2
"தீயினுள் தென்றல்நீ பூவினுள் நாற்றம்நீ கல்லினுள் மணிநீ சொல்லினுள் வாய்மைநீ அறத்தினுள் அன்புநீ மறத்தினுள் மைந்துநீ அனைத்தும் நீ அனைத்தின் உட்பொருளும் நீ"
-பரிபாடல்
குழந்தை மங்கையர்க்கரசி புத்தகம் பார்த்துக் கொண்டிருந்த இடத்திலேயே படுத்துத் தூங்கிப் போயிருந்தாள். வீட்டுச் சொந்தக்காரர் எழுதியிருந்த கடிதத்தோடு மலைத்துப் போய் உட்கார்ந்திருந்தாள் பூரணி. மங்கையர்க்கரசியைப் போல் நானும் குழந்தையாகவே இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று எண்ணிய போது மனமெல்லாம் ஏக்கம் நிறைந்து தளும்பியது அவளுக்கு. படைப்புக் கடவுளைப் போல் கஞ்சத்தனம் உள்ளவர் வேறு யாரும் இருக்க முடியாது. சுக துக்கங்களை அங்கீகரித்துக் கொள்ளாமல் நினைத்தபோது உண்டு, நினைத்தபோது உறங்கி, அந்த வினாடிகளை அந்தந்த வினாடிகளோடு மறந்துபோகும் குழந்தைப் பருவத்தை மனிதனுக்கு மிகவும் குறைவாக அல்லவா கொடுத்திருக்கிறார் அவர். அறிவு, அனுபவம், மூப்பு எல்லாம் துக்கத்தைப் புரிந்து கொள்கிற கருவிகள்தாமா! பூரணி நெட்டுயிர்த்தாள். எதிரே தெருவாசல் வெறிச்சோடிக் கிடந்தது. பகல் ஏறிக் கொண்டிருந்த அந்த நேரத்தில் ஏதோ ஒரு தனி அமைதியில் மூழ்கிப் போயிருந்தது தெரு. காலம் என்ற பெரிய இயந்திரத்தை யாரோ சொல்லாமல் இரகசியமாக ஒடித்துப் போட்டுவிட்டுப் போய்விட்ட மாதிரி தெருவெங்கும், வெறுமை நிழலாடும் நேரம் அது. உச்சி வேளைக்கு மேல் கோயிலும் மூடி விடுவார்கள். எனவே தரிசனத்துக்காகப் போகிற ஆட்கள் கூட திருப்பரங்குன்றம் சந்நிதித் தெருவில் இல்லை அப்போது. பூரணி வாயிற்புறம் வந்தாள். கம்பிக் கதவைச் சாத்தி உட்புறம் தாழிட்டுக்கொண்டு திரும்பினாள். எங்கோ கோயில் வாயிலில் பூக்கடைப் பக்கமிருந்து வெட்டிவேர் மணம் வந்து பரவியது. அந்த ஊருக்கு மட்டுமே அத்தகையதொரு மணம் சொந்தம். கோயிலுக்கு அருகில் நான்கு தெருக்கள் வரையில் வெட்டிவேர் மணம் கமகமத்துக் கொண்டே இருக்கும். 'முருகனுடைய அருள் மணம்போல் இது எங்க ஊருக்குத் தனிச்சிறப்பு அம்மா!' என்று அப்பா அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பார். அந்த மணம் பூரணிக்கு இதை நினைவுபடுத்தியது. வீட்டுக்காரருக்கு ஆறுமாத வாடகைக் கடனை அடைக்கப் பணம் வேண்டும். அடுத்தபடி குடியிருக்கக் குறைந்த வாடகையில் ஓர் இடமும் பார்த்தாக வேண்டும். இந்த இரண்டுக்கும் மேலாகத் தனக்கு ஒரு வேலையும் பார்த்துக் கொள்ள வேண்டும். சீரும் சிறப்புமாக வாழாவிட்டாலும் மானமாகப் பிழைக்க வேண்டுமே. அப்பா போய்விட்டாலும் அவருடைய புகழும், பெருமையும் இந்த வீட்டைச் சுற்றிலும் ஒளிபரப்பிக் கொண்டு தான் இருக்கின்றன. ஆனால் புகழினால் மணம்தான் நிரம்பும். வயிறு நிரம்புமா? புகழ் சோறு போடாது. புகழ் குடும்பத்தைக் காப்பாற்றிவிடாது. புகழ் தம்பிகளையும் தங்கையையும் வளர்த்து, படிக்க வைக்காது, வாயால் புகழுகிற மனிதர்களெல்லாம் கைகளால் செய்வார்கள் என்று எதிர்பார்ப்பதும் தவறு. அப்படியே செய்கிறவர் முன்வந்தாலும் அவர் காலையில் 'செக்' அனுப்பியிருந்த வியாபாரி மாதிரி நேர்மையற்றவராக இருப்பார். தவறான வழியில் பிறரிடம் உதவிபெற்று நன்றாக வாழ்வதைக் காட்டிலும் முறையான வழியில் உழைத்துச் சுமாராக வாழ்ந்தாலே போதும். வறுமையாக வாழ்ந்தாலும் செம்மையாக வாழ வேண்டும். அப்பாவுக்குப் பிடித்த வாழ்வு அதுதான்.
