குறிஞ்சி மலர் - Kurinji Malar - தீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் - Deepam Naa. Parthasarathy Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com



24

     பால்வாய் பிறைப்பிள்ளை ஒக்கலை கொண்டுபகல் இழந்த
     மேம்பால் திசைப்பெண் புலம்பறுமாலை
- திருவிருத்தம்

     இரண்டு கைகளாலும் பிடித்து இழுத்துக் கொண்டிருக்கும் போது ரப்பர் காட்டுகிற நீளம் அதனுடைய இயல்பான நீளமன்று. இழுத்துக் கொண்டிருப்பவனுடைய கை உண்டாக்கிக் காட்டும் செயற்கையான நீளம் அது! அதைப் போல் இயல்பாகவே தங்களிடம் உள்ள நேர்மைக் குறைவால், அதைத் தாங்கள் பிறரிடம் காட்டும்போது பெரிதாக்கிக் காட்டி வாழ்கிறவர்கள் சிலர் சமூகத்தில் உண்டு. அகவாழ்வில் கொடுமையே உருவானவராய்த் தெரியும் 'பர்மாக்காரர்' நகரில் புகழும் பதவியும் பெற்று, நேர்மையானவர் போல் காட்டிக் கொள்வது இந்த விதத்தில் தான் என்பது என்று அரவிந்தனுக்கு உள்ளங்கை நெல்லிக்கனி போல் விளங்கிவிட்டது.

     பிறரை வெறுப்பதற்கும், கடுமையாகப் பகைத்துக் கொண்டு அடி, உதைகளில் இறங்குவதற்குங் கூட ஒருவகை முரட்டுச் சாமர்த்தியம் வேண்டும். ஆனால் அன்பின் நெகிழ்ச்சியும், கலைகளின் மென்மைப் பண்பும் கலந்த மனமுள்ளவர்களுக்கு இந்த முரட்டுத்தனம் வராது. அரவிந்தன் சிறு வயதிலிருந்தே இந்த முரட்டுத்தனம் உண்டாகாமல் வளர்ந்தவன்.

     முருகானந்தமோ இந்த முரட்டுத்தனத்தையே வீரமாக்கிக் கொண்டவன். பர்மாக்காரர் எஸ்டேட் மாளிகையில் அவரால் ஏவப்பட்ட முரட்டு அடியாள் தன்னை நோக்கிக் கைகளை ஓங்கிக் கொண்டு வந்தபோது அரவிந்தன் பதில் தாக்குதலுக்கும், தாக்குதலைச் சமாளிப்பதற்கும், தயாரானானே ஒழிய, அவன் மனம் முரட்டு வெறி கொள்ளவில்லை. இத்தகைய கொடுமைத் தாக்குதல்களுக்கு அந்த முரட்டு வெறி உண்டாகாவிட்டால் வெற்றியில்லை. எமகிங்கரனைப் போல் கைகளை ஓங்கிக் கொண்டு வந்த அந்த புண்ணாக்குத் தடியனிடம் மாட்டிக் கொண்டிருந்தால் அரவிந்தனால் போரிட்டுத் தப்பியிருக்க முடியாதுதான்!

     ஆனால் போரிடாமல், புண்படாமல் தப்பிக்க அருமையான சந்தர்ப்பம் வாய்த்தது அரவிந்தனுக்கு. மென்மைக் குணம் படைத்த நல்ல மனிதர்களை அந்த மென்மைக்கு ஊறு நேராமலே தெய்வ சித்தம் காப்பாற்றி விடுகிறது என்பது எத்தனை பொருத்தமான உண்மை! தெய்வ சித்தமோ அல்லது தற்செயலான சந்தர்ப்பமோ எப்படி வைத்துக் கொண்டாலும் சரி, அந்தச் சமயத்தில் அங்கே ஓர் அற்புதம் நிகழ்ந்தது. அந்த முரடன் அடித்துக் கீழே தள்ளிவிட அரவிந்தனை நெருங்கிக் கொண்டிருந்த சமயத்தில் ஒரு பெரிய கார் காம்பவுண்டுக்குள் நுழைந்து வேகமாக மாளிகை முகப்புக்கு வந்து நின்றது. கண்ணியமானவர்களாகவும், செல்வம் நிறைந்தவர்களாகவும் தோன்றிய யாரோ இரண்டு, மூன்று பேர்கள் பர்மாக்காரரை நோக்கிக் கைகூப்பிக் கொண்டே காரிலிருந்து இறங்கினார்கள்.

     அவ்வளவுதான், நாடகத்தில் காட்சி மாறுகிறாற் போல் உடனடியாக அங்கு ஒரு மாற்றம் நிகழ்ந்தது. "வரவேணும்! வரவேணும்!" என்று வாயெல்லாம் பல்லாகச் சிரித்துக் கொண்டே பர்மாக்காரரும், புதுமண்டபத்து மனிதரும் வந்தவர்களை எதிர்கொண்டழைக்க ஓடி வந்தார்கள். "பலராம்! உள்ளே போய் அம்மாவிடம் காப்பி, பலகாரத்துக்குச் சொல்லு" என்று தடியனை வேறு காரியத்துக்குத் திருப்பி விட்டார் பர்மாக்காரர். 'தன்னைப் பற்றி வந்தவர்களுக்கு முன்னால் அரவிந்தன் ஏதாவது கண்டபடி கூச்சல் போட்டு மானத்தை வாங்கிவிடப் போகிறான்' என்ற பயத்தினால் அவரே முந்திக் கொண்டார். ஒன்றுமே நடக்காதது போல் சிரித்த முகத்தோடு அவனை நோக்கி, "நீ போய்விட்டு நாளைக்கு வா தம்பி! இப்போது நேரமில்லை எனக்கு" என்றாரே பார்க்கலாம்! ஒரே விநாடியில் காட்சியை மாற்றி நடித்து விட்ட அந்தச் சாமர்த்தியத்தை எப்படி வியப்பதென்றே அரவிந்தனுக்குத் தெரியவில்லை.

