குறிஞ்சி மலர் - Kurinji Malar - தீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் - Deepam Naa. Parthasarathy Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com



7

     பெண் வழி நலனொடும் பிறந்த நாணொடும்
     என் வழி உணர்வு தான் எங்கும் காண்கிலேன்
     மண் வழி நடந்தடி வருந்தப் போனவன்
     கண் வழி நுழையுமோர் கள்தனே கொலாம்
-கம்பன்

     பூட்டியிருந்த வீட்டின் முன்பு கையில் அரவிந்தன் வைத்துச் சென்றுவிட்ட நோட்டுப் புத்தகத்தோடு தெரு வாசலில் நின்றாள் பூரணி. அவள் நிற்பதைத் தன் வீட்டு வாசற்படியிலிருந்து பார்த்து விட்டாள் ஓதுவார்க் கிழவரின் பேத்தி காமு. அவள் வந்து கூறினாள்: "பூரணி! சாயங்காலம் கமலா வந்திருந்தாள். நீ வருவாய் என்று காத்திருந்து பார்த்தாள். உன்னைக் காணவில்லை. இருட்டுகிற நேரத்துக்குச் சிறிது முன்னால் தான் ஒரு குதிரை வண்டி வைத்து உங்கள் வீட்டுக் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு போனாள். போகும் போது 'பூரணி வந்தால் என் வீட்டுக்கு வரச்சொல் அவளை' என்று என்னிடம் சொன்னாள்."

     "அது சரி காமு, அவள் தான் போனாள்; எங்கள் வீட்டைப் பூட்டிக்கொண்டு தம்பிகளையும் குழந்தைகளையும் எதற்காக அழைத்துக் கொண்டுப் போகவேண்டும்?"

     "அதென்னமோ எனக்குத் தெரியாதம்மா. வண்டி வைத்து அழைத்துக் கொண்டுப் போனாள். பார்த்தேன். அதுதான் எனக்குத் தெரியும்."

     "இந்தக் கமலாவே இப்படித்தான். புரியாமல் ஏதாவது செய்து வைப்பாள்" என்று கமலாவை மனத்தில் கடிந்து கொண்டே அவளுடைய வீட்டுக்கு விரைந்தாள் பூரணி. சந்நிதிக்கு முன்புறம் சில புதிய கார்கள் சிறிதும் பெரிதுமாகப் பளபளக்கும் நிறத்தோடு நின்றுகொண்டிருந்தன. புதிதாக விலைக்கு வாங்கிய கார்களையும், லாரிகளையும் முருகன் சந்நிதிக்கு முன் கொண்டு வந்து நிறுத்திச் சந்தனமும், குங்குமமும் அப்பி மாலை போட்டு வெள்ளோட்டம் விடுவது அங்கு ஒரு வழக்கம். நான்கு டயர் சக்கரங்களுக்கும் நான்கு எலுமிச்சை பழங்களைப் பலியாக வைத்து அது நசுங்கிச் சிதறும்படி புதிய கார்களை ஓட்டிக் கொண்டு போகும் அழகே அழகு.

     பூரணி, கமலாவின் வீட்டுக்காகச் சந்நிதி முகப்பில் திரும்பிய போது அன்னப்பறவை சிறகசைத்துப் பறப்பது போல் ஓர் அழகிய நீண்ட புதுக்கார் கீழே சக்கரங்களில் எலுமிச்சம் பழங்களை நசுக்கி மெல்ல நகர்ந்தது. புது கார் வாங்கிய பெருமை முகத்தில் தெரிய அதற்குள் உட்கார்ந்திருந்த ஆளைப் பார்த்த பூரணி இருளில் ஒதுங்கித் தன்னை மறைத்துக் கொண்டு நடந்தாள். அந்த மனிதர் தன்னைக் காணும்படி நேர்வதை விரும்பவில்லை அவள். அப்படி அவளுடைய வெறுப்பைக் கொட்டிக்கொண்ட அந்த மனிதர் யார் தெரியுமா? அப்பாவின் தன்மானம் இந்தக் குடும்பத்திலிருந்து இன்னும் சாகவில்லை என்று எழுதி 'செக்'கைத் திருப்பி அனுப்பினாளே, அந்தப் புது பணக்காரன் தான் இப்போது இந்தப் புது காருக்குள் உட்கார்ந்திருந்தார்.

     இவருடைய புதுக்காரின் சக்கரங்களில் இன்று எலுமிச்சம் பழங்கள் நசுங்குகின்றன. இதற்கு முன்பு எத்தனை ஏழைகளின் உள்ளங்கள் இவர் காலடியில் நசுங்கி இருக்கின்றன? உள்ளக் குமுறலோடு இவ்வாறு போகிற போக்கில் நினைத்தாள் அவள். சந்நிதி வாயிற் பிச்சைக்காரக் கும்பல் புதுக்கார் 'வள்ளலை' மொய்ப்பதையும் அவர் முகம் கடுத்துச் சீறி அவர்களை விரட்டுவதையும் கூட பூரணி கண்டாள். அன்று நடுப்பகல் வரை மதுரை நகரத்துப் பெரிய கட்டிடங்களிலெல்லாம் நுழைந்து தான் ஒரு வேலைக்குப் பிச்சை கேட்பது போல் மன்றாடிக் கொண்டு திரிந்தது நினைவில் உறுத்திற்று அவளுக்கு.

