19 அன்றைய நாடகத்துக்கு முன்பு அவசர அவசரமாக வசனங்களையும் காட்சிகளின் வரிசை அமைப்பையும் ஒருமுறை புரட்டிப் பார்த்தான் முத்துக்குமரன். அவனே வசனங்களை எழுதி டைரெக்ட் செய்திருந்ததனாலும் சில முறை நாடகங்களைச் சபையில் அமர்ந்து பார்த்திருந்ததனாலும் எல்லாம் நன்றாக நினைவிருந்தது. தவிர அவனே ஒரு கவியாக இருந்ததனால் மனோ தர்மத்துக்கு ஏற்ப அப்போதே வசனத்தை இடத்துக்குப் பொருத்தமாக மேடையிலேயே இயற்றிச் சொல்லிவிட முடியும் என்ற நம்பிக்கையும் இருந்தது. உடன் நடிப்பவள் மாதவியாகையினால் ஒத்துழைப்பு பரிபூரணமாகக் கிடைக்கும் என்ற நம்பிக்கைக்கும் குறைவில்லை.
முத்துக்குமரனைப் பொறுத்தமட்டில் எந்த அவநம்பிக்கையுமின்றி இருந்ததோடு ஓரளவு அலட்சியத்தோடும் இருந்தான். கோபால் குடித்துவிட்டு மரீலின் ஹோட்டல் பாத்ரூமில் வழுக்கி விழுந்து காலில் ஃபிராக்சர் ஆகிப் படுத்த படுக்கையாயிருப்பது கூட்டத்தில் அந்த விநாடி வரை யாருக்கும் தெரியாதமையினால் கூட்டம் அமைதியாயிருந்தது. கோபாலுக்கு இருக்கிற 'ஸ்டார் வால்யூ' முத்துக்குமரனுக்கு இல்லையே என்பதுதான் அப்துல்லாவின் கொஞ்ச நஞ்சக் கவலையாயிருந்தது. கோலாலும்பூரில் முதல் நாள் நாடகத்தில் கோபால் தோன்றி ஜனங்கள் அவனையும் அவன் நடிப்பையும் நன்கு கண்டு கொள்ளும்படி செய்திருந்ததனால், கோபாலுக்கும் முத்துக்குமரனுக்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்து கொள்வார்களோ என்று வேறு சந்தேகமாக இருந்தது அவருக்கு. இந்தச் சந்தேகம் எல்லாம் நாடகம் தொடங்குகிற வரை தான். ஆனால் நாடகம் தொடங்கியதும் கூட்டத்துக்கும் - அவருக்கும் இதெல்லாம் மறந்தே போயின. மன்மதனே ராஜா வேடந்தரித்து தர்பாரில் வந்து அமர்வது போல் முத்துக்குமரன் மேடைக்கு வந்து தர்பாரில் அமர்ந்தபோது முதல் நாள் அதே காட்சியில் கோபால் பிரவேசித்த போது இருந்ததை விட அதிகமான கைதட்டல் இருந்தது. மாதவியும் அன்று மிக அழகாயிருப்பது போல் பட்டது. பளபளவென்று மேனி மின்னும் அரபிக் குதிரை பாய்ந்து வருவது போல் அன்று வாளிப்பாயிருந்தாள் அவள். 'நெஞ்சின் எல்லையில் நீயாட நீள் கழையினில் நானாடுவேன்'... என்ற பாட்டுக்கேற்ப அவள் ஆடியபோது பிரமாதமாக இருந்தது. முத்துக்குமரன் உடன் நடிக்கிறான் என்பதால் மாதவியும், மாதவி உடன் நடிக்கிறாள் என்பதால் முத்துக்குமரனும் போட்டி போட்டுக்கொண்டு பிரமாதமாக நடித்தார்கள். கூட்டத்தில் ஒவ்வொரு காட்சி முடிவின் போதும் கைதட்டல் கட்டிடமே அதிரும்படி ஒலித்தது. அன்றைய நாடகம் பிரமாதமான வெற்றியாக அமைந்தது. சக நடிகர்களும் அப்துல்லாவும் முத்துக்குமரனை வாய் ஓயாமல் பாராட்டினார்கள். "இதிலே பாராட்ட என்ன இருக்கு? என் கடமையை நான் செய்தேன். பணம் செலவழித்து அழைத்திருக்கிறீர்கள். கை நஷ்டப்படுமோ என்று உங்களுக்குப் பயம் வருகிறது. உங்கள் பயத்தைப் போக்கவும், என் நண்பனைக் காப்பாற்றவும் நான் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்தேன்" என்று சுபாவமாக அப்துல்லாவுக்கு மறுமொழி கூறினான் அவன். மறுநாள் காலைத் தினசரிகளில் கோபால் குளியலறையில் வழுக்கி விழுந்து காலில் எலும்பு முறிந்து படுத்த படுக்கையாயிருக்கும் செய்தியும் முந்திய தினம் இரவு நடந்த நாடகத்தில் கோபால் நடிக்க வேண்டிய பாகத்தை அந்த நாடகத்தின் ஆசிரியராகிய முத்துக்குமரன் என்பவரே ஏற்று நடித்தார் என்ற செய்தியும் வெளியாகி விட்டன. மறுநாள் காலை முத்துக்குமரனும், மாதவியும் கோபாலைப் பார்ப்பதற்காக ஆஸ்பத்திரிக்குப் போனார்கள். "சமயத்திலே கைகொடுத்து என் மானத்தைக் காப்பாத்தினத்துக்கு நன்றி வாத்தியாரே" - என்ற கை கூப்பினான் கோபால். "நான் உன் மானத்தைக் காப்பாத்தணும்னுதானே நீ வந்த இடத்திலே வெளிநாட்டுச் சரக்காச்சேன்னு காணாததைக் கண்டதுபோல மட்டில்லாமக் குடிச்சு மானத்தைக் கப்பலேத்திக்கிட்டிருக்கே. நல்ல வேளை பேப்பர்காரன்லாம் 'குளியலறையிலே வழுக்கி விழுந்து'ன்னு மட்டும் தான் போட்டிருக்கான். எதினாலே வழுக்கி விழுந்தான்னு சேர்த்துப் போட்டிருந்தானோ எல்லாரும் சிரிடா