குறிஞ்சி மலர் - Kurinji Malar - தீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் - Deepam Naa. Parthasarathy Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com



15

     "மங்கைய ராகப் பிறப்பதற்கே - நல்ல
     மாதவம் செய்திடல் வேண்டும் அம்மா
     பங்கயக் கைநலம் பார்த்தலவோ - இந்தப்
     பாரில் அறங்கள் வளரும், அம்மா!"

- கவிமணி

     பூரணி கொண்டு வந்த தந்தியை முருகானந்தம் படித்தான். தன்னிடமிருந்த புகைப்படங்களையும் வசந்தா கைப்பட எழுதிய கடிதத்தையும் காட்டி அவளுக்கு விளக்கிச் சொன்னான்.

     "சினிமாவில் கதாநாயகியாய் நடிக்க வாய்ப்பு உண்டாக்கித் தருவதாக இப்படி எத்தனை பேரை ஏமாற்றிப் பணம் பறித்திருக்கிறானோ அந்த ஆள்? அவனுடைய போதாத வேளை; இங்கே மதுரையில் என்னிடம் உடைகள் தைத்து வாங்கிக் கொண்டு இந்த மணிபர்ஸையும் மறந்து வைத்துவிட்டுப் போய்விட்டான். இந்தத் தடவை நிச்சயமாக அகப்பட்டுக் கொண்டு கம்பி எண்ணப் போகிறான் பாருங்கள். அக்கா... நான் இவனைச் சும்மா விடப்போவதில்லை. எப்படியாவது கண்டுபிடித்து உள்ளே தள்ளப் போகிறேன்" என்று மணிபர்ஸின் மைக்கா உறைக்குள் இருந்த ஆணின் படத்தை பூரணிக்குக் காட்டிச் சினமாகப் பேசினான் முருகானந்தம். அப்போது அருகிலிருந்த அரவிந்தன் பூரணியின் முகத்தை நோக்கி முறுவல் செய்தவாறு கேட்கத் தொடங்கினான்:

     "நீ என்னவோ நாள் தவறாமல் தமிழ்நாட்டுப் பெண்மையின் சிறப்பையும் பண்பாட்டையும் பற்றி உங்கள் மங்கையர் கழகத்தில் சொற்பொழிவுகள் செய்வதாகச் சொல்லிப் பெருமைப்பட்டுக் கொள்கிறாய்! வளர்கின்ற தலைமுறையைச் சேர்ந்த புதுப்பெண்கள் எப்படி இருக்கிறார்கள் பார்த்தாயா? தொட்டியில் வளரும் குரோட்டன்ஸ் செடி மாதிரி வேரூன்றிக் கொள்ள இடமில்லாமல் வெறும் கவர்ச்சி மட்டும் நிறைந்த வாழ்க்கைக்கு ஆசைப்பட்டுப் பதிவின்றி வாழ்கிறார்களே! சினிமாவில் நடிக்க இடம் வாங்கித் தருகிறேன் என்றவுடன் படிப்பு, குடும்பப் பெருமை, செல்வாக்கு எல்லாவற்றையும் காற்றில் பறக்க விட்டுவிட்டு முன்பின் தெரியாத ஆணுடன் கிளம்புகிற அளவுக்கு அசடாய்ப் பைத்தியமாய் நிலையிழந்து ஓடலாமா ஒரு பெண்? பாதி வழியில் ஏமாந்து, பணத்தைப் பறிகொடுத்துவிட்டுத் திரும்பி வரச் செலவுக்கு இல்லாமல் பெற்றவளுக்குத் தந்தி கொடுக்க வெட்கமாக இராதா ஒரு பெண்ணுக்கு! தப்பு செய்த மனமும் கைகளும் அதற்காகக் கூச வேண்டாமோ?"

     "பெண் தன்னைப் பற்றி அதிகக் கவலை கொள்ள நேராமல் சமூகத்தின் பொது அறங்களே அவளுடைய நிறைக்குக் காவலாகி அவளைக் காத்த காலத்தில் கூட அவளுக்கு அந்தக் கூச்சமும் வெட்கமும் இருந்தது! ஆனால் இன்றோ சமூகத்தின் பொது அறங்கள் மாறி வளர்ந்துவிட்டன. பெண் தன்னைத்தானே காத்துக் கொள்ள வேண்டிய காலம் இது. அசட்டு ஆசைகளால் ஏமாறக்கூடாது. ஆனால் இவள் ஏமாந்துவிட்டாள். நான் கருத்துக்களைக் கூறும் முறையிலும், சொற்பொழிவு செய்வதிலும் கேட்பவர் பின்பற்றத் தூண்டும் சக்தி குறைவு என்பதற்கு இது ஒரு அடையாளமோ என்று தோன்றுகிறது அரவிந்தன்! என் ஆற்றலை நான் இன்னும் அதிகப்படுத்திக் கொள்ளவேண்டும்" என்றாள் பூரணி. அரவிந்தனுடைய அந்தப் பேச்சு, 'பிறருக்கு வழிகாட்டியாகிற ஆற்றலை உன்னிடம் நீ இன்னும் அதிகமாகத் தூண்டிவிட்டுக் கொள்ளவேண்டும்' என்று தன்னை மென்மையாகக் குத்திக் காட்டியது போல் தொனித்தது பூரணிக்கு. இந்தப் பேச்சை இதற்கு மேல் வளர்க்காமல், "நானும் அந்த அம்மாளும் காரில் திருச்சிக்குப் புறப்படுகிறோம். எங்களோடு உங்கள் இருவரில் யாராவது ஒருவர் உடன் வந்தால் நல்லதென்று அந்த அம்மா கருதுகிறார்கள்" என்று நடக்கவேண்டிய காரியத்தை அவசரப்படுத்திக்கொண்டு சொன்னாள் பூரணி.

