10
உடல்குழைய என்பெலாம் நெக்குருக விழிநீர்கள் ஊற்றென வெதும்பி ஊற்ற ஊசி காந்தத்தினைக் கண்டணுகல் போலவே ஓர் உறவும் உன்னியுன்னிப் படபடென நெஞ்சம் பதைத்து உள் நடுக்குற...
-தாயுமானவர் இயல்பாகவே அரவிந்தனுக்கு மென்மையும் நளினமும் இணைந்த உடம்பு வாய்த்திருந்தது. எந்த இடத்திலாவது லேசாகக் கிள்ளினால் கூட இரத்தம் வருகிற உடம்பு அது. ரோஜாப்பூவின் மென்மையும் சண்பகப் பூவின் நிறமும் கொண்ட தேகம் அவனுடையது. அந்த உடலில் வலிமை உண்டு. ஆனால் முரட்டுத்தனம் கிடையாது. அழகு உண்டு; ஆடம்பரம் கிடையாது. பள்ளிக்கூடத்தில் படிக்கிற நாளில் ஆசிரியர் சற்று அழுத்திக் கொட்டி விட்டால் கூடச் சில்லுமூக்கு உடைந்து இரத்தம் வந்துவிடும் அவனுக்கு. அவ்வளவு மென்மையான உடல் அவனுடையது.
"நீங்கள் எதற்கு அழுகிறீர்கள்? அரிச்சந்திரனுடைய தலைமுறையில் உண்மையைச் சொன்னால் கழுத்தில் மாலை விழுந்திருக்கலாம். நீங்களும் நானும் வாழும் தலைமுறையில் உண்மையைச் சொன்னால் கன்னத்தில் அறை விழுகிறது. கூடிய வரை உண்மைகளைச் சொல்லிவிடக் கூசிக் கொண்டு சும்மா இருந்து விடுவதுதான் இன்றைக்கு நாகரிகம். உண்மையைச் சொன்னால் பெருமைப்பட்ட காலம் போய்விட்டது. இப்போதெல்லாம் உண்மைகளைச் சொன்னால் யாரைப் பற்றிய உண்மையோ, அவர்களுக்கும் கோபம் தான் வருகிறது" என்று அவளிடம் கூறினான் அரவிந்தன். அடித்தவர் நின்று கொண்டிருக்கவில்லை. கோபத்தோடு வெளியேறிச் சென்று விட்டார். மிகச் சில விநாடிகளே அரவிந்தனின் முகத்தில் மலர்ச்சி இழந்த நிலையைக் கண்டாள் அவள். நீர் கிழிய எய்த வடுபோல் அந்த நிலை அப்போதே மாறி இயல்பான தோற்றத்துக்கு அவன் வந்ததையும் உடனே கண்டாள். பூரணி செம்பில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள். சில்லுமூக்கு உடைந்து குருதி வடிந்திருந்த மூக்கைக் கழுவிக் கைக்குட்டையால் துடைத்துக் கொண்டான் அவன். அப்படிக் கழுவித் துடைத்த போதே சினத்தையும் கொதிப்பையும் சேர்த்துக் கழுவித் துடைத்துவிட்ட மாதிரி அதை மறந்து பூரணியிடம் தான் வந்த காரியத்தை முடித்துக் கொண்டு கிளம்பினான் அரவிந்தன். அவனை வழியனுப்பும்போது பூரணியின் நெஞ்சு பொறுக்க முடியாத அளவுக்கு வேதனையால் பொங்கியது. 'அரவிந்தன் நீங்கள் அன்று எனக்காக மழையில் நனைந்தீர்கள். இன்று எனக்காக நாகரிகமில்லாத எவனோ ஒரு முரடனிடம் அறை வாங்கினீர்கள். இன்னும் என்னென்ன துன்பங்களையெல்லாம் உங்களுக்குத் தரயிருக்கிறேனோ இந்தப் பாவி' என்று நினைத்து உள்ளம் புழுங்கினாள் அவள். இந்த நிகழ்ச்சி நிகழ்ந்த அன்று இரவு தன் டைரியில் அரவிந்தன் கீழ்க்கண்டவாறு எழுதினான்: "உண்மையைச் சொன்னதற்காக ஒரு கயவன் மூக்கில் இரத்தம் ஒழுகும்படி அறைந்தான். வாழ்க்கை ஓர் உயர்தரமான செருப்புக் கடை. அங்கே சோறு போட்டுத் துணி உடுத்தி, உயிருள்ள தோல்களைப் பதனிட்டு அடுக்கி வைத்திருக்கிறார்கள். அந்தத் தோலுக்குள் பண்புகள் பொதிந்து வைக்கப் பெறவில்லை. கயமைதான் கனத்துக் கிடக்கிறது." கூர்மைக்கு மற்றவைகளைத் துளைத்துக் கொண்டு போகும் ஆற்றல் உண்டு. மற்றவைகள் வழிவிடத் தயங்கினாலும் கூர்மை தன் வழியைத் தானே உண்டாக்கிக் கொண்டு முன்செல்லும். அரவிந்தன் நோக்கிலும், நினைப்பிலும் கூர்மையுள்ளவன். அவன் உள்ளத்துக்கும், பண்புகளுக்கும் மற்றவைகளையும் மற்றவர்களையும் உணரும் ஆற்றல் அதிகம். பயிற்சியும் கருத்தாழமும் உள்ள பாவலன் இயற்றிய கவிதையை ஒவ்வொரு முறை படிக்கும் போதும் மேலும் ஒரு புது அழகு புரிவது போல் பழகப் பழக அரவிந்தனின் புதுப்புது பண்புகள் பூரணிக்குப் புரிந்தன. ஒருமுறை அவள் அரவிந்தனைத் தேடிக்கொண்டு அச்சகத்துக்குப் போயிருந்தாள். அரவிந்தன் இல்லை. முதலாளி மீனாட்சிசுந்தரமும் அவனும் எங்கோ காரில் புறப்பட்டுப் போயிருக்கிறார்கள் என்றும், சிறிது நேரத்தில் திரும்பிவிடுவதாகச் சொல்லிச் சென்றிருக்கிறார்கள் என்றும் அச்சகத்து ஆட்கள் அவளிடம் கூறினர். காத்திருந்துப் பார்த்துவிட்டுப் போகலாமா? நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாமா? என்று பூரணி தயங்கிக் கொண்டிருந்தபோது வாயிலில் கார் வந்து நிற்கும் ஒலி கேட்டது. அவர்கள் வந்துவிட்டார்கள். மீனாட்சிசுந்தரம் அவளை முகம் மலர வரவேற்றார். "வா அம்மா! நீ வந்து நாழிகையாயிற்றா? சிறிது நேரத்துக்கு முன்புதான் நாங்களே இங்கிருந்து வெளியேறினோம். வேறொன்றுமில்லை, சும்மா இவனை அழைத்துக் கொண்டு துணிக்கடை வரையில் போய்விட்டு வந்தேன். நீயே சொல் அம்மா. இராப்பகல் பாராமல் உழைக்கத் தெரிந்தால் மட்டும் போதுமா? தன் உடம்புக்கு வராமல் பேணிக் காத்துக் கொள்ளத் தெரிய வேண்டாமோ? இத்தனை வயதான பிள்ளை 'கொள்ளுக் கொள்'ளென்று இருமுகிறான். உதடெல்லாம் பனிப்புண். என்னடா சங்கதி என்று பார்த்தால் ஸ்வெட்டர் இல்லாமல் போர்வை இல்லாமல் பனியில் கிடந்து தூங்குகிறான். சுவரை வைத்துத்தானே சித்திரம் எழுத வேண்டும்? உடம்பு நன்றாக இருந்தால் தானே இன்னும் உழைக்கலாம்? 