சிரின்னு சிரிப்பாங்க" - என்று நண்பனைக் கடிந்துகொண்டான் முத்துக்குமரன். "எப்பத்தான் உனக்குச் சுயபுத்தி இருந்திச்சி? அது போகட்டும், இப்ப எப்பிடி இருக்கு? நேத்து நல்லாத் தூங்கினியா?" "நல்லாத் தூங்கினேன். காலையில் விடிந்ததும் நாடகம் கான்ஸலாயிடிச்சோன்னு கவலையோட இருந்தேன். நல்ல வேளையா நீ காப்பத்திட்டே, பத்திரிகையைப் பார்த்துத் தெரிஞ்சுக்கிட்டேன், அப்துல்லாவும் வந்து சொன்னாரு, என்னைவிடப் பிரமாதமா நடிச்சேன்னாரு..." "சே! சே! அதெல்லாம் ஒண்ணும் இல்லே. தப்பு இல்லாமச் செய்தேன். அவ்வளவுதான்..." "நீ சும்மா அடக்கமா மறைக்கப் பார்க்கிறே வாத்தியாரே! ஏகப்பட்ட கைதட்டல்னு அப்துல்லா ஒரேயடியாப் புகழ்ந்து பிரமாதமாகக் கொண்டாடறாரு. பேப்பர்க்காரனும் உன்னைப் பாராட்டி எழுதியிருக்கான். "ஆயிரம் இருக்கலாம்டா கோபாலு! நீ அதுக்குன்னே பிறந்தவன்; உன்னை மாதிரி ஆகுமா!" - இவ்வளவில் 'ரொம்பப் பேச வேண்டாம்; பேஷன்டுக்கு ரெஸ்ட் வேணும்' - என்று நர்ஸ் வந்து கடிந்து கொள்ளவே அவர்கள் புறப்பட்டனர். முத்துக்குமரனும் மாதவியும் ஸ்டிரெய்ட்ஸ் ஹோட்டலுக்குச் சென்றபோது ரெட்டியாரிடமிருந்து ஃபோன் வந்தது. "நேத்து நானும் நாடகத்துக்கு வந்திருந்தேன். நேத்து உன்னை வேஷத்திலே பார்த்தப்பவே எனக்கு சந்தேகமா இருந்தது. ஆனா நம்ப முடியலே. இன்னிக்குக் காலையிலே பேப்பரைப் பார்த்தப்பதான் என் சந்தேகம் சரிதான்னு தெரிஞ்சுது. பிரமாதமா இருந்திச்சுப்பா உன் நடிப்பு... சும்மா சொல்லப்பிடாது. ஜமாய்ச்சுப்பிட்டே. ஆமா இப்ப கோபாலுக்கு எப்படி இருக்குது? நான் போய்ப் பார்க்கலாமா?" "இன்னிக்கி வேணாம் ரொம்ப ரெஸ்ட் தேவைங்கிறாங்க. நாளைக்கிப் போய்ப் பாருங்க. மவுண்ட்பாட்டன் ரோடிலே இருக்காரு" என்று ரெட்டியாருக்குப் பதில் கூறினான் அவன். அதன்பின் குழு கோலாலும்பூரில் முகாமிட்டிருந்த ஏழு நாளும் கோபாலின் பாத்திரங்களை எல்லாம் முத்துக்குமரனே நடித்தான். பிரமாதம் என்று பேரும் வாங்கினான். பாராட்டுகளும் பரிசுகளும் குவிந்தன. பத்திரிகைகள் பத்தி பத்தியாகப் புகழ்ந்து எழுதின. சிலர் முத்துக்குமரன், மாதவி ஜோடிப் பொருத்தத்தைப் புகழ்ந்து கொண்டாடினார்கள். "வசனம் மறந்து போறப்ப நீங்களே மேடையிலே வசனம் பேசிக்கிறீங்க. அது சில சமயம் ஏற்கனவே எழுதி வச்சிருந்த வசனத்தைவிட நல்லா அமைஞ்சிடுது" என்றாள் மாதவி. "இதுலே அதிசயப்படறதுக்கு என்ன இருக்கு மாதவி? எல்லோரும் அதிசயப்படறதைப் போல நீயும் அதிசயப்படறதிலே அர்த்தமில்லே. பிறந்ததிலிருந்து இதிலேயே உழன்றுக்கிட்டிருக்கேன். பாய்ஸ் கம்பெனிக் காலத்திலிருந்து இன்று வரை பார்த்தாச்சு. என்னாலே இது கூட முடியலேன்னாத்தான் ஆச்சரியப்படணும் நீ." "உங்களுக்கு இது சாதாரணமாகத் தோன்றலாம். ஆனால் எனக்கு உங்களோட ஒவ்வொரு சாதனையுமே பெருசுதான். ஒவ்வொரு திறமையுமே ஆச்சரியந்தன். நான் அதை இனிமே மாத்திக்க முடியாது" - என்றாள் மாதவி. "சும்மாயிரு! நீ ஒரு பைத்தியம்." "பைத்தியம்னே வச்சுக்கங்களேன். ஆனா எல்லாப் பித்தும் உங்கமேலேதான்! நீங்க சிங்கப்பூர் ஏர்ப்போர்ட்ல இறங்கினப்ப, தனியா யாருமே கவனிக்காமே அநாதை போல நின்னப்ப என் வயிறெரிஞ்சுது. அதுக்குப் பலன் இப்பத்தான் கிட்டியிருக்கு. அப்துல்லலாவும் கோபாலும் பினாங்கிலே அநாவசியமா உங்களைக் கொதிக்கக் கொதிக்கப் படுத்தினாங்க, இன்னிக்கு நீங்க தான் அவங்க மானத்தைக் காப்பாத்த வேண்டியிருக்கு." "சரி! சரி! போதும் இதோட விடு, என் தலையை ரொம்பக் கனக்கப் பண்ணாதே. நீ புகழ்ந்தால் தலை ரொம்பக் கனமாகிவிடுகிறது மாதவி..." "அது சரி. நேத்து அப்துல்லா ஏதோ தனியா உங்களைப் பார்க்கணும்னாரே?..." "ஐயா! நான் உங்களுக்காக எதையும் செய்யலை, என் நண்பனுடைய மானத்தைக் காக்கவே என் கடமையை நான் செய்தேன். எது செய்யணும்னாலும் கோபாலுக்கு செய்யுங்க. எனக்கு உங்களோட நேரே பேச்சில்லைன்னு மறுத்திட்டேன்." "நல்லா வேணும்? உங்களை எத்தினி பாடு படுத்தினாரு. இங்கிலீஷ் தெரியாதுன்னு உங்களைக் கிண்டல் வேறே பண்ணினாரு," "எது தெரிஞ்சா என்ன, தெரியாட்டி என்ன? மனிதனோட