     அவன் பயத்தையும், வியப்பையும், இன்னும் எண்ணற்ற உணர்ச்சிகளையும் மனத்தில் சுமந்து கொண்டே அந்தப் பெரிய தோட்டத்திலிருந்து வெளியேறிச் சாலைக்கு வந்தான். சிறிது நேரத்தில் பஸ் வந்தது. கையை நீட்டிப் பஸ்ஸை நிறுத்தி ஏறிக்கொண்டான். வெளியூரிலிருந்து மதுரை திரும்பும் பஸ் அது. வையைப் பாலத்து இறக்கத்தில் யானைக்கல்லில் இறங்கிக் கொண்டான் அரவிந்தன். இரவு மணி எட்டுக்கு மேல் ஆகியிருந்தது. சில்லறை விற்பனைக்காகப் பலாப்பழம், மாம்பழம் முதலிய பழங்களை மொத்தத்தில் குவித்து வைத்துக் கொண்டிருக்கும் 'பழக்கமிஷன் மண்டிகள்' நிறைந்த யானைக்கல் பிரதேசம் மணம் பரப்பிக் கொண்டிருந்தது. ஊரெல்லாம் பலாப்பழமும், மாம்பழமுமே நிரம்பிக் கிடப்பது போல் அந்தப் பகுதிக்கென்றே ஒருவகைப் பழமணம் சொந்தமாயிருந்தது. பலாப்பழத்தின் உடைந்த சக்கைகளும், அழுகின பழச் சிதறல்களுமாக, வீதியே பழக்கடைகளுக்கு அடையாளம் சொல்லி வழிகாட்டுவது போல ஒரு தோற்றம். அரவிந்தன் நடந்து கொண்டிருந்தான். அவன் மனம் பர்மாக்காரர் எஸ்டேட்டில் நடந்த சம்பவங்களின் அதிர்ச்சியிலிருந்து இன்னும் முழுமையாக விடுபடவில்லை. தேர்தல் காலங்களில் ஆட்களைக் கடத்திக் கொண்டு போய் ஒளித்து வைப்பது, தனியே கூட்டிச் சென்று மிரட்டி பயமுறுத்துவது போன்ற சூழ்ச்சிகள் நடைபெறுவது உண்டு என்று அரவிந்தன் கேள்விப்பட்டிருக்கிறான். அம்மாதிரிப் பயங்கரச் சூழ்ச்சிகளையும் செயல்களையும் பற்றித் தேர்தலை ஒட்டிய காலத்துச் செய்தித்தாள்களில் சில செய்திகளும் படித்திருக்கிறான். அப்போதெல்லாம் இத்தகைய நிகழ்ச்சிகள் இன்றைய உலகில் சர்வசாதாரணமாக நடைபெற இடமிருக்கிறது என்பதையே அவன் நம்பியது கிடையாது. ஒப்புக்கொண்டதும் இல்லை. ஆனால் இன்று தன்னுடைய வாழ்க்கையில் தானே இப்படி ஒரு நிகழ்ச்சிக்கு ஆளாகிவிட்டுத் தப்பி வந்திருப்பதை நினைத்தபோது அவனுக்கு உடல் புல்லரித்தது. மென்மையான பழத்துக்குள்ளே வன்மையான கொட்டை பொதிந்திருப்பது போல அன்பாலும் அறத்தாலும் அப்பாவியாக வாழ்கிறவர்களின் நடுவே கொடுமையாலும் சூழ்ச்சியாலும் வாழ முயல்கிறவர்கள் இலைமறை காய் என இருக்கிறார்கள் என்பதை இன்று அவன் நம்பினான். ஒப்புக் கொண்டான். அனுபவித்தும் உணர்ந்து விட்டான்.

     யானைக் கல்லில் இறங்கி நேர் மேற்கே செல்லுகிற சாலையில் நடந்து கொண்டிருந்த அரவிந்தன் பழைய சொக்கநாதர் கோவில் வாயில் தெற்கே திரும்பிய போது யாரோ கைதட்டிக் கூப்பிட்டார்கள். வெறும் கைத்தட்டலாக மட்டும் இருந்தால் அரவிந்தன் திரும்பிப் பார்த்திருக்க மாட்டான். கைத்தட்டலோடு "அதோ அரவிந்த மாமா போகிறாரு" என்று பழக்கமான குரல் ஒன்றும் சேர்ந்து ஒலிக்கவே அவன் திரும்பிப் பார்த்தான். பூரணியின் தங்கை மங்கையர்க்கரசி, மங்களேஸ்வரி அம்மாள், செல்லம், சம்பந்தன் எல்லோரும் கோயிலின் படிக்கட்டில் நின்று கொண்டிருந்தார்கள். கீழே வீதியில் அந்த அம்மாளுடைய கார் நின்று கொண்டிருந்தது. சிறுமி மங்கையர்க்கரசி தான் அவன் பாதையோரமாகப் போவதை முதலில் பார்த்து அடையாளங்கண்டு கூப்பிட்டிருக்கிறாள்.

