ஆப்பிள் பசி - Apple Pasi - சாவி (சா. விசுவநாதன்) நூல்கள் - Saavi (Sa. Viswanathan) Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com





11

     அன்று மாலை சூரியகுளம் மைதானத்தைப் பார்த்தவர்கள் அதிசயித்துப் போனார்கள்.

     மூன்று மாதங்களாய் வெறிச்சோடிக் கிடந்த அந்த இடத்தில் பன்றிக் குட்டிகள் உலவிக் கொண்டிருந்தன. இன்னொருபுறம் சாணத்தை மலைபோல் குவித்து, வறட்டி தட்டிக் கொண்டிருந்தார்கள்.

     இப்போது அந்த இடம் ஒரு புதுமைச் சிலிர்ப்புடன் தோரணங்களும் வண்ணக் காகிதக் குழல்களுமாய் விழாக் கோலம் பூண்டிருந்தது.

     'மனோ ரஞ்சனி கந்தர்வ கான சபா' என்று கொட்டை ஜிகினா எழுத்துக்களில் நீண்ட பானர் துணி மேலும் கீழும் அலை வீசிக் கொண்டிருந்தது.

     ஆங்காங்கே காஸ் லைட்டுகள் ஜொலிக்க, டிக்கெட் கவுண்டர்களில் கூட்டம் முண்டி அடித்துக் கொண்டிருந்தது.

     உள்ளே சபை நிறைந்து சோடாக் கலர் சத்தம் காதைப் பிளந்து கொண்டிருந்தது.

     நீர் ஊற்று பொழியும் தோட்ட ஸீன் படுதாக் காட்சி, மேடையில், மெதுவாக ஆடிக் கொண்டிருந்தது.

     6.35 ஆனதும் 'ட டாம்' என்று சத்தம்.

     'ஜோதி சுந்தர வினோதா, ஆதிகண நாதா' என்ற விநாயக ஸ்துதிப் பாடல் கும்மென்ற ஹார்மோனிய சுருதியுடன் கோரஸாக ஒலிக்க, மேடையின் இடுக்குகள் வழியே வந்த ஊதுவத்தி சாம்பிராணிப் புகை சபை முழுவதும் மணம் பரப்பியது.

     சபையோரின் ஒருமொத்த ஆவல் மேடையை நோக்கி லயித்திருந்தது.

     வக்கீல் வரதாச்சாரி ஐந்து நிமிடம் தாமதமாக வந்தார். அவரை வரவேற்க நாலைந்து பேர் வாசலுக்கு ஓடினார்கள். இரண்டு முக்கிய நிர்வாகிகள் அவரை வரவேற்று, முன் வரிசைக்கு அழைத்துச் சென்று அமரச் செய்தனர்.

     "உங்க ஆசீர்வாதத்தாலும் உதவியாலும் இந்த புதிய நாடகக் கம்பெனியைத் தொடங்கி இருக்கோம்" என்றார் நிர்வாகிகளில் ஒருவர்.

     கோமளம் வைரச் சிரிப்போடு உடம்பில் ஜரிகையும் தங்கமும் மின்ன பணக்கார தோரணையுடன் வந்திருந்தாள்.

     அடுத்தாற்போல் டி.எஸ்.பி. மனைவி ஏக அமர்க்களமாக உள்ளே நுழைந்தாள்.

     டி.எஸ்.பி. நாராயணசாமி ஜிப்பா போட்டு, குதப்பிய வெற்றிலையுடன் விசிறி மடிப்பு அங்கவஸ்த்திரத்தில் ஒரு கலியாண வீட்டு விருந்தாளி போல் காணப்பட்டார்.

     அடுத்தபடி தாசில்தார், பிறகு மிட்டாதார், மிராசுதார், பக்கத்து ஜமீன் எல்லாருமே ஒவ்வொருவராய் வந்து இறங்கினர்.

     இந்த ஆர்ப்பாட்ட வைபவங்களிடையே மெல்லிய தென்றல் உள்ளே வருவது போல் பாப்பா வந்து கொண்டிருந்தாள்.

     அவளைக் கண்டதும் அத்தனை ஆண்களின் மூச்சும் தடைப்பட்டு நின்றன. பெண்கள் அவளைப் பொல்லாக் கண்களோடு பார்த்தார்கள்.

     அத்தனை பேருக்கும் தன் அபிநயக் கைகளால் அழகாகக் கும்பிடு போட்டு அடக்கமாகப் பின் வரிசை நாற்காலி ஒன்றில் போய் உட்கார்ந்து கொண்டாள்.