'பூரணி! குற்றங்களை மறைவாகச் செய்துகொண்டு வெளியார் மெச்சும்படி செல்வனாக வாழ்வதைவிடக் கேவலமான உழைப்பாலும் வெளிப்படையாக உழைத்து வெளிப்படையான ஏழையாக வாழ்ந்து விடுவது எவ்வளவோ சிறந்தது அம்மா!' என்று அப்பா வாய்க்கு வாய் சொல்லிக் கொண்டே இருப்பார். அப்பாவுக்கு அறத்தில் நம்பிக்கை அதிகம். கடவுள் பற்றும் அதிகம். 'அறத்தின் வெற்றிக்கு அன்பு காரணமாக இருக்கிறது. அந்த அன்பில் இறைவன் இருக்கிறான்'. அதேபோல் மறத்தின் நடுவே அது நிகழக் காரணமான வலிமையில் நின்று அதை அழிக்கவும் இறைவன் ஆணை காத்திருக்கிறது. 'அனைத்தும் அனைத்தின் உட்பொருளும் இறைவன் மயம்' என்ற பரிபாடல் தத்துவத்தைத் தம்முடைய மேடை சொற்பொழிவுகளில் எல்லாம் தவறாமல் சொல்வார் அப்பா. அவருடைய வாழ்க்கை அறிவுத் துறையில் வெற்றி பெற்றதற்கு இந்த நம்பிக்கையும் ஒரு காரணம். 'தீயில் சூடும், பூவில் மணமும், கல்லில் வைரமும், சொல்லில் வாய்மையும், அறத்தில் அன்பும், கொடுமையில் வலிமையும் நீயே' என வரும் பொருளுள்ள பரிபாடலின் நான்கு வரிகளைத் தம்முடைய படிப்பறையில் புத்தக அலமாரிக்கு மேலே பெரிதாக எழுதித் தொங்கவிட்டிருந்தார் அவர்.
இதை நினைத்ததும் அப்போதே அப்பாவின் புத்தக அலமாரிக்குப் பக்கத்தில் போய் நிற்க வேண்டும் போல் இருந்தது பூரணிக்கு. அவருடைய படிப்பறைக்குச் சென்றாள். அறையின் நான்கு புறமும் அடுக்கடுக்காகப் புத்தகங்கள் தெரியும். கண்ணாடி பீரோக்களும் அவை காணாததற்குச் சுவரில் அமைந்திருந்த அலமாரிகளும் இருந்தன. வாயிற்கதவுக்கு நேர் எதிரேயிருந்த அலமாரிக்கு மேல், உள்ளே நுழைகிறவர் கண்களில் உடனே படுகிறார் போல் அவருக்குப் பிடித்த அந்தப் பாடல் வரிகள் எழுதப்பட்டிருந்தன. அதை ஒருமுறை கண்ணால் பார்த்ததும் தூய்மையில் மூழ்கி எழுந்தது போல் புத்துணர்வு பெற்றாள் அவள். அப்பாவின் வருவாயில் பெரும் பகுதி புத்தகங்கள் வாங்குவதிலேயே செலவழித்துக் கழிந்தது. அவர் ஆயிரக்கணக்கில் பணம் சேர்த்து வைத்துவிட்டுப் போகாவிட்டாலும் புத்தகங்கள் சேர்த்து வைத்துவிட்டுப் போயிருந்தார். பதினைந்து நாட்களாக ஆள் நடமாடாது தூசி படிந்திருந்தது அந்தப் படிப்பறை. அதோ அந்த நாற்காலியில் உட்கார்ந்துதான் அவர் தமிழ் ஆட்சி புரிந்தார். மேஜை மேல் கிடக்கிறதே கறுப்புப் பேனா, அதுதான் அவர் எழுதியது. அதோ மேஜைக்கு அடியில் ஊதுவத்திக் கிண்ணம், கடைசி நாளன்று காலையில் அவர் கொளுத்திய வத்தியின் சாம்பற்கரி இழைகள் கூட இன்னும் அழியவில்லை. மணத்தைப் பரப்பிக் கொண்டே தான் கரைந்து வருகிற ஊதுவத்தி போல்தான் அவரும் வாழ்ந்து போய்விட்டார். அந்த அறையில் ஒவ்வொரு பொருளாகப் பார்க்கப் பார்க்க பூரணிக்கு துக்கம் மேலெழுந்தது. இன்னும் சிறிது நேரம் அங்கு இருந்தால் இதயமே வெடித்துக் கொண்டு அழுகை பீறிட்டு வரும்போல் தோன்றியது. அவள் துக்கத்தை மறைக்க முயல்கிறாள். துக்கம் அவளைத் தன்னுள் மறைக்க முயல்கிறது. மரணத்தை எண்ணிக் கலங்கும் துக்கத்துக்கு முன் துணிவும் நம்பிக்கையும் எம்மாத்திரம்? குறைந்த வாடகையில் குடியிருக்க இடம் மாறினால் அவ்வளவு புத்தகங்களையும் எங்கே கொண்டு போய் வைத்துக் கொள்வது? என்ற கேள்வி