     "முருகானந்தம்! நீ இவர்களோடு திருச்சிக்குப் போய்விட்டு வா. தையற்கடைச் சாவியை என்னிடம் கொடுத்துவிட்டுப் போ. கடை வேலையாட்கள் வந்தால் நான் சாவியைக் கொடுத்து விடுகிறேன்" என்று முருகானந்தத்தைப் புறப்படச் சொன்னான் அரவிந்தன்.

     "நான் எதற்கு அரவிந்தன்? அந்த அம்மாவும் பூரணியக்காவும் போனால் போதுமே. துணைக்கு கார் டிரைவர் இருப்பான்."

     "இல்லை, நீ கட்டாயம் போக வேண்டும். ஏதாவது வம்பு வந்தாலும் சமாளிப்பதற்கு நீதான் சரியான ஆள். மறுக்காமல் போய்விட்டு வா. கார் பெரியது. மணிக்கு ஐம்பது மைல் போனால் எப்படியும் பகல் பன்னிரண்டு மணிக்குள் திரும்பி விடலாம்." அரவிந்தன் இவ்வாறு வற்புறுத்தவே முருகானந்தத்தால் தட்டிக் கழிக்க முடியவில்லை. தையற்கடைச் சாவியைக் கொடுத்துவிட்டுப் புறப்பட்டான். போகும்போது பூரணி அரவிந்தனிடம் கூறினாள்:

     "நீங்கள் ஓர் உதவி செய்யவேண்டும் அரவிந்தன். முடிந்தால் இந்தப் பையனைத் தேடிப் பிடித்துக் கொண்டு வந்து கண்டிக்க வேண்டும். எக்கேடு கெட்டுப் போகட்டும் என்றுதான் பேசாமல் இருக்க முயன்றேன். ஆனால் மனம் கேட்கவில்லை. உடன்பிறந்த பாசம் எதையாவது நினைத்து வேதனைப்படச் சொல்கிறது"

     "யார், உன் தம்பி திருநாவுக்கரசைப் பற்றித்தானே சொல்கிறாய். நான் பார்த்து அழைத்து வருகிறேன். நீ போய் வா" என்றான் அரவிந்தன்.

     பூரணியையும் முருகானந்தத்தையும் அனுப்பிவிட்டு உள்ளே வந்து அமர்ந்தான் அரவிந்தன். முதல்நாள் மாலைக்குப் பின் நடந்த நிகழ்ச்சிகளை ஒவ்வொன்றாய் எண்ணிப் பார்த்தபோது அவன் உள்ளம் தெளிவிழந்து தவித்தது. பூரணியின் தம்பி கெட்ட பழக்கங்களால் இப்படி ஆகிவிட்டானே என்று நினைக்கும் போது துயரமும் கவலையும் கொண்டான். அச்சகத்தின் பின்பக்க வழியாக நெருப்பு வைக்கும் தீயநினைவோடு வந்து போன ஆளை எண்ணியபோது பொறாமையின் சிறுமையை எண்ணி வேதனை கொண்டான். தாயைக் கதிகலங்கச் செய்துவிட்டுப் பணத்தோடு ஓடிப்போன மங்களேஸ்வரி அம்மாளின் பெண்ணைப் பற்றி எண்ணியபோது அனுதாபமும் இரக்கமும் உற்றான். குழப்பமான மன நிலையோடு அறையிலிருந்தவாறே வெளியே நோக்கின அவன் கண்கள். எதிரே சன்னலுக்கு நேர் கிழக்கே பூமியைப் பிளந்துகொண்டு மேலெழுந்து நிற்கும் சத்தியம்போல் கோபுரம் விடியற்காலை வானத்தின் பின்னணியில் அற்புதமாய்த் தெரிந்தது. கூடலழகப் பெருமாள் கோயிலுக்கு வைகை நதியிலிருந்து திருமஞ்சன நீர் சுமந்து செல்லும் யானையின் மணியோசை காலைப்போதின் அமைதி கவிந்த வீதியெல்லாம் நிறைத்துக் கொண்டு ஒலிப்பது போல் அழகாக ஒரு பிரமை. எதிர்ப்பக்கம் ஒரு வீட்டு மாடியிலிருந்து சங்கீதம் பழகும் இளம் பெண் ஒருத்தி உலகத்தின் இன்பமயமான சௌந்தர்ய சக்திகளையெல்லாம் தட்டி எழுப்புவது போல் வீணையையும் தன் குரலையும் இனிமைக்கெல்லாம் இனிமையான ஒரு பேருணர்வில் குழைத்து உதயராகம் பாடிக்கொண்டிருந்தாள். குழாயடியில் குடங்கள் மோதும் விகாரமான ஓசையும் வாய்கள் மோதும் வசைமொழிகளுமாக இது மண்ணுலகம் தான் என்று நினைவுபடுத்துகிறார்போல் ஓர் அடையாளம் அற்புதமான இந்த வைகறைச் சூழ்நிலையில் மலர்வதற்குத் துடிக்கிற அரும்புகள் போல் அவன் மனத்தில் சில நினைவின் அரும்புகள் முறுக்கு நெகிழ்ந்தன. சட்டைப் பையிலிருந்து எப்போதும் தன்னிடம் இருக்கும் சிறிய திருக்குறள் புத்தகத்தை எடுத்துப் பிரித்தான். அந்தச் சமயத்தில் தன் மனத்தில் அரும்பியிருந்த சிந்தனைகளுக்கு ஏற்ற சில குறட்பாக்களைத் தேடிப் படித்து அவற்றின் உணர்வில் ஆழ்ந்தான். இந்த மாதிரி மனநிலை அடிக்கடி உண்டாகும் அவனுக்கு. சித்தப்பிரமை பிடித்த மாதிரி உட்கார்ந்திருப்பான். சில வேதனை நிறைந்த சிந்தனைகளின் போது கண்கள் கலங்கி விடுவதும் உண்டு. இப்படிப்பட்ட உருக்கமான மனநிலை முற்றும் போது அவன் மன விளிம்பில் கவிதைகளுக்கான செழிப்புள்ள சொற்கள் ஒன்றுகூடி உருவாகி வெளிவரத் துடிக்கும். கருவிலிருந்து வெளிவரத் துடிக்கும் நிறைமாதத்துக் குழந்தைபோல் இந்த வேதனை அவனது மனத்தின் இரகசியம். இத்தகைய சிந்தனைச் சூழ்நிலையில் உள்ளத்தின் மலர்ச்சியையும் சேர்த்து அவன் முகத்தில் பார்க்கலாம். கையைக் கட்டிக்கொண்டு நிமிர்ந்து நிற்கிறாற்போல் மலர்ந்த முகத்தோடு ஒரு விவேகானந்தர் படம் பார்த்திருப்பீர்களே! அந்த முகத்தில் உங்களைக் கட்டுப்படுத்தி நிற்க வைத்துவிடுகிற ஏதோ ஒரு களை இருக்கும். சிந்தனையில் பார்க்கும் போது அரவிந்தனின் முகத்தில் நிலவும் ஒளி இந்த வகையைச் சேர்ந்ததுதான்.

