14
"கற்பூரப் பாத்தி கட்டிக் கத்தூரி எருப்போட்டுக் கமழ்நீர் பாய்ச்சி பொற்பூர உள்ளிதனை விதைத்தாலும் அதன் குணத்தைப் பொருந்தக்காட்டும் சொற்பேதையருக்(கு) அறிவு இங் கினிதாக வருமெனவே சொல்லினாலும் நற்போதும் வாராது ஆங்கவர் குணமே மேலாக நடக்குந்தானே" மதுரை நகரத்து வீதிகளில் தேய்ந்து நள்ளிரவு கொலுவிருக்கும் அந்த நேரத்தில் ஒலிகள் தேயாத ஒரு வீதியில் ஒளிகுன்றா ஓர் அச்சகத்து முன் அறையில் அவர்கள் உட்கார்ந்திருந்தார்கள். திருத்தப் பெற்றவையும், திருத்தப் பெறாதவையுமாக அச்சுப் பிரதிகள் மேசைமேல் தாறுமாறாகக் கிடந்தன. அவை சிதறிக் கிடந்தவிதம் அங்கிருந்தவர்களின் அப்போதைய மனநிலையையே காட்டுவதுபோல் இருந்தது. அரவிந்தன் கூறிய விவரங்களையெல்லாம் கேட்டுவிட்டு முருகானந்தம் பதில் சொல்லாமல் இருந்தான். அவன் முகக் குறிப்புத் தீவிரமான சிந்தனையைக் காட்டிற்று. எல்லாவற்றையும் இழந்து பறிகொடுத்துவிட்டாற்போல் சோர்ந்து உட்கார்ந்திருந்த மங்களேசுவரி அம்மாள் பூரணியின் முகத்தைப் பார்த்தாள். பூரணி அரவிந்தனைப் பார்த்தாள். அரவிந்தன் முருகானந்தத்தைப் பார்த்தான்.
"எல்லாம் புரிகிறது அரவிந்தன். ஆனால் இந்த நேரத்துக்கு மேல் எங்கே போய் என்ன செய்ய முடியும்? நடந்தது வெளியில் தெரியவிடாமல் பெண்ணைக் கண்டுபிடித்து வீடு கொண்டு வந்து சேர்க்க வேண்டும். கல்லூரியில் படிக்கிற பெண் என்கிறார்கள். யாரும் ஏமாற்றி அழைத்துக் கொண்டு போயிருக்க முடியாது. விவரம் தெரிந்து வேண்டுமென்று தானாகவே போயிருப்பதுதான் சாத்தியம். அப்படியானால் எந்தக் காரணத்துக்காக யாரோடு போயிருக்கலாமென்று தெரிந்து கொள்ள வேண்டும். தேடிப் பார்க்க கிளம்புவதற்கு முன் காணாமல் போயிருக்கும் பெண்ணின் பழக்க வழக்கங்களைப் பற்றி இந்த அம்மாளிடம் நாம் நிறையக் கேட்டுத் தெரிந்து கொள்ளாமல் ஒன்றையும் விளங்கிக் கொள்ள இயலாது. எனக்குக் கொஞ்சம் சிந்திக்க நேரம் கொடு. மணி பன்னிரண்டுக்கு மேல் ஆகப்போகிறது. பெண்ணின் படத்தை வாங்கிக் கொண்டு இவர்களை வீட்டுக்கு அனுப்பு. கவலையில்லாமல் கூடியவரையில் நிம்மதியாக வீட்டுக்குப் போய் இருக்கச் சொல்லு. என்னால் முடியுமானால் இந்த அம்மாளுடைய பெண் எங்கிருந்தாலும் தேடிப் பிடித்துக் கொண்டு வந்து சேர்த்துவிடுவேன். உதவி செய்ய நான் தயங்கவில்லை. அதை வகையாகச் செய்ய வேண்டும் என்று தான் தயங்குகிறேன். அவசரப்பட்டு எதையாவது செய்து அந்தப் பெண் ஓடிப்போய் விட்டாளாமே என்று ஊரெல்லாம் அவப்பெயர் பரவும்படி ஆகிவிடக் கூடாது" என்று முருகானந்தம் நிதானமாகக் கூறிய விவரங்கள் எல்லாம் ஏற்றுக் கொள்ளத்தக்கவையாகத்தான் இருந்தன. பூரணி, மங்களேஸ்வரி அம்மாளிடம் இருந்து வசந்தாவின் புகைப்படத்தை வாங்கி அதன் பின்புறமே தேவையான விவரங்களையும் அடையாளங்களையும் குறித்து அரவிந்தனிடம் கொடுத்தாள். அவன் அதை வாங்கி மேஜையின் இழுப்பறையில் பத்திரமாக வைத்தான். "அம்மா நீங்களும் என்னோடு திருப்பரங்குன்றம் வந்துவிடுங்கள். உங்கள் மனநிலை சரியில்லை. கவலைகளால் குழம்பியிருக்கிறீர்கள். உங்களை இப்போது வீட்டுக்குத் தனியாக அனுப்ப எனக்குப் பயமாயிருக்கிறது" என்று அந்த அம்மாளையும் தன்னோடு வருமாறு அழைத்தாள் பூரணி. அதற்கு அந்த அம்மாள் இணங்கவில்லை. "காய்ச்சல் உடம்போடு தலைக்குத் தண்ணீர் விட்டுக் கொள்ளுமுன் உன்னை இவ்வளவு தூரம் இழுத்துக் கொண்டு