அவள் மனதில் எழுந்தது. மாதம் ஐம்பது ரூபாய் வீதம் ஆறுமாத வாடகைப் பணம் முந்நூறு ரூபாயைக் கொடுத்து முடித்துவிட்டால் அல்லவா வேறு இடம் பற்றிச் சிந்திக்க வேண்டும். கல்லூரியிலிருந்து அப்பாவின் 'சேமநிதி' (பிராவிடண்ட் பண்டு) கொஞ்சம் வரும். அது அவ்வளவு விரைவில் கிடைக்காது. புதிதாகப் பார்க்கிற வீட்டையும் இவ்வளவு பெரிதாக இவ்வளவு வாடகையில் பார்க்க முடியாது. கையில் எட்டணாக் காசையும் மனத்தில் வேலை தேடும் நோக்கத்தையும் வைத்துக் கொண்டுதான் தன் வாழ்க்கையைத் தொடங்கப் போகிறாள் அவள். மூத்த தம்பி ஐந்தாம் பாரமும், அடுத்தவன் மூன்றாம் பாரமும் படிக்கிறார்கள். குறைந்த பட்சம் அவர்களுடைய உயர்நிலைப் பள்ளிப் படிப்பு முடிகிற வரையாவது அவள்தான் வளர்த்துக் காப்பாற்றியாக வேண்டும். மங்கையர்க்கரசியையும் பள்ளிக்கூடத்தில் சேர்த்துவிட வேண்டும். வருகிற தையோடு அவளுக்கு ஆறு வயது நிறைகிறது. ஆரம்பப் பள்ளிக்கூடம் வீட்டுக்கு அருகிலேயே இருக்கிறது. அப்பாவின் மறைவுக்குப் பின் தன்னை நம்பியிருக்கும் பொறுப்புகளை மனதில் ஒழுங்குபடுத்தி வரிசையாக நினைத்துப் பார்த்துக் கொண்டாள் பூரணி. இவற்றுக்கெல்லாம் உடனே ஏதாவதொரு வழி செய்தாக வேண்டும். பிரச்சினைகள் வாயிற்படியில் வந்து நின்றும் கதவை அடைத்துக் கொண்டு வீட்டுக்குள்ளேயே உட்கார்ந்து இருக்க முடியாது. தைரியத்தோடும், நம்பிக்கையோடும் அவள் தெருவில் இறங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. இனிமேல் கால்களில் அழுக்குப்படுமே என்று பார்த்துக் கொண்டிருக்க முடியாது! மனத்தில் மட்டும் அழுக்குப் படாமல் பார்த்துக் கொண்டால் போதும். நாவுக்கரசனுக்கும் சம்பந்தனுக்கும் பசுமலையில் பள்ளிக்கூடம். இரண்டுபேரும் நடந்து போய்விட்டு நடந்தே திரும்பி வருவார்கள். அதனால் இடைவேளைக்கு வீட்டுக்குச் சாப்பிட வருவதில்லை. காலையில் போகும்போதே ஏதாவது கையோடு கட்டிக் கொடுத்து அனுப்பிவிடுவாள் பூரணி. மாலையில் அவர்கள் வீடு திரும்ப நாலரை மணிக்கு மேலாவது ஆகும். அதுவரை அவள் வீட்டில் காத்திருக்க முடியாது. மூன்று மணி சுமாருக்காவது புறப்பட்டுப் போனால்தான் மதுரையில் ஆகவேண்டிய காரியங்களைப் பார்த்துக் கொண்டு திரும்பலாம். 'பிராவிடண்டு பண்டு' பற்றி நினைவுறுத்தி விரைவாகக் கிடைக்கச் செய்வதற்கு அப்பா வேலை பார்த்த கல்லூரி முதல்வரைப் பார்க்க வேண்டும். வீட்டுக்காரரைச் சந்தித்து வாடகை பாக்கியைக் கொடுத்துவிட்டு 'வீட்டை விரைவில் காலி செய்துவிடுவதாக'த் தெரிவிக்க வேண்டும். அப்பாவின் புத்தகங்களை வெளியிட்ட பதிப்பாளர் ஒருவர் புதுமண்டபத்தில் இருக்கிறார். அவரைப் பார்ப்பதிலும் ஒரு பயனும் இல்லை. வழக்கம் போல் பஞ்சப் பாட்டு தான் பாடுவார்கள். ஆனாலும் பார்த்துக் கண்டிப்பு செய்ய வேண்டும். வேலைக்காக யாராவது இரண்டு மூன்று பேரை பார்க்க வேண்டும். வீடு கூட மதுரையில் எங்காவது நாலைந்து ஒண்டுக் குடித்தனங்கள் சேர்ந்திருக்கின்ற இடத்தில் பார்க்கலாம். ஆனால் திருப்பரங்குன்றத்தில் அவ்வளவு பெரிய வீட்டுக்குக் கொடுத்த வாடகையை மதுரையில் இரண்டு அறைகள் ஒண்டுக் குடியிருப்புக்குக் கொடுக்க வேண்டியிருக்குமே. தம்பிகளை