http://www.chennailibrary.com





9

     "இன்னிக்கு உனக்குப் பணம், பவிஷு எல்லாம் வந்திட்டதுனாலே நாடகம்னா என்னன்னு நீ கரைகண்டு விட்டதாக நான் ஒப்புக்கொண்டு விடமாட்டேன். நாடகம்னா என்னன்னு எனக்குத் தெரியும். அதைக் கேட்டு அதன்படி நடக்கிறதைவிட வேறே எதையும் நீ செய்ய வேண்டியதில்லை. திடீர்னு உன்னை நீ ரொம்பப் பெரிய புத்திசாலியா நினைச்சுக்க வேண்டிய அவசியமில்லே" - என்றெல்லாம் கோபாலைக் கண்டிக்க நினைத்திருந்தும் மாதவியின் முன் அதைச் செய்து கோபாலின் மானத்தை வாங்க விரும்பவில்லை அவன்,

     - வெளியேறும்போது நாடகப் பிரதி ஒன்றையும் கையிலெடுத்துக்கொண்டு வெளியேறிய கோபாலை "இந்தா அதை எங்கே நீ கொண்டு போறே? இப்படிக் கொடுத்திட்டுப் போ" - என்று உரத்த குரலில் அதட்டி வாங்கி வைத்துக் கொண்டான் முத்துக்குமரன். அந்த அதட்டலையும் மீற முடியாமல் கோபால் கட்டுப்பட்டான்.

     இருவருடைய இந்த நிலைகளுக்கு நடுவே தான் நின்று காண விரும்பாமல் மாதவி வீட்டுக்குப் போய் விட்டாள். அவள் சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம் கோபாலும் பங்காளாவுக்குப் போய்விட்டான். போகும் போது முத்துக்குமரனிடம் சொல்லிக் கொண்டு போகவில்லை, அது முத்துக்குமரனுக்கு ஒரு மாதிரி விட்டுத் தெரிந்தது. ஆனாலும் சுபாவமான அகங்காரத்தினால் அவன் அதைப் பொருட்படுத்தவில்லை. இரவு ஏழு மணிக்குச் சாப்பாடு கொண்டு வந்த நாயர்ப் பையன், "ஐயா உங்ககிட்டக் கொடுக்கச் சொல்லிச்சு." - என்று ஓர் உறையிலிட்டு ஒட்டிய கடிதத்தையும் சேர்த்துக் கொண்டு வந்திருந்தான். முத்துக்குமரன் ஆவலோடு அந்தக் கடிதத்தை வாங்கிப் பிரிக்கத் தொடங்கினான். பையன் சாப்பாட்டை மேஜை மேல் வைத்து விட்டுக் கிளாஸில் தண்ணீரும் ஊற்றியபின் பதிலைக்கூட எதிர்பாராமல் பங்களாவுக்குப் போய்விட்டான்.

*****

     "அன்பிற்குரிய முத்துக்குமரனுக்குக் கோபால் எழுதியது. நீ மாதவியின் முன்னிலையில் என்னை எடுத்தெறிந்து பேசுவதும், கேலி செய்வதும், கண்டிப்பதும் உனக்கே நன்றாக இருந்தால் சரி. என்னிடம் அடங்கி வேலை செய்ய வேண்டியவர்களுக்கு முன்னால் நீ என்னை அவமானப்படுத்துவதை நான் விரும்ப முடியாது. அதை உன்னிடம் நேருக்கு நேர் சொல்ல நினைத்தும் தயக்கத்தினால் எழுதி அனுப்ப நேரிடுகிறது. இதை நீ புரிந்து கொண்டால் நல்லது. நாடகத்தை எழுதியிருப்பது நீ என்றாலும் அதை நடத்தவும் நடிக்கவும் போகிறவன் நான்தான் என்பது நினைவிருக்க வேண்டும்.

இப்படிக்கு,
கோபால்"

     என்று எழுதப்பட்டிருந்த அந்தக் கடிதத்தைக் கோபத்தோடு கசக்கி மூலையில் எறிந்தான் முத்துக்குமரன். கோபாலின் சுயரூபம் மெல்ல மெல்ல அவனுக்குப் புரிய ஆரம்பித்தது. தனக்கு முன்னால் கோழையைப் போலப் பயந்து சாகும் அவன் - பின்னால் போய் என்னென்ன நினைக்கிறான் என்பதைக் கடிதம் சுட்டிக் காட்டுவது போல் இருந்தது. கோபாலின் மேல் ஏற்பட்ட கொதிப்பில் சாப்பிடக்கூடத் தோன்றாமல் சிறிது நேரம் கடந்தது. அப்புறம் பேருக்கு ஏதோ சாப்பிட்டுக் கடனை கழித்த பிறகு சிறிது நேரத்தில் படுக்கையில் போய் சாய்ந்தான். மாதவி தன்னிடம் நெருங்குவதோ, ஒட்டிக் கொண்டாற் போலப் பழகுவதோ கோபாலுக்குப் பிடிக்கவில்லை என்பதையும் இப்போது அவனால் புரிந்து கொள்ள முடிந்தது.

     இரவு நெடுநேரம் உறக்கம் வராமல் தன்னைப் பற்றியும் மாதவியைப் பற்றியும் கோபாலைப் பற்றியும் அரங்கேற வேண்டிய புதிய நாடகத்தைப் பற்றியுமே சிந்தித்தபடி படுக்கையில் புரண்டு கொண்டிருந்தான் அவன். 'மறுநாள் ரிஹர்ஸலுக்காகத் தான் குறிப்பிட்டுச் சொல்லியனுப்பிய நேரத்தில் கோபால் அங்கே வருகிறானா இல்லையா?' என்பதை அறிவதில் அவன் ஆவலாயிருந்தான். அப்படி ஒரு வேளை தான் சொல்லியனுப்பியிருந்தபடி ரிஹர்ஸலுக்குத் தன்னைத் தேடி வராமல் கோபால் புறக்கணிப்பானானால் எழுதிய நாடகத்தோடு அந்த வீட்டை விட்டே சொல்லாமல் கொள்ளாமல் வெளியேறிவிட வேண்டும் என்ற குரூரமான பழிவாங்கும் ஆசையும் அவனுள் கிளர்ந்தது அப்போது.



சமுதாய வீதி : 1  2  3  4  5  6  7  8  9  10  11   12
13   14   15   16   17   18   19   20


இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/parthasarathy/samuthayaveethi/sv9.html

பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம்.
அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ,
ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.

 அச்சிட       விமர்சிக்க       விருப்ப தளமாக்க
       முகப்பு பக்கமாக்க




வருகைப் பதிவு (25-09-2006 முதல்)
ad
இலக்கிய தகவல்கள்
தரவிறக்கம்
பிற செய்திகள்
ஆன்மீகம்

தமிழ் யுனிகோடில் அமைந்த இணைய தளம். பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.