     "சுகமாயிருக்கிறீர்களா? எங்கேயாவது வெளியூர் போயிருந்தீர்களா? பூரணி கோடைக்கானல் போன பின்பு நீங்கள் கண்ணில் தட்டுப்படவே இல்லையே; இப்போது கூட நான் உங்களைப் பார்க்கவில்லை. இந்தப் பெண்தான் நீங்கள் போவதைப் பார்த்துவிட்டுச் சொன்னாள். அப்புறம் கைதட்டி அழைத்தேன்" மங்களேசுவரி அம்மாள் அன்போடு அவனை விசாரித்தாள். முதுமையின் பொறுப்பும் கண்ணியமான பண்புகளும் நிறைந்த அந்த அம்மாளின் மலர்ந்த முகத்தைப் பார்த்ததுமே கைகள் குவித்து வணங்கினான் அரவிந்தன். 'வயது ஆக ஆகப் பெண்களிடமிருந்து பெண்மையின் மயக்கும் அழகு கழன்று தாய்மையின் தெய்வீக அழகு வந்துவிடுகிறது' என்று அவன் படித்திருந்தான். மங்களேசுவரி அம்மாளின் முகத்தில் மூப்பின் நலிவையும் மறைத்துக் கொண்டு ஒரு தாய்மைப் பொலிவு தென்படும். அந்த கௌரவமான அழகை வணங்காமலிருக்க அரவிந்தனால் முடியாது. பாரத நாட்டின் பெண்ணின் பெருமையே இந்தத் தாய்மை அழகுதான் என நினைப்பவன் அவன்.

     அவன் தன்னைப் பற்றி அந்த அம்மாள் விசாரித்ததற்கு மறுமொழி சொன்னான். சிற்றப்பாவின் இறுதிச் சடங்குகளுக்காகக் கிராமத்துக்குப் போய்விட்டு வந்ததையும், மறுநாள் அவசரமாகக் கோடைக்கானல் போவதற்கு இருப்பதையும் விவரித்தான். மீனாட்சிசுந்தரம் முருகானந்தத்தோடு பூரணியைச் சந்திப்பதற்காகக் கோடைக்கானல் போயிருக்கிறார் என்பதையும் அந்த அம்மாளிடம் சொன்னான். 'என்ன காரியமாகச் சந்திக்க அவர் அங்கே போயிருக்கிறார்' என்பதை அந்த அம்மாளும் கேட்கவில்லை. அவனும் அதைப் பற்றிச் சொல்லவில்லை.

     "நான் கூட இந்தக் குழந்தைகளையும் கூட்டிக் கொண்டு ஒருமுறை போய்ப் பார்த்துவிட்டு வர வேண்டுமென்று தோன்றுகிறது. பூரணி போய்ச் சேர்ந்ததும் அங்கிருந்து எனக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தாள். அப்புறம் ஒன்றும் தகவலே இல்லை. மூத்த பெண்ணையும் அவள் கூட அனுப்பியிருக்கிறேன். அந்தப் பெண்ணுக்குக் கல்யாணத்தை முடித்துவிட வேண்டுமென்று வரன்கள் பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஒன்றும் சரியாக அமையவில்லை. உங்களுக்கு ஒன்றும் அவசரமான காரியமில்லாவிட்டால் கொஞ்சம் வீட்டுக்கு வாருங்களேன். இராத்திரிச் சாப்பாட்டை அங்கே வைத்துக் கொள்ளலாம். எனக்கும் உங்களிடம் சிறிது நேரம் மனம் விட்டுப் பேச வேண்டும் போலிருக்கிறது" என்று மங்களேசுவரி அம்மாள் வேண்டிக் கொண்டபோது, அரவிந்தனால் மறுக்க முடியவில்லை.

     "நான் இரவில் சாப்பிடுவதில்லை, சிற்றுண்டிதான். காலையில் நீங்களும் வருவதானால் நாம் எல்லோரும் சேர்ந்தே கோடைக்கானலுக்குப் போகலாம்" என்று அந்த அம்மாளோடு காரில் செல்லும் போது அரவிந்தன் சொன்னான். "பூரணியை இலங்கைக்கும் மலேயாவுக்கும் சொற்பொழுவுகளுக்கு அழைத்துக் கடிதங்கள் வந்திருக்கின்றனவாம். அவள் அதைப் பற்றி இன்னும் முடிவு சொல்லவில்லையாம். மங்கையர் கழகத்திலிருந்து அவளைச் சம்மதிக்கச் செய்ய வேண்டும் என்று என்னிடம் வந்து நச்சரிக்கிறார்கள். அதற்காக நான் கோடைக்கானல் போக வேண்டியிருக்கிறது" என்று மங்களேசுவரி அம்மாள் கூறிய செய்தி அரவிந்தனுக்குப் புதியதாயிருந்தது. பூரணியின் வாழ்க்கையில் எந்தப் புகழ் ஒளி பரவ வேண்டுமென்று அவன் கனவுகள் கண்டு கொண்டிருந்தானோ அது பரவுகிற காலம் அருகில் நெருங்கி வருவதை அவன் இப்போது உணர்ந்து பூரித்தான்.