வந்தது போதாதா? என் தலைவிதி; எனக்குப் பெண்ணாகப் பிறந்தவள் இப்படிப் புத்திக்கெட்டுப் போனால் அதற்கு நீங்களெல்லாம் என்ன செய்வீர்கள்; இன்னும் இது போதாதென்று உன் வீட்டில் வேறு வந்து உன் தலையில் என் கவலையையும் சுமக்க வைக்க வேண்டுமென்கிறாயா? என்னைப் பற்றி உனக்குப் பயமே வேண்டாம் பூரணி! இந்த அசட்டுப் பெண்ணுக்காக இசகு பிசகாக நான் எதுவும் செய்து கொண்டு விடமாட்டேன். அன்றொரு நாள் நீ என்னை முதன்முதலாகச் சந்தித்த போது பெண்கள் மாறுபட்ட சூழ்நிலைகளிலும் பழகி இன்றைய நவீன நாகரிகங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தி வாதாடினேன். நீ ஒப்புக்கொள்ளவில்லை. அந்தக் கருத்தை கடைசி வரை வன்மையாக மறுத்தாய். அதன் உண்மை இன்று எனக்குப் புரிகிறது பூரணி." "பழைய கதையை எல்லாம் எதற்கம்மா இப்போது கிளப்புகிறீர்கள்? நடக்க வேண்டியதைக் கவனிக்கலாம். உங்களுக்கு ஆறுதலாக இருக்குமே என்பதற்காகத்தான் என்னோடு வருமாறு அழைக்கிறேன்." "அப்படிச் செய்வதற்கில்லை பூரணி! செல்லத்தை வீட்டில் தனியாக விட்டிருக்கிறேன். சமையற்காரி துணைக்குப் படுத்துக் கொண்டாளோ இல்லையோ? நேரமானாலும் பரவாயில்லை. உன்னை வீட்டில் கொண்டுபோய் விட்ட பின் நான் திரும்பி விடுகிறேன்" என்று பிடிவாதமாக மறுத்துவிட்டாள் மங்களேஸ்வரி அம்மாள். தங்கை மங்கையர்க்கரசியையும், தம்பி சம்பந்தனையும், கமலாவின் தாயிடம் சொல்லி, அவர்கள் வீட்டில் படுக்கச் செய்துவிட்டுத் தன் வீட்டைப் பூட்டிக் கொண்டு வந்திருந்தாள் பூரணி. இனி இந்நேரத்துக்கு மேல் திருப்பரங்குன்றம் போனால் கமலாவின் வீட்டுக்குப் போய் குழந்தைகளை எழுப்பி தன் வீட்டுக்கு அழைத்துப் போக முடியாது. இரண்டுங்கெட்ட நேரத்தில் அவர்கள் வீட்டில் போய் கதவைத் தட்டித் தூக்கத்தைக் கெடுப்பது நன்றாக இராது. அவள் மட்டும் தனியாக வீட்டில் போய்ப் படுத்துக் கொள்வதும் இயலாது. அந்த அம்மாளைத் திருப்பரங்குன்றத்துக்கு அழைப்பதற்குப் பதிலாகத் தானே அந்த அம்மாளோடு மதுரையில் தங்கிவிட்டால் என்ன என்று நினைத்துத் தயங்கியது பூரணியின் உள்ளம். "என்னைக் கொண்டு போய்விடுகிற சிரமம் உங்களுக்கு வேண்டாம் அம்மா. இவ்வளவு நாழிகைக்கு மேல் நான் அங்கே போய் என்ன செய்யப்போகிறேன்? உங்களோடு உங்கள் வீட்டிலேயே இருந்துவிடுகிறேன்" என்று பூரணி தன் விருப்பத்தை வெளியிட்டபோது மங்களேஸ்வரி அம்மாள் இரட்டை மகிழ்ச்சியோடு ஒப்புக்கொண்டாள். அவர்கள் காரில் ஏறிக்கொண்டனர். வழியனுப்புவதற்காக நிற்பது போல் அரவிந்தனும் முருகானந்தமும் அச்சகத்து வாயிற்படிக்குக் கீழே நடைபாதை மேடையில் கார் அருகே நின்றனர். கார் புறப்பட இருந்தபோது முருகானந்தம் மிக அருகில் நெருங்கி "பூரணியக்கா நாளைக்குக் காலையில் நானும் அரவிந்தனும் இந்த அம்மா வீட்டுக்கு வருகிறோம். மேலும் சில விவரங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். பதற்றமடையாமல் இருக்கச் சொல்லுங்கள். எங்களால் ஆனதைச் செய்கிறோம். அநேகமாக நாளைக் காலையில் நாங்கள் வரும்போதே உங்கள் தம்பியையும் தேடிப் பிடித்துக் கூட்டிக் கொண்டு வந்து விடுவோமென்று நினைக்கிறேன். வருத்தப்படாதீர்கள். தைரியமாக இருங்கள்" என்றான். அவன் கூறியதைக் கேட்ட மங்களேஸ்வரி அம்மாள், "இதென்ன பூரணி? உன் தம்பியைப் பற்றி இவர் என்னவோ சொல்லுகிறாரே, அவன் எங்கே போய்விட்டான்?" என்று