     பூரணியைப் பார்த்ததும் கமலா மிகவும் கோபித்துக் கொண்டாள். "வரவர நீ மிகவும் பெரியவளாகிக் கொண்டு வருகிறாய். உனக்குத் தன்மானம் அதிகம். எவ்வளவு துன்பமானாலும் நெருங்கிப் பழகியவர்களிடம் கூடச் சொல்லாமல் மறைத்துக் கொள்ளத் தெரிகிறது. நிலைமையைத் தெரிந்து கொண்ட பிறகு எங்களால் அப்படி இருக்க முடிகிறதா, அம்மா? நீதான் கல்மனம் உடையவள். எதையும் சொல்லாமல் பல்லை இறுகிக் கடித்துக் கொண்டு இருந்து விட முடியும் உனக்கு. எங்களுக்குப் பூஞ்சை மனம். உதவி செய்வதும் உதவி பெறுவதும் தான் அன்புக்கு அடையாளம் என்று நாங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறோம். காலையிலிருந்து நீ பட்டினி கிடக்கிறாய். எனக்குத் தெரியும் பூரணி எங்கள் வீட்டில் சாப்பிட்டதாக உன் தம்பியிடம் பொய் சொன்னாயாம். சாயங்காலம் அங்கே உன் வீட்டில் எல்லாம் பார்த்தேன். இப்படி மறைத்துக் கொண்டு எங்களை ஏமாற்றுவதில் உனக்கு என்ன தான் பெருமையோ?"

     கமலாவுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியாமல் பூரணி தலை குனிந்தாள். குழந்தை மங்கை உள்ளேயிருந்து ஓடி வந்தாள்.

     "அக்கா, நீங்க பேசாம விட்டுட்டுப் போயிட்டீங்க. கமலா அக்கா சாயங்காலமா எங்களை இங்கே அழைச்சிட்டு வந்து சோறு போட்டாங்க." மானத்தையும் வயிற்றையும் காப்பாற்றிக் கொள்வதற்காக வயதானவர்கள் சொல்லுகிற பொய்யை எல்லாம் குழந்தையும் சொல்ல முடியுமா? குழந்தையின் வாயில் உண்மை வந்தது. தன் நிலைமை தெரிந்துவிட்டதே என்ற நாணமும் கூடவே நன்றியும் ஒளிரக் கமலாவைப் பார்த்தாள் பூரணி.

     "இங்கே அழைத்துக் கொண்டு வந்து சாப்பாடு போட்டதற்காக என்மேல் கோபித்துக் கொண்டு விடாதேயம்மா. உரிமை இருக்கிறதாக நினைத்துக் கொண்டுதான் செய்தேன். உன் வீட்டுக் குழந்தைகள் உனக்குக் கொஞ்சமும் இளைத்தவர்கள் இல்லை. நான் இங்கே கூப்பிட்டபோதே, 'அக்காவைக் கேட்காமல் நாங்களாக வரமாட்டோம்' என்று மறுத்தார்கள். அக்காவுமாயிற்று தங்கையுமாயிற்று. இப்படியா கொலைப்பட்டினி கிடப்பார்கள். எல்லாம் நான் சொல்லிக் கொள்கிறேன் உங்கள் அக்காவிடம்; பேசாமல் என்னோடு வாருங்கள் என்று உன் வீட்டுக் கதவைப் பூட்டி அழைத்து வந்தேன்."

     "உன் அம்மா, அப்பா, ஒருவரையும் காணவில்லை போலிருக்கிறதே? அவர்கள் எங்கே போயிருக்கிறார்கள் கமலா?" என்று பேச்சை வேறு வழியில் திருப்பினாள் பூரணி.

     "அப்பாவும் அம்மாவும் மத்தியானம் ஊருக்குப் புறப்பட்டுப் போயிருக்கிறார்கள். திரும்புவதற்கு இரண்டு மூன்று நாட்கள் ஆகும்."

     "ஊரில் என்ன காரியமோ?"

     பூரணியின் இந்தக் கேள்விக்குக் கமலா மறுமொழி கூறவில்லை. முகம் சிவக்க மெல்லச் சிரித்தவாறே தலை குனிந்தாள். செந்தாமரைப் பாதத்தின் சிறு விரல்கள் தரையில் விளையாட்டுப் பயின்றன.

     பூரணிக்குப் புரிந்துவிட்டது. கமலாவின் முகத்தில் நாணம் மலர்ந்து நளினம் பரப்புகிற அழகைப் பார்த்துக் கொண்டே சொன்னாள் பூரணி.

     "ஓ! அப்படியா செய்தி? தை பிறக்கப் போகிறதல்லவா? இந்த அருமைப் பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக்கொண்டு வரப் புறப்பட்டு விட்டார்களாக்கும்?"