     மதுரை நகரத்து வீதிகளின் வழியெல்லாம் ஒளி வெள்ளம் இறைந்து கிடந்தது. கார் அவற்றிடையே புகுந்து விரைந்து கொண்டிருந்தது. நகரத்துக்குப் பல்லாயிரம் வாய்கள் முளைத்துத் தாறுமாறாகக் குரலெழுப்பிப் பாடிக் கொண்டிருப்பதுபோல் ஒலிபெருக்கிகளும், சினிமா வசன இசைத் தட்டுக்களும் மூலைக்கு மூலை ஒலித்துக் கொண்டிருந்தன. ஒன்றரை நாள் இந்த நகரத்துச் சந்தடிகளிலிருந்து விலகி இராமநாதபுரம் சீமையின் வறண்ட கிராமம் ஒன்றில் இருந்துவிட்டு வந்த அரவிந்தனுக்கு இப்போது நகரமே சிறிது புதிதாய்ப் பெரியதாய் மாறியிருப்பது போல் பிரமை தட்டியது. வெளியூர் சென்றுவிட்டு மதுரை திரும்பும் போதெல்லாம் இந்த உணர்வு அவனுக்கு ஏற்பட்டது.

     தானப்ப முதலித் தெருவில் மங்களேசுவரி அம்மாள் வீட்டு வாயிலில் கார் நின்றதும் அரவிந்தன் இறங்கினான்.

     "உள்ளே வாங்க அரவிந்தமாமா!" என்று மங்கையர்க்கரசி அவனைத் தன் பூங்கையால் பிடித்து இழுத்தாள். இந்தச் சிறுமியிடம் அரவிந்தனுக்குத் தனிப்பட்ட பிரியம் உண்டு. பூரணியின் தங்கை என்பதற்காகவோ, பேராசிரியர் அழகியசிற்றம்பலத்தின் கடைசிப் பெண் குழந்தை என்பதற்காகவோ மட்டும் ஏற்பட்ட பிரியமில்லை. அது உயிர் பெற்று நிற்கும் தங்கக் குத்துவிளக்குப் போல் முகமும், கண்களும், சிரிப்பும், கைகளும், கால்களும் எல்லாம் பூக்களாலேயே படைத்துப் பூக்களின் மணமூட்டினாற் போல மாயக் கவர்ச்சி வாய்ந்த சிறுமி இவள். எந்நேரமும் மருட்சியும் வியப்பும் கலந்து கனிந்து, கவிந்து, வெள்ளை அல்லி இதழில் கருப்புத் திராட்சை உருள்வது போல் இந்தச் சிறுமியின் கண்களுக்கு ஓர் அழகு வாய்த்திருந்தது. பெண் குழந்தைகளின் கண்களிலிருந்து இந்த மருட்சியும் வியப்பும் மாறிக் கள்ளத்தனம் குடிகொள்கிற வயது வந்தாலும் மங்கையர்க்கரசிக்கு இந்த அழகு மாறாதது போல் அவ்வளவு நிறைவாகவும், பதிவாகவும் இருந்தது. 'குறுகுறு நடந்து சிறுகை நீட்டி இட்டும் தொட்டும்' என்று குழந்தை அழகைப் பற்றி வர்ணித்திருக்கிறார்களே, அந்த அழகுக் குறுகுறுப்பு, சிறுமியான பின்பும் இந்தப் பெண்ணிடமிருந்து போகவில்லை. அதுதான் அரவிந்தனைக் கவர்ந்தது. பூரணியின் விழிகளிலும் இந்த அழகு உண்டு. ஆனால் அது அறிவொளி கலந்த அழகாயிருந்தது.

     வெகு நாட்களாகவே சந்திக்க வாய்ப்பின்றிப் பிரிந்து விட்ட சொந்தத் தம்பியை அன்போடு உபசாரம் செய்தாள் மங்களேஸ்வரி அம்மாள். செல்வச் செழிப்புக்குரிய ஆணவமே சிறிதும் இல்லாமல் இந்த அம்மாள் எப்படி இவ்வளவு அன்பு மயமாக நெகிழ்ந்துவிட முடிகிறதென்று அவனுக்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது. பழகுகின்றவர்களோடு ஒட்டிக் கொள்ளும்படி செய்து விடுவதன் காரணமாக அன்புக்குத் தமிழில் 'பசை' என்று ஒரு பெயர் உண்டு. மனிதர்களுடைய மனங்களை இணைத்துத் தொடுத்து விடுகிற சக்தி அன்புக்கு இருப்பதால் 'நார்' என்றும், அன்புக்கு ஒரு பெயருண்டு. அந்த அம்மாள் அன்பு மயமாகப் பழகிய விதத்தைக் கண்டபோது 'பசை', 'நார்' என்னும் சொற்களுக்கு அன்பு என்னும் பொருள் அமைந்த நயம் பற்றிப் பூரணி எப்போதோ தன்னிடம் கூறியிருந்த விளக்கம் அரவிந்தனுக்கு நினைவு வந்தது.