'மாட்டவே மாட்டேன், அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்' என்று தட்டிக் கழிக்கப் பார்க்கிறான். கண்டித்துச் சொல்லிக் கையோடுக் கூட்டிக் கொண்டுபோய் இரண்டு ஸ்வெட்டரும் போர்வையும் வாங்கிக் கொடுத்து அழைத்துக் கொண்டு வருகிறேன். தன் தேவை தெரிய வேண்டாமோ மனிதனுக்கு...?" அரவிந்தன் அவருக்குப் பின்னால் ஸ்வெட்டரும் போர்வையும் அடங்கிய துணிக்கடைப் பொட்டலங்களோடு முறுவல் பூத்துக் கொண்டு நின்றான். மீனாட்சிசுந்தரமும் அவற்றை அவன் கையிலிருந்து வாங்கிப் பெருமையோடு பூரணிக்குப் பிரித்துக் காட்டினார். 'அரவிந்தன் மேல் தான் இந்த மனிதனுக்கு எத்தனை பாசம்! எவ்வளவு உரிமை!' என்றெண்ணி வியந்தாள் பூரணி. இது நடந்து பத்துப் பனிரண்டு நாட்களுக்குப் பின் பஸ் நிலையத்துக்கு வடப்புறம் மேம்பாலத்துக்கு ஏறுகிற திருப்பத்தில் ஒரு கிழட்டுப் பிச்சைக்காரனுடைய உடம்பைப் போர்த்திக் கொண்டு கிடந்தது அந்தப் போர்வை. பூரணி அதைப் பார்த்தாள். 'என் சந்தேகம் வீணானது, இந்த மாதிரியான போர்வை அரவிந்தனிடம் மட்டும்தானா இருக்கும்? வேறு யாராவது கொடுத்திருப்பார்கள்' என்று நினைவை மாற்றிக் கொள்ள முயன்றாள். 'இந்த மாதிரி போர்வைகள் எல்லோரிடமும் இருக்கலாம். ஆனால் இந்த மாதிரி இரக்கமும் நெகிழ்ச்சியும் எல்லோரிடமும் இருக்க முடியாது' என்று அதே நினைவு மாறாமல் மீண்டும் உறுதிப்பட்டது அவள் மனத்தில். அரவிந்தனையே நேரில் சந்தித்து இந்தச் சந்தேகத்தைக் கேட்டாள். அவன் தலையைக் குனிந்து கொண்டு மௌனமாகச் சிரித்தான். ஆனால் பதிலொன்றும் சொல்லவில்லை. "இப்படி எத்தனை நாளைக்கு விளையாட்டுப் பிள்ளையாகவே இருக்கப் போகிறீர்கள்? தனக்குக் கண்டு மீதமிருந்தால் அல்லவா தான தருமம் செய்யலாம்?" "நீங்கள் என்னைப் பற்றி மட்டும் கவலைப்படுகிறீர்கள். நான் எல்லோரைப் பற்றியும் கவலைப்படுகிறேன். மூன்று கோடி தமிழருக்குள் ஒவ்வொரு கோடியிலும் ஏழ்மையைப் பார்க்கும் போது என் மனம் நெகிழ்ந்து விடுகிறது. முப்பது கோடி இந்தியர்களில் எல்லோருமா இந்நாட்டு மன்னர்களாக இருக்கிறார்கள்? பலர் இந்நாட்டு மன்னராக - மண்தரையைத் தவிர இருக்க இடமற்றவர்களாக அலைந்து திரிகிறார்களே. இவர்கள் பிறந்த நாட்டில் இவர்களோடு இவர்களில் ஒருவனாகத் தானே நானும் பிறந்திருக்கிறேன்." ஆனால் அப்படிச் சொல்ல வாயெழவில்லை. நடுத்தெருவில் திடீரென்று அவளைச் சந்தித்த கூச்சம் தடுத்தது. புன்னகைக்குப் பதிலாகப் புன்னகை மட்டும் செய்தான். பூரணி தனக்குத்தானே நினைத்துப் பார்த்தாள். 'புது மண்டபத்து புத்தக வியாபாரி உட்பட பெரும்பாலோர், பிறருக்குச் சேரவேண்டிய பொருளையும் தாமே அபகரித்துக் கொண்டு வாழ ஆசைப்படும் இதே உலகில்தான் அரவிந்தனும் இருக்கக் காண்கிறேன். தனக்குக் கிடைக்கிறதையெல்லாம் பிறருக்கே கொடுத்து மகிழும் மனம் இந்த அரவிந்தனுக்கு எப்படித்தான் வந்ததோ?' மெல்ல நகர்வது போலத் தோன்றினாலும் காலம் வேக வேகமாகத் தான் ஓடியது. மதுரையில் சித்திரை மாதத்தில் வெய்யிலும், திருவிழாக்களும் அதிகம். மங்கையர் கழகத்து வகுப்புகளுக்குப் படிக்க வரும் செல்வக் குடும்பத்துப் பெண்கள் எல்லாம் வெய்யிலுக்குப் பயந்து உதகமண்டலத்தையும், கொடைக்கானலையும் முற்றுகையிட்டிருந்தனர். வகுப்புக்கு ஒரு மாதம் விடுமுறை விட்டிருந்தார்கள். பூரணிக்கு அந்த மாதம் முற்றிலும் ஓய்வு இருந்தது. அரவிந்தனுடைய இடைவிடாத உழைப்பின் பயனாக அந்த மாதம் அவள் தந்தையின் நூல்கள் சில முற்றுப் பெற்று வெளியாயின. நூல்கள் நிறைவேறி வெளியானதும், ஏற்கனவே மனம் புகைந்து கொண்டிருந்த பழைய பதிப்பாளர் மேலும் எரிச்சல் கொண்டார். வேனிலைக் கழிப்பதற்காக மங்களேஸ்வரி அம்மாள் பெண்களை