உயர்ந்த மொழி பிறரிடம் பெருந்தன்மையாக நடந்து கொள்ளும் போது தான் பேசப்படுகிறது. அது தெரிஞ்சாலே போதும். அது தெரியாதவங்களுக்கு எத்தனை மொழிகள் தெரிந்தாலும் பயனில்லை. துக்கப்படறபோது ரெண்டு சொட்டுக் கண்ணீரும் சந்தோஷப்படறபோது ஒரு புன்னகையும் பதிலாக எங்கிருந்து கிடைக்குமோ அங்கேதான் எல்லா மொழிகளும் புரியற இதயம் இருக்கு." கோபால் மேலும் ஒரு வாரம் ஒய்வுகொள்ள வேண்டுமென்று டாக்டர் கூறிவிடவே மலாக்காவில் நடைபெற வேண்டிய நாடகங்களிலும் முத்துக்குமரனே நடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. முத்துக்குமரனும் குழுவினரும் காரிலேயே மலாக்காவுக்குப் புறப்பட்டனர். கோபாலைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பு ருத்ரபதி ரெட்டியாரிடம் விடப்பட்டிருந்தது. மலாக்காவில் தங்கியிருந்தபோது ஒரு நாள் பகலில் போர்ட் டிக்ஸன் கடற்கரைக்குப் போய் சுற்றிப் பார்த்து விட்டு வந்தார்கள் அவர்கள். மலாக்காவிலும் நாடகங்களுக்குப் பிரமாதமான வசூல் ஆயிற்று. முத்துக்குமரனின் நடிப்பு நாளுக்கு நாள் மெருகேறியது - குழுவுக்கு நல்ல பேர் கிடைக்க அவன் ஒருவனே காரணமாயிருந்தான். மலாக்காவில் நாடகங்கள் முடிந்ததும் திரும்புகிற வழியில் சிரம்பானில் ஒரு நண்பர் வீட்டில் விருந்துக்கு அழைத்திருந்தார்கள். விருந்து முடிந்ததும், அந்த விருந்தை அளித்தவர் மூலமாக அப்துல்லா தாம் முன்பு கொடுத்து மறுக்கப்பட்ட அதே வைரமோதிரத்தைத் திரும்பவும் கொடுக்கச் செய்தார். முத்துக்குமரனுக்கு அவர் ஏற்பாடு புரிந்தது. தாம் நேரே கொடுத்தால் மறுக்கிறானே என்று சிரம்பான் நண்பர் மூலம் விருந்துக்கு ஏற்பாடு செய்து அப்துல்லா சுற்றி வளைத்து அதே மோதிரத்தைக் கொடுக்க வருவதை அவன் அறிந்திருந்தும் பலருக்கு முன்னே அவரை அவமானப்படுத்த விரும்பாமல் வாங்கிக் கொண்டான். சிரம்பானிலிருந்து கோலாலும்பூர் திரும்பியதும் முதல் வேலையாக அதை அவரிடம் திருப்பிக் கொடுத்தான். "இதோ பாருங்க மிஸ்டர் அப்துல்லா! நீங்க எதைக் கொடுத்தும் என் பிரியத்தை விலைக்கு வாங்க முடியாது. நான் உங்ககிட்டே இருந்து எதையும் எதிர்பார்த்தே நடிக்கலை. எனக்கு உங்களுடைய காண்ட்ராக்ட் லாபமா, நஷ்டமாங்கிறதைப் பத்திக்கூட கவலையில்லை. என் சிநேகிதனோட நான் மலேயாவுக்கு வந்தேன். அவன் ஒரு கஷ்டத்தில் இருக்கறப்ப உதவறது என் கடமை. அதைத் தவிர வேறெந்த ஆசைக்காகவும் இதை நான் செய்யலே. நீங்க எது செய்யணும்னாலும் கோபாலுக்குத்தான் செய்யணும். சிரம்பானிலே நாலு பேர் முன்னாலே உங்களை அவமானப்படுத்தக்கூடாதுன்னு தான் இதை வாங்கிக் கொள்வதுபோல் நடித்தேன். எனக்கு இங்கிலீஷ் தெரியாது. ஆனால் பெருந்தன்மை தெரியும். நான் ரொம்ப மானஸ்தன். ஆனா அதுக்காக இன்னொருத்தனை அவமானப்படுத்த மாட்டேன். மன்னிச்சுக்குங்க. இதை நான் திருப்பிக் கொடுக்கத்தான் வேண்டியிருக்கு -" "என்னை ரொம்பச் சங்கடப்படுத்தறிங்க, மிஸ்டர் முத்துக்குமார்!" "சே! சே! அப்படியெல்லாம் ஒண்ணுமில்லே..." அப்துல்லா தலையைத் தொங்கப் போட்டபடியே மோதிரத்தை வாங்கிக்கொண்டு போனார். ஆணோ பெண்ணோ விலைக்கு வாங்க முடியாத மனிதர்களைச் சந்திக்கும் போதெல்லாம் அவருடைய தலை இப்படித்தான் தொங்கிப் போயிருக்கிறது. அன்று மாலை கோபால் முத்துக்குமரனைக் கூப்பிட்டனுப்பினான். முத்துக்குமரன் மவுண்ட்பேட்டன் ரோடுக்குப் போய் அவனைச் சந்தித்தான். "உட்கார்" என்று தன் அருகே படுக்கையை ஒட்டிப் போடப்பட்டிருந்த நாற்காலியைச் சுட்டிக்காட்டினான் கோபால். முத்துக்குமரன் உட்கார்ந்தான். "நீ அப்துல்லா கொடுத்த மோதிரத்தை வேண்டாம்னு திருப்பிக் கொடுத்தியா?" "ஆமா, ஒருவாட்டி மட்டுமில்லே, ரெண்டுவாட்டி கொடுத்தாரு. ரெண்டுவாட்டியும் திருப்பிக் கொடுத்திட்டேன்." "ஏன் அப்படிச் செய்தே?" "அவருக்கும் எனக்கும் ஒரு சம்பந்தமும் இல்லே. நான் உன்கூட இங்கே வந்திருக்கேன். உனக்கு முடியலைங்கிறத்துக்காகத்தான் நாடகத்திலே பதிலுக்கு நடிக்கிறேன். அவர் யார் என்னைப் பாராட்டவும் பரிசு கொடுக்கவும்!" "ஓகோ! அப்பிடியா சங்கதி! ஒரு