வேறு நடு ஆண்டில் பசுமலைப் பள்ளிக்கூடத்தில் இருந்து மாற்றி மதுரையில் சேர்க்க வேண்டும். எனவே மதுரைக்கே குடிபோவது சாத்தியமில்லை என்று அவள் நினைத்தாள். மதுரையில் வீட்டு வாடகையை அவளால் கொடுத்துக் கட்டுப்படியாக முடியுமா? மதுரையில் மிக உயரமானவை கோபுரங்களும் வீட்டு வாடகையும் தான். அந்த நான்கு கோபுரங்களையும் சுற்றி வீடுகள் மலிவாகக் கிடைக்கமாட்டா. பிச்சைக்காரர்களும், சைக்கிள் ரிக்ஷாக்களும் தான் மலிவாகக் கிடைக்கிற அம்சங்கள். இரண்டு பெண்டாட்டிக்காரனுக்குச் செலவும் நிம்மதிக் குறைவும் அதிகமாக இருப்பதுபோல் மதுரை என்கிற அழகு இரண்டு மாவட்டங்களுக்குத் தலைநகராக இருந்து தொல்லைப்படுற நிலை வெள்ளைக்காரன் காலத்துக்குப் பின்னும் போன பாடில்லை. மணி இரண்டரை ஆகியிருந்தது. பூரணி கிணற்றடிக்குப் போய் முகம் கழுவிக் கொண்டு வந்தாள். புடவை மாற்றிக் கொண்டு திலகம் வைத்துக் கொள்வதற்காகக் கண்ணாடி முன் நின்றபோது குழந்தை தூக்கத்திலிருந்து எழுந்து வந்து கண்ணைக் கசக்கிக் கொண்டு நின்றாள். சந்தனச் சோப்பில் குளித்த முகம் அப்போதுதான் மலர்ந்த செந்தாமரைப் பூப்போல் புதிய மலர்ச்சி காட்டியது. சித்திரக்காரன் தூரிகையால் அநாகரிகமாக இழுத்துவிட்ட கறுப்புக் கோடுகள் போல் காதுகளின் ஓரத்தில் இரண்டு கரும்பட்டுச் சுருள் மயிரிழைகள் சிவப்பு நிறத்தின் நடுவே எடுப்பாகத் தெரியும் பூரணிக்கு. அழகிய குமிழம்பூ மூக்கு மேலே முடிகிற இடத்தில் புருவங்களின் கூடுவாயில் பெரிதாக ஒரு குங்குமப்பொட்டு வைத்து அதற்கு மேலே சிறிதாக ஒரு கருஞ்சாந்துப் பொட்டு வைத்துக் கொள்வாள் அவள். அப்பா சேர்த்து வைத்துவிட்டுப் போகாவிட்டாலும் அவளுடைய உடம்பை மூளியாக வைத்துவிட்டுப் போய்விடவில்லை. புன்னகையோடு சில பொன்னகைகளும் இருந்தன அவளுக்கு. பொன் வளையல்கள் இருந்தாலும் கை நிறைய கருப்பு வளையல்கள் அணிந்து கொள்வதில் அவளுக்கு மிகவும் பிரியம். இழைத்த தங்கத்தில் வரி வரியாகக் கரும்பட்டுக் கயிறு சுற்றின மாதிரிச் செழிப்பான அவளுடைய வெண்சிகப்புக் கைகளில் அந்தக் கரிய வளையல்கள் தனிக்கவர்ச்சி தரும். நகைப்பெட்டிக்குள் கிடந்த பொன் வளையல்கள் இரண்டையும் ஓர் அட்டைப் பெட்டிக்குள் வைத்துக் கையோடு எடுத்துக் கொண்டாள். புத்தகக் கடைக்காரரும் கையை விரித்து விட்டால், பணத்துக்கு எங்கே போவது? வாடகை பாக்கி கொடுப்பதற்கும், வேலை கிடைக்கிறவரை வீட்டுப்பாட்டை சமாளித்துக் கொள்வதற்கும் கையில் ஏதாவது வேண்டுமே. வளையல்களைப் போட்டுப் பணமாக மாற்றிக் கொள்ள நினைத்தாள் அவள். "அக்கா! உனக்கு இந்தப் பொட்டு ரொம்ப நல்லாயிருக்கு. இனிமேல் தினம் இது மாதிரி வச்சுக்கணும்" என்று சொல்லிவிட்டுச் சிரித்தாள் மங்கையர்க்கரசி. அப்பா போன துக்கத்தைக் கொண்டாட வீட்டிலேயே அடைந்து கிடந்த நாட்களில் பூரணி குளிப்பதற்கு அதிகமாகத் தன்னை எந்த அலங்காரமும் செய்து கொண்டதில்லை. இன்று திடீரென்று அக்காவின் திலகம் குழந்தைக்கு மிகுந்த வியப்பையும் மகிழ்ச்சியையும் அளித்தது போலும்! "ஆகட்டும் மங்கை! தினம் இதுமாதிரி பொட்டு வைச்சுப்பேன். நான் சொல்கிறபடி நீ இப்போது கேட்க வேண்டும். நான் அவசரமாக