     சாப்பாட்டுக்குப் பின் சிறிது நேரம் படித்துக் கொண்டிருந்து விட்டு மங்கையர்க்கரசியும் செல்லமும், சம்பந்தனும் தூங்கிப் போனார்கள். மங்களேசுவரி அம்மாள் அரவிந்தனிடம் மனம் விட்டுப் பேசிக் கொண்டிருந்தாள். ஒளிவு மறைவு இல்லாமல் குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமான மனிதர்களிடம் எல்லாவற்றையும் சொல்லுவது போல் சொல்லிக் கொண்டிருந்தாள்.

     "என்னவோ, பித்துப் பிடித்த மாதிரி இதையெல்லாம் உங்களிடம் சொல்லிக் கொண்டிருக்கிறேனே என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். நெருக்கமும், உறவும் கொண்டாடிக் கவலையைப் பகிர்ந்து கொள்ள எனக்கு மனிதர்கள் என்று யார் இருக்கிறார்கள் இங்கே! நீங்கள் இருக்கிறீர்கள். பூரணி இருக்கிறாள். நீங்கள் இருவரும் தான் எனக்கு அந்தரங்கமானவர்கள் என்று மனதுக்குள் தீர்மானம் பண்ணிக் கொண்டுவிட்டேன். பணத்தையும், செல்வாக்கையும், புகழையும் பகிர்ந்து கொள்ள மனிதர்கள் கிடைப்பார்கள். துன்பங்களையும், வேதனைகளையும் பங்கு கொண்டு தாங்கி நிற்கத்தான் யாரும் கிடைக்கமாட்டார்கள். ஆனால், நீங்கள் இருவரும் அப்படிப்பட்டவர்கள் இல்லை. கடவுள் உங்கள் இருவருக்கும் தங்கமான மனத்தைக் கொடுத்திருக்கிறார். உலகத்தை எல்லாம் ஒரு குடும்பமாக எண்ணி அன்போடும், அனுதாபத்தோடும் பழகுகிற பக்குவம் உங்கள் இரண்டு பேருடைய மனத்துக்கும் ஒற்றுமையாக அமைந்திருக்கிறது. பூரணிக்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டதே ஒரு விசித்திரமான நிகழ்ச்சி. அவள் அதையெல்லாம் உங்களிடம் சொல்லியிருப்பாள் என நினைக்கிறேன். அவளை முதன் முதலாக நான் சந்தித்த தினத்திலிருந்து என்னுடைய மூத்த பெண்ணாக வரித்துக் கொண்டு விட்டேன். அவள் மூலமாகத் தான் நீங்கள் எனக்குப் பழக்கமானீர்கள் அரவிந்தன். நீங்கள் வித்தியாசம் வைத்துக் கொண்டு பழகக்கூடாது. பூரணி இந்த வீட்டின் மூத்த பெண்ணானால், நீங்கள் இந்த வீட்டின் மூத்த மாப்பிள்ளை. இந்த வீட்டிலும், இதன் சுகபோகங்களிலும் என் வயிற்றில் பிறந்த வசந்தாவுக்கும் செல்லத்துக்கும் எத்தனை பாத்தியதை உண்டோ அவ்வளவு உங்களுக்கும் உண்டு. நான் பணத்தோடு பிறக்கவில்லை, நான் பணத்தோடு போகப் போவதும் இல்லை. இப்படியெல்லாம் வாழ நேரும் என்று கனவில் கூடச் சின்ன வயதில் நான் எண்ணியதில்லை. ஏழைக் குடும்பத்திலிருந்து 'அவருக்கு' வாழ்க்கைப்பட்டேன். இலங்கை மண்ணில் போய் உழைப்பினாலும் முயற்சியினாலும் உயர்ந்து இத்தனை பணத்தையும், இத்தனை துக்கத்தையும், இந்தப் பெண்களையும் எனக்குச் சேர்த்து வைத்துச் சென்று விட்டார் அவர். பணமும் பெருமையும் இருந்து என்ன செய்ய? இந்தப் பெண் வசந்தாவுக்கு ஒரு 'நல்ல இடம்' அகப்படாமல் தவிக்கிறேன்" என்று கூறிப் பெருமூச்சு விட்டாள் மங்களேசுவரி அம்மாள்.

     அந்த அம்மாள் கூறியவற்றைக் கேட்ட போது அரவிந்தன் மனம் குழைந்தான். அந்த அபூர்வமான அன்பும், பாசமும் அவன் உள்ளத்தைக் கவர்ந்தன. 'பர்மாக்காரர் போல் இதயமே இல்லாதவர்கள் வாழ்கிற உலகத்தில் இவ்வளவு அற்புதமான பெருமனம் படைத்த இந்தத் தாயும் அல்லவா இருக்கிறாள்' என்று நினைத்தான் அவன். முருகானந்தம்-வசந்தா தொடர்பை அந்த அம்மாளிடம் குறிப்பாகச் சொல்லி சம்மதம் பெற வேண்டிய சமயம் அதுதான் என்று அரவிந்தனுக்குப் புரிந்தது. அந்த அம்மாளின் பரந்த மனம் அந்த மணத்தை மறுக்காமல் ஒப்புக்கொள்ளும் என்று அவன் உள்ளம் உறுதியாக நம்பியது. அரவிந்தன் அந்த அம்மாளிடம் கேட்டான்.