     மூழ்கிச் சிந்திக்கிறபோது உடம்பில் வேர்க்கும் அவனுக்கு. ஆனால் அந்த சிந்தனை முடிகிறபோதோ, காயரும்பாக இருந்த பிச்சிமொட்டு இறுக்கம் நெகிழ்ந்துபோய் பிச்சிப்பூவாக மலர்கின்றபோது மணக்குமே ஓர் அற்புத மணம், அதுபோல் மணக்கும் அவன் உள்ளம். மணத்தின் சிறப்பால் மோர்ந்து பார்க்கிறவர்களையெல்லாம் பித்துக்கொள்ளச் செய்வதனால்தான் இந்தப் பூவுக்குப் பிச்சி, பித்திகை என்று பெயர் வந்திருக்கலாமோ? என்று அரவிந்தன் நினைப்பான். இந்தப் பூ அருகில் இருக்க வேண்டுமென்பதில்லை. இதன் மணத்தைப் பற்றி நினைத்தாலே உள்ளம் துள்ளும் அவனுக்கு. 'கடவுள்' உலகத்தைப் படைக்கும்போதே இன்ன இன்ன துர்நாற்றங்கள் உலகத்தில் உண்டாகலாம் என்பதை அனுமானம் செய்துகொண்டுதான் உலகத்தில் மணமுள்ள பூச்செடிகளைப் படைத்தார் என்று கற்பனை செய்து அரவிந்தன் ஓர் அழகான கவிதை எழுதியிருந்தான். எப்போதோ அதை அவனுடைய நோட்டுப் புத்தகத்தில் படித்துவிட்டுப் பூரணி அவனை ஒரு கேள்வி கேட்டாள்.

     "இன்னோர் அபூர்வமான அழகு உங்களுக்குத் தெரியுமா அரவிந்தன்? அப்பா தமிழ்ச் சொற்களின் ஒலி வனப்புப் பற்றி ஓர் ஆராய்ச்சி நூலை எழுதிக் கொண்டிருந்தபோதே எனக்கு இந்த உண்மையைச் சொல்லிக் கொடுத்தார். 'பூ, மலர்' இந்த இரண்டு தமிழ் வார்த்தைகளில் எதைச் சொல்லிப் பார்த்தாலும், சொல்வதற்காக வாய் திறக்கும் போது உங்கள் உதடுகளே பூ மலர்வதுபோல் மலர்ந்து பிரியும். ப, ம இந்த இரண்டு எழுத்துக்களையும் உதடு மலராமல் சொல்லவே முடியாது."

     தற்செயலாகச் சந்திக்கும் போதும் உரையாடும் போதும் கூட தமிழில் இப்படி எத்தனையோ நுணுக்கமான செய்திகளை அரவிந்தனுக்குச் சொல்லியிருந்தாள் பூரணி. அவள் தன் அன்பை மட்டும் அவனுக்குத் தந்துகொண்டிருக்கவில்லை. அன்போடு சேர்த்துத் 'தமிழ்' என்னும் அளப்பரிய செல்வத்தையும் கலந்து தந்துகொண்டிருந்தாள். பூரணியோடு அவன் பழகுவதில் மூன்றுவித நிலைகள் இருந்தன.

     அவள் பேராசிரியர் அழகிய சிற்றம்பலத்தின் பெண். அவள் தந்தையின் நூல்களை அவளிடமிருந்து வாங்கி வெளியிடுகிற முறையில் ஓர் உறவு. அந்த உறவுதான் மற்ற உறவுகளுக்கும் காரணம். ஒருவருக்கொருவர் தத்தம் இலட்சியங்களையும், உள்ளங்களையும் உணர்ந்து பழகிய அன்புப் பழக்கம் ஓர் உறவு. அது அந்தரங்கமான உறவு. இதயங்களுக்கு மட்டுமே புரிந்த உறவு அது. வாழ்க்கையின் நடைமுறையில் ஆண்களும் பெண்களும் முகத்தையும் உடம்பையும் பார்த்துக் கொள்கிற இச்சைக் காதல் அன்று அது. மெல்லிய மன உணர்வுகளில் நுணுக்கமாகப் பிறக்கும் காவியக் காதல் அவர்களுடையது. மூன்றாவது நிலை அறிவுக்கடலாய் விளங்கும் அவள், தமிழில் நுணுக்கங்களைப் பற்றிப் பேசுகிறபோது அவன் சாதாரண மாணவனைப் போல் ஆகிக் கேட்டுக்கொண்டிருக்கிற உறவு. அரவிந்தன் கவிஞன். சிந்தனையாளன். இலட்சியவாதி. அழகன். எல்லாமாக இருந்தும் ஞானச்செல்விபோல் அவள் தமிழை வாரி வழங்கும்போது அவள் முன் தன் கம்பீரங்களை மறந்து சிறுபிள்ளைபோல் கேட்டுத் தெரிந்து கொள்வதே இன்பமாக இருந்தது அவனுக்கு. முருகானந்தம் தன்னிடம் அப்படி இருப்பதையும் அவன் உணர்ந்திருந்தான். நண்பனைப் போல் தோளோடு தோள் பழகினாலும் சில சமயங்களில் முருகானந்தம் தன்முன் மாணவனாக அமர்ந்து விடுவதைப் போன்று, தன் இதயம் கவர்ந்து, தனக்கு இதயம் கொடுத்தவளாகப் பழகினாலும் பேராசிரியராகிய தந்தையிடம் கற்றிருந்த பேருண்மைகளைப் பூரணி பேசும்போது அவன் குழந்தைபோலாகிக் கேட்டுக் கொண்டிருந்து விடுவதிலேயே இன்பம் கண்டான்.