     மலர மலரச் சிரிப்பு அதிகமாகிக் கொண்டு வளருகிற ஒருவட்டப் பூப்போல் கமலாவின் முகம் சிவந்தது. பெண்ணின் முகத்தில் நாணம் பிறக்கும்போதே கவிகளின் மனங்களில் கவிதைகள் பிறப்பதாகச் சொல்கிறார்களே, அது உண்மைதான் என்று கமலாவின் முகத்தில் அப்போது கொஞ்சி நின்ற அழகைக் கண்டபோது பூரணிக்குத் தோன்றியது.

     கமலாவின் வீட்டுக்கு வந்து சாப்பிட்டதற்காக அக்கா கோபித்துக் கொள்வாளோ என்று பயந்து போய்ச் சம்பந்தனும் திருநாவுக்கரசும் பூரணியின் முன்னால் வந்து அவள் முகத்தைப் பார்ப்பதற்கே கூசினர்.

     "சரி, நான் இவர்களையெல்லாம் கூட்டிக் கொண்டு வீட்டுக்குப் புறப்படுகிறேன்" என்று பூரணி புறப்படுவதற்கு முற்பட்டபோது கமலா சண்டைக்கே வந்துவிட்டாள்.

     "வீட்டுக்காவது, புறப்படுகிறதாவது? வீட்டில் என்ன வைத்திருக்கிறது? எனக்குத் தெரியும் பூரணி, அடுக்கு அடுக்காகப் புத்தகங்களைத் தவிர இப்போது உன் வீட்டில் வேறு ஒன்றும் இல்லை. 'என்னை இன்னும் ஏமாற்றப் பார்க்காதே. புத்தகங்களைப் படித்தால் அறிவுப்பசி தீரும். வயிற்றுப்பசி தீராது. எல்லாம் பார்த்துச் சிந்தித்து தீர்மானம் பண்ணிதான் நான் இவர்களை இங்கே கூட்டிக் கொண்டு வந்தேன். இங்கே அம்மா, அப்பா கூட ஊரில் இல்லை. வருகிறவரை உன்னைத்தான் துணைக்கு வைத்துக் கொள்ளச் சொன்னார்கள். எனக்குத் துணையாக இருந்தாற் போலவும் ஆகும். நீயும் இவர்களும் சில நாட்களுக்கு இங்கேதான் இருக்க வேண்டும். வீட்டுக்குப் போய்விட்டால் யாருக்கும் தெரியாதபடி இவர்களையும் உன்னையும் பட்டினி போட்டுக் கொண்டு கிடக்கலாம் என்று நினைக்கிறாய் போலிருக்கிறது. நான் அதற்கு விடமாட்டேன்."

     "விடவேண்டாம் கமலா! நான் உன்னை ஒரு கேள்வி கேட்கிறேன். அதற்கு பதில் சொல்வாயா நீ?"

     "கேளேன், என்ன கேள்வியோ?"

     "வேறொன்றுமில்லை. என்னையும் இவர்களையும் இப்படி எத்தனை நாளைக்கு உன்னால் காப்பாற்றி விட முடியுமென்று நினைக்கிறாய்?" கேட்டுவிட்டுச் சிரித்தாள் பூரணி. துன்பங்களைச் ஜீரணிக்கும் சிரிப்பு அது.

     "அதுவா பேச்சு? ஏதோ உனக்கு வேலை கிடைக்கிறவரை இங்கே இருக்கலாம். மனிதர்கள் ஒருவருக்கொருவர் சமயங்களில் விட்டுக் கொடுக்காமல் உதவி செய்யத்தான் இருக்கிறோம். ஒன்றும் தலையில் கட்டிக் கொண்டு போய்விடப் போவதில்லை பூரணி."

     "என்னவோ நீ சொல்கிறாய் கமலா. எனக்கும் மறுக்கத் தோன்றவில்லை. விட்டுக்கொடுக்காமல் உதவுவதற்கும் அன்பு செலுத்துவதற்கும் இன்றைய வாழ்க்கையின் வேகத்தில் இடம் இருப்பதாகவே தெரியவில்லை. கண்களுக்கு மூடியிட்டு ஓட்டப்படுகிற ஜட்கா வண்டிக் குதிரையைப் போல் வழியைத் தெரிந்து கொள்ள முடியாததொரு அசுர வேகத்தைத்தான் வாழ்க்கையில் பார்க்கிறோம்."

     தம்பிகளும், குழந்தையும் தூங்கிய பின் கமலாவும் பூரணியும் வீட்டு மொட்டை மாடியில் போய் சில நாழிகைகள் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். மனம் நெகிழ்ந்து அன்பு உறவோடு பேசிக் கொண்டிருந்ததால் அன்று வேலை தேடி அலையும்போது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை கமலாவிடம் கூறினாள் பூரணி. மங்களேஸ்வரி அம்மாளைச் சந்தித்துப் பேச நேர்ந்ததை எல்லாம் சொன்னாள். தெருவில் மயங்கி விழுந்ததை மட்டும் கூறாமல் வேறுவிதமாகத் திரித்துச் சொல்லிவிட்டாள்.