திகைப்போடு வியந்து வினவினாள். அந்த அம்மாள் அகாலத்தில் தன்னைத் தேடிக் கொண்டு திருப்பரங்குன்றம் வந்து வசந்தா காணாமற் போய் விட்ட செய்தியைத் தெரிவித்தபோது தன் தம்பி திருநாவுக்கரசு பற்றிச் சொல்வதற்குத் தோன்றவேயில்லை பூரணிக்கு. பெரிய துன்பத்தோடு பரபரப்படைந்து ஓடி வந்திருக்கிறவர்களிடம் சிறிய துன்பத்தைச் சொல்லி தன் வருத்தத்தில் அவர்களும் பங்கு கொள்ளச் செய்ய வேண்டாமே என்றுதான் அவள் சொல்லாமல் இருந்து விட்டாள். தனக்குச் சமயம் நேர்ந்த போதெல்லாம் உதவியிருக்கும் அந்தத் தாய்க்குத் தான் ஆறுதல் சொல்லி உதவி பெண்ணைத் தேடிக் கண்டுபிடித்துக் கொடுக்க வேண்டிய சமயத்தில் தன் துன்பத்திற்கு ஆறுதல் தேட விரும்பவில்லை அவள். வசந்தாவைத் தேடிக் கண்டுபிடித்துக் கொடுக்க அரவிந்தனின் உதவியை நாடலாம் என்றுதான் அந்த அம்மாளையும் அழைத்துக் கொண்டு உடனே அச்சகத்துக்கு வந்தாள் அவள். நல்லவேளையாக அந்த நேரத்துக்கு முருகானந்தம் அங்கு இருக்கவே அவளுடைய வேலை எளிதாகப் போயிற்று. இப்போது முருகானந்தம் கூறியதிலிருந்து அந்த அம்மாளே ஏதோ புரிந்து கொண்டு தம்பியைப் பற்றிக் கேட்கிறாள். வலுவில் கேட்கும்போது எப்படிச் சொல்லாமல் இருப்பது? அச்சகத்து வாயிலிருந்து புறப்பட்ட கார் தானப்ப முதலித் தெருவில் அந்த அம்மாள் வீட்டு வாயிலில் போய் நிற்பதற்குள் சில விநாடிகளில் தம்பி திருநாவுக்கரசின் நடத்தை மாறுதல்களைப் பற்றிச் சுருக்கமாகச் சொல்லி முடித்தாள். பூரணியையும் மங்களேஸ்வரி அம்மாளையும் அனுப்பிவிட்டு உள்ளே திரும்பிய அரவிந்தனும் முருகானந்தமும் சிறிது நேரம் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வதற்குச் செய்தி ஒன்றுமே இல்லாதது போல் வீற்றிருந்தனர். இந்த அமைதியைக் கலைத்துக்கொண்டு அரவிந்தன் கூறலானான். "உனக்கு இன்னும் ஒரு புதிய செய்தி சொல்லப் போகிறேன், முருகானந்தம். ஒரு மணி நேரத்துக்கு முன்னால் இந்த அச்சகமும் இதில் நிறைந்துள்ள அறிவுச் செல்வங்களும் தீப்பிடித்து எரிவதற்கும், அழிவதற்கும் ஏற்பாடு நடந்ததென்று சொன்னால் இப்போது நீ நம்புவாயா?" முருகானந்தத்துக்கு நன்றாக விளங்கும்படி பின்புறம் அவனைக் கூட்டிக்கொண்டு போய்க் காட்டி எல்லாவற்றையும் கூறினான் அரவிந்தன். "பாவி! இவ்வளவு கெட்ட எண்ணத்தோடு வந்தவனை எப்படியப்பா தப்பிப் போகவிட்டாய்? நல்ல சமயத்தில் நான் இல்லாமற் போய்விட்டேனே! ஆளைப் பிடித்துச் சுவரிலேயே அறைந்து கொன்றிருப்பேன். சொப்பனத்தில் கூட இனி இந்த மாதிரி கெட்ட வேலை செய்ய வரும் துணிவு அவனுக்கு உண்டாகாமல் பண்ணியிருப்பேனே" என்று கொதிப்படைந்து கூறினான் முருகானந்தம். அதைக் கேட்டு அரவிந்தன் சிரித்தான். "ஆளைப் பிடித்துக் கட்டி வைத்து உதைத்த பின் இம்மாதிரிக் கெட்ட செயல் செய்யும் துணிவு குன்றுவதற்குப் பதிலாக அதிகமாகிவிட்டால் என்ன செய்வாய் முருகானந்தம்? கையில் சிராய்ந்து இரத்தம் வருகிறதே என்பதற்காகக் கையைக் குத்தி நுனியில் கொண்டுபோய்த் துடைத்தால் இரத்தம் குறையுமா அப்பா? கீழ்மைக்குணம் என்பது உள்ளிப் பூண்டைப் போன்றது. கற்பூரத்தினால் பாத்திகட்டி, கஸ்தூரியை எருவாகப் போட்டுப் பன்னீரை தண்ணீராகப் பாய்ச்சினாலும் உள்ளிப்பூண்டு விளைகிறபோது அதன் பழைய நாற்றம்தான் வரும். கள்ளன் பெரியவனா? காப்பான் பெரியவனா? என்று பழமொழி உண்டு. நாளைக்கே முதலாளியிடம் சொல்லி