     அன்று காலை எண்ணங்கள் அலைபாயும் நிலையற்ற மனநிலையோடு இருந்தபோது இவ்வளவும் நினைவுற்றான் அவன். தன்னுடைய நோட்டுப் புத்தகத்தை எடுத்துக் கீழ்க்கண்டவாறு எழுதினான்.

     'பழைய காலத்தில் அசுணம் என்ற ஒருவகைப் பறவை இருந்ததாம். அதன் செவிகளுக்கு இனிய நளினமான இசைகளை உணர்ந்தே பழக்கமாம். விவகாரமான கெட்ட ஓசைகளைக் கேட்க நேர்ந்துவிட்டாலே போதும், துடிதுடித்துக் கீழே விழுந்து உயிர் பிரிந்துவிடுமாம் அந்த அசுணப் பறவை.'

     'வாழ்வின் தீமை நிறைந்த கெட்ட செய்திகளை உணரும் போது இந்த அசுணப் பறவைபோல் நாமே அழிந்து விட்டாலென்ன என்று தான் நினைக்கத் தோன்றுகிறது. நேற்றுதான் எத்தனை கெட்ட செய்திகளை உணரும்படி நேர்ந்து விட்டது. அந்தச் சிறுபையன் திருநாவுக்கரசு எப்படிப்பட்ட குடும்பத்தில் பிறந்து, எந்த மாதிரி கெட்டுப் போய்விட்டான் என்று நினைக்கவே வேதனையாக இருக்கிறது. அவனாவது சிறு பையன். கண்டித்துப் பயமுறுத்தி வழிக்குக் கொண்டுவந்து விடலாம். குதிர்மாதிரி வளர்ந்த பெண்ணுக்கு ஓடிப்போக தைரியம் வந்திருக்கிறது! 'பெண்கள்' நம்முடைய சமுதாயப் பண்ணைக்கு விதை நெல்லைப் போன்றவர்கள். வருகின்ற தலைமுறைகளை நன்றாகப் பயிர் செய்ய வேண்டியவர்கள். விதை நெல்லே கெட்டுச் சீரழிந்தால் விளைவு என்ன ஆகும்? நினைக்கவே அச்சமாக இருக்கிறது. பாரத புண்ணிய பூமியின் பெருமையெல்லாம் கங்கையும் காவிரியும் போலப் புனிதமாகப் பாய்ந்து வரும் அதன் தூய தாய்மைப் பிரவாகத்தில் அல்லவா இருக்கிறது? இந்தப் பெண்மையின் புனித வெள்ளத்தில் அழுக்குகள் கலந்தால் என்ன ஆகும்? விதை நெல்லையே அழித்துக் கொண்டிருக்கிறோமா நாம்?"

     உள்ளே யாரோ நடந்து வருகிற மிதியடி ஒலி கேட்கவே அரவிந்தன் எழுதுவதை நிறுத்திவிட்டுத் தலை நிமிர்ந்தான். அச்சக உரிமையாளர் மீனாட்சிசுந்தரம் உள்ளே வந்துகொண்டிருந்தார். அவசர அவசரமாக நோட்டுப் புத்தகத்தை மூடி மேஜை இழுப்பறைக்குள் திணித்துவிட்டு எழுந்து நின்றான் அரவிந்தன்.

     "என்னடா அரவிந்தன்! நேற்று இரவு வீட்டில் குழந்தைகள் தொந்தரவு பொறுக்க முடியாமல் இரண்டாவது ஆட்டம் சினிமாவுக்கு அழைத்துக் கொண்டு போனேன். ஆங்கிலப் படமாக இருந்ததினால் சீக்கிரம் விட்டுவிட்டான். திருப்பிப் போகிறபோது பார்த்தால் இங்கே அச்சகத்தில் விளக்கு எரிந்து கொண்டிருக்கிறதே! அவ்வளவு நாழிகை உறக்கம் விழித்து என்ன செய்து கொண்டிருக்கிறாய் நீ?"

     மீனாட்சிசுந்தரம் உள்ளே வருகிறபோது மேற்படி கேள்வியோடு வந்தார். அவருக்கு அவன் பதில் சொல்லுவதற்குள் மேலும் அவரே தொடர்ந்தார்: "என்னதான் வேலை மலையாகக் குவிந்து கிடந்தாலும் இராத்தூக்கம் விழிக்கிற பழக்கம் உதவாது. நேற்று இரவு சினிமா விட்டுப் போகும்போது இங்கே விளக்கு எரிவதைப் பார்த்தவுடனேயே காரை நிறுத்தி இறங்கி உன்னைக் கண்டித்துவிட்டுப் போக நினைத்தேன். நீ தூக்கம் விழித்துக் கண்ணைக் கெடுத்துக் கொள்வது போதாதென்று அந்தத் தையற்கடைப் பிள்ளையாண்டானை வேற துன்பப்படுத்துகிறாயே?"