     கமலாவின் வீட்டு மாடியிலிருந்து கோபுரம் பக்கத்தில் தெரியும். இருளில் மேலேயிருந்து கீழ்நோக்கித் தொங்கும் மின்சார மல்லிகைச் சரம்போல் தென்படும் வரிசையான கோபுர விளக்குகளையும் ஒளிப்புள்ளிகளாய்ப் பரந்து தோன்றும் ஊரின் அடங்கிய தோற்றத்தையும் பார்த்துக் கொண்டே அங்கு உட்கார்ந்து நேரம் போவது கூடத் தெரியாமல் பேசினாள் பூரணி. எதிர்கால வாழ்க்கையைப் பற்றிப் பேசினாள். இருளோடு கலந்து நிற்கும் குன்றின் உச்சியில் 'ஓம்' சிரித்துக் கொண்டிருந்தது. இரசம் பூசிய கண்ணாடித் துண்டுகள் பாளம் பாளமாக ஆகாயத்திலிருந்து துண்டு துண்டாகப் பூமியில் நழுவி விழுந்தாற்போல் ஊரைச்சுற்றியிருந்த ஏரிகளில் இருளிடையே நீர்ப்பரப்பு மின்னிற்று.

     தன் பேச்சைக் கேட்டுக்கொண்டே உணர்வு நழுவி சுவரில் சாய்ந்து தூங்கத் தொடங்கியிருந்த கமலாவை எழுப்பிக் கொண்டு தூங்கப் போனாள் பூரணி. கமலா படுத்தவுடன் தூங்கிவிட்டாள். பலவிதமான கவலைகளால் பூரணிக்குத் தூக்கம் உடனே வரவில்லை. 'ஒவ்வொரு நாளும் உலகத்துக்குப் பொழுது விடிகிறது. எனக்கும் என் வீட்டுக்கும் என்றைக்கும் விடியப்போகிறதோ? முருகா! நான் வாழ்வதற்கு ஒரு வழியைத் திறந்துவிடு! அப்பா, மனிதர்களை நம்பி என்னைவிட்டுப் போகவில்லல. உன்னுடைய ஊரில் உன் திருக்கோயிலுக்கு முன்னால் உன் அருளில் நம்பிக்கை வைத்துத்தான் என்னையும் இந்தச் சிறுவர்களையும் விட்டுவிட்டுப் போயிருக்கிறார். நீ காப்பாற்று; கைவிட்டுவிடாதே. வாழ ஒரு வழியைக் கொடு.'

     பூரணி படுக்கையில் கண்களை மூடி அமர்ந்து மேற்கண்டவாறு நெஞ்சுக்குள் தியானித்துக் கொண்டாள். குனிந்த புருவமும், கோவைச் செவ்வாயும், அருள் குலவும் முகமுமாக வேலேந்திய தாமரைக் கையோடு இளங்கதிரவன் தோன்றினாற் போலத் தோன்றும் பால முருகனை அவள் அகக்கண்கள் உணர்ந்தன.

     காரணமோ, தொடர்போ புரியாமல் அதையடுத்தாற்போல் மாலையில் தேடி வந்தானே, அந்த இளைஞனின் முகம் நினைவில் படர்ந்தது. இனிப்பு மிட்டாயை யாரும் அறியாமல் சுவைக்கும் குழந்தையைப் போல் 'அரவிந்தன்' என்று மெல்ல சொல்லிப் பார்த்துக் கொண்டாள் அவள். அப்படிச் சொல்லி பார்ப்பதில் ஒரு திருட்டு மகிழ்ச்சி இருந்தது. கள்ளக் களிப்பு இருந்தது. சொல்லித் தெரியாத அல்லது சொல்லுக்குள் அடங்காத சுகம் இருந்தது. அந்த இளைஞனின் அழகு முகம் அப்போது, எப்படி எதற்காக நினைப்பு வந்ததென்று காரண காரியங்களைக் கூட்டிப் பார்த்துத் தீர்மானம் செய்ய அவளாலேயே முடியவில்லை. நாதத்தை எழுப்ப வேண்டுமென்ற கருத்தே இல்லாமல், நாத லட்சணமே தெரியாமல் தற்செயலாக விரல்கள் பட்டு வருட நேர்ந்தாலும் வீணையில் நாதம் பிறப்பதில்லையா? அப்படித் தற்செயலாய்த் தவிர்க்க முடியாததால் அந்த முகம் அவளுடைய நினைவுக்குள் நழுவி வந்து விழுந்தது.

     தூங்கிக் கொண்டிருந்த கமலாவுக்கு இடையூறில்லாமல் மேஜை விளக்கைப் போட்டுக் கொண்டு அரவிந்தனின் நோட்டுப் புத்தகத்தைப் பிரித்தாள் பூரணி. கடிகாரத்தின் டிக் டிக் ஒலியும், 'ஙொய்' என்று சுவர்க்கோழிக் குரலுமாகக் கமலாவின் வீட்டுக் கூடத்தில் இருள் அணையிட்டுக் கொண்டு நின்றது. மேஜை விளக்கைச் சுற்றி மட்டும் வெண் நில மின்னொளி, மாவைக் கொட்டின மாதிரி பரவியிருந்தது. ஏறக்குறைய இரண்டரை மணி வரையில் அந்த மேஜை விளக்கு அணையவில்லை.