ஓட்டலுக்கும் இதற்கும் நடுவிலிருக்கிற சந்துக்கு ஒரு கதவோ சுவரோ போட ஏற்பாடு செய்யப் போகிறேன். நாம் செய்ய முடிந்தது அதுதான்..." "யாரோ வேண்டுமென்று சொல்லி ஏவிவிட்டுத்தான் இது நடந்திருக்கிறது அரவிந்தன்! நீ சொல்லுகிறபடி பார்த்தால் குப்பை அள்ள வருகிற தோட்டியும் ஓட்டல் வேலையாட்களையும் தவிர வேறு ஆட்கள் கொல்லைப் பக்கம் புழங்குவதில்லை என்று தெரிகிறது. ஓட்டல் ஆட்கள் இந்த வம்புக்கு வர மாட்டார்கள். தோட்டியே காசுக்கு ஆசைப்பட்டு இதைச் செய்ய ஒப்புக் கொண்டிருக்கலாம். எதற்கும் காலையிலே விசாரித்து விடலாம்." "விசாரித்துத் தெரியப்போவதை நான் இப்போதே சொல்லி விடுகிறேன். கேட்டுக்கொள். எங்களுக்கு இப்போது ஏற்பட்டிருக்கும் ஒரே பகைவர், அந்தப் புதுமண்டபத்துப் புத்தகக் கடைக்காரர்தான். அந்த நாளிலிருந்து தொழில் முறையில் மீனாட்சி அச்சகத்துக்கும் அவருக்கும் புகைச்சல் உண்டு. எங்கள் முதலாளியை அவருக்குக் கட்டோடுப் பிடிக்காது. இப்போது பேராசிரியரின் நூல்களை நாங்கள் அவருடைய கொடுங்கோன்மைப் பிடியிலிருந்து விடுவித்து நியாயமாக வெளியிடத் தொடங்கியிருப்பதால் பழைய புகைச்சல் வளர்ந்திருக்கிறது. எதையும் செய்வதற்குக் கூசாத மனிதர் அவர். இருக்கட்டுமே! நாம் முறையான வழியிலேயே நேர்மையாகப் போகலாம். ஒரு நாள் அவரையே சந்தித்து இப்படியெல்லாம் செய்யலாமா? என்று நானே நியாயத்தைக் கேட்கத்தானே போகிறேன்." "நியாயத்தைக் கேட்கிற ஆளா அவர்? மறுபடியும் அவரிடம் அறை வாங்கிக் கொண்டு வராதே. இந்தத் தடவை நீ அவருக்கு அறை கொடுத்துவிட்டு வா. அதற்குப் பலம் இல்லையானால் அவரிடம் நியாயம் கேட்கப் போகிறபோது என்னையும் உடன் அழைத்துப் போ. நான் கொடுக்கிறேன் அவனுக்கு! நியாயமாம், நியாயம்! இந்தத் தலைமுறையில் நியாயத்தைப் பற்றிப் பேசுவதுதான் நாகரிகம் அப்பனே. கடைப்பிடிப்பது அநாகரிகம்!" கழுத்திலிருந்து கைக்குட்டையை உருவி முழங்கை மணிக்கட்டில் இறுக்கிச் சுற்றியவாறே மேலும் பேசினான் முருகானந்தம். "அந்தப் புதுமண்டபத்து ஆளிடமிருந்து பேராசிரியரின் புத்தகங்களைக் காப்பாற்றியதற்காக உனக்கும், உங்கள் முதலாளிக்கும் எவ்வளவு நன்றி கூறினாலும் தகும் அரவிந்தன். பத்து பன்னிரண்டு நாட்களுக்கு முன் என் சிநேகிதன் ஒருத்தன் அந்த புதுமண்டபத்துக் கடையிலிருந்து அவர்கள் பதிப்பித்து வெளியிட்ட புத்தகம் ஒன்று வாங்கி வந்தான். தனிப்பாடல் திரட்டு என்கிற அந்தப் புத்தகத்தின் பெயர் தலைப்பிலிருந்து உள்ளே இறுதிப் பக்கங்கள் வரை எல்லா இடங்களிலும் தனிப்பாடல் திருட்டு என்று அச்சிடப்பட்டிருந்தது. அவர்கள் வெளியிட்டிருக்கும் ஆயிரக்கணக்கான பிரதிகளிலும் இந்தத் தவறு இருக்கத்தானே செய்யும்? தமிழுக்கு எத்தனை பெரிய பாவம் இது?" "தமிழுக்கு பாவம் ஏது? எல்லா பாவமும் அவருக்குத்தான். ஒருவகையில் அவர் வெளியிட்டிருக்கும் புத்தகத்திற்குத் தனிப்பாடல் திருட்டு என்று பெயர் இருப்பதே பொருத்தம் தான். அவர் சொந்தமான ஓலைச்சுவடிகளைக் கொண்டு ஒப்பு நோக்கி அதைப் பதிப்பிக்கவில்லை முருகானந்தம், வேறு ஒருவர் சிரமப்பட்டுப் பல ஆண்டுகளாக முயன்று பதிப்பித்த தனிப்பாடல் திரட்டு புத்தகத்தை அப்படியே ஒரு மாதத்தில் காப்பியடித்துத் திருடி வெளியிட்டு விட்டார். மலிவுப் பதிப்பு என்று பெயராம்! எது மலிவோ? பிழையோ? அல்லது விலையோ? தெரியவில்லை. அதனால் அவர் செய்த