அழைத்துக் கொண்டு கொடைக்கானல் புறப்படும் போது பூரணியையும் வற்புறுத்திக் கூப்பிட்டாள். "அப்பாவின் புத்தக வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. நானும் இங்கு உடனிருந்து கவனிக்க வேண்டும். இப்போது வசதிப்படாது. இன்னொரு முறை உங்களோடு கண்டிப்பாக வருகிறேன் அம்மா" என்று சொல்லி அந்த அம்மாவின் அழைப்பை மறுத்துவிட்டாள் பூரணி. இந்த விடுமுறை நாட்களில் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் மாலை வேளையில் அரவிந்தன் திருப்பரங்குன்றத்துக்கு வந்தான். இருவரும் மனம்விட்டுப் பேசிக்கொண்டே உலாவப் போனார்கள். தென்புறத்துச் சாலையில் கூத்தியார் குண்டுக் கண்மாய் முடிகிற இடம் வரை நடந்து போய்விட்டுத் திரும்பினார்கள். குன்றில் ஏறினார்கள். திருப்பரங்குன்றத்து மலையில் ஒரு வழக்கம் உண்டு. மலையேறிப் பார்க்க வருகிறவர்கள் அங்குள்ள பாறைகளில் நினைவுக்கு அடையாளமாகவோ என்னவோ, தம் பெயர்களைச் செதுக்கிவிட்டுச் செல்வதுண்டு. இந்த வேலையைச் செய்து காசு வாங்கிக் கொள்வதற்காக உளியும் கையுமாக இரண்டொரு கல் தச்சர்கள் மலையில் திரிவார்கள். பூரணியும் அரவிந்தனும் மலையில் ஏறிப் பார்த்துக் கொண்டிருந்த போது இம்மாதிரி பேர் செதுக்கும் கல்தச்சன் ஒருவன் வந்து அவர்களை நச்சரித்தான். "பேர் செதுக்கணுமா? ஐயா பேர்..." அரவிந்தன் பூரணியின் முகத்தைப் பார்த்தான். பூரணி சிரித்துக் கொண்டே ஒரு முழு எட்டணா நாணயத்தை எடுத்து அந்தக் கல்தச்சனிடம் கொடுத்தாள். "பேர்களைச் சொல்லுங்க அம்மா!" பூரணியின் முகம் சிவந்தது. அவள் வெட்கம் அடைந்தாள். கீழே கிடந்த ஒரு பழைய அழுக்குத்தாளை எடுத்து அரவிந்தன் - பூரணி என்று பேனாவால் முத்துக் கோத்தாற்போல் எழுதி நாணத்தோடு அந்தத் தச்சன் கையில் கொடுத்தாள். இருபது முப்பது பேர்களைப் பொறிக்கச் சொல்லிவிட்டு இரண்டணாவுக்கும் நாலணாவுக்கும் பேரம் பேசுகிற ஆட்களைத்தான் அந்தக் கல்தச்சன் தன் நடைமுறையில் பார்த்திருக்கிறான். இவர்கள் விந்தையாக அவன் மனத்தில் தோன்றியிருக்க வேண்டும்! அல்லது இவர்களின் இணைப்பும் அழகும் பொருத்தமும் அவன் உள்ளத்தைக் கவர்ந்திருக்க வேண்டும்! வேறு பெயர்களே செதுக்கப் பெறாத ஒரு தனிப் பாறையில் தனிச்சிறப்போடு கூடிய சித்திர எழுத்துக்களில் அந்த இரண்டு பெயரையும் செதுக்கினான் அவன். தச்சன் செதுக்கி முடிந்ததும் அரவிந்தன் பூரணியிடம் கூறினான் - "நம்முடைய பெயர்களை உயர்ந்த இடத்தில் உயர்ந்த விதத்தில் தனியாகச் செதுக்கியிருக்கிறான். பேர் பரவுவதற்காகவும், பேர் நிலைப்பதற்காகவும் எத்தனையோ மனிதர்கள் ஆயிரக்கணக்கில் செலவழித்துக் கொண்டிருக்கிறார்கள். நீங்களோ அரை ரூபாய் செலவில் பேரை நிலைக்க வைத்திருக்கிறீர்கள்." அரவிந்தன் சிரித்துக் கொண்டே அவள் முகத்தைப் பார்த்து இப்படிச் சொன்னபோது அவளுடைய அந்த செழிப்பான கன்னங்களில், சிரிக்கும் இதழ்களில், மலர்ந்த விழிகளில், பிறை நெற்றியில் எங்கும் நாணம் பூத்து நளினச் சாயம் மணந்தது. பூரணி பலமுறை தன்னை ஒருமையில் 'நீ, உன்னை' என அழைத்தால் போதும் என்று வற்புறுத்திச் சொல்லியிருந்தும் அரவிந்தன், 'நீங்கள், உங்களை' என்று பன்மையிலேயே அவளை அழைத்துக் கொண்டு வந்தான். மீண்டும் மீண்டும் அவன் அப்படி அநாவசியமாக மரியாதை கொடுக்கும் போதெல்லாம் கடிந்து கொண்டும், அன்புக் கோபம் கொண்டும் பிணங்கியும் பேச மறுத்தும், அவனை வழிக்குக் கொணர்ந்து ஒருமையில் உரிமையோடு கூப்பிடும்படி மாற்றினாள் பூரணி. அவளுடைய அன்புத் தொல்லை பொறுக்க முடியாமல் அரவிந்தனும் அவளை ஒருமையில் உரிமையோடு அழைக்க இணங்க வேண்டியதாயிற்று. அந்தக் கோடையில் கிடைத்த விடுமுறைக் காலம் இவ்வாறு அரவிந்தனுடன் நெருங்கி மனம் விட்டுப் பேச வாய்ப்பளித்தது பூரணிக்கு. சில நாட்களில் அவர்கள் இரண்டு பேருமாகச் சேர்ந்து திருப்பரங்குன்றம் கோயிலுக்குப் போவார்கள். அப்படிப் போயிருந்த ஒரு நாளில் கோயிலுக்குள்ளேயே உள்ள ஒரு குளத்தின் கரையில் அரவிந்தன் ஒரு கருத்துச் சொன்னான். அந்தக் குளக்கரையில் உப்பும், மிளகும், சர்க்கரையும் சேர்த்து முடிச்சு முடிச்சாகத் தனித்தனியே கட்டி விற்பார்கள். அவற்றை வாங்கித் தண்ணீரில் போட்டால், அவ்வாறு போட்டுப் பிரார்த்தனை செய்கிறவர்களின் பாவங்களும், நோய்களும் கரைந்துவிடும் என்பது பரம்பரையாக