பெரிய மனுஷன் நம்மை அவமானப்படுத்தினா மௌனமா இருக்கணும். ஒரு பெரிய மனுஷனை நாம் பகைச்சுக்கக் கூடாது. அப்பிடித்தானே?" "அப்துல்லா உன்னை அவமானப்படுத்தியிருக்கார்னே வச்சுக்க. அப்படியிருந்தாலும்..." "சே! சே! இன்னொருவாட்டி சொல்லாதே. என்னை அவமானப்படுத்தறதுக்கு அவன் இல்லே, அவனோட பாட்டன் வந்தாலும் முடியாது. அவமானப்படுத்தறதா நெனைச்சுக்கிட்டு ஏதேதோ சில்லறை விஷமங்கள் பண்ணினாரு; அவ்வளவுதான்." "இருந்தாலும் இவ்வளவு ரோஷம் உனக்கு ஆகாது வாத்தியாரே!" "அது ஒண்ணுதான் ஒரு கலைஞனுக்கு நிச்சயமா மீதமிருக்கப் போற விஷயம். அதையும் விட்டுட்டா அப்புறம் எப்பிடி?" "அப்துல்லா எங்கிட்ட வந்து சொன்னாரு, மோதிரத்தை எப்பிடியாவது அவரை வாங்கிக்கச் செய்யணும்னாரு." "அதுதான் நான் அவரிட்டவே சொன்னேனே. எது செய்யணும்னாலும் கோபால்கிட்டச் செய்யுங்க. எனக்கும் உங்களுக்கும் நேரே ஒரு சம்பந்தமும் இல்லேன்னேனே? சொல்லலியா உங்கிட்ட?" "சொன்னாரு. சொல்லிட்டு மோதிரத்தையும் எங்கிட்ட கொடுத்திட்டுப் போயிருக்காரு..." "அப்படியா?" "அப்துல்லாகிட்ட மோதிரத்தை வாங்கிக்கக்கூடாது, ருத்ரபதி ரெட்டியாரிட்டக் கைக்கடிகாரம் வாங்கிக்கலாமா?" "ருத்ரபதி ரெட்டியாரும், அப்துல்லாவும் ஒண்ணாயிட மாட்டாங்க. ரெட்டியாரு இன்னிக்கிக் கோடீசுவரனாகியும் எங்கிட்ட ஒரு வித்தியாசமும் இல்லாமப் பழகறாரு." கோபாலால் இதற்குப் பதில் சொல்ல முடியவில்லை. "சரி! உங்கிட்டப் பேசிப் பிரயோசனம் இல்லே! போயிட்டு வா!" என்றான் கோபால். முத்துக்குமரன் கோலாலும்பூரில் மேலும் இரண்டு நாடகங்கள் நடித்தான். அதற்குள் கோபால் எழுந்து நடமாடத் தொடங்கி விட்டான். இரண்டாவது நாள் நாடகத்தை, கோபாலும் சபையில் முன்வரிசையில் அமர்ந்து பார்த்தான். அவனுக்கு ஆச்சிரியம் தாங்கவில்லை. முத்துக்குமரனின் நடிப்பைப் பார்த்து அவன் மூக்கில் விரலை வைத்தான். நாடகம் முடிந்ததும் முத்துக்குமரனைக் கட்டித் தழுவிப் பாராட்டினான் கோபால். மறு நாள் ரேடியோவுக்கும் டெலிவிஷனுக்கும் அவர்கள் பேட்டியளித்தார்கள். பேட்டிக்கு முத்துக்குமரன், கோபால், மாதவி மூவரும் சென்றார்கள். இன்னொரு நாள் சுற்றிப் பார்ப்பதில், வேண்டியவர்களிடம் சொல்லி விடை பெற்றுக் கொள்வதில் கழிந்தது. புறப்படுகிற தினத்தன்று மரீலின் ஹோட்டலில் கோபால் குழுவினருக்கு ஒரு ஸெண்ட் - ஆஃப் பார்ட்டி கொடுக்கப்பட்டது. அதில் எல்லாருமே முத்துக்குமரனை வாயாரப் புகழ்ந்தனர். உபசாரத்துக்கு நன்றி தெரிவித்துப் பேசும்போது கோபால் கூட முத்துக்குமரனையே பாராட்டிப் பேசினான். மாதவி விழாவில் குழுவினரின் சார்பில் ஒரு பாட்டுப் பாடினாள். 'ஒளி படைத்த கண்ணினாய் வா வா'... பாடும்போது அவள் கண்கள் எதிரே உள்ள வரிசையில் அமர்ந்திருந்த முத்துக்குமரனையே பார்த்தன. "அப்படியானால் நானும் ப்ளேன்ல போகலே. உங்களோட கார்லியே வரேன்" - என்றான் கோபால். கால் சரியாகி எழுந்திருந்தும் அவன் 'வீக்' ஆக இருந்தான். அவன் காரில் இருநூறு மைலுக்கு மேல் பயணம் செய்வதென்பது முடியாத காரியம். எனவே முத்துக்குமரன் அவனை வற்புறுத்தி விமானத்திலேயே வரச் சொல்ல வேண்டியதாயிற்று. "இடங்களையும், இயற்கை வளத்தையும் நல்லாப் பார்க்கலாம்னுதான் நாங்க ரெண்டு பேரும் கார்லே வரதாகச் சொல்கிறோம். அதை நீங்க யாரும் வித்தியாசமா நெனைக்கக் கூடாது. நீ இப்ப இருக்கிற நிலைமையிலே கார்லே வர லாய்க்குப்படாது. சொன்னாக் கேளு" - என்று முத்துக்குமரன் விளக்கிய பின்பு கோபால் ஒப்புக் கொண்டான். அப்துல்லாவுக்கு இன்னும் உதயரேகாவிடம் மயக்கம் தீரவில்லை. மூன்று பேரும் மலேஷியன் - ஏர்வேஸ் விமானத்தில் சிங்கப்பூர் பறந்தார்கள். முத்துக்குமரன் உட்பட மற்றவர்கள் ஜோகூர் வழியே கார்களில் சிங்கப்பூர் சென்றார்கள். ருத்ரபதி ரெட்டியார் டிபன் காரியர்களில் பகலுணவு தயாரித்துக் கட்டிக் கொடுத்திருந்தார். நடுவே ஓரிடத்தில் எல்லாரும் கார்களை நிறுத்திவிட்டுப் பகலுணவை ஓர் காட்டு ஓடைக்கரையில் முடித்துக் கொண்டார்கள். பிரயாணம் மிகமிக இன்பமாக இருந்தது. ஜோகூர் பாலம் தாண்டும்போது