காரியத்துக்கு ஏற்பத்தான் புத்தகத்தின் பெயரும் வாய்த்திருக்கிறது" என்று குறும்பு பேசினான் அரவிந்தன். அன்று அவர்கள் இருவரும் கொல்லைப் பக்கத்துத் தாழ்வாரத்தின் அருகிலேயே படுத்துக் கொண்டார்கள். அவர்கள் படுக்கும்போது மணி ஒன்றரை இருக்கும். களைப்பும் அலுப்பும் உடல் தாங்காமல் நிறைந்திருந்தாலும் மனக்குழப்பத்தால் தூக்கம் உடனே அணுக மறுத்தது. படுக்கையில் சாய்ந்து முழங்கையை முட்டுக் கொடுத்து தலையை நிமிர்த்திக் கொண்டு முருகானந்தம் கேட்டான், "பூரணியக்காவுக்கும் இந்த அம்மாளுக்கும் என்ன உறவு? இந்த அம்மாள் யார்?" மங்களேஸ்வரி அம்மாளைப் பற்றி பூரணியிடமிருந்து, தான் தெரிந்து கொண்டிருந்தவற்றை முருகானந்தத்திற்குச் சொன்னான் அரவிந்தன். "இவ்வளவு நல்ல குடும்பத்தில் பிறந்த பெண்ணுக்கு இப்படியா புத்தி போகவேண்டும்? இந்தக் காலத்தில் பள்ளிக் கூடங்களிலும், கல்லூரிகளிலும் படிக்கிற பையன்களும், பெண்களும் தவறு செய்யக் கூசுகிற தயக்கத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறார்களே அரவிந்தன், இதற்கு என்ன காரணமென்று உன்னால் சொல்ல முடியுமா? தமிழ்ப் பண்பாட்டின் உருவாய் வாழ்ந்தவருக்குப் பிள்ளையாய் பிறந்து தமிழ்ப் பெண்மையின் இலட்சியம் போல் நம்மிடையே வாழும் பூரணியக்காவின் கண்காணிப்பில் வளரும் பையன் இப்படி ஆகிவிட்டானே! செல்வமும், செல்வாக்கும் நற்பண்பும் உள்ள மங்களேஸ்வரி அம்மாளின் பெண் வீட்டுக்குத் தெரியாமல் பணத்தை எடுத்துக் கொண்டு ஓடியிருக்கிறாளே! குருத்துவிடும் வயதிலேயே கெட்டுப் போகத்துணியும் இத்துணிச்சல் இவர்களுக்கு எங்கே கிடைத்தது?" அரவிந்தன் நெடுமூச்சு விட்டான். முருகானந்தத்தின் இந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்வதெனச் சிந்தித்தான். சிறிது நேர அமைதிக்குப் பின் அவன் முருகானந்தத்தை நோக்கிச் சொல்லலானான்: "வழி தவறுகிற இந்தத் துணிச்சல் எங்கிருந்து பழகத் தொடங்குகிறது என்பதுதான் எனக்கும் விளங்கவில்லை. இன்னும் சிறிது காலத்துக்குக் கணக்கும், வரலாறும், விஞ்ஞானமும் கற்றுக் கொடுப்பதை நிறுத்திவிட்டு ஒழுக்கத்தையும், கட்டுப்பாட்டையும் கற்றுக் கொடுக்கலாமா என்று கூடத் தோன்றுகிறது. சுதந்திரமும் உரிமைகளும் பெருகுவதற்கு முன்னால் படிக்காதவர்களில் சிலர் அறியாமையால் தவறு செய்து கொண்டிருந்தார்கள். இப்போதோ படித்தவர்கள், தவறுகளை அவை தவறுகளென அறிந்து கொண்டே செய்கிறார்கள். கீழ்நாட்டு வாழ்வின் அசௌகரியங்கள் நிறைந்த ஏழைக் குடும்பங்களிலிருந்து படிக்க வரும் மாணவர்களுக்கு மேல்நாட்டு வாழ்வின் சௌகரியங்களையும் ஆடம்பரங்களையும் கற்பித்து அனுப்பிவிடுகிறார்கள். வட்டமான டப்பாவுக்கு சதுரமான மூடி போடுகிற மாதிரி ஏழை நாட்டில் ஆடம்பரக் கனவுகள் சிறிதும் பொருந்தமாட்டேனென்கின்றன." "நீ சொல்வது உண்மைதான் அரவிந்தன். ஒழுக்கத்தைப் பற்றிய ஆர்வம் இளைஞர்களிடையே குன்றிவிட்டது. ஆனால் அதற்கு இளைஞர்கள் மட்டும்தான் காரணமென்று நினைக்கிறாயா?" இதற்கு அரவிந்தன் பொருத்தமாகவும், நன்றாகவும் பதில் சொன்னான். இப்படிக் கேள்வியும் பதிலுமாகச் சிறிது நேரம் விவாதம் செய்துவிட்டு அவர்கள் உறங்கிப் போனார்கள். காலையில் அரவிந்தன் விழிக்கும்போது கொல்லையில் முருகானந்தம் யாருடனோ இரைந்து கூப்பாடு போட்டுக் கொண்டிருந்தான். போய்ப் பார்த்தபோது பின்புறம் குப்பை அள்ள