     "அம்மா! உங்கள் பெண் வசந்தாவின் திருமணத்துக்காக சிரமப்படுவதாகக் கூறுகிறீர்களே! சிரமப்பட வேண்டிய காரணம் என்ன?"

     "உங்களுக்குத்தான் தெரியுமே! அசட்டுத்தனமாகச் சினிமாவில் சேர்கிறேன் என்று போய் எவனுடனோ அலைந்துவிட்டு ஏமாந்து திரும்பினாள். ஊரில் அது கை, கால் முளைத்து தப்பாகப் பரவியிருக்கிறது. பெண்ணின் தூய்மையில் நமக்கெல்லாம் நம்பிக்கை நன்றாக இருக்கிறது. ஆனால் ஊரார் அதிலேயே சந்தேகப்படுகிறார்கள். எங்காவது ஒரு வரன் முடிவாகும் போலிருந்தால் யாராவது இல்லாததும் பொல்லாததும் சொல்லிக் குறுக்கே புகுந்து கலைத்து விடுகிறார்கள். இதைச் செய்வதில் அவர்களுக்கு என்னதான் பெருமையோ தெரியவில்லை" என்று ஏக்கத்தோடும், வருத்தத்தோடும் கூறினாள் அந்த அம்மாள். அரவிந்தன் ஆறுதல் கூறினான்.

     "சினிமாவில் நடிக்கிற பித்து அந்த ஏமாத்துக்கார மனிதனோடு புறப்பட்டுப் போகச் செய்து விட்டது. அவ்வளவு தானே தவிர, உங்கள் பெண்மேல் வேறு அப்பழுக்குச் சொல்ல முடியாதே. மதுரையிலிருந்து திருச்சி வரையில் ஓர் ஆண் பிள்ளையோடு இரயிலில் பயணம் செய்தது மன்னிக்க முடியாததொரு குற்றமா அம்மா?"

     "அதை நினைத்தால்தானே வயிற்றெரிச்சலாக இருக்கிறது. ஒன்றுமில்லாததை எப்படி எப்படியோ திரித்துப் பெண்ணுக்கு மணமாகாமல் செய்துவிடப் பார்க்கிறார்களே. நான் ஒருத்தி தனியாக எப்படி இந்தச் சமூகத்தின் அநியாயப் பழியை சுமப்பேன்?" - இதைச் சொல்லும் போதே அந்த அம்மாளின் குரல் கரகரத்து நைந்தது. தூய்மையான அந்தத் தாயின் கண்களில் நீர்மணிகள் அரும்பிச் சோகம் படர்வதை அரவிந்தன் கண்டுவிட்டான். அவனுடைய உள்ளம் உருகியது. அந்தத் தாயின் தவிப்பு அவனுடைய உணர்வைக் கரைத்தது. அப்போது அரவிந்தனுடைய மென்மையான உள்ளத்தில் ஓர் இளங்கவியின் குமுறல் எழுந்தது.

     'உத்தர ராமாயணத்தில் சீதையை ஊராருக்காக இராமன் சந்தேகமுற்றபோது அந்த அபவாதத்தைப் பொறுமைக்கெல்லாம் எல்லையான பூமியே பொறுத்துக் கொள்ள முடியாமல் தன் மண்மேனி வழி திறக்கப் புண்ணாகப் பிளந்து உள்ளே ஏற்றுக் கொண்டதைப் போல இந்தச் சமூகத்தில் ஒவ்வோர் அப்பாவிப் பெண்ணுக்கும் துன்பம் வரும்போது அந்தத் துன்பம் அவளை அணுகவிடாமல் பூமியே பிளந்து ஏற்றுக் கொண்டு விட்டால் எத்தனை நன்றாக இருக்கும்? சமூகத்தின் பழிகளுக்கு நடுவே அபலையாய் சபலையாய் ஆதரவு இழந்து நிற்கும் ஒவ்வொரு பெண்ணும் ஒரு சீதைதான். "நல்வழி தா எனக்கு மண் மகளே!" என்று சீதை மண் புகுந்தது போல் பழிகளிலிருந்து விடுபட்டுப் பிரகிருதியின் அடிமடியில் சரண் புகுந்து விடுகிற தெம்பு இந்தத் தவத்திரு நாட்டுப் பெண்களிடம் இன்று இல்லாமற் போயிற்றே?' என்று கொதித்து வேதனைப்பட்டான் அரவிந்தன்.

     "நான் இப்படிப் பளிச்சென்று கேட்பதற்காக வருத்தப்பட்டுக் கொள்ளக்கூடாது அம்மா! என்னையும் பூரணியையும் போலவே நீங்களும் முற்போக்கான கருத்துள்ளவர் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. அதனால்தான் கூச்சமும் தயக்கமும் இல்லாமல் இப்படி உடனே உங்களைக் கேட்கிறேன். தவறாக எண்ணிக் கொள்ளாதீர்கள். உங்களை விடத் தாழ்வான - குறைந்த பொருளாதார நிலையிலுள்ள ஏழைக் குடும்பத்து இளைஞன் ஒருவனை உங்கள் பெண்ணுக்குக் கணவனாக ஏற்றுக் கொள்வீர்களா நீங்கள்?" என்று மெல்ல சிரித்துக் கொண்டே அந்த அம்மாள் முகத்தை உற்றுப் பார்த்தவாறே கேட்டான், அரவிந்தன். அந்த அம்மாளும் சிரித்துக் கொண்டே பதில் கூறலானாள்.