இருந்து வரும் முறைமை. பூரணி இரண்டு முடிச்சுகளை வாங்கி ஒன்றைத் தன் கையால் நீரில் கரைத்துவிட்டு மற்றொன்றை அரவிந்தனிடம் நீட்டினாள். "நீயே கரைத்துவிடு. எனக்கு வேண்டாம் பூரணி. நான் சமூகத்தின் பாவங்களையும் நோய்களையும் கரைத்துவிட ஆசைப்படுகிறவன். அவை இந்தச் சிறிய உப்பு முடிச்சைக் கரைப்பதனால் கரைய மாட்டா. அவைகளை கரைத்து அழிக்க உயர்ந்த குறிக்கோள்களை வெள்ளமாகப் பெருக்கி வேறோர் இலட்சியக் குளம் தேக்க வேண்டும்" என்று இவ்வாறு சொல்லி அதை மறுத்தான் அரவிந்தன். பூரணி சினம் தொனிக்கும் குரலில், ஆனால் சிரிப்பு நிலவும் முகத்தோடு, "சமூகம், பிரச்சினைகள், ஏழ்மை, வறுமை எப்போது பார்த்தாலும் இதே பல்லவிதானா? அரவிந்தன் இந்தப் பல்லவிகளை மறந்து வேறு எதையேனும் அளவளாவிப் பேசுவதற்குச் சிறிதுகூட நேரமில்லையா உங்களிடம்?" என்று அவனைக் கேட்டாள். இப்படி எத்தனன எத்தனையோ நிகழ்ச்சிகளின் மூலம்தான் அரவிந்தனை அவள் புரிந்து கொள்ள முடிந்தது. அவ்வாறு புரிந்து கொள்ளப் புரிந்து கொள்ள அவளுடைய சின்னஞ்சிறு பெண்மனம் அவனுடைய பெரிய மனத்துக்குள் கலந்து கரைந்து கவிந்து ஒடுங்கலாயிற்று. கோடை விடுமுறையெல்லாம் கழிந்து பள்ளிக்கூடங்கள் திறந்து விட்டார்கள். பூரணி, குழந்தை மங்கையர்க்கரசியை பள்ளிக்கூடத்தில் சேர்த்தாள். தம்பிகள் இரண்டு பேரும் மேல் வகுப்புகளுக்குத் தேர்ச்சிப் பெற்றுப் பள்ளிக்கூடம் போய்க் கொண்டிருந்தார்கள். பள்ளிக்கூடச் சம்பளம், புதிய புத்தகங்கள் என்று செலவு நிறைய ஆகிக் கொண்டிருந்தது. மங்கையர்க் கழகத்தில் தந்த மாதச் சம்பளமும், புத்தகங்கள் விற்ற வருமானமுமாக மாதா மாதம் ஒரு கணிசமான தொகை கிடைத்தாலும் அது போதவில்லை. வரவுக்கும் செலவுக்குமாக இழுத்துப் பறித்துக் கொண்டுதான் காலம் ஓடியது. சில நாட்கள் சில்லரை காசுக்குக் கூட தட்டுப்பாடு இருந்தது. தினசரி மாலையில், நகரத்துக்குச் சென்று திரும்புவதற்குப் பஸ் செலவு ஆயிற்று. எளிமையான கோலத்தோடு, எளிமையாக வாழத்தான் அவள் விரும்பினாள். மங்கையர் கழகத்து நிர்வாகிகளும் மாணவிகளும் ஆடம்பரத்தில் தோய்ந்து தோன்றும் செலவ வளமுள்ளவர்களாக இருந்தார்களாகையினால் அவள் அவர்கள் குறை சொல்லாமல் இருப்பதற்காகவாவது தன்னைச் சிறிது பேணிக் கொண்டாள். இந்தச் செலவுகளையெல்லாம் சமாளித்துக் குழந்தைகளுக்கு வயிறு வாடாமல் வேளைக்கு வேளை கவனித்துக் கொள்ள முடிந்தது. அரவிந்தன் கற்றுக் கொடுத்த பழக்கத்தை அவளும் ஏற்றுக் கொண்டு கடைபிடிக்கலானாள். பலவேளை உணவுகளைத் தன்னளவில் மிகவும் சுருக்கிக் கொண்டாள். அரவிந்தன் அதை லட்சியத்துக்காகச் செய்தான். அவளுக்கு இல்லாமையே அந்த லட்சியத்தை அமைத்துக் கொடுத்தது. இல்லாமையே சில வசதிகளைக் குறைத்துக் கொள்ளும் துணிவை அளித்திருந்தது. திருநாவுக்கரசுக்குப் பள்ளிக்கூடப் படிப்பின் கடைசி ஆண்டாக இருந்ததனால் படிப்புச் செலவு சிறிது மிகுதியாயிருந்தது. இப்பொழுது துன்பங்களைப் பெரிதாக நினைத்து அழுந்தி அலைபடுவதே இல்லை அவள். குறைவிலும் நிறைவாக இருக்கிற ரகசியத்தை அரவிந்தன் அவளுக்குச் சொல்லிக் கொடுத்திருந்தான். அன்றைக்கு வெள்ளிக்கிழமை. மங்கையர் கழகத்தில் நல்ல கூட்டம். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஒரு சிறப்புக் கூட்டம் இருக்கும். அதில் எல்லோரும் கலந்து கொண்டு சொற்பொழிவைக் கேட்கலாம். பூரணி அன்று 'திலகவதியார் சரித்திரம்' பற்றிப் பேசினாள். அன்றைய தினம் அவள் மனம் பேசவேண்டிய பொருளில் பரிபூரணமாக ஆழ்ந்திருந்தது. சிறுவயதிலேயே இந்தச் சரித்திரங்களையெல்லாம் பற்றிக் கதை கதையாக அவளுக்குச் சொல்லியிருக்கிறார் அப்பா. திலகவதியாருடைய சரித்திரத்தைக் கேட்கும்போதெல்லாம் அவள் மனம் இளகி அழுதிருக்கிறாள். பிற்காலத்தில் அவளுக்கு வயதானபின் சேக்கிழாருடைய கவிதைகளிலிருந்து அப்பா திலகவதியின் காவியத்தை விளக்கிக் கூறியிருக்கிறார். சிறுமியாக இருந்தபோது கதையாகக் கேட்டிருக்கிற அதே வரலாற்றைக் காவியமாகக் கற்றபோதும் அவள் அதிகமாகத்தான் உருகினாள். அப்பா சொல்லியிருக்கிறார் 'உலகத்திலேயே பெரிய சோகக்கதை இதுதான் அம்மா! இந்தத் திலகவதி என்ற பெண்ணின் கதையைச் சேக்கிழார் எழுத்தாணியால் ஏட்டில் எழுதியிருக்க மாட்டார் பூரணி. ஏட்டில் எழுதுமுன் மனத்தில் இந்தப் பெண்ணைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் கண்ணீரால் பலமுறை