வருகிற தோட்டியை அவன் விரட்டிக் கொண்டிருப்பது தெரிந்தது. தோட்டி தனக்கு ஒரு பாவமும் தெரியாதென்று கெஞ்சிக் கதறிக் கொண்டிருந்தான். முருகானந்தம் தனக்கு இருந்த கோபத்தில் தோட்டியைக் கீழே தள்ளி மிதித்துவிடுவான் போலிருந்தது. நல்ல வேளையாக அந்தச் சமயத்தில் அரவிந்தன் எழுந்து போய்த் தோட்டிக்கு அடியும் உதையும் விழாமல் காப்பாற்றினான். "அவன் என்னப்பா செய்வான்? செய்திருந்தாலும் உன்னிடம் நான் செய்தேன் என்று சொல்லிக் கொண்டிருப்பானா? நாம் ஒழுங்காகச் சுவரைப் பெரிதாக்கிச் சந்து வழிக்குக் கதவும் போட்டுவிட்டால் யாரும் நுழைய முடியாது அப்புறம்" என்று முருகானந்தத்தைச் சமாதானப்படுத்திக் கூட்டிக் கொண்டு வந்தான் அரவிந்தன். "மயிலே மயிலே இறகு போடு - என்றால் போடாது அரவிந்தன். கன்னத்தில் கொடுத்தால் உண்மையைக் கக்கியிருப்பான். நீ எழுந்திருந்து வந்து காரியத்தைக் கெடுத்து விட்டாய். போய்த் தொலையட்டும். அந்தப் பெண்ணைக் கண்டுபிடிக்கிற காரியத்தையாவது இன்று காலையிலிருந்து தொடங்கலாம்" என்று அன்று செய்ய வேண்டிய வேலையை நினைவுபடுத்தினான் முருகானந்தம். அரவிந்தன் மேசை இழுப்பறையைத் திறந்து வசந்தாவின் படத்தை எடுத்து முருகானந்தத்திடம் தந்தான். அந்தப் படத்தை வாங்கிப் பார்த்தவுடன் முருகானந்தம் வியப்பால் துள்ளினான் அவன் முகம் அகன்று மலர்ந்தது. "அடி சக்கை! இப்படியல்லவா வகையாக மாட்டிக் கொள்ள வேண்டும்" என்ற சொற்கள் அவன் வாயிலிருந்து வெளியாயின. அதைக்கேட்டு அரவிந்தன் ஒன்றும் புரியாமல் திகைத்தான். "என்னடா முருகானந்தம்? இந்தப் படத்திலிருக்கிற பெண்ணை இதற்கு முன்பே உனக்குத் தெரியுமா?" "பெண்ணைத் தெரியாது. இந்தப் படத்தை நன்றாகத் தெரியும். இதோ பார் வேடிக்கை..." என்று சொல்லிக் கொண்டே ஒரு மணிபர்ஸை எடுத்துப் பிரித்தான். அதில் சிறிய அளவில் எடுக்கப்பட்ட வசந்தாவின் புகைப்படங்கள் இரண்டும் அவள் கையொப்பத்தோடு கூடிய கடிதம் ஒன்றும், மூன்று நூறு ரூபாய் நோட்டுகளும் இருந்தன. மணிபர்ஸின் மேற்பாகம் வெளியே தெரிகிறார் போன்ற 'மைக்கா' உறைக்குள் ஓர் ஆண் படமும் இருந்தது. மணிபர்ஸின் சொந்தக்காரனுடைய படமாக இருக்க வேண்டும் இது. கடிதத்தைப் பிரித்து அரவிந்தனுக்குப் படித்துக் காட்டினான் முருகானந்தம்.
"அன்புடையீர் வணக்கம். உங்கள் விண்ணப்பத் தாளும் நிபந்தனைகள் அடங்கிய விவரமான கடிதமும் கிடைத்தன. புதிய முகங்களைச் சினிமாவில் அறிமுகப்படுத்த நடிப்புக் கலையை வளர்க்கும் உங்கள் பண்பைப் பாராட்டுகிறேன். என்னுடைய ஆர்வத்தை நீங்கள் புரிந்து கொண்டதற்கு நன்றி. பள்ளிக்கூட நாட்களிலும், கல்லூரி உடை அழகுப் போட்டிகளிலும் பலமுறை நான் பரிசு வாங்கியிருக்கிறேன். எனக்குச் சினிமாவில் நடிக்க வேண்டுமென்ற தணியாத ஆசை. என்னுடைய புகைப்படத்தைப் பார்த்துவிட்டு முதல் படத்திலேயே என்னைக் கதாநாயகியாக நடிக்க வைக்கலாமென்று எழுதியிருக்கிறீர்கள். உங்களுக்கு நான் என்ன கைமாறு செய்யப் போகிறேன். நிபந்தனையில் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் தொகையை எப்போது வேண்டுமானாலும் தருவதற்குத் தயாராயிருக்கிறேன். நீங்கள் எப்போது இங்கே வருவதாயிருந்தாலும் வருகிற சேதியும், தங்கும் இடமும் எழுதுங்கள். கவரிலேயே எழுதுங்கள். எது எழுதினாலும் தயவு செய்து கார்டில் எழுத வேண்டாம். நான் உங்களைச் சந்திக்கிறேன்.