     படிக்கப் படிக்க ஆச்சரியமாக இருந்தது பூரணிக்கு. அரவிந்தன் என்ற அறிவுத் துடிப்பு மிகுந்த இளைஞன், வாழ்க்கையில் விதவிதமான வர்ணங்களைத் தான் கண்டு கேட்டு உணர்ந்த அனுபவத்தோடு தீட்டியிருந்தான். அந்த அனுபவக் குறிப்புகளும் தோன்றிய போதெல்லாம் எழுதப்பட்ட கவிதைகளும் இடமும் நிறமும் பொருந்தும்படி நன்றாக வரையப்பட்டிருந்தன. யாருக்கும் தெரியாமல் புதையல் வைத்திருப்பவன் அதைத் தனிமையில் திறந்து பார்த்து மகிழ்கிற மாதிரி அரவிந்தனின் அனுபவங்களைப் படித்து மகிழ்ந்தாள் பூரணி. தான் மயங்கி விழுந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு அவன் எழுதியிருந்த கவிதை வரிகளைப் படித்தபோது தான், மாலையில் 'நீங்கள் தெருவில் மயங்கி விழுந்துவிட்டால் அதற்கு உலகமெல்லாம் பிணை என்று நினைத்துச் சீறவேண்டியதில்லை' என்று அவன் கூறியதன் காரணம் அவளுக்கு விளங்கியது. ஓர் இடத்தில் மனம் கொதித்து வெறி கொண்டாற் போன்று சில வாக்கியங்கள் எழுதியிருந்தான் அரவிந்தன்.

     "தமிழ்நாட்டின் இன்றைய வாழ்க்கையில் காவியம் இல்லை. வயிற்றுப் பசிதான் இருக்கிறது. ஏமாற்றங்கள் தான் இருக்கின்றன. வேதனைகள் தான் இருக்கின்றன. சிக்கல் விழுந்த நூற்சுருளில் முதல் எங்கே? முடிவு எங்கே? என்று தெரியாத மாதிரி இந்தப் பிரச்சினைகள் எதிலிருந்து தோன்றின? எதனால் தீர்க்க முடியும்? ஒன்றுமே விளங்கவில்லை. ஒரு காலத்தில் வாழ்க்கையில் பிரச்சினைகள் இருந்தன. இப்போது பிரச்சினைகளில் வாழ்வு இருக்கிறது. ஒரு காலத்தில் வாழ்க்கையில் எப்போதாவது அங்கொன்றும் இங்கொன்றுமாக அவநம்பிக்கைகளும் சந்தேகங்களும் இருந்தன. இன்றோ அவநம்பிக்கைகளுக்கும் சந்தேகங்களுக்கும் நடுவில்தான் வாழ்க்கையே இருக்கிறது. இன்று நகரங்களில் இதயங்களும், அவற்றையுடைய மனிதர்களும் வாழவில்லை. இரும்பும் பிளாஸ்டிக்கும் வாழ்கின்றன. தெருவோரங்களில் குப்பைகளையும் தூசிகளையும்போல உயிருள்ள மனிதர்களும் விழுந்துகிடக்கிறார்கள். இந்த வாழ்க்கையை எப்படி மாற்றியமைப்பது? 'தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்' என்று கவி பாடலாம். ஆனால் வாழ்க்கையில் அந்த விதி இன்னும் வரவில்லையே! மூட்டைப் பூச்சி மருந்தையும், மயில் துக்கத்தையும் தின்று மனிதர்கள் அல்லவா புழுப்பூச்சிகள் போல் அழிந்து போய்க் கொண்டிருக்கிறார்கள்."

     இந்தச் சில வாக்கியங்களில் அரவிந்தனின் உள்ளம் அவளுக்குப் புரிந்தது. தன்னைப் போலவே தனக்கு மிக அருகில் இந்த நாட்டு வாழ்க்கைப் பிரச்சினைகளை எண்ணி ஓர் ஆண் உள்ளமும் துடித்துக் கொண்டிருப்பதை அவள் உணர்ந்தாள். அரவிந்தனின் அழகும், அறிவும், குணமும், குறிக்கோளும் அவளைக் கவர்ந்தன. இப்படிப்பட்ட இலட்சியவாதியிடமா அந்த மாதிரிச் சீறி விழுந்து துரத்தினேன்? என்று நினைத்துத் தன்னைத் தானே நொந்து கொண்டாள் அவள். காலடியிலே மென்மையும், மணமும் மிக்க பூ ஒன்றை மிதித்து நசுக்கி விட்டாற் போல் வேதனையாக இருந்தது அவளுக்கு. அரவிந்தனுடைய கொள்கைகளின் கம்பீரம் மதுரைக் கோபுரங்களைப் போல் பெரிதாய், உயரமாய் அவள் மனத்தில் கால் ஊன்றி நின்று கொண்டன.

     அந்த நோட்டுப் புத்தகத்தைக் கண்களில் ஒற்றிக்கொண்டு மேஜைமேல் வைத்துவிட்டு விளக்கை அணைத்தாள். பூரணியின் உடலில் உறக்கமும் உள்ளத்தில் அரவிந்தனும் குடிகொண்டு ஆளத் தொடங்கினர். இருட்டில் நீண்ட நேரமாகக் கைகளால் துழாவித் தேடிக்கொண்டிருந்த பொருள் கிடைத்துவிட்டது போல் அரவிந்தன் என்னும் இனிய தத்துவத்தைப் புரிந்து கொண்டு விட்ட மகிழ்ச்சி அவளுக்கு.