     "உட்காருங்கள், எல்லா விவரமும் சொல்கிறேன்" என்று அவரை உட்காரச் செய்துவிட்டு எதிரே நாற்காலையைப் பிடித்துக் கொண்டு நின்றவாறே கூறலானான் அரவிந்தன்.

     அவன் பாதி கூறிக் கொண்டிருக்கும்போதே வாசலில் 'ஐயா' என்று குரல் கேட்டது. அரவிந்தன் வெளியே எட்டிப் பார்த்து தையற்கடை வேலையாள் வந்திருப்பதைக் கண்டான். முருகானந்தம் கொடுத்துவிட்டுப் போயிருந்த சாவியை அந்த வேலையாளிடம் அளித்து, "முருகானந்தம் திருச்சிக்குப் போயிருக்கிறான். சாயங்காலத்துக்குள் வந்துவிடலாம். வழக்கம் போல் கடையைத் திறந்து வேலையைக் கவனித்துக் கொள்ளச் சொன்னான்" என்று சொல்லி அனுப்பி வைத்தான்.

     அரவிந்தன், மங்களேஸ்வரி அம்மாளின் பெண்ணைப் பற்றியோ, பூரணியின் தம்பியைப் பற்றியோ மீனாட்சிசுந்தரத்திடம் விவரிக்கவில்லை. அச்சகத்தின் பின்புறம் இரவில் நடந்த அசம்பாவிதத்தைச் சொல்லி சுவர் எழுப்பி கதவு போட வேண்டிய அவசியத்தை வற்புறுத்தினான். அச்சகத்தின் பின் பக்கத்தில் முதல் நாளிரவு நடக்க இருந்த கொடுமையைக் கேள்விப்பட்டபோது, மீனாட்சிசுந்தரம் அப்படியே மலைத்துப் போய் உட்கார்ந்து விட்டார். சிறிது நேரம், அரவிந்தனுக்குப் பதிலே கூறவில்லை. அவர் முகத்தில் திகைப்பும், வேதனையும் தோன்ற இருந்தார் அவர்.

     "நான் யாருக்கும் ஒரு கெடுதலும் செய்வதில்லையே அப்பா. அறிவுக் களஞ்சியமாகிய பேராசிரியரின் நூல்களை மலிவான விலையில் வெளியிட்டால் நல்ல கருத்துகள் நாட்டில் பரவுமே என்று தான் இந்த வெளியீட்டு வேலையை இழுத்துப் போட்டுக் கொண்டேன். இதற்காக என்மேல் இவ்வளவு விரோதமும் பொறாமையும் கொள்ள வேண்டுமா?" என்று நொந்து கூறினார் அவர்.

     உடனே கொத்தனாரை அழைத்துக் கொண்டு வந்து சுவர் எழுப்பிக் கதவும் அமைக்க ஏற்பாடு செய்தார். அரவிந்தன் அவரிடம் ஒரு மணி நேரம் வெளியே செல்ல அனுமதி வாங்கிக் கொண்டு போய் அந்தப் பையன் திருநாவுக்கரசுக்கு ஜாமீன் கொடுத்து அழைத்து வந்தான். "இன்னும் நாலைந்து நாட்களில் பெஞ்ச் கோர்ட்டில் விசாரணை நடக்கும்போது பையனை அழைத்து வந்து என்ன அபராதம் போடுகிறார்களோ அதைக் கட்டிவிட்டுப் போகவேண்டும்" என்று போலீஸ் இன்ஸ்பெக்டர் அவனிடம் கூறியனுப்பினார். வரும்போதே அந்தப் பையன் மனத்தில் பதியும்படி இதமாக அறிவுரை சொல்லிக் கொண்டு வந்தான் அரவிந்தன். பையன் பதில் சொல்லாமல் தலையைக் குனிந்தவாறே உடன் நடந்து வந்து கொண்டிருந்தான்.

     பையனோடு அரவிந்தன் அச்சகத்துக்குத் திரும்பியபோது கொல்லைப் பக்கம் சுவர் எழுப்புகிற வேலை துரிதமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. செங்கல்கள் வந்து இறங்கியிருந்தன. சிமெண்டு மூட்டைகள் அடுக்கியிருந்தன. மீனாட்சிசுந்தரம் அருகில் நின்று சிற்றாட்களையும் கொத்தனாரையும் வேலை வாங்கிக் கொண்டிருந்தார். உட்புறம் அச்சகத்து வேலையாட்களும் வந்து வழக்கம்போல் தத்தம் வேலைகளைச் செய்து கொண்டிருந்தார்கள். அரவிந்தன் நீராடி உடை மாற்றிக் கொண்டான். திருநாவுக்கரசையும் உள்ளே அழைத்துப் போய் முகங்கழுவித் தலை சீவிக்கொள்ளச் செய்தான். காலிப் பையனுக்குரிய தோற்றத்தை மாற்றிப் பள்ளிக்கூடம் போகிற பையன் மாதிரி ஆக்கின பின்பே அரவிந்தனுக்கு நிம்மதி வந்தது. சிற்றுண்டி வரவழைத்து இருவரும் சாப்பிட்டனர். "தம்பி! இந்த விநாடியோடு உன் கெட்ட பழக்கங்களையெல்லாம் மறந்து விடு. பழையபடி உன்னைப் படிக்கும் மாணவனாக்கிக் கொள். மார்ச் மாதத்துக்கு இன்னும் அதிக நாளில்லை. இந்தப் பரீட்சை தவறினால் இன்னும் ஓராண்டு வீணாகிவிடும். இரவு-பகல் பாராமல் உழைத்துப் படித்துத் தேர்ச்சி பெற்று விட்டாயானால் புதிய ஆண்டில் கல்லூரிப் படிப்புக்கு நுழையலாம். உன் குடும்பத்து நிலையை நான் சொல்லி நீ தெரிந்து கொள்ள வேண்டுமென்பதில்லை. உன் அக்கா எவ்வளவு காலம் இப்படித் தானே உழைத்து உங்களைக் காப்பாற்ற முடியும்? நீ படித்த பின் உன் தம்பி படிக்க வேண்டும். தங்கை படிக்க வேண்டும். எல்லாவற்றையும் உன் அக்கா ஒருத்தியே தாங்கிச் சமாளிக்க முடியுமா? வீட்டுக் கஷ்டம் தெரிந்து அதற்கேற்ப உன்னைத் தயாராக்கிக் கொள்ள வேண்டும் அப்பா!" என்றெல்லாம் மனத்தில் உறைக்கும்படி சொல்லித் திருநாவுக்கரசைப் பசுமலையிலுள்ள அவன் பள்ளிக்கு அழைத்துச் சென்றான். பையனைப் பள்ளிக்கூடத்துக்குப் போகச் சொல்லித் தனியாக அனுப்பினால் மறுபடியும் "கழுதை கெட்டால் குட்டிச் சுவர்தான்" என்கிற மாதிரி எங்கேயாவது ஊர்சுற்றக் கிளம்பி விடுவானோ என்று அரவிந்தன் சந்தேகப்பட்டான். அதனால் தான் அச்சகத்தில் மேசை நிறையக் குவிந்து கிடந்த வேலைகளையெல்லாம் திரும்பி வந்து பார்த்துக் கொள்ளலாம் என்று போட்டுவிட்டுத் தானும் பையனோடு பசுமலைக்குச் சென்றான்.