மாலை ஆறரை மணிக்கு மேலாகிவிட்டது. இருட்டுகிற நேரத்தில் சிங்கப்பூர் மிக அழகாயிருந்தது. குளிருக்கும் இருளுக்கும் பயந்து ஓர் அழகிய நவநாகரிக யுவதி ஒதுங்கி ஒளிவது போல் நகரம் அந்த வேளையில் மங்கலாகவும் அழகாகவும் தெரிந்தது. அவர்களுடைய கார்கள் புக்கிட்டிமா ரோட்டைக் கடந்து பென்குவின் தெருவிலுள்ள ஓர் ஹோட்டலை அடையுமுன் நன்றாக இருட்டி விட்டது. அட்டையில் அடுக்கிய மாதிரிப் பல மாடிகளைக் கொண்ட வானளாவிய ஒரே மாதிரிக் கட்டிடங்கள் எங்கும் தென்பட்டன. ஊர் கோலாலும்பூரைவிடப் பரபரப்பாகவும் வேகம் மிகுந்தும் காணப்பட்டது. கார்கள் சாலையில் எறும்பு மொய்ப்பதுபோல் மொய்த்தன. மஞ்சள் நிற மேற் பகுதியோடு டாக்ஸிகள் விரைந்து கொண்டிருந்தன. இரவு உணவுக்கு எல்லாரும் சிரங்கூன் ரோடிலிருந்த கோமளவிலாஸ் சைவக் கடைக்குப் போய்விட்டு வந்தார்கள். இம்முறை கோபாலும் அவர்களுடனேயே தங்கிவிட்டான். அப்துல்லாவும் உதயரேகாவும் மட்டுமே காண்டினெண்டல் ஹோட்டலில் தங்கியிருந்தார்கள். சிங்கப்பூர் நாடகங்களில் எல்லாம் கோபால்தான் நடித்தான். சிங்கப்பூர் நாடகங்களிலும் நல்ல வசூல் ஆயிற்று. கடைசி இரண்டு தினங்கள் மட்டும் வசூல் கொஞ்சம் சுமாராக இருந்தது. மழை வந்து கெடுத்துவிட்டது. ஆனாலும் நஷ்டம் எதுவுமில்லை என்றார் அப்துல்லா. சிங்கப்பூரிலும் அவர்கள் சில இடங்களைச் சுற்றிப் பார்த்தார்கள். ஜுரோங் தொழில் பேட்டை, டைகர்பாம் கார்டன்ஸ், குவின்ஸ்டவுனின் உயரமான கட்டிடங்கள் எல்லாவற்றையும் பார்த்தார்கள். டைகர்பாம் தோட்டத்தில், சீனப் புராணத்தை அடிப்படையாகக் கொண்டு உலகில் பாவம் செய்தவர்கள் எப்படி எப்படி எல்லாம் தண்டிக்கப்படுகிறார்கள் என்பது பற்றிப் பல குரூரமான காட்சிகளைச் சுதை வேலைச் சிற்பங்களால் நெடுகச் சித்தரித்திருந்தார்கள். பாவம் செய்த ஒருவனை நரகத்தில் ரம்பத்தால் அறுப்பது போலவும், தலையில் இரும்பு ஆணிகளை அறைவது போலவும், நெருப்புக் கொப்பரையில் நிர்வாணமாகத் தூக்கிப்போடுவது போலவும் சித்தரிக்கப்பட்டிருந்தன. அதைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே முத்துக்குமரன், "மெட்ராஸிலே இருக்கிற அத்தினி சினிமாக்காரங்களையும் கூட்டியாந்து இந்தக் காட்சிகளை அடிக்கடி காமிக்கணும் மாதவி?" என்றான். "வேண்டியதில்லை..." "ஏன் அப்படிச் சொல்றே?" "ஏன்னா இதெல்லாம் அங்கேயே தினம் தினம் நடந்துக்கிட்டிருக்கு!..." அவன் வாய்விட்டுச் சிரித்தான். அந்தச் சிரிப்பில் அவளும் கலந்துகொண்டாள். ஊருக்குப் புறப்படுகிற தினத்தன்று காலையில் அவரவர்கள் 'ஷாப்பிங்' போனார்கள். ஒரு புடவைக் கடைக்குச் சென்றிருந்தபோது: "நான்கூட ஒரு புடவை வாங்கவேண்டியிருக்கு. உனக்கு முண்டு கொடுக்கணுமே" என்றான் முத்துக்குமரன். அவள் முகம் நாணத்தில் சிவந்தது. மாலையில் சிங்கப்பூரிலும் ஒரு பிரிவுபசார விருந்து இருந்தது. அதை முடித்துக் கொண்டு குழுவினர் அனைவரும் வருவதற்கான கப்பல் பயண ஏற்பாடுகள் பற்றி அப்துல்லாவிடம் கூறிவிட்டு கோபால், முத்துக்குமரன், மாதவி மூவரும் விமான நிலையம் புறப்பட்டனர். சென்னை செல்கிற ஏர் இந்தியா விமானம் ஆஸ்திரேலியாவிலிருந்து சிங்கப்பூர் வந்து அப்புறம் அங்கிருந்து சென்னை புறப்பட வேண்டும். அன்றிரவு அது ஆஸ்திரேலியாவிலிருந்து தாமதமாகத்தான் வந்தது. அப்துல்லாவும், குழுவினரும், சிங்கப்பூர் ரசிகர்களும், அகாலத்தையும் பொருட்படுத்தாமல் விமான நிலையத்துக்கு வழியனுப்ப வந்திருந்தார்கள். கோபாலின் பங்களாவிலிருந்து கார்கள் வந்திருந்தன. ஒரு கார் நிறைய சாமான்கள் ஏறின. மறு காரில் அவர்கள் மூவரும் ஏறிக்கொண்டனர். வீடுபோய்ச் சேரும்போது ஏறக்குறைய இரண்டு மணி ஆகிவிட்டது. "இந்நேரத்துக்குமேலே வீட்டுக்குப் போவானேன்? இங்கேயே தூங்கிட்டுக் காலையிலே போயேன் மாதவி" என்று கோபால் அவளை வேண்டினான். மாதவி தயங்கினாள். "நீ ஆளே மாறிப்போயிட்டே! முன்னே மாதிரி இல்லே" என்று அவளுடைய தயக்கத்தைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே சொன்னான் கோபால். அவள் அதற்கு மறுமொழி