     தூக்கத்தில் இதழ்கள் நெகிழ சிரித்தது அவள் முகம். இனிமையான கனவு ஒன்று கண்டாள் அவள். அரவிந்தன் அவளுடைய கையைப் பற்றி அழைத்துக் கொண்டு போகிறான். இரண்டு பேரும் திருப்பரங்குன்றம் மலை மேல் ஏறுகிறார்கள். வெள்ளி நெகிழ்ந்து உருகிய குளம்போல் வானில் முழுநிலவு உலா வருகிறது. நல்ல காற்று வீசுகிறது. இந்த மாதிரி ஒரு காதல் ஜோடியைக் காண்பதற்கென்றே ஊழி ஊழியாகத் தவம் செய்து வானில் காத்துக் கொண்டிருந்தவை போல் நட்சத்திரங்கள் கண் நிறையக் குறும்புடன் பார்த்துக் கொண்டிருக்கின்றன. கந்தர்வப் பெண்கள் தத்தம் காதலனைச் சந்திக்கப் போகிற விரைவில் நழுவவிட்ட வெள்ளைச் சல்லாத் துணிகளைப் போல் அங்கங்கே நிலவொளிரும் நீலவானிடையே வெண் மேகங்கள் தெரிகின்றன.

     "பூரணி! இந்த வானிலும், நிலவிலும் மென் சீதக் காற்றிலும் காவியம் இருக்கிறது. அழகு இருக்கிறது. இவையெல்லாம் உனக்காகவும் எனக்காகவும் இருக்கின்றன" என்று அவள் காதருகில் புன்னகையோடு சொல்கிறான் அரவிந்தன். அந்தப் புன்னகையில் நயங்கள் பொலிகின்றன.

     "இல்லை, அரவிந்தன். நீங்கள்... பொய் சொல்கிறீர்கள். உலகத்தில் காவியம் இல்லை; வயிற்றுப் பசிதான் இருக்கிறது. பூரிப்பு இல்லை; பெருமூச்சுக்கள்தான் இருக்கின்றன." பூரணி அரவிந்தனை மறுக்கிறாள்.

     "நீ மண்ணைப் பற்றிப் பேசுகிறாய்! நாம் இப்போது மலை மேல் இருக்கிறோம். உயரத்தில் இருக்கும் போது மனத்தைக் கீழே போகவிடாதே."

     "அழகு மேலே இருக்கலாம்; ஆனால் வாழ்க்கை கீழேதான் இருக்கிறது அரவிந்தன்!"

     இப்படி இன்னும் என்னென்னவோ பேசிக்கொள்கிறார்கள் இருவரும். மலைமேல் ஏற ஏறப் பூரணிக்குக் கால் வலிக்கிறது. அரவிந்தனின் சுந்தரமணித் தோள் மீது கையை வைத்துக் கொண்டு தடுமாறி விழாமல் நடக்கிறாள் அவள்.

     "அதோ எதிரே தொலைவில் பல நிறத்து வைரக் கற்களை அள்ளி இறைத்த மாதிரி விளக்குகள் தெரிகின்றனவே. அதுதான் மதுரை" என்று அரவிந்தன் சொல்கிறான். அவள் பார்ப்பதற்காக நிமிர்ந்து திரும்புகிறாள். கீழே கால்கட்டை விரல் மலைப்பாறையில் எற்றிவிடுகிறது. இரத்தம் கசிந்து விரல் மாதுளைப் பூவாக மாறுகிறது. அரவிந்தன் குனிந்து அந்த விரலைப் பற்றுகிறான். அவன் கையெல்லாம் சிவப்பாகின்றது. துணியைக் கிழித்துச் சுனை நீரில் நனைத்துக் கட்டுப் போடுகிறாள்.

     "உங்கள் கையெல்லாம் இரத்தமாகிவிட்டதே! கழுவிக் கொள்ளுங்கள்."

     "எதற்காகக் கழுவவேண்டும்? இந்த இரத்தத்தால் உலகத்துப் பெண் குலத்தின் துன்பக் காவியத்தை எழுதிவிடப் போகிறேன் பூரணி" என்று சிரித்துக் கொண்டே சொல்கிறான் அரவிந்தன்.

     பூரணி கனவிலிருந்து விழித்துக் கொள்கிறாள். கால் கட்டை விரலில் உண்மையாகவே வலித்தது. ஈரம் கசிவதுபோல் ஒரு பிரமையும் உணர்வில் ஏற்பட்டது. எழுந்திருந்து விளக்கைப் போட்டுப் பார்த்தாள். சுவரோரமாக இருந்த காய்கறி நறுக்கும் அரிவாள் மணையில் கட்டைவிரல் உரசியிருந்தது. விளக்கைப் போட்ட ஓசையில் கமலாவும் விழித்துக் கொண்டாள்.

     "என்னடி பூரணி?"

     "தூக்கத்தில் அரிவாள்மணை இருந்த பக்கம் காலைப் போட்டுவிட்டேன் போலிருக்கிறது."