     மலையின் தென்புறத்துச் சரிவில் வேப்பமரங்களில் பசுமைக்குள் அழகான தோற்றத்தோடு காட்சியளித்தது பசுமலைப் பள்ளிக்கூடம். மதுரையைச் சூழ்ந்துள்ள பகுதிகளில் தூய்மையான காற்று, அழகான இயற்கை வசதிகள் நிறைந்த இடம் பசுமலை. அங்குள்ள கல்வி நிலையங்களையும் பயிற்சிப் பள்ளிகளையும் கொண்டு அதை மதுரையின் கேம்பிரிட்ஜ், ஆக்ஸ்போர்டு என்று சிலர் மிகுதியாகப் புகழ்வார்கள். கிறிஸ்துவர்களுடைய கண்காணிப்பில் உள்ள பள்ளிக்கூடமானதால் ஒழுங்கிலும் கட்டுப்பாட்டிலும் கண்டிப்புக் காட்டி வந்தார்கள்.

     அரவிந்தன் திருநாவுக்கரசுடன் பள்ளித் தலைமையாசிரியர் அறைக்குள் சென்று அவரைச் சந்தித்தான். அவர் அவனுக்கு வணக்கம் செலுத்தி வரவேற்று எதிரே இருந்த நாற்காளியில் உட்காரச் சொன்னார். அரவிந்தன் அதில் உட்கார்ந்தான்.

     "சார்! இந்தப் பையன் விஷயமாக உங்களைப் பார்த்துச் சொல்லிவிட்டுப் போகலாம் என்று வந்தேன். இவனுடைய அக்காவுக்கு உங்களைச் சந்தித்து இவனைப் பற்றிச் சொல்ல நேரம் ஒழியவில்லை. நான் இவர்கள் குடும்பத்திற்கு மிகவும் வேண்டியவன்" என்று அரவிந்தன் பேச ஆரம்பித்ததும் தலைமையாசிரியர் அவநம்பிக்கைத் தோன்ற நகைத்தார். அவருடைய தலைக்கு மேலே சிலுவையில் அறைந்த கோலத்தில் ஏசுநாதரின் அழகுருவம் கண்களில் கருணையும், உடம்பில் இரத்தமும் ஒழுகிடக் காட்சி தந்தது. அரவிந்தனின் பார்வை அந்தப் புண்ணிய மூர்த்தியின் படத்தில் பதிந்தது. தலைமையாசிரியர் அவனுக்கு மறுமொழி கூறலானார்:

     "இந்தப் பையனைப் பற்றிச் சொல்வதற்கு இனிமேல் என்ன இருக்கிறது? ஒழுக்கத்தையும் நல்ல நடத்தையையும் உன்னிப்பாக ஒவ்வொரு வினாடியும் கவனிக்கும் இங்கேயே வழிகெட்டுப் போய்விட்ட பையனை இனி என்ன செய்வது? பள்ளி இறுதியாண்டுத் தேர்வு, எஸ்.எஸ்.எல்.சி. எழுதும் ஒரு மாணவன் குறைந்தபட்சம் இத்தனை நாட்களாவது பள்ளிக்கூடம் வந்திருக்க வேண்டும் என்று சட்டம் இருக்கிறது. அதில் கால்வாசி நாட்கள் கூட இந்தப் பையன் பள்ளிக்கு வரவில்லை. ஆகவே இனிமேல் இவன் பள்ளிக்கூடத்துக்குத் தவறாமல் வந்தாலும் அரசாங்கப் பரீட்சை இந்தத் தடவை எழுத முடியாது. அப்படி முடியாதிருக்கிறபோது வீணுக்குச் சம்பளத்தைக் கொடுத்துக் கொண்டு இங்கு வருவது அநாவசியம். மறுபடியும் புதிதாக அவனை அடுத்த ஆண்டில் இங்கே சேர்த்தாலே போதும்."

     "சார்! நீங்கள் அப்படிச் சொல்லிவிடக்கூடாது. இந்தப் பையன் பெரிய தமிழ்க் குடும்பத்துப்பிள்ளை. பழக்கக் கேடுகளால் இப்படி ஆகிவிட்டான். இனி ஒருபோதும் கெட்ட வழியில் போகாமல் கவனித்துக் கொள்கிறோம். எப்படியாவது இந்தத் தடவை..." என்று அரவிந்தன் குழைந்து வேண்டிக் கொண்டதை அவர் சிறிதும் பொருட்படுத்தவில்லை.