மதுரைக்குப் போய்விட்டு வரவேண்டியிருக்கிறது. உன்னை ஓதுவார் தாத்தா வீட்டிலே விட்டுவிட்டுச் சாவியையும் கொடுத்துவிட்டுப் போகிறேன். நீ அண்ணன் பள்ளிக்கூடத்திலேர்ந்து வரவரைக்கும் அங்கே சமர்த்தாக இருக்க வேண்டும். முரண்டு பிடிக்கக்கூடாது; அழவும் கூடாது." "நானும் உங்ககூட மதுரைக்கு வரேனக்கா?" சொல்லிவிட்டு குழந்தை கண்களை அகல விழித்துக் கெஞ்சுகிற பாவனையில் பூரணியின் முகத்தைப் பார்த்தாள். "நீ வேண்டாம் கண்ணு. உன்னால என்னோடு அலைய முடியாது. நான் போயிட்டு சுருக்க ஓடி வந்துவிடுவேன். கேட்டுக்கிட்டு அவங்க வீட்டிலே இரு." குழந்தை ஒருவழியாக இருக்க ஒப்புக் கொண்டுவிட்டது போல் அடங்கிவிட்டாள். பூரணிக்குத் தலை பின்னிக் கொள்ளக்கூட நேரம் இல்லை. அப்படியே எண்ணெய் தடவி வாரி முடிந்து கொண்டாள். கருகருவென்று முழங்கால் வரை தொங்குகிற பெரிய கூந்தல் அவளுக்கு. இரட்டைச் சவுரி வைத்தும் போதாமல் நாய் வால்போலச் சிறிய பின்னல் போட்டுக்கொள்ளும் எதிர்வீட்டுக் காமாட்சிக்குப் பூரணியிடம் ஒரே பொறாமை. காமாட்சி ஓதுவார் தாத்தாவின் பேத்தி. அவளுக்குப் பூரணியைவிட இரண்டு மூன்று வயது குறைவு. சிறு வயதிலேயே இருவரும் நெருங்கிப் பழகின தோழிகள். இரண்டு வீடுகளும் ஒரே ஊரில் ஒரே தெருவில் எதிர் எதிரே இருக்கிற உறவில் பிறந்த ஒரு நெருக்கமும் - அந்த குடும்பங்களுக்கு இடையே உண்டு. பூரணி, வீட்டுக் கதவைப் பூட்டிச் சாவியைக் கையில் எடுத்துக் கொண்டு குழந்தை மங்கையர்க்கரசியோடு எதிர் வீட்டுக்குப் போய் நுழைந்தாள். வாசல் திண்ணையில் சிவப்பழமாக உட்கார்ந்துகொண்டு அந்த வயதிலும் மூக்குக் கண்ணாடி இல்லாமல் தேவாரப் புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்த கிழவர் நிமிர்ந்தார். இந்தக் கிழவர் மேல், அழகிய சிற்றம்பலம் வாழ்ந்த காலத்தில் பெரு மதிப்பு வைத்திருந்தார். "அடடே! பூரணியா... வா, அம்மா! எங்கேயோ புறப்பட்டுக் கொண்டிருக்கிறாய் போலிருக்கிறதே! மதுரைக்கா?" கிழவருக்குக் கணீரென்று வெண்கல மணியை நிறுத்தி நிறுத்தி அடிப்பது போன்ற குரல். "ஆமாம் தாத்தா! குழந்தையைப் பார்த்துக் கொள்ளுங்கள். தம்பிகள் வந்தால் சாவியைக் கொடுத்துவிட வேண்டும். அவ்வளவுதான்." பூரணி சாவியை அவருக்குப் பக்கத்தில் வைத்தாள். குழந்தை தானாகவே உரிமையோடு கிழவரின் மடியின்மேல் போய் உட்கார்ந்துகொண்டு "இன்னிக்கு நெறையப் புது கதையாய்ச் சொல்லணும் தாத்தா... பழைய கதையாகச் சொல்லி, 'அம்மையார்க் கிழவி', 'குருவி காக்காய்னு' ஏமாத்தப் படாது" என்று தொணதொணக்கத் தொடங்கிவிட்டாள். வாசலுக்கு நேரே உள்ள கூடத்தில் காமாட்சியும் அவள் பாட்டியும் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். "பூரணி! இப்படிக் கொஞ்சம் உள்ளே வந்துவிட்டுப் போயேன்" என்று குரல் கொடுத்தாள் காமாட்சி. "அப்புறம் வருகிறேன் காமு, இப்போது நான் அவசரமாகப் போகவேண்டும்" என்று கிளம்பினாள் பூரணி. "அப்படி என்ன அவசரம் அம்மா?" என்று கிழவர் குறுக்கிட்டார். தந்தைக்கு ஒப்பான அந்தக் கிழவரிடம் தன் துன்பங்களைச் சொல்வதில் தவறில்லை என்று எண்ணினாள் பூரணி. வீட்டுக்காரர் காலி