     "அரவிந்தன்! என்னைப் பற்றி இந்தச் சந்தேகம் உங்களுக்குத் தோன்றி இருக்கவே கூடாது. பணத்துக்காகவும், பகட்டுக்காகவும் மனிதர்களை மதிக்கிற குணம் என்னிடம் என்றும் இருந்ததில்லை. நான் ஏழைக் குடும்பத்தில் பிறந்து பணக்காரக் கணவனுக்கு வாழ்க்கைப்பட்டது போல், என் பெண், பணக்கார குடும்பத்திலிருந்து ஏழைக் கணவனுக்கு வாழ்க்கைப்படட்டுமே! என் பெண் விரும்பாத இடத்தில் அவளை வற்புறுத்தித் தள்ளக்கூடாது என்ற ஒரு நோக்கம் தவிர வேறு ஏற்றத்தாழ்வை நான் பார்க்க விரும்பவில்லை. நீங்கள் என்னவோ பூரணியையும் உங்களையும் தான் மிகவும் முற்போக்கானவர்கள் என்று சொல்லிக் கொள்கிறீர்கள். உங்களுக்குத் தெரிந்திருக்கக் காரணமில்லை. நான் உங்களையெல்லாம் விட முற்போக்கானவள் என்பதைப் பூரணி ஒருவாறு புரிந்து கொண்டிருப்பாள். என் பெண் மாறுபட்ட சூழ்நிலையிலும் பழக வேண்டும் என்பதற்காகத்தான் நான் அவளை ஆண்கள் கல்லூரியில் சேர்த்தேன். உங்கள் பூரணியோ, 'பெண் மாறுபட்ட சூழ்நிலைகளில் அதிகம் பழகலாகாது' என்ற கருத்துடையவள். இந்த வயதான கோலத்தையும் நெற்றியில் விபூதிப் பூச்சையும் கண்டு என்னை மிகவும் பழைய காலத்துக்குச் சொந்தமானவளாக நீங்கள் எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள் போலிருக்கிறது. கல்லூரியில் படிக்கிற வசந்தா மனம் விரும்பி உண்மையான அன்புடன் எந்த இளைஞனோடு பழக நேர்ந்தாலும், அதை வரவேற்று மணம் செய்து கொடுக்கலாம் என்ற அளவுக்கு முற்போக்காக எண்ணி வைத்துக் கொண்டிருந்தவள் நான். அழகு நிறைந்த சந்ததியினரும், வேறுபாடுகளில்லாத சமூக உறவும் வளர்வதற்கு நேர்மையான காதல் மணங்கள் பெரிதும் உதவுகின்றன என்பதை நான் நம்புகிறேன்" என்று இவ்வாறு அந்த அம்மாள் உணர்ச்சிகரமானதொரு சொற்பொழிவு செய்வது போல் மறுமொழி கூறியதைக் கேட்டபோது அரவிந்தனுக்குத் தன் செவிகளையே நம்ப முடியவில்லை. 'இந்தப் பழமையான முதிய தோற்றத்துக்குள் இவ்வளவு புதுமையான இளமையான கருத்துக்கள் ஒளிந்திருக்கின்றனவே' என ஆச்சரியப்பட்டான். 'முருகானந்தம் கொடுத்து வைத்தவன் தான்' என்ற மகிழ்ச்சியில் அவன் மனம் நிறைந்தது. 'இந்த முருகானந்தம் பயல் பொதுமேடைகளிலும், தொழிற்சங்கங்களிலும் பேசிப் பேசிச் சாதித்த சாதனைகள் கூடப் பெரிதில்லை. வசந்தா என்ற பெண்ணின் மனத்தை இளக்கி நெகிழச் செய்து தன் பக்கமாகத் திருப்பிக் கொண்டானே, இது பேசாமலே சாதித்த மகத்தான சாதனை' என்று வேடிக்கையாகத் தோன்றிற்று அவனுக்கு. அந்த அம்மாள் மேலும் கூறினாள்.

     "ஏழைப்பட்ட வரன் ஆயிற்றே என்று தயங்க வேண்டாம் அரவிந்தன்! உங்களுக்குத் தெரிந்த இடம் ஏதாவது இருந்தால் சொல்லுங்கள். வசந்தாவின் கல்யாணத்துக்கு உங்களையும் பூரணியையும் தான் மலைபோல் நம்பியிருக்கிறேன் நான். நீங்கள் சுட்டு விரலால் காட்டுகிற வரனுக்கு அவளை மணம் முடித்து கொடுத்துவிட நான் தயார்."

     "அப்படியானால் உங்கள் பெண்ணுக்கு இப்போதே திருமணம் முடிந்த மாதிரிதான் அம்மா!" என்று புன்னகையோடு கூறினான் அரவிந்தன். அந்த அம்மாள் முகம் மலர்ந்தது.

     "விவரம் சொல்லுங்கள் அரவிந்தன்?"