எழுதி எழுதி அழித்திருப்பாரம்மா அவர். ஒரு பெண்ணால் தாங்க முடியாத ஏக்கத்தையும் ஏமாற்றத்தையும் தாங்கிக் கொண்டு வாழ்ந்தவள் திலகவதி. உடலால் செத்துப் போய்க்கொண்டே உள்ளத்தால் வாழ்கின்ற இந்த மாதிரி புனிதப் பெண் தமிழ்நாட்டில் தான் அம்மா பிறக்க முடியும். இந்தத் தமிழ் மண்ணில் அந்தப் பழைய புண்ணியம் இன்றும் மணத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தான் சில நல்ல காரியங்களாவது இன்னும் இந்த மண்ணில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.' இந்த வாக்கியங்களை அப்பாவின் வாயிலாகக் கேட்கும்போது தனக்கு முன் சேக்கிழாரின் புத்தகம் விரிந்து கிடப்பதை மறந்து விடுவாள் பூரணி. மாலை மாலையான கண்ணீர் வடியும் அவள் கண்களில். கேட்டுக் கேட்டுக் கற்றுக் கற்று அனுபவித்து உணர்ந்த இந்தச் சோக அனுபவம் அன்று அவள் பேசிய பேச்சில் முழுமையாக எதிரொலித்தது. பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களில் மனமுள்ள இளகியவர்களுக்குக் கண்களில் ஈரம் கசிந்துவிட்டது. "திருவாரூரின் அழகிய வீதி ஒன்றில் ஒரு வேளாளர் வீடு, பல நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட நிகழ்ச்சி. அந்த வேளாளர் வீட்டில் இளமை அழகு மொட்டவிழ்ந்த முழுமலராய் ஒரு பெண். முல்லை நகை, முழுமதி முகம், மின்னல் நிற உடல், மணப் பருவம், வலது கையில் தம்பியைப் பிடித்துக் கொண்டு அவள் தன் வீட்டு வாயிலில் நிற்கிறாள். அழகு மலர்ந்து அனுபவமிக்கக் கவிதைகளைத் தேடும் கருவண்டுக் கண்களாலேயே பார்த்துக் கொண்டு நிற்கிறாள் அந்தப் பெண். கண்களில் எவருடைய வரவையோ தேடுகிற ஆவல். பக்கத்தில் பால்வடியும் முகத்தோடு நிற்கும் சிறுவனாகிய அவள் தம்பிக்கு அக்காவின் ஆவலுக்குக் காரணம் விளங்க முடியாதுதான். யாரோ பல்லக்கில் வந்து இறங்குகிறார்கள். உள்ளே போய் அந்தப் பெண்ணின் பெற்றோர்களிடம் பேசிவிட்டுப் போகிறார்கள். சிறிது நேரம் கழித்து தந்தை வந்து சொல்கிறார்: "திலகவதி! சோழநாட்டுத் தளபதி கலிப்பகையார் உன்னை மணந்து கொள்வதற்கு விரும்புகிறாராம். மணம் பேச வந்தார்கள். நான் இணங்கிவிட்டேன். நீ பெரிய பாக்கியசாலி, அம்மா. ஒரு நாட்டின் வீரத் தளபதியே உன்னை விரும்பி மணக்க வருகிறார்." திலகவதி நாணத்தால் முகம் கவிழ்த்துக் கொண்டு ஓடி விடுகிறாள். அக்கா ஏன் இப்படி முகம் சிவக்க ஓடுகிறாள் என்பதும் அந்தத் தம்பிக்குப் புரியவில்லை. காலம் ஓடுகிறது. தாய், தந்தையர்கள் இறந்து போகிறார்கள். விதி பொல்லாதது. முன்பு பேசியபடி திருமண ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. திலகவதி உள்ளமெல்லாம் பூரித்து நினைவெல்லாம் கனவாக, கனவெல்லாம் இன்பமாக, மண அழகு பொழியும் கோலத்தோடு இருக்கிறாள். அந்தச் சோழநாட்டு வீரத்தளபதியின் அழகு முகம், திரண்ட தோள்கள், பரந்த மார்பு எல்லாவற்றையும் அவள் கண்கள் கற்பனை செய்து கனவு கண்டு களித்துக் கொண்டிருந்தன. அழித்து அழித்து மேலும் நன்றாகப் போடும் கோலம்போல அவள் மனம் வரப்போகிற கணவனின் அழகை நாழிகைக்கு நாழிகை அதிகமாக்கி, வளர்த்து எண்ணிக் கொண்டிருந்தது. அந்த அழகன் வரவில்லை. செய்தி வந்தது. சோழநாட்டுத் தளபதி போரில் மாண்டு போனாராம். திலகவதி குமுறிக் குமுறி அழுதாள். கனவுகளில் பார்த்துக் கண்ணால் பார்க்காத அந்தக் கணவனுக்காக அழுதாள். அழுதழுது உயிர்மூச்சுக் காற்றையே விட்டுவிட நினைத்தாள். இனி என்ன இருக்கிறது வாழ? 'அக்கா நான் இருக்கிறேனே, எனக்காக வாழுங்கள்' என்று கெஞ்சினான் தம்பி. வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல் சந்தனக் கட்டைபோல் விதியின் கைகளில் அறைபட்டாள் திலகவதி. அந்த வாழ்வில் மணம் பிறந்தது. அவளுக்கு மணம் கிடைக்கவில்லை. ஆனால் மணம் பெறாத அந்த வாழ்வு உலகத்துக்கெல்லாம் தெய்வீகத் திருமணம் நல்கிற்று. காவியமாய் உயர்ந்தது, கவிதையாய் எழுந்தது." இந்தச் சொற்பொழிவை உணர்ச்சிகரமாகச் செய்து முடித்தாள் பூரணி. சந்தனத்தைத் தொட்டுவிட்ட பிறகு கழுநீரிலே கை தோய்ப்பதுபோல் மங்களேஸ்வரி அம்மாவின் மூத்த பெண் வசந்தா இந்தப் பேச்சைக் கேட்டு விட்டுப் பூரணியை ஒரு கேள்வி கேட்டு மடக்கினாள்: "நீ இன்றைய நாகரிகம் பேசுகிறாய் வசந்தா! ஒருவனைக் கணவனாக மனத்தில் நினைக்கும்போதே, அவனுக்கு வாழ்க்கைப்பட்டு விடுவார்கள் இந்த நாட்டுப் பெண்கள். 'அனிச்சம் பூப்போல அவர்களுடைய வாழ்வு மெல்லியது'. அதற்கு ஒரு நுகர்ச்சிதான் உண்டு. அந்த நுகர்ச்சியோடு அது வாடி விடுகிறது" - என்று பூரணி பதில் கூறியதும் மற்றவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள். வசந்தாவுக்கு முகத்தில் கரி பூசினாற் போல் ஆகிவிட்டது. அன்று தன்னுடைய சொற்பொழிவு பலபேருடைய உள்ளத்தில் புகுந்து வேலை செய்திருக்கிறதென்பதைக் கூட்டம் முடிந்ததும் அவர்கள் தன்னைச் சூழ்ந்து கொண்டு பாராட்டிய பாராட்டுரைகளிலிருந்து தெரிந்து கொண்டாள் பூரணி. 'அப்படியே உணர்ச்சிகளைப் பிசைந்தெடுத்துவிட்டீர்களே அக்கா' என்று மங்களேஸ்வரி அம்மாளின் இளைய பெண் செல்லம் பாராட்டினாள். பூரணி அந்தப் பாராட்டு வெள்ளத்தில் திணறிக் கொண்டிருந்தபோது, "காரியதரிசி அம்மா மேலே மாடியிலே இருக்கிறாங்க, உங்களைக் கூப்பிடுறாங்க" என்று மங்கையர் கழகத்து வேலைக்காரப் பெண் வந்து அழைத்தாள். பூரணி எழுந்து சென்றாள். அவள் நடையில் ஒரே பெருமிதம் தோன்றியது. "இதுவரை இப்படிச் சொற்பொழிவு நான் கேட்டதில்லை பூரணி" என்று காரியதரிசியாகிய அந்தம்மாள் மங்கையர் கழகத்து நிர்வாகிகள் சார்பில் தன்னைப் பாராட்டப் போவதைக் கற்பனை செய்துகொண்டே மாடிப்படிகளில் ஏறினாள் பூரணி. மனதுக்குள் புகழின் படிகளில் ஏறுவது போல் ஓர் இன்பப் பிரமை எழுந்தது. காரியதரிசியின் அறைக்குள் தான் நுழைந்தபோது அந்த அம்மா 'வா' என்று கூடச் சொல்லாதது ஒரு மாதிரிப் பட்டது பூரணிக்கு. வழக்கமாகச் சிரிக்கும் சிரிப்புக்கூட அந்த அம்மாள் முகத்தில் இல்லை. பூரணி நின்றாள். மரியாதைக்காக, 'உட்கார்' என்று கூடச் சொல்லவில்லை காரியதரிசி. பூரணி திகைத்தாள். "இந்தா! இந்தக் கழகத்தில் இதுவரை யாருக்கும் எதைப் பற்றியும் இந்த மாதிரியெல்லாம் கன்னாபின்னாவென்று மொட்டைக் கடிதம் வந்ததில்லை. நீ என்னவோ புனிதம், பண்பு, ஒழுக்கம் என்று பேச்சில்தான் முழங்குகிறாய், நடத்தையில் ஒன்றும் காணோம். போதாக்குறைக்கு இங்கேயே சிலர் உன்னைப் புகழுகிறார்கள். இதெல்லாம் அவ்வளவு நல்லதில்லை." சொல்லிவிட்டு ஒரு கடிதத்தை எடுத்து நீட்டினாள் அந்த அம்மாள். அதைச் சிறிது படித்ததுமே பூரணிக்கு உள்ளம் துடித்தது. "கடவுளே! நீ பாவிகள் நிறைந்த இந்த உலகத்தைப் படைத்ததற்காக உன்னை நான் ஒரு போதும் மன்னிக்க முடியாது. இந்த உலகில் இவர்களிடையே நானும் ஒருத்தியாக இருப்பதற்காக நீ என்னை மன்னித்துத்தான் ஆகவேண்டும்" என்று குமுறினாள் அவள். குறிஞ்சி மலர் : சிறப்புரை
முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
கனவு நிறைகிறது
|
சுவை மணம் நிறம் ஆசிரியர்: நிஜந்தன்வகைப்பாடு : புதினம் (நாவல்) விலை: ரூ. 150.00 தள்ளுபடி விலை: ரூ. 135.00 அஞ்சல்: ரூ. 40.00 |
எட்டுத் தொகை குறுந்தொகை பதிற்றுப் பத்து பரிபாடல் கலித்தொகை அகநானூறு ஐங்குறு நூறு (உரையுடன்) பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை பொருநர் ஆற்றுப்படை சிறுபாண் ஆற்றுப்படை பெரும்பாண் ஆற்றுப்படை முல்லைப்பாட்டு மதுரைக் காஞ்சி நெடுநல்வாடை குறிஞ்சிப் பாட்டு பட்டினப்பாலை மலைபடுகடாம் பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - PDF Download இனியவை நாற்பது (உரையுடன்) - PDF Download கார் நாற்பது (உரையுடன்) - PDF Download களவழி நாற்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை எழுபது (உரையுடன்) - PDF Download திணைமொழி ஐம்பது (உரையுடன்) - PDF Download கைந்நிலை (உரையுடன்) - PDF Download திருக்குறள் (உரையுடன்) நாலடியார் (உரையுடன்) நான்மணிக்கடிகை (உரையுடன்) - PDF Download ஆசாரக்கோவை (உரையுடன்) - PDF Download திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) பழமொழி நானூறு (உரையுடன்) சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - PDF Download முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - PDF Download ஏலாதி (உரையுடன்) - PDF Download திரிகடுகம் (உரையுடன்) - PDF Download ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம் மணிமேகலை வளையாபதி குண்டலகேசி சீவக சிந்தாமணி ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் நாககுமார காவியம் - PDF