     "அடிபாவி! பார்த்து படுத்துக் கொள்ளக்கூடாதோ? இன்னும் கொஞ்ச நேரம் விழித்துக் கொள்ளாமலிருந்திருந்தால் கட்டை விரலே போயிருக்குமே?" என்று சினந்து கூறிக்கொண்டே எழுந்து ஓடி வந்தாள் கமலா. வெட்டுப்பட்ட இடத்தில் சிறிது ஈரச் சுண்ணாம்பு தடவித் துணியைச் சுற்றினாள்.

     விட்ட கனவு மறுபடியும் தொடராதா என்ற ஏக்கத்தோடு படுத்துக் கொண்டாள் பூரணி.

     காலையில் பூரணியும் கமலாவும் சரவணப் பொய்கைக்குக் குளிக்கச் சென்றார்கள். போகும்போது பூரணிக்குக் குடியிருக்க இடம் பார்ப்பதற்காக இரண்டு மூன்று பெரிய ஸ்டோர்களுக்குப் போய் விசாரித்தாள் கமலா. பெரிய இரத வீதியில் மூன்று அறைகளும் கிணறும் வசதியாக அமைந்து தெற்கு நோக்கி வாசலுள்ள சிறிய வீடு ஒன்று கிடைத்து விட்டது. மாதம் பதினெட்டு ரூபாய் வாடகை. பூரணிக்காக தன் கையிலிருந்து வீட்டுக்கு முன்பணம் கொடுத்தாள் கமலா. பத்து இருபது குடிகளுக்கு நடுவே மாட்டிக் கொள்ளாமல் சிறிதாக இருந்தாலும் தனி இடமாகக் கிடைத்ததே என்று பூரணி மன நிறைவு பெற்றாள். இடம் கமலாவின் வீட்டிற்கு அருகிலும் இருந்தது. அவர்கள் இருவரும் குளித்துவிட்டு ஈரப்புடவையோடு திரும்பினார்கள். கமலாவின் வீட்டு வாசல் திண்ணையில் ஓதுவார்க்கிழவர் காத்துக் கொண்டிருந்தார். அவருக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த அரவிந்தனைக் கண்டதும் பூரணி தலைகுனிந்து கொண்டே ஒதுங்கி நடந்து உள்ளே சென்றாள்.

     "பூரணி! இவர் உன்னைப் பார்க்க வேண்டுமென்று அங்கே வீட்டுக்குத் தேடிக் கொண்டு வந்தார். நீயும் குழந்தைகளும் இங்கே வந்திருப்பதாக காமு சொன்னாள். அதுதான் இவரை இங்கே அழைத்துக் கொண்டு வந்தேன் அம்மா."

     "கொஞ்சம் இருக்கச் சொல்லுங்கள் தாத்தா! இதோ வந்து விடுகிறேன்" என்று கூறிவிட்டு விரைந்து உள்ளே மறைந்தாள் பூரணி.

     "நேற்று வந்தபோது அந்த வீட்டு வாசல் திண்ணையில் என்னுடைய நோட்டுப் புத்தகம் ஒன்றை மறந்து போய் வைத்துச் சென்றுவிட்டேன். அதை வாங்கிக் கொண்டு போகலாமென்று தான்" என்று அரவிந்தன் எழுந்து நின்று கொண்டு சொன்னதும் உள்ளே போகிற வேகத்தில் அவளுக்குக் கேட்டது. இரவில் கண்ட கனவை நினைத்துக் கொண்டாள். உடைமாற்றிக் கொண்டு அந்நோட்டுப் புத்தகத்தோடு அவள் வெளியே வந்தாள்.

     அவள் வெளியே வந்த போது, ஓதுவார்க்கிழவர் கோயிலுக்குப் போயிருந்தார். அவருக்குக் கோயிலில் தேவாரம் பாடுவதற்குப் போக வேண்டிய நேரம். தனியாக உட்கார்ந்திருந்த அரவிந்தன், நோட்டுப் புத்தகமும் கையுமாக அவளைப் பார்த்ததும் வாங்கிக் கொள்வதற்காகக் கை நீட்டிக் கொண்டு எழுந்திருந்தான். பூரணி அதை அவன் கையில் கொடுத்துவிட்டு, "உட்காருங்கள், எனக்கு உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும். உங்களுக்கு அவசரம் ஒன்றுமில்லையே" என்று கேட்டாள்.

     'இந்த நோட்டுப் புத்தகத்தை இவள் படித்திருப்பாளோ?' என்று கூசித் தயங்கிக் கொண்டே கையில் வாங்கிய அரவிந்தன், அவள் கூறிய வார்த்தைகளைக் கேட்டு இன்னும் கூச்சம் அடைந்தான். 'இவள் மயங்கி விழுந்தது பற்றி நான் இதில் எழுதியிருப்பதையெல்லாம் படித்திருப்பாள் போலிருக்கிறது. அது சம்பந்தமாகத்தான் தன்னை ஏதாவது கேட்பாள்' என்று எண்ணி வெட்கமும் தயக்கமுமாக மீண்டும் திண்ணையில் உட்கார்ந்தான். பனித்துளி நீங்காத செந்தாமரைப் பூப்போல் குளித்த ஈரம் புலராமல் தென்படும் அந்த முகத்தை ஓரக்கண்ணால் பார்த்தான் அரவிந்தன். அந்த முகத்தில் தான் அவனுடைய கவிதைகள் பிறந்தன. அந்த முகத்துக்குத்தான் லட்சிய வெறியும், கவிப்பித்தும் கொண்ட அவள் மனம் இளகி நெகிழ்ந்தது. அந்த முகத்தில் அப்படி என்னதான் இருக்குமோ?