     "மன்னிக்க வேண்டும். உங்களைப் பார்த்தால் இரக்கமாக இருக்கிறது. ஆனால் இது கல்வித்துறையின் சட்டம். இந்தப் பையனுக்காகவோ, உங்களுக்காகவோ நான் இதை மாற்றுவதற்கில்லை" என்று சிரித்தவாறே கூறிவிட்டு மேசை மேலிருந்த காகிதக் கட்டு ஒன்றைப் பிரித்துக் கவனிக்க ஆரம்பித்துவிட்டார் தலைமையாசிரியர். அரவிந்தன் மேலே நிமிர்ந்து பார்த்தான். இயேசுநாதருடைய படத்தில் நிமிடத்துக்கு நிமிடம் கண்களில் கருணையும் மார்பின் குருதியும் அதிகமாகி வளர்ந்துகொண்டு வருவதுபோல் தோன்றியதோ என்னவோ!

     "வருகிறோம்" என்றான் அரவிந்தன்.

     "செய்யுங்கள்" என்று குனிந்த தலை நிமிராமல் மறுமொழி கூறினார் அவர். திருநாவுக்கரசுடன் வெளியேறினான் அரவிந்தன். "தம்பி பார்த்தாயா? முட்டாள்தனமாகப் பள்ளிக்கூடத்துப் படிப்பை அது முடிகிற தறுவாயில் பாழாக்கிக் கொண்டு விட்டாயே? இன்னும் ஓராண்டு காலம் காத்திருந்து உன்னை மறுபடியும் பள்ளியில் சேர்த்துப் படிக்க வைக்க உன் அக்காவால் முடியுமா?" என்று பள்ளிக்கூடத்துப் படிகளிலிருந்து கீழிறங்கிய போது அரவிந்தன் ஏக்கத்தோடு கூறிய சொற்கள் பையனின் செவிகளில் விழுந்தும் அவன் ஒன்றும் சொல்லாமல் கல்லடிமங்கன் போல் தலைகுனிந்து நடந்துகொண்டிருந்தான்.

     'எப்படியும் இந்தப் பையனைத் திருத்தி நல்ல வழியில் கொண்டு வந்து விடவேண்டும். சிறிது காலத்துக்கு அச்சகத்திலேயே நம்மோடு பக்கத்தில் வைத்துக் கொண்டு நம் கவனத்திலேயே ஆளை உருவாக்கிவிடலாம்' என்று அரவிந்தன் மனத்தில் அப்போது ஒரு தீர்மானம் உண்டாகியிருந்தது.

     திரும்பியதும் முதல் வேலையாகத் திருநாவுக்கரசை உள்ளே அழைத்துப் போய் 'பைண்டிங்' பகுதியில் உட்கார்த்தி அச்சடித்த பாரங்களை மடித்து அடுக்கச் சொன்னான். 'பையனைக் கொஞ்சம் கவனித்துக் கொள்' என்று அச்சகத்து போர்மேன் இடத்திலும் கூறிவிட்டு வந்தான்.

     "தம்பி! எனக்குத் தெரியாமல், என்னிடம் சொல்லிக் கொள்ளாமல் நீ எங்கும் வெளியேறிச் செல்லக்கூடாது. வேலையைக் கவனமாகப் பார்" என்று பையனிடமும் எச்சரித்தான். சிறிது நேரம் கழித்து அச்சகத்தில் உட்புறம் சுற்றிப் பார்த்துவிட்டு முன்புறத்து அறைக்கு வந்த மீனாட்சிசுந்தரம் அரவிந்தனைக் கேட்டார்.

     "என்னப்பா இது? பேராசிரியர் அழகிய சிற்றம்பலத்தின் பையன் இங்கே உட்கார்ந்து தாள் மடித்து அடுக்கிக் கொண்டிருக்கிறான். அவன் பள்ளிக்கூடத்தில் படிக்கிறானா இல்லையா? போர்மேனிடம் கேட்டால் நீ கொண்டு வந்து உட்கார்த்தி வைத்துவிட்டுப் போனதாகச் சொல்கிறான்!" என்றார் அச்சக அதிபர் மீனாட்சிசுந்தரம்.

     அரவிந்தன் அவருக்கு எல்லா விவரங்களும் சொன்னான். "அடப்பாவமே? அவருக்கு இப்படிப் பிள்ளையா வாய்த்தது?" என்று அதைக் கேட்டு அவரும் அலுத்துக் கொண்டார். அவன் தனது ஏற்பாட்டை அவரிடம் கூறி இணங்க வைத்தான்.

     நடுப்பகல் பன்னிரண்டேகால் மணி சுமாருக்கு வேர்க்க விறுவிறுக்க அலைந்த கோலத்தோடு முருகானந்தம் வந்து சேர்ந்தான். அரவிந்தன் அவனைக் கேட்கும் முன் அவனே கூறலானான். "நான் நினைத்தபடி நடந்திருக்கிறது அரவிந்தன்! அந்தப் பெண் வசந்தாவை ஏமாற்றி அழைத்துப்போன ஆள் திருச்சி வெயிட்டிங் ரூமில் அவளை இருக்கச் சொல்லிவிட்டு ஊருக்குள் யாரையோ பார்த்துவிட்டு உடன் திரும்பி வருவதாகவும், அடுத்த எக்ஸ்பிரஸில் சென்னை போகலாமென்றும் கூறிச் சென்றானாம். சென்றவன் திரும்பவே இல்லையாம். பணத்தையும் சாமர்த்தியமாகக் கேட்டு அவளிடமிருந்து முன்பே வாங்கிக் கொண்டானாம். விடியற்காலை நான்கு மணிவரை காத்துப் பார்த்து ஏமாந்த பின் கையில் மீதமிருந்த சில்லறையைத் திரட்டித் தந்தி கொடுத்ததாம் அந்தப் பெண். பயல் நம்மிடம் மணிபர்ஸைக் கோட்டவிட்ட ஆள்தானாம். என்னிடமிருந்த போட்டோவைக் காட்டி அந்தப் பெண்ணிடமே கேட்டுத் தெரிந்து கொண்டேன்..." என்று முருகானந்தம் கூறியவுடன், "இப்போது எங்கே அவர்கள்? காரில்தானே திரும்பினீர்கள்?" என்று அவனைக் கேட்டான் அரவிந்தன்.