கூறவில்லை. கோபால் சிரித்துக் கொண்டே உள்ளே போய்விட்டான். "அவன் ஏன் சிரிக்கிறான்...?" முத்துக்குமரன் அவளைக் கேட்டான். "நான் ரொம்ப மாறிட்டேனாம்?" "வீட்டுக்குப் போகணுமா? இங்கேயே தங்கறியா? ரொம்ப நேரமாச்சே?" "தங்கலாம்! ஆனா உங்க அவுட்ஹவுசிலே ஒரு மூலையிலே இடங்கொடுத்தீங்கன்னாக்கூடப் போதும். மத்த எந்த இடத்திலியும் இந்தப் பங்களாவிலே தங்க முடியாது. இது ஒரு பிசாசு வீடு மாதிரி. சிங்கப்பூரிலே நேத்துக் காட்டினீங்களே நரகத்தில் நடக்கும் குரூரங்களை, அதை மறுபடியும் நினைச்சக்குங்க..." "அவுட் ஹவுஸ்லே ஒரே கட்டில்தானே இருக்கு. தரை ஜில்னு இருக்குமே?" "பரவாயில்லே! உங்க காலடிலே கீழே தரையோரமா கொஞ்சம் இடம் கொடுங்க போதும்." அவள் பின்தொடர அவன் அவுட்ஹவுஸை நோக்கி நடந்தான். அன்று அவர்கள் எல்லாம் சிங்கப்பூரிலிருந்து திரும்புகிற செய்தியறிந்து நாயர்ப்பையன் அவுட்ஹவுஸைப் பெருக்கிச் சுத்தப்படுத்திப் பானையில் தண்ணீர் எடுத்து வைத்துப் புதிய தலையணை விரிப்புகள் எல்லாம் போட்டுப் படுக்கையையும் சுத்தமாக விரித்து வைத்துவிட்டுப் போயிருந்தான். அவர்களோடு வந்த சூட்கேஸ்கள் எல்லாவற்றையும் தனித்தனியே பிரித்து மாதவிக்கும் முத்துக்குமரனுக்கும் உரியவற்றை அவுட்ஹவுஸ் வராண்டாவில் டிரைவர் ஏற்கெனவே கொண்டுவந்து வைத்திருந்தான். இருவரும் அவற்றை எடுத்து உள்ளே வைத்தார்கள். கோபால் என்ன நினைத்துக்கொண்டாலும் நினைத்துக் கொள்ளட்டும் என்று மாதவி முத்துக்குமரனோடு அவுட்ஹவுஸிலேயே தங்கிவிட முடிவு செய்தாள். முத்துக்குமரன் விரிப்பையும் தலையணையையும் அவளுக்குக் கொடுத்துவிட்டுக் கட்டிலில் இருந்த வெறும் மெத்தையில் படுத்தான். மாதவி கீழே விரித்துப் படுத்தாள். "இந்தாங்க ஒரு தலையணைதான் இருக்கு போலிருக்கே, எனக்கு வேண்டாம், நீங்களே வச்சுக்குங்க..." என்று மாதவி சிறிது நேரம் கழித்துத் தலையணையைக் கொடுப்பதற்காக அவனருகே வந்தாள். அவன் இலேசாகத் தூங்கத் தொடங்கியிருந்தான். அப்போது டெலிபோன் மணி வேறு அடித்தது. தான் எடுக்கலாமா, கூடாதா என்று மாதவி தயங்கி நின்றாள். முத்துக்குமரன் படுக்கையில் எழுந்து உட்கார்ந்து டெலிபோனை எடுத்தான். எதிர்ப்புறம் கோபால் பேசினான். |
எட்டுத் தொகை குறுந்தொகை பதிற்றுப் பத்து பரிபாடல் கலித்தொகை அகநானூறு ஐங்குறு நூறு (உரையுடன்) பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை பொருநர் ஆற்றுப்படை சிறுபாண் ஆற்றுப்படை பெரும்பாண் ஆற்றுப்படை முல்லைப்பாட்டு மதுரைக் காஞ்சி நெடுநல்வாடை குறிஞ்சிப் பாட்டு பட்டினப்பாலை மலைபடுகடாம் பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - PDF Download இனியவை நாற்பது (உரையுடன்) - PDF Download கார் நாற்பது (உரையுடன்) - PDF Download களவழி நாற்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை எழுபது (உரையுடன்) - PDF Download திணைமொழி ஐம்பது (உரையுடன்) - PDF Download கைந்நிலை (உரையுடன்) - PDF Download திருக்குறள் (உரையுடன்) நாலடியார் (உரையுடன்) நான்மணிக்கடிகை (உரையுடன்) - PDF Download ஆசாரக்கோவை (உரையுடன்) - PDF Download திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) பழமொழி நானூறு (உரையுடன்) சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - PDF Download முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - PDF Download ஏலாதி (உரையுடன்) - PDF Download திரிகடுகம் (உரையுடன்) - PDF Download ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம் மணிமேகலை வளையாபதி குண்டலகேசி சீவக சிந்தாமணி ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் நாககுமார காவியம் - PDF Download யசோதர காவியம் - PDF Download வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் திருப்பதி ஏழுமலை வெண்பா - PDF Download மனோதிருப்தி - PDF Download நான் தொழும் தெய்வம் - PDF Download திருமலை தெரிசனப்பத்து - PDF Download தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - PDF