதி..."

     பதிலளிக்க யமுனாவுக்குச் சொற்களே அகப்படவில்லை. ஊமையாகச் செயலற்று நிற்கிறாள். பிறகு கதவைத் திறக்கிறாள்.

     சந்து வழியாக நாள்தாளைப் போட்டுவிட்டுப் போயிருக்கிறான். சம்பா அதை எடுத்து மேசை மீது வைக்கிறாள்.

     முகப்பில் அச்சாகியிருக்கும் பெரிய படம் அவள் கண்களைக் கவருகிறது. யமுனா சட்டென்று எடுத்துப் பார்க்கிறாள்.

     'அமைதி அணிவகுப்பு...'

     அமைதி குலைந்து ரத்தவெறி மிகுந்து வரும் வங்கத் தலைநகரின் தெருக்களில் அமைதித் தொண்டர்களின் ஊர்வலம்...

     முன்னதாக அம்மாவனின் முகம் தெரிகிறது.

     எண்ணங்களில் ஆயிரமாய் அலைகள் புரள்கின்றன.

     "மாஜி...!" என்று சம்பா குரல் கொடுக்கிறாள்.

     "என் குழந்தைகளின் தகப்பன் வந்திருக்கிறார் மாஜி... கதவடைப்பினால் இரண்டு மாச சம்பளமில்லாமலிருந்து அப்புறம் பணம் கிடைச்சு வந்திருக்கிறார் மாஜி..."

     கவலை கரைந்த கண்ணொளியும் இன்பக் கண்ணீருமாகச் சம்பா பத்திரமாகச் சேலை மடிப்பில் செருகிக் கொண்டிருக்கும் இலைப் பொதியை எடுத்து அவளிடம் கொடுக்கிறாள்.

     "குழந்தைகளுக்கு வாங்கி வந்தார் மாஜி; ஏழை, நான் உங்களுக்குக் கொஞ்சம் கொண்டு வந்தேன் மாஜி... இந்தச் சமயத்தில் நாவுக்கு..." இசைக்கருகில் தேன் வண்ணக் கண்ணாடி பத்தைப் போல், இறுகிய மாங்கனிச் சாறு...

     கிள்ளி அவள் வாயில் போட்டுக் கொள்கிறாள்.

     புளிப்பும்... இனிப்பும்.

     ஊனோடு, உயிரோடு கலப்பது போல் அவளுடைய அன்பே உமிழ்நீரில் கரைகிறது.

     "நாவுக்கு ஆரோக்கியமாக இருக்கிறதா மாஜி? கதவடைப்பினால் இரண்டுமாசம் சம்பளமில்லாமலிருந்து அப்புறம் பணம் கிடைச்சி வந்திருக்கிறார் மாஜி..."

     அந்தச் சமயத்தில்...

     பரிவும் பாசமும் கனிவும் மிஞ்சுகின்றன.

     சரேலென்று யமுனா அவளுடைய கைகளைப் பற்றிக் கொள்கிறாள். எனினும் உணர்ச்சியை அடக்க முடியவில்லை.

     "சம்பா, இனி என்னை 'மாஜி' என்று அழைக்காதே! 'பேடி'* என்று அழை..."

     (* பேடி - மகள்)

(முற்றும்)