http://www.chennailibrary.com





11

     முத்துக்குமரன் மேடையில் அப்படி நடந்து கொண்டதைக் கோபால் ஒரு சிறிதும் விரும்பவில்லை. பினாங்கு அப்துல்லாவின் மனம் புண்படும்படி நேர்வதனால் மலேயாப் பயணமும் நாடக ஏற்பாடுகளும் வீணாகி விடுமோ என்று அவன் பயந்தான். நாடகத்தின் இறுதிக் காட்சியில் நடிக்கிறபோதுகூட இந்த எண்ணமும் பயமுமே அவன் மனத்தில் இருந்தன.

     நாடக முடிவுக் காட்சியில் கூட்டம் மெய்மறந்து உருகியது. திரை விழுந்த பின்பும் நெடுநேரம் கைதட்டல் ஓயவே இல்லை. மந்திரி போகும்போது முத்துக்குமரனிடமும் கோபாலிடமும் சொல்லிப் பாராட்டி விட்டுப்போனார். அப்துல்லாவும் பாராட்டிவிட்டுப் போனார். அப்படிப் போகும்போது அவரை மறுநாள் இரவு தன் வீட்டில் விருந்துக்கு அழைத்தான் கோபால்.

     மேடையில் போட்ட ரோஜாப் பூ மாலை உதிர்ந்தது போலக் கூட்டமும் சிறிது சிறிதாக உதிர்ந்து கொண்டிருந்தது.

     நிகழ்ச்சி எல்லாம் முடிந்து தேடி வந்து பாராட்டிய ஒவ்வொருவருடைய பாராட்டுக்கும் முகம் மலர்ந்த பின் அண்ணாமலை மன்றத்திலிருந்து வீடு திரும்பும்போது காரில் மாதவியிடமும் முத்துக்குமரனிடமும் குறைபட்டுக் கொண்டான் கோபால்.

     "அடுத்தவங்க மனசு சங்கடப் படறாப்பிலே பேசறது எப்பவுமே நல்லதில்லை. அப்துல்லா கிட்ட ஒரு பெரிய காரியத்தை எதிர்பார்த்து நாம் அவரை இங்கே அழைச்சிருக்கோம். அவரு மனம் சங்கடப்பட்டா நம்ம காரியம் கெட்டுப் போயிடுமோன்னுதான் பயப்பட வேண்டியிருக்கு- "

     இதற்கு மற்ற இருவருமே பதில் சொல்லவில்லை. மீண்டும் கோபாலே தொடர்ந்து பேசலானான்:

     "மேடையிலே கொஞ்சம் பணிந்தோ பயந்தோ பேசறதிலே தப்பு ஒண்ணுமில்லே..." என்று கோபால் கூறியதும் அதுவரை பொறுமையாயிருந்த முத்துக்குமரன் பொறுமையிழந்து,

     "ஆம்! அச்சமே கீழ்களது ஆசாரம்" - என்று வெடுக்கென மறுமொழி கூறிவிட்டான்.

     கோபாலுக்கு முகத்தில் அறைந்தது போலாகிவிட்டது. இரண்டு பேரில் யாருக்குப் பரிந்து பேசினாலும் மற்றொருவருடைய கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்று அஞ்சி மாதவி மௌனமாயிருக்க வேண்டியதாயிற்று. கோபாலோ கார் பங்களாவை அடைகிறவரை கடுங்கோபத்தோடு வஞ்சகமானதொரு மௌனத்தைச் சாதித்தான். முத்துக்குமரனோ அதைப் பொருட்படுத்தவே இல்லை.

     இரவு சாப்பிடும்போது ஒருவருக்கொருவர் அதிகம் பேசிக் கொள்ளவில்லை. சாப்பிட்டு முடிந்ததும் மாதவி வீட்டுக்குப் புறப்பட்டு விட்டாள். முத்துக்குமரன் அவுட்ஹவுஸுக்கு வந்து விளக்கை அணைத்துவிட்டுப் படுத்துக் கொண்டான். பத்து நிமிஷங்களுக்குள் ஃபோன் மணி அடித்தது. பங்களாவிலிருந்து நாயர்ப் பையன் பேசினான்:

     "கொஞ்சம் இங்கே வந்து போக முடியுமான்னு ஐயா கேக்கறாரு."

     "இப்ப தூங்கியாச்சு, காலையிலே பார்க்கலாமின்னு சொல்லு" என்று பதில் கூறி ஃபோனை வைத்தான் முத்துக்குமரன். சிறிது நேரம் கழித்து மறுபடி ஃபோன் மணி அடித்தது. மாதவி பேசினாள்:

     "அப்படியெல்லாம் எடுத்தெறிஞ்சு பேசுறதிலே உங்களுக்கு என்னதான் சந்தோஷமோ தெரியலை. வீணா அடுத்தவங்க மனசைச் சங்கடப்படுத்தறதிலே என்ன பிரயோசனம்?"

     "நீ எனக்குப் புத்திமதி சொல்லிக் கொடுக்கிறியாக்கும்..."

     "சே! சே! அப்படியொண்ணுமில்லை. அந்த மாதிரி நினைச்சீங்கன்னா நான் ரொம்ப வருத்தப்படுவேன்."

     "வருத்தப்படேன். அதனாலே என்ன?"

     "என்னை வருத்தப்படச் செய்யறதிலே உங்களுக்கு என்ன அத்தினி சந்தோஷம்!"



சமுதாய வீதி : 1  2  3  4  5  6  7  8  9  10  11   12
13   14   15   16   17   18   19   20


இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/parthasarathy/samuthayaveethi/sv11.html

பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம்.
அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ,
ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.

 அச்சிட       விமர்சிக்க       விருப்ப தளமாக்க
       முகப்பு பக்கமாக்க




வருகைப் பதிவு (25-09-2006 முதல்)
ad
இலக்கிய தகவல்கள்
தரவிறக்கம்
பிற செய்திகள்
ஆன்மீகம்

தமிழ் யுனிகோடில் அமைந்த இணைய தளம். பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.