செய்துவிட்டுப் போகச் சொல்வதையும் அவரிடம் கடன்பட்டிருப்பதையும் வீட்டின் ஏழ்மையையும் உடைத்துச் சொல்லிவிடலாமென்று நினைத்தாள். ஆனால் அவளுக்கு நா எழவில்லை. மனமும் நாவும் நெகிழ்ந்துவிட இருந்த அந்தச் சமயத்தில் தந்தையின் இரத்தத்தில் ஊறிவந்த பண்பு காப்பாற்றியது. நம்முடைய ஏழ்மையையும் துன்பங்களையும் கூடுமானவரை நம்மைக் காட்டிலும் ஏழ்மையும் துன்பமும் உள்ளவர்களிடம் சொல்லாமல் இருப்பதே நல்லது. குறைந்த வருவாயும் நிறைந்த மனிதர்களும், செலவுகளும் உள்ள ஓதுவார் குடும்பத்துக்கு நம்முடைய துன்பங்களும் தெரிய வேண்டியது அநாவசியம் என்று அவளுக்குப்பட்டது. தனக்கு வந்த துன்பங்களையும் பிரச்சினைகளையும் தாமே ஏற்றுக்கொண்டு சமாளிப்பதுதான் நாகரிகம் என்பது அப்பாவின் கருத்து. அவற்றை அடுத்தவர்களுக்குத் தெரியும்படி நெகிழவிட்டு அனுதாபம் சம்பாதிப்பது கூட அநாகரிகம் என்கிற அளவு தன்மானமுள்ளவர் அப்பா. பூரணி அப்பாவின் பெண். அதே தன்மானமுள்ள இரத்தம் தான் அவளுடைய உடலிலும் ஓடுகிறது. "ஒன்றுமில்லை தாத்தா, அப்பாவின் 'பிராவிடண்டு பண்டு' விஷயமாக கல்லூரி முதல்வரைப் பார்த்துச் சொல்ல வேண்டும். வேறு ஒன்றும் இல்லை" என்று நல்லதை மட்டும் அவரிடம் சொல்லி முடித்தாள். ஒளியும் எழிலும் நிறைந்த செங்கமலப்பூ உயரமான கொடியோடு ஒல்கி, ஒல்கித் தென்றலில் அசைந்தாடிக் கொண்டு நடப்பதுபோல் பூரணி தெருவில் செல்லும்போதுதான் எத்தனை கண்கள் அவளைப் பார்க்கின்றன! சந்நிதித் தெருவின் வடக்கில் வந்து, மயில் மண்டபத்தைக் கடந்து போலீஸ் ஸ்டேஷன் ஸ்டாப்பில் அவள் பஸ்ஸுக்காக நின்றாள். எதிர்ப்புறம் தென்கால் கண்மாயின் கரையில் துணி வெளுப்போர் கும்பல் கூடியிருந்தது. சலவை செய்வோர் உலர்த்திய பலநிறத் துணிகள் உயர்ந்த மண்கரை மேல் நிறங்களின் கலவைகளைக் காண்பித்துக் கொண்டிருந்தன. கண்மாயின் நீர்ப்பரப்புக்கு அப்பால் வடமேற்கே நெல் வயல்களும், கரும்புத்தோட்டங்களும், கொடிக்கால்களும், தென்னைக் கூட்டமுமாக அழகு, திரைகட்டி எழுதியிருந்தது. அந்த நேரத்தில் அந்த 'ஸ்டாப்'பில் பூரணி ஒருத்திதான் தனியாக நின்று கொண்டு பஸ்ஸை எதிர்பார்த்தாள். தெற்கேயிருந்து சென்ட்ரல்-திருப்பரங்குன்றம் ஐந்தாம் நம்பர் பஸ் வந்து நின்றது. அவள் ஏறிக்கொண்டாள். கண்டக்டர் 'வாங்க அம்மா!' என்று முகம் மலர வணக்கம் தெரிவித்தார். அப்பாவுக்கு இப்படி எத்தனையோ பழைய மாணவர்கள். அடிக்கடி அப்பாவோடு அவளையும் பார்த்திருக்கிற காரணத்தால் எல்லோரும் அவளை இன்னாரென்று தெரிந்துகொண்டிருந்தனர். முழுமையாக இருப்பு என்ற பேரில் கைவசம் இருந்த அந்த எட்டணாவைக் கொடுத்துக் கல்லூரி நிலையத்துக்கு ஒரு டிக்கெட்டும், பாக்கியும் வாங்கிக் கொண்டாள். கண்டக்டர் அருகில் வந்து நின்று அவளிடம் அப்பாவின் மரணத்துக்குத் துக்கம் விசாரித்தார். அவளும் ஏதோ பதில் சொன்னாள். கல்லூரியின் முதல்வர் அவளை அன்போடு வரவேற்று ஆதரவாக மறுமொழி அளித்து அனுப்பினார். அப்பாவின் பிராவிடண்ட் பண்டு பணம் இயன்ற அளவு விரைவில் கிடைக்க உதவுவதாகவும் கூறி அனுப்பினார். அங்கிருந்து புது மண்டபம் வரை நடந்தே போனாள். தெருவில் போவோரும் வருவோரும் முறைத்துத்தான் பார்க்கிறார்கள். மனிதர்களுக்குத்தான் எத்தனை