Download திருப்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - PDF Download திருமால் வெண்பா - PDF Download சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை திருவிசைப்பா திருமந்திரம் திருவாசகம் திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை சொக்கநாத வெண்பா - PDF Download சொக்கநாத கலித்துறை - PDF Download போற்றிப் பஃறொடை - PDF Download திருநெல்லையந்தாதி - PDF Download கல்லாடம் - PDF Download திருவெம்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - PDF Download திருக்கைலாய ஞான உலா - PDF Download பிக்ஷாடன நவமணி மாலை - PDF Download இட்டலிங்க நெடுங்கழிநெடில் - PDF Download இட்டலிங்க குறுங்கழிநெடில் - PDF Download மதுரைச் சொக்கநாதருலா - PDF Download இட்டலிங்க நிரஞ்சன மாலை - PDF Download இட்டலிங்க கைத்தல மாலை - PDF Download இட்டலிங்க அபிடேக மாலை - PDF Download சிவநாம மகிமை - PDF Download திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - PDF Download சிதம்பர வெண்பா - PDF Download மதுரை மாலை - PDF Download அருணாசல அட்சரமாலை - PDF Download மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - PDF Download திருவுந்தியார் - PDF Download உண்மை விளக்கம் - PDF Download திருவருட்பயன் - PDF Download வினா வெண்பா - PDF Download இருபா இருபது - PDF Download கொடிக்கவி - PDF Download சிவப்பிரகாசம் - PDF Download பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - PDF Download சன்மார்க்க சித்தியார் - PDF Download சிவாச்சிரமத் தெளிவு - PDF Download சித்தாந்த சிகாமணி - PDF Download உபாயநிட்டை வெண்பா - PDF Download உபதேச வெண்பா - PDF Download அதிசய மாலை - PDF Download நமச்சிவாய மாலை - PDF Download நிட்டை விளக்கம் - PDF Download சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - PDF Download நெஞ்சொடு புலம்பல் - PDF Download ஞானம் - 100 - PDF Download நெஞ்சறி விளக்கம் - PDF Download பூரண மாலை - PDF Download முதல்வன் முறையீடு - PDF Download மெய்ஞ்ஞானப் புலம்பல் - PDF Download பாம்பாட்டி சித்தர் பாடல் - PDF Download கம்பர் கம்பராமாயணம் ஏரெழுபது சடகோபர் அந்தாதி சரஸ்வதி அந்தாதி - PDF Download சிலையெழுபது திருக்கை வழக்கம் ஔவையார் ஆத்திசூடி - PDF Download கொன்றை வேந்தன் - PDF Download மூதுரை - PDF Download நல்வழி - PDF Download குறள் மூலம் - PDF Download விநாயகர் அகவல் - PDF Download ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - PDF Download கந்தர் கலிவெண்பா - PDF Download சகலகலாவல்லிமாலை - PDF Download திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் திருக்குறும்பலாப்பதிகம் திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி திருக்குற்றால மாலை - PDF Download திருக்குற்றால ஊடல் - PDF Download ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை முருக பக்தி நூல்கள் கந்தர் அந்தாதி - PDF Download கந்தர் அலங்காரம் - PDF Download கந்தர் அனுபூதி - PDF Download சண்முக கவசம் - PDF Download திருப்புகழ் பகை கடிதல் - PDF Download மயில் விருத்தம் - PDF Download வேல் விருத்தம் - PDF Download திருவகுப்பு - PDF Download சேவல் விருத்தம் - PDF Download நல்லை வெண்பா - PDF Download நீதி நூல்கள் நன்னெறி - PDF Download உலக நீதி - PDF Download வெற்றி வேற்கை - PDF Download அறநெறிச்சாரம் - PDF Download இரங்கேச வெண்பா - PDF Download சோமேசர் முதுமொழி வெண்பா - PDF Download விவேக சிந்தாமணி - PDF Download ஆத்திசூடி வெண்பா - PDF Download நீதி வெண்பா - PDF Download நன்மதி வெண்பா - PDF Download அருங்கலச்செப்பு - PDF Download முதுமொழிமேல் வைப்பு - PDF Download இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை நேமிநாதம் - PDF Download நவநீதப் பாட்டியல் - PDF Download நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - PDF Download சிலேடை நூல்கள் சிங்கைச் சிலேடை வெண்பா - PDF Download அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - PDF Download கலைசைச் சிலேடை வெண்பா - PDF Download வண்ணைச் சிலேடை வெண்பா - PDF Download நெல்லைச் சிலேடை வெண்பா - PDF Download வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - PDF Download உலா நூல்கள் மருத வரை உலா - PDF Download மூவருலா - PDF Download தேவை உலா - PDF Download குலசை உலா - PDF Download கடம்பர்கோயில் உலா - PDF Download திரு ஆனைக்கா உலா - PDF Download வாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - PDF Download ஏகாம்பரநாதர் உலா - PDF Download குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - PDF Download அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - PDF Download திருவருணை அந்தாதி - PDF Download காழியந்தாதி - PDF Download திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - PDF Download திருப்புல்லாணி யமக வந்தாதி - PDF Download திருமயிலை யமக அந்தாதி - PDF Download திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - PDF Download துறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - PDF Download திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - PDF Download அருணகிரி அந்தாதி - PDF Download கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - PDF Download திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - PDF Download இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - PDF Download தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - PDF Download பழனி இரட்டைமணி மாலை - PDF Download கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - PDF Download குலசை உலா - PDF Download திருவிடைமருதூர் உலா - PDF Download பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - PDF Download நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - PDF Download விநாயகர் நான்மணிமாலை - PDF Download தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - PDF Download நெஞ்சு விடு தூது - PDF Download மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF Download மான் விடு தூது - PDF Download திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - PDF Download திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - PDF Download மேகவிடு தூது - PDF Download கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - PDF Download சிதம்பர மும்மணிக்கோவை - PDF Download பண்டார மும்மணிக் கோவை - PDF Download சீகாழிக் கோவை - PDF Download பாண்டிக் கோவை - PDF Download கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் மதுரைக் கலம்பகம் காசிக் கலம்பகம் - PDF Download புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - PDF Download சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - PDF Download கொங்கு மண்டல சதகம் - PDF Download பாண்டிமண்டலச் சதகம் - PDF Download சோழ மண்டல சதகம் - PDF Download குமரேச சதகம் - PDF Download தண்டலையார் சதகம் - PDF Download திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - PDF Download கதிரேச சதகம் - PDF Download கோகுல சதகம் - PDF Download வட வேங்கட நாராயண சதகம் - PDF Download அருணாசல சதகம் - PDF Download குருநாத சதகம் - PDF Download பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு முத்தொள்ளாயிரம் காவடிச் சிந்து நளவெண்பா ஆன்மீகம் தினசரி தியானம் |