     கணபதி ஸ்தோத்திரப் பாடல் இசை வெள்ளமாய்ச் சபையை நிறைக்க திரை சுருண்டு சுருண்டு மேலே போக, அத்தனை கண்களும், 'அடுத்தது என்ன?' என்பது போல் ஆவலோடு நோக்கின.

     சிவலிங்கத்திற்குப் பத்மாவதி பூஜை செய்யும் முதல் காட்சி ஆரம்பமாயிற்று.

     'கர்ணா - அர்ச்சுனா' நாடகம்.

     "மகேசுவரா! என் மனோரதம் என்று பூர்த்தியாகும்? உம்முடைய கிருபையினால் நான் என் மனதுக்குகந்த மணாளனை என்று பெறுவேன்? என் ஜீவியத்தையும், யௌவனத்தையும் நான் யார் பாதங்களில் அர்ப்பணம் செய்யப் போகின்றேன்?" இந்த நீண்ட வசனத்தைத் தொடர்ந்து ஆனந்தபைரவியின் ஒரு சுலோகம்.

     பாப்பா பலமாகப் பெருமூச்சு விட்டாள். அவள் கண்கள் கல்ங்கியிருந்தன. பத்மாவதியாக நடிக்கும் ஜில்ஜில் என்ன உருக்கமாகப் பிரார்த்தனை செய்கிறாள்? பாப்பா தன்னையே பத்மாவதியாக எண்ணிக் கொண்டாள்.

     அதே முறையில் தான் அவள் மனமும் பிரார்த்தனை செய்கிறது?

     'என் யௌவனத்தையும் வாழ்க்கையையும் யாரிடம் ஒப்படைக்கப் போகிறேன்?' என்று மனத்துக்குள் கேட்டுக் கொண்டாள் பாப்பா.

     'சாமண்ணா எப்போ வருவார்?' அவள் நினைவெல்லாம், கவனமெல்லாம் சாமண்ணாவின் மீதே இருந்தது.

     சுப்பன், குப்பன் என்ற இரண்டு விதூஷகர்கள் இடையில் வந்து கொச்சை மொழியில் உரையாடித் தமாஷ் செய்துவிட்டுப் போனது அவளுக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை.

     சாமண்ணா வந்திருந்தால் கொட்டகை அதிர்ந்திருக்குமே! அப்படி ஒரு நடை போட்டுக் காட்டுவாரே!

     புது நாடக சபா தொடங்கி, புது நாடகம் உருவாக்கி இருக்கிறார்கள். நாடகம் வெற்றிகரமாக நடக்க வேண்டும். அப்போதுதான் நடிகர்கள் பிழைப்பார்கள்.

     ஆமாம், சிங்காரப் பொட்டு நடத்த ஆரம்பித்துள்ள இந்த நாடக கோஷ்டியில் சாமண்ணா இருக்கிறாரா, இல்லையா?

     நிச்சயம் இருக்க வேண்டும்? சாமண்ணா புது வேடம் போடப் போவதாகச் சொன்னார்களே! எந்த வேடத்தில் வருவாரோ?

     இடைவேளை வந்தது. ஆனால் சாமண்ணாவைத்தான் காணவில்லை. பாப்பா குழம்பிப் போனாள்.

     வக்கீல் வரதாச்சாரி வெளியில் எழுந்து போனபோது முன் வரிசையில் இருந்த கோமளம் பின்பக்கம் திரும்பிப் பாப்பாவுக்கு ஜாடை காட்டினாள்.

     பாப்பா சுருக்கென்று எழுந்து தளிர்நடையாகக் கோமளத்தின் அருகில் போய் அமர்ந்தாள்.

     "என்ன பாப்பா இவன்! ஏதாவது அக்கிரமம் பண்றானா? இன்னும் ஆசாமி வரவேயில்லையே! ஒருவேளை வராமலே இருந்து விடுவானோ?" என்று சாமண்ணாவைக் குறித்துக் கவலைப் பட்டாள் கோமளம்.

     "அதான் மாமி நானும் யோசிக்கிறேன். இந்த நாடகக் கம்பெனியில் சேர்ந்திருக்கிறாரா, இல்லையா என்றே சந்தேகமாயிருக்கிறதே! ஒரு வேளை இந்த நாடகத்தில் அவருக்கு வேஷமே இல்லையோ, என்னவோ!" என்று தவித்தாள்.

     "சேர்ந்திருக்கேன்னுதான் சொன்னான். பார்க்கலாம். இன்னும் பாதி இருக்கே!"

     "மாமி! சிங்காரப் பொட்டு நல்லவர் தானே?"