விதமான பார்வை! வண்டியிலோ ரிக்ஷாவிலோ போனால் இப்படி யாரும் விழுங்குவதுபோல் பார்க்க மாட்டார்கள். ஆனால் வண்டிக்காரனும் ரிக்ஷாக்காரனும் சும்மாவா ஏற்றிக் கொண்டு போகிறான்? கையில் இருக்கிற மொத்த ஆஸ்தி ஐந்து அணா. திரும்பிப் போகப் பஸ் சார்ஜ் மூன்றணா ஆகுமே! ஏழ்மையை வெளிக்காட்டி விடுவது தப்பே இல்லை. பொய்யாக நடிப்பது தான் தப்பு. ஆயிரமாயிரம் சின்னத்தனமான மனிதர்களின் கண்களில் மிதந்து கொண்டு, பூரணி என்கிற அழகு - பழமை வாய்ந்த மதுரை நகரின் தெருக்களில் பூம்பாதங்கள் கொப்பளித்துக் கன்றிப் போகும்படி வெறுங்கால்களால் நடந்து கொண்டிருந்தது. புது மண்டபத்தின் தெருக்கோடியில் புகுந்து கவனமின்றியோ அல்லது வேண்டுமென்றோ இடிப்பதுபோல் வரும் ஆண்கள் கூட்டத்துக்குத் தப்பி மெல்ல விலகி நடந்து அப்பாவின் பதிப்பாளர் முன் போய் நின்றாள் பூரணி. "வாங்க தங்கச்சி; ஒரு வார்த்தை சொல்லியனுப்பியிருந்தால் நானே வந்திருப்பேன். நீங்க எதுக்கு சிரமப்படணும்" என்று தம்முடைய வயதின் உரிமையை நிலைநாட்டுவதுபோல் விளித்து வரவேற்றார் அவர். பூரணி நெருப்புப் பிழம்புபோல் அந்தக் கும்பலின் நடுவே நின்றுகொண்டு அவரை உறுத்துப் பார்த்தாள். அந்தப் பார்வைக்குக் கடைக்காரனிடம் பதில் இல்லை. அவளுடைய கண்கள் அபூர்வமானவை; கூர்மையானவை. அவற்றுக்குத் தூய்மை அதிகம். "தங்கச்சிக்கு கோபம் போலிருக்கிறது" என்று சிரித்துக் கொண்டே கழுத்தறுக்க முயன்றார் அவர். "எனக்கு வேண்டியது இந்தச் சிரிப்பும் இந்த மழுப்பல் வார்த்தைகளும் இல்லை. வியாபாரியின் சிரிப்பில் குற்றம் மறைக்கப்படுகிறது. மறைந்து கொள்கிறது. அப்பாவின் புத்தகங்களுக்கு மூன்று வருட இராயல்டித் தொகை உங்களிடம் பாக்கி நிற்கிறது. கேட்டால் புத்தகம் போதுமான அளவு விற்கவில்லை என்று பொய் சொல்கிறீர்கள். உங்களிடமிருந்து நியாயமான பதில் கிடைக்கவில்லையானால் நான் சட்டப்படி ஏதாவது செய்துதான் ஆகவேண்டும்!" என்று பூரணி கொதிப்போடு முறையிட்டாள். அவ்வளவு பெரிய கும்பலுக்கு நடுவில் ஒரு பெண் பேசி மானத்தை வாங்கிவிட்டதே என்ற உறைப்பு இருந்தாலும் விநயமாகச் சமாளித்தார் பதிப்பாளர். "இந்த மாத முடிவுக்குள் கணக்கெல்லாம் பார்த்து ஏதாவது செய்கிறேன் அம்மா!" என்று விடை கொடுத்ததுபோல் கைகூப்பினார். அந்த கைகூப்புதலுக்கு 'இனிமேலும் நின்று, பேசிக்கொண்டிருக்கக்கூடாது, போய்விடு' என்பது அர்த்தம்போலும்! பூரணி அங்கிருந்து வெளியேறினாள். அப்பாவே மனம் வெறுத்துச் சலித்துப்போய், "அவன் பணம் தந்தாலும் சரி, தராவிட்டாலும் சரி" என்று கைவிட்ட ஆள் அந்தப் பதிப்பாளர். "அறிவைப் பெருக்குகிற புத்தக வெளியீட்டுத் தொழிலில், பணத்தைப் பெருக்குகிற மனமுள்ள வியாபாரிகள் ஈடுபட்டு, எழுதுகிறவன் வாயில் மண் போடுகிறார்களே" என்று வேதனையோடு கூறுவார் அப்பா. புதுமண்டபத்துக்கு எதிரே மீனாட்சி கோயில் கிழக்கு கோபுரம் அழுக்குப் படாத உண்மையாய் மனித உயரத்தைச் சிறிதாக்கிக் கொண்டு பெரிதாய் நின்றது. அதே இடத்தில் தெருவில் இரண்டு ஓரமும் பழைய பூட்டுச் சாவி குடை ரிப்பேர்க் கடைகள் தெருவை அடைத்துக் கொண்டிருந்தன. மாலை