     "பாவம்யா அந்தப் பெண்! சினிமா நடிப்பு ஆசையில் முதலில் ஏமாந்து போய்விட்டது. இப்போது குமுறிக் குமுறி அழுகிறது. எல்லோரும் அந்த அம்மாள் வீட்டில் தான் இருக்கிறார்கள். பூரணியக்காதான் ஏதேதோ சமாதானம் கூறி அந்தப் பெண்ணை நடந்ததெல்லாம் மறக்கச் சொல்கிறார்கள்" என்று முருகானந்தம் கூறியபோது அரவிந்தனுக்குச் சந்தேகம் உண்டாயிற்று. சந்தேகத்தை முருகானந்தத்திடமே கேட்டான். "பணம் இரண்டாயிரம் ரூபாய் பறிபோனதைத் தவிர வேறு ஒரு வம்பும் இல்லை" என்று அவன் பதில் கூறிய பின்பே அரவிந்தனுக்கும் நிம்மதி வந்தது. பெண்களின் தூய்மை என்பது ஐசுவரியத்தைக் காட்டிலும் மகத்தானதாயிற்றே.

     "பொல்லாத காலம் அப்பா இது! மங்கையராகப் பிறப்பதற்குத் தவம் செய்ய வேண்டுமென்று கவிமணி பாடியிருப்பதாக நீ அடிக்கடி சொல்வாய் அரவிந்தன்! இந்தக் காலத்தில் பெண், பெண்ணாகப் பிறவாமல் இருக்கத் தவம் செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது. ஏனென்றால் பெண்ணாக இருப்பது மிகவும் அருமையான பாதுகாப்புக்குரிய காரியமாயிருக்கிறது" என்று சொல்லிவிட்டுத் தையல் கடைக்குப் போனான் முருகானந்தம். அவனை அனுப்பிவிட்டு அரவிந்தன், மங்களேஸ்வரி அம்மாள் வீட்டுக்குப் போனான்.

     இது நடந்து பதினைந்து நாட்களுக்குப் பின் ஒருநாள் முருகானந்தத்தின் தையல் கடையில் யாருக்கோ அவசரமாக 'கோட்'டுக்கு அளவெடுத்துக் கொண்டிருந்தான் அவன்.

     "ஏய் டெய்லர்! உன்னைத்தானே!" என்று வாயிற்புறமிருந்து ஒரு குரல் ஆணவத்தோடு அதிகார அழைப்பு விடுத்தது. முருகானந்தம் திரும்பிப் பார்த்தான். 'பளிச்'சென்று அவன் கண்களில் பதிந்து உறைந்தது அந்த முகம். கொதிப்பும் சினமுமாகச் சிவந்து போக இருந்த முகத்தில் செயற்கையாகச் சிரிப்பை வரவழைத்துக் கொண்டே "வாருங்கள் சார்! உங்கள் மணிபர்ஸ் தானே? அது பத்திரமாக இருக்கிறது. முந்நூறு ரூபாயை பதினைந்து நாள் மறந்து போய் பேசாமல் இருந்து விட்டீர்களே? அடடா! வாசலிலேயே நிற்கலாமா சார்! நீங்கள் எவ்வளவு பெரிய சினிமா டைரக்டர் என்பது அப்புறம் தான் எனக்குத் தெரிந்தது. அடேய் பையா! அப்புறம் பித்தானுக்கு ஓட்டைப் போடலாம். ஓடிப்போய் சாருக்கு காப்பி வாங்கி வா. பெரிய சினிமா டைரக்டர் இவர்" என்று வந்தவரை அட்டகாசமாக வரவேற்று உள்ளே உட்கார வைத்தான் முருகானந்தம். வந்தவருக்கோ பயமாயிருந்தது அந்த அபூரவ மரியாதை.

     "மணிபர்ஸை எடு எனக்கு நேரமில்லை. அவசரமாகப் போகணும்..." வந்தவர் அவசரப்படுத்தினார்.

     "எப்போதும் அவசரந்தானா சார் உங்களுக்கு? கொஞ்சம் பொறுத்துப் போகலாம்! இவ்வளவு நாள் வைத்துக் கொண்டிருந்துவிட்டு வெறும் பணம் மட்டுமா தருவது? வட்டியும் சேர்த்துத் தருகிறேன் சார்" என்று கூறிக்கொண்டே வந்த முருகானந்தம் குபீரென்று முகத்தில் கடுமை குடிபுக... "அயோக்கிய நாயே?" என்று சீறிக்கொண்டு அந்த ஆளுடைய மார்புச் சட்டையைப் பனியனோடு பிடித்து உலுக்கித் தூக்கி நிறுத்தினான்.






புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
151
152
153
154
155
156
157
158
159
160
161
162
163
164
165
166
167
168
169
170
171
172
173
174
175
176
177
178
179
180
181
182
183
184
185
186
187
188
189
190
191
192
193
194
195
196
197
198
199
200
201
202
203
204
205
206
207
208
209
210
211
212
213
214
215
216
217
218
219
220
221
222
223
224
225
226
227
228
229
230
231
232
233
234
235
236
237
238
239
240
240
241
242
243
244
245
246
247