தங்கள், வசந்தா. கேட்டுவிட்டு ஏளனமாக நகைத்தான் அரவிந்தன். "நாலு எழுத்து படித்து விவரம் தெரிந்த பெண்களுக்கு இன்று இருக்கிற சினிமாப் பித்துக்கு அளவே இல்லை. ஒவ்வோர் இளம் பெண்ணும் நிலைக்கண்ணாடியில் தன் முகத்தைப் பார்க்கும் போது தன்னை ஒரு நடிகையாக, அல்லது நடிகையைப் போல் நினைத்துக் கொண்டு தான் பார்க்கிறாள். அந்தக் கலையில் சேர்ந்தவர்களின் நடிப்பைப் பார்த்து ரசிப்பதோடு திருப்தி அடையலாம். ஆனால் எல்லோரும் கவர்ச்சி நிறைந்த அந்தக் கலைப்பள்ளத்தில் கண்ணை மூடிக்கொண்டு குதித்துவிடத் துடிக்கிறார்களே! இந்த மோகம் கன்றிய வெறிக்கு மருந்தை எங்கே தேடுவது?" "மருந்தை அப்புறம் தேடலாம்! முதலில் அந்த ஆளைத் தேடிக் கைக்கு விலங்கு மாட்டி உள்ளே தள்ளவேண்டும். எல்லாம் புத்திசாலித்தனமாகச் செய்த பயல், இந்த மணிபர்ஸ்ஸை மட்டும் என் கடையில் மறந்து வைத்துவிட்டுப் போய்விட்டான். நேற்று நான் கடை பூட்டுமுன், தற்செயலாக இதைப் பிரித்துப் பார்த்த போது இந்தப் படம் கண்ணில் பட்டது. அது நினைவிருந்ததனால் தான் நீ கொடுத்த படத்தைப் பார்த்த அளவில் கண்டுபிடித்தேன்" என்று முருகானந்தம் கூறியதைக் கேட்டு, "அது சரி தம்பி! படத்தையும் மணிபர்ஸையும் வைத்துக் கொண்டு ஆளை எப்படி நீ கண்டுபிடிப்பாய்? கடிதம் உறையின்றி இருக்கிறதே? முகவரியும் எழுதப்பெறவில்லையே" என்று சந்தேகத்தை வெளியிட்டான் அரவிந்தன். "பயல் இன்னும் நாலைந்து மாதங்களாவது நான் தைத்துக் கொடுத்த உடையைப் போட்டுக் கொண்டுதானே திரிய வேண்டும். போட்டோ வேறு இருக்கிறது நம்மிடம். கண்டுபிடித்துவிடலாம் பயப்படாதே" என்று முருகானந்தம் அரவிந்தனுக்குச் சொல்லிக் கொண்டிருந்த போது பூரணி உள்ளே வந்தாள். அவள் கையில் ஒரு தந்தி உறை இருந்தது. உறையிலிருந்து தந்தியை எடுத்து அவள் அரவிந்தனிடம் தந்தாள். தந்தி விடியற்காலம் நான்கு மணிக்குத் திருச்சியிலிருந்து கொடுக்கப்பட்டிருந்தது. 'திரும்பி வர வழிச் செலவுக்குப் பணமில்லை. திருச்சி இரயில் நிலையத்தில் இருக்கிறேன். வந்து அழைத்துப் போகவும். விவரம் நேரில் - வசந்தா." தந்தி மங்களேஸ்வரி அம்மாள் பேருக்கு வந்திருந்தது. அரவிந்தன் படித்துவிட்டு முருகானந்தத்திடம் கொடுத்தான். குறிஞ்சி மலர் : சிறப்புரை
முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
கனவு நிறைகிறது
|
எட்டுத் தொகை குறுந்தொகை பதிற்றுப் பத்து பரிபாடல் கலித்தொகை அகநானூறு ஐங்குறு நூறு (உரையுடன்) பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை பொருநர் ஆற்றுப்படை சிறுபாண் ஆற்றுப்படை பெரும்பாண் ஆற்றுப்படை முல்லைப்பாட்டு மதுரைக் காஞ்சி நெடுநல்வாடை குறிஞ்சிப் பாட்டு பட்டினப்பாலை மலைபடுகடாம் பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - PDF Download இனியவை நாற்பது (உரையுடன்) - PDF Download கார் நாற்பது (உரையுடன்) - PDF Download களவழி நாற்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை எழுபது (உரையுடன்) - PDF Download திணைமொழி ஐம்பது (உரையுடன்) - PDF Download கைந்நிலை (உரையுடன்) - PDF Download திருக்குறள் (உரையுடன்) நாலடியார் (உரையுடன்) நான்மணிக்கடிகை (உரையுடன்) - PDF Download ஆசாரக்கோவை (உரையுடன்) - PDF Download திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) பழமொழி நானூறு (உரையுடன்) சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - PDF Download முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - PDF Download ஏலாதி (உரையுடன்) - PDF Download திரிகடுகம் (உரையுடன்) - PDF Download ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம் மணிமேகலை வளையாபதி குண்டலகேசி சீவக சிந்தாமணி ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் நாககுமார காவியம் - PDF Download யசோதர காவியம் - PDF Download வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் திருப்பதி ஏழுமலை வெண்பா - PDF Download மனோதிருப்தி - PDF Download நான் தொழும் தெய்வம் - PDF Download திருமலை தெரிசனப்பத்து - PDF Download தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - PDF Download திருப்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - PDF Download திருமால் வெண்பா - PDF Download சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை திருவிசைப்பா திருமந்திரம் திருவாசகம் திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை சொக்கநாத வெண்பா - PDF Download சொக்கநாத கலித்துறை - PDF Download போற்றிப் பஃறொடை - PDF Download திருநெல்லையந்தாதி - PDF Download கல்லாடம் - PDF Download திருவெம்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - PDF Download திருக்கைலாய ஞான உலா - PDF Download பிக்ஷாடன நவமணி மாலை - PDF Download இட்டலிங்க நெடுங்கழிநெடில் - PDF Download இட்டலிங்க குறுங்கழிநெடில் - PDF Download மதுரைச் சொக்கநாதருலா - PDF Download இட்டலிங்க நிரஞ்சன மாலை - PDF Download இட்டலிங்க கைத்தல மாலை - PDF Download இட்டலிங்க அபிடேக மாலை - PDF Download சிவநாம மகிமை - PDF Download திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - PDF Download சிதம்பர வெண்பா - PDF Download மதுரை மாலை - PDF Download அருணாசல அட்சரமாலை - PDF Download மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - PDF Download திருவுந்தியார் - PDF Download உண்மை விளக்கம் - PDF Download திருவருட்பயன் - PDF Download வினா வெண்பா - PDF Download இருபா இருபது - PDF Download கொடிக்கவி - PDF Download சிவப்பிரகாசம் - PDF Download பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - PDF Download சன்மார்க்க சித்தியார் - PDF Download சிவாச்சிரமத் தெளிவு - PDF Download சித்தாந்த சிகாமணி - PDF Download உபாயநிட்டை வெண்பா - PDF Download உபதேச வெண்பா - PDF Download அதிசய மாலை - PDF Download நமச்சிவாய மாலை - PDF Download நிட்டை விளக்கம் - PDF