     "நல்லவனாத்தான் இருக்கணும்."

     "பணத்தை வாங்கி முழுங்கிட மாட்டானே?"

     "முழுங்கினா, தொடர்ந்து மூணு வேளைச் சாப்பாடு கிடைக்க வேண்டாமோ? நாடகம் நடந்தாத்தானே கிடைக்கும்."

     "நீங்க கண்டிஷன் பேசிட்டுத்தானே பணம் கொடுத்திருக்கீங்க?"

     "கண்டிஷனா? வக்கீல் மாமா சும்மா கொடுத்துடுவாரா? பத்திரம் கொண்டு வந்து கையெழுத்து வாங்கினப்புறம் தான் பணம் கொடுத்திருக்கார். இப்போ மாமா எதுக்கு வெளியிலே போயிருக்கார்னு தெரியுமா?"

     "எதுக்கு?"

     "இன்னிக்கு வசூல் கணக்கைப் பார்க்கத்தான்."

     பாப்பாவுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. வரதாச்சாரி இவ்வளவு தூரம் அக்கறை எடுத்துக் கொண்டிருப்பது அவளுக்கு ஆறுதலாயிருந்தது.

     தணிந்த குரலில், "மாமி! நான் பணம் கொடுத்த விஷயம் யாருக்கும் தெரியாதே!" என்று கேட்டாள்.

     "மூச்! ஒரு வார்த்தை வெளியில் போகாது!"

     "சிங்காரப் பொட்டுவுக்குக் கூட நீங்கள் கொடுக்கிறதாத்தானே சொல்லியிருக்கீங்க?"

     "ஆமாம். நாங்க ஒருத்தர்தான் கொடுத்தோம்னு சொன்னா சந்தேகப்படுவாரேன்னு நாலு பேர் சேர்ந்து பணம் போட்டிருப்பதாகச் சொல்லி வச்சிருக்கோம்."

     "என்னவோ! எல்லாம் நல்லபடியா நடக்கணும். அதோ மாமா வரார்! நான் என் ஸீட்டுக்குப் போறேன்."

     பாப்பா எழுந்து தன் இடத்துக்குப் போய் விட்டாள்.

     வரதாச்சாரி வந்து உட்கார்ந்ததும் கர்ணன் வேடம் பூண்டிருந்த சிங்காரப் பொட்டு மேடையிலிருந்து கீழே இறங்கி வந்து, "வக்கீல் ஸார் தான் எங்களுக்கு ஆதரவு திரட்டி இந்த நாடகக் கம்பெனியை ஆரம்பிச்சு வைத்தவர். அவருக்கு அவர் நண்பர்களுக்கும் எங்கள் நன்றியைச் சொல்லி இந்த மலர் மாலையை அவருக்குச் சூட்டுகிறேன்" என்று கொஞ்சம் நாடகத் தமிழ் பேசி மாலையைச் சூட்டினார்.

     பாப்பாவுக்கு இதெல்லாம் மகிழ்ச்சியாக இருந்த போதிலும் சாமண்ணாவை அதுவரை மேடையில் காணவில்லையே என்ற கவலையும் ஒரு புறம் வாட்டிக் கொண்டிருந்தது.

     திரை உயர்ந்து, கையில் வில்லுடனும் கிரீடத்துடனும் பட்டு பஞ்சகச்சத்துடனும் வந்த அதி ரூப சுந்தரனைப் பார்த்ததும் பாப்பாவுக்குப் பக்கென்று நெஞ்சு அடைத்தது.

     மத்யமாவதியில் கம்பீர எடுப்புடன் தித்திக்கும் சாரீரத்தில் பாடிக் கொண்டு சபையை பிரமிக்க அடிப்பவர் யார்?

     அடி வயிற்றிலிருந்து ஒரு இன்ப உணர்வு அவள் அங்கமெல்லாம் பாய்ந்தது.

     ஏற்கெனவே தாபம் கொண்டவள், இப்போது தாபம் மிகையாகி விட, ஒரு நீண்ட வெப்பப் பெருமூச்சு விட்டு, சாமண்ணாவைத் தன் காதல் நிறைந்த கண்களால் விழுங்கிக் கொண்டிருந்தாள்.

     'ஆகா! சாமண்ணா! எத்தனை அழகு! என்ன ராஜகம்பீரம்! இத்தனை நாளும் இவர் பொருத்தமில்லாத கோமாளி வேடம் போட்டுத் தன் நாடக வாழ்க்கையே பாழாக்கிவிட்டாரே!'