     "நாளைக்குத்தான் கோடைக்கானலுக்கு நீங்களும் வரப் போகிறீர்களே, அம்மா! பூரணியையும் உடன் வைத்துக் கொண்டு அங்கே பேசி முடித்துக் கொள்ளலாம். இப்போது உங்கள் பெண்ணுக்காக நான் கூறப் போகிற வரனைப் பூரணிக்கும் தெரியும்" என்று குறும்புச் சிரிப்பு சிரித்தான் அரவிந்தன். வரனைப் பற்றிச் சொல்லுமாறு மங்களேசுவரி அம்மாள் எவ்வளவோ வற்புறுத்திக் கேட்டும் அவன் கூறவில்லை. "அந்த இரகசியத்தை நாளைக்குக் கோடைக்கானலில் தான் வெளிப்படுத்த முடியும்" என்று விளையாட்டுப் பிடிவாதத்தோடு மறுத்துவிட்டான்.

     அவர்கள் நேரம் கழிவதே தெரியாமல் பேசிக் கொண்டிருந்து விட்டார்கள். இரவு நெடுநேரமாகியிருந்தது.

     "மாடியறையில் போய்ப் படுத்துக் கொள்ளுங்கள். காலையில் இங்கிருந்தே காரில் கோடைக்கானல் புறப்பட்டு விடலாம்" என்றாள் அந்த அம்மாள்.

     "இல்லை! நான் அச்சகத்துக்குப் போய்ப் படுத்துக் கொண்டிருந்துவிட்டுக் காலையில் இங்கே வந்துவிடுகிறேன். அந்தப் பையன் திருநாவுக்கரசு தான் தனியாக இருப்பான். நான் இப்போது அங்கே சென்றால், அந்தப் பையனிடம் இன்னும் இரண்டு, மூன்று நாட்களுக்கு அச்சகத்தைக் கவனித்துப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு, நாளைக்குப் புறப்பட வசதியாயிருக்கும்" என்று அச்சகத்துக்குக் கிளம்பி விட்டான் அரவிந்தன்.

     மறுநாள் காலை கோடைக்கானலுக்குப் புறப்பட்டார்கள் அவர்கள். வானில் மப்பும், மந்தாரமுமாக வெய்யிலே இல்லாமல் பயணம் மிகவும் சுகமாக இருந்தது. மங்களேசுவரி அம்மாள், குழந்தைகள், அரவிந்தன் எல்லோரும் சேர்ந்து வந்ததைக் கண்டபோது பூரணிக்கு, மதுரையே கோடைக்கானலுக்கு வந்துவிட்டது போலிருந்தது. உடனே திரும்பி விடுவதாகச் சொல்லிவிட்டுப் பட்டிவீரன்பட்டிக்குப் போயிருந்த மீனாட்சிசுந்தரம் இன்னும் திரும்பவில்லையாதலால் அன்று தேர்தல் பற்றி முடிவு செய்யவில்லை அவர்கள். அவருடைய வரவை எதிர்பார்த்தனர்.

     அன்று மாலையில் முருகானந்தமும், மங்களேசுவரி அம்மாள், வசந்தா, குழந்தைகள் எல்லோரும் ஏரிக்கரைக்கு உலாவப் போயிருந்தார்கள். அரவிந்தனும், பூரணியும் மட்டும் தமிழ் முருகன் கோயில் கொண்டிருக்கும் குறிஞ்சி ஆண்டவர் கோயிலுக்குப் புறப்பட்டுப் போனார்கள். மாலை நேரத்தில் மலைச்சாலையில் நடப்பது இன்பமாக இருந்தது.

     பகல் என்னும் கணவனை இழந்த மாலை என்னும் மேல்திசைப் பெண், பால்வடியும் வாயையுடைய பிறை என்னும் பிள்ளையை இடுப்பில் ஏந்தி நின்று, விதவைக் கோலத்தில் புலம்புகிறாற் போல் தோன்றும் மாலைப் போதாக இருந்தது அது. கோடைக்கானலுக்கு வந்தபின் பூரணியின் நிறம் வெளுத்திருப்பதாகவும் அழகு அதிகமாயிருப்பதாகவும் அரவிந்தனுக்குத் தோன்றியது.

     "அலைச்சல் அதிகமோ? நீங்கள் கருத்திருக்கிறீர்களே!" என்றாள் பூரணி. "ஆமாம்!" என்று புன்முறுவல் பூத்தான் அரவிந்தன்.

     "முன்பு ஒருமுறை நாமிருவரும் திருப்பரங்குன்றம் மலையில் ஏறியது நினைவிருக்கிறதா உங்களுக்கு? நாம் இருவரும் சேர்ந்து செல்லும்போதெல்லாம் உயரமான இடத்தை நோக்கியே ஏறிச் செல்லுகிறோம் இல்லையா?" அரவிந்தனுக்கு மெய்சிலிர்த்தது. எத்தனை அர்த்தம் நிறைந்த கேள்வி இது? 'நாங்கள் இருவரும் உயர உயரப் போவதற்காகவே பிறந்தவர்களா?' மீண்டும் சிலிர்த்தது அவனுக்கு.






புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
151
152
153
154
155
156
157
158
159
160
161
162
163
164
165
166
167
168
169
170
171
172
173
174
175
176
177
178
179
180
181
182
183
184
185
186
187
188
189
190
191
192
193
194
195
196
197
198
199
200
201
202
203
204
205
206
207
208
209
210
211
212
213
214
215
216
217
218
219
220
221
222
223
224
225
226
227
228
229
230
231
232
233
234
235
236
237
238
239
240
240
241
242
243
244
245
246
247