நேரமாகிவிட்டாலே அந்த இடத்துக்குத் தனிக் கலகலப்பும் அழகும் வந்துவிடும். பழைய காலத்தில் அதற்கு 'அந்திக்கடை வீதி' என்றே பெயர் இருந்ததாக அப்பா சொல்லுவார். அந்தக் கோபுரத்தையும் பெரிய கோயிலையும் ஆரவாரமும் நறுமணங்களும் மிகுந்த அம்மன் சந்நிதி முகப்பையும் கடந்து நடந்தாள் பூரணி. இன்னும் ஆயிரம் வருடங்கள் ஆனாலும் ஆயிரம் செயற்கைகள் வந்து கலந்தாலும், மதுரையின் தெய்வீகப் பழமையை யாராலும் மாற்றிவிட முடியாதென்று தோன்றியது பூரணிக்கு. அம்மன் சந்நிதிக்குள் நுழைந்தாள். பூக்கடைகளும் சந்தனமும் மணத்தன. வளையல் கடைகள் ஒலித்தன. ஜீவகோடிகள் நுழைந்து புறப்படும் பிரகிருதி வாசலைப் போல் அந்த வாசலில் புனிதமான ஆரவாரம் குறையாமல் ஒலித்துக் கொண்டிருந்தது. பொற்றாமரைக் குளத்தைக் கடந்து அம்மன் சந்நிதிக்குள் போய் தரிசனத்தை முடித்துக் கொண்டு தெற்குக் கோபுரவாயில் வழியாகத் தெற்காவணி மூலவீதியை அடைந்தாள் பூரணி. தன்னை யாராவது பார்க்கிறார்களா என்று சுற்றும் முற்றும் ஒரு தடவை பார்த்துக் கொண்டு கூட்டமில்லாத ஒரு நகைக்கடைக்குள் நுழைந்தாள். நான்கு பவுன் வளையல்கள். ஏறக்குறைய முந்நூறு ரூபாய்க்கும் அதிகமாகப் பழைய விலைப் பொருளாக எடுத்துக் கொண்டு பணத்தை எண்ணிக் கொடுத்தார்கள். பேசாமல் பணத்தை எண்ணி வாங்கிக் கொண்டு வீட்டுக்காரர் வீட்டுக்குப் போனாள். ஆறுமாத வாடகைப் பாக்கியைக் கொடுத்து ரசீது வாங்கிக் கொண்டு, "இந்த மாத முடிவுக்குள் காலி செய்து விடுகிறேன்" என்று சொல்லிவிட்டு வந்தாள். வளையல் போட்ட பணத்தில் ஏழு ரூபாயும் பழைய ஐந்து அணாவும் மடியில் இருந்தன. அப்பாவுக்கு வேண்டியவரும் நகரத்தில் செல்வமும் செல்வாக்கும் உள்ளவருமான பிரமுகர் ஒருவருடைய வீடு பக்கத்துத் தெருவிலே இருந்தது. அவர் நேர்மையானவர். போய்ப் பார்த்துத் தன் நிலையைச் சொன்னால் ஏதாவது வேலைக்கு வழி செய்வார் என்று நம்பினாள் பூரணி. ஆனால் அங்கேபோய் விசாரித்ததில் அவர் வெளியூர் போயிருப்பதாகவும், வர இரண்டு நாட்களாகுமென்றும் தெரிந்தது. வந்தபின் பார்த்துக் கொள்ளலாம் என்று திரும்பினாள். மறுபடியும் சென்ட்ரலுக்குப் போய் பஸ் ஏறி அவள் திருப்பரங்குன்றத்தை அடைந்தபோது இருள் மயங்கும் போதாகிவிட்டது. குன்றின் உச்சியிலிருந்து மசூதிக்கருகில் நீல மின்விளக்கு ஒளியுமிழ்ந்து கொண்டிருந்தது. தெருவில் கோயிலுக்குப் போகும் கூட்டம் மிகுந்திருந்தது. தெருவில் தன் வீட்டு வாசலில் புத்தகமும் கையுமாக நிறையப் பள்ளிக்கூடத்துப் பையன்கள் கூடி நிற்பதைப் பூரணி கண்டாள். குதிரை வண்டி ஒன்று நின்றிருந்தது. ஓதுவார் தாத்தாவும் இருந்தார். பூரணி வீட்டை நெருங்கியதும் ஓதுவார்த் தாத்தா, கவலையும் பரபரப்பும் நிறைந்த முகத்தோடு அவளை எதிர்கொண்டு வந்து சொன்னார். "உனக்கு இருக்கிற கவலையும் துக்கமும் போதாதென்று சின்னத்தம்பி சம்பந்தன் பள்ளிக்கூடத்தில் மரமேறி விழுந்து கையை வேறு ஒடித்துக் கொண்டு வந்திருக்கிறான் அம்மா..." பூரணி பையன்கள் கூட்டத்தை விலக்கிக் கொண்டு உள்ளே வேகமாக ஓடினாள். குறிஞ்சி மலர் : சிறப்புரை
முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
கனவு நிறைகிறது
|