Download சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - PDF Download நெஞ்சொடு புலம்பல் - PDF Download ஞானம் - 100 - PDF Download நெஞ்சறி விளக்கம் - PDF Download பூரண மாலை - PDF Download முதல்வன் முறையீடு - PDF Download மெய்ஞ்ஞானப் புலம்பல் - PDF Download பாம்பாட்டி சித்தர் பாடல் - PDF Download கம்பர் கம்பராமாயணம் ஏரெழுபது சடகோபர் அந்தாதி சரஸ்வதி அந்தாதி - PDF Download சிலையெழுபது திருக்கை வழக்கம் ஔவையார் ஆத்திசூடி - PDF Download கொன்றை வேந்தன் - PDF Download மூதுரை - PDF Download நல்வழி - PDF Download குறள் மூலம் - PDF Download விநாயகர் அகவல் - PDF Download ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - PDF Download கந்தர் கலிவெண்பா - PDF Download சகலகலாவல்லிமாலை - PDF Download திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் திருக்குறும்பலாப்பதிகம் திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி திருக்குற்றால மாலை - PDF Download திருக்குற்றால ஊடல் - PDF Download ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை முருக பக்தி நூல்கள் கந்தர் அந்தாதி - PDF Download கந்தர் அலங்காரம் - PDF Download கந்தர் அனுபூதி - PDF Download சண்முக கவசம் - PDF Download திருப்புகழ் பகை கடிதல் - PDF Download மயில் விருத்தம் - PDF Download வேல் விருத்தம் - PDF Download திருவகுப்பு - PDF Download சேவல் விருத்தம் - PDF Download நல்லை வெண்பா - PDF Download நீதி நூல்கள் நன்னெறி - PDF Download உலக நீதி - PDF Download வெற்றி வேற்கை - PDF Download அறநெறிச்சாரம் - PDF Download இரங்கேச வெண்பா - PDF Download சோமேசர் முதுமொழி வெண்பா - PDF Download விவேக சிந்தாமணி - PDF Download ஆத்திசூடி வெண்பா - PDF Download நீதி வெண்பா - PDF Download நன்மதி வெண்பா - PDF Download அருங்கலச்செப்பு - PDF Download முதுமொழிமேல் வைப்பு - PDF Download இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை நேமிநாதம் - PDF Download நவநீதப் பாட்டியல் - PDF Download நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - PDF Download சிலேடை நூல்கள் சிங்கைச் சிலேடை வெண்பா - PDF Download அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - PDF Download கலைசைச் சிலேடை வெண்பா - PDF Download வண்ணைச் சிலேடை வெண்பா - PDF Download நெல்லைச் சிலேடை வெண்பா - PDF Download வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - PDF Download உலா நூல்கள் மருத வரை உலா - PDF Download மூவருலா - PDF Download தேவை உலா - PDF Download குலசை உலா - PDF Download கடம்பர்கோயில் உலா - PDF Download திரு ஆனைக்கா உலா - PDF Download வாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - PDF Download ஏகாம்பரநாதர் உலா - PDF Download குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - PDF Download அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - PDF Download திருவருணை அந்தாதி - PDF Download காழியந்தாதி - PDF Download திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - PDF Download திருப்புல்லாணி யமக வந்தாதி - PDF Download திருமயிலை யமக அந்தாதி - PDF Download திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - PDF Download துறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - PDF Download திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - PDF Download அருணகிரி அந்தாதி - PDF Download கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - PDF Download திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - PDF Download இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - PDF Download தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - PDF Download பழனி இரட்டைமணி மாலை - PDF Download கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - PDF Download குலசை உலா - PDF Download திருவிடைமருதூர் உலா - PDF Download பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - PDF Download நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - PDF Download விநாயகர் நான்மணிமாலை - PDF Download தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - PDF Download நெஞ்சு விடு தூது - PDF Download மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF Download மான் விடு தூது - PDF Download திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - PDF Download திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - PDF Download மேகவிடு தூது - PDF Download கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - PDF Download சிதம்பர மும்மணிக்கோவை - PDF Download பண்டார மும்மணிக் கோவை - PDF Download சீகாழிக் கோவை - PDF Download பாண்டிக் கோவை - PDF Download கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் மதுரைக் கலம்பகம் காசிக் கலம்பகம் - PDF Download புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - PDF Download சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - PDF Download கொங்கு மண்டல சதகம் - PDF Download பாண்டிமண்டலச் சதகம் - PDF Download சோழ மண்டல சதகம் - PDF Download குமரேச சதகம் - PDF Download தண்டலையார் சதகம் - PDF Download திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - PDF Download கதிரேச சதகம் - PDF Download கோகுல சதகம் - PDF Download வட வேங்கட நாராயண சதகம் - PDF Download அருணாசல சதகம் - PDF Download குருநாத சதகம் - PDF Download பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு முத்தொள்ளாயிரம் காவடிச் சிந்து நளவெண்பா ஆன்மீகம் தினசரி தியானம் |