     அடுத்து 'மெச்சினனே, உன்னையே - வில் விஜயனே!' என்று கிருஷ்ணன் குந்தள வராளியில் பாடவும்,

     அதற்கு அடுத்து இந்துஸ்தனி அளாவேரியில், 'உன் உயர் அன்பை நான் என்னவென்பேன்?' என்று சாமண்ணா அமுத கானமாகப் பதிலுக்குப் பாடி முடிக்க, சபையில் எழுந்த பரவச உற்சாகங்கள் கரகோஷங்களாக மாறின.

     உணர்ச்சி வசப்பட்ட பாப்பாவுக்குக் கண்ணீர் மல்கியது.

     அன்று அரச்சுனனாக வந்த சாமண்ணா அத்தனை பேரையும் கவர்ந்து விட்டான்.

     அதுவும் கடைசிக் காட்சியில் கர்ணனைப் பார்த்து, "ஆ! சகோதரா! உன்னைச் சகோதரன் என்று தெரியாமல் கொன்றேனே!" என்று உணர்ச்சி ததும்பக் கூறியபோது சபையே கலங்கி விட்டது.

     நாடகம் முடிந்ததும் பாப்பா பூமிக்கு இறங்கி வரச் சற்று நேரம் பிடித்தது.

     எல்லோரும் சாமண்ணாவின் நடிப்பைப் பாராட்டிப் பேசியபடி வெளியே போய்க் கொண்டிருந்தார்கள்.

     பாப்பா வெளியில் வந்து நின்ற போது அவள் கண்ட காட்சி அவளை உறைய வைத்தது.

     ஃபோர்ட் ஸெடான் கார் பளபளவென்று நிற்க, அதன் அருகில் டாக்டர் ராமமூர்த்தியும் அவர் மகள் சகுந்தலாவும் புறப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

     சகுந்தலா நாகரிக யுவதியாகக் கையில் வாட்ச் கட்டி, ஸாரியில் புரூச் குத்தி சொகுசாக நின்று கொண்டிருந்தாள். அவள் விழி சாமண்ணாவின் மீது லயித்திருந்தது. அவள் எதிரே சாமண்ணா இன்னும் வேஷத்தைக் கலைக்காமல் அர்ச்சுனனாகவே நின்று கொண்டிருந்தான்.

     "பிரமாதம் போங்க! உங்களை மறக்கவே முடியாது! அர்ச்சுனன்னா நீங்கதான்! ஷேக்ஸ்பியர் நாடகம் பார்த்தா அப்படி அனுபவம் வரும்னு சொல்வாங்க. இன்னிக்கு உங்க நாடகத்தைப் பார்த்து எனக்கு அந்த அனுபவம் கிடைத்தது!"

     அந்தப் பெண் பரவசமாய்ப் பேசினாள். சிறிது கூட வளையவில்லை. கூசவில்லை. கம்பீரமாக ஓர் ஐரோப்பிய மாது நிற்பது போல நின்று கொண்டிருந்தாள்.

     டாக்டர் ராமமூர்த்தியும் சாமண்ணாவை வெகுவாகப் புகழ்ந்தார்.

     விடைபெறும் போது, "அப்பா அவரை நம் வீட்டுக்குச் சாப்பிட அழையுங்களேன்!" என்றாள் சகுந்தலா.

     "ஆமாம் சாமண்ணா! சாப்பாட்டுக்கு வரணும். கம்பவுண்டரை அனுப்பறேன். என்னிக்கு வரேன்னு சொல்லு" என்றார் டாக்டர்.

     அர்ச்சுன சாமண்ணா கைகூப்பி நன்றி தெரிவிக்க, அவனது கண்கள் மென்மையாகச் சகுந்தலா மீது விழுந்தன.

     அவள் கண்களும் அவனை நோக்கி இருக்க, இருவர் கண்களும் ஆயிரம் செய்திகள் பேசிக் கொண்டன.

     இதையெல்லாம் சற்று எட்ட நின்று பார்த்துக் கொண்டிருந்த பாப்பா ஒரு கற்சிலை போல் உறைந்து போனாள்.





புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
151
152
153
154
155
156
157
158
159
160
161
162
163
164
165
166
167
168
169
170
171
172
173
174
175
176
177
178
179
180
181
182
183
184
185
186
187
188
189
190
191
192
193
194
195
196
197
198
199
200
201
202
203
204
205
206
207
208
209
210
211
212
213
214
215
216
217
218
219
220
221
222
223
224
225
226
227
228
229
230
231
232
233
234
235
236
237
238
239
240
240
241
242
243
244
245
246
247