Download யசோதர காவியம் - PDF Download வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் திருப்பதி ஏழுமலை வெண்பா - PDF Download மனோதிருப்தி - PDF Download நான் தொழும் தெய்வம் - PDF Download திருமலை தெரிசனப்பத்து - PDF Download தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - PDF Download திருப்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - PDF Download திருமால் வெண்பா - PDF Download சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை திருவிசைப்பா திருமந்திரம் திருவாசகம் திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை சொக்கநாத வெண்பா - PDF Download சொக்கநாத கலித்துறை - PDF Download போற்றிப் பஃறொடை - PDF Download திருநெல்லையந்தாதி - PDF Download கல்லாடம் - PDF Download திருவெம்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - PDF Download திருக்கைலாய ஞான உலா - PDF Download பிக்ஷாடன நவமணி மாலை - PDF Download இட்டலிங்க நெடுங்கழிநெடில் - PDF Download இட்டலிங்க குறுங்கழிநெடில் - PDF Download மதுரைச் சொக்கநாதருலா - PDF Download இட்டலிங்க நிரஞ்சன மாலை - PDF Download இட்டலிங்க கைத்தல மாலை - PDF Download இட்டலிங்க அபிடேக மாலை - PDF Download சிவநாம மகிமை - PDF Download திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - PDF Download சிதம்பர வெண்பா - PDF Download மதுரை மாலை - PDF Download அருணாசல அட்சரமாலை - PDF Download மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - PDF Download திருவுந்தியார் - PDF Download உண்மை விளக்கம் - PDF Download திருவருட்பயன் - PDF Download வினா வெண்பா - PDF Download இருபா இருபது - PDF Download கொடிக்கவி - PDF Download சிவப்பிரகாசம் - PDF Download பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - PDF Download சன்மார்க்க சித்தியார் - PDF Download சிவாச்சிரமத் தெளிவு - PDF Download சித்தாந்த சிகாமணி - PDF Download உபாயநிட்டை வெண்பா - PDF Download உபதேச வெண்பா - PDF Download அதிசய மாலை - PDF Download நமச்சிவாய மாலை - PDF Download நிட்டை விளக்கம் - PDF Download சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - PDF Download நெஞ்சொடு புலம்பல் - PDF Download ஞானம் - 100 - PDF Download நெஞ்சறி விளக்கம் - PDF Download பூரண மாலை - PDF Download முதல்வன் முறையீடு - PDF Download மெய்ஞ்ஞானப் புலம்பல் - PDF Download பாம்பாட்டி சித்தர் பாடல் - PDF Download கம்பர் கம்பராமாயணம் ஏரெழுபது சடகோபர் அந்தாதி சரஸ்வதி அந்தாதி - PDF Download சிலையெழுபது திருக்கை வழக்கம் ஔவையார் ஆத்திசூடி - PDF Download கொன்றை வேந்தன் - PDF Download மூதுரை - PDF Download நல்வழி - PDF Download குறள் மூலம் - PDF Download விநாயகர் அகவல் - PDF Download ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - PDF Download கந்தர் கலிவெண்பா - PDF Download சகலகலாவல்லிமாலை - PDF Download திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் திருக்குறும்பலாப்பதிகம் திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி திருக்குற்றால மாலை - PDF Download திருக்குற்றால ஊடல் - PDF Download ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை முருக பக்தி நூல்கள் கந்தர் அந்தாதி - PDF Download கந்தர் அலங்காரம் - PDF Download கந்தர் அனுபூதி - PDF Download சண்முக கவசம் - PDF Download திருப்புகழ் பகை கடிதல் - PDF Download மயில் விருத்தம் - PDF Download வேல் விருத்தம் - PDF Download திருவகுப்பு - PDF Download சேவல் விருத்தம் - PDF Download நல்லை வெண்பா - PDF Download நீதி நூல்கள் நன்னெறி - PDF Download உலக நீதி - PDF Download வெற்றி வேற்கை - PDF Download அறநெறிச்சாரம் - PDF Download இரங்கேச வெண்பா - PDF Download சோமேசர் முதுமொழி வெண்பா - PDF Download விவேக சிந்தாமணி - PDF Download ஆத்திசூடி வெண்பா - PDF Download நீதி வெண்பா - PDF Download நன்மதி வெண்பா - PDF Download அருங்கலச்செப்பு - PDF Download முதுமொழிமேல் வைப்பு - PDF Download இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை நேமிநாதம் - PDF Download நவநீதப் பாட்டியல் - PDF Download நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - PDF Download சிலேடை நூல்கள் சிங்கைச் சிலேடை வெண்பா - PDF Download அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - PDF Download கலைசைச் சிலேடை வெண்பா - PDF Download வண்ணைச் சிலேடை வெண்பா - PDF Download நெல்லைச் சிலேடை வெண்பா - PDF Download வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - PDF Download உலா நூல்கள் மருத வரை உலா - PDF Download மூவருலா - PDF Download தேவை உலா - PDF Download குலசை உலா - PDF Download கடம்பர்கோயில் உலா - PDF Download திரு ஆனைக்கா உலா - PDF Download வாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - PDF Download ஏகாம்பரநாதர் உலா - PDF Download குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - PDF Download அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - PDF Download திருவருணை அந்தாதி - PDF Download காழியந்தாதி - PDF Download திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - PDF Download திருப்புல்லாணி யமக வந்தாதி - PDF Download திருமயிலை யமக அந்தாதி - PDF Download திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - PDF Download துறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - PDF Download திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - PDF Download அருணகிரி அந்தாதி - PDF Download கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - PDF Download திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - PDF Download இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - PDF Download தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - PDF Download பழனி இரட்டைமணி மாலை - PDF Download கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - PDF Download குலசை உலா - PDF Download திருவிடைமருதூர் உலா - PDF Download பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - PDF Download நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - PDF Download விநாயகர் நான்மணிமாலை - PDF Download தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - PDF Download நெஞ்சு விடு தூது - PDF Download மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF Download மான் விடு தூது - PDF Download திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - PDF Download திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - PDF Download மேகவிடு தூது - PDF Download கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - PDF Download சிதம்பர மும்மணிக்கோவை - PDF Download பண்டார மும்மணிக் கோவை - PDF Download சீகாழிக் கோவை - PDF Download பாண்டிக் கோவை - PDF Download கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் மதுரைக் கலம்பகம் காசிக் கலம்பகம் - PDF Download புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - PDF Download சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - PDF Download கொங்கு மண்டல சதகம் - PDF Download பாண்டிமண்டலச் சதகம் - PDF Download சோழ மண்டல சதகம் - PDF Download குமரேச சதகம் - PDF Download தண்டலையார் சதகம் - PDF Download திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - PDF Download கதிரேச சதகம் - PDF Download கோகுல சதகம் - PDF Download வட வேங்கட நாராயண சதகம் - PDF Download அருணாசல சதகம் - PDF Download குருநாத சதகம் - PDF Download பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு முத்தொள்ளாயிரம் காவடிச் சிந்து நளவெண்பா ஆன்மீகம் தினசரி தியானம் |
க.சீ.சிவக்குமார் குறுநாவல்கள் ஆசிரியர்: க.சீ. சிவகுமார்வகைப்பாடு : குறுநாவல் விலை: ரூ. 380.00 தள்ளுபடி விலை: ரூ. 345.00 அஞ்சல்: ரூ. 40.00 |
|