     "நேற்று உங்களிடம் என்னென்னவோ சொல்லி ஆத்திரமாகப் பேசிவிட்டேன். அதற்காக முதலில் நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும்." மன்னிப்புக் கேட்கும் பணிவான இனிய குரலைக் கேட்டான் அரவிந்தன். அவனுடைய கூச்சம் நீங்கிச் சற்றே துணிவு வந்தது. நன்றாக நிமிர்ந்து நேராகவே அவள் முகத்தைப் பார்த்தான். பூரணியும் பார்த்தாள். கருத்தால் கவர்ந்து கண்விழிப் புகுந்து கனவெல்லாம் அளித்த குறுநகைக் கள்வனைத் தன் விழிகளால் பருகினாள். கல்பகோடி காலமாக அந்தப் பார்வைக்காகக் காத்திருந்தது போல் ஓர் அன்பின் தாகம் அந்த நான்கு கண்களிலும் தெரிந்தது.

     "உங்கள் நோட்டுப் புத்தகத்தை முழுவதும் நான் படித்தேன். அதற்காகவும் மன்னிக்க வேண்டும்!"

     "பரவாயில்லை! அது ஒன்றும் அப்படி மன்னிக்க வேண்டிய பெரிய குற்றமில்லை. ஏதோ எனக்குத் தோன்றியதையெல்லாம் கிறுக்கி வைத்திருக்கிறேன்."

     "எல்லாம் நன்றாக இருந்தன. விடிய விடிய அவற்றைத் தூக்கம் விழித்துப் படித்தேன் நான்."

     "அப்படியா? உங்களைப் பற்றிக்கூட ஏதோ கிறுக்கியிருந்தேன்."

     "அதையும் பார்த்தேன்."

     "தப்பானால் நானும் உங்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டியவன் தான்!" அரவிந்தன் தனக்கே உரிய குறுநகையோடு பூரணியின் முகத்தை நோக்கிக்கொண்டே இப்படிச் சொன்னான். அரவிந்தனுடைய சிரிப்புக்கு, எதிரே நின்று பேசுகிறவர்களையும் சிரிக்க வைக்கும் ஆற்றல் உண்டு. பூரணியும் சிரித்தாள். சிரித்துக் கொண்டே சொன்னாள்:

     "அப்பாவின் புத்தகங்களை நீங்கள் வெளியிடலாம். உங்கள் நோட்டுப் புத்தகத்தைப் படித்த பின் இந்த முடிவுக்கு வந்து விட்டேன் நான். உங்களை நான் நம்புகிறேன். முகவரி கொடுத்து விட்டுப் போனால் நானே நாளை உங்கள் அச்சகத்துக்கு வருகிறேன்."

     "நீங்கள் இந்த நல்ல முடிவுக்கு வந்ததற்கு என் நன்றி. இதோ முகவரி" என்று விசிட்டிங் கார்டை எடுத்துக் கொடுத்தான் அரவிந்தன். அவன் விடைபெற்றுப் போகும்போது, தன் உள்ளத்தைப் பூரணியிடம் விட்டு, அவள் உள்ளத்தைத் தன்னோடு கொண்டு போய்விட்டானா, என்ன?

     அன்றைக்கு மாலையே புதிதாகப் பார்த்திருக்கும் வீட்டிற்கு சாமான்களை மாற்றி விடுகிற திட்டத்தோடு மூன்று மணி சுமாருக்கு ஒரு வண்டியை ஏற்பாடு செய்து கொண்டு திருநாவுக்கரசுடனும், கமலாவுடனும் பழைய வீட்டுக்குப் போனாள் பூரணி. ஆனால் அந்தத் திட்டம் நிறைவேறவில்லை. பழைய வீட்டில் சாமான்களை ஒழிக்கத் தொடங்கிய சிறிது நேரத்துக்கெல்லாம் மங்களேஸ்வரி அம்மாள் அவசரமாகக் காரில் வந்து இறங்கி முக்கியமான காரியமென்று கூறி பூரணியைத் தன்னுடன் மதுரைக்கு அழைத்துப் போய்விட்டாள்.






புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
151
152
153
154
155
156
157
158
159
160
161
162
163
164
165
166
167
168
169
170
171
172
173
174
175
176
177
178
179
180
181
182
183
184
185
186
187
188
189
190
191
192
193
194
195
196
197
198
199
200
201
202
203
204
205
206
207
208
209
210
211
212
213
214
215
216
217
218
219
220
221
222
223
224
225
226
227
228
229
230
231
232
233
